ஒரு அரசியல் கருத்துக் கண்ணோட்டம் என்ற முறையில் டிராட்ஸ்கிய வாதம் தோல்வியுற்றதற்கும், லெனினியம் பாதுகாக்கப்பட்டு நிலை நிறுத்தப்பட்ட தற்கும் தோழர் ஸ்டாலின் எழுதிய "லெனினிசத்தின் அடிப்படைகள்" என்ற நூல் பேருதவி செய்தது.
இது 1924 ல் வெளியிடப்பட்டது. லெனினியத்திற்கு மிகவும் திறமையான முறையில் விரிவுரை செய்து லெனினியத்திற்கு ஆதரவாக வலுவான ஆதாரங்களை இந்த நூல் திரட்டிக்கொடுத்தது.
உலகெங்கும் போல்ஷ்விக்குகள் கையில் சக்தி மிகுந்த மார்க்சிய லெனினிய ஆயுதமாக இருந்தது, இன்றைக்கும் இருக்கிறது. இந்த நூல் 1977ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தமிழில் சென்னை புக் ஹவுஸ் (பி) லின் வெளியீட்டாளரால் வெளியிடப்பட்டது.
லெனினியத்தின் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் தற்காலத்தில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வரும் சூழலில் இந்த நூலில் ஸ்டாலினால் கூறப்பட்டவை வரும்கால இளைய சமூகத்தினருக்கு லெனினை மீண்டும் அறிமுகம் செய்து வைக்கும் முயற்சியாக இந்த கட்டுரைகளை தொடர் கட்டுரையாக இலக்கு கொண்டுவருகிறது. இன்றைய இளைஞர்கள் ஒவ்வொரு வரும் ஸ்டாலினையும் லெனினையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
இந்த மாபெரும் தலைவர்களையும் அவர்களது கொள்கைகளையும் நாம் புரிந்து கொள்வதன் மூலமே தற்காலத்தில் நம்மை ஏய்த்து அரசியல் நடத்தும் பிற்போக்கு அரசியல்வாதிகளை இனம் கண்டு அவர்களைப் புறக்கணித்து நாம் லெனினிய வழியில் உழைக்கும் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் வெற்றிகரமாக நாம் பயணிக்க முடியும்.
தோழர் ஸ்டாலின் எழுதிய சிறப்புப் பெற்ற நூல்களில் லெனினிசத்தின் அடிப்படை அம்சங்கள் என்ற நூலும் ஒன்றாகும். 1924 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் சுவர்தலோவ் பல்கலைகழகத்தில் ஆற்றிய சொற்பொழிவு, பின்னர் ஏப்ரல் மே மாதங்களில் பிராவ்தாவில் வெளியிடப்பட்டது. லெனினிசத்தைப் பற்றி ஸ்டாலின் நிகழ்த்திய சொற்பொழிவுகளும் எழுத்தோவியங்களும் லெனினிசத்தின் பிரச்சனைகள் என்ற நூல் வடிவில் வெளியிடப்பட்டது.
லெனினிசத்தின் பிரச்சனைகள் என்ற நூலின் எல்லாப் பதிப்புகளிலும் லெனினிசத்தின் அடிப்படை அம்சங்கள் என்ற இச்சொற்பொழிவும் இணைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு 1947 ல் மாஸ்கோ பதிப்பாக வெளிவந்த, லெனினிசத்தின் பிரச்சனைகள் என்ற நூலின் முதல்பதிப்பிலிருந்தே இந்த கட்டுரைகள் உருவாக்கப்பட்டு தொடராக வெளிவருகிறது.
சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு கூறுவது போல,"சித்தாந்தரீதியில் டிராட்ஸ்கிய வாதத்தை தோற்கடித்து லெனினியத்தை பாதுகாப்பதில் தோழர் ஸ்டாலின் வரைந்த லெனினிசத்தின் அடிப்படை அம்சங்கள் என்ற நூல் பெரும்பணியாற்றியது.அபாரமான திறமையுடன் லெனினியத்தை விளக்கி உரை செய்கிறது இந்த நூல். லெனினிசத்தை தத்துவத் துறையில் பலமாக உறுதிப்படுத்துவதாக இந்த நூல் விளங்குகிறது" "பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் விடுதலைக்காகப் போராடிவரும் மார்க்சிய-லெனினியவாதிகளுக்கும், வர்க்கப் போராட்டங்களில் உறுதியாகப் போராடிவரும் தொழிலாளிவர்க்க உணர்வு கொண்ட தோழர்களுக்கும் இந்தக் கட்டுரைகள் பெரிதும் பயனளிக்கும் என்று பார்வை நிலையிலிருந்து லெனினது உண்மையான மாணவரான தோழர் ஸ்டாலினது எழுத்துக்களை இலக்கு தொடராக கொண்டுவருகிறது".
சுவர்தலோவ் பல்கலை கழகத்தில் ஆற்றிய உரைகள்.
லெனினிசத்தின் அடிப்படையான அம்சங்களைப் பற்றிய விஷயங்கள் மிகப் பெரியது. அது முழுவதையும் விளக்க ஒரு முழு நூல் தேவைப்படும். உண்மையில் , பல நூல்கள் தேவைப்படும். எனவே இயல்பாக, லெனினியத்தை முழுமையாக வெளிக்கொணர்வதாக எனது உரை இருக்காது. இந்த சொற்பொழிவுகள் மூலம் எதையாவது சிறப்பாகச் சாதிக்க முடியும் என்றால், அது லெனினியத்தின் அடிப்படை அம்சங்களை சுருக்கமாகப் பொழிப்புரை செய்வது தவிர வேறொன்றுமில்லை. இருந்தபோதிலும் இந்தப் பொழிப்புரை பயன்தரும் என்றே நான் கருதுகிறேன். லெனினியத்தை வெற்றிகரமாகப் பயிலுவதற்குத் தேவைப்படுகிற முறையில் எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதைச் சுட்டிக்காட்டும் குறிப்புகளை நிர்ணயிப்பதற்கு இந்தப் பொழிப்புரை பயன்படும்.
லெனினியத்தின் அடிப்படை அம்சங்களை விரிவுரை செய்வது என்றால், லெனினுடைய உலக கண்ணோட்டத்திற்கு ஆதாரமாக இருந்த தத்துவத்தை விளக்குவது என்று அர்த்தமாகாது.
ஏனெனில், லெனினுடைய உலக கண்ணோட்டமும் லெனினியத்தின் அடிப்படைகளும் ஒரே எல்லைக்குள் இருப்பவை அல்ல. லெனின் ஒரு மார்க்சியர் எனவே அவரது உலக கண்ணோட்டத்திற்கு ஆதாரம் மார்க்சியம் ஆகும். அதனால் லெனினியத்தை விளக்குவதற்காக மார்க்சியத்தை விளக்குவதிலிருந்து ஆரம்பித்து வைக்க வேண்டும் என்று ஆகிவிடாது.
லெனினியத்தை விளக்குவது என்றால் மார்க்சியம் என்ற பொதுவான தத்துவ கருவூலத்திற்கு லெனினால் அளிக்கப்பட்ட புதிய, விசேஷமான தத்துவ செல்வத்தை விளக்குவது என்றாகும்.
லெனின் பெயரைத் தாங்கி நின்று விளங்கும் புதிய விசேஷமான அம்சங்களை விளக்குவது என்றாகும். இந்த பொருளில் மட்டுமே, என் உரைகளில் நான் லெனினியத்தின் அடிப்படையான அம்சங்களைப் பற்றி பேசப் போகிறேன். (ஸ்டாலின்)
ஆக, லெனினியம் என்றால் என்ன?
சிலர் சொல்கிறார்கள்: ரஷ்யாவில் நிலவிய குறிப்பிட்ட நிலைமைகளை யொட்டி நடைமுறைப்படுத்தப்பட்ட மார்க்சியமே லெனினியம் என்று குறிப்பிடுகிறார்கள். இந்த நிர்ணயிப்பில் பகுதியளவு உண்மை இருக்கிறது. எனினும் இது முழு உண்மையையும் சொல்லிவிடவில்லை. ரஷ்ய நிலைமைகளுக்குத் தகுந்தவாறு மார்க்சியத்தை லெனின்பயன்படுத்தினார் என்பது உண்மையே: அதுவும் மிகமிகச் சிறப்பாகப் பயன்படுத்தினார்.
ஆனால் ரஷ்ய நிலைமைகளில் கடைபிடிக்கப்பட்ட மார்க்சியமாக மட்டும் லெனினியம் இருந்திருந்தால், அது வெறும் தேசிய அம்சம் மட்டும் பொருந்தியதாக இருக்க வேண்டும்; ரஷ்ய தத்துவமாக மட்டும் இருக்க வேண்டும்; ஆனால் அது அப்படியில்லை என்பது நமக்குத் தெரியும். அது வெறும் ரஷ்யத் தத்துவம் மட்டுமல்ல. அது சர்வதேசங்களிலும் நிலவக்கூடிய நிலைமைகளுக்கு பொருந்துவதாக இருக்கிறது. அது சர்வதேசிய வளர்ச்சி முழுமையிலும் வேரூன்றியதாகும் என்பதை நாம் அறிவோம். அதனால்தான் அதை மேற்கண்டவாறு நிர்ணயிப்பு செய்வது பகுதிப் பார்வை என்று நான் கருதுகிறேன். (ஸ்டாலின்).
“லெனினிச கோட்பாடுகள் ரஷ்யப் புரட்சிக்காக உருவாக்கப்பட்ட கோட்பாடுகளாக சொல்வது தவறாகும் என்று இங்கே ஸ்டாலின் குறிப்பிடுகிறார். இடதுசாரிக் கம்யூனிசம் இளம்பருவக் கோளாறு என்ற நூலில் லெனின் ரஷ்யப் புரட்சியைப் பற்றிக் குறிப்பிடும்போது, ரஷ்யப் புரட்சியின் அனுபவமானது உலகம் முழுவதிலுமுள்ள நாடுகளுக்கும் பொருந்தும் என்பதை விளக்குவார். லெனின் மூன்றாவது அகிலத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட முன்னால் காலனி நாடுகளின் விடுதலைக்கான வழிகாட்டுதலை வழங்கியிருப்பார். அந்த வழிகாட்டுதலைப் பின்பற்றியே மாவோவின் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியானது சீனாவில் புரட்சி நடத்தி வெற்றிபெற்றது. ஆகவே லெனினியத் தத்துவமும், அதன் நடைமுறைக்கான வழிகாட்டுதலும் அனைத்து நாடுகளில் செயல்படும் கம்யூனிஸ்டுகள் பின்பற்ற வேண்டியது அவசியமாகும். யாராவது லெனினியத்தை ஏற்க மறுத்து புறக்கணிக்கிறார்கள் என்றால் அவர்கள் நிச்சயமாக மார்க்சியத்தையே புறக்கணிக்கிறார்கள் என்றே பொருளாகும். மார்க்சை சிலர் ஐரோப்பிய தத்துவவாதி என்கின்றனர். ஆனால் மார்க்ஸ் உழைப்பின் விடுதலையைப் பற்றி தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார். உழைப்பு என்பது ஐரோப்பாவிற்கு மட்டும் உரித்தானது அல்ல. உலகம் முழுவதற்கும் உரித்தானதுதான் உழைப்பு ஆகும். இந்த உழைப்புதான் மனிதகுலம் வாழ்வதற்கும் வளர்வதற்கும் அடிப்படையாகும். இத்தகைய உழைப்பு அடிமைப்பட்டிருக்கிறது என்றும் இது முதலாளிகளால் அடிமைப்படுத்தப் பட்டுள்ளது என்றும் இந்த உழைப்பை முதலாளிகளிடமிருந்து விடுதலை செய்வதன் மூலமே உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்ற தத்துவத்தைப் போதித்தவர் மார்க்ஸ். ஆகவே அவரது தத்துவம் உலக மக்களுக்கானதாகும். இதேபோலவே லெனினும் உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவே மார்க்சின் தத்துவத்தை வளர்த்தார். குறிப்பாக உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்களை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செய்யும் நிதிமூலதன ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டுவதற்கான தத்துவ அரசியல் வழிகாட்டியவர்தான் லெனின்.
லெனினை ரஷ்யாவோடு குறுக்கிக்கொண்டு இந்தியப் புரட்சிக்கு லெனின் தேவையில்லை என்ற கருத்தைப் பிரச்சாரம் செய்பவர்கள் சந்தேகமில்லாமல் முதலாளித்து சீர்திருத்தவாத சந்தர்ப்பவாதிகளே ஆவார்கள்.
ஏகாதிபத்தியங்களை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தை மறுப்பவர்கள் லெனினை மறுக்கிறார்கள். ஆகவேதான் இவர்களை ஏகாதிபத்திய சார்பு சந்தர்ப்பவாதிகள் என்கிறோம்”.
1840 லிருந்து 1850 வரையில் மார்க்சியத்தின் பால் காணப்பட்ட புரட்சிகரமான அம்சங்களை திரும்ப உயிர்ப்பித்து இருப்பதே லெனினியம் என்று வேறு சிலர் குறிப்பிடுகிறார்கள். 1850 க்குப் பிறகு மார்க்சியம் தன் புரட்சிக் கொள்கைகளைக் கைவிட்டு விட்டு, மிதமானதாகவும் புரட்சிகரமான தன்மை அற்றதாகவும் ஆகிவிட்டதற்கு மாற்றாக, லெனினியம் மார்க்சியத்தின் புரட்சிகரக் கூறுகளை உயிர்ப்பித்ததாகக் குறிப்பிடுகிறார்கள். மார்க்சின் போதனைகளை இவ்விதம் மதிகெட்ட ரீதியில் கொச்சையான முறையில் இரண்டு பகுதிகளாக அதாவது, புரட்சிகரமான பகுதி என்றும், மிதமான பகுதி என்றும் பாகுபடுத்துவதை நாம் புறக்கணிக்கிறோம். இருந்த போதிலும் இந்த முற்றிலும் தகாத அதிருப்திகர மான நிர்ணயிப்பு கூட ஒரு துளி உண்மையை வெளியிடுகிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். என்ன அந்தத் துளி உண்மை? இரண்டாம் அகிலத்தைச் சேர்ந்த சந்தர்ப்பவாதிகளால் மறைக்கப்பட்ட மார்க்சியத்தின் புரட்சிகர சாராம்சத்தை லெனின் மீட்டெடுத்தார் என்பதே அந்தத் துளி உண்மையாகும். இது உண்மையில் துளி அளவிலானதே. முழு உண்மை என்னவெனில்,மார்க்சியத்தை மீட்டெடுத்ததோடு மட்டுமின்றி முதலாளியத்தின் புதிய நிலைமைகளுக்கும்பாட்டாளி வர்க்கப் போராட்ட நிலைமைகளுக்கும் ஏற்ற விதத்தில் மார்க்சியத்தை மேலும்வளர்த்து அது ஒரு படி முன்னோக்கிக் கொண்டு சென்றது. (ஸ்டாலின்)
"தற்போதும் மார்க்சியத்தை வளர்ப்பது என்ற பெயரில் பிராங்பாட்வாதிகள், அவர்களை சிலர் பிராங்பார்ட் மார்க்சியர்கள் என்று குறிப்பிடுவார்கள், உண்மையில் பிராங்கார்ட்வாதிகளுக்கும் மார்க்சியத்திற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. அவர்கள் சாராம்சத்தில் மார்க்சியத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்பவர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் மார்க்சியத்தில் பல விசயங்கள் விடு பட்டுப்போய் உள்ளது என்றும் அதற்குப் புரட்சிகரத் தன்மை இல்லை என்றும் பிரச்சாரம் செய்கிறார்கள். இத்தகைய நபர்களையே அப்போதே தோழர் ஸ்டாலின் விமர்சிக்கிறார். அதன் மூலம் லெனினியம் என்பது மார்க்சியத்தை இரண்டாம் அகிலத்தைச் சேர்ந்த சந்தர்ப்பவாதிகளிட மிருந்து பாதுகாத்தது மட்டுமல்ல புதிய முதலாளித்துவ சூழலுக்கு அதாவது, ஏகாதிபத்திய சூழலுக்கு ஏற்றவகையில் மார்க்சியத்தை லெனினியமாக லெனின் வளர்த்தார் என்று ஸ்டாலின் குறிப்பிடுகிறார். அன்று லெனின் செய்த வேலையை இன்றைய மார்க்சிய லெனினியவாதிகள் செய்ய வேண்டியது அவர்களது கடமையாகும். மார்க்சிய லெனினியத்திற்கு எதிரான டிராட்ஸ்கியவாதம், பின்நவீனத்துவம், அடையாள அரசியல், பிராங்பார்ட்வாதம் போன்ற பிற்போக்கு தத்துவ அரசியலை முறியடித்து மார்க்சியத்தை பாதுகாத்து, இன்றைய நவீன ஏகாதிபத்திய காலக்கட்டத்திற்கு பொறுத்தமாக லெனினியத்தை வளர்க்க வேண்டும்".
அப்படியானால், கடைசியாக அலசிப் பார்க்கிறபோது லெனினியம் என்றால் என்ன?
ஏகாதிபத்தியமும் பாட்டாளி வர்க்கப் புரட்சியும் நிலவும் காலகட்டத்தின் மார்க்சியமே,லெனினியம். இதைவிட இன்னும் திட்டமாகச் சொல்வதென்றால், பொதுவாக தொழிலாளி வர்க்கப் புரட்சியின் தத்துவமும் போர்த் தந்திரங்களும் லெனினியம்; குறிப்பாக, தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தின் தத்துவமும் போர்த்தந்திரங்களும் லெனினியம் ஆகும். மார்க்சும், எங்கெல்சும் தங்களுடைய நடைமுறைகளை வகுத்துக் கொண்ட காலம், புரட்சிக்கு முற்பட்ட (பாட்டாளி வர்க்கப் புரட்சியைத்தான் மனதில் வைத்து நான் பேசுகிறேன்) காலமாகும். அந்தக் காலத்தில் நன்கு வளர்ந்து முதிர்ந்த ஏகாதிபத்தியம் இன்னும் ஏற்பட்டிருக்கவில்லை. அந்தக் காலத்தில் தொழிலாளிகள் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு தயாரிப்புகளைத்தான் செய்துகொண்டிருந்த காலம். பாட்டாளி வர்க்கப் புரட்சி தவிர்க்க முடியாதவாறு உடனடியாக ஏற்பட்டே தீரும் என்ற நிலைமை இருந்த காலம் அல்ல. ஆனால், மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் வழித்தோன்றலான லெனின் தன் நடைமுறைகளை வகுத்துக்கொண்ட காலம்,
ஏகாதிபத்தியம் வளர்ந்து முதிர்ந்த காலமாகும். தொழிலாளி வர்க்கப் புரட்சி தோன்றிக்கொண்டிருந்த காலமாகும். தொழிலாளி வர்க்கப் புரட்சி ஒரு நாட்டில் வெற்றிக் கொடியை நாட்டிவிட்ட காலம் முதலாளி வர்க்க ஜனநாயகத்தை ஒழித்துவிட்டு தொழிலாளி வர்க்க ஜனநாயகத்தின் காலகட்டம். சோவியத்துகளின் காலகட்டம் தோன்றிய காலமேலெனினிய காலமாகும். (ஸ்டாலின்).
"இங்கே மார்க்ஸ், எங்கெல்சின் காலத்தையும் லெனின் வாழ்ந்த காலத்தையும் ஸ்டாலின் வேறுபடுத்திக் காட்டுகிறார். மார்க்சின் காலத்தில் மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவம் தோன்றி வளர்ந்துகொண்டிருந்தது. அதனால் தொழிலாளி வர்க்கமும் உருவாகி வளர்ந்துகொண்டிருந்த காலம். தொழிலாளர்களை புரட்சிக்குத் தயாரிக்கின்ற காலமாக இருந்தது. அந்தப் பணியை நன்கு உணர்ந்து மார்க்சும் எங்கெல்சும் தொழிலாளி வர்க்கத்திற்கான தத்துவ அரசியல் நிலைபாடுகள், கொள்கை கோட்பாடுகளை உருவாக்கி தொழிலாளர்களிடம் பிரச்சாரம் செய்து தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை மார்க்சும் எங்கெல்சும் ஊட்டினார்கள். ஆனால் லெனின் காலத்தில் முதலாளித்துவம் வளர்ந்து ஏகாதிபத்தியமாக மாறிவிட்டது. அதன் விளைவாக ஏகாதிபத்தியங்களிடம் போட்டி அதிகரித்து அவர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் கூர்மையடைந்து உலகப் போர் நடத்தப்பட்டது. மேலும் இதனால் சமூக முரண்பாடுகள் கூர்மையடைந்து தொழிலாளி வர்க்கமானது ஏகாதிபத்திய முதலாளிகளை எதிர்த்துப் போராடும் நிலைக்கு வந்துசேர்ந்தனர். இந்தச் சூழலை சரியாக மதிப்பிட்ட லெனின் தொழிலாளி வர்க்கம் போரிடுவதற்கான போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரங்களை வகுத்துக்கொடுத்து தொழிலாளி வர்க்கப் புரட்சிக்கு தலைமை கொடுத்து வழிகாட்டினார். அதன் அடிப்படையில் ரஷ்யாவில் தொழிலாளி வர்க்கம் வெற்றிபெற்றது. இவ்விரண்டு சூழல்களை ஒப்பிடும்போது தற்காலச் சூழல் என்ன? வெற்றிபெற்ற சோசலிச அரசுகள் வீழ்த்தப்பட்டுவிட்டது. ஏகாதிபத்தியம் மேலும் மேலும் வளர்ந்து மிகமிக உயர்ந்த நிலையை அடைந்துள்ளது. அவர்களுக்கு இடையில் முரண்பாடுகளும் கூர்மையடைந்துள்ளது. உழைக்கும் மக்கள் தங்களது வாங்கும் சக்தியை இழந்துவருகின்றனர். பசி மட்டும் பட்டினிச்சாவு அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. மொத்தத்தில் உழைக்கும் வர்க்கம் தனது விடுதலைக்காகப் போராடியே தீரவேண்டும் என்ற புறச் சூழல் நிலவுகிறது. ஆனால் இந்த உழைக்கும் மக்களுக்கு தலைமைதாங்கி வழிகாட்டுவதற்கு ரஷ்யாவில் லெனின் தலைமையில் இருந்த போல்ஷ்விக் கட்சி போன்று ஒரு கட்சி இங்கு இல்லை. மற்றொரு பக்கம் மார்க்சிய லெனினியத்திற் எதிரான பல்வேறுவகையான தத்துவ அரசியலை முன்வைத்து செயல்படும் அரசியல் அமைப்புகள் மக்களை பிளவுபடுத்தியும் குழப்பிக்கொண்டு இருக்கின்றன. இந்தச் சூழலில் உடனடியாக தொழிலாளர் புரட்சியை நடத்துவதற்கான புறச் சூழல் இருந்தபோதும் அதற்குத் தேவையான அகச் சூழல் மிகவும் பலவீனமாக உள்ளது. ஆகவே தற்போது தொழிலாளி வர்க்கத்திற்கு தலைமைதாங்கி வழிகாட்டத் தேவையான அகச் சூழலை அதாவது ஒரு போல்ஷ்விக் பாணியிலான புரட்சிகரமான கட்சியை கட்டியமைப்பதுதான் இன்றைய சூழலில் மார்க்சிய லெனினியவாதிகளின் பணியாக இருக்க முடியும். அதற்கு லெனினியத்தை இன்றைய காலத்திற்குப் பொறுத்தமாக வளர்த்திட வேண்டும், லெனினியத்திற்கு எதிரான தத்துவ அரசியல் கருத்துக்களை முறியடிக்க வேண்டும். மேலும் தொழிலாளி வர்க்கப் புரட்சிக்கு உழைக்கும் மக்களை தயாரிக்கும் காலமாகவே இந்த காலம் இருக்கிறது. இந்த எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல் தங்களால் மக்களை அணிதிரட்டி புரட்சி செய்திட முடியும் என்ற கற்பனையில் மிதந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் தங்களை புரட்சிக்கு தலைமைகொடுத்து வழிகாட்டும் சக்தியாக வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணராமல் புறக்கணிக்கிறார்கள். இத்தகைய குழுக்களின் தலைவர்கள் நிலவுகின்ற சூழலைப் புரிந்துகொண்டு தங்களை வளர்த்துக்கொண்டு உழைக்கும் மக்களை புரட்சிக்குத் தயாரிக்கும் பணியில் ஈடுபடாமல் புரட்சி பற்றி பேசுவது வெறும் கனவே ஆகும்".
இதனால்தான் லெனினியத்தை மார்க்சியத்தின் வளர்நிலை என்கிறோம். லெனினியம் விஷேசமான, போர்க்குணமும் அலாதியான புரட்சிகரமான தன்மையும் கொண்டு இருப்பதாக சாதாரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இது முற்றிலும் சரியே. இந்த குணாதிசயம் அதனிடத்தில் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவதாக, தொழிலாளி வர்க்கப் புரட்சியில் உருவம் பெற்று எழுந்தது லெனினியம். இதனால் அப்புரட்சியின் முத்திரை இதன்மேல் பதியாமலிருக்க முடியாது. இரண்டாவதாக, இரண்டாவது அகிலத்தின் சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து நடத்திய பல மோதல்களிலேயே லெனினியம் வளர்ந்து, வலுவடைந்தது. அந்த மோதல்கள், முதலாளித்துவத்தை வெற்றிகரமாக எதிர்ப்பதற்கு பூர்வாங்கமாக, கண்டிப்பாக நடத்தப்பட வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்கின. அவற்றில் முதலில் வெற்றியடைந்தாலே, முதலாளித்துவத்தை வெற்றிகரமாக எதிர்க்க முடியும். அன்றுமட்டுமல்ல; இன்றைக்கும் இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே அந்தப் போராட்டங்கள் இருக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தில் இதை மறக்கலாகாது. ஒரு பக்கம் மார்க்சு எங்கெல்சுக்கும், மறுபக்கம் லெனினுக்கும் மத்தியில் இருந்த இடைக்காலம் இரண்டாவது அகிலத்தின் சந்தர்ப்பவாதம் முழு ஆதிக்கம் செலுத்திய காலமாக இருந்தது. இந்த சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து ஈவிரக்கமில்லாத போராட்டத்தை நடத்துவது லெனினியத்தின் பிரதான கடமைகளில் ஒன்றாக விளங்கியது.-(ஸ்டாலின்).
"இங்கே லெனினியம் உருவாகி வளர்ந்த விதத்தை ஸ்டாலின் வெளிப்படுத்துகிறார். லெனினது காலத்தில் தொழிலாளி வர்க்கம் ஒன்றுதிரண்டு போராடியதன் விளைவாகவே போர்க்குணமிக்க லெனினியம் உருவானது என்றும் அதன் பாதிப்புகள் லெனினியத்தில் அடங்கியுள்ளன என்கிறார் ஸ்டாலின். தற்போதும் உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் வர்க்க மக்கள் ஏகாதிபத்தியங்களை எதிர்த்துப் போராடிக்கொண்டு இருக்கின்றனர்.
உதாரணமாக இந்தியாவில் விவசாயிகளின் போராட்டம். இத்தகைய போராட்ங்களின் விளைவாக மார்க்சிய லெனினியக் கருத்துக்களின் பால் உழைக்கும் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். லெனினிய அடிப்படையில் போர்க்குணமிக்க போராட்டங்கள் இந்த ஏகாதிபத்திய வாதிகளை எதிர்த்து நடத்தப்பட வேண்டும் என்ற உணர்வு உழைக்கும் மக்களிடையே வளர்ந்து வருகிறது. (இந்த சூழலில் உழைக்கும் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் மார்க்சிய லெனினியத்தின் பக்கம் சென்றுவிடாமல் தடுப்பதற்கு கம்யூனிச கொள்கைகளுக்கு எதிராகவும் அதற்கு மாற்று என்று சொல்லிக்கொண்டு பல்வேறுவிதமான அமைப்புகளை ஏகாதிபத்தியவாதிகள் தூண்டுதலின் பெயரில் உருவாகி உழைக்கும் மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகின்றனர்.) ஆனால் இத்தகைய போராட்டங்களுக்கு லெனினிய முறையில் தலைமை கொடுத்து வழிகாட்டுவதற்கான ஒரு பலம்வாய்ந்த கம்யூனிஸ்டு கட்சிஇல்லை. கம்யூனிச அமைப்புகள் பலவாறு பிரிந்து இருக்கின்றன. ஒவ்வொரு குழுவும் வெவ்வேறான கொள்கை கோட்பாடுகளுடன் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. இவர்கள் கொண்டுள்ள கொள்கையானது மார்க்சிய லெனினிய வகைப்பட்டதுதானா? என்ற கேள்விக்கு விடை தெரியாத குழப்பமான சூழலே நிலவுகிறது. மார்க்சிய லெனினியக் கொள்கையிலிருந்து விலகிய போக்கே ஆதிக்கத்தில் உள்ளது. அன்றைய லெனினது காலத்தில் இருந்த இரண்டாம் அகிலத்தைச் சேர்ந்த சந்தர்ப்பவாதிகளின் கருத்துக்கள் ஆதிக்கத்தில் இருந்தது போல தற்போது ஒவ்வொரு கம்யூனிச குழுக்களுக்குள்ளும் மார்க்சிய லெனினிய தத்துவ அரசியலிருந்து விலகிய கருத்துக்களே ஆதிக்கத்தில் உள்ளது. இத்தகைய மார்க்சிய லெனினியத்திற்கு எதிரான கருத்துக்களை சரியாகப் புரிந்துகொண்டு அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டிய பணியை அன்று லெனின் செய்தது போல இப்போதும் யாரும் இங்கு செய்யவில்லை. மார்க்சிய லெனினியத்துக்கு எதிரான சந்தர்ப்பவாதிகளும், சந்தர்ப்பவாத கருத்துக்களும் அன்று நிலவியது போலவே இன்றும் நிலவுகின்றது என்பதை கம்யூனிசத்தின் மீது நம்பிக்கையும் பற்றும் கொண்டவர்கள் உணர வேண்டும். இத்தகைய சந்தர்ப்பவாதத்தை எதிர்த்துப் போராடி வீழ்த்துவதன் மூலமே நம்மால் லெனினியத்தை பாதுகாக்கவும், லெனினியத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களைத் திரட்டி புரட்சிகரமான முறையில் சமூகத்தை மாற்ற முடியும். அதற்கு நாம் லெனினியக் கொள்கைகளை கற்றுத்தேற வேண்டும்.
லெனினிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் நமது நடைமுறைகளை வகுத்துச் செயல்பட வேண்டும். லெனினியத்திற்கு எதிரான சந்தர்ப்பவாதக் கருத்துக்களை எதிர்த்துப் போராடி வீழ்த்துவதன் மூலமே இங்கே லெனினியம் வளர்ந்து பலப்படும். அதன் அடிப்படையிலேயே இங்கு உழைக்கும் மக்களின் விடுதலை சாத்தியமாகும். ஆனால் இங்கே லெனினியத்தின் அடிப்படையில் சந்தர்ப்பவாதிகளை எதிர்த்துப் போராடத்தை நடத்த தவறிவிட்டவர்கள், லெனினியக் கொள்கைகளின் மீதே நம்பிக்கை இழந்து இங்குள்ள முதலாளித்துவ சீர்திருத்தவாதத் தலைவர்களின் தத்துவ அரசியலை பின்பற்றி செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். இந்த முறையானது அன்றைய இரண்டாம் அகிலத் தலைவர்கள் பின்பற்றிய சந்தர்ப்பவாத முறையாகும். இத்தகைய சந்தர்ப்பவாத முறைகளை பின்பற்றி உழைக்கும் மக்களை ஒருபோதும் விடுவிக்க முடியாது. ஆகவே நாம் மார்க்சிய லெனினியத்தை உயர்த்திப் பிடிப்போம். முதலாளித்துவ சீர்திருத்தவாத சந்தர்ப்பாத கொள்கைகளை அம்பலப்படுத்தி முறியடிப்போம். ஒரு ஒன்றுபட்ட புரட்சிகரமான கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டுவதை நோக்கி முன்னேறுவோம்"……………..
தொடரும்..... தேன்மொழி