கே.ஆர் (மருதமுத்து கே. ராதாகிருஷ்ணன்)-யார்?

காரைக்கால்,
31/8/26
நண்பர்களே,
எனது வாழ்வில் அனைத்திலும் மேலான முக்கியத்துவம் வாய்ந்த தருணம் இது.
1970 களின் இறுதியிலும், 1980களின் தொடக்கத்திலும் இதே போன்ற முக்கியத்துவம் வாய்க்கப்பெற்ற ஒரு காலகட்டத்தை நான் எதிர்கொண்டேன்.
அப்போது நான் ஒரு முடிவு எடுத்தேன்---
நக்சல்பாரி இயக்கத்தின் மக்கள் யுத்தக் கட்சியில் சேர்ந்து அதன் தலைமையின் முடிவுகள் அனைத்துக்கும் கட்டுப்பட்டு உலக வாழ்வில் எனக்குரிய மனைவி மக்கள், பட்டம் பதவி (பேராசிரியர் பதவி), பொருளாதார வசதி, மற்றும் அனைத்திலும் மேலான உயிர் மீதான பற்றுதல் ஆகிய அனைத்தையும் துறந்து நீதிக்கான போராட்டத்திற்கு என்னை நானே அர்ப்பணித்துக் கொள்வது என்பதே அந்த முடிவு.
அந்த முடிவை அன்று நான் மேற்கொண்டபோது அப்போது என் தலைமையை ஏற்க முன்வந்து அன்று தொட்டு இன்றுவரை என்னுடன் பயணித்து வருபவர் ஒரே ஒருவரே.
அவர் தான் “போர்க்கொடி” என்று நான் பெயர் சூட்டிய எனது உயிரினும் மேலான வாழ்க்கைத் துணை வாலன்டைன் ராணி ஆவார்.
அன்று அவர் வயது 21 மட்டுமே!!!
அவருடன் கூட வேறு சில உழைக்கும் மக்களைச் சேர்ந்த எஸ்.சி, மற்றும் பி.சி. சாதியினரும் அதே முடிவை ஏற்றுத் முழுமையாக எனது தலைமையில் செயல்பட முன்வந்தனர்.
வேறு பல படிப்பாளிகளும் பிறரும் ஆதரவு நிலையில் மட்டுமே செயல்பட இயலும் என்ற கூறி அவ்வப்போது உதவும் நிலைப்பாட்டை மேற்கொண்டனர்.
அவர்களது பங்கெடுப்பு எனது தலைமையிலான அமைப்பின் செயல்பாடுகளுக்கும் அதன் மூலம் நான் முன்னெடுத்த சில முக்கியத்துவம் வாய்ந்த களப் போராட்டங்களுக்கும் மறைமுகமாகவேனும் பல வகைகளில் உதவிகரமாக அமைந்தது.
ஆனாலும் அக்காலத்திய தமிழகத்தில் இருந்த நக்சல்பாரி இயக்கம் என்பது சாராம்சத்தில் உன்னதமான இலக்குகள் கொண்ட ஒரு தற்கொலை இயக்கமாகவே இருந்து வந்துள்ளது.
(அது பேச்சளவில் மட்டும் பொதுவுடைமை சார்ந்த தன்மை கொண்டதாக இருக்கவில்லை—இன்றைய வறட்டு மார்க்சியர்கள் போல்)
இந்த உண்மை அன்று எனக்கு உறைக்கவில்லை.
காரணம் அன்று எனக்குள் உணர்வு தான் மேலோங்கி நின்றது. அறிவு பலவீன நிலையில் இருந்தது.
இந்தச் சூழலில் அன்றைய தமிழகத்தில் மக்கள் யுத்தக் கட்சியில் தலைவராக இருந்தவர் ஏ.எம்.கோதண்டரராமன்.
ஏ.ஐ. கூறுகிறது (உறுதி செய்யப்பட்டுள்ள ஆதாரத்துடன்)---
“The national-level Communist Party of India (Marxist–Leninist) People's War (commonly known as the People's War Group or PWG) was officially founded in 1980 by Kondapalli Seetharamaiah in Andhra Pradesh. It was formed by merging his Andhra Committee with the prominent Kothandaraman grouping based in Tamil Nadu.
In the early 1980s, the chief leader of the Communist Party of India (Marxist–Leninist) People's War unit in Tamil Nadu was Kothandaraman.
அதாவது—“அனைத்திந்திய அளவிலான மக்கள் யுத்தக் கட்சி என்பது அன்று கொண்டாபள்ளி சீதாராமய்யா அவர்களின் தலைமையைக்கொண்டிருந்தது. அதில் கோதண்டராமன் தலைமையிலான நக்சல் பிரிவு தன்னை இணைத்துக் கொண்டது. இது நடந்தது 1980ல்.” (மூலம்—Marxist Internet Archive)
அடுத்து ஹிந்து ஏடு தரும் தகவல்---
“Following a deadly Naxalite hand grenade attack in Tirupattur on August 6, 1980, which killed a police inspector and multiple constables, Chief Minister M. G. Ramachandran launched a massive state-wide police crackdown. Named Operation Ajantha, this counter-insurgency initiative led to the deaths or arrests of most top-tier local leaders, severely dismantling the party's network in the state by the mid-1980s”
ஆம், அன்றைய தமிழகத்தில் என்னைப் போன்ற பலரின் முன்னெடுப்புகளில் விளைவாக மக்கள் மத்தியில் ஆதரவைப் பெருக்கிக் கொண்டு சாதிகளை ஒன்றுபடுத்தி மிகப் பெரிய போராட்ட அலையை உருவாக்கிய மக்கள் யுத்தக் கட்சியில், தோழர் பாலன் முக்கிய பங்காற்றியுள்ளார்.
அப்போது உடனடியாக “புரட்சித் தலைவர்” எம்.ஜி.ஆரின் அரசு கொடிய சட்டவிரோத என்கவுண்டர் கொலைகளை அரங்கேற்றி சர்வாதிகார முறைகளில் ஒடுக்கலாயிற்று.
அந்த அரச பயங்கரவாதத்தைத் தனது தலைமையில் நிகழ்த்தி வெற்றி கண்ட காவல் துறைக் கயவன் எம்.ஜி.ஆரின் பேரன்புக்கும் முழு நம்பிக்கைக்கும் உரிய அதிகாரி வால்டர் தேவாரம் ஆவார்.
இவர் தான் தோழர் தியாகுவை 1969ல் அக்காலத்திய நக்சல் இயக்கத்தின் அன்றும் தலைவராக இருந்த ஏ.எம்.கோதண்டராமன் அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்த என்னை 1970ல் ஒருநாள் அதிகாலையில் அதிரடியாக வீடு புகுந்து முறைசாரா அரெஸ்ட் செய்து படு பயங்கரமாக மிரட்டியவரும் ஆவார்.
1969ல் கும்பகோணத்தில் நான் மாணவர் தியாகுவைச் சந்திக்கும் முன்பே திருச்சி பெரியார் அரசினர் கல்லூரியில் உதவிப் பேராசிரியாக இருந்த என்னோடு அரசியல் தொடர்பு கொண்டு எனது இனிய நண்பராகவும், தோழராகவும் திகழ்ந்து வந்தவர் ஆனந்த ரங்கன் என்பார்.
அவர் அன்றே நக்சல் இயக்கத் தலைமையுடன் தொடர்பில் இருந்தார். எனவே அவர் மூலம் நான் ஏ.எம்.கே தொடர்புக்கு என்னால் வழி செய்யமுடிந்தது.
(ஆனந்தரங்கனுக்கு என்னைப் பற்றிய முழுமையான புரிதல் இருந்தது. எனவே தான் இது சாத்தியம் ஆனது.)
இதனைத் தொடர்ந்து ஏ.எம்.கே-விடம் தன்னை ஒப்படைத்துக்கொண்ட தியாகு தூக்குதண்டனை பெற்று அது பின்னர் ஆயுட்கால தண்டனையாக மாற்றப் பட்ட பின்னரும் எனது அளவுகடந்த ஆவேச உணர்வு சற்றும் தணியாத மனநிலையில் நான் மீண்டும் மக்கள் யுத்தக் கட்சியில் இணைந்து செயல்படலானேன்.
இந்நிலையில் 1980களின் தொடக்கத்தில் எனது தலைமையில் மீண்டும் தொடங்கப் பட்டு என்னால் வழி நடத்தப் பட்ட இயக்கம் குறித்த சில முக்கிய தகவல்கள் வருமாறு---
அன்று கொலையுண்ட தியாகியான இளைஞர் தருமபுரி பாலனைப் போற்றி எனது அமைப்பின் ஆதரவாளரும் கவிஞரும், பாடகருமான குடந்தை ஜோசப் நவநீதன் இயற்றிப் பாடிய அற்புதமான பாடல் ஒன்று இன்றும் எனது காதுகளில் ஒலிக்கிறது. “ஏழைகள் நெஞ்சிலே எரிகின்ற தீபமே” என்று தொடங்கும் அவரது பாடலும், “ஏ தோழனே, ஏழையில் பாலனே, இந்திய மண்ணிலே சிந்திய ரத்தமே,” என்ற எனது பாடலும் என்றென்றும் மறக்கமுடியாதவை ஆகும்.)
இந்நிலையில்தான் அன்று (1980 முதல்) மீண்டும் செயல்பட்டு வந்தேன்.
இம்முறை நாங்கள் சாதியுணர்வை முற்றாக நீக்கிய தலைமைச் சக்திகளை கிராமப் புற அளவில் வளர்த்தெடுத்து அதே மனநிலையை உழைக்கும் மக்கள் மத்தியிலும் உருவாக்குவதில் வெற்றி கண்டு பல ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்களையும் மேற்கொண்டோம்.
அப்போதுதான் தலைமையின் முக்கியத்துவத்தையும், அரசியல் புரிதலின் அவசியத்தையும், கடுமையான கட்டுப்பாட்டு உணர்வையும் நான் முழுமையாக உணரலானேன்.
அதை என் அளவில் கும்பகோணம் வட்டாரத்தில் கடைப்பிடிக்கவும் தொடங்கினேன்.
அதன் விளைவாகவே அன்று என்னை முழுமையாக நம்பி ஏற்று சகலவற்றையும் தியாகம் செய்யத் தயாராக என் மனைவி போர்க்கொடி உள்ளிட்ட ஒரு பிரிவினர் முன்வந்திருந்தனர்.
ஆனால்—
தமிழகம் முழுதும் அரசியல் பயிற்சி தர வேண்டும் என்ற உத்தரவு மூலம் அன்று தலைவர் ஏ.எம்.கே என்னை பரமக்குடி முதல் தருமபுரி வரை சென்று பணியாற்றுமாறு அனுப்பி வைத்தார்.
நானும் அதற்கு மறுப்பின்றிக் கீழ்ப்படிந்தேன்.
எனது இடத்தில் ஏ.எம்.கே-வால் நியமிக்கப்பட்டவர் மூத்த நக்சலைட் தமிழ்வாணன் என்பார்.
ஆனால் என் தலைமையில் முழு அர்ப்பணிப்போடு இயங்கிவந்த குடந்தை வட்டாரத் தோழர்களான ஞானப் பிரகாசம் (வன்னியர்), அவரது மனைவி சரோஜா (எஸ்.சி) முதலியவர்கள் முதன்முறையாக கீழ்ப்படிய மறுத்தனர்.
மீண்டும் கே.ஆர் (மருதமுத்து கே. ராதாகிருஷ்ணன்) வந்து தலைமை ஏற்றால் மட்டுமே தங்களால் நம்பிக்கையோடு கட்டுப்பட்டு இயங்க முடியும் என்று அவர்கள் காலப்போக்கில் முடிவு செய்து அறிவித்தனர்.
அதற்கிடையில் தமிழகம் முழுதும் அரசியல் வகுப்புகள் மூலம் பயிற்சிதரச் சென்ற எனக்குப் பேரிடி விழுந்தது போல உண்மை புரிந்தது. அதாவது அடிப்படை உண்மை என்னவென்றால், சாரத்தில் எங்கள் கட்சியின் பாதை முன்புபோலவே அதே தற்கொலைப் பாதைதான் என்று நான் உணர்ந்து கொண்டேன்.
காரணம் தமிழக அளவில் எங்குமே மக்கள் யுத்தக் கட்சி குறைந்த பட்ச வலிமை பெற்ற நிலையில் கூட இருக்கவில்லை.
உடனே நான் முழு அர்ப்பணிப்பும், கட்டுப்பாடும் கொண்ட எண்ணிக்கையில் சிலரான எனது தோழர்களை மட்டும் கூட்டி அந்தப் பேருண்மையை அவர்களுக்குத் தெரிவித்தேன்.
அந்தக் கணமே அவர்கள் அனைவரும் நொறுங்கிப் போனார்கள்.
பிறகு சிதறிப் போனார்கள்; செயலிழந்தும் போனார்கள்.
ஆனால் ஒரே ஒரு தோழர் மட்டுமே சற்றும் தயங்காமல் உடனே அறிவித்தார்---
“நான் உங்கள் நேர்மை, அறிவாற்றல், அர்ப்பணிப்பு, திறந்த மனது ஆகியவற்றின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டுள்ளேன்.
இப்போதும், எப்போதும், எனது இறுதி மூச்சு உள்ள வரையிலும் நான் உங்கள் தலைமையை ஏற்று உங்களோடு பயணிப்பேன். இது சத்தியம்” என்றார்.
அது மட்டுமல்ல, "பிள்ளைக் குட்டி, பதவி மற்றும் வருமானம் அனைத்தும் பறிபோனபின் என்ன செய்வது என்று நீங்கள் கலங்கவேண்டாம்.
நாம் இருவரும் ஒன்றாக இதே நீதிக்கான போரைத் தொடர்ந்து நடத்துவோம், வாருங்கள்!” என்றார்.
அவர் தான் என் உயிரினும் மேலான ஒருமித்த கருத்துடைய என் பெருமை மிகு மனைவி போர்க்கொடி என்ற வாலன்டைன் ராணி!!!
அவர் அன்று சொன்ன வார்த்தையை இன்று வரை மீறவில்லை, இனி என்றென்றும் மீறப்போவதுமில்லை என்று நான் முழுமையாக நம்புகிறேன்.
இந்த முடிவு அவரது சமூகப் பொறுப்புணர்வையும், ஆழ்ந்த புரிதலையும், சுயநலமற்ற தீரமிக்க அர்ப்பணிப்பு மனநிலையையும் காட்டுவதாகும்.
எனவேதான் எனது ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல், மற்றும் “திருக்குறள்: தமிழ்த்தேசிய அரசியல் நூல்” உள்ளிட்ட எனது முக்கியமான ஆய்வுப் படைப்புகளின் முகப்பில் எனது வாழ்க்கைத் துணை போர்க்கொடி குறித்து சில சாரமான வாசகங்களைப் பொறித்துள்ளேன்.
ஆனால் அன்று முன்னணி வகித்த பிற தோழர்களால் நக்சல் இயக்கத்தின் வெறுமை குறித்த உண்மையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
எனவே அவர்களால் தொடர்ந்து வீரியமாக இயங்க முடியாமற் போனது.
ஆனால் இது குறித்து எனக்கு எந்த விதத்திலும் வெறுப்போ, வியப்போ எதுவும் இல்லை.
இத்தகைய நிலையில் வீழ்வது இயல்பானது, எளிதில் நிகழ்வது.
ஆனால் மீண்டும் எழுவது அரிதானது.
அப்படியே எழுந்தாலும் பழைய உயரங்களை எட்டுவது அரிதிலும் அரிதானது.
எனவே இத்தகைய முதலாம் திருப்புமுனைக் காலகட்டத்தில் நடந்த தேர்வில் நானும் போர்க்கொடியும் மட்டும் வெற்றி பெற்று மீண்டோம்.
முழு நேர அங்கத்தினர் தவிர்த்து அன்று எங்களுடன் ஆதரவு நிலையில் இருந்த பனிமயராஜ், ஜோசப் நவநீதன் போன்ற பலர் தகர்ந்து போன நிலையில் இருந்த போதிலும் அவ்வப்போது ஆதரவளிக்கும் அளவிலேனும் தொடர்ந்து இருந்து வருகிறார்கள்.
ஆனாலும் முன்பு போன்ற வீரியம் தணிந்துதான் போயுள்ளது.
வன்முறையற்ற கருத்தியல் மற்றும் அரசியல் போரை முகநூல் மூலம் கடந்த சில ஆண்டுகளாக நான் நடத்தி வந்துள்ள போதிலும் இவர்களால் முழுமையான ஆதரவை வெளிப்படுத்த இயலாத நிலையே இருந்து வருகிறது.
தாங்களும் பயிற்சி பெற்றுத் தங்கள் வட்டார அளவில் சிறு அமைப்புகள் மூலம் பிறர்க்கும் பயிற்சி தருமாறு நான் பலமுறை வேண்டிக் கேட்டும் இவர்களால் முன்வர முடியாத நிலையே நீடித்து வருகிறது.
எனது பதிவுகளை லைக் செய்வது, ஒன்றிரண்டு காமென்ட் போடுவது, பகிர்வது என்பதோடு இத்தகையோர் நிறுத்தி கொண்டுள்ளது அவர்களின் மனச் சோர்வையே காட்டுகிறது.
இந்நிலையில் என் மகன் ஆண்டனி அசோக், மூலங்குடி தமிழரசன் மகன் மில்டன் போன்ற இளம் வயதினர் இன்று அரசியல் கற்கவும், கற்ற அறிவைப் பரப்பவும் தயாரான நிலையில் உள்ளதாக நான் எண்ணுகிறேன்.
ஆனால் அதற்கு மீண்டும் பழையபடி முழு அர்ப்பணிப்பும், கட்டுப்பாடும் கொண்ட படிப்பாளிகளின் சேவை தேவைப் படுகிறது.
இதற்கிடையில் முதல் அலையில் என்னோடிருந்த நண்பர் தியாகு போன்றோர் தங்களுக்கென்று தனி வழி கண்டு அதில் பயணித்து வருகிறார்கள்.
நானோ போர்க்கொடி உதவியுடன் மார்க்சியத்தை ஒதுக்கி விட்டு பார்ப்பனிய இந்துத்துவத்தின் வேர்களைக் கண்டறியும் இலக்குடன் ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளலானேன்.
அது என்னை புத்தரிடம் கொண்டு சேர்த்தது. வள்ளுவத்தின் மெய்ப்பொருளைக் கண்டறிய வைத்தது.
பேராசான்கள் அம்பேத்கர் மற்றும் பெரியாரின் இன்றியமையாத் தேவையை உணர வைத்தது.
இந்த அறிவுத் தேடலின் ஊடாக எனக்கு நேர்ந்த இதய நோய் எனது உயிரைப் பறிக்கவிருந்த நிலையில் நண்பர் தியாகு தலையிட்டார். அவருடன் ஐயா நெடுமாறன், மருத்துவர் ராமதாஸ், மணியரசன், சுப.வீ ஆகியோரும் துணை நின்று எனக்கு அறுவை சிகிச்சை நடத்தப் பட நிதி திரட்டி உதவினார்கள்.
ஆனாலும் தனிப்பட்ட முறையில் எனது நன்றியுணர்வு வேறு, அரசியல் நிலைப்பாடு என்பது வேறு.
எனவே தான் நான் குறிப்பாகத் தியாகு போன்றோருடன் அடிப்படையான வேறுபாடுகளைக் கொண்டவனாகத் தொடர்ந்து இருந்து வருகிறேன்.
================
பகுதி II
மேற்கண்ட வரலாறு உண்மைகளை மனதில் இருத்தி அடியிற் கண்டுள்ளவற்றை கவனமாக வாசித்தறிக.
இன்றைய தமிழகம் உள்ளிட்ட இந்தியாவில் நிலைமை முற்றிலுமாகச் சீரழிந்து கிடக்கிறது.
இதில் ஆயுதந்தாங்கிய போராட்டங்களுக்கெல்லாம் அறவே இடமில்லை.
அது குறித்து நமக்கு எந்த வருத்தமும் இல்லை.
ஆனால் அனைத்திலும் மேலாக எந்தவகைப்பட்ட ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்திற்கும் கூட அறவே இடமில்லாத நிலை மோடியரசினால் (ஆர்.எஸ்.எஸ் ஆணைப்படி) உருவாக்கப் பட்டுள்ளது.
இதற்கு எடுத்துக்காட்டாக காக்ரோச் கட்சிப் போராட்டத்தை ஒடுக்குவதில் தீவிரம் காட்டும் மோடியரசு இட ஒதுக்கீடு ஒழிப்புப் போராட்டத்திற்கு மறைமுகமான ஆதரவு தந்து வருவது ஒன்றே போதும்.
இத்தகைய சூழலில் நாம் உடனடியாக அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மா என்று அழைக்கப் படும் அதன் முகப்புரையையும், அதில் ஆசான் அம்பேத்கரால் நுழைக்கப் பட்ட “சகோதரத்துவம்” மற்றும் சுதந்திரம், சமத்துவம் ஆகிய கோட்பாடுகளையே சிதைக்கும் வகையில் இன்றைய பார்ப்பனிய இந்துத்துவா அரசு இயங்கி வருகிறது.
(இந்த முகப்புரையைத் தீர்மானிப்பதில் அண்ணல் அம்பேத்கரின் பங்களிப்பு குறித்த முழுமையான உண்மையை ஆய்வறிஞர் அசோக் கோபால் அவர்கள் வெளியிட்டுள்ளார். பிபிசி.தகவல்)
இதை முற்றாக மாற்றியமைப்பதைத் தனது தலையாய பணியாகக் கொண்டுள்ள அமைப்பு ஆர்.எஸ்.எஸ். அமைப்பாகும்.
இதன் கருவியாக மோடியரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இத்தகைய பேரழிவுக்கால இந்தியாவில் மக்களின், அதிலும் குறிப்பாக எஸ்.சி., பி.சி., மற்றும் இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களின் தலையாய உடனடிக் கடமை இந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஒழித்துக் கட்டி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உயிர் எனப்படும் முகப்புரையைக் காப்பது மட்டுமே ஆகும் என்பது எனது தீர்க்கமான முடிவு.
ஆனால் முன்பு நக்சல்பாரி இயக்கத்தில் ஈடுபடுவது எவ்வளவு ஆபத்தானதாக இருந்ததோ அதைவிட ஆபத்தான அரசியல் பணி இது என்று நீங்கள் உடனடியாக உணரவேண்டும்.
இது மோடியின் பெரியதொரு மோசடி வேலையாகும்.
அரசமைப்புச் சட்டத்தின் உயிரைக் காக்க முன்வருவோர் யாராயினும் அத்தகையோரை ‘திமாகி (அறிவுசார்) நக்சல்கள்’ என்று தூற்றி வெறுப்புணர்வை ஊட்டி வருகிறார் இவர்.
இந்த மாபெரும் சதித் திட்டத்தை முறியடிக்கவே இன்று
இப்பதிவின் மூலம் நான் ஒரு மகத்தான அமைப்பையும் அது சார்ந்த ஆதரவாளர் இயக்கத்தையும் தொடங்க முன்வந்துள்ளேன்.
இதில் மோடியின் பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்சி நடுங்காமல் அனைத்து ஜனநாயக, சமூக நீதியாளர்களும் உடனடியாகச் சேர்ந்து செயல்பட முன்வர வேண்டும் என்ற அழைப்பை இப்பதிவின் மூலம் விடுக்கிறேன்.
இதில் இரு பிரிவினர்க்கு இடம் உண்டு.
முதலாவது முழுமையான அர்ப்பணிப்புடனும், கட்டுப்பாட்டுடனும் எனது தலைமையில் இயங்க முன்வருவோர்.
இவர்கள் சிறை வாசத்திற்கும் தயாரான மனநிலை கொண்டிருத்தல் வேண்டும். எனது கட்டுப் பாட்டில் இயங்கும் சிறு சிறு குழுக்களை உருவாக்கி நான் காட்டும் வழிகளில் அக்குழுக்கள் அரசியல் பயிற்சி பெறுமாறு இத்தகையோர் பணியாற்றுதல் வேண்டும்.
இரண்டாவது பிரிவினர் ஆதரவு நிலையை மேற்கொண்டு நிதி உதவி செய்ய முயலலாம் அல்லது என் விளக்கங்களை பெரிய அளவில் பரவலாக்கும் முக்கிய பங்கையாவது ஆற்றலாம்.
இரண்டில் ஒன்றை நீங்கள் அனைவரும் உடனடியாகத் தேர்ந்தெடுத்து எனக்கு விரைவில் அறிவிக்குமாறு கோருகிறேன்.
இந்நிலையில் ஒருவர் எப்போதும் போல் முந்திக்கொண்டு முதல் பிரிவில் இணைந்துள்ளார்.
அவர்தான் என் உயிரினும் மேலாம் வாழ்க்கைத் துணையான போர்க்கொடி மருதமுத்து.
மற்றவர்களின் முடிவுக்காக ஆர்வம் மேலிடக் காத்திருக்கிறேன்.
நினைவிருக்கட்டும், நான் தொடங்கியுள்ள இந்த அமைப்பு மற்றும் இயக்கத்தின் நிலைப்பாடு அரசமைப்புச் சட்டத்தின் உயிரைக்காக்கும் நோக்கம் கொண்டதாகும்.
எனவே எத்தகைய கைது நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் எளிதில் எந்த ஒரு நீதிமன்றமும் இதற்கு தண்டனை தரத் துணியாது.
எனினும் கூட சிறை வாசம் முதலியனவற்றின் மூலம் நம் நெஞ்சுறுதியைத் தகர்க்க மோடியரசு ஓயாமல் முயற்சி செய்யும்.
ஆனால் இதற்கெல்லாம் அஞ்சினால் பின்பு பார்ப்பனிய இந்துத்துவ அரசின் கீழ் நிரந்தர அடிமைகளாக அனைத்து இந்தியர்களும், தமிழர்களும் கிடந்து உழல வேண்டிய அவல நிலையே நிலை கொண்டுவிடும்.
இறுதியாக நான் இன்று தொடங்கும் அமைப்பு மற்றும் இயக்கத்தின் பெயரை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
அது தன் பெயரையே இலக்காகவும் உடனடி வேலைத் திட்டமாகவும் கொண்டுள்ளது ---
“ஆர்.எஸ்.எஸ்-சை உடனே தடை செய்!”
*****“BAN RSS NOW!”*****
உடனே முடிவெடுங்கள்!
எழுவோம், வெல்வோம்!

அன்புடன், மருதமுத்து.


தொடர்புடைய கட்டுரைகள்:

***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

இலக்கு 103 இணைய இதழ்-PDF மற்றும் ஒலி வடிவில்

இந்த ஆதாரங்கள் மார்க்சிய-லெனினியக் கோட்பாடுகளைத் தமிழகச் சூழலில் எவ்வாறு அறிவியல் ரீதியாகப் புரிந்துகொள்வது மற்றும் செயல்படுத்துவது என்பதை விளக்கும் 'இலக்கு' இணைய இதழின் தொகுப்பாகும். சமூக மாற்றத்திற்கான ஒரு வழிகாட்டி அறிவியலாக மார்க்சியத்தை முன்வைக்கும் இவை, வர்க்கப் போராட்டம், சாதி ஒழிப்பு மற்றும் தேசிய இனப் பிரச்சனைகளை வர்க்கப் பகுப்பாய்வின் மூலம் அணுக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. கடந்த கால இந்தியக் கம்யூனிச இயக்கத்தில் நிலவிய திருத்தல்வாதம் மற்றும் பிளவுவாதப் போக்குகளை விமர்சிக்கும் இக்கட்டுரைகள், தத்துவத்தையும் நடைமுறையையும் இணைப்பதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கச் சோவியத் ரஷ்யாவின் 'தோழமைக் குழுக்கள்' போன்ற மக்கள் அமைப்புகளை உருவாக்குவது குறித்த உரையாடல்களை இவை முன்னெடுக்கின்றன. இறுதியில், தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் ஒருங்கமைந்த போராட்டமே உழைக்கும் மக்களின் விடுதலைக்கு வழிவகுக்கும் என்பதை இந்த ஆதாரங்கள் ஆழமாகப் பதிவு செய்கின்றன..

இந்தப்பகுதியை pdf வடிவில் வாசிக்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

கம்யூனிசம் என்பது வெறும் “நல்ல சமூகம் வேண்டும்” என்ற ஆசை அல்ல.

அது,

சமூகம் எவ்வாறு உருவானது?

வர்க்கங்கள் எவ்வாறு தோன்றின?

முதலாளித்துவம் எவ்வாறு உருவானது?

தொழிலாளி ஏன் உருவானான்?

முதலாளித்துவத்தில் நெருக்கடிகள் ஏன் ஏற்படுகின்றன?

தனியார் உற்பத்தி ஏன் சமூக உற்பத்தியுடன் முரண்படுகிறது?

இந்த முரண்பாட்டை எவ்வாறு தீர்ப்பது?

என்ற கேள்விகளுக்கான வரலாற்று–பொருளாதார விளக்கமாகும்.

ஆசிரியரிடமிருந்து

தோழர்களே,

மார்க்சிய-லெனினியக் கோட்பாடுகள் மற்றும் தத்துவார்த்த விவாதங்களை முன்வைத்து இடையறாது வெளிவரும் "இலக்கு" இணைய இதழின் 103-வது மலர், உழைக்கும் மக்களின் விடுதலைக்கான சிந்தனைத் தளமாக மேலும் வலுப்பெற்று உங்கள் முன் வந்துள்ளது. வெறும் அரசியல் இயக்கப் போராட்டங்களுடன் நின்றுவிடாமல், மார்க்சியக் கோட்பாட்டுக் கல்வி, வரலாற்றுப் புரிதல் மற்றும் சமூக ஆய்வுகளை ஒருங்கிணைக்கும் முக்கியப் பணியை "இலக்கு" தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

இலக்கு இதழ் பற்றி: 100-க்கும் மேற்பட்ட இதழ்களை வெற்றிகரமாகக் கடந்து, தமிழக மண்ணில் மார்க்சிய-லெனினியச் சிந்தனையை அறிவியல் பூர்வமாகவும் தெளிவாகவும் கடத்தும் ஒரு தொடர்ச்சியான அறிவார்ந்த முயற்சியாக "இலக்கு" திகழ்கிறது. கோட்பாட்டு ஆழத்தையும் நடைமுறைப் பொருத்தப்பாட்டையும் இணைத்து, ஒவ்வொரு மலரும் புதிய கோணங்களை, புதிய விவாதங்களை முன்வைக்கிறது.

இதழின் முக்கிய அம்சங்கள் & உள்ளடக்கங்கள்

ஆசிரியரிடமிருந்து (சுயவிமர்சனமும் திசைவழியும்):இதுவரை 100-க்கும் மேற்பட்ட இதழ்களை வெற்றிகரமாகக் கொண்டுவந்துள்ள "இலக்கு" ஆசிரியர் குழு, தமது தத்துவார்த்தப் பயணத்தின் மீதான நேர்மையான சுயவிமர்சனத்தை இம்மலரில் முன்வைக்கிறது. மார்க்சியத் தத்துவம் என்பது வெறும் கோட்பாடு மட்டுமல்ல; அது நடைமுறைக்கான வழிகாட்டி என்பதை வலியுறுத்தும் இந்த இதழ், "தத்துவம் என்பது எப்போதும் வர்க்கம் சார்ந்ததே; அதில் நடுநிலை என்று ஒன்று இல்லை" என்ற லெனினின் கருத்தை நினைவூட்டி, சிந்தனையின் திசையை மீண்டும் வரையறுக்கிறது.

மார்க்சிய-லெனினியக் கோட்பாடுகளின் தெளிவுரை:

  • கம்யூனிஸ்டுகள் யார்? — காரல் மார்க்ஸ் மற்றும் ஃபிரெடெரிக் எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் அடிப்படையில், கம்யூனிஸ்டுகள் தனி வர்க்கமல்ல; மாறாக, ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கத்தின் (Proletariat) முன்னணிப் படை என்பதை இந்தப் பகுதி விளக்குகிறது.

கம்யூனிஸ்ட் கட்சி என்பது எது? — லெனினிய வரையறைப்படி, கம்யூனிஸ்ட் கட்சி என்பது வெறுமனே தேர்தலைச் சந்திக்கும் இயந்திரம் அல்ல; அது புரட்சிகர நடைமுறையை (Revolutionary Praxis) முன்னெடுக்கும் மிக உயர்ந்த அமைப்பாகும் (Vanguard Party) என்பதை ஆழமாக ஆராய்கிறது.

தத்துவார்த்தப் பிறழ்வுகள் — மார்க்சியப் பாதையைச் சிதைக்கும் திருத்தல்வாதம் (Revisionism) மற்றும் குறுங்குழுவாதம் (Sectarianism) ஆகிய பிறழ்வுகள் குறித்து இம்மலர் தெளிவான எச்சரிக்கையை முன்வைக்கிறது.

மாவோவின் சிந்தனைகள் – தோழர் சண்முகதாசன் (பாகம் 11): தோழர் மாசேதுங் வர்க்கப் போராட்டம் மற்றும் சோசலிச சமூகத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைத் தொடர்ந்து நடத்துவது குறித்த கோட்பாடுகளை எவ்வாறு வளர்த்தெடுத்தார் என்பதை இத்தொடர் விரிவாக ஆராய்கிறது.

மார்க்சிய-லெனினிய அறிவியல் பூர்வமான உலகப்பார்வையையும், இயக்கவியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தையும் ஆழமாகப் புரிந்து கொள்ள விரும்புவோருக்கு இலக்கு இணைய இதழ் - 103 ஒரு சிறந்த தத்துவார்த்த வழிகாட்டியாகத் திகழ்கிறது.

பல்வேறு கண்ணோட்டங்களில் உள்ள தோழர்களையும் மார்க்சிய-லெனினியத் தத்துவ நடைமுறைக்கான வழிகாட்டியாக எமது "இலக்கு" இணைய இதழ் அன்புடன் அழைக்கிறது. இதன் ஆழமான கருத்துகளை உள்வாங்கி, உங்களின் மேலான கருத்துகளையும் விமர்சனங்களையும் எமக்கு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இந்தப்பகுதையை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

  • இப்படிக்கு, தோழமையுடன், இலக்கு ஆசிரியர் குழு 31 ஆகஸ்ட் 2026




தொடர்புடைய கட்டுரைகள்:

***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்-லெனின். பாகம் 1.

பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்-லெனின். பாகம் 1. 

மொழிபெர்ப்பாளரின் அறிமுக உரை- எஸ்.தோதாத்ரி 

லெனின் எழுதிய "பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்" என்ற நூல் மிக முக்கியமானது ஆனால் சற்று கடினமான நூல். இதனைப் புரிந்து கொள்வதற்கு சற்று சிரமப்பட வேண்டும். காரணம் இது தத்துவம் பற்றிய நூல். அதுவும் தத்துவத்தில் அறிவு பெறுவது எப்படி என்ற ஒரு பிரிவைச் சார்ந்தது. இது மிக நுணுக்கமான ஒரு பிரிவு. மிகவும் கடினமான பிரிவும் கூட. இது 'அறிவுத் தோற்றவியல்' எனப்படுகிறது. இது பற்றி பல தத்துவவாதிகள் பல கொள்கைகளை உருவாக்கியுள்ளனர். இந்தியாவில் பல தத்துவவாதிகள் இது பற்றி ஏராளமான எழுதி உள்ளனர். மேலை நாடுகளிலும் அவ்வாறே. 

நமது தத்துவவாதிகள் அறிவைப் பெறும் வழிகளாக மூன்றைக் கொள்கின்றனர். ஒன்று பிரத்தியட்சம் (நேரடி அனுபவ அறிவு). இதில் நமது ஐம்பொறிகள் வாயிலாகக் கிடைப்பதே அறிவு எனப்படுகிறது. இரண்டாவாவது அனுமானம் (ஊகம்) என்பது. ஒன்று இருப்பதைக் கொண்டு மற்றொன்று இருப்பதாக கூறுவது. மூன்றாவது ஆப்தவாக்கியம் (நம்பகமான சான்றோர் வாக்கு). இது நமக்கு முன் சென்றவர்கள் கூறியது ஆகும். இவற்றைக் காண்பது, கருதுவது உணர்வது என்றும் கூறுவர். இவ்வாறு நமது தத்துவவாதிகள் அறிவு பெறும் வழிகளை வகைப்படுத்துகின்றனர். 

இதேபோன்று நிலை மேலையத் தத்துவத்திலும் வேறுவிதமாக உள்ளது. அதில் பொருள்கள் மூலமாகக் கிடைப்பது மட்டும் தான் உண்மை என்று கூறும் தத்துவப் போக்கினை அனுபவ வாதம் என்று அழைக்கின்றனர். இது பற்றிய விரிவான ஆய்வுதான் லெனினது இந்த நூல். இந்த நூல் பற்றிக் காண்பதற்கு முன்னர் ஓர் அடிப்படையை மார்க்சியவாதிகள் நினைவில் கொள்ள வேண்டும். மார்க்சியம், தத்துவத்தை இரு பெரும் முகாம்களாக காண்கிறது. ஒன்று பொருள்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படையானது, எண்ணங்கள் அதிலிருந்து தோன்றுபவை என்ற பிரிவு. இது பொருள்முதல்வாதம் எனப்படும். இது சுபாவப் பொருள் முதல்வாதம் (Spontaneous), இயந்திரகதியிலான பொருள் முதல்வாதம் (Mechanical), இயங்கியியல் பொருள் முதல்வாதம் என்று பிரிந்துள்ளது.  

இரண்டாவது, எண்ணங்கள் தாம் அடிப்படை, பொருள் அதன் வழி நிலையானது என்பது கருத்து முதல் வாதம். இது அகவயக்க கருத்து முதல்வாதம் (Subjective), புறவயக்க கருத்து முதல் வாதம் (Objective) என்று பிரிந்துள்ளது. இதில் கடவுள் நம்பிக்கை, ஐயுறவு வாதம் (Scepticism), அறிவொண்ணாவாதம், ஆவி நம்பிக்கை, ஆன்மீக வாதம் போன்றவை எல்லாம் அடங்கும். இந்த இரு பிரிவுகளைப் பற்றித் தெளிவு இல்லாவிட்டால், அல்லது இவற்றை இணைக்கலாம் என்று முயற்சித்தால் அது பெரும் கருத்துக் குழப்பமாக முடியும். இது பற்றி லெனின் இந்த நூலில் பல இடங்களில் கூறுகிறார். எல்லா வற்றையும் இணைத்து ஒரு தத்துவத்தை முன்வைப்பதை அவர் பல் திரட்டுவாதம் (Eclecticism) என்று கூறுகிறார். அதனை கடுமையாக விமர்சிக்கிறார். 

இந்த நூலில் மையக் கருத்தைக் காண்பதற்கு முன்னர் லெனின் கூறும் அனுபவவாத விமர்சனம் தொடர்பாக சிலரைப் பற்றியும் காண வேண்டியுள்ளது. 

இந்த அனுபவவாத விமர்சகர்களுக்கு முன்னோடிகளாக இருந் தவர்கள் மூவர். ஒருவர் இம்மானுவேல் காண்ட்; மற்றொருவர் ஹியூம். இன்னுமொருவர் பெர்க்கிளி பாதிரியார். இவர்களது தாக்கம் அனுபவவாத விமர்சகர்கள் மீது உண்டு. எனவே இவர்கள் பற்றிச் சுருக்கமாகக் காண வேண்டியுள்ளது. 

இவர்களில் காண்டின் தத்துவம் கருத்து முதல்வாதத் தத்துவம் ஆகும். காண்ட் விஞ்ஞாணத்தில் பல சாதனைகள் புரிந்தார். ஆனால் இவரது தத்துவப்படி புறத்தே உள்ள பொருள் அதுவாக உள்ள பொருள் எனப்படும். ஆனால் நமக்குக் கிடைப்பதெல்லாம் அந்தப் பொருள் பற்றிய தொகுப்பு மட்டும் தான். இதனை அவர் "நமக்காக உள்ள பொருள்" என்று அழைக்கிறார். அதாவது புறத்தே உள்ள பொருளை நாம் அணுக முடியாது அல்லது புரிந்து கொள்ள முடியாது. 

காண்டைப் போலவே மற்றொரு பெரிய தத்துவவாதி பெர்க்கிளி பாதிரியார் ஆவார். இவர் ஓர் ஆங்கிலேயர். இவரது கருத்துப்படி மனிதன் எதனையும் நேரடியாக உணர முடியாது. அவனது கருத்துகளைத்தான் அவனால் உணர முடியும் (புலன் உணர்வு). அவன் உணர்ந்தபடி தான் பொருள்கள் உள்ளன. இந்தக் கருத்துகள் இயக்கமற்றவை; இதனை ஆன்மாவினால் மட்டும்தான் உணர முடியும். இந்தக் கருத்துகள் கடவுளின் மனதில் மறைவாக உள்ளன. ஆனால் இவை மனிதனது மனதில் உள்ளன. பொருள்கள் முரண்பாடுகள் உள்ளவை, இது அப்பட்டமான கருத்துமுதல்வாதம். 

 

அக்காலத்தில் பிரபலமாக இருந்த மற்றொரு கருத்துமுதல்வாதி டேவிட் ஹியூம் என்பவர். இவரும் ஓர் ஆங்கிலேயர், உளவியல் அறிஞர்; வரலாற்று ஆசிரியர். இவரைப் பொறுத்தமட்டிலும் அறிவிற்குப் பொருத்தமானது கணிதம். ஏனென்றால் அது பொதுமைகள் பற்றி சந்தேகங்கள் மூலம் பேசுகிறது. உதாரணமாக x என்பது எதையும் குறிக்கலாம்; குறிக்காமலும் இருக்கலாம். இதில் தர்க்கம் இல்லை. எல்லாமே அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டவை. யதார்த்தம் என்பது மனபதிவுகளின் வெளிப்பாடு ஆகும். இதற்கான காரணத்தை அறிய இயலாது. புறவயமான உலகம் இருக்கிறது, இல்லை என்பதற்குத் தீர்வு காண முடியாது. காரணகாரியத் தொடர்பு என்பது இல்லை. அதனை உள்ளுணர்வு வாழும் ஆய்வுகளின் மூலமும் நிறுவ முடியாது. நம்பிக்கை தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை. இவர் ஓர் ஐயுறவுவாதி. எல்லா வற்றையும் சந்தேகப்படுபவர். அது மட்டுமல்ல. இவர் ஓர் அறியவொண்ணாவாதியும்கூட. இந்தத் தத்துவம் புதிய பார்ட்சிவிதம் (நேர்க்காட்சி வாதம்) என்பதற்கு அடிகோலியது. நேர்க்காட்சி வாதம் என்பது ஒரு தத்துவக் கொள்கை. இதன்படி அறிவு இயற்கை நிகழ்வுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது ஆகும். புலன் அறிவு மூலம் பெறும் தகவல்களைப் பகுத்தறிவின் மூலம் விளக்கம் பெற்று அறிவாகிறது. இதன் தொடர்ச்சியாக உள்ளது புதிய நேர்க்காட்சி வாதம். அனுபவ ரீதியான உற்றுநோக்கல் மூலம் சரிபார்க்கப்பட்ட விவரங்களே அர்த்தமுள்ளவை ஆகும். இது அனுபவவாதத்துடன் நெருங்கிய தொடர்புடையது. விஞ்ஞான முறைகள், சூத்திரங்கள் ஆகியவை அதிகம் இதில் இடம் பெறு கின்றன. இது மிகை விஞ்ஞானக் கொள்கையாகும். 

இந்தத் தத்துவப் போக்குகள் அனுபவவாத விமர்சனத்தில் காணப்படுகின்றன. இந்தப் போக்கினைப் பின்பற்றி அனுபவவாத விமர்சனம் உருவாகியது. இதில் முக்கியமானவர்கள் ரிச்சர்ட் அவெனரியஸ், எர்ன்ஸ்ட் மாக், போக்தானோவ் ஆகியோர். இவர்களில் அவெனரியஸ் ஜெர்மானியத் தத்துவவாதி (1843 - 1896). இவரது கருத்துப்படி விஞ்ஞான ரீதியான தத்துவம் என்பது பொருள் முதல் வாதம், கருத்துமுதல்வாதம் என்பவற்றைச் சாராமல் இருக்க வேண்டும் என்பதாகும். இவர் அனுபவவாத விமர்சனம் என்ற கொள்கையை உருவாக்கியவர். இதன்படி சுத்த அனுபவத்தின் மூலம் உலகம் பற்றிய ஓர் இயல்பான கருத்தை உருவாக்க வேண்டும் என்று இவர் கூறினார். இதனைப் பெற வேண்டும் என்றால் அனுபவத்தின் மூலம் பெறும் தகவல்களை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் கருத்துமுதல்வாதமும், பொருள் முதல்வாதமும் என்ற குறுக்கீடு இருக்கக் கூடாது. ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளே இருக்கும் அனுமானங்களின் மாறுபட்ட வடிவமே அறிதலின் உண்டாக்கம் ஆகும். விஞ்ஞான அறிவு என்பது அதற்கு முன்பு இருந்த அறிவின் விரிவாக்கமே தவிர வேறு எதுவும் இல்லை. அறிதல் பற்றி ஓர் உயிரியல் அணுகுமுறையை இவர் கையாண்டார். அறிவை உயிரியல் செயல்முறையுடன் தொடர்புபடுத்திக் காண வேண்டும் என்று இவர் கூறினார். மனிதனது நரம்பு மண்டலத்தில் (மத்தியபதம்) மனிதனுடன் சுற்றுச்சூழல் தொடர்புகொள்கிறது என்று இவர் கூறினார். எந்தவிதமான இடையூறு அல்லது குறுக்கீடும் இல்லாத சுத்த அனுபவத்தினையே அறிவின் அடித்தளமாகக் கொள்ள வேண்டும். இதனைச் சிந்தனைச் சிக்கனம் என்று இவர் அழைத்தார். 

இவருக்கு அடுத்துபடியாக உள்ளவர் எர்ன்ஸ்ட் மாக் என்பவர் (1783 - 1816). இவர் ஆஸ்திரிய நாட்டைவர். இவர் ஓர் இயற்பியலாளர். தத்துவவாதியும்கூட. இவர் நியூட்டனின் கொள்கையை விமர்சனம் செய்தவர். ஐன்ஸ்டீனின் ஒப்பியல் கொள்கைக்கு முன்னோடியாக இருந்தவர். இவரது கொள்கைகள் புத்தமதத் தத்துவத்திற்குச் சமமாக இருந்தபடியால், இவர் "விஞ்ஞானத்தின் புத்தர்" என்று அழைக்கப்பட்டார். விஞ்ஞானம், தத்துவம் ஆகியவை வற்றைக் கலந்து ஒரு கொள்கையை உருவாக்கினார். இது நிகழ்வியல் சார்ந்தது. இது யதார்த்தத்திற்கு எதிரானது. உணர்வுகள் மட்டும் தான் உண்மை என்று கூறுவது. அணுக்கள், மூலக்கூறுகள் புறமயமானவை. மனது அதனைச் சாராதது என்பதுடன் முரண்படுவது இக்கொள்கை. அது மட்டுமல்ல விஞ்ஞான விவரங்கள் யாவும் நாம் உருவாக்கியவை. எனவே இவை முன்பூட்டியே தீர்மானிக்கப்பட்டவை. அவை இருக்க முடியாது. எனவே விஞ்ஞான விவரங்களுக்கான அடிப்படை அனுபவம் மட்டும் தான். இந்தக் கண்ணோட்டம் உள்ள மாக் பொருள் முதல்வாதத்தை மறுத்தார். அணுக்களே இல்லை என்று கூறும் அளவுக்குச் சென்றார். பொருள், மனது என்று இருமையை அவர் மறுத்தார். புலன் உணர்வுதான் முக்கியம் என்று அவர் கூறினார். இவர் ஹியூமின் தத்துவத்தைப் பின்பற்றியினார். எனவே காரணகாரியத் தொடர்பு இல்லை என்று வாதிட்டார். இவர் ஓர் அகவயக் கருத்து முதவாதி ஆவார். இந்தப் போக்கினை விஞ்ஞானத்துடன் இணைத்தார். இவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர் ரஷ்யரான போக்தானோவ் என்பவர். 

போக்தானோவ் என்பவர் ஒரு ரஷ்யர். இவரது இயற்பெயர் அலெக்சாண்டர் அலெக்சாண்டரோவிச் என்பது (1873 - 1928). இவர் ஒரு தத்துவவாதி, பொருளாதாரா அறிஞர், சமூக-ஜனநாயகவாதி. இவர் ஒரு மருத்துவர். இவர் எர்ன்ஸ்ட் மாக்கின் கொள்கையை ஆதரித்தார். ஆனால் மாக்கிடம் இருந்து வேறுபட்டார். இதன் மூலம் அனுபவ ஒருமைவாதியாக மாறினார். இதன் மூலம் எல்லா விஞ்ஞானங்களையும் ஒன்றாக இணைக்கும் "டெக்னாலஜி" என்ற சொல்லைப் பயன்படுத்தினார். இவர் மார்க்சிய இயங்கியலை மறுத்தார். இதற்கு மாறாக சமநிலைக் கொள்கை (Equilibrum) என்ற ஒன்றை முன்வைத்தார். இவர் அனுபவங்களை மூலங்கள் என்று அழைத்தார். இத்தகைய பல்திரட்டுப் போக்கினை லெனின் மற்றும் பிளெக்கானோவ் ஆகியோர் விமர்சனம் செய்தனர். "புரோலிகல்ட் இயக்கம்" என்ற ஒன்றை போக்தானோவ் ஆரம்பித்தார். இதன்படி முதலாளித்துவ கலாச்சாரம் முழுவதையும் அழிக்க வேண்டும் என்று கூறினார். இதனை லெனின் எதிர்த்தார். ஏனென்றால், அத்தகைய நிலைப்பாடு 'இன்மை வாதத்திற்கு' இட்டுச் செல்லும் என்று லெனின் கூறினார். இதுதான் 1904லிருந்து 1910 வரையில் ரஷியாவில் நிலவிய கருத்தியல் சூழல். இதில் மதவாதிகளின் செயல்களும் அடங்கும். 

விளக்கம் 

லெனின் எழுதிய "பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்" நூலின் அறிமுக உரையில் குறிப்பிடப்பட்டுள்ள, பொருள்முதல்வாதத்திற்கு எதிரான தத்துவங்களை எளிய வாழ்க்கைக் உதாரணங்களுடன் கீழே காண்போம்: 

1. கருத்துமுதல்வாதம் (Idealism) 

  • எளிய விளக்கம்: நம் மனமும் எண்ணங்களும் தான் முதன்மையானவை; நாம் பார்க்கும் உலகம் அதன் பிறகுதான் வருகிறது என்ற கொள்கை. 

  • உதாரணம்: "நாம் ஒரு பூவைப் பார்க்கிறோம் என்பதால் தான் அது இருக்கிறது; நாம் கண்ணை மூடிக் கொண்டால் அல்லது நாம் இல்லையென்றால் அந்தப் பூவுக்கு என்று தனியாக இயக்கம் இல்லை" என்று நினைப்பது. 

2. அகவயக் கருத்துமுதல்வாதம் (Subjective Idealism) 

  • எளிய விளக்கம்: "என்னுடைய தனிப்பட்ட புலன் உணர்வுகளும் (பார்வை, தொடுதல் போன்றவை) என் மனமும் மட்டுமே உண்மை. வெளியே உலகம் என்று ஒன்று தனியாக இல்லை." 

  • உதாரணம்: நீங்கள் ஒரு கனவு காண்கிறீர்கள். கனவில் வரும் அனைத்தும் உங்கள் மனதிற்குள் மட்டுமே உண்மை. அதே போல விழித்திருக்கும் போதும் நடப்பவை அனைத்தும் உங்கள் மனதின் பிம்பங்களே தவிர, வெளியே நிஜமாக எதுவும் இல்லை என்று கூறுவது. 

3. புறவயக் கருத்துமுதல்வாதம் (Objective Idealism) 

  • எளிய விளக்கம்: மனித மனம் மட்டுமல்ல, மனிதனுக்கு வெளியே "ஒரு பொதுவான மாபெரும் சக்தி அல்லது பிரபஞ்ச மனம் (கடவுள்/ஆன்மா)" இருக்கிறது. அது நினைப்பதால் தான் இந்த உலகமும் பொருட்களும் இயங்குகின்றன. 

  • உதாரணம்: ஒரு சிற்பி மனதிற்குள் உருவம் அமைத்த பிறகே கல்லைச் செதுக்கிச் சிலையாக்குகிறான். அதே போல், ஒரு கடவுள் அல்லது உலகளாவிய சக்தி முதலில் மனதால் நினைத்த பிறகுதான் இந்த உலகத்தைப் படைத்தது என்று நம்புவது. 

4. ஐயுறவுவாதம் (Scepticism) 

  • எளிய விளக்கம்: "எதையுமே நாம் உறுதியாக 'இதுதான் உண்மை' என்று சொல்ல முடியாது. எல்லாவற்றையும் சந்தேகிக்க வேண்டும்." 

  • உதாரணம்: தூரத்தில் ஒரு விலங்கு நிற்கிறது. "அது மாடா, குதிரையா அல்லது என் கண் பார்வைக்கு அப்படித் தெரிகிறதா? எதுவுமே உறுதியில்லை, எனவே எதையுமே உண்மை என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது" என்று வாதிடுவது. 

5. அறிவொண்ணாவாதம் (Agnosticism) 

  • எளிய விளக்கம்: "நமக்கு வெளியே ஒரு உலகம் இருக்கலாம். ஆனால் அதை மனித அறிவால் முழுமையாகவோ அல்லது சரியாகவோ ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது." 

  • உதாரணம்: காண்ட் (Kant) கூறிய "நமக்காக உள்ள பொருள்" மற்றும் "அதற்காக உள்ள பொருள்": 

  • ஒரு ஆப்பிள் பழத்தின் சிவப்பு நிறம், இனிப்புச் சுவை மட்டுமே நமக்குத் தெரியும் (நமக்காக உள்ள பொருள்). 

  • ஆனால் அந்த ஆப்பிளின் உண்மையான உட்கட்டமைப்பு அல்லது சாராம்சம் என்னவென்று மனித அறிவுக்கு எட்டவே எட்டாது (அதற்காக உள்ள பொருள்) என எல்லை வகுப்பது. 

6. அனுபவவாதம் & சுத்த அனுபவவாதம் (Empiricism & Pure Empiricism) 

  • எளிய விளக்கம்: "நம் ஐம்புலன்கள் (கண், காது, மூக்கு, நாக்கு, மெய்) மூலம் நேரடியாக உணர்வது மட்டுமே அறிவு. அதைத் தாண்டி பொருட்களுக்கு என்று சுயமான இருப்பு இல்லை." 

  • உதாரணம்: தீயில் கையை வைத்தால் சுடுகிறது. "சுடுதல்" என்ற அந்த உணர்வு மட்டும்தான் உண்மை. சுடுவதற்கு காரணமான தீ என்ற பொருள் சுயமாய் இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி நமக்குக் கவலையில்லை; உணர்வே எல்லாம் என்று கூறுவது. 

7. பல் திரட்டுவாதம் (Eclecticism) 

  • எளிய விளக்கம்: ஒன்றோடொன்று பொருந்தாத, முரண்பாடான பல தத்துவக் கருத்துக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ஒன்றாகக் கலந்து "புதுத் தத்துவம்" என்று சொல்வது. 

  • உதாரணம்: அறிவியல்படி உலகம் அணுக்களால் ஆனது என்றும் ஏற்றுக்கொண்டு, அதே நேரத்தில் கடவுள் தான் உலகைப் படைத்தார் என்பதையும் சேர்த்து குழப்பமான ஒரு கொள்கையை உருவாக்குவது. (லெனின் இதை மிகக் கடுமையாக விமர்சிக்கிறார்). 

8. நேர்க்காட்சி வாதம் & புதிய நேர்க்காட்சி வாதம் (Positivism & Neopositivism) 

  • எளிய விளக்கம்: அறிவியல் சோதனைகள் மற்றும் கணிதச் சூத்திரங்கள் மூலம் நேரடியாகச் சரிபார்க்க முடிந்த விஷயங்கள் மட்டுமே அர்த்தமுள்ளவை. தத்துவம் அல்லது பிரபஞ்சத்தின் ஆழமான உண்மைகளைப் பற்றிப் பேசுவதே வீண் வேலை எனக் கூறுவது. 

  • உதாரணம்: "வெப்பநிலையை அளக்க முடிகிறதா? அது உண்மை. ஆனால் வெப்பத்தின் பின்னணியில் உள்ள 'பொருள் என்றால் என்ன?' என்ற தத்துவார்த்தக் கேள்விக்கு அவசியமே இல்லை" என்று அறிவியல் சூத்திரங்களுக்குள் மட்டும் சுருங்குவது. 

9. இன்மை வாதம் (Nihilism) 

  • எளிய விளக்கம்: பழமையோ, வரலாறோ, கலாச்சாரமோ எதுவாக இருந்தாலும் கடந்த காலத்தின் அனைத்தையும் முற்றிலும் நிராகரித்து, "எதுவுமே தேவையில்லை, அழிக்கப்பட வேண்டும்" என்ற தீவிர நிலைப்பாடு. 

  • உதாரணம்: போக்தானோவ் "புரோலிகல்ட்" இயக்கத்தின் மூலம் முதலாளித்துவக் காலத்தில் உருவான அறிவியல், கலை, கலாச்சாரம் அனைத்தையும் தூக்கி எறிய வேண்டும் என்றார். லெனின் இதை எதிர்த்து: "கடந்த கால முதலாளித்துவ சமுதாயம் உருவாக்கிய நல்ல அறிவியலையும் கலையையும் கற்றுக்கொண்டு தான் நாம் சோசலிசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்" என்றார். 

சுருக்கமான ஒப்பீடு 

  • பொருள்முதல்வாதம் (Materialism): உலகம் உண்மையானது; மனிதன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பொருட்கள் இயங்கும். மனமும் சிந்தனையும் மூளையின் (பொருளின்) செயல்பாடே. 

  • மேற்கண்ட பிற வாதங்கள்: மனிதனின் மனதிற்கும், உணர்வுகளுக்கும் மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து, வெளி உலகத்தின் உண்மையான இருப்பைக் கேள்விக்குள்ளாக்குகின்றன அல்லது மறுக்கின்றன. 

பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் என்ற நூலை லெனின் எழுதவேண்டிய அவசியம் என்ன? லெனின் "பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்" (Materialism and Empirio-criticism) என்ற இந்த புகழ்பெற்ற நூலை 1908-ஆம் ஆண்டில் எழுதி, 1909-இல் வெளியிட்டார். 

அவர் இந்நூலை எழுதியதற்கான வரலாற்றுப் பின்னணியையும் அவசியத்தையும் பின்வரும் முக்கியக் காரணங்கள் மூலம் புரிந்துகொள்ளலாம்: 

1. 1905 ரஷ்யப் புரட்சியின் தோல்வியும் சமூகச் சோர்வும் 

1905-இல் ரஷ்யாவில் நடைபெற்ற முதலாவது பாட்டளி வர்க்கப் புரட்சி தோல்வியடைந்தது. ஜார் மன்னனின் அடக்குமுறை தீவிரமானது. புரட்சி தோல்வியடைந்ததால், புரட்சியாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் மத்தியில் பெரும் சோர்வும், நம்பிக்கை இன்மையும், குழப்பமும் ஏற்பட்டது. இதனால் அரசியல் ரீதியாகவும் தத்துவ ரீதியாகவும் பல பின்வாங்கல்கள் நிகழ்ந்தன. 

2. மார்க்சியத்திற்குள் நுழைந்த "மாற்றுத் தத்துவக் குழப்பங்கள்" 

இந்தச் சோர்வைப் பயன்படுத்தி, போல்ஷெவிக் கட்சிக்குள்ளேயே இருந்த அலெக்சாண்டர் போக்தானோவ் (Alexander Bogdanov), லூனாசார்ஸ்கி (Lunacharsky) போன்ற முன்னணி தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் மார்க்சிய தத்துவத்தைக் கைவிடத் தொடங்கினர். 

  • அவர்கள் ஆஸ்திரிய இயற்பியலாளரான எர்ன்ஸ்ட் மாக் (Ernst Mach) மற்றும் ஜெர்மன் தத்துவவாதியான ரிச்சர்ட் அவெனரியஸ் (Richard Avenarius) ஆகியோரின் "அனுபவவாத விமர்சனம்" (Empirio-criticism) என்ற தத்துவத்தை மார்க்சியத்துடன் இணைக்க முயன்றனர். 

  • "இயங்கியல் பொருள்முதல்வாதம் பழையதாகிவிட்டது, அறிவியலுக்கு ஏற்ப அதை மாற்றி அமைத்து 'சுத்த அனுபவத்தை' அடிப்படையாகக் கொள்ள வேண்டும்" என்று வாதிட்டனர். 

3. ஆன்மீகமும் மதவாதமும் தத்துவத்திற்குள் புகுத்தப்படுதல் 

மாக் மற்றும் அவெனரியஸின் தத்துவம் வெளிப்படையாக அறிவியல்பூர்வமாகத் தோன்றினாலும், அடிப்படையில் அது அகவயக் கருத்துமுதல்வாதம் (Subjective Idealism) ஆகும். 

  • போக்தானோவ் போன்றோர் மார்க்சியத்தை இத்தகைய கருத்துமுதல்வாதத்துடன் கலந்ததால் (பல் திரட்டுவாதம் - Eclecticism), பாட்டாளிகளிடையே கடவுள் நம்பிக்கை மற்றும் ஆவி நம்பிக்கையை நியாயப்படுத்தும் "கடவுளை உருவாக்குபவர்கள்" (God-builders) என்ற போக்கு உருவானது. 

  • தத்துவ ரீதியாக மார்க்சியம் சிதைக்கப்பட்டால், அது புரட்சிகரப் போராட்டத்தையே அழித்துவிடும் என்று லெனின் அஞ்சினார். 

4. இயற்பியலின் "புதிய கண்டுபிடிப்புகள்" தந்த குழப்பம் 

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயற்பியலில் எலக்ட்ரான், கதிரியக்கம் (Radioactivity) போன்றவை கண்டுபிடிக்கப்பட்ட போது: 

  • "அணு பிளவுபட்டுவிட்டது, எனவே 'பொருள்' என்பதே இல்லாமல் அழிந்துவிட்டது! எல்லாமே மனிதனின் ஆற்றலும் உணர்வுகளும் தான்!" என்று சில விஞ்ஞானிகள் கூறத் தொடங்கினர். 

  • இந்த அறிவியல் குழப்பத்தைப் பயன்படுத்தி, பொருள்முதல்வாதத்தை மறுத்த தத்துவவாதிகளுக்கு லெனின் பதிலடி கொடுக்க வேண்டியிருந்தது. "அணு பிளவுபட்டதால் பொருள் அழியவில்லை; பொருளைப் பற்றிய நமது பழைய வரம்புக்குட்பட்ட புரிதல்தான் மாறியிருக்கிறது" என்று லெனின் விளக்கினார். 

சுருக்கம் 

லெனின் இந்நூலை எழுதியதன் முதன்மை நோக்கம்: 

  1. மார்க்சியத்தின் அடித்தளமான 'இயங்கியல் பொருள்முதல்வாதத்தைப்' பாதுகாப்பது. 

  1. அறிவியல் மற்றும் "புதிய தத்துவம்" என்ற பெயரில் மார்க்சியத்திற்குள் புகுத்தப்பட்ட கருத்துமுதல்வாதத்தையும் மதக் கருத்துக்களையும் அம்பலப்படுத்துவது. 

  1. தத்துவக் தெளிவு இல்லாமல் ஒரு புரட்சிகர அரசியல் கட்சியால் பாட்டாளி வர்க்கத்தை சரியான பாதையில் வழிநடத்த முடியாது என்பதை நிறுவுவது. 

எனவே, இது வெறும் தத்துவப் விவாதம் மட்டுமல்ல; ரஷ்யப் புரட்சி இயக்கத்தைக் கருத்தியல் ரீதியாகக் காப்பாற்றுவதற்காக லெனின் நடத்திய தீவிரமான தத்துவப் போர் ஆகும். தற்போது இந்த நூலை நாம் படிக்க வேண்டிய அவசியம் என்ன? தற்போது த்த்துவார்த்த தளத்தில் திறந்தநிலை மார்க்சியம் என்றும் இன்னும் பலவாறும் மார்க்சியத் தத்துவத்தின் மீது பல்வேறுவிதமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு புரட்சிகரமான மக்களிடம் குழப்பங்களை ஏற்படுத்தி வருவதால் லெனின் கூறியபடி நம்மிடம் தத்துவ தெளிவின்மையை ஏற்படுத்தி ஒரு புரட்சிகரமான கட்சியை இங்கு உருவாக்கி வழிநடத்தவிடாமல் இழிபிறவிகள் தடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அத்தகைய இழிபிறவிகளை எதிர்த்துப் போராடுவதற்காக நாம் இந்த நூலை படிக்க வேண்டும் என்று இலக்கு இதழ் கருதுகிறது. 

லெனின் எழுதிய "பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்" நூல் 1909-இல் வெளியான பிறகு, ரஷ்யப் புரட்சி இயக்கம் மற்றும் சர்வதேச மார்க்சியச் சிந்தனையில் மிக முக்கியமான வரலாற்று மாற்றங்களும் விளைவுகளும் ஏற்பட்டன. 

1. போல்ஷெவிக் கட்சிக்குள் கருத்தியல் தெளிவு 

  • கருத்துமுதல்வாதக் குழுவின் தனிமைப்படுத்தல்: போல்ஷெவிக் கட்சிக்குள் மார்க்சியத்தைத் திருத்தி எழுத முயன்ற அலெக்சாண்டர் போக்தானோவ் மற்றும் அவரது ஆதரவாளர்களின் "மச்சியம்" (Machism) அல்லது அனுபவவாதப் போக்கு தத்துவ ரீதியாக முழுமையாக முறியடிக்கப்பட்டது. 

  • அரசியல் பிளவு (1909): அதே ஆண்டில் நடைபெற்ற போல்ஷெவிக் தலைவர்களின் கூட்டத்தில், போக்தானோவ் போல்ஷெவிக் பிரிவிலிருந்தே வெளியேற்றப்பட்டார். இதன் மூலம் கட்சிக்குள் நிலவிய தத்துவக் குழப்பங்கள் முடிவுக்கு வந்து, கருத்து ரீதியான ஒற்றுமை ஏற்பட்டது. 

2. "கடவுள் உருவாக்கம்" (God-Building) போக்கு முறியடிக்கப்படல் 

  • புரட்சியின் தோல்வியால் ஏற்பட்ட ஏமாற்றத்தைப் போக்க, பாட்டாளிகளுக்குப் புதிய "மதச்சார்பற்ற கடவுள் / ஆன்மீக நம்பிக்கை" தேவை என்ற லூனாசார்ஸ்கி மற்றும் கோர்க்கி (Maxim Gorky) போன்றோரின் தவறான முயற்சியை லெனின் இந்நூல் மூலம் தடுத்து நிறுத்தினார். 

  • மேக்சிம் கோர்க்கி தனது தத்துவக் கோளாறுகளை உணர்ந்து மீண்டும் லெனினுடன் இணைந்து புரட்சிப் பாதையில் தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கினார். 

3. 1917 அக்டோபர் புரட்சிக்கு அமைந்த கருத்தியல் அடித்தளம் 

  • லெனினுடைய புகழ்பெற்ற கூற்றான "புரட்சிகரக் கோட்பாடு இல்லாமல் புரட்சிகர இயக்கம் இருக்க முடியாது" என்பதற்கு இந்நூல் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தது. 

  • தத்துவ ரீதியாக தெளிவுபெற்ற போல்ஷெவிக் கட்சியால் மட்டுமே 1917-இல் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் சரியான பாதையில் வழிநடத்தி, உலக வரலாற்றை மாற்றிய ரஷ்ய அக்டோபர் சோசலிசப் புரட்சியை வெற்றிகரமாக நடத்த முடிந்தது. 

4. புதிய இயற்பியல் மற்றும் அறிவியலுக்கான வழிகாட்டுதல் 

  • பொருளின் வரையறை: அணுவின் கண்டுபிடிப்புக்குப் பின் "பொருள் அழிந்துவிட்டது" என்ற விஞ்ஞானிகளின் தப்பான முடிவை லெனின் திருத்தினார். "மனித மனதைத் தாண்டி சுயமாய் இருக்கும் யதார்த்தமே பொருள்" என்ற லெனினிய வரையறை, 20-ஆம் நூற்றாண்டின் குவாண்டம் இயற்பியல் மற்றும் சார்பியல் தத்துவ வளர்ச்சிக்கு மார்க்சிய வழிகாட்டலாக அமைந்தது. 

  • சோவியத் ஒன்றியத்தின் அறிவியல் ஆராய்ச்சி அமைப்புகளுக்கு இந்நூலின் பொருள்முதல்வாத அணுகுமுறையே அடிப்படையாக மாறியது. 

5. சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் பெற்ற தாக்கம் 

  • இந்நூல் உலகெங்கிலும் உள்ள மார்க்சியவாதிகளுக்கு தத்துவப் போராட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கான "பாடநூலாக" மாறியது. 

  • மார்க்சியத்தை முதலாளித்துவ அறிவுஜீவிகள் மற்றும் திருத்தல்வாதிகள் சிதைக்க முயலும் போதெல்லாம், அதற்கெதிராகப் போராட இந்நூல் அனைத்து நாட்டு கம்யூனிஸ்டுகளுக்கும் ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாக இன்றும் திகழ்கிறது. 

லெனின் எழுதிய இந்நூல், அச்சிடப்பட்ட வெறும் புத்தகமாக இல்லாமல், ரஷ்யப் புரட்சியின் பாதையிலிருந்த தத்துவக் முட்களை அகற்றி, சோசலிசத்தை நடைமுறைப்படுத்திய வரலாற்று சிறப்புமிக்க கருத்தியல் திருப்புமுனையாக அமைந்தது.  

தற்காலத்தில் கம்யூனிஸ்டுகள் இந்த நூலைப் படித்து தத்துவார்த்த தெளிவு பெற்று கட்சிக்குள் சித்தாந்தப் போராட்டம் நடத்துவதன் மூலமே ஒரு புரட்சிகரமான கட்சியை கட்டவும் புரட்சியையும் நடத்த முடியும் என்பதால் எளிமையான முறையில் சித்தாந்த தெளிவை ஏற்படுத்துவதற்காக இலக்கு இதழ் இதனை தொடர் கட்டுரையாகக் கொண்டுவருகிறது. 

தேன்மொழி


தொடர்புடைய கட்டுரைகள்:



***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

இலக்கு இதழின் கட்டுரைகள்

கே.ஆர் (மருதமுத்து கே. ராதாகிருஷ்ணன்)-யார்?

காரைக்கால், 31/8/26 நண்பர்களே, எனது வாழ்வில் அனைத்திலும் மேலான முக்கியத்துவம் வாய்ந்த தருணம் இது. 1970 களின் இறுதியிலும், 1980களின் தொடக்கத்...

செய்தியை சார்ந்த அலசல்