இந்த ஆதாரங்கள் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையின் பல்வேறு மொழிப் பதிப்புகளுக்கான முன்னுரைகளையும், அதன் முக்கியக் கோட்பாடுகளையும் விரிவாக விளக்குகின்றன. வர்க்கப் போராட்டமே வரலாற்றின் அடிப்படை இயக்குசக்தி என்பதையும், நவீன முதலாளித்துவத்தின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது என்பதையும் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் இதில் வலியுறுத்துகின்றனர். தொழிலாளி வர்க்கம் தற்போதைய அரசு இயந்திரத்தை அப்படியே பயன்படுத்த முடியாது என்றும், முழுமையான சமூக மாற்றத்தின் மூலமே பாட்டாளி வர்க்கம் விடுதலை பெற முடியும் என்றும் இப்பாடப்பகுதி விவரிக்கிறது. பல்வேறு வகையான சோஷலிசக் கருத்துக்களை விமர்சிக்கும் அதேவேளையில், கம்யூனிஸ்டுகள் மற்ற தொழிலாளர் கட்சிகளுடன் இணைந்து செயல்படும் முறையையும் இது தெளிவுபடுத்துகிறது. இறுதியாக, உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் தங்களின் அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிய ஒன்றுபட வேண்டும் என்ற புரட்சிகர அழைப்போடு இந்த ஆவணம் முடிகிறது. இக்கருத்துக்கள் காலப்போக்கில் சில மாற்றங்களைச் சந்தித்தாலும், இதன் அடிப்படை தத்துவங்கள் இன்றும் ஒரு வரலாற்று ஆவணமாகப் போற்றப்படுகின்றன.
இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே
தோழர்களுக்கு வணக்கம் இன்றைய(21-08-2026)
வாசிப்பு விவாத தேவைக்கான பகுதி இவை.
கம்யூனிஸ்டுக் கட்சி
அறிக்கை-கார்ல் மார்க்ஸ்,
ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்
பல்வேறு மொழிப் பதிப்புகளுக்கு எழுதிய முகவுரைகள்
1872
ஜெர்மன் பதிப்பு | 1882
ருஷ்யப் பதிப்பு | 1883
ஜெர்மன் பதிப்பு | 1888
ஆங்கிலப் பதிப்பு 1890
ஜெர்மன் பதிப்பு | 1892
போலிஷ் பதிப்பு | 1893
இத்தாலியப் பதிப்பு
இந்த வேலைத்திட்டம் சில விவரங்களில் காலங் கடந்ததாகி விடுகிறது. கம்யூனானது
முக்கியமாக ஒன்றை நிரூபித்துக் காட்டியது. அதாவது, ’ஏற்கெனவே தயார் நிலையிலுள்ள அரசு எந்திரத்தைத் தொழிலாளி
வர்க்கம் வெறுமனே கைப்பற்றி, அப்படியே தன் சொந்த
நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது’. (பார்க்கவும்: ஃபிரான்சில் உள்நாட்டுப் போர் - சர்வதேசத் தொழிலாளர் சங்கப்
பொதுக்குழுவின் பேருரை, லண்டன், ட்ரூலவ்,
1871. பக்கம் 15-இல் இந்த விவரம் மேலும்
விரிவாக விளக்கப்பட்டுள்ளது). தவிரவும், சோஷலிச
இலக்கியத்தைப் பற்றிய விமர்சனம் இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரை போதுமானதல்ல
என்பது கூறாமலே விளங்கும். ஏனெனில் 1847-ஆம் ஆண்டு வரைதான்
அதில் அலசப்பட்டுள்ளது. அத்தோடு, பல்வேறு எதிர்க்கட்சிகளுடன்
கம்யூனிஸ்டுகளின் உறவுநிலை பற்றிய குறிப்புகள் (நான்காம் பிரிவு) கோட்பாட்டு
அளவில் இன்றும் சரியானவையே. என்றாலுங்கூட, நடைமுறையில் காலங்
கடந்தவையே. காரணம், இன்றைக்கு அரசியல் நிலைமை முற்றிலும்
மாறிவிட்டது. வரலாற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமானது, அப்பிரிவில்
பட்டியலிடப்பட்டுள்ள அரசியல் கட்சிகளில் மிகப் பெரும்பாலானவற்றைப்
புவிப்பரப்பிலிருந்தே துடைத்தெறிந்துவிட்டது.
ஆனாலும் அறிக்கையானது[7] ஒரு வரலாற்று ஆவணமாகிவிட்டது. இதைத் திருத்துவதற்கான எந்த உரிமையும் இனி
எங்களுக்கு இல்லை. 1847-லிருந்து இன்றுவரையுள்ள இடைவெளியை
நிரப்பும் ஒரு முன்னுரையோடு அடுத்து ஒரு பதிப்பு வெளிவரக்கூடும். தற்போது இந்த
மறுபதிப்பு மிகவும் எதிர்பாராத நிலையில் வெளியாவதால், இப்பணியைச்
செய்துமுடிக்க எங்களுக்கு அவகாசம் இல்லாமல் போய்விட்டது.-கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்
லண்டன், ஜூன் 24,
1872.
*********************
வெகுவிரைவில் நிகழவிருக்கும், நவீன
முதலாளித்துவச் சொத்துடைமையின் தவிர்க்கவொண்ணாத் தகர்வினைப் பிரகடனப்படுத்துவதையே
கம்யூனிஸ்டு அறிக்கை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.- கார்ல் மார்க்ஸ்,
ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்
லண்டன், ஜனவரி
21,
1882.
*********************************
அறிக்கையினூடே இழையோடி
நிற்கும் அடிப்படையான கருத்து – ஒவ்வொரு வரலாற்றுக் காலகட்டத்தின் பொருளாதார
உற்பத்தியும், அதிலிருந்து
தவிர்க்க முடியாதபடி எழுகின்ற சமுதாயக் கட்டமைப்பும், அந்தந்தக்
காலகட்டத்தின் அரசியல், அறிவுத்துறை ஆகியவற்றின்
வரலாற்றுக்கான அடித்தளமாக அமைகின்றன. ஆகவே, (புராதன நிலப்
பொதுவுடைமை அமைப்பு சிதைந்துபோன காலம்தொட்டே) அனைத்து வரலாறும் வர்க்கப்
போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. அதாவது, சமூக
வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும், சுரண்டப்படும்
வர்க்கத்துக்கும் சுரண்டும் வர்க்கத்துக்கும், ஒடுக்கப்படும்
வர்க்கத்துக்கும் ஒடுக்கும் வர்க்கத்துக்கும் இடையேயான போராட்டங்களின் வரலாறாகவே
இருந்து வருகிறது. எனினும், இந்தப் போராட்டமானது தற்போது ஒரு
முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கம்
(பாட்டாளி வர்க்கம்), தன்னோடு கூடவே சமுதாயம் முழுவதையும்
சுரண்டலிலிருந்தும், ஒடுக்கு முறையிலிருந்தும், வர்க்கப் போராட்டங்களிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்க வேண்டும். அவ்வாறு
விடுவிக்காமல், சுரண்டியும் ஒடுக்கியும் வரும்
வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) ஒருபோதும் தன்னை
விடுவித்துக்கொள்ள இயலாது என்கிற கட்டத்தை எட்டியுள்ளது – இந்த அடிப்படையான
கருத்து முற்றிலும் மார்க்ஸ் ஒருவருக்கு மட்டுமே உரியதாகும்[ஏ1].- நான் இதனை ஏற்கெனவே பலமுறை குறிப்பிட்டுள்ளேன். என்றாலும், முக்கியமாக இப்பொழுது அறிக்கையின்
முகவுரையிலேயே குறிப்பிட வேண்டியதும் அவசியமாகும்.
ஃபிரெடெரிக் எங்கெல்ஸ்
லண்டன், ஜுன் 28,
1883.
*****************
பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான முதலாவது
பெரும் போராக, 1848 ஜூனில்
வெடித்த பாரிஸ் எழுச்சிக்கு ஏற்பட்ட தோல்வியானது, ஐரோப்பியத்
தொழிலாள வர்க்கத்தின் சமூக, அரசியல் ஆர்வங்களைச் சிறிது
காலத்துக்கு மீண்டும் பின்னிலைக்குத் தள்ளியது. அதன்பிறகு, மேலாதிக்கத்துக்கான
போராட்டம், பிப்ரவரிப் புரட்சிக்கு முன்பிருந்ததைப் போலவே,
மீண்டும் சொத்துடைமை வர்க்கத்தின் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையிலே
மட்டும் நடைபெறும் போராட்டமாக ஆனது. தொழிலாளி வர்க்கம், அரசியல்
புகலிடத்துக்காகப் போராட வேண்டிய நிலைக்கும், நடுத்தர
வர்க்கத் தீவிரக் கொள்கையினரின் தீவிரவாதப் பிரிவின் நிலைக்கும் தாழ்த்தப்பட்டது.
சுயேச்சையான பாட்டாளி வர்க்க இயக்கங்கள் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கும்
அறிகுறிகள் எங்கேனும் தென்படுமாயின், அவை ஈவிரக்கமின்றி
நசுக்கப்பட்டன. இப்படித்தான் பிரஷ்யப் போலீசார் அப்போது கொலோன் (Cologne) நகரில் அமைந்திருந்த கம்யூனிஸ்டுக் கழகத்தின் மையக் குழுவை வேட்டையாடினர்.
மையக் குழுவின் உறுப்பினர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். பதினெட்டு மாத
சிறைவாசத்துக்குப்பின், 1852 அக்டோபரில் அவர்கள்மீது
வழக்குத் தொடுத்தனர். புகழ்பெற்ற இந்த “கொலோன் கம்யூனிஸ்டு வழக்கு விசாரணை”[11] அக்டோபர் 4 முதல் நவம்பர் 12 வரை
நடைபெற்றது. சிறைக் கைதிகளில் ஏழு பேருக்கு மூன்றுமுதல் ஆறு ஆண்டுகள்வரை கோட்டைச்
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை வழங்கப்பட்ட உடனேயே, எஞ்சியிருந்த
உறுப்பினர்கள் கம்யூனிஸ்டுக் கழகத்தை முறைப்படி கலைத்துவிட்டனர். அதன்பிறகு அறிக்கையின் கதியோ, கேட்பாரற்றுக்
கிடந்தழியும் என்றே தோன்றியது.
ஆளும் வர்க்கங்கள் மீது மற்றுமொரு தாக்குதலுக்குப் போதுமான பலத்தை ஐரோப்பியத்
தொழிலாளி வர்க்கம் மீண்டும் பெற்றபோது, சர்வதேசத் தொழிலாளர் சங்கம் [அகிலம்] உதித்தெழுந்தது. ஆனால், ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் சேர்ந்த போர்க்குணம் மிக்க பாட்டாளி
வர்க்கம் முழுவதையும் ஒரே அமைப்பாக ஒன்றிணைக்க வேண்டுமென்ற வெளிப்படையான
குறிக்கோளுடன் நிறுவப்பட்ட இச்சங்கத்தால், அறிக்கையில் வகுத்துரைக்கப்பட்ட கோட்பாடுகளை உடனடியாகப் பிரகடனப்படுத்த
இயலவில்லை. ஆங்கிலேயத் தொழிற்சங்கங்களும், ஃபிரான்ஸ்,
பெல்ஜியம், இத்தாலி, ஸ்பெயின்
ஆகிய நாடுகளைச் சேர்ந்த புரூதோன் (Proudhon)[12] ஆதரவாளர்களும், ஜெர்மன் நாட்டு லஸ்ஸாலியர்களும் (Lassalleans)[ஏ2] ஏற்றுக் கொள்ளும் அளவுக்குப் பரந்த
வேலைத்திட்டம் ஒன்றையே அகிலமானது கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
”ஆனாலும் அறிக்கை ஒரு வரலாற்று ஆவணமாக ஆகிவிட்டது, இதைத்
திருத்துவதற்கான எந்த உரிமையும் இனி எங்களுக்கு இல்லை”. மார்க்ஸின் “மூலதனம்”
நூலின் பெரும்பகுதியை மொழிபெயர்த்தவரான திரு.சாமுவேல் மூர் தற்போதைய இந்த
மொழிபெயர்ப்பினை உருவாக்கியுள்ளார். நாங்கள் இருவரும் சேர்ந்து இதனைத்
திருத்தியமைத்தோம். வரலாற்றுக் குறிப்புகளை விளக்குகின்ற சில குறிப்புரைகளை நான்
சேர்த்துள்ளேன்.
ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்
லண்டன், ஜனவரி 30,
1888.
********************************
ஒரு பூதம் ஐரோப்பாவைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது – அதுதான் கம்யூனிசம்
என்னும் பூதம். போப்பாண்டவரும்[27] ஜார் அரசனும்[28] ,
மெட்டர்னிக்கும்[29] கிஸோவும்[30] ,
பிரெஞ்சுத் தீவிரக் கொள்கையினரும் (radicals) ஜெர்மன்
போலீஸ் ஒற்றர்களும் எனப் பழைய ஐரோப்பாவின் அதிகார சக்திகள் அனைத்தும் இந்தப்
பூதத்தை விரட்டுவதற்காக ஒரு புனிதக் கூட்டணியை அமைத்துள்ளன.
ஆட்சியிலுள்ள எதிராளிகளால் கம்யூனிஸ்டு என்று பழி தூற்றப்படாத எதிர்க்கட்சி
எங்கேனும் உண்டா? தன்னிலும்
முற்போக்கான எதிர்க் கட்சிகள் மீதும், தனது பிற்போக்கான
எதிராளிகள் மீதும் கம்யூனிஸ்டு எனப் பட்டம் சூட்டி, அவதூறுச்
சேற்றை அள்ளி வீசாத எதிர்க்கட்சிதான் எங்கேனும் இருக்கிறதா?
இந்த உண்மையிலிருந்து இரண்டு முடிவுகள் பெறப்படுகின்றன:
1. கம்யூனிசம் அதனளவில் ஒரு தனிப்பெரும் சக்தி என்பதை ஐரோப்பிய சக்திகள்
அனைத்தும் ஏற்கெனவே ஏற்றுக் கொண்டுவிட்டன.
2. கம்யூனிஸ்டுகள் தம் கருத்துக்களையும், தம்
இலட்சியங்களையும், தம் போக்குகளையும் அனைத்துலகும் அறியும்
வண்ணம் பகிரங்கமாக வெளியிடவும், [கம்யூனிஸ்டுக்] கட்சிக்கே
உரிய ஓர் அறிக்கை மூலம், கம்யூனிசப் பூதமென்னும் இந்தக்
குழந்தைக் கதையை எதிர்கொள்ளவும் வேண்டிய தருணம் வந்துவிட்டது.
இந்த நோக்கத்துடன், பல்வேறு
தேசிய இனங்களைச் சேர்ந்த கம்யூனிஸ்டுகள் லண்டனில் கூடி, ஆங்கிலம்,
ஃபிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி,
ஃபிளெமிஷ், டேனிஷ் ஆகிய மொழிகளில்
வெளியிடுவதற்கென பின்வரும் அறிக்கையை வரைந்தனர்.
அத்தியாயம்-1
முதலாளிகளும் பாட்டாளிகளும்[ஏ4]
இதுநாள் வரையில் நிலவி வந்துள்ள சமுதாயத்தின் வரலாறு அனைத்தும்[ஏ5] வர்க்கப்
போராட்டங்களின் வரலாறே ஆகும்.
சுதந்திரமானவனும் அடிமையும், உயர்குலச்
சீமானும் (patrician) பாமரக் குடிமகனும் (plebeian), நிலப்பிரபுவும் பண்ணையடிமையும், கைவினைக் குழும
எஜமானும் (guild-master)[ஏ6] கைவினைப்
பணியாளனும் (journeyman), சுருங்கக் கூறின், ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும் ஒருவருக்கொருவர் தீராப் பகைமை
கொண்டிருந்தனர். சில நேரம் மறைவாகவும், சில நேரம்
வெளிப்படையாகவும், இடையறாத போராட்டத்தை நடத்தி வந்தனர்.
ஒவ்வொரு முறையும் இந்தப் போராட்டம் சமுதாயம் முழுவதையும் புரட்சிகரமாக
மாற்றியமைப்பதிலோ அல்லது போராடும் வர்க்கங்களின் பொதுவான அழிவிலோதான்
முடிந்திருக்கிறது.
உற்பத்திக் கருவிகளையும், அதன்மூலம்
உற்பத்தி உறவுகளையும், அவற்றோடு கூடவே ஒட்டுமொத்த சமுதாய
உறவுகளையும் இடையறாது புரட்சிகரமாக மாற்றி அமைத்திடாமல் முதலாளித்துவ வர்க்கம்
உயிர்வாழ முடியாது. இதற்கு மாறாக, பழைய உற்பத்தி முறைகளை
மாற்றமில்லா வடிவில் அப்படியே பாதுகாத்துக் கொள்வதுதான் முந்தைய தொழில்துறை
வர்க்கங்கள் அனைத்துக்கும் வாழ்வுக்குரிய முதல் நிபந்தனையாக இருந்தது. உற்பத்தியை
இடையறாது புரட்சிகரமாக மாற்றியமைத்தலும், சமூக நிலைமைகள்
அனைத்திலும் இடையறாத குழப்பமும், முடிவே இல்லாத நிச்சயமற்ற
நிலைமையும், கொந்தளிப்புமே முதலாளித்துவ சகாப்தத்தை அதற்கு
முந்தைய சகாப்தங்கள் அனைத்திலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. நிலைத்த,
இறுகிப்போன எல்லா உறவுகளும், அவற்றுடன்
இணைந்துள்ள பயபக்தி மிக்க பண்டைய தப்பெண்ணங்களும் கருத்துகளும்
துடைத்தெறியப்படுகின்றன. புதிதாக உருவானவை அனைத்தும் நிலைத்துக் கெட்டியாகும்
முன்பே காலாவதி ஆகிவிடுகின்றன. கட்டியானவை அனைத்தும் கரைந்து காற்றிலே கலக்கின்றன,
புனிதமானவை யாவும் புனிதம் கெடுக்கப்படுகின்றன. இறுதியாக, மனிதன் தனது வாழ்க்கையின் எதார்த்த நிலைமைகளையும், சக
மனிதர்களுடன் தனக்குள்ள உறவுகளையும் தெளிந்த அறிவுடன் எதிர்கொள்ள வேண்டிய
கட்டாயத்துக்கு உள்ளாகிறான்.
முதலாளித்துவத்தின் உற்பத்திப் பொருள்களுக்குத் தொடர்ந்து விரிவடைந்து
செல்லும் சந்தை தேவைப்படுகிறது. இத்தேவை முதலாளித்துவ வர்க்கத்தைப் புவியின்
பரப்பு முழுவதும் விரட்டியடிக்கிறது. அது எல்லா இடங்களுக்கும் சென்று கூடு
கட்டிக்கொள்ள வேண்டும்; எல்லா
இடங்களிலும் குடியேற வேண்டும்; எல்லா இடங்களிலும் தொடர்புகளை
ஏற்படுத்திக்கொண்டே ஆக வேண்டும்.
உலகச் சந்தையை நன்கு பயன்படுத்திக் கொள்வதன்மூலம் முதலாளித்துவ வர்க்கம்
ஒவ்வொரு நாட்டிலும் பொருள் உற்பத்திக்கும் நுகர்வுக்கும் ஓர் உலகத் தன்மையை (cosmopolitan character) அளித்துள்ளது.
பிற்போக்காளர்கள் கடுங்கோபம் கொள்ளும் வகையில், [ஒவ்வொரு
நாட்டிலும்] தொழில்துறை எழும்பி நின்றுள்ள அதன் தேசிய அடித்தளத்தை அகற்றிவிட்டது.
நெடுங்காலமாக நிலைபெற்றிருந்த தேசியத் தொழில்கள் யாவும் அழிக்கப்பட்டுவிட்டன
அல்லது நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகின்றன. புதிய தொழில்களால் அவை
ஒழித்துக்கட்டப்படுகின்றன. இந்தப் புதிய தொழில்களை நிறுவுவது, நாகரிகமடைந்த நாடுகள் அனைத்துக்கும் வாழ்வா சாவா என்னும் பிரச்சினையாகி
விடுகிறது. இந்தப் புதிய தொழில்கள் முந்தைய தொழில்களைப்போல் உள்நாட்டு மூலப்
பொருள்களைப் பயன்படுத்துவதில்லை. இவற்றுக்கான மூலப் பொருள்கள் தொலைதூரப்
பிரதேசங்களிலிருந்து தருவிக்கப்படுகின்றன. இவற்றின் உற்பத்திப் பொருள்கள்
உள்நாட்டில் மட்டுமன்றி, உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும்
நுகரப்படுகின்றன. உள்நாட்டு உற்பத்திப் பொருள்களால் நிறைவு செய்யப்பட்ட பழைய
தேவைகளின் இடத்தில் புதிய தேவைகள் எழுந்துள்ளதைக் காண்கிறோம். அவற்றை நிறைவு
செய்யத் தொலைதூர நாடுகளிலும் பிரதேசங்களிலும் உற்பத்தியாகும் பொருள்கள் தேவைப்படுகின்றன.
தேசங்களும் வட்டாரங்களும் தனித்தொதுங்கி நின்றும், தன்னிறைவு
கண்டும் இருந்த நிலை மாறி, ஒவ்வொரு திசையிலும் பரஸ்பரப்
பிணைப்பும், தேசங்களுக்கிடையே ஒன்றையொன்று சார்ந்து நிற்கும்
உலகளாவிய சார்புத் தன்மையும் நிலவக் காண்கிறோம். நுகர்பொருள் உற்பத்தியில்
எப்படியோ அறிவுத்துறை உற்பத்தியிலும் அதே நிலைதான். தனித்தனி நாடுகளின் அறிவுசார்
படைப்பாக்கங்கள் அனைத்து நாடுகளின் பொதுச் சொத்தாகின்றன. தேசிய ஒருதலைப்பட்சப்
பார்வையும் குறுகிய மனப்பான்மையும் மேலும் மேலும் சாத்தியமின்றிப் போகின்றன.
எண்ணற்ற தேசிய, வட்டார இலக்கியங்களிலிருந்து ஓர் உலக
இலக்கியம் உதயமாகிறது.
அனைத்து உற்பத்திக் கருவிகளின் அதிவேக மேம்பாட்டின் மூலமும், தகவல் தொடர்பு சாதனங்களின் பிரம்மாண்ட
முன்னேற்றத்தின் மூலமும் முதலாளித்துவ வர்க்கம் அனைத்துத் தேசங்களையும், மிகவும் அநாகரிகக் கட்டத்தில் இருக்கும் தேசங்களையும்கூட, நாகரிக வட்டத்துக்குள் இழுக்கிறது. முதலாளித்துவ வர்க்கம் தன்னுடைய
பண்டங்களின் மலிவான விலைகள் என்னும் வலிமை மிக்க பீரங்கிகளைக் கொண்டு, சீன மதிலையொத்த தடைச்சுவர்களை எல்லாம் தகர்த்தெறிகின்றது; அதன்மூலம், அநாகரிக மக்களுக்கு அந்நியர்பால் உள்ள
முரட்டுப் பிடிவாதமான வெறுப்பைக் கைவிட்டுப் பணிந்துபோகக் கட்டாயப்படுத்துகிறது.
முதலாளித்துவ உற்பத்தி முறையை ஏற்காவிடில் அழிய நேருமென்ற அச்சத்தின் காரணமாக
அனைத்துத் தேசங்களும் அம்முறையைத் தழுவிட நிர்ப்பந்திக்கிறது. அனைத்து
தேசங்களையும் நாகரிகம் என்று தான் கருதுவதை ஏற்கும்படி, அதாவது,
அவை தாமாகவே முதலாளித்துவமாக மாறக் கட்டாயப்படுத்துகிறது. சுருங்கக்
கூறின், தன்னுடைய பிரதிபிம்பமான ஓர் உலகைப் படைக்கிறது.
இதுநாள்வரையில் ஒவ்வொரு சமூக அமைப்புமுறையும், நாம் ஏற்கெனவே பார்த்தவாறு, ஒடுக்கும்
வர்க்கத்துக்கும் ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும் இடையிலான பகைமையையே அடித்தளமாகக்
கொண்டிருந்தது. ஆனால் ஒரு வர்க்கத்தை ஒடுக்க வேண்டுமானால், அந்த
வர்க்கம் குறைந்தபட்சம் அதன் அடிமை நிலையிலாவது தொடர்ந்து நீடித்திருப்பதற்குரிய
சில நிபந்தனைகளை அதற்கு உத்தரவாதம் செய்திட வேண்டும். நிலப்பிரபுத்துவ
எதேச்சாதிகார ஒடுக்குமுறையின்கீழ், குட்டி முதலாளித்துவப்
பிரிவினர் ஒருவாறு முதலாளியாக வளர முடிந்தது. அதுபோலவே, பண்ணையடிமை
முறை நிலவிய காலத்தில் பண்ணையடிமை, நகரத்தார் சமூக
உறுப்பினனாகத் தன்னை உயர்த்திக் கொண்டான். இதற்கு மாறாக, [இன்றைய]
நவீன காலத்துத் தொழிலாளி, தொழில்துறையின் முன்னேற்றத்தோடு
கூடவே தானும் முன்னேறுவதற்குப் பதிலாக, தன் சொந்த வர்க்கம்
நிலவுதற்குரிய [வாழ்வாதார] நிலைமைகளுக்கும் கீழே மேலும் மேலும் தாழ்ந்து போகிறான்.
அவன் பரம ஏழை ஆகிறான். பரம ஏழ்மை மக்கள் தொகையையும் செல்வத்தையும்விட அதிவேகமாக
வளர்கிறது. இங்குதான் ஒன்று தெளிவாகிறது – முதலாளித்துவ வர்க்கம் இனிமேலும் சமுதாயத்தில்
ஆளும் வர்க்கமாக நீடிக்கவும், தான் நிலவுதற்குரிய நிலைமைகளை
அனைத்துக்கும் மேலான சட்டவிதியாகச் சமுதாயத்தின் மீது திணிக்கவும் தகுதியற்றது.
முதலாளித்துவ வர்க்கம் ஆட்சியதிகாரம் செலுத்தவும் தகுதியற்றது. ஏனெனில், அதன் அடிமை, அவனுடைய அடிமை நிலையிலேயே தொடர்ந்து
வாழ்வதற்குக்கூட வகைசெய்ய அதற்கு வக்கில்லை. மேலும், அதன்
அடிமையிடமிருந்து தான் வாழ்வாதாரங்களைப் பெறுவதற்குப் பதிலாக, அந்த அடிமைக்கு வாழ்வாதாரங்களை வழங்கியாக வேண்டிய நிலைக்கு, அவன் தாழ்ந்து போவதை அதனால் தடுக்க முடியவில்லை என்பதும் காரணமாகும்.
சமுதாயம் இனிமேலும் இந்த முதலாளித்துவ வர்க்கத்தின்கீழ் வாழ முடியாது. வேறு
சொற்களில் கூறுவதெனில், முதலாளித்துவ வர்க்கம் நிலவுவது
இனிமேலும் சமுதாயத்துக்கு ஒவ்வாததாகிவிட்டது.
*************************
அத்தியாயம்-2
பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும்
ஒட்டுமொத்தப் பாட்டாளிகளுடன் கம்யூனிஸ்டுகள் கொண்டுள்ள உறவு எத்தகையது?
கம்யூனிஸ்டுகள் ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளுக்கு எதிரான ஒரு தனிக்
கட்சியாக அமையவில்லை.
கம்யூனிஸ்டுகளுக்கு ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைத் தவிர வேறு
தனிப்பட்ட நலன்கள் கிடையாது.
பாட்டாளி வர்க்க இயக்கத்தை வடிவமைக்கவும் வார்த்தெடுக்கவும் அவர்கள் தமது
சொந்தக் குறுங்குழுவாதக் கோட்பாடுகள் எவற்றையும் வகுத்துக் கொள்ளவில்லை.
கம்யூனிஸ்டுகளை ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுபவை
பின்வருவன மட்டும்தாம்: (1) வெவ்வேறு
நாடுகளில் நடைபெறும் பாட்டாளிகளின் தேசியப் போராட்டங்களில், கம்யூனிஸ்டுகள்
எந்தவொரு தேசிய இனத்தையும் சாராமல், பாட்டாளி வர்க்கம்
முழுமைக்கும் உரிய பொதுவான நலன்களைச் சுட்டிக்காட்டி, முன்னணிக்குக்
கொண்டு வருகின்றனர். (2) முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான
தொழிலாளி வர்க்கப் போராட்டம் கடந்து செல்ல வேண்டிய பல்வேறு வளர்ச்சிக்
கட்டங்களிலும், எங்கும் எப்போதும் கம்யூனிஸ்டுகள் ஒட்டுமொத்த
இயக்கத்தின் நலன்களையே முன்வைக்கின்றனர்.
எனவே, கம்யூனிஸ்டுகள் ஒருபுறம் நடைமுறை ரீதியில்,
ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தொழிலாளி வர்க்கக் கட்சிகளில், மிகவும் முன்னேறிய, மிகவும் உறுதி வாய்ந்த பிரிவாக,
மற்றவர்கள் அனைவரையும் முன்னோக்கி உந்தித் தள்ளுகின்ற பிரிவாக
உள்ளனர். மறுபுறம் தத்துவ ரீதியில், கம்யூனிஸ்டுகள் பாட்டாளி
வர்க்கத்தின் பெருந்திரளினருக்கு இல்லாத ஓர் அனுகூலத்தை, அதாவது,
பாட்டாளி வர்க்க இயக்கத்தின் திசைவழியையும், நிலைமைகளையும்,
இறுதியில் ஏற்படும் பொதுவான விளைவுகளையும் தெளிவாகப் புரிந்து
கொள்ளும் அனுகூலத்தைப் பெற்றுள்ளனர்.
கம்யூனிஸ்டுகளுடைய உடனடி நோக்கம், மற்றெல்லாப் பாட்டாளி வர்க்கக் கட்சிகளின் உடனடி நோக்கம் எதுவோ அதுவேதான்.
பாட்டாளிகளை ஒரு வர்க்கமாகக் கட்டியமைத்தல், முதலாளித்துவ
மேலாதிக்கத்தை வீழ்த்துதல், பாட்டாளி வர்க்கம் அரசியல்
அதிகாரத்தை வென்றெடுத்தல் ஆகியவைதாம்.
கம்யூனிஸ்டுகளின் தத்துவ முடிவுகள், யாரோ ஒரு வருங்கால உலகளாவிய சீர்திருத்தவாதி தோற்றுவித்த அல்லது
கண்டுபிடித்த கருத்துகளையோ கோட்பாடுகளையோ எந்த வகையிலும் அடிப்படையாகக்
கொண்டிருக்கவில்லை.
நடந்துவரும் வர்க்கப் போராட்டத்திலிருந்தும், நம் கண்ணெதிரிலேயே நிகழ்ந்து கொண்டிருக்கும் வரலாற்று
இயக்கத்திலிருந்தும், கிளர்ந்தெழும் மெய்யான உறவுகளையே
இந்தத் தத்துவ முடிவுகள் பொதுப்படையான வாசகங்களில் எடுத்துரைக்கின்றன.
*****************
அத்தியாயம்-3
சோஷலிச இலக்கியமும் கம்யூனிச இலக்கியமும்
1. பிற்போக்கு சோஷலிசம்
(அ) நிலப்பிரபுத்துவ சோஷலிசம்
ஃபிரான்சையும் இங்கிலாந்தையும் சேர்ந்த பிரபுக் குலத்தோருக்கு, அவர்களின் வரலாற்று நிலை காரணமாக, நவீன முதலாளித்துவ சமுதாயத்தை எதிர்த்துப் பிரசுரங்கள் எழுதுவது
அவர்களுடைய வாழ்க்கைத் தொழில் ஆனது. 1830 ஜூலையில் நடைபெற்ற
ஃபிரெஞ்சுப் புரட்சியிலும், இங்கிலாந்து சீர்திருத்தக்
கிளர்ச்சியிலும்[37] இந்தப் பிரபுக் குலத்தோர், வெறுக்கத்தக்க திடீர்ப்
பணக்காரர்களிடம் மீண்டும் தோற்றுப் போயினர். அதன்பிறகு, தீவிர
அரசியல் போராட்டத்துக்குக் கொஞ்சமும் வழியில்லாமல் போய்விட்டது. இனி இலக்கியப்
போர் ஒன்றுதான் சாத்தியமானதாக இருந்தது. ஆனால், இலக்கியத்
துறையிலுங்கூட மீட்சிக் காலத்தின்[ஏ8] பழைய கூப்பாடுகள் சாத்தியமற்றுப் போயின.
(ஆ) குட்டி முதலாளித்துவ சோஷலிசம்
முதலாளித்துவ வர்க்கத்தால் நாசமடைந்தது நிலப்பிரபுத்துவச் சீமான்களின்
வர்க்கம் மட்டுமே அல்ல; நவீன
முதலாளித்துவ சமுதாயத்தின் சூழலில் வாழ்வாதார நிலைமைகள் வாடிச் சிதைந்தது இந்தவொரு
[நிலப்பிரபுத்துவ] வர்க்கத்துக்கு மட்டுமே அல்ல. மத்திய கால நகரத்தாரும் சிறு
விவசாய நிலவுடைமையாளர்களுமே நவீன முதலாளித்துவ வர்க்கத்தின் முன்னோடிகளாக
இருந்தனர். தொழில் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் சொற்ப வளர்ச்சியே பெற்றுள்ள
நாடுகளில் உதித்தெழுந்துவரும் முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கத்திலேயே, இவ்விரு வர்க்கங்களும் [மத்திய கால நகரத்தார் வர்க்கமும், சிறு விவசாய நிலவுடைமை வர்க்கமும்] செயலிழந்த நிலையில் இன்னமும் காலந்
தள்ளுகின்றன.
நவீன நாகரிகம் முழுமையாக வளர்ந்துநிற்கும் நாடுகளில் குட்டி முதலாளிகளின்
புதிய வர்க்கமொன்று உருப்பெற்றுள்ளது. அது பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ
வர்க்கத்துக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது; முதலாளித்துவ சமுதாயத்தின் வால்பகுதியாக எப்போதும் தன்னைப்
புதுப்பித்து வருகிறது. என்ற போதிலும், இந்த வர்க்கத்தின்
தனிப்பட்ட உறுப்பினர்கள், வணிகப் போட்டியின் செயல்பாட்டால்,
பாட்டாளி வர்க்கத்தினுள் தொடர்ந்து தூக்கி எறியப்பட்டு வருகின்றனர்.
நவீனத் தொழில்துறை வளர்வதைத் தொடர்ந்து, நவீன சமுதாயத்தின்
ஒரு சுயேச்சையான பிரிவாக நீடிக்க முடியாமல் முற்றிலும் மறைந்துபோகும் காலம்
நெருங்கி வருவதையும், பட்டறைத் தொழிலிலும், விவசாயத்திலும், வணிகத்திலும் அவர்களுக்குப் பதிலாக
மேற்பார்வையாளர்களும், சம்பள அலுவலர்களும், கடை ஊழியர்களும் நியமிக்கப்படப் போவதையும் அவர்கள் [குட்டி முதலாளித்துவ
வர்க்கத்தினர்] கண்கூடாகக் காண்கின்றனர்.
மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் விவசாயிகளாக இருக்கும் ஃபிரான்சு
போன்ற நாடுகளில், முதலாளித்துவ
வர்க்கத்தை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் நின்ற எழுத்தாளர்கள்,
முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான அவர்களின் விமர்சனத்தை விவசாயிகள், குட்டிமுதலாளித்துவ
வர்க்கத்தினர் ஆகியோரின் தரத்தில் முன்வைப்பதும், இந்த
இடைத்தட்டு வர்க்கங்களின் நோக்கு நிலையிலிருந்து தொழிலாளி வர்க்கத்துக்காகப்
பரிந்து பேசுவதும் இயல்பே ஆகும். இவ்வாறுதான் குட்டி முதலாளித்துவ சோஷலிசம்
உதயமானது. ஃபிரான்சில் மட்டுமன்றி இங்கிலாந்திலும் இத்தகைய கருத்தோட்டத்துக்கு
சிஸ்மோண்டி (Sismondi)[40] தலைமை தாங்கினார்.
இந்த வகைப்பட்ட சோஷலிசம் நவீன உற்பத்தி உறவுகளிலுள்ள முரண்பாடுகளை மிகத்
துல்லியமாகப் பாகுபடுத்திக் காட்டியது. குட்டி முதலாளித்துவ சோஷலிசம், பொருளாதார வல்லுனர்களின் கபடமான
நியாயவாதங்களைத் தோலுரித்துக் காட்டியது. எந்திர சாதனங்கள், உழைப்புப்
பிரிவினை ஆகியவற்றின் நாசகர விளைவுகளையும், மூலதனமும்
நிலமும் ஒருசிலரின் கைகளில் குவிவதையும், தேவைக்கு அதிகமான
உற்பத்தியையும், [வணிக] நெருக்கடிகளையும் அது மறுக்க முடியாத
வகையில் மெய்ப்பித்துக் காட்டியது. குட்டி முதலாளித்துவப் பிரிவினர், விவசாயிகள் ஆகியோரின் தவிர்க்க முடியாத அழிவையும், பாட்டாளி
வர்க்கத்தின் கடுந்துயரையும், உற்பத்தியில் நிலவும்
அராஜகத்தையும், செல்வ வளத்தின் வினியோகத்தில் காணப்படும்
படுமோசமான ஏற்றத் தாழ்வுகளையும், தேசங்களுக்கு இடையிலான
சர்வநாசத் தொழில்துறைப் போரையும் குட்டி முதலாளித்துவ சோஷலிசம் சுட்டிக்
காட்டியது. பழைய ஒழுக்கநெறிப் பிணைப்புகளும், பழைய குடும்ப
உறவுகளும், பழைய தேசிய இனங்களும் குலைந்து போவதையும் அது
சுட்டிக் காட்டியது.
(இ) ஜெர்மானிய சோஷலிசம் அல்லது “மெய்யான'” சோஷலிசம்
ஃபிரான்சு நாட்டு சோஷலிச, கம்யூனிச
இலக்கியம் என்பது ஆட்சியதிகாரத்திலிருந்த முதலாளித்துவ வர்க்கத்தின்
ஒடுக்குமுறையில் தோன்றியதோர் இலக்கியமாகும். இந்த ஆட்சியதிகாரத்துக்கு எதிரான
போராட்டத்தின் வெளிப்பாடாக அது விளங்கியது. ஜெர்மனியில் முதலாளித்துவ வர்க்கம்
நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தோடு தன் போராட்டத்தை அப்போதுதான் தொடங்கியிருந்த
நேரத்தில் அந்த நாட்டில் இந்த இலக்கியம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜெர்மானியத் தத்துவவாதிகளும், கற்றுக்குட்டித்
தத்துவவாதிகளும், வாய்ச்சவடால் பேச்சாளர்களும் (beaux
esprits) இந்த இலக்கியத்தை ஆவலுடன் தம் வசப்படுத்திக்
கொண்டனர். ஆனால் இந்த எழுத்துகள் ஃபிரான்சிலிருந்து ஜெர்மனிக்குள் குடியேறியபோது,
அவற்றோடு கூடவே ஃபிரெஞ்சு சமூக நிலைமைகளும் ஜெர்மனிக்குள்
குடியேறவில்லை என்பதை மட்டும் அவர்கள் மறந்துவிட்டனர். ஜெர்மன் சமூக நிலைமைகளில்
வைத்துப் பார்க்கையில் இந்த ஃபிரெஞ்சு இலக்கியம் அதன் உடனடி நடைமுறை
முக்கியத்துவம் அனைத்தையும் இழந்துவிட்டது; முழுக்கவும்
இலக்கியத் தன்மை கொண்ட ஒரு போக்காகவே நிலைபெற்றது. இவ்வாறாக, பதினெட்டாம் நூற்றாண்டின் ஜெர்மானியத் தத்துவவாதிகளுக்கு, முதலாவது ஃபிரெஞ்சுப் புரட்சியின் கோரிக்கைகள், பொதுநோக்கில்
வெறும் ”நடைமுறைப் பகுத்தறிவின்” கோரிக்கைகளே; அதற்கு மேலான
முக்கியத்துவம் எதுவுமில்லை. புரட்சிகர ஃபிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தினுடைய
எண்ணத்தின் வெளிப்பாடு, தூய எண்ணத்தின் விதிகளாக, இயல்பாக இருக்க வேண்டிய எண்ணத்தின் விதிகளாக, பொதுவாக
உண்மையான மனித எண்ணத்தின் விதிகளாக அவர்களின் கண்களுக்குப் பட்டது.
ஃபிரெஞ்சின் வரலாற்று ரீதியான விமர்சனங்களுக்குப் பின்னால் இத்தகைய
தத்துவவியல் சொல்தொடர்களைப் புகுத்தும் பணிக்கு அவர்கள், ”செயல்பாடு பற்றிய தத்துவம்” (Philosophy
of Action), ”மெய்யான சோஷலிசம்” (True Socialism), ”ஜெர்மானிய சோஷலிச விஞ்ஞானம்” (German Science of Socialism), ”சோஷலிசத்தின் தத்துவ அடிப்படை” (Philosophical Fountation of
Socialism), இன்னும் இதுபோலப் பலவாறாகப் பெயர்சூட்டிக் கொண்டனர்.
இவ்வாறாக, ஃபிரெஞ்சு சோஷலிச,
கம்யூனிச இலக்கியத்தை முழுமையாக ஆண்மையிழக்கச் செய்தனர். அந்த
இலக்கியம் ஜெர்மானியன் கைக்கு வந்தபின், ஒரு வர்க்கத்துக்கு
எதிராக இன்னொரு வர்க்கம் நடத்தும் போராட்டத்தை வெளிப்படுத்தும் தன்மையை
இழந்துவிட்டது. அதனாலேயே அவன் [ஜெர்மானியன்] ”ஃபிரெஞ்சுக்காரரின் ஒருதலைப்பட்சப்
பார்வையிலிருந்து” தான் மீண்டுவிட்டதாகக் கருதிக் கொண்டான். உண்மையான தேவைகளை அல்ல,
உண்மையின் தேவைகளை எடுத்துரைப்பதாகவும், பாட்டாளி
வர்க்கத்தின் நலன்களை அல்ல, மனித இயல்பின் நலன்களை, பொதுவாக மனிதனின் நலன்களை எடுத்துரைப்பதாகவும் கருதிக் கொண்டான். அவன்
கருதும் மனிதனோ எந்த வர்க்கத்தையும் சேராதவன், எதார்த்த
இயல்பு இல்லாதவன், தத்துவார்த்தக் கற்பனையின் பனிமூடிய
சாம்ராஜ்யத்தில் மட்டுமே நிலவக் கூடியவன்.
இந்த ஜெர்மானிய சோஷலிசம், ஒரு
பள்ளிக்கூட மாணவன் செய்யக்கூடிய வேலையை அவ்வளவு தீவிரத்துடனும் பயபக்தியுடனும்
எடுத்துக்கொண்டது. பிறரை நம்பவைத்து ஏமாற்றும் பாணியில், தன்னுடைய
அற்பமான கருத்துகளை வானளாவப் புகழ்ந்துகொண்டது. இதற்கிடையே அதன் பகட்டுப் புலமை
வாய்ந்த அப்பாவித்தனத்தைப் படிப்படியாக இழந்துவிட்டது.
ஜெர்மானிய முதலாளித்துவ வர்க்கம், குறிப்பாகப் பிரஷ்ய முதலாளித்துவ வர்க்கம், நிலப்பிரபுத்துவச்
சீமான்களையும் எதேச்சதிகார முடியாட்சியையும் எதிர்த்து நடத்திய போராட்டம், அதாவது மிதவாத இயக்கம், மேலும் ஊக்கம் பெற்றது.
பாதிரியார்கள், பேராசிரியர்கள்,
நாட்டுப்புறக் கனவான்கள் [நிலப்பிரபுக்கள்], அதிகாரிகள்
ஆகியோர் புடைசூழும் ஏதேச்சாதிகார அரசாங்கங்கள் தம்மை அச்சுறுத்தும் முதலாளித்துவ
வர்க்கத்துக்கு எதிராகக் காட்டி மிரட்டுவதற்கான ஒரு பயனுள்ள பூச்சாண்டியாக இந்த
ஜெர்மானிய சோஷலிசம் பயன்பட்டது.
இதே அரசாங்கங்கள் அதே காலகட்டத்தில் ஜெர்மன் தொழிலாளி வர்க்க எழுச்சிகளை
அடக்குவதற்கு வழங்கிய கசையடிகள், துப்பாக்கிக்
குண்டுகள் ஆகியவற்றின் வடிவிலான கசப்பு மாத்திரைகளுக்குப் பிறகு, கசப்பு நீக்கும் கடைசி இனிப்பாக இந்த ஜெர்மானிய சோஷலிசம் பயன்பட்டது.
2. பழமைவாத சோஷலிசம் அல்லது முதலாளித்துவ சோஷலிசம்
முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பகுதி, முதலாளித்துவ சமுதாயம் தொடர்ந்து நிலவுவதை உறுதிப்படுத்திக்கொள்ளும்
பொருட்டு, சமூகக் குறைபாடுகளை அகற்ற விழைகிறது.
[முதலாளித்துவ வர்க்கத்தின்] இந்தப் பிரிவில், பொருளாதார
வல்லுனர்கள், கொடை வள்ளல்கள், மனிதாபிமானிகள்,
தொழிலாளி வர்க்கத்தின் நிலையை மேம்படுத்துவோர், கருணை இல்லம் நடத்துவோர், விலங்குகளுக்குக் கொடுமை
விளைவிப்பதைத் தடுக்க விழையும் சங்கங்களின் உறுப்பினர்கள், குடிவெறிக்கு
எதிரான கொள்கை வீரர்கள், கற்பனைக்கு எட்டும் அனைத்து வகையான
மூலை முடுக்கச் சீர்திருத்தப் பேர்வழிகள் ஆகியோர் அனைவரும் அடங்குவர். மேலும்,
இந்த வகைப்பட்ட சோஷலிசம் முழுமையான [தத்துவ] அமைப்புகளாக
முறைப்படுத்தப்பட்டுள்ளது.
புரூதோன் எழுதிய வறுமையின் தத்துவம் (Philosophie de la Misere) என்னும் நூலை இந்த வகைப்பட்ட சோஷலிசத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாகக்
குறிப்பிடலாம்.
சோஷலிசவாத முதலாளித்துவப் பிரிவினர், நவீன சமூக நிலைமைகளின் அனுகூலங்கள் அனைத்தும் வேண்டும், ஆனால் அந்த நிலைமைகளின் தவிர்க்கவியலா விளைவுகளாகிய போராட்டங்களும்
அபாயங்களும் இருக்கக் கூடாது என விரும்புகின்றனர். தற்போது நிலவும் சமூக அமைப்பு,
அதன் புரட்சிகரக் கூறுகளும் சிதைவுபடுத்தும் கூறுகளும் இன்றி,
அப்படியே நீடிப்பதையே இவர்கள் விரும்புகின்றனர். பாட்டாளி வர்க்கம்
இல்லாமல் முதலாளித்துவ வர்க்கம் மட்டும் இருக்க ஆசைப்படுகின்றனர். முதலாளித்துவ
வர்க்கம், தான் மேலாதிக்கம் வகிக்கும் உலகே தலைசிறந்ததென
இயல்பாகவே கருதுகின்றது. இந்த வசதியான கருத்தோட்டத்தை முதலாளித்துவ சோஷலிசம்,
ஏறக்குறைய முழுமைபெற்ற பல்வேறு [தத்துவ] அமைப்புகளாக
வளர்த்தெடுக்கிறது. பாட்டாளி வர்க்கம் இத்தகையதோர் அமைப்பைச் செயல்படுத்த வேண்டும்,
அதன்வழியே நேரே ஒரு புதிய சமூக ஜெரூசலத்தை நோக்கி நடைபோட
வேண்டுமெனக் கோருகிறது. அவ்வாறு கோருவதன்மூலம் நடைமுறையில் அது கேட்பது என்னவெனில்,
பாட்டாளி வர்க்கம், தற்போது நிலவும்
சமுதாயத்தின் வரம்புகளுக்கு உட்பட்டதாக நீடிக்க வேண்டும்; அதே
வேளையில், முதலாளித்துவ வர்க்கம் பற்றி அதற்குள்ள
வெறுக்கத்தக்க கருத்துகள் அனைத்தையும் விட்டொழிக்க வேண்டும் என்பதுதான்.
3. விமர்சன-கற்பனாவாத சோஷலிசமும், விமர்சன-கற்பனாவாத
கம்யூனிசமும்
பாபியோவும்[42] [அவரையொத்த] பிறரும் எழுதிய எழுத்துகளைப் போன்று, மகத்தான
நவீனப் புரட்சி ஒவ்வொன்றிலும் பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கைகளுக்குக்
குரல்கொடுத்திருக்கும் இலக்கியத்தை இங்கு நாம் குறிப்பிடவில்லை.
நிலப்பிரபுத்துவ சமுதாயம் வீழ்த்தப்படுகையில் உலகெங்கும் பரபரப்பு நிலவிய
அந்தக் காலங்களில் பாட்டாளி வர்க்கம் தன் சொந்த லட்சியங்களை எட்டுவதற்காக
மேற்கொண்ட முதல் நேரடி முயற்சிகள் தவிர்க்க முடியாதவாறு தோல்வியடைந்தன. காரணம், பாட்டாளி வர்க்கத்தின் அப்போதைய
வளர்ச்சியுறாத நிலை. அத்துடன், அது விடுதலை பெறுவதற்கான
பொருளாதார நிலைமைகள் அப்போது நிலவவில்லை. அத்தகைய நிலைமைகள் இனிமேல்தான்
தோற்றுவிக்கப்படவிருந்தன. வரவிருந்த முதலாளித்துவ சகாப்தம் மட்டுமே அந்த
நிலைமைகளைத் தோற்றுவிக்க முடியும். பாட்டாளி வர்க்கத்தின் இந்தத் தொடக்க கால
இயக்கங்களுடன் கூடவே தோன்றிய புரட்சிகர இலக்கியம், தவிர்க்க
முடியாதவாறு ஒருவித பிற்போக்குத் தன்மையைக் கொண்டிருந்தது. உலகளாவிய
துறவுவாதத்தையும், மிகவும் முரட்டு வடிவிலான சமூகச்
சமமாக்கத்தையும் அது போதித்தது.
சரியான சோஷலிச, கம்யூனிசக்
கருத்தமைப்புகள் என்று சொல்லப்பட்ட, சான் சிமோன்[43],
ஃபூரியே[44],
ஓவன்[45] மற்றும் பிறரின் கருத்துகள், மேலே விவரிக்கப்பட்ட,
பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான
போராட்டத்தின் வளர்ச்சியுறாத தொடக்கக் காலகட்டத்தில் தோன்றி நிலவியவையே.
(அத்தியாயம்-1, 'முதலாளிகளும் பாட்டாளிகளும்' என்பதைப் பார்க்கவும்). இந்தக் கருத்தமைப்புகளைத் தோற்றுவித்தவர்கள்,
நடப்பிலிருந்த சமுதாய அமைப்புமுறையில் நிலவிய வர்க்கப் பகைமைகளையும்,
அதோடுகூட, சிதைந்து கொண்டிருந்த கூறுகளின்
செயல்பாட்டையும் கண்டனர் என்பது உண்மையே. ஆனால் இன்னமும் மழலைப் பருவத்தில் இருந்த
பாட்டாளி வர்க்கம், எந்தவொரு வரலாறு படைக்கும் முன்முயற்சியோ,
எந்தவொரு சுயேச்சையான அரசியல் இயக்கமோ இல்லாத ஒரு வர்க்கமாகவே
அவர்களுக்குக் காட்சி தந்தது.
வர்க்கப் பகைமையின் வளர்ச்சி, தொழில்துறை
வளர்ச்சியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து நடைபோடுவதால், அவர்கள்
[சான் சிமோன் முதலியோர்] காணும் பொருளாதாரச் சூழ்நிலை பாட்டாளி வர்க்கத்தின்
விடுதலைக்குகந்த பொருளாயத நிலைமைகளை இன்னும் அவர்களுக்குப் புலப்படுத்தவில்லை.
எனவே, அவர்கள் அத்தகைய நிலைமைகளைத் தோற்றுவிப்பதற்கான ஒரு
புதிய சமூக விஞ்ஞானத்தை, புதிய சமூக விதிகளைத் தேடிச்
செல்கின்றனர்.
எனவே, இவர்கள் தொழிலாளி வர்க்கம் சார்பிலான
அரசியல் நடவடிக்கைகள் அனைத்தையும் வன்மையாக எதிர்க்கின்றனர். இவர்களைப் பொறுத்தவரை,
புதிய வேதாகமத்தில் (New Gospel) கொண்டுள்ள
குருட்டுத்தனமான அவநம்பிக்கையின் விளைவாக மட்டுமே அத்தகைய நடவடிக்கை இருக்க
முடியும் எனக் கருதுகின்றனர்.
இங்கிலாந்தில் ஓவனியர்கள் (Owenites) சாசனவாதிகளையும் (Chartists)[46],
ஃபிரான்சில் ஃபூரியேயர்கள் (Fourierists) ’சீர்திருத்தம்’வாதிகளையும் (Reformistes)[47] எதிர்க்கின்றனர்.
அத்தியாயம்-4
தற்போதுள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் குறித்துக் கம்யூனிஸ்டுகளின்
நிலைபாடு
இங்கிலாந்திலுள்ள சாசனவாதிகள், அமெரிக்காவிலுள்ள விவசாயச் சீர்திருத்தவாதிகள் ஆகியோரின் இயக்கங்களையொத்த,
தற்போது நிலவும் தொழிலாளி வர்க்கக் கட்சிகளுடன் கம்யூனிஸ்டுகளின்
உறவுநிலை குறித்து [இந்நூலின்] இரண்டாவது பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது.
கம்யூனிஸ்டுகள், தொழிலாளி
வர்க்கத்தின் உடனடி லட்சியங்களை எய்திடவும், அவ்வப்போதைய
நலன்களை நிறைவேற்றிக் கொள்ளவும் போராடுகிறார்கள். ஆனாலும், நிகழ்கால
இயக்கத்திலேயே அந்த இயக்கத்தின் எதிர்காலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்;
இயக்கத்தின் எதிர்காலம் குறித்து அக்கறை எடுத்துக் கொள்கின்றனர்.
ஃபிரான்சில் கம்யூனிஸ்டுகள் பழமைவாத, தீவிரவாத முதலாளித்துவ
வர்க்கத்தினருக்கு எதிராகச் சமூக-ஜனநாயகவாதிகளுடன்[ஏ12] கூட்டுச் சேர்ந்துகொள்கின்றனர். என்றாலும், மாபெரும்
புரட்சியிலிருந்து பாரம்பரியமாகப் பெறப்பட்டு வந்துள்ள சொற்கோவைகள், பிரமைகள் குறித்து ஒரு விமர்சன நிலைபாட்டை மேற்கொள்ளும் உரிமையை
விட்டுவிடாமல் தம் கையில் வைத்துள்ளனர்.
சுருங்கக் கூறின், கம்யூனிஸ்டுகள்
எங்கும் தற்போதுள்ள சமூக, அரசியல் அமைப்பு முறைகளுக்கு
எதிரான புரட்சிகர இயக்கம் ஒவ்வொன்றையும் ஆதரிக்கின்றனர். இந்த இயக்கங்கள்
அனைத்திலும், அவை ஒவ்வொன்றின் தலையாய பிரச்சினையாகச்
சொத்துடைமைப் பிரச்சினையை கம்யூனிஸ்டுகள் முன்னிலைக்குக் கொண்டு வருகின்றனர். அந்த
நேரத்தில் அது எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்பதைப் பொருட்படுத்துவதில்லை.
முடிவாக, அனைத்து நாடுகளின்
ஜனநாயகக் கட்சிகளுடைய ஐக்கியத்துக்காகவும், உடன்பாட்டுக்காகவும்
கம்யூனிஸ்டுகள் பாடுபடுகின்றனர்.
கம்யூனிஸ்டுகள் தங்கள் கருத்துக்களையும் நோக்கங்களையும் மூடிமறைப்பதை இழிவாகக்
கருதுகின்றனர். இன்றுள்ள சமூக நிலைமைகள் அனைத்தையும் பலவந்தமாக வீழ்த்தினால்
மட்டுமே தம் இலட்சியங்களை அடைய முடியும் என்பதைக் கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக
அறிவிக்கின்றனர். கம்யூனிசப் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி
நடுங்கட்டும். பாட்டாளிகளிடம் இழப்பதற்கு ஏதுமில்லை, அவர்தம் அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அவர்கள் வெல்வதற்கோ ஓர்
உலகம் இருக்கிறது.
உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!
.முற்றாக...
தொடர்புடைய கட்டுரைகள்:
முந்தையப்பகுதியை வாசிக்க கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே
***
எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.