“கடந்த காலத்தின் மீது அன்பு செலுத்துவதோ அல்லது கடந்த காலத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதோ ஒரு வரலாற்று ஆசிரியனின் பணி அல்ல. ஆனால் கடந்த காலத்தை நன்கு பயின்று தேர்ச்சிபெற்று அதை புரிந்து கொள்ளும் விதமே நிகழ்காலத்தை அறியவும் திறவுகோலாய் அமைய வேண்டும். ஒரு வரலாற்று ஆசிரியரின் கடந்த காலம் பற்றிய தீர்க்கமான பார்வை நிகழ்காலப் பிரச்சனைக்குள் ஊடுருவி நுண்ணறிவால் ஒளியூட்டப்படும் பொழுது அவை வரலாற்று நுட்பமாக எழுதப்படுகிறது. வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ளக் கூடியவை ஒருபோதும் ஒருவழிப் பாதையின் தயாரிப்பல்ல. நிகழ்காலத்தைப் பற்றி கடந்த கால தெளிவுடன் அறிவது. கடந்த காலத்தை நிகழ்காலத் தெளிவுடன் அறிந்து கொள்வதற்கும் சேர்ந்து ஒப்பாகும். நிகழ்காலம் கடந்தகாலம் ஆகிய இரண்டிற்கும் உள்ள உறவுகளின் வழியாக ஆழ்ந்த அனுபவபூர்வமான தெளிவுநிலையை விளக்குவதே வரலாற்றின் பக்கமாகும்” மார்க்சிய அறிஞர் டிடி கோசாம்பியின் இக்கூற்று சமூகத்தை நேசிக்கும் எழுதும் படைப்பாளிகளுக்கு பொருந்தும்.
சிலர் குறிபிடுவதுபோல் ஜாதியானது மனித சமூகம் தோன்றியபோதே தோன்றிய ஒன்றல்ல. அதேபோல் ஜாதியின் ஆதிக்கம் நிலவுடமை சமுகத்தில் கோலோச்சினாலும் அதன் தன்மைகள் இன்றும் அன்றுபோல் இல்லை. இன்று நாம் வாழும் சமூகத்தில் ஜாதி ஏன் உயிர் வாழ்கிறது என்பதனையும். அம்பேத்கார் பெரியார் ஜாதி ஒழிப்பிற்கு போராடினார்கள் என்பதோடு அவர்கள் எந்தளவிற்கு அதில் வெற்றிகண்டனர் என்பதனையும், உண்மையில் சமூகத்தில் இந்த ஏற்றதாழ்வான நிலைக்கு முடிவுகட்ட ஜாதியை கட்டிகாக்கும் அமைப்புமுறையை தகர்த்து ஒடுக்குமுறை அடக்குமுறை சுரண்டல்முறை அற்ற சமத்துவ சமூகத்தில் இந்த ஜாதிய தீண்டாமை கொடுமைக்கு தீர்வு காணப்படும் என்பதனையும் அதற்கான தீர்வு இந்த பிற்போக்கு அம்சங்களை தூக்கியெறிந்து சமத்துவ சமூகத்தில்தான் சாத்தியம் என்பதனையும் விளக்கியுள்ளேன்.
மனித சமூக ஆரம்பகாலம் முதல் நமது நாட்டில் இன்றைய மோதல்கள் வரை மார்க்சிய வரலாற்று பொருள்முதல்வாத பார்வையில் விளக்க முயற்சி செய்துள்ளேன்.
l வரலாறு என்பது மக்கட்சமுதாயத்தின் அல்லது அதன் கூறுகளின் காலப்பதிவாகும். அது வரலாற்று நிகழ்வுகளின் ஆவணத் தொகுதியாகவும் அமைகின்றது. அத்தோடு நாட்டையும் அம்மக்களையும் பற்றி நிற்பதோடு மானிடத்தையும் அதனோடு கூடியதான கால உறவினையும் தொடர்புபடுத்தும் பதிவேடாகவும் வரலாறு திகழவேண்டும். இதற்கான தேடல்கள் தவறான தரவுகளைக் கொண்டிருப்பின் அதுவே தவறான வழிகாட்டியாகவும் ஆகிவிடும். ஆகவேதான் அதற்கென குறிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளின் அடிப்படையில் வரலாறுகள் எழுதப்படவேண்டிய அவசியம் உணரப்படுகின்றது.
வரலாற்றை இரண்டாக பிரிப்பர் அவை வரலாறிற்கு முந்திய காலம் மற்றது வரலாற்றுக்குட்பட்டகாலம். கடந்த காலத்தில் நடந்தேறிய வற்றைப்பற்றி நம் முன்னோர் எழுதிவைத்துச் சென்றனவற்றிலிருந்து அறிகிறோம். ஆனால் எழுத அறியாதகாலம் ஒன்றிருந்தது அன்று எழுத்துச்சான்றுகளும் அக்காலத்தில் இல்லாததாயிருந்தது. ஆதிகாலத்து மனிதன் எழுதத் தெரியாதவனாயினும் அவன் உபயோகித்த கருவிகள், ஆயுதங்கள், சிதைவுற்ற கட்டடங்கள், குகைச்சித்திரங்கள், மட்கலங்கள் முதலியன உண்டு. இவைகளிலிருந்து ஆதிகாலமனிதர் எவ்வகையில் வாழ்ந்தனர் என்று ஒருவாறு யூகித்தறியலாம். எழுத்துச் சான்றுகள் இல்லாத காலத்தைச் வரலாற்று எல்லைக்கு முந்திய காலமென்கிறோம். எழுத்துச்சான்றுகள் உள்ள காலத்தைச் வரலாற்றுகாலம் என்று கூறுகிறோம்.
சுமார் 6,000 வருடங்களுக்கு முன்வசித்த ஆதி எகிப்தியர், பபிலோனியரது காலத்துக்கு முந்திய எழுத்துச் சான்றுகள் கிடைக்காததினால் அக்காலத்தில் உள்ள மனிதர் எவ்வாறு வாழ்ந்தனர் என்பதுபற்றிக் கூறுவது சுலபமல்ல. அதனாலேயே மனிதன் பூமியில்தோன்றிய காலந்தொட்டு இன்றைக்கு 6,000 வருடங்களுக்கு முன் உள்ள காலத்தைச் வரலாற்று எல்லைக்கு முந்திய காலமென்கிறோம். ஆதிகால எகிப்தியர், பபிலோனியருடனான எழுத்துச் சான்றுகளுள்ள வரலாற்றுகாலம் தொடங்குகின்றது. வரலாற்று எல்லைகுட்பட்டகாலமும் அதற்கு முந்தியகாலமும் நாட்டுக்கு நாடு (ஒவ்வொவொரு நாட்டிற்கும் வேறுவேறானகாலம்) வித்தியாசப் படுகின்றன. ஆதிகால மனிதருடைய வாழ்வியல் தன்மையைப் பற்றி நாம் ஒருவகையில் யூகித்து அறிந்துகொள்ள முடியும். இன்னும் சில புரிதலுக்கு கீழே.
‘ஒரு பகுதி வாழ் மக்கள் தம் தேவையையும் சூழ்நிலையும் பொறுத்து உற்பத்தி கருவிகளையும் சமூக அமைப்பையும் உருவாக்கிகொள்வதாக’ சட்டோபாத்தியாய கருதுகிறார்.
ஆக மனிதன் தோன்றியதிலிருந்து இன்றைய நிலை வரை அவனின் சமூக பொருளாதார வளர்ச்சி நிலைகளை அறிய முற்படுவதோடு பல்வேறு ஆய்வாளர்கள் எழுத்தாளார்களின் உதவியோடு நமது பணியினை முன்னெடுப்போம். ஜாதியின் தோற்றம் முதல் இன்று வரை அதன் பரிணாமத்தை அறியவும் அதனை வேரோடு சாய்க்க என்ன வழி என்பதனையும் தேடுவதே இன்நூலின் முயற்சி.
உலகின் தோற்றம் மனித சமூக வளர்ச்சி
மனிதனின் வரலாறு எங்கிருந்து தொடங்கியது எவ்வாறு தோற்றுவிக் கப்பட்டது. என்பதற்கு முன், இவ்வண்டங்களையும், அதில் அடங்கிய பால்வெளி மண்டலம், சூரியக் குடும்பங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், மலைமுகடுகள், மாகடல்கள், ஆறுகள், காடுகள், நில அமைப்புகள் பற்றி அறிவதென்பது மிக அவசியமானது. நமது சமூகத்தையும் மனித இனத்தின் தோற்றம் வளர்ச்சி இன்றைய நிலையை புரிந்துக் கொள்ள ஏதுவாக இருக்கும் என்பதனால்.
பூமியின் தோற்றம்:-உலகம் ஓர் எரியும் பந்தாக கோடிக்கணக்கான ஆண்டுகள் இருந்தது அக்காலத்தில் பூமி உள்ளிருந்து பல துண்டுகள் வெடித்து மேலே வந்து உலகத்தில் வெப்பத்தை மேலும் அதிகரிக்க செய்தது இவ்வாறு மேலே வரும் துண்டுகள் மலைகளாயின.இவ்வாறு பூமியின் வரலாறை தேடும் நாம் மனித குல வரலாறு என்பது மிக அருகாமையில் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சூரியமண்டலத்தில் பூமியானது 700 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவாகியதாக இருந்தாலும் பூமியின் உருவாக்கம் என்பது சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர்தான் தோன்றியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
தீகோளமான சூரிய மண்டலத்தில் பல்வேறு இயற்கை சூழல்கள் அதில் குறிப்பாக தொடர் மழை மீண்டும் நீர் ஆவியாக மாறி மேகக்கூட்டதிற்கு சென்று பெருமழை இடையராது பெய்த மழையால் பூமி குளிர்ந்தது, நீர்நிலைகள் பெருகின பின்னர் சூரியன், காற்று, நீர்நிலை போன்ற நிலநடுக்கம், எரிமலை, கண்டங்கள் பெயர்ச்சி மறுபடியும் மலைகள் உருவாதல். இவ்வாறாக பூமியின் மேற்பரப்பு மலைகள், மடுக்கள், குளங்கள், குட்டைகள், ஓடைகள், ஆறுகள், பரந்தகடல்கள், பனிபரப்புகள், பாலைவனங்கள் என உருமாறி சுருக்கமாக பூமி உருவானது.
450 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி தோன்றியிருந்தாலும் இதில் உயிரினங்களின் வளர்ச்சி என்பது சுமார் 250 கோடி ஆண்டுகளுக்கு முன் அஸோயிக் (Azoic) காலகட்டம். 150 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் கடற்பாசி புழு, நுங்கு மீன் போன்ற புரோட்டோரோசாசிக்(Proterozoic) காலகட்டம் ஆகும். ஊர்வன இன்னும் பல்வேறு வகையான அதன் மூதாதையர்கள் 60-27 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றின. மிஸோஸோயிக் (Mesozoic) என அழைக்கப்படும் ஜுராசிக் டைனோசர் காலகட்டமானது 22.5 லிருந்து 4 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.
மாடு, யானையின் முன்னோடி, குதிரைகளின் முன்னோடி, பன்றி, வாலற்ற குரங்குகளின் முன்னோடி, மலரும் தாவரங்கள், நாய், கரடி போன்ற விலங்குகளின் முன்னோடிகள் தோன்றி மறைந்த காலகட்டமானது 7 கோடி லிருந்து 2.5 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.
முதுகெலும்புள்ள பல விலங்குகள் இன்றில்லாத வாழ்ந்த காலம் 0.3 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமாகும். கற்ககால மனிதன் (Pleistocene) காலக்கட்டம் 0.2 லிருந்து 0.3 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவர்கள். 30 லிருந்து 20 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பணியுககாலம், பழைய கற்கால மனித வளர்ச்சி காலம் ஆகும்.
மனித குலத்தின் ஆரம்பகாலம்
மனிதனின் வளர்ச்சி போக்கை அறியும் நாம் மனிதன் மூலம் பற்றி பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் அவன் விலங்கினத்தை சேர்ந்தவன் என்பதில் ஐயமில்லை. அவன் ஹோமோசெபியன் (Homo sapiens) எனும் வகையினத்தை சார்ந்தவன். ஆதியில் ஒரே பூர்வமனித குலத்தின் வழிவந்த மனிதன் அதன் ஒவ்வொரு நிகழ்விலும் ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறியும் வளர்ந்தும் வந்துள்ளான். அவன் ஒன்று கலந்து வளர்ச்சியில் இன்று பல பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து இனம், மதம், மொழி, பிரதேசம், ஏன் ஜாதி என்று பிளவுண்டு கிடக்கிறோம். இயற்கையின் இந்த நியதிப்படி அனைத்து மனிதர்களும் ஒரேவகைபிரிவை(இனத்தை) சேர்ந்தவர்கள். விலங்கு இனங்களின் சில வகையினம் வேறு வகையினதுடன் சில வேளைகளில் இனபெருகத்திற்கு சேரக்கூடும், ஆனால் அவ்வாறு சேர்ந்தால் அவைஅவையாக இருப்பதில்லை வேறாகதான் இருக்கும்; அத்துடன் அவை அநேகமாகக் கலந்து உருப்பெறுவதில்லை. ஆனால் மனித வகைகள் அல்லது இனங்கள் பொதுவாகக் கலந்து உருவாகக்கூடியன. ஒரேவகையை சேர்ந்தவர்கள் எனும் அடிப்படையில் ஒரேபிரிவின் (இனத்தின்) எந்த ஆணும் எந்த பிரிவு பெண்ணுடன் சேர்ந்து இனப்பெருக்கம் செய்யமுடியும். அதாவது இவ்வாறு வெவ்வேறு பிரிவினர்(இனங்கள்) கலப்பதனால் மலட்டுத்தன்மை எங்காயினும் உண்டாவதாகத் தெரியவில்லை. இன்று தூயஇனவாதம் பேசும் பலர் மறந்தே போனயிடம் இன்று வெவ்வேறு பிரிவாக(இனமாக) காணப்படும் இவர்கள் முந்தைய நகர்வுகளில் கலப்புற்றுப் பிறந்தவர்களேயென்பதை இதிலிருந்து தெளிவாக நாம் புரிந்துக் கொள்ள முடியும் மனிதகுலமான ஒரே தொப்பூல் கொடி உறவுதான் என்பதனையும்.
அறிவியல் ஆய்வுகள் மனிதர்கள் விலங்கினத்தின் ஒரு வகை ஆனால் சில சிறப்பம்சங்கள் தனிவகை என்பதை உணர்த்துகின்றன. சுருக்கமாகச் சொல்வதானால், மனிதர்கள் விலங்குளிலும் பார்க்க எளிதாகவும், காலநிலைகள், மற்றும் காரணங்களால் மிக எளிதாக இடம் பெயர்ந்துவிடுவர்; மனிதர் தம் உணவு, உடை, உதவிக்கு வேண்டிய கருவி, மிருகங்கள் ஆகியவற்றைத் தேவைக்கேற்றவாறு மாற்றிக்கொள்வர். இத்தகைய திறமையும் வாய்ப்பும் விலங்குகளுக்கு இல்லை. அநேகமாக, மனிதர் உலகில் ஆர்ட்டிக்கண்டம் தவிர்ந்த ஏனைய பகுதிகளிலெல்லாம் சிறப்பாக வசிக்கின்றனர். ஆதேபோல் விலங்குகளும் இவ்வாறு எங்கும் பரந்துள்ளனவென்று சொல்ல முடியாது. மனிதருடன் சென்ற ஒரு சில விலங்குகள் மாத்திரம் பரந்துள்ளன. விலங்குவகைகள் தனிப்பட்ட இயல்புகளுள்ள தாயகங்களில் மாத்திரம் வசிக்கின்றன. மனிதன் இடம்பெயர்ந்து செல்லும் ஆற்றல் காரணமாக, உலகமெங்கும் பரந்தும், ஒன்றுடன் ஒன்று சேர்ந்தும் கலந்தும் பின்னிப்பிணைந்து வாழ்கின்றனர். இப்பொழுதுள்ள மனிதவகைகள் யாவும் மனித இயல்புகளையே பெற்றிருந்த ஒருவகைப் பூர்வீக மனிதரிலிருந்தே வந்தவை என்பதில் இப்பொழுது சந்தேகமில்லை; உலகில் இங்குமங்குமாக இவர்கள் இடம்பெயர்ந்து முறையாக அப்பூர்வீக மனிதவகையினரிலிருந்து தோன்றியவர்களே இப்பொழுதுள்ள மனிதவகையினர். அவ்வகையான நகர்வில் இப்பொழுதுள்ள ஆப்பிரிக்க ‘நீக்ரோகள்’, ஐரோப்பிய ‘வெள்ளையர்’ வடசீனவிலுள்ள ‘மஞ்சள்’ நிற மக்கள், மற்றும் உலகெங்கும் சிதறுண்டுள்ள பல்வேறு வகையினர் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதை அறியக் கூடியவாறு அந்நகர்வுகள் பற்றி ஆராய்ந்தால் பல குழப்பங்களுக்கு விடை கிடைக்கும்.(விரிவாக வாசிக்க விருப்பம் உள்ளவர்கள் மனித இனங்கள் பற்றி உயிரியல் டாக்டர் மிகையில் நெர்தூர்ஹ் அவர்களின் மாஸ்கோ நூல் பயனளிக்கும்).
l இன்று மனிதன் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் ஆதியில் தோன்றிய அந்த மனிதனிலிருந்து வந்தவர்களே ஆம் ஆப்பிரிக்க ‘நீக்ரோகள்’, ஐரோப்பிய ‘வெள்ளையர்’ வடசீனவிலுள்ள ‘மஞ்சள்’ நிற மக்கள் எல்லோர்க்கும் ஒரே மூதாதையர்தான். அவர்களின் நகர்வு சமூக வளர்ச்சி மாற்றம் பிரதேசம், மொழி என்ற பிரிவோடு தன் வளர்ச்சிக்கு தங்களுகுள்ளே நாடுகளாகவும் கண்டங்களாகவும் ஆளுபவர்களாகவும் ஆளாப்படுபவர்களாகவும், சுரண்டுபவர்களாகவும் சுரண்டப்படுபவர்களாகவும் இங்கே ஜாதி ரீதியாக ஏற்ற தாழ்வான சமூகத்தில் மனிதனை மனிதன் பிரித்து ஒதுக்கி அடக்கி ஆளும் கேவலம் தொடர செய்கிறது. ஆனால் எல்லோரும் ஒரு காலத்தில் தோன்றிய அந்த ஆதி மனிதனின் தொப்புழ் கொடி உறவுதான் என்பது தெளிவு. அண்மைய ஓர் ஆய்வாளரின் எழுத்தை பயன்படுத்தி கொள்வோம். ”மூதாதையரை தேடி”என்ற நூலின் அடிப்படையில் மனித குலம் வளர்ந்த கதை தெரிந்துக் கொள்ள முயலுவோம்.
v ‘உயிரினங்களின் தோற்றம் பற்றி எழுதிய சார்லஸ் டார்வின் மனித குல வரலாறு பற்றி வருங்காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் தனது முடிவுகளை மேலும் தெளிவுபடுத்தும் என்று கூறினார். ஆனால் டார்வின் மனிதன் குரங்கிலிருந்து உதித்தான் எனக் கூறியதாக அவசொல் பெற்றார். பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை தவறாக புரிந்து கொள்பவர்களே இதுபோல் அவர் மீது குற்றம் சுமத்துகின்றனர். நாம் குரங்கிலிருந்து பிறந்தவர்கள் அல்ல, குரங்கு நம் மூதாதையர் என்றால் ஏன் இன்னும் குரங்குகள் குரங்குகளாக இருக்கின்றன? அதாவது நாமும் நம் கொள்ளுப்பாட்டனும் எவ்வாறு சமகாலத்துவராக இருக்க முடியும்? குரங்குக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு தாத்தா பேரன் உறவு அல்ல பங்காளி உறவு. அதாவது சித்தப்பா மகன், பெரியப்பா மகன் உறவினாகும் ஒரே வம்ச விருத்தியில் பல கிளைகளில் இரு கிளைகள் குரங்குகளும் ஆதி மனிதர்களும் ஆகும்.
v மனிதர், ஆதி மனிதர், மனிதக் குரங்குகள் மற்றும் இதர வாலில்லா குரங்குகள் இவற்றை ஹோமினாய்டியா(Hominoidea) பேரினத்தை சேர்ந்தவை. இன்னும் சில ஆய்வுகள் சில வேறுபட்ட கருத்துக்களை முன் வைத்துள்ளது’.(ஆதாரம் சுகி ஜெய்கரன் அவர்களின் மூதாதையரை தேடிய நூலிலின் அடிப்படையில்.).இன்னும் தெளிவுபட மேல்காணும் மாஸ்கோ நூல் யுனஸ்கோ அங்கீகரிக்கப்ட்ட இனங்கள் இனக் காழ்ப்புகளையும் பற்றி அறிக்கை பாரிஸ்,26 செப் 1967 விரிவாக இங்குள்ள தப்பெண்ணங்களுக்கு விடுதலை கொடுக்கும்..
l டார்வினின் கோட்பாடான, குரங்கினத்தின் மூதாதயர் வழியில் மனிதன் தோன்றினான் என்பதிற்கான சான்றுகளும், ஆதிபொது உடமை சமூகம் மெல்ல சிதைந்து….உபரியான விளைபொருள் உற்பத்தி செய்யும் ஆரம்ப காலத்தில் தாய்வழி சமூகம் தந்தை வழி சமூகமாக மாறி….மனித சமுதாயம் பல குழுக்களாக பிரிந்து வலிமை மிக்கவன் குழுதலைவராக உயர்ந்து பின்பு உணவு உற்பத்தி மற்றும் வேட்டை, மேய்ச்சல், நிலஉரிமை போன்ற போராட்டத்தில் பல பழங்குடிகுலக்குழுக்களுக்குஇடையில் ஏற்பட்ட போர்கள்,சிற்றரசு, பேரரசு உருவான விதத்தையும் மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும் …. இவ்வாறாக சமூக வளர்ச்சியும் அதன் பரிமாணங்களையும் ஆய்ந்தறிந்து தெளிவடைந்தால் இன்றைய பல புதிர்களை விடுவிக்க முடியும் என்பேன்.
மதங்கள் எப்போதும் அறிவியல் கண்டு பிடிப்புகள் மற்றும் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கபட்ட அனைத்து உண்மைகளையும் எதிர்த்தே வந்துள்ளது. அது சாக்ரடீஸ் பிலட்டோ முதற்கொண்டு தற்கால விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் வரை அனைவரின் ஆதாரபூர்வ நிரூபனங்களை மறுத்து இந்த உலகம்,பால்வெளி அண்டம் உட்பட பிரபஞ்சம் முழுவதும் கடவுள் என்ற ஒரு தனிப்பட்ட நபரால் உருவாக்கப்பட்டது என்று இவ்வுலகில் மனிதனால் உருவாக்கப்பட்டஅனைத்து மதங்களும் அவற்றின் தலைவர்களும் மக்களை நம்ப வைத்து பலநூறு ஆண்டுகளாக மனித சமுதாயத்தை மூடநம்பிக்கையில் ஆழ்த்தியுள்ளனர் என்றால் அதிலிருந்து விடுபட சமூக விஞ்ஞானம் சற்று அறிந்தாலே எளிதாக புரிந்துக் கொள்ள முடியும் ஆகையால் சில முன்னேடுப்புகள் …...
மெத்த படித்த அறிவியல் புலமை உள்ள நபர்களே மதத் தலைவர்கள் சொல்லும் புனைவுகதைகள், சடங்குசம்பிரதாயம், மந்திரம் தந்திரம் ஆகிய அனைத்தும் நம்பும்போது படிப்பறிவில்லாத எளிய மக்கள் நிலை இன்னும் கவலைக்குரியவைகும். ஆக தெளிவாக நமது சமூகம் பற்றி புரிந்துக் கொண்டாலே இந்த எழுத்தின் ஆழத்தை புரிந்துக் கொள்வீர்.
புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், மனிதனின் எண்ணங்களில் எழும் பெரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உதவுவதாயிருக்கிறது; சமூக, மத, கல்வி சம்பந்தமான விடயங்களில் நமக்குள்ள நிலைபாடுகளை அது மாற்றுகிறது. ஆக நமது தேடுதலான ஜாதியம் பற்றிய அன்றிலிருந்து இன்றுவரை தோன்றியதிலிருந்து அதன் போக்குகள் இன்று ஏன் பேசுபொருளாக உள்ளது. சமூக வளர்ச்சி போக்கை புரிந்துக் கொள்வதோடு அதனின் தீமையான பங்களிப்பானது இச்சமூகத்தில் வளர்ச்சிக்கும் எல்லா முன்னேற்றதிற்கும் தடையாகயுள்ளது. ஆக அதனை களைந்தெறிய வழிவகைபற்றியும் தேட முயலுவோம்.
கற்கால மனிதர்இனி வரலாற்றுகாலத்துக்கு முந்திய மக்களின் வாழ்க்கையைப்பற்றி சிறிது அறிவோம். அக்காலத்து மக்கள் உபயோகித்த கருவிகளாலும் அவர்கள் தீட்டிய படங்களாலும் அவர்கள் எத்தகையோர் என்பதை உணரலாம். கற்காலமக்கள் குரங்குகளினின்றும் வேறல்லர் ஏனென்றால் அவர்களுக்குப் பேசவே தெரியாது. அவர்கள் விலங்குகள் போல் சத்தமிட்டனர். அவர்களுக்கு ஆயுதங்களே இல்லை. அவர்கள் ஆடையற்றவராயும் உணவைச் சமைத்து உண்ணத் தெரியாதவராயும் இருந்தனர். அவர்கள் ஏனைய விலங்குகளிலும் புத்திநுட்பம் வாய்ந்தோராதலின் வாழ்க்கைப்போரில் தப்பினர். பின்னர் மக்கள் கூட்டங் கூட்டமாக வாழவும் செய்கையாலும் பின் மொழியாலும் தங்களுகிடையில் தங்களின் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர், கல்லாயுதங்கள் செய்யவும் தோலாடை அணியவும் தீயுண்டாக்கவும் தொடங்கினர். தீயின் உபயோகங்களை அறிந்தோர் தீயின் இன்றியமையாமையை உணர்ந்து அதைத் தெய்வமாக வணங்கினர். அதன் பின் மட்கலம் வனையவும் செங்கல் சுடவும் தொடங்கினர். கற்காலமக்கள் செய்த ஈட்டிகள் கோடரிகள் முதலிய கல்லாயுதங்கள் அவர்களின் எலும்புக் கூடுகளோடு சில இடங்களில் பண்டைப் பொருளாராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப் பட்டுள்ளன. கற்காலத்தோர் மீன் பிடித்தும் வேட்டையாடியும் வாழ்ந்தனர். அவர்கள் பெரும்பாலும் குகைகளிலும் மரங்களிலும் உறங்கினர். பின்பு கற்களை அடுக்கிச் சிறுகுகைகளாக்கவும் பயின்றனர். பகைவரினின்றும் தம்மைக் காத்துக்கொள்ளச் சிலர் குளங்களில் மரங்களை நாட்டி அவற்றின்மீது சிறு குடிசைகளை அமைத்து வாழ்ந்தனர். ஆல்பஸ் மலைப்பிரதேசங்களில் இத்தகைய குடிசைகள் காணப்படுகின்றன.
உயர்ந்த மரங்களில் குடிசைகள் கட்டினர், மரங்களை எரித்தும் குடைந்தும் சிறு ஒடங்களும் ஆக்கத் தொடங்கினர். உணவு தேடலிலும் தம்மைக் காத்தலிலும் கற்காலமக்கள் தம் காலத்தைக் கழித்தனர் எனச் சொல்லலாம். சிலர் கல்லில் உருவங்களைக் கீறவும் மட்கலங்களில் உருவங்கள் தீட்டவும் தொடங்கினர். கல்லியா ஸ்பானியா தேசங்களில் உள்ள சில குகைகளில் கற்கால மக்கள் தீட்டிய உருவங்களைக் காணலாம். அவர் தாம் வணங்கிய தெய்வங்களையும் அக் குகைகளில் எழுதினர். நிலம், நீர், தீ, காற்று மற்றும் வானம் ஆகிய பஞ்சபூதங்களின் தேவைக்கு அதிகமாதலும் குறைவதாலும் மக்களுக்கு ஏற்பட்ட தீங்குகளால் அவர்கள் பயமுற்றதனால் கற்காலத்தோர் பஞ்சபூதங்களை வழிபட்டனர். தமதுஉணவுப் பொருள்களைக் கெடுக்காவண்ணம் நீர் காற்று முதலியவற்றைத் தெய்வமென எண்ணித் தொழுதனர். துஷ்டதெய்வங்களுக்குச் சாந்திபடுத்தப் பலியிட்டனர். நரபலியிடுதல் அக்காலத்து மிகப் பொதுவான வழக்கமாயிற்று அவற்றை பேய் பிசாசுகள் என்று மந்திரிக்கவும் செய்தனர். காலம் செல்லச் செல்ல ஆடு மாடு மேய்க்கவும் அவற்றின் பாலை உண்ணவும் தொடங்கினர். பிற்காலத்து மக்கள் செம்புருக்கப் பயின்று செப்பாயுதங்கள் செய்தனர். அக்காலத்திலே தான் நெல்லு கோதுமை முதலியன பயிரிடப் பயின்றனர். பயிரிடப் பயின்றோர் ஆறுகளின் கரைகளிலும் சமபூமிகளிலும் வாழ்ந்தனர். பட்டிமேய்ப்போர் கூடாரங்கள் அடித்துத் தம்பட்டிகளோடு அலைந்து திரிவோராக, கைவினைர்கள் ஆற்றங்கரைகளில் நிலையான குடிகளாக வாழ்ந்தனர். இனி இன்னும் சற்று தேடுவோம்.
அ.புராதன பொதுவுடைமைச் சமூகம்
மனித சமுதாயம் எப்பொழுதும், இப்பொழுது இருப்பது போலவே இருந்தது இல்லை. அது பல காலங்களில் பல மாறுதல்களுக்கு உட்பட்டு வளர்ந்து வந்துள்ளது. அது தன் பயணத்தைப் பொதுவுடைமைச் சமூகமாக தொடங்கியது. இதனை நாம் ஆதி பொதுவுடைமை சமூகம் அல்லது புராதன பொதுவுடைமை சமூகம் என்றழைக்கிறோம். மனிதன் வேட்டையாடி வாழ்ந்து கொண்டு இருந்தபொழுது அவர்களில் யாருக்கும் எந்த விதமான சொத்துரிமையும் இருந்ததில்லை. வேட்டைக் கருவிகள் உட்பட அவர்களிடம் இருந்த அனைத்தும் அனைவருக்கும் உரிமையாக இருந்தன. தனியுரிமையைப் பற்றி அவர்களால் கற்பனையும் செய்ய முடியாதிருந்தது.
உழைக்கும் வயதில் உள்ள யாரும் உழைக்காமல் இருக்க முடியவில்லை. உழைக்காமல் இருப்பதைப் பற்றிக் கற்பனை செய்யவும் முடியாது. அச்சமூகத்தில் திருட்டுஇல்லை; ஏமாற்றுஇல்லை. மக்களுக்குள் இடையே ஏதாவது பிணக்குகள் தோன்றினால், அவை மூத்தவர்களின் தலையீட்டில், அவர்களுடைய கண்டிப்பில் தீர்த்து வைக்கப்பட்டன. அங்கு அரசன் இல்லை. காவல் துறை இல்லை. அரசு என்ற அமைப்பின் எந்த ஒரு அங்கமும் அங்கு இல்லை.
அச்சமூகத்தினால், தாங்கள் வாழ்வதற்கும், தங்கள் சந்ததிகளைப் பெற்று வளர்ப்பதற்கும் தேவையான அளவிற்கு மட்டுமே பொருட்களை ஈட்ட முடிந்தது.
அவர்கள் தங்கள் அறிவுத் திறத்தினாலும் முயற்சியினாலும், வேட்டைக் கருவிகளைச் செம்மைப்படுத்தினர். விதைகள் மண்ணில் விழுந்து மீண்டும் வளர்வதைக் கண்டு விவசாயம் செய்யக் கற்றுக் கொண்டனர். இவ்வாறு அவர்களின் உற்பத்தித் திறன் வளர்ந்த போது அவர்களால் தாங்கள் வாழ்வதற்கும், தங்கள் சந்ததிகளைப் பெற்று வளர்ப்பதற்கும் தேவைப்படும் பொருட்களை விட அதிமான பொருட்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு வளர்ந்தனர். உற்பத்திக் கருவிகள் மேலும் உயர்ந்த ஒருமட்டத்துக்கு வளர்ச்சியடைந்தநிலையில், மனிதனால், முதன்முறையாக, உபரியாக, அதாவது தனக்கு அத்தியாவசியமானதற்கும் மேலாக, உற்பத்தி செய்ய முடியுமாயிற்று. இவ்வாறு சுரண்டலுக்கான அடிப்படை வந்து சேர்ந்தது. ஆதிபொதுவுடமை சமூகம் உடைப்பு ஏற்பட்டு உடமை உள்ளவர்கள் உடமை அற்றவர்கள் என்ற வர்க்க சமூகதிற்கு வழிவகுத்தது.
ஆ. ஆதிபொதுவுடைமைச் சமுதாய வீழ்ச்சியும் அடிமை சமூக பிறப்பும்
ஆதிபொதுவுடமை சமூகம் உடைபட்டு உருவெடுத்த வர்க்க சமூகம் அடுத்தவரை அபகரிக்க போரிட்டது. அப்போரில் சிறைப்பிடிக்கப்பட்டோர் கொல்லப்படவில்லை, மாறாக வென்றவர்கட்காக வேலை செய்வதற்காக அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். இவ்வாறு அடுத்த சமுதாய வடிவம், அதாவது அடிமைச்சமுதாயம் எழுந்தது. உற்பத்தி உபகரணங்கள் தொடர்ந்தும் வளர்ச்சிபெற்று வந்தன. இவ்வாறான வளர்ச்சி நிலையில் அடிமைகள் தொடர்ந்தும் பொருத்தமானவர்களாக இருக்கவில்லை. ஏனெனில் எசமான் தனது இஷ்டப்படி விற்கவோ சுடவோ முடியுமானபடி எசமானின் தனிச் சொத்தாக இருந்த அடிமைக்கு மேலதிகமாக உற்பத்தி செய்வதற்கான தூண்டுதல் எதுவும் இருக்கவில்லை. அவனது உற்பத்திக்கும் அவனுடைய ஊதியத்திற்கும் எதுவிதமான உறவும் இருக்கவில்லை.
இவ்வாறு உற்பத்தியில் மனிதரிடையிலான புதியதொரு உறவுக்கான தேவை மேலும் அதிக உற்பத்தி செய்யுமாறு தூண்டுதலுடைய மனிதருக்கான தேவை-எழுந்தது. ஸ்பாட்டகஸ் தலைமை தாங்கியது போன்ற அடிமைகளின் கிளர்ச்சிகள் இந்தப் போக்கைத் துரிதப்படுத்தின. அடிமையின் இடத்திற்கு வந்த பண்ணையாள் நிலத்திற்குப் பிணைக்கப்பட்டு நிலவுடைமைக் காரனின் நிலத்தில் குறிப்பிட்ட நாட்களிலும் தேவையான போதும் பணியாற்றுமாறான கட்டாயத்துக்குப்பட்டிருந்தார். எவ்வாறாயினும் அவருக்குத் தனது உற்பத்தியின் பயனை அனுபவிக்கும்படியாக ஒருசிறிது நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இ. அடிமைச் சமுதாய வீழ்ச்சியும் நிலபிரபுதுவத்தின் பிறப்பும்
இத்தாலி அடிமைச் சகாப்தத்தின் கேந்திரமாக விளங்கிற்று. கணக்கற்ற அடிமைகளை வைத்திருந்த ரோம எஜமானர்கள் பெருமளவில் விவசாயம் செய்து கொள்ளை லாபம் சம்பாதித்தனர். அன்று அடிமைகளின் முதுகெலும்பின் மீது செல்வமெனும் மாளிகை கட்டப்பட்டது. உண்மையில் அடிமைகளின் இரத்தத்தை உறிஞ்சிக் கொழுத்தனர் ரோமஎஜமானர்கள்.
உரிமைகளும் உற்பத்திக்கருவிகளும் இல்லாத அடிமைகள் அவமதிக்கப்பட்டனர். செக்குமாடுபோல் உழைக்கும்படி நிர்ப்பந்திக் கப்பட்டனர். துன்பம் நிறைந்த வாழ்க்கை அவர்களின் ஜீவசக்தியை உறிஞ்சியது. வாழ்க்கை எனும் சுமையை சுமக்க முடியாமல் அவர்கள் துன்பக்கண்ணீர் வடித்தனர். கேவலமான வாழ்க்கையிலிருந்து விடுபடுவதற்காக அவர்கள் தப்பியோட முயன்றனர், எனவே இரவில் அவர்களுக்கு எஜமானர்கள் விலங்கிட்டினர். குடும்ப வாழ்க்கை அவர்களுக்கு மறுக்கப்பட்டது. அடிமைகள் கல்யாணம் செய்யக்கூடாது எனும் நியதி அமுலில் இருந்தது. கல்வி கற்கவும் அடிமைகள் அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் அறிவு அடிமைகளின் அறிவுக் கண்களைத் திறக்கும் என்பது எஜமானர்களுக்குத் தெரியும். அடிமைகள் மீது எஜமானர்கள் ஏகபோக உரிமை கொண்டாடினர். அடிமைகளை அவர்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம். அடிமைகளை அவர்கள் சித்திரவதை செய்யலாம்; உருக்குலைக்கலாம்; கொலை செய்யலாம். பல நாட்கள் பட்டினிபோடப்பட்ட சிங்கத்துடன் எந்த விதமான ஆயுதமுமின்றி போர் புரியும்படி அடிமைகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். அந்தக்காலத்தில் இதுபெரிய வேடிக்கையாக மதிக்கப்பட்டது, எஜமானர்களின் இன்பத்துக்காக, அவர்களின் நன்மைக்காக அடிமைகள் தங்குதடையின்றிப் பலியிடப்பட்டனர். எஜமானர்கள் கிழிக்கும் கோட்டைக் கடந்து செல்லத் துணியும் அடிமையின் கதி அதோ கதிதான். அவன் எஜமானுக்கு ஏதும் தீங்கு செய்தால் அவன் மாத்திரமல்ல, அவனைச் சேர்ந்தவர்கள் கூட நிர்மூலம் செய்யப்படுவார்கள். அடிமைச் சகாப்தத்தில் இந்த நிலைமை எங்கும் குடிகொண்டிருந்தது.
முதுகெலும்பு முறிய வெயிலிலும் மழையிலும் வேலை செய்த அடிமைகளுக்குக்கிடைத்த ஊதியம் சவுக்கடி. கடுமையான உழைப்பால் தளர்ந்த அடிமைகள் உழைக்கும் சக்தியை இழந்தனர். வேலை செய்யும்படி அவர்களைத் தூண்டுவதற்காக கங்காணிகள் இடைவிடாது அடித்தனர். இவ்வாறான துன்பத்தைச் சகிக்க முடியாமல் அடிமைகள் ஈசலப்போல மடிந்தனர். காலப்போக்கில் அடிமைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்தது. துன்பத்தால் விறைத்த அடிமைகளின் இதயத்தில் துணிச்சல் பிறந்தது, அவர்கள் கொடுமையை எதிர்த்துப் போராடத் தொடங்கினர்.
அடிமைமுறை, வளர்ந்து வரும் விவசாய முறைக்குக் குறுக்கே நின்றது. உற்சாகமின்றி அடிமைகள் உழைத்ததால் விவசாயம் தடைப்பட்டது. எஜமானர்களின் வருவாய் குறைந்தது. அடிமைகளைக் கொண்டு விவசாயம் செய்வது இலாபத்தைத்தராது என்று அவர்கள் உணர்ந்தனர். அடிமை உழைப்பால் சமூகத்தின் உழைப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால் உற்பத்தியும் தேவையும் முட்டி மோதின. பழைய முறைக்கு விடை கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது.வர்த்தகம் ஆரம்பமானதைத் தொடர்ந்து கடற்கரை ஓரங்களில் நகரங்கள் தோன்றின. நகரத்தில் வாழ்ந்த வர்த்தகர்கள் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தினர். வர்த்தகம் தலை தூக்கியதும் சாமான்களின் தேவை அதிகரித்தது. தலைதெறிக்கும் வேகத்தில் வர்த்தகம் விருத்தியடைந்தது. ஆயினும் ஒர் எல்லைக்கு உட்பட்ட அடிமைகளின் உழைப்பு உற்பத்திசெய்த பண்டங்கள் வளர்ந்துவரும் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை. எனவே வர்த்தகம் தேங்கி நின்றது. அதே சமயத்தில் வர்த்தகர்களிடமும், வட்டித் தொழில் செய்வோரிடமும் செல்வம் மலைபோல் குவிந்துகிடந்தது. வர்த்தகம் தேங்கி நின்றதைத் தொடர்ந்து நகரவாசிகள் வேலையில்லாத் திண்டாட்டத்தால் வாடினர். வேலையில்லாத் திண்டாட்டமும் வறுமையும் மக்களைச் சித்திரவதை செய்தன. வளர்ந்துவரும் சமூகத் தேவையும் பழைய உற்பத்திமுறையும் முட்டிமோதின. பழைய சமூகமுறை சாகவேண்டும் என்று சரித்திரம் தீர்ப்புச் சொல்லியது. அது செத்தது.
ஐந்தாம் நூற்றாண்டில் அடிமை சகாப்தம் மரணநிலையை அடைந்தது. அடிமைமுறையை அடித்தளமாகக் கொண்டிருந்த ரோமசாம்ராஜ்யம் தளர்ந்தது. இதனைத்தொடர்ந்து அதன் அரசியல் அமைப்பும் நிலைகுலைந்தது. இராணுவ ஆட்சி எங்கும் தலைதூக்கியது. அந்தக்காலத்தில் அடிமை முறையை எதிர்த்து அடிமைகளும் வளர்ந்துவரும் வர்த்தகர்களோடு போர்புரிந்தனர். அத்துடன் ஜெர்மனியர் ரோமசாம்ராஜ்யத்தின் மீது படை எடுத்தனர், முன்னரே தளர்ந்திருந்த ரோம சாம்ராஜ்யம் இடிந்துநொருங்கியது. அத்துடன் அடிமைசகாப்தமும் செத்தது. மனித சமூகம் நிலபிரபுத்துவ சகாப்தத்தைக் கொட்டுமேளத்துடன் வரவேற்றது.
தொடரும்.....