புரட்சிகர தலைவர் லெனின் -3

 




மானுடம் அடிமைத்தனத்திலிருந்தும், சுரண்டலிலிருந்தும் விடுதலை பெற மார்க்ஸ் ஏங்கெல்ஸ் வடிவமைத்த தத்துவம் வழிகாட்டுகிறது. புரட்சி எனும் வரலாற்று கடமையை பாட்டாளி வர்க்கம் நிறைவேற்றியதற்கு எதிர்ப்படும் பிரச்சனைகளை தீர்த்திட லெனினியம் வழிகாட்டுகிறது.

முதலாளித்துவம் வரலாற்றில் அந்திம சகாப்தமாக உள்ளது என்று மார்க்சியம் அறிவியல் பூர்வமாக எடுத்துரைக்கிறது. இயக்கவியல் வரலாற்று பொருள்முதல்வாதம் இந்த முடிவுக்கே இட்டுச் செல்கிறது. இதனை சொல்லுகிறபோது ஒரு தவறான புரிதல் இயல்பாக ஏற்படுகிறது.

முதலாளித்துவம் பொருளாதார ரீதியில் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டு, தானாக சோசலிசத்தை வந்தடையும் என்ற கருத்து புரட்சி இயக்கத்தில் தோன்றுகிறது. இதனை எதிர்த்த கருத்துப் போராட்டத்தை ரோசா லக்சம்பர்க் போன்ற போராளிகள் நிகழ்த்தியுள்ளனர்.

பெரும்பாலும் ஆதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் மாபெரும் புரட்சியாளர்களை, மக்கள் இனம் காண்பதற்கு முன்னர், சர்வாதிகாரிகளே அடையாளம் காண்கிறார்கள். அவர்களே மாபெரும் தலைவர்களை உருவாக்குகிறார்கள். அவ்வழியில் ஜார் மன்னன் லெனினைக் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். கிழக்கு சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்ட லெனின் அங்கு தன்னைப்போலவே ஒற்றைக் கருத்துடைய குரூப்ஸ்கயாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். கைது செய்யப்பட்டிருந்த நிலையிலும் இருவரும் ஒன்றாகவே வாழ்ந்தார்கள்.

மானுடம் அடிமைத்தனத்திலிருந்தும், சுரண்டலிலிருந்தும் விடுதலை பெற மார்க்ஸ் ஏங்கெல்ஸ் வடிவமைத்த தத்துவம் வழிகாட்டுகிறது. புரட்சி எனும் வரலாற்று கடமையை பாட்டாளி வர்க்கம் நிறைவேற்றியதற்கு எதிர்ப்படும் பிரச்சனைகளை தீர்த்திட லெனினியம் வழிகாட்டுகிறது.

எனவே, லெனினது எழுத்துக்கள் விரிவான வாசிப்பிற்கு கொண்டு செல்லப்பட வேண்டும். இது இன்றைய சூழலில் தேவைப் படுகிற உன்னதமான பெரும் பணி.

லெனின் புரட்சி பற்றித்தான் 24 மணி நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார் என்றால் அது மிகையாகாது. மார்க்ஸீய நிலைபாட்டில் நின்று, கள அனுபவங்களின் அடிப்படையில், சமகால அரசியல், சமூக, பண்பாட்டு, பொருளாதார தளங்களில் மார்க்ஸீய புரிதலை மேம்படுத்திக்கொண்டே இருந்தவர் லெனின். அந்த அடிப்படையில், அவர் வாழ்ந்த காலத்தில் ரஷ்யாவில் சோசலிச புரட்சி வெற்றிபெற தொழிலாளி-விவசாயி கூட்டு என்பது இன்றியமையாதது என்ற நிலைப்பாட்டிற்கு ஆழமான கள அனுபவமும் (குறிப்பாக, 1905 ரஷ்ய விவசாயிகளின் எழுச்சி) மார்க்சீய புரிதலும் லெனினை இட்டுச்சென்றது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஜனநாயக புரட்சியில் விவசாயிகளின் பங்கு பற்றி லெனின் முன்வைத்த புரிதல் மார்க்சீயத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல் எனலாம்.

வெளி நாடுகளில் இருந்தாலும் லெனினின் செயல் சிந்தனை என அனைத்தும் `சோவியத் ரஷ்யா' கனவாகவே இருந்தது. வெகு தூரத்தில் இருந்தாலும் மக்களுக்கு தன் கருத்துகள் சென்று சேர வேண்டும் என எண்ணினார் லெனின். அதற்காக தொடங்கப்பட்டதே `புதுவாழ்வு, தீப்பொறி, உண்மை, சமூக ஜனநாயகவாதி' ஆகிய பத்திரிகைகள். இதில் பல புரட்சிகரக் கருத்துகளை கட்டுரைகளாக வடித்தார். படிப்போர் நெஞ்சங்களில் போராடத் தூண்டும் வகையில் அவரின் எழுத்துகள் இருந்தன. ஜார் ஆட்சியை வீழ்த்துவதைக் குறைந்தபட்ச செயல்திட்டமாகவும், அதே இடத்தில் சோசலிச அமைப்பை உருவாக்குவதை அதிகபட்ச செயல் திட்டமாகவும் கொண்ட ரஷ்ய சமூக ஜனநாயக் கட்சியை உருவாக்கினார். மக்களை ஒருமுகப்படுத்தி அணி திரட்டினார்.

இந்தியா பற்றி லெனின்

ப்ரோலெதாரி (Proletary) என்ற, லெனினை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த, பத்திரிக்கையில் 1908 ஜூலை 23 இதழில், “உலக அரசியலில் தீப்பற்றி பரவக்கூடிய பொருட்கள்” என்ற தலைப்பில் லெனின் பின்வருமாறு எழுதுகிறார்:

இந்தியாவில் தங்களது எழுத்தாளர்களுக்காகவும் அரசியல் தலைவர்களுக்காகவும் சாதாரண மக்கள் போராடத் துவங்கியுள்ளனர்…….. இந்திய ஜனநாயகவாதியான திலக் மீது பிரிட்டிஷ் குள்ளநரிகள் விதித்துள்ள தண்டனையை எதிர்த்து வீதிகளில் ஆர்ப்பாட்டங்களும் பம்பாய் நகரில் வேலை நிறுத்தமும் நிகழ்ந்துள்ளன. இந்தியாவிலும் கூட உணர்வுபூர்வமான அரசியல் வெகு மக்கள் போராட்டத்தை நடத்தும் அளவிற்கு தொழிலாளி வர்க்கம் வளர்ந்துள்ளது. இதன் பொருள், ரஷ்ய பாணியில் இந்தியாவில் செயல்படும் பிரிட்டிஷ் சர்வாதிகார ஆட்சி அழிந்தே தீரும் என்பதாகும்.”

ஐரோப்பிய நாடுகளில் பாட்டாளி வர்க்க இயக்கங்கள் சில பின்னடைவுகளை சந்தித்த நேரத்தில் 1913இல் ‘பின் தங்கிய ஐரோப்பாவும் முன்னேறிய ஆசியாவும்’ என்ற தலைப்பில் லெனின் எழுதிய கட்டுரையில் அவர் கூறுகிறார்:

ஆசியாவின் அனைத்துப் பகுதிகளிலும் ஜனநாயக இயக்கம் வளர்ந்து, விரிவடைந்து, வலுப்பெற்று வருகிறது……….பல கோடி ஆசிய உழைப்பாளி மக்களுக்கு நம்பத் தகுந்த நேச சக்தியாக வளர்ந்த நாடுகளின் தொழிலாளி வர்க்கம் உள்ளது. இதன் வெற்றியை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இதன்மூலம் ஐரோப்பிய (உழைக்கும்) மக்களும் ஆசிய (உழைக்கும்) மக்களும் விடுதலை பெறுவார்கள்.”














No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்