அரசு "உலர்ந்து உதிர்வது" பற்றி எங்கெல்ஸ் கூறிய சொற்கள் மிகவும் பிரபலமானவை; அடிக்கடி மேற்கோளாய் எடுத்தாளப்படுபவை; மார்க்சியத்தை சந்தர்ப்பவாதத்துக்கு இசைவானதாக ஆக்குவதற்காக வழக்கமாகச் செய்யப்படும் புரட்டின் சாரப் பொருளை மிகத்தெளிவாகப் புலப்படுத்து பவை. ஆகவே இவற்றை நாம் விவரமாகப் பரிசீலிக்க வேண்டும்..
இவை எங்கிருந்து எடுக்கப்பட்டனவோ அந்த வாக்குவாதம் முழுவதையுமே நாம் மேற்கோளாய்த் தந்தாக வேண்டும்.
"பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றி உற்பத்திச் சாதனங்களை முதலில்அரசுடமை ஆக்குகின்றது.
ஆனால் இதன் மூலம் அது, பாட்டாளி வர்க்கமாகத் தான் இருத்தலை ஒழித்துக் கொள்கிறது. எல்லா வர்க்க வேறுபாடுகளையும் வர்க்கப் பகைமைகளையும் ஒழித்திடுகிறது. அரசு அரசாக இருத்தலையும் ஒழித்திடுகிறது. இதுவரை சமுதாயம் வர்க்கப் பகைமைகளின் அடிப்படையில் அமைந்திருந்ததால் அதற்கு அரசு தேவைப்பட்டது; அதாவது, குறிப்பிட்ட சுரண்டும் வர்க்கத்துக்கான ஒழுங்கமைப்பு ஒன்று தேவைப்பட்டது. இந்த சுரண்டும் வர்க்கத்துக்குரிய பொருளுற்பத்திப் புறநிலைமைகளை நிலைநாட்டுவதற்காகவும், அதன்பொருட்டு இன்னும் முக்கியமாய், சுரண்டப்படும் வர்க்கத்தை அந்தந்தப் பொருளுற்பத்தி அமைப்பாலும் (அடிமைமுறை, பண்ணையடிமைமுறை, கூலிஉழைப்புமுறை) நிர்ணயிக்கப்படும் ஒடுக்குமுறை நிலைமைகளில் பலவந்தமாய் இருத்தி வைப்பதற்காகவும் இந்த சமுதாயத்திற்கு அரசு தேவைப்பட்டது. சமுதாயம் அனைத்தின் அதிகாரப்பூர்வமானபிரதிநிதியாக, கண்கூடான அதன் உருவகத் திரட்சியாக அரசு விளங்கிற்று. ஆனால் எந்தவர்க்கம் தன்னுடைய காலத்தில் சமுதாயம் முழுவதுக்கும் தானே பிரதிநிதியாக இருந்ததோ அந்த வர்க்கத்தின் அரசாய் இருந்த அரசுக்குக்குத்தான், அதாவது புராதன காலத்தில் அடிமையுடமைக் குடிகளின் அரசாகவும், இடைக்காலத்தில் பிரபுக்களின் அரசாகவும், நாம்வாழும் இக்காலத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசாகவும் இருந்த அளவுக்குத்தான், அரசால் இவ்வாறு விளங்க முடிந்தது. இறுதியில் அரசானது சமுதாயம் முழுமைக்கும் மெய்யான பிரதிநிதியாக ஆகிவிடும்போது, அது தன்னை தேவையற்றதாகஆக்கிக்கொள்கிறது. இனி கீழ்படுத்தி வைக்க வேண்டிய சமூக வர்க்கம் எதுவும் இல்லாமல் போனதும், வர்க்க ஆதிக்கமும் பொருள் உற்பத்தி முறையில் தற்போதுள்ள அராஜகத்தின் அடிப்படையில் நடைபெறும் தனியார் வாழ்வுப் போராட்டமும் இந்தப் போராட்டம் காரணமாய் எழும் மோதல்களும் மட்டுமீறிய செயல்களும் நீக்கப்பட்டதும், கீழ்ப்படுத்தி வைப்பதற்கு எதுவும் இல்லாமல்போகிறது, ஆதலால் தனிவகைப் பலவந்த சக்தியை - அரசினை - அவசியமாக்கும் எதுவும் இல்லாமல் போகிறது. அரசானது சமுதாயம் முழுமையின் பிரதிநிதியாக மெய்யாகவே முன்வந்து புரிந்திடும் முதலாவது செயல் - (அதாவது பொருளுற்பத்திச் சாதனங்களை சமுதாயத் தின் உடமையாக்கிக்கொள்ளும் இச் செயல்) அரசு என்ற முறையில் சுயேச்சையாய் அது புரிந்திடும் இறுதிச் செயலாகவும் அமைந்துவிடுகிறது. சமூக உறவுகளில் அரசின் தலையீடு ஒவ்வொரு துறை யிலுமாய்த் தேவையற்றதாகி, பிற்பாடு தானாகவே தணிந்து அணைந்து விடுகிறது. ஆட்களை ஆளும் அரசாங்கமானது பொருள்களது நிர்வகிப்பாய், பொருளுற் பத்தி வேலைகளது நடப்பாய் மாறி விடுகிறது. "அரசு ஒழிக்கப் படுவதில்லை" அது உலர்ந்து உதிர்ந்து விடுகிறது. "சுதந்திர மக்கள் அரசு" எனும் தொடர் எந்தளவுக்கு மதிக்கத்தக்கது என்பதையும் (கிளர்ச்சியை முன்னிட்டு சில நேரங்களில் எந்தளவுக்கு அதன்பிரயோகம் நியாயம் என்பதையும், முடிவில் விஞ்ஞான வடிவில் அது எவ்வளவு குறைபாடானது என்பதையும்) அராஜக வாதிகளுடைய கோரிக்கையாகச் சொல்லப் படும் ஒரே நொடியில் அரசுஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எந்தளவுக்கு மதிக்கத்தக்கது என்பதையும் மேற்கூறியது புலப்படுத்து கிறது "(விஞ்ஞானத்தில் திருவாளர் ஒய்கென் டூரிங்கின் புரட்சி [டூரிங்குக்கு மறுப்பு], பக்கங்கள் 301-303, மூன்றாவது ஜெர்மன் பதிப்பு). கருத்து வளத்தில் தலைசிறந்து விளங்கும் எங்கெல்சின் இந்த வாக்குவாதத்தில் ஒரேஒரு விவரம் மட்டும்தான் நவீனகால சோசலிஸ்டுக் கட்சிகளுடைய சோசலிச சிந்தனையில் இடம்பெறுகிற தெனத் திட்டமாய் கூறலாம். அரசு "ஒழிக்கப்பட வேண்டும்" என்னும் அராஜகவாதக் கோட்பாட்டுக்கு மாறாக, மார்க்சின் கருத்துப்படி அரசு "உலர்ந்து உதிர்ந்துவிடும்"என்கிற ஒரேஒரு விவரம் மட்டும்தான் ஏற்கப்பட்டுள்ளது. மார்க்சியத்தை இந்தளவுக்கு வெட்டிக் குறுக்குவதானது மார்க்சியத்தைச் சந்தர்ப்பவாதமாய்ச் சிறுமைப்படுத்துவதே அன்றி வேறல்ல. ஏனெனில் இந்த "வியாக்கியானம்" பாய்ச்சல்களும் சூறாவளிகளும் இல்லாமலே, புரட்சி இல்லாமலே, மெதுவாகவும், ஏன் பையப்பையவும்கூட நடந்தேறும் மாறுதல் என்கிற தெளிவற்ற கருத்தை மட்டும்தான் விட்டுவைக்கிறது. அரசு "உலர்ந்து உதிர்வது" பற்றி தற்போது பரவலாய் (பிரபலமாய் என்றுகூட சொல்லலாம்) நிலவும்கருத்தினை, புரட்சியை நிராகரிக்கும் கருத்தெனக் கொள்ளாவிடிலும், நிச்சயமாய் புரட்சியினைமுனை மழுங்கச் செய்யும் கருத்தெனக் கொள்ள வேண்டும்.
இது மார்க்சியத்தை அப்பட்டமாகத் திரித்துப் புரட்டும் வியாக்கியானமே ஆகும். முதலாளியவர்க்கத்துக்குத்தான் இதனால் அனுகூலம் அல்லது சாதகம் ஆகும். தத்துவத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கையில், உதாரணமா க மேலே நாம் முழுமையாக எடுத்து அளித்த எங்கெல்சின் "தொகுப்புரை" சுட்டிக்காட்டும் மிகவும் முக்கியமான நிலைமைகளையும் காரணக் கூறுகளையும் புறக்கணிப்பதையே இது அடிப்படையாகக் கொண்டுள்ளது..... லெனின், அரசும் புரட்சியும் லெனின் தொகுப்பு நால் 2, பக்கம் 228.... அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய மற்றும் அனைத்து மக்களின் நலன்களைப் பேணுகின்ற அரசு உருவானால், அது முதன்மையாகச் செய்யக் கூடிய காரியமானது அனைத்து உற்பத்திச் சாதனங்களையும் தனியாரிடமிருந்து பறித்தெடுத்து மக்களின் பொதுச்சொத்தாகமாற்றும், உழைக்கும் வர்க்கத்தை அடிமைப்பட்ட வர்க்கம் என்ற நிலையை மாற்றும், அனைத்துவகையான வர்க்க முரண்பாடுகளையும் ஒழித்துக்கட்டும். லாபத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு முடிவுகட்டும், இறுதியில் அரசானது சமுதாயம் முழுமைக்கும் உண்மையான பிரதிநிதியாக மாறியவுடன் அரசு என்பது சமூகத்திற்கு தேவையில்லாததாக மாறி அரசானது உலர்ந்து உதிர்ந்துவிடுகிறது என்று எங்கெல்ஸ் கூறினார். இதன் மூலம் அரசானது ஒழிக்கப்பட முடியாது மாறாக அது தேவையற்றதாக மாறி உலர்ந்து உதிர்ந்துவிடும் என எங்கெல்ஸ் விளக்குகிறார். அதன் மூலம் அனைத்து மக்களின் உண்மையான பிரதிநிதியாகவுள்ள அரசின் தேவையையும் அத்தகைய அரசுஉருவாகி அரசின் அவசியம் தேவையில்லை என்ற சூழலை உருவாக்க வேண்டும் என்கிறார். அத்தகைய அரசை எப்படி உருவாக்குவது என்பதுதான் கேள்வியாகும். அனைத்து மக்களின் நலன்காக்கும் அரசை உருவாக்க எடுக்கப்படும் நடவடிக்கையை தற்போதைய ஆளும் வர்க்கம் அனுமதிக் குமா? நிச்சயம் அனுமதிக்காது, அத்தகைய நடவடிக்கையை தனது ஆயுத பலத்தால் பலாத்கார முறையிலேயே ஒடுக்குவதற்கு ஆளும்வர்க்கங்கள் முயற்சி செய்யும்.
ஆகவே அத்தகைய முயற்சியை ஒரு பலாத்காரமான புரட்சியின் மூலமாகவே ஆளும்வர்க்கங்களின் ஆட்சி அதிகாரத்தை வீழ்த்தி அனைத்து மக்களாலும் ஆதரிக்கப் படக் கூடியமக்களுக்கான அரசை நாம் உருவாக்க முடியும் என்பதே மார்க்சியம் காட்டும் வழியாகும்.
இதற்கு மாறாக அராஜகவாதிகள் அரசை ஒரேயடியாக ஒழிக்கவேண்டும் என்று வாதாடினார்கள். அவர்களுக்கு பதில் கொடுக்கும்போதுதான் எங்கெல்சின் மேலே கண்ட கருத்தை முன்வைத்து லெனின் அரசை ஒரேயடியாக ஒழிப்பது என்ற கருத்து மார்க்சியத்திற்கு எதிரானது என்றும். நிலவுகின்ற அரசை ஒரு புரட்சியின் மூலம் தூக்கியெறிந்து பாட்டாளிவர்க்கத்திற்கான அரசை உருவாக்க வேண்டும் என்ற பாட்டாளிவர்க்கத்தின் கடமையை அராஜக வாதிகள் புறக்கணிக்கிறார்கள் என்று லெனின் தெளிவுபடுத்தினார்.
ஆகவே அரசு உலர்ந்து உதிரும் என்ற போதிலும் நிலவுகின்ற அரசு உலர்ந்து உதிராது என்பதையும் சோசலிச அரசுதான் உலர்ந்து உதிரும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆகவே அரசின் தேவையில்லாத விஞ்ஞான கம்யூனிச சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டுமானால் உலர்ந்து உதிரக்கூடிய சோசலிச அரசை உழைக்கும் வர்க்கமானது ஒரு புரட்சியின் மூலம் உருவாக்க வேண்டியது அவசியமாகும். இதற்கு மாறாக பையபைய நிலவுகின்ற அரசானது சோசலிச அரசாக மாறிவிடும் என்று சொல்வது அரசு பற்றிய மார்க்சியக் கொள்கையை திருத்தும் திருத்தல் வாதமாகும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
முதலாவதாக, எங்கெல்ஸ் தமது உரையின் தொடக்கத்திலேயே, பாட்டாளிவர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் அது "அரசு அரசாய் இருத்தலை ஒழித்திடுகிறது"என்கிறார். இதன் பொருள் குறித்துசிந்திப்பது அவசியமெனக் கருதப்படுவ தில்லை. பொதுவாக இது சிறிதும் கவனியாது விடப்படுகிறது, அல்லது எங்கெல்சிடமிருந்த ஒருவகை "ஹெகலியப் பலவீனத்தின்" பாற்பட்டதாக இது கருதப்படுகிறது. ஆனால் உண்மை என்னவெனில், இச்சொற்கள் மாபெரும் பாட்டாளிவர்க்கப் புரட்சிகளில் ஒன்றான 1871ஆம் ஆண்டின் பாரீஸ்கம்யூனது அனுபவத்தைச் சுருக்கமாக எடுத்துரைக் கின்றன. இதுகுறித்து உரிய இடத்தில் நாம் விவரமாகப் பேசுவோம். உண்மை என்னவெனில், எங்கெல்ஸ் இங்கு பாட்டாளி வர்க்கப் புரட்சி முதலாளித்துவ அரசை "ஒழித்திடுவது" குறித்துப் பேசுகிறார். "அரசு உலர்ந்து உதிர்வது" பற்றிய சொற்கள் சோசலிசப் புரட்சிக்குப் பிற்பாடு பாட்டாளி வர்க்க அரசின் மிச்சங்களைக் குறிப்பன வாகும். எங்கெல்சின் கருத்துப்படி முதலாளித்துவ அரசு "உலர்ந்து உதிர்வதில்லை"புரட்சியின் மூலம் பாட்டாளி வர்க்கத்தால்"ஒழிக்கப்படுகிறது" இந்தப் புரட்சிக்குப் பிறகு உலர்ந்து உதிர்வது பாட்டாளிவர்க்க அரசு அல்லது அரை-அரசே ஆகும்.
இங்கே இரண்டுவகையான அரசுகளைப் பற்றி எங்கெல்ஸ் பேசுகிறார். ஒன்று சுரண்டும் வர்க்கத்திற்கான அரசு. அதாவது முதலாளித்துவ அரசு. இது சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட அரசாகும். இந்த அரசு உலர்ந்து உதிராது. மாறாக இந்த அரசை பாட்டாளிவர்க்கம் போராடி ஒழிக்க வேண்டும் என்கிறார். இவ்வாறு ஒழிக்கப்பட்ட அரசுக்குப் பதிலாக உருவாகும் அரசானது தொழிலாளர் வர்க்க அரசாகும். இந்த அரசில் முதலாளித்துவ சுரண்டல்கள் ஒழிக்கப்படும். இந்த அரசுதான் உலர்ந்து உதிரும் அரசாகும் என்று இந்த இரண்டு அரசுகளுக்கு இடையிலான வேறுபாட்டை எங்கெல்ஸ் விளக்கியுள்ளார்.
இரண்டாவதாக, அரசு என்பது "தனிவகைப் பட்ட பலவந்த சக்தி ஆகும்" தேர்ந்த தெளிவுடன் இங்கு எங்கெல்ஸ் இந்த அற்புதமான, ஆழ்ந்த பொருட்செறிவுள்ள இலக்கணத்தை வகுத்தளிக்கிறார். இதிலிருந்து பெறப்படுவது என்னவெனில், பாட்டாளி வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கம் அடக்குவதற்காக, கோடானகோடி உழைப்பாளி மக்களை ஒருசில செல்வந்தர்கள் ஒடுக்குவதற்காக அமைந்த "தனிவகைப்பட்ட பலவந்த சக்திக்குப்"பதிலாக, முதலாளித்துவ வர்க்கத்தைப் பாட்டாளிகள் அடக்குவதற்கான "தனிவகைப்பட்ட பலவந்த சக்தியை" (பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை) அமைத்தாக வேண்டும். "அரசு அரசாய் இருத்தலை ஒழித்திடுவது"என்பதன் அர்த்தம் இதுவே ஆகும்.பொருளுற்பத்திச் சாதனங்களைச் சமுதாயத்தின் உடமையாக்கிக்கொள்ளும் "செயல்" இதுவேதான். ஒரு(முதலாளித்துவ) "தனிவகை சக்திக்குப்" பதிலாய் மற்றொரு (பாட்டாளி வர்க்க) "தனிவகை சக்தியை" இத்தகைய முறையில் அமைத்திடுவது "உலர்ந்து உதிரும்" வடிவில் நடைபெறுவது சாத்தியமில்லை. என்பது கூறாமலேயே விளங்கக் கூடியதாகும்.
"அரசு அரசாய் இருப்பதை ஒழிக்க வேண்டும்" என்று எங்கெல்ஸ் சொல்வதன் பொருள் என்ன?
உழைக்கும் மக்களை ஒருசில செல்வந்தர்கள் அடக்கி ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்டபலவந்தமான சக்தியாகிய முதலாளித்துவ அரசுக்குப் பதிலாக கோடானுகோடி உழைக்கும் மக்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய செல்வந்தர் களை ஒடுக்குவதற்கான பலவந்தமான சக்தியை (பாட்டாளிவர்க்க அரசை) உருவாக்க வேண்டும் என்கிறார் எங்கெல்ஸ். அத்தகைய பலவந்தமான சக்தியான பாட்டாளி வர்க்க அரசுதான் "அரசு அரசாய் இருப்பதை ஒழிப்பதற்கான அரசு" என்று எங்கெல்ஸ் விளக்குகிறார். பொருளுற் பத்திச் சாதனங்களை சமுதாயத்தின் உடமையாக இந்த அரசு மாற்றுகிறது. அதன் காரணமாகவே இந்த அரசு உலர்ந்து உதிரும் அரசாக இருக்கிறது. இதற்கு மாற்றாக முதலாளித்துவ அரசில் பொருளுற்பத்திச் சாதனங்கள் சமுதாயத்தின் உடமையாக இருப்பதில்லை, மாறாக தனிப்பட்ட முதலாளிகளின் உடமையாக இருக்கின்ற காரணத்தால் இந்த முதலாளித்துவ அரசானது உலர்ந்து உதிராது, மாறாக இது ஒழிக்கப்பட வேண்டிய அரசாகவே இருக்கிறது என்பதை எங்கெல்ஸ் விளக்கியுள்ளார்.
மூன்றாவதாக, அரசு "உலர்ந்து உலர்வது" பற்றியும், இன்னும்கூட பளிச்சென விளங்கும் வண்ணம் கவர்ச்சிகரமாக அமைந்த "தானாகவே தணிந்து அணைந்து விடுவது" பற்றியும் பேசுகையில் எங்கெல்ஸ் "பொருளுற்பத்திச் சாதனங்களைச் சமுதாயம் அனைத்தின் உடமையாக்கிக் கொண்டதற்கு"பிற்பட்டக் காலத்தையே, அதாவது சோசலிசப் புரட்சிக்குப் பிற்பட்ட காலத்தையே மிகத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் குறிப்பிடுகிறார். இக்காலத்தில்"அரசின்"அரசியல் வடிவம் முழு அளவிலான முழு நிறைவான ஜனநாயகமாகும் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஆகவே எங்கெல்ஸ் இங்குஜனநாயகம் "தானாகவே தணிந்து அணைந்து விடுவது" அல்லது "உலர்ந்து உதிர்ந்து விடுவது" பற்றிப் பேசுகிறார்; வெட்க்கங்கெட்ட முறையில் மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டும் சந்தர்ப்பவாதிகள் யாருடைய மண்டையிலும் இது நுழைவதே இல்லை. முதல் பார்வைக்கு இது மிக்க வினோதமாகவேதோன்றுகிறது. ஆனால் ஜனநாயகம் என்பதும் ஓர் அரசே ஆகும், ஆதலால் அரசு மறையும்போது அதுவும் மறைந்தே ஆகவேண்டும் என்பது பற்றி ஆலோசிக்காதவர்களுக்குத்தான் இது "புரியாததாக" இருக்கும். புரட்சியால் மட்டுமேமுதலாளித்துவ அரசை" ஒழிக்க முடியும்". பொதுவாக அரசு எனப்படுவது, அதாவது முழுஅளவிலான, முழு நிறைவான ஜனநாயகம் எனப்படுவது "உலர்ந்து உதிரவே" முடியும்.
நெருப்பு தானாக எரிவதற்கான சூழலை ஒழித்துவிட்டால், நெருப்பானது தானாக தணிந்து அணைந்துவிடும் அல்லவா. அதுபோலவே அரசு அரசாக நீடிப்பதற்கு காரணமான முதலாளித்துவ சுரண்டலை ஒழித்துவிட்டால், எவர் ஒருவரும் பிறரை சுரண்டி வாழ முடியாத ஒரு சூழலை ஏற்படுத்திவிட்டால், ஒருவர் பிறரை சுரண்டித்தான் வாழ வேண்டும் என்ற நிலையை ஒழித்துவிட்டால், எவர் ஒருவரும் பிறரிடம் கூலி அடிமையாக இருந்துதான் வாழவேண்டும் என்ற சூழலை ஒழித்துவிட்டால், எவர் ஒருவரையும் அடக்கி ஆள வேண்டும் என்ற நிலை சமூகத்தில் ஒழிந்துவிடும். அப்போது பிறரை ஒடுக்கி ஆள்வதற்கான கருவியான அரசு என்பது சமூகத்திற்கு தேவையில்லாமல் போய்விடும். அரசானது அதன் தன்மையை இழந்துஇல்லாமல் போய்விடும் என்கிறார் எங்கெல்ஸ்.
நான்காவதாக "அரசு உலர்ந்து உதிர்கிறது" என்ற புகழ்பெற்ற தமது கோட்பாட்டை வகுத்தளித்ததும் எங்கெல்ஸ் இந்தக் கோட்பாடு சந்தர்ப்பவாதிகள், அராஜகவாதி கள் ஆகிய இரு சாராரின் கூற்றுக்கும் எதிரானது என்பதை திட்டவட்டமாய் உடனே விளக்குகிறார்.
இவ்வாறு விளக்குகையில், "அரசு உலர்ந்து உதிர்கிறது" என்ற நிர்ணயிப்பிலிருந்து பெறப்படுவதில் சந்தர்ப்பவாதிகளுக்கு விரோதமான முடிவை எங்கல்ஸ் முன்னணியிலேயே நிறுத்துகிறார்.
"அரசு உலர்ந்து உதிர்வது" பற்றி படித்தோ, கேட்டோ இருப்போரில் பத்தாயிரத்தில் 9990 பேர்எங்கெல்ஸ் எடுத்துரைத்த முடிவுகள் விரோதமாக இருந்தது அராஜகவாதிகளுக்கு மட்டுமல்ல என்பதைச் சிறிதும் உணராதவர்களாகவோ ஞாபகத்தில்வைத்திராதவர்களாகவோதான் இருப்பார் கள் என்று பந்தயம் கட்டலாம். எஞ்சியுள்ள பத்துப் பேரில், ஒன்பது பேர் "சுதந்திர மக்கள் அரசு" என்பதன் பொருள் தெரியாதவர் களாகவோ, இந்த முழக்கத்தைத் தாக்குவதுசந்தர்ப்பவாதிகளைத் தாக்குவதாக அமைவது ஏனென்று அறியாதவர்களா கத்தான் இருப்பார்கள். வரலாறு இவ்விதம்தான் எழுதப்படுகிறது! மாபெரும் புரட்சிப் போதனை இவ்விதம்தான் சன்னம் சன்னமாய் பொய்யாகத் திருத்திக் கூறப்பட்டு நடப்பிலுள்ள அற்பவாதத்துக்கு ஏற்றதாக்கப் படுகிறது. அராஜகவாதி களுக்கு விரோதமான முடிவு ஆயிரக்கணக்கான முறை திரும்பத் திரும்ப பறைசாற்றப்பட்டிருக்கிறது; கொச்சைப் படுத்தப்பட்டு படுமோசமான வடிவத்தில் மக்களுடைய மனதில் ஆழப் பதிக்கப்பட்டுதப்பெண்ணமாய் இறுகிவிடும்படி வளர்க்கப் பட்டிருக்கிறது. ஆனால் சந்தர்ப்பவாதி களுக்கு விரோதமான முடிவு மழுங்கடிக்கப்பட்டு"மறக்கப்பட்டுவிட்டது".
"அரசு உலர்ந்து உதிர்கிறது" என்ற புகழ்பெற்ற கோட்பாடு, அராஜகவாதி களுக்கு மட்டுமல்லசந்தர்ப்பவாதிகளுக்கும் எதிரான கோட்பாடாகும் என்று எங்கெல்ஸ் விளக்கினார்.அராஜகவாதிகள் அரசை ஒரேஅடியாக ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். சந்தர்ப்பவாதிகள் அரசை பையப்பைய ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் அரசானது முற்றிலும் தேவையில்லாத நிலை ஏற்படும் என்றும் அப்போது அது தானாகவே உலர்ந்து உதிர்ந்துவிடும் என்றார் எங்கெல்ஸ். அதே வேளையில் முதலாளித்துவ அரசைத்தான் உழைக்கும் மக்கள் ஒழிக்க வேண்டும் என்றும் அதனிடத்தில் உழைக்கும் மக்களுக்கான அரசை உருவாக்க வேண்டும் என்றார் எங்கெல்ஸ். அதாவது முதலாளித் துவ அரசை ஒழிப்பதன் மூலம் அரசே இல்லாத நிலையை ஏற்படுத்த முடியாது. அரசே இல்லாத நிலையை ஏற்படுத்து வதற்கு முன்பு உழைக்கும் மக்களுக்கான அரசை உருவாக்குவதோடு கூடவே உற்பத்திச் சாதனங்களை முதலாளிகளிட மிருந்து பறிமுதல் செய்து அதனை மக்களின் சொத்தாக மாற்றிட வேண்டும் என்ற முன்நிபந்தனையை எக்கெல்ஸ் வைக்கிறார்."சுதந்திர மக்கள் அரசு" என்பது 1870 - 80ஆம் ஆண்டுகளில் ஜெர்மன் சமூக-
ஜனநாயகவாதிகளது வேலைத்திட்டத்தில் குறிக்கப்பட்ட கோரிக்கையாக அமைந்து அவர்களிடையே பெருவழக்கமாகிவிட்டமுழக்கமாக இருந்தது. இந்த முழக்கம் ஜனநாயகம் என்னும் கருத்தோட்டத்தை ஆடம்பரமான அற்பவாதப் பாணியில் சித்தரிக்கிறது என்பதைத் தவிர வேறு அரசியல் உள்ளடக்கம் சிறிதும் இல்லாததே ஆகும். சட்டமுறையில் அனுமதிக்கப்பட்ட வழியில் சூசகமாக அது ஜனநாயகக் குடியரசை குறித்தவரை, கிளர்ச்சியை முன்னிட்டு "சில நேரங்களில்"அதை பிரயோகிப்பது "நியாயமே" என்பதை எங்கெல்ஸ் ஏற்றுக் கொண்டார். ஆனால் அது சந்தர்ப்பவாத முழக்கமே ஆகும். ஏனெனில் அது முதலாளித்துவ ஜனநாயகத்துக்கு மெருகிட்டு மினுக்கச் செய்வதுடன் நில்லாமல், பொதுவாக அரசு குறித்த சோசலிச விமர்சனத்தைப் புரிந்துகொள்ளவும் தவறிவிடுகிறது. ஜனநாயகக் குடியரசானது முதலாளித்துவத்தில் பாட்டாளி வர்க்கத்துக்கு மிகச் சிறந்த அரசு அமைப்பாகுமென நாமும் அதனை ஆதரிக்கிறோம். ஆனால் மிகவும் ஜனநாயகமான முதலாளித்துவ குடியரசிலுங்கூட கூலிஅடிமையிலேயேதான் மக்கள் உழல வேண்டிருக்கிறது என்பதை மறக்க நமக்கு உரிமை இல்லை. மேலும் ஒவ்வொரு அரசும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை அடக்கி ஆளுவதற்கான "தனிவகை" சக்தியே ஆகும். ஆகவே, எந்தவொரு அரசும் சுதந்திரமானதும் அல்ல, மக்கள்அரசும் அல்ல. மார்க்சும், எங்கெல்சும் 1870 - 80ஆம் ஆண்டுகளில் தமது கட்சித் தோழர்களுக்கு இதைத் திரும்பத் திரும்ப விளக்கிக் கூறினார்கள்.
ஜனநாயகம் என்பதும், ஜனநாயக அரசு என்பதும் அதற்கு முன்பு இருந்த அரசுகளைக் காட்டிலும் உயர்வானதே என்பதை எங்கெல்ஸ் ஏற்றுக்கொள்கிறார். எனினும் மிகச்சிறந்த ஜனநாயக அரசு என்றாலும், அந்த அரசிலும் உழைக்கும் மக்கள் கூலிஅடிமை முறையில்தான் வாழ வேண்டிய நிலையில் உள்ளார்கள் என்பதை எங்கெல்ஸ் எடுத்துக்காட்டுகிறார். ஆகவே உழைக்கும் மக்களை கூலி அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க வேண்டுமானால் இந்த முதலாளித்துவ ஜனநாயக அரசை ஒழித்துவிட்டு பாட்டாளி வர்க்க ஜனநாயக அரசை உருவாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்பதே எங்கெல்சின் வாதமாக உள்ளது. இந்தகருத்துக்களை மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ், அவர்களின் வாழ்நாள் முழுவதும் உழைக்கும் மக்களிடம் பிரச்சாரம் செய்துகொண்டே இருந்தனர். ஆனால் அவர்களின் கொள்கைகளை பின்பற்று வதாகச் சொல்லுகின்ற இன்றைய (போலி)கம்யூனிஸ்டுகள் அரசு பற்றிய மார்க்சியக்
கொள்கைகளைப் பற்றி உழைக்கும் மக்களிடம் பேசுவதே இல்லை. அதற்கு மாறாக அந்தக்கொள்கைகளை திருத்தி உழைக்கும் மக்களிடம் விளக்கம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆகவே உண்மை யான கம்யூனிஸ்டுகள் அரசு பற்றிய மார்க்சிய கொள்கைகளை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் இன்றைய சூழலுக்கு ஏற்ப போராடி உண்மையான உழைக்கும் மக்களுக்கான அரசை உருவாக்கி உற்பத்திச் சாதனங்களை பொதுவுடமை ஆக்க வேண்டும்.
ஐந்தாவதாக, அரசு உலர்ந்து உதிர்வது பற்றிய கருத்து (யாரும் மறக்காது நினைவில் கொண்டுள்ள இந்த கருத்து) காணப்படும் எங்கெல்சின் அதே நூலில், பலாத்காரப் புரட்சியின் முக்கியத்துவம் குறித்த கருத்தும் அடங்கியுள்ளது. பலாத்காரப் புரட்சியின் பாத்திரம் குறித்து
எங்கெல்ஸ் அளிக்கும் வரலாற்று வழிப்பட்ட பகுத்தாய்வு, பலாத்காரப் புரட்சியைப் போற்றும் மெய்யான புகழுரையாகி விடுகிறது. இது "யாருக்கும் நினைவில்லை" நவீனகால சோசலிஸ்டுக்
கட்சிகளில் இந்தக் கருத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசுவதும், ஏன் நினைப்பதும்கூட
தகாததாகிவிட்டது. இக்கட்சிகள் மக்களிடை யே நடத்தும் அன்றாடப் பிரச்சாரத்திலும் கிளர்ச்சியிலும் இக்கருத்துக்கு எவ்விதமான பங்கும் அளிக்கப்படுவதில்லை. ஆயினும் இக்கருத்து"அரசு உலர்ந்து உதிரும்" கருத்துடன் பிரிக்க முடியாதபடி இணைந்ததாகும்.
"அரசு உலர்ந்து உதிரும்" என்ற கருத்தை முன்வைத்த எங்கெல்ஸ், அதே வேளையில்உழைக்கும் மக்களின் பலாத்காரப் புரட்சியைப் பற்றியும் பேசுகிறார். ஒரு முதலாளித்துவ அரசை பையப்பைய அகற்ற முடியாது என்றும் அதனை பலாத்கார மாகவே அகற்ற முடியும் என்கிறார். ஏனென்றால் அமைதியான முறையில் ஒரு முதலாளித்துவ அரசை உழைக்கும் மக்கள் அகற்றுவதற்கு முயன்றால், நிலவுகின்ற முதலாளித்துவ அரசானது உழைக்கும் மக்களை அதற்கு அனுமதிக்காது. உதாரணமாக இந்தியாவில் கார்ப்பரேட் முதலாளிகள் வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பிச் செலுத்த மறுப்பதை எதிர்த்து மக்கள் போராடினால் அந்த மக்களை தனது ஆயுத பலத்தால் ஒடுக்குவதை நாம் அன்றாடம் காணலாம். இவ்வாறுஇவ்வாறு கார்ப்பரேட் முதலாளிகளை எதிர்த்து உழைக்கும் மக்கள் போராடும் அன்றாடப்
போராட்டத்தையே அதனது ஆயுத பலத்தால் ஒடுக்கும் இந்த முதலாளித்துவ அரசானது இந்தமுதலாளித்துவ அரசை அகற்றுவதற் கான போராட்டத்தை எந்தளவுக்கு ஒடுக்கும் என்பதை நாம்புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே நிலவுகின்ற முதலாளித்துவ அரசை பலாத்காரமாகப் போராடித்தான் அகற்றிட வேண்டும் என்பது உழைக்கும் மக்களின் விருப்பம் இல்லை.
உழைக்கும் மக்கள் தங்களுக்கு எதிரான முதலாளித்துவ அரசை அமைதியான முறையிலேயே அகற்றுவதற்கு முயல்கிறார் கள். ஆனால் மக்களின் அமைதியான போராட்டங்களை எல்லாம் இரத்த வெள்ளத் தில் மூழ்கடித்ததுதான் இந்த முதலாளித்துவ அரசுகளின் வரலாறாக இருக்கிறது. இந்த வரலாற்று அனுபவத்திலிருந்தே மார்க்சும் எங்கெல்சும் பலாத்காரப் புரட்சியின் அவசியத்தை உழைக்கும் மக்களுக்கு தொடர்ந்து போதித்து வந்தனர்.
மார்க்சியத்தின் அரசு பற்றிய இந்தக் கருத்தை உழைக்கும் மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமை யாகும். இந்த கடமையைச் செய்ய மறுப்பவர்கள் கம்யூனிஸ்டாக இருக்கவே முடியாது. இந்தக் கருத்தை திருத்தி உழைக்கும் மக்களிடம் மார்க்சியத்திற்கு எதிரான கருத்தைப் பரப்புபவர்கள் திருத்தல்வாதிகள் மற்றும் கம்யூனிச இயக்கத்திற்குள் இருக்கும் முதலாளித்துவ பாதையாளர்கள் ஆவார்கள்.
இதோ இருக்கிறது எங்கெல்சின் கருத்து.
"....... ஆனால் வரலாற்றில், பலாத்காரம் இன்னொரு பாத்திரமும்"(பேய்த்தனமான சக்திக்குரியபாத்திரத்தை அன்னியில் இன்னொன்றும்)"ஆற்றுகிறது"புரட்சிப்பாத்திரமும் ஆற்றுகிறது.
மார்க்சின் சொற்களில் கூறுவதெனில், புதிய சமுதாயத்தைக் கருக்கொண்டுள்ள ஒவ்வொரு பழைய சமுதாயத்துக்கும் அந்தப் பலாத்காரம் மருத்துவத் தாதியாய் செயல்படுகிறது; சமூக இயக்கமானது செத்து மடிந்து இறுகிப்போய்விட்ட அரசியல் வடிவங்களைத் தகர்த்துக்கொண்டு பலவந்த மாய்த் தனக்கு பாதை வகுத்துக்கொள்ள உதவும் கருவியாய் செயல்படுகிறது. இவையெல்லாம் குறித்து திருவாளர் டூரிங் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளாதார முறையைக் கவிழ்க்கப் பலாத்காரம் ஒருவேளை அவசியம் ஆகிவிடலாம் என்ற ஏக்கத்தவிப்புக்கும்முனகலுக்கும் இடையே ஒருவாறு அவர் ஒத்துக்கொள்கிறார். - இது துரதிர்ஷ்டமே என்கிறார்,ஏனெனில் பலாத்காரத்தின் எவ்வகையான பிரயோகமும் அதைப் பிரயோகிப்பவரைச் சீரழிக்கச்செய்கிறதாம். வெற்றிகரமான ஒவ்வொரு புரட்சியும் அறநெறித் துறையிலும் ஆன்மீகத் துறையிலும் அளவுகடந்த ஆர்வமும் வேகமும் அளித்திடுவதைப் பொருட்படுத் தாமல் புறக்கணித்துவிட்டுக் கூறப்படுகிறது இது. அதுவும் ஜெர்மனியிலே, முப்பது ஆண்டுப் போரின் (முப்பது ஆண்டுப் போர் [1618 -48] முதலாவது பொது ஐரோப்பிய யுத்தம். ஐரோப்பிய அரசுகளது பல்வேறு கூட்டுகளுக்கும் இடையுயுள்ள முரண்பாடு கள் கடுமையாகியதால் இந்த யுத்தம் எழுந்தது. புரோட்டஸ்டென்டுகளுக்கும் கத்தோலிக்கர்களுக்குமான போராட்டத்தின் வடிவத்தில் இது வெளியாகியது.
ஜெர்மனிதான் பிரதான போர் அரங்கும், இராணுவச் சூறையாடலுக்கும் கொள்ளைக் காரக் கோரிக்கைகளுக்குமான இலக்கும் ஆயிற்று. இந்த யுத்தம் வெஸ்ட்ஃபாலியா சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகியதுடன் முடிவுற்றது. ஜெர்மனி அரசியல் வழியில் சின்னாபின்னமாய்த் துண்டாடப்பட்டிருந் ததை இந்த ஒப்பந்தம் சட்டவடிவம் பெறச் செய்தது.) முப்பது ஆண்டுப் போரின் அவக்கேட்டைத் தொடர்ந்து தேச மனோபாவத்தில் ஊடுருவிவிட்ட அடிமை புத்தியானது பலாத்கார மோதலால் (மக்கள் இதில் இறங்கும்படியான நிர்பந்தம் ஏற்படுவது சாத்தியமே) ஒழித்துக்கட்டப்படும் என்ற அனுகூலமாவது கிட்டும் நிலையி லுள்ள ஜெர்மனியிலே, இது கூறப்படுகிறது. பாதிரியாருக்குரிய உப்புச் சப்பில்லாத, செயலிழந்த, கிழடுதட்டிய இந்தச் சிந்தனை இதுவரை வரலாறு கண்டறிந்த கட்சிகளில் மிகவும் புரட்சிகர கட்சியின் மீது தன்னை இருத்திக்கொண்டு விடலாமென நினைக்கிறது!"(பக்கம் 193, மூன்றாவது ஜெர்மன் பதிப்பு, பாகம்-2, அத்தியாயம்-4லின் முடிவில்) பலாத்காரப் புரட்சியைப் பேசும் இந்தப் புகழுரையை 1878க்கும் 1894க்கும் இடையில் (அதாவது அவர் இறக்கும் தருணம் வரையிலும்) ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதிகளின் கவனத்துக்கு ஓயாது கொண்டுவந்து கொண்டிருந்தார். இதனை யும் "அரசு உலர்ந்து உதிரும்" தத்துவத்தையும் இணைத்து ஒருமித்த ஒரே தத்துவமாக்குவது எப்படி?
எங்கெல்சின் சிறப்பு இதில்தான் அடங்கியுள்ளது. மக்களின் விடுதலைக்குஅவசியமான கருத்தை சரியாகப் புரிந்து கொண்டு அதனை கம்யூனிச அமைப்பைச் சேர்ந்த முன்னணிகளிடம் தொடர்ந்து விடாப்பிடியாகப் பிரச்சாரம் செய்தார். அவரது பிரச்சாரத்தை நாமும் தொடர்வதுதானே நாம் எங்கெல்சுக்கு கொடுக்கும் மரியாதையாகும்.
வழக்கமாய்க் கதம்பத் தேர்வுவாத வழியில், முதலில் ஒன்றும் பிற்பாடு மற்றொன்றுமாய்த்தான்தோன்றித்தனமாய் (ஆதிக்கம் செலுத்து வோர் மகிழும் பொருட்டு) கொள்கை கோட்பாடின்றி அல்லது குதற்கவாத முறையில் தேர்வு செய்யப்பட்டு இவை இரண்டும் இணைக்கப்படுகின்றன. நூற்றுக்கு தொன்னூற்றொன்பது சந்தர்ப்பங்களிலும் அதற்கும் கூடுதலாகவும் "உலர்ந்து உதிரும்" கருத்து முன்னணியிலே நிறுத்தப்படுகிறது. இயக்கவியல் கைவிடப்பட்டு அதற்குப் பதிலாய் கதம்பத் தேர்வுவாதம் கைக்கொள்ளப் படுகிறது. - மார்க்சியம் சம்பந்தமான அதிகாரப்பூர்வமான இன்றைய சமூக-ஜனநாயக வெளியீடுகளில் இதுவே மிகவும் பரவலாகக் காணப்படும் சர்வசாதாரண நடைமுறை ஆகும். இவ்வகையான மாறாட்டம்ஒன்றும் புதியதல்ல; முதுபெரும் கிரேக்கத் தத்துவியலின் வரலாற்றில்கூட காணப்பட்டது தான். சந்தர்ப்பவாத முறையில் மார்க்சியத்தைப் புரட்டிப் பொய்யாக்குவதில் இயக்கவியலுக்குப் பதிலாய்க் கதம்பத் தேர்வு வாதத்தை கைக்கொள்வதுதான் மக்களை ஏமாற்ற மிகவும் எளிய வழி. இது பிரமையான போலி மனநிறைவு அளிக்கிறது. நிகழ்ச்சிப் போக்கின் எல்லாத் தரப்புகளையும், வளர்ச்சியின் எல்லாப் போக்குகளையும், முரண்பட்டு மோதிக்கொள்ளும் எல்லாச் செயல்பாடுகளையும், இன்னபிறவற்றையும் இது கணக்கில் எடுத்துக் கொள்வதாய்த் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் இது சமூக வளர்ச்சிப் போக்கைப் பற்றி முழுமையான ஒருமித்த புரட்சிகரக் கருத்தோட்டம் தருவதே இல்லை.
பலாத்காரப் புரட்சி தவிர்க்க முடியாது என்ற மார்க்ஸ், எங்கெல்சின் போதனை முதலாளித்துவ அரசை குறித்ததாகும் என்பதை நாம் ஏற்கனவே கூறியிருக்கிறோம். முதலாளித்துவ அரசை நீக்கி அதனிடத்தில் பாட்டாளி வர்க்க அரசை (பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை) நிறுவுவது "உலர்ந்து உதிரும்" நிகழ்ச்சிப் போக்கின் வாயிலாய் நடந்தேற முடியாது; பொதுவிதிக்கு இணங்க இது பலாத்காரப் புரட்சியைப் போற்றும் எங்கெல்சின் புகழுரை மார்க்ஸ் திரும்பத் திரும்ப கூறியதற்கு முற்றிலும் இசைவானதே. (மெய்யறிவின் வறுமை, கம்யூனிஸ்டு அறிக்கை)இவற்றின் கடைசி வாசகங்கள் பலாத்காரப் புரட்சி தவிர்க்க முடியாது என்பதைப் பெருமிதத்தோடும் பகிரங்கமாகவும் பறைசாற்றுவதைப் பார்க்கவும்; இதன் பின் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்குப் பிற்பாடு, 1875ஆம் ஆண்டின் கோத்தா வேலைத் திட்டத்தை (கோத்தா வேலைத்திட்டம் - ஜெர்மனியின் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் கோத்தா காங்கிரஸ் 1875ல் ஏற்ற வேலைத்திட்டம். கோத்தா காங்கிரஸ் ஐசனாஹர்கள், லஸ்ஸாலியர்கள் ஆகிய இரு ஜெர்மன் சோசலிஸ்டுக் கட்சிகளையும் இணைத்தது. ஐசனாஹர்கள், ஔகுஸ்ட் பெபல், வில்ஹெல்ம் லீப்க்னெஹ்ட் தலைமையில் இருந்தனர்; இவர்கள் சித்தாந்த வழியில் மார்க்ஸ், எங்கெல்சின் செல்வாக்கு உட்பட்டவர்கள். கோத்தா வேலைத்திட்டம் கதம்பத் தேர்வு வாதத்தால் களங்கப்பட்டிருந்தது. ஐசனாஹர்கள் பிரதானப் பிரச்சனைகளில் லஸ்ஸாலியர் களுக்கு விட்டுக் கொடுத்து லஸ்ஸாலியர் களின் நிர்ணயிப்புகளை ஏற்றுக்கொண்டு விட்டதால் இந்த வேலைத்திட்டம் சந்தர்ப்பவாதத் தன்மை கொண்டிருந்தது.
1869ஆம் ஆண்டின் ஐசனாஹரின் வேலைத் திட்டத்துடன் ஒப்பிடுகையில் கோத்தா வேலைத்திட்டம் வெகுவாய்ப் பின்னோக்கிச் சென்றுவிட்டதென மார்க்சும், எங்கெல்சும்
கருதினர். மார்க்ஸ் அவருடைய கோத்தா வேலைத்திட்டம் பற்றிய விமர்சனத்திலும், எங்கெல்ஸ் 1875மார்ச் 18-28ல் பெபலுக்கு எழுதிய கடிதத்திலும் இந்த வேலைத்திட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்து தாக்கினர்).
மார்க்ஸ் கோத்தா வேலைத்திட்டத்தை விமர்சனம் செய்கையில் அந்த வேலைத்திட்டத்தின் சந்தர்ப்பவாதத் தன்மையைத் தயவுதாட்சண்யமின்றி கண்டித்தார். எங்கெல்சின் இந்தப் புகழுரை வெறும் "உணர்ச்சி வேகமோ" உத்வேக முழக்கமோ, சண்டப் பிரசண்டமோ அல்ல. பலாத்காரப் புரட்சி பற்றிய திட்டவட்டமான இதே கருத்தோட்டத்தை முறையாய் வெகு ஜனங்களின் மனதில் ஆழப் பதியச் செய்வது அவசியம் என்பது மார்க்ஸ் எங்கெல்சின் போதனை அனைத்தின் ஆணிவேர் போன்றதாகும். இவர்களுடைய போதனைக்குத் தற்போது சமூக நடப் பிலுள்ள சமூக - தேசியவெறிப் போக்கும் காவுத்ஸ்கிவாதப் போக்கும் இழைத்துவரும்துரோகமானது, இந்தப் போக்குகள் இத்தகையப் பிரச்சாரத்தையும் கிளர்ச்சி யையும் கைவிட்டதில் மிகவும் எடுப்பாய் வெளிப்படுகிறது.வெறும் உணர்ச்சி வேகத்தின் காரணமாகவோ, உத்வேகமாக முழக்கமிட வேண்டும் என்பதற்காகவோ, சண்டப் பிரசண்டம் செய்ய வேண்டும் என்பதற் காகவோ மார்க்சும், எங்கெல்சும் பலாத்காரப் புரட்சி அவசியம் என்ற கருத்தை மக்களிடம் தொடர்ந்து பிரச்சாரம் செய்யவில்லை. மாறாக மனிதகுல வரலாற்றின் அனுபவத்தி லிருந்துதான் பலாத்காரப் புரட்சி என்ற கருத்தை மக்களிடம் முன்வைத்தார்கள். மன்னராட்சியிலிருந்து ஐரோப்பாவில் மாற்றம்ஏற்பட்டது ஒரு பலாத்காரப் புரட்சியின் மூலமாகத்தான். வரலாற்றில் பிரெஞ்சுப் புரட்சி என்று சொல்லப்படும் புகழ்பெற்ற முதலாளித்துவப் புரட்சியும் பலாத்காரத்தைப் பயன்படுத்தியே நடத்தப்பட்டது. அது போலவே முதலாளித்துவ அரசுகளுக்கு எதிராக பாட்டாளி வர்க்கம் நடத்தும் புரட்சியும் பலாத்காரத்தைப் பயன்படுத்தித்தான் நடைபெறும் என்று மார்க்சும் எங்கெல்சும் முடிவிற்கு வந்தது சமூக விஞ்ஞான அடிப்படையிலானதே ஆகும். மார்க்சினுடையகருத்துக்கு மாறாக சமூக தேசிய வெறியர்களும், காவுத்ஸ்கியவாதிகளும் மாறுபட்ட தவறான கருத்துக்களை முன் வைத்த போது மார்க்ஸ் அவர்களுடைய கருத்துக்களை எதிர்த்து விடாப்பிடியாகப் போராடினார். மார்க்சின் இந்தப் போராட்டமானது காவுத்ஸ்கி என்ற தனிநபரை எதிர்த்தப் போராட்டம் இல்லை. மாறாக காவுத்ஸ்கி கொண்டிருந்த மக்களுக்கு எதிரான கொள்கைகளை எதிர்த்தே மார்க்ஸ் போராடினார். மார்க்சைப் பின்பற்றும் கம்யூனிஸ்டுகளும் கம்யூனிச கொள்கை களுக்கு எதிராகவும் மக்களை ஏமாற்றும் மக்களுக்கு எதிரான கொள்கைகளை எதிர்த்து நாம் விடாப்பிடியாக மார்க்சியத்தை உயர்த்திப் பிடித்து போராட வேண்டும். நமது தோழர்களை எதிர்த்துப் பேசலாமா? என்று தயக்கம் காட்டக் கூடாது. தவறான கருத்துக்களை தயவுதாட்சண்யமின்றி உறுதியாக எதிர்த்துப்போராடுவதுதான் நாம் மார்க்ஸ் மற்றும் எங்கெல்சை மதிப்பது மற்றும் பின்பற்றுவதற் கான ஒரே அடையாளமாக இருக்கும்.
மார்க்ஸ் எங்கெல்சின் போதனைகளில் மிகவும் முதன்மையானது பலாத்காரப் புரட்சி பற்றிய இந்தப் போதனைதான். இந்தப் போதனையை தொடர்ந்து மக்களிடம் பிரச்சாரம் செய்பவர்கள்தான் உண்மையான கம்யூனிஸ்டுகள் என்று லெனின் நமக்கு வழிகாட்டுகிறார்.
மார்க்சியத்தின் இந்தப் போதனைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்யாதவர்களை நாம் கம்யூனிஸ்டுகள் என்று கருதக் கூடாது.இதனை பிரச்சாரம் செய்யாதவர்களையேகம்யூனிஸ்டாக கருத முடியாது என்றால் மார்க்சியத்தின் இந்த போதனைகளை திருத்தி மார்க்சியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களை என்னவென்று சொல்வது. அவர்களைத்தான் நாம் திருத்தல்வாதிகள் என்கிறோம்.
பலாத்காரப் புரட்சி இல்லாமல் முதலாளித் துவ அரசு பாட்டாளி வர்க்க அரசாய் மாற முடியாது.
பாட்டாளி வர்க்க அரசு, அதாவது பொதுவில் அரசு எனப்படுவது, "உலர்ந்து உதிரும்" நிகழ்ச்சிப் போக்கின் மூலமாகவே அன்றி வேறு எவ்வழியிலும் அகற்றப்பட முடியாது.
குறிப்பிட்ட புரட்சிகரச் சூழ்நிலை ஒவ்வொன் றையும் பரிசீலித்ததன் மூலமும், குறிப்பிட்ட புரட்சி ஒவ்வொன்றின் அனுபவத்தைப் பகுத்தாய்ந்ததன் மூலமும் மார்க்சும் எங்கெல்சும் இந்தக் கருத்துக்களை விவரமாகவும் ஸ்தூலமாகவும் விளக்கினார் கள். சந்தேகத்திற்கு இடமின்றி இதுவே அவர்களின் போதனையின் மிகவும் முக்கியமான பகுதியாகும். அரசை அராஜகவாதிகள் சொல்வதைப் போல ஒரேஅடியாக ஒழித்துவிட முடியாது.
சந்தர்ப்பவாதிகள் செல்வதுபோல பையப்பைய அரசை ஒழித்துவிட முடியாது என்பது மார்க்சியமாகும்.
மேலும் முதலாளித்து வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்கும் முதலாளித்துவ அரசை உலர்ந்து உதிரும் முறையில் பாட்டாளி வர்க்க அரசாக மாற்ற முடியாது. மாறாக பலாத்காரத்தின் மூலமே, உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட போராட்டங்களின் மூலமே முதலாளித்துவ அரசை பாட்டாளி வர்க்க அரசாக மாற்ற முடியும்.
பாட்டாளி வர்க்க அரசானது முதலாளி வர்க்கங்களுக்குச் சொந்தமான பொருள் உற்பத்திச் சாதனங்களை பறிமுதல் செய்து உழைக்கும் மக்களின் உடமையாக மாற்றுவதன் மூலமே பாட்டாளிகளின் அரசை உலர்ந்து உதிரும் அரசாக மாற்ற முடியும்.
ஆகவே அரசே இல்லாத கம்யூனிச சமூகம் உருவாவதற்கு இடைக்கட்டமாக பாட்டாளிகளின் அரசான சோசலிச அரசை உருவாக்க வேண்டியது உழைக்கும் மக்களின் கடமையாகும்.
இதனை தேர்தல்களில் வெற்றி பெறுவதன் மூலம் உருவாக்க முடியாது. மாறாக பலாத்காரப்புரட்சி தவிர்க்க முடியாது என்ற போதனையே மார்க்சியத்தின் முதன்மை யான போதனை ஆகும்- தொடரும் தேன்மொழி