“உண்மையான கலைப்படைப்பு மக்களிடம் உள்ள கலைஞனைத் தட்டி எழுப்புகிறது;
அவர்களது உலகக் கண்ணோட்டத்தை
மட்டுமல்லாமல், அழகியல் – கலையியல் ரசனைகளையும் அவர்கள் உருவாக்கிக் கொள்ள வழி செய்கிறது“.-லெனின்
மாவோ சொல்கிறார்:
“எம்முடைய இலக்கியமும் கலையும் அடிப்படையாகத் தொழிலாளர்கள்,
விவசாயிகள், படைவீரர் களுக்கானவை. பரவலாக்குதல் என்பதன் பொருள் அவர்களிடம் பரவலாக்குதல்; தராதரங்களை உயர்த்துதல் என்பதன் பொருள் அவர்களுடைய தற்போதைய நிலையிலிருந்து,
அந்த மட்டத்திலிருந்து முன்னேற்றுவது
என்பதாகும். அவர்களுக்குச் சாதகமானதும்,
அவர்களால் உடனே ஏற்றுக் கொள்ளக் கூடியதும் எதுவோ அதையே நாம் பரவலாக்க வேண்டும். எனவே, அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு முன், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் பணி இருக்கிறது. தராதரங்களை உயர்த்துவதற்கு இது இன்னும் அதிகமாகப் பொருந்தும்” அதாவது இலக்கியமும் கலையும் எந்த அடித்தளத்திலிருந்து உயர்த்தப்படுவது? பரந்துபட்ட தொழிலாளர், விவசாயிகள், படை வீரர்களின் அடித்தளத்திலிருந்தே…
அப்படியானால், பிரச்சனையை மக்களின் தேவையிலிருந்து
பார்க்கலாம். மக்களுக்கு எளிய, தெளிவான படைப்புகள் வேண்டும். எதிரியுடன் கடுமையான போராட்டத்தில்
ஈடுபட்டுள்ள மக்களுக்கு, எதிரிகளால் எழுத்தறிவற்ற கல்வியற்ற மூடர்களாக, அடிமைகளாக நசுக்கப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு போராட உற்சாகம் வேண்டும்; வெற்றி மீது நம்பிக்கை வளர வேண்டும்; எதிரிக்கு எதிராக ஒரே மனத்தோடு, ஒரே சிந்தனையோடு போராடுவதற்காக
பரந்த பொது அறிவு அவர்களுக்கு வேண்டும்; பரந்த கலாச்சார அறிவு வேண்டும்; நிறையக் கலை இலக்கியப் படைப்புகள் வேண்டும்- மாவோ.
மார்க்சியத் திறனாய்வு, சமூகவியல் திறனாய்வோடும்
வரலாற்றியல் திறனாய்வோடும் மிக நெருக்கமாக உறவு கொண்டது. இலக்கியம் என்பது, ஒரு குறிப்பிட்ட சமூகத்திலிருந்து தோன்றுகிறது.
அந்தச் சமூகத்தை நோக்கியே அது அமைகிறது. அதுபோல, சமூகம் என்பது காலம், இடம் என்ற வெளிகளில் அவற்றை மையமாகக் கொண்டு இயங்குவது; எனவே வரலாற்றியல் தளத்தில் இயங்குவது. இலக்கியம் இத்தகைய சமூக- வரலாற்றுத்தளத்தில் தோன்றி, அதன் பண்புகளைக் கொண்டது ஆகலின், இலக்கிய ஆராய்ச்சிக்குச் சமூக - வரலாற்றுப் பின்புலங்களும்
அவற்றின் செய்திகளும் மிகவும் முக்கியமானவையாக அமைகின்றன .
சமூகம் மாறக்கூடியது;
வளர்ச்சி பெறக்கூடியது. அது போன்று இலக்கியமும் வளர்நிலைப் பண்புகளைக் கொண்டது. அத்தகைய பண்புகளைத் தற்சார்பு இல்லாத முறையில், காரணகாரியத் தொடர்புகளுடன்
மார்க்சியத் திறனாய்வு விளக்குகிறது.
இலக்கியம், மக்களுடைய வாழ்க்கை நிலைகளிலிருந்து தோன்றுகிற உணர்வுநிலைகளின் வெளிப்பாடு. அதேபோது அந்த உணர்வுநிலைகளை அது செழுமைப்படுத்துகிறது.
மக்களிடமிருந்து தோன்றுகிற இலக்கியம், மக்களின் வாழ்வோடு நெருக்கம் கொண்டு இயங்குகிறது.
மார்க்சியத் திறனாய்வு, இலக்கியத்தை மக்களோடு நெருங்கியிருக்கச் செய்கிறது. மனிதகுல மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் இலக்கியம் உந்துதலாக இருப்பதை அது இனங் காட்டுகிறது.
மார்க்சும் ஏங்கல்சும் திறனாய்வு நூல்கள் எழுதியவர்கள் அல்லர்; அதுபோல், இலக்கியக் கொள்கைகளைப் பரிமாறிக் கொண்டவர்கள் அல்லர். ஆனால், தம்முடைய அரசியல்- பொருளாதார நூல்களிடையே இலக்கியங்கள்
பற்றியும் பேசுகின்றனர். இருவரும் ஜெர்மனியப் பேரறிஞர் கதே (Goethe) என்பவர் பற்றிப் பேசுகின்றனர். அதுபோல் மின்னா கவுட்ஸ்கி, மார்கரெட் ஹார்கன்ஸ், லாசல்லே ஆகியோரின் இலக்கியப் படைப்புகளைப்
பற்றிப் பேசுகின்றனர். ஷேக்ஸ்பியர் மற்றும் பால்ஜாக் ஆகிய இலக்கிய மேதைகளை உதாரணங்களாக்கிப் பேசுகின்றனர்.
லியோ டால்ஸ்டாயின்
நாவல்களைப் பற்றி லெனின் பாராட்டிப் பேசுகிறார். இலக்கியம் பற்றிய கருதுகோள்களை இதன் மூலம் இவர்கள் வெளிப்படுத்துகின்றனர். குறைகளைப் பெரிதுபடுத்தாமல், குறைகளைக் களைந்து மேலும் சிறந்த முறையில் எழுதுவதற்கு யோசனைகள் சொல்லும் முறை, மார்க்சிடமும் ஏங்கல்சிடமும்
காணப்படுகிறது. அதுபோல், லெனினும். லியோ டால்ஸ்டாய், மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளாமல் கிறித்துவ இறையாண்மையே ஏற்றுக் கொண்டவரானாலும், அவருடைய நாவல்களில் அன்றைய சமூகமும், அதன் மாற்றங்களும் பாராட்சமில்லாமல் சித்திரிக்கப்படுகின்றன என்று சொல்லிப் பாராட்டுகின்றார். இவைதான் மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதல் இந்த உதாரணங்கள் உணர்த்துகின்றன.
மார்க்சியத் திறனாய்வின் அடிப்படை, மார்க்சியமே என்பதைச் சொல்லிக் காட்டவேண்டியதில்லை. மார்க்சியத்திற்கு அடிப்படையாகி
இருப்பவை, இயங்கியல் பொருள்முதல் வாதம் (Dialectical Materialism) மற்றும் வரலாற்று பொருள்முதல் வாதம்
(Historical Materialism) ஆகியவை.
மார்க்சியத் திறனாய்வைப் பொறுத்த அளவில் இலக்கியம் பற்றிய அதனுடைய கருதுகோள் அல்லது வரையறை; இலக்கியம் என்பது ஒரு கலைவடிவம்; சமுதாய அமைப்பில் அதன் மேல் கட்டுமானத்தில் (Super-Structure) உள்ள ஓர் உணர்வு நிலை. சமுதாய அடிக்கட்டுமானமாகிய (Basic Structure) பொருளாதார உற்பத்தியுறவுகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சார்ந்து இருப்பது, அது. இதுவே, இலக்கியத்தைப்
பற்றிய அடிப்படையான வரையறை என மார்க்சியம் கருதுகிறது.
மேல்கட்டுமானத்தைச் சேர்ந்த கலை, இலக்கியம், அரசியல் தத்துவம், சாதி, சமயம் முதலியவை அடிக்கட்டுமானத்தோடு ஒன்றுக் கொன்று தொடர்பும் தாக்கமும் கொண்டவை. அதாவது இதனுடைய பொருண்மை என்னவென்றால்-
இலக்கியம், மக்களிடமிருந்து தோன்றுகிறது;
மக்களை நோக்கியே செல்கிறது; மக்களின் உணர்வுகளையும்
வாழ்நிலைகளையும் ஏதேனும் ஒருவகையில் பாதிக்கிறது. எனவே இலக்கியத் திறனாய்வு, இலக்கியத்தின் இந்தப் பண்பினையும் பொருண்மையினையும் பாதுகாக்கிறது;
வளர்க்கிறது. இதுவே மார்க்சியத் திறனாய்வின் நோக்கமும் ஆகும்.
இலக்கியம் சுயம்புவானது
அல்ல; சுயாதிக்கம் உடையது அல்ல; தன்னளவில் முற்ற முழுமையுடையதும் அல்ல. சமுதாய அடிக்கட்டு மானத்தோடும், ஏனைய அமைப்புக் கூறுகளாகிய அரசியல், தத்துவம் முதலியவற்றோடும் சேர்ந்து இருப்பது; அவற்றின் அழகியல் வெளிப்பாடாக இருப்பது. எனவே திறனாய்வு, இலக்கியத்தை இத்தகையதொரு தளத்திலிருந்து
காணவேண்டும் என்று மார்க்சியத் திறனாய்வு கூறுகிறது. எனவே, கலை, கலைக்காகவே என்பதையும், கலை, தனிமனிதன் சம்பந்தப்பட்டது என்பதையும், ஒரு சில உயர்ந்தோருக்கும் மேதைகளுக்கும்
மட்டுமே உரியது என்பதையும் மறுத்து, கலையை மக்களுக்குரியதாகச் சொல்லுகிறது மார்க்சியம். எனவே மார்க்சியத் திறனாய்வாளனுக்குச் சமூகவுணர்வும்,
பொறுப்பும் உண்டு என்பது வற்புறுத்தப்படுகிறது.
மனிதன் ஒரு சமூகப்பிராணி, தன் தேவைகளுக்காக கூட்டாக, சமூகமாக வாழ வேண்டிய தேவைக்குள்ளகிறான். அவன், தான் கண்டு, கேட்ட அனுபவங்களை சமுதாயத்தோடு பகிர்ந்து கொள்ளுகிறான் கற்பனை, சிந்தனை, செயலாற்றல் திறமை உள்ளவனும் மனிதனே, விலங்குகளல்ல.
தன் அனுபவங்களை சமுதாயத்தோடு பகிர்ந்து கொள்வதன் மூலமே அறிவியல் வளர்ச்சியும்
ஆராய்ச்சியும் நாம் இன்று வளர்ந்து நிற்பதற்க்கு
சாட்சியங்கள்.
ஒவ்வொரு மனிதனிடமும் படைப்பாற்றல் உள்ளது. அது அவனது உழைப்போடு ஒன்றியது. தன் உள்ளுணர்வுகளுக்கு - அனுபவம் மூலம் ஏற்பட்ட உணர்வுகளுக்கு - வடிவம் தரும் ஆற்றல் அவனுக்கு உண்டு. அதே வேளை மற்றவர்களது படைப்புகளை புரிந்து சுவைக்கும் அழகுணர்வும் மனிதனிடம் மட்டுமே உள்ள குணமாகும்.
கலை வடிவங்களை நாம் பல்வேறு வகையாக பிரிக்கலாம்.
(1) கண்களால் கண்டு சுவைக்கும் கலை வடிவங்கள். ஓவியம், சிற்பம், சினிமா இன்னும் சில முதன்மை பெற்றவை.
(2) செவியினல் கேட்டு மகிழும் கலைவடிவங்களும்
மனிதனேடு தோன்றி வளர்ந்தவையே.
மேளம், புல்லாங்குழல், வீணை இன்னும் சில கருவிகள் செவியினால் கேட்டு சுவைப்பதாகும்.
(3) சைகையாலும் கண்களாலும் ஒலியாலும் சமூகத்தோடு தொடர்பு கொண்ட மனிதன் காலப்போக்கில்
குகைகளில் கீறிய வடிவங்களை எழுத்தாக மாற்றிப் பிறருக்கு அறிவிக்கும் அளவிற்கு தொடர்பு கொள்ளத் தொடங்குகிறான்,
கவிதைகள். காவியங்கள், கட்டுரைகள் ஏடுகளில் எழுதப்பட்டன.
இது மனிதன் மிகவும் வளர்ச்சியடைந்த
ஒரு கட்டமேயாகும். பிறரின் உணர்வுர்களை, அனுபவங்களை தானே படித்து அறிந்து பயன் பெறும் நிலையாகும். இதை எழுத்து வடிவக் கலை என்று பிரிக்கலாம்.
கவிதை, இலக்கியங்கள் யாவும் இவ்வகையைச் சார்ந்தவையே.
இயற்கையின் தோற்றத்தை, நிலையை பல்வேறு கலை வடிவங்களில் கலைஞர்கள் தருகிறர்கள்;
கலைஞர்களது உள்ளுணர்வில் ஏற்பட்ட தாக்கத்தை அனுபவ உணர்வை கலைவடிவங்களில்
படைத்து தருகிருர்கள் என்று கொள்வோம்.
கலைஞன் எத்தனை அதீதக் கற்பனையாகப் பாடைத்தாலும் சமுதாயத்திலிருந்து அவன் தனிபட்டவன் அல்ல. அவன் தனது படைப்பின் மூலம் தனது வர்க்க சார்பை அல்லது தான் சார்ந்திருக்கும் வர்க்கத்தை தெளிவாகக் கூறிவிடுகிறான்.
தன் கலைப்படைப்பின் மூலம் தன் அக உணர்வுகளை அப்பட்டமாகத்
தெரிவித்து விடுகிறான்.
தொடரும்…