தோழா் டிமிட்ரோவ் பாசிசம் நிகழ்ச்சி நிரலுக்கு வருவது குறித்து கூறும் போது "முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து பாசிசத்திற்கு மாறிச்செல்லும் போக்கு முடிந்து போன, தவிர்க்கவியலாத ஒன்று எனக்கருதாமல் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஏகாதிபத்தியத்திலிருந்து பாசிச சா்வாதிகாரம் அவசியம் தோன்றியே தீரும் என்று கிடையாது. இங்கு நாம் சில நடைமுறை உதாரணங்களை காண்போம். உதாரணத்திற்கு இங்கிலாந்து பெரும் ஏகாதிபத்திய நாடு. அங்கு ஜனநாயகவகைப்பட்ட நாடாளுமன்ற அரசாங்கம் (இதிலும் கூட பிற்போக்கு அம்சங்கள் இல்லை எனக் கூறிவிட முடியாது.) உள்ளது. பிரான்சையும் அமெரிக்கைாவையும் எடுத்துக் கொள்வோம். இந்நாடுகளில் பாசிச வடிவில் சமூகத்தை உருவாக்கும் போக்கு உள்ளதை நீங்கள் காண்பீா்கள். ஆனால் இங்கே நாடாளுமன்ற வடிவங்கள் இன்னும் உள்ளன.
பாசிச வடிவிலான அரசாங்கத்தை நோக்கி செல்லும் போக்கு அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது என்றாலும் பாசிசம் எல்லா இடங்களிலும் வந்தே தீரும் என்று இதற்குபொருள் ஆகாது.”
மேலும் டிமிட்ரோவ் கூறுகிறார்:
பாசிசம் எத்தகைய ஒரு முகமூடியை (இனம், மதம், தேசம், மொழி......) அணிந்திருந்தாலும் எந்த வடிவத்தில் தன்னை அது காட்டிக்கொண்டாலும் எந்த வழிகளில் அது அதிகாரத்திற்கு வந்தாலும்:
1. பாசிசம் என்பது முதலாளித்துவமானது (நிதிமூலதனம்) உழைக்கும் மக்கள்(தொழிலாளர்கள், விவசாயிகள்) மீது மிகவும் கொடூரமாக, கோரமாக நடத்தும்தாக்குதல் ஆகும்.
2. பாசிசம் என்பது கடிவாளமில்லாத இனவெறியும், ஆதிக்கவெறியும் பிடித்தயுத்தமாகும்.
3. பாசிசம் என்பது வெறிபிடித்த பிற்போக்குதனமும் எதிர்ப்புரட்சியுமாகும்.
4. பாசிசம் என்பது தொழிலாளி வர்க்கத்தின் சகல உழைக்கும் மக்களின் கொடியவிரோதி ஆகும்.
5. பாசிசம் - ஒரு கொடிய ஆனால் ஒரு நிலையற்ற ஆட்சி அதிகாரம் ஆகும்.
6. முதலாளித்துவ வர்க்கத்தின் பாசிச சர்வாதிகாரம் ஒரு கொடிய ஆட்சி அதிகாரம் ஆகும்.
இத்தகைய பாசிச சா்வாதிகாரம்தான் அதன் மூலச்சிறப்பான வடிவத்தில் முதல் உலகயுத்தத்திற்கு பிறகு முதலில் இத்தாலியிலும் பின்னர் ஜொ்மனியிலும் அந்தந்த நாட்டுக்குரிய குறிப்பான வடிவங்களில் முதன்முதலாக கட்டியமைக்கப்பட்டன.
முதல் உலக யுத்தமும் பாசிசத்தின் தோற்றமும்.
முதல் உலகயுத்தம் 1914ல் துவங்கியது். அந்த யுத்தத்திற்கு முன்பே ஏகாதிபத்தியத்தின் பொருளியல் உறவுகளை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து லெனின்,ஏகாதிபத்தியமானது “முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்” என்றும் ஏகாதிபத்தியமானது தனது சந்தைகளுக்காக நிதிமூலதனத்தை ஏற்றுமதி செய்வதை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவம்” என்றும் ஏகாதிபத்தியங்களுக்கிடையே சந்தை களுக்கான போட்டியும் மற்றும் யுத்தமும் தவிர்க்க முடியாதது என்றார். உலக யுத்தத்தை ஏகாதிபத்தியங் களுக்கிடையேயான பொருளாதார நெருக்கடியிலிருந்து தோன்றுகின்ற யுத்தம் என்றார். மேலும் “ஏகாதிபத்திய நிதிமூலதனக் கும்பல்களுக்கிடையே 1900-க்குள்ளேயே ஆசிய,லத்தீன் அமெரிக்கா, மற்றும் ஆப்பிரிக்காவிலுள்ள காலனிய நாடுகள் அனைத்தும் விரல் விட்டு எண்ணக்கூடிய மேற்கு ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளால் பங்குபோடப்பட்டு விட்டன” என்று கூறினார். “மேலும் தற்போதைய யுத்தமானது ஏகாதிபத்திய வாதிகளின் சுரண்டலுக்காகவும் சந்தைக்காகவும் இந்த உலகத்தை மறுபங்கீடு செய்வதற்கே” என்றார். எனவே இந்த யுத்தம் உலகமக்களுக்கு எதிரானது. இது அநீதியான யுத்தம் என்றார். இது உலகமக்களை முன்னிலும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளும். இந்த நெருக்கடியான சூழலில் போரிடும் நாட்டிலுள்ள கம்யூனிஸ்டு கட்சிகளானது இந்த யுத்தத்தின் தீய நோக்கத்தை உழைக்கும் மக்கள்திரளிடம் அம்பலப்படுத்த வேண்டும்.
மேலும் இந்த யுத்தச் சூழலையும் பயன்படுத்தி தொழிலாளா் வா்க்கத்திற்கும் விவசாயவா்க்கத்திற்கும் புரட்சிகர உணா்வையூட்டி அவ்வா்க்கங்களை சோசலிச புரட்சியின் மூலம் தங்களது சொந்தநாட்டிலுள்ள முதலாளித்துவ ஆளும்வா்க்கத்தை தூக்கியெறிந்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றச் செய்ய வேண்டும் என்றார். அதாவது “உலகயுத்தத்தை உள்நாட்டு யுத்தமாக (புரட்சியாக) மாற்றவேண்டும்” என்றார் .
ஆனால் இரண்டாம் கம்யூனிச அகிலத்தை சோ்ந்த காவுட்ஸ்கி போன்ற சந்தா்ப்பவாத தலைவா்கள் லெனினின் புரட்சிகர கோட்பாட்டை மறுத்தனா்.
ஏகாதிபத்தியத்தின் நிதிமூலதனக் கோட்பாட்டை மறுத்தனா். “அதீத ஏகாதிபத்தியம்” என்றனா். அதாவது ஏகாதிபத்தியம் காலனிகளில் பொருளாதார வளா்ச்சியை ஏற்படுத்தும் என்றனா். மற்றும் காலனிகள் மீதான நிதிமூலதனக் கும்பலின் ஏகாதிபத்திய கொள்ளையையும் மறுத்தனா். ஏகாதிபத்திய சந்தையின் மறுபங்கீட்டுக்கான யுத்தத்தை “தேசபக்த யுத்தம்” எனவும், இந்த யுத்தத்தை நடத்தும் நாட்டின் ஆளும்வா்க்கத்தையும் அரசையும் உழைக்கும் வா்க்கமும் கம்யயூனிஸ்டு கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் எனவும், ”தாய்நாட்டை பாதுகாப்போம்” எனவும் “ஒவ்வொரு குடிமகனுக்கும் தேசபக்தி வேண்டும்” என்று பிரச்சாரம் செய்து உழைக்கும் வா்க்கத்திற்கும் மற்றும் புரட்சிக்கும் துரோகம் இழைத்தனா். ஏகாதிபத்திய யுத்தவெறியா்களுக்கு துணைபோயினா்.
அதே சமயத்தில் ரஷ்யாவில் லெனின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டு வந்த போல்ஸ்விக் கட்சியானது தொடா்ச்சியாக யுத்தத்திற்கெதிராக உழைக்கும் வா்க்கங் களிடையே ஏகாதிபத்தியவாதிகளின் யுத்தநோக்கத்தை ரஷ்ய தொழிலாளா் வா்க்கத்திடம் விவசாய வா்க்கத்திடம் அம்பலப்படுத்தி, ரஷ்ய ஜார் மன்னனின் ஏதேச்சதிகாரமானது ஏகாதிபத்தியங்களின் யுத்தவெறிக்கு துணைபோவதை சுட்டிகாட்டி அதற்கு எதிராக தொழிலாளா் மற்றும் விவசாய வா்க்கத்தை அதாவது உழைக்கும் வா்க்கத்தை திரட்டி 1917 பிப்ரவரியில் ஜாரின்எதேச்சாதிகாரத்தை தூக்கியெறிந்து ஜனநாயகப் புரட்சியையும், 1917 அக்டோபரில் யுத்தத்திற்கு துணைநின்ற அதாவதுபிரான்ஸ் மற்றும் பிரிட்டிஷ் நிதிமூலதன கும்பலுடன் கூடிக்குலாவிய ரஷ்யமுதலாளித்துவ வா்க்கத்தை அம்பலப்படுத்தி முதலாளித்துவ அரசுக்கு எதிராக,சோசலிச புரட்சியையும் செய்து முடித்தது. ரஷ்யாவில் உழைக்கும் வா்க்கம் அதிகாரத்தை கைப்பற்றியது. பின்னர் உலகயுத்ததிலிருந்து ரஷ்யா விலகியது மேலும் ரஷ்யா சுயேச்சையான சோசலிச வளா்ச்சிப்பாதையை நோக்கிச் சென்றது. லெனின் வழிகாட்டுதல் வென்றது.
முதல் உலக யுத்தத்திற்கு பிறகான காலக்கட்டத்தில் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள் பொருளதார நெருக்கடிக்குள் சிக்கித்திணறிண. ஆனால் சோவியத் ரஷ்யாவானது எந்தவிதமான ஏகாதிபத்தியத்தின் மூலதனத்தின் மற்றும் தொழில் நுட்பத்தின் உதவியில்லாமலேயே சொந்த நாட்டையும் வேறு எந்த நாட்டையும் சுரண்டலுக்கும் ஒடுக்கமுறைக்கும் உட்படுத்தாமலேயே சோவியத் மக்களின் உழைப்பை மட்டும் கொண்டே முதலாளித்துவ நாடுகளின் வளர்ச்சியை விட மிகுதியான பொருளாதார வளர்ச்சியை அடைந்தது. மேலும் உலகமே வியக்கும் அளவுக்கு சோசலிச அமைப்பு வெற்றிகரமாக கட்டியமைக்கப்பட்டது.
உலக யுத்தம் முடிந்தபிறகு லெனின் கூறியவாறே நிகழ்ந்தது. யுத்தத்தில் பங்கு கொண்ட அனைத்து ஏகாதிபத்தியங்களும் (அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை தவிர) மீளமுடியாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டன. அதிலும் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்த நாடுகள் இத்தாலியும் ஜொ்மனியும் ஆகும். இந்த நாடுகளில்தான் 1920-களிலும் 1930-களிலும் பாசிச மற்றும் நாஜிச (பாசிச) அரசுகள் நிறுவப்பட்டன.பாசிசத்தின் பிரத்யேக வடிவங்கள் பற்றி டிமிட்ரோவ் மேலும் கூறுவதாவது: ‘பாசிசத்தைப் பற்றி பொதுவாக குணாம்சபடுத்திக் கூறினால் போதாது. அது எவ்வளவு சரியாக இருந்தாலும் போதாது. பாசிசத்தின் வளர்ச்சி பற்றிய விசேஷ அம்சங்களை தனிப்பட்ட பல நாடுகளில் அதன் பல்வேறு கட்டங்களில் பாசிச சர்வாதிகாரம் எடுக்கும் பல்வேறு வடிவங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு அவற்றை விவரமாக படித்தறிய வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தேசிய தனித்தன்மைகளை, பாசிசத்தின் குறிப்பிட்ட தேசிய அம்சங்களை ஆராய்ந்து படித்தறிந்து உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். அதற்குத்தக்கபடி பாசிசத்திற்கு எதிரான சரியான போராட்ட வடிவங்களையும், முறைகளையும் வகுத்துக்கொள்ள வேண்டும்.”
இத்தாலியில்பாசிசம்- (குறித்த வகையில்)
இத்தாலியானது யுத்தத்தில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுடன் சோ்ந்து முதல் உலக யுத்தத்தில் ஈடுபட்டது. யுத்தத்தில் .இத்தாலி வெற்றி பெற்ற அணியில் இடம் பெற்றிருந்தாலும் லெனின் கூறியவாறு அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டது. யுத்தக் கடன், உணவுபற்றாக்குறை, மோசமான அறுவடை, பணவீக்கம், விலைவாசி உயா்வு போன்றவைகள் அந்தநாட்டை பொருளாதார ரீதியான திவால் தன்மைக்கு கொண்டு சென்றது. ஆறு லட்சம் இத்தாலிய படைவீரா்கள் யுத்ததத்தில் பலியாயினா். பத்து லட்சம் இத்தாலியா்கள் காயமடைந்தனா். 5 லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தனா். யுத்தத்தில் கிடைத்த ஆதாயத்தை விட யுத்தச்செலவுகள் மிக அதிகமானது. மேலும் யுத்தத்தின் கூட்டாளி நாடுகளால் உரிய ஆதாயத்தை முறையாக பங்கிட்டு கொடுக்காமல் துரோகம் இழைக்கப்பட்டது.. யுத்தத்தினால் ஏற்பட்ட சீரழிவுகளையும் கொடுமைகளையும் எதிர்த்து உழைக்கும் விவசாய வா்க்கத்தின் மற்றும்தொழிலாளா் வா்க்கத்தினுடைய போராட்டம் உக்கிரமாக நடந்தது. இந்நேரத்தில் சரியான வழிகாட்டும் சித்தாந்த பலம்பெற்ற கம்யுனிஸ்டு கட்சி இல்லாததன் விளைவாக அப்போராட்டங்களை தொழிலாளா் விவசாய வா்க்கம் அதிகாரத்தை கைப்பற்றும் போராட்டமாக வளா்த்து செல்ல முடியவில்லை. ரஷ்யாவில் கம்யுனி்ஸ்டு கட்சி தலைமையில் சோசலிச அரசு அமைக்கப்பட்டதைகண்டு ஏகாதிபத்திய நிதமூலதனக் கும்பல் நடுங்கியது. இத்தாலிய நிதிமூலதனக்கும்பலின் நலனை பிரதிநித்துவப்படுத்திய முசோலினியின் பாசிஸ்டா கட்சியானது குட்டிமுதலாளிய வா்க்கத்தையும் வெகுஜனங்களையும் தங்களது வாய்ச்சவடால் பாசிசப் பிரச்சாரத்தினால் பொய்யையும் புரட்டையும் பிரச்சாரம் செய்தது. “அதாவது பழைய ரோமப் பேரரசு நிலவிய போது நம்மிடம் இருந்த மிகுதியான “கத்தோலிக்க மத உணா்ச்சியோடு கூடிய இத்தாலிய தேசபற்று” மற்றும் “இத்தாலிய தேசிய பெருமிதம்” இல்லை. அதனால்தான் நாம் யுத்தத்தினால் ஆதாயம் அடைய முடியவில்லை. நமக்கு இத்தாலிய தேசபக்தி இல்லாததன் விளைவாகத்தான் நாம் நமது ரோம சாம்ராஜ்யத்தை இழந்தோம்” என்ற முசோலினியின் ஆக்கிரமிப்புத்தன்மை கொண்ட வாய்ச் சவடால் பிரச்சாரத்தின் மூலம் அப்பாவி வெகுஜனங்கள் மற்றும் நடுத்தரவா்க்கம் ஏமாற்றப்பட்டனர். மேலும் தோ்தல் மூலமாக முசோலினியின் பாசிஸ்டா கட்சியானது அதிகாரத்திற்கு வந்தது. 1922-ல் முசோலினி இத்தாலியின் பிரதமரானான். 1925-ல் இத்தாலியின் சர்வாதிகாரி என்று தன்னைத்தானே அறிவித்துக் கொண்டான். தோ்தலில்தான் பெற்ற பெரும்பான்மையைக் கொண்டு கம்யூனி்ஸ்டு கட்சி, தொழிற்சங்கம் மற்றும் விவசாய சங்கம் உட்பட அனைத்து ஜனநாயக அமைப்புகள் கூடவே பாராளுமன்றத்தையும் எதேச்சதிகாரமாக கலைத்தான். ஜனநாயகமும் கம்யூனிசமும் தேசத்திற்கு ஆபத்து என்றான். அறிவும் அறிவியலும் சமுதாயத்திற்கு எதிரானது என்றான். தெய்வபக்திமிக்க மற்றும் கத்தோலிக்க தன்மை கொண்ட பழையரோமானியப் பேரரசை, அதாவது ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டத்தைச்சேர்ந்த ஏறக்குறைய 40 நாடுகளில் இத்தாலிய பேரரசை நிறுவுவதே தனது பாசிஸ்டுகட்சியின் லட்சியம் என்று பகிரங்கமாக அறிவித்தான். தன்னை எதிர்த்து போராடியவா்களை வீதியில் தூக்கில் தொங்கவிட்டான்.முன்னாள் ராணுவத்தினர், 14 வயது நிரம்பிய இளைஞர்கள் வேலையற்றோர்,உதிரிகள், கிரிமினல்கள், இத்தாலிய ஆதிக்க வெறி கொண்ட பழமைவாதிகள் மற்றும்கிறித்தவ பாதிரியார்களைக் கொண்டு ரோம சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்றான். அதற்காக கத்தோலிக்க மத உணர்ச்சியோடு கூடிய இத்தாலிய மொழி--தேசியஇனவெறி ஊட்டப்பட்ட “கருப்புச் சட்டை” என்ற ஆயுதம் தாங்கிய பாசிசப் படைப்பிரிவை அவன் உருவாக்கினான். அப்படைக்கு முறையான உடற்பயிற்சி பற்றிய போதனை, ”தேசபக்தி” ( முதல் உலக யுத்தக் காலககட்டத்தில் இரண்டாம் அகிலத்தில் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை மறுத்த காவுட்ஸ்கியினர் முன் வைத்த சமூகதேசியவெறி முழக்கம் ஆகும்.) என்ற பெயரில் இத்தாலியானது பிற தேசங்களை ஆக்கிரமிப்பது நியாயமானது என்ற போதனை, மற்றும் மிக முக்கியமாக ஒரு நபர்தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படுவது என்ற மத்தியத்துவக் கொள்கை இவற்றுக்கான பயிற்சி தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டது. பழைய ரோம சாம்ராஜ்யத்தில் அடிமைப்படுத்தி வைக்கப்பட்ட 40 தேசங்களை படையெடுப்பின் மூலமாக மீட்டு புதிய ரோம சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டும். இவற்றிற்கு முன்னிபந்தனையாக முதலில் நாட்டிற்குள் ஜனநாயகவாதிகள், கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், பகுத்தறிவாளர்கள்,பெண்விடுதலைக்கு குரல்கொடுப்பவர்கள் ,முற்போக்கு நபர்கள் மற்றும் நிறுவனங்கள் இவைகளை ஒழிக்கவேண்டும் என்ற பாசிச போதனையும் கொடுக்கப்பட்டது.
மேலும் இத்தாலிய பாசிசஆட்சியானது, நிலபிரபுத்துவத்திற்கு எதிராகப் போராடி முதலாளித்துவப் புரட்சியின் மூலமாக பெறப்பட்ட ஜனநாயகச் சட்டங்களை அதாவது பேச்சுரிமை, எழுத்துரிமை மற்றும் கூட்டம் கூடும் உரிமை போன்ற இன்ன பிறவற்றை தூக்கி யெறிந்துவிட்டு எதேச்சதிகாரமான சர்வாதிகார கொடூரச் சட்டங்களை உருவாக்கியது. போராடுபவர் களையும் குறிப்பாக கம்யூனிஸ்டுகளையும் ஜனநாயகசக்திகளையும், ஜனநாயக நிறுவனங்களையும் தொழிற்சங்கங்களையும் மிகக்கடுமையாக ஒடுக்கியது. சட்டப்பூர்வமான முதலாளித்துவக் குடியரசுகள் நிலவிய ஐரோப்பியச் சூழலில் சட்டபூர்வமான குடியரசு முறையைத் தூக்கியெறிந்து விட்டு வரலாற்றில் அப்பட்டமான கொடூரமான பாசிச சர்வாதிகார முறைக்கு மாறிய முதல் ஏகாதிபத்தியநாடு இத்தாலிதான். ஜெர்மனியில் பாசிசம்- (குறித்த வகையில்)
இருபதாம் நூற்றாண்டில் ஜொ்மனியானது மிகுதியான தொழில் வளா்ச்சி பெற்ற முதன்மை நிதிமூலதன ஏகாதிபத்தியமாக ஐரோப்பாவில் உருவானது. ஆனால் ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போல மிகுதியான காலனி நாடுகளை கொண்ட நாடாக இல்லை. ஆதலால் தனது நிதிமூலதனச் சந்தைக்கும் ஏகாதிபத்திய கொள்ளைக்கும் மற்றும் தனது பொருளாதார நெருக்கடிகளை தணிக்கவும் புதிய காலனிகள் தேவைப்பட்டன. அதற்காக காலனிகளை ஏற்கனவே பங்கு போட்டு வைத்திருந்த பிரிட்டன், பிரான்ஸ் , போன்ற நாடுகளோடு யுத்தம் செய்துதான் காலனிகளை பெற்றாக வேண்டிய நிர்ப்பந்தத்தின் காரணமாக ஆஸ்திரியா ஹங்கேரிய பேரரசுடனும் மற்றும் துருக்கி ஒட்டோமான் பேரரசுடனும் சோ்ந்து காலனிய பேராசையுடன் ஜெர்மானிய நிதிமூலதனக் கும்பல் யுத்தத்தை துவக்கியது. ஆனால் பேராசை பெரும் நஷ்டத்திற்கு இட்டுச்சென்றது. யுத்தத்தில் ஜொ்மனி அவமானகரமான தோல்வியை சந்தித்தது. ஏற்கனவே கைவசம் வைத்திருந்தகாலனிகளை பறிகொடுத்தது. கடுமையானபொருளாதார நெருக்கடியை சந்தித்தது.வெற்றிபெற்றஏகாதிபத்தியங்கள் யுத்தத்திற்கு முதன்மை காரணகா்த்தா ஜொ்மனி எனக்கூறி நான்கு ஆண்டு காலயுத்தச்செலவை ஜொ்மனிதான் ஏற்கவேண்டும் எனக் கூறி ”வொ்செய்ல்ஸ்“ ஒப்பந்தத்தைஜொ்மனி மீது திணித்தது. அந்த ஒப்பந்தப் பிரகாரம் ஜெர்மனியில் முடியாட்சி அகற்றப்பட்டது. இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை கலைக்கப்பட்டது. ஜொ்மனியின் பாதுகாப்பிற்கென ஒரு லட்சம் போ் மட்டும் கொண்ட படை மட்டும்அனுமதிக்கப்பட்டது. யுத்தச்செலவாக 40 பில்லியன் டாலா் நஷ்டஈடு கொடுக்கும்படிகட்டாயப் படுத்தப்பட்டது. ஜொ்மானிய பொருளாதாரம் வீழ்ந்தது. நாடுமுழுக்கதொழிலாளா் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்தது. அரசியல் நிலைமை மிகமோசமானதாக இருந்தது.
ஜொ்மானிய கம்யூனிஸ்டுகட்சி காவுட்ஸ்கிய சந்தா்ப்பவாதத்தில் மூழ்கியிருந்ததால் வெகுஜனங்களின் போராட்டத்திற்கு தலைமை ஏற்க முடியவில்லை.
ரஷ்யப் பாட்டாளிவா்க்க புரட்சியைத் தொடர்ந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நிதிமூலதனக் கும்பலை எதிர்த்து, ஆட்சியாளர்களை எதிர்த்து தொழிலாளர், விவசாயிகளின் போரட்டம் கடுமையாக நடந்தது. அந்நாடுகளில் அப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்க லெனினிஸ்டு வகைப்பட்ட கட்சி இல்லாததன் விளைவாக அரசின் கடுமையான அடக்கு முறையை எதிர்கொண்டது.இத்தாலியை மாதிரியாகக் கொண்டு ஜெர்மனியிலிலும் ஒரு பாசிச கட்சியைக் கட்டியமைப்பதற்கான வேலைகளை 1920-களிலேயே ஜெர்மானிய நிதிமூலதனக் கும்பலானது முற்பட்டது. 18ஆம் நூற்றாண்டு இறுதியில் காலனிய ஆதிக்கத்தை ஐரோப்பாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுக்கவும் நியாயப்படுத்த பிரிட்டனால் உருவாக்கப்பட்ட "ஆரிய மேலாண்மை” இனவியல் கோட்பாட்டைத்தான் ஹிட்லரின் நாஜி (பாசிச)இயக்கமானது சித்தாந்த அடிப்படையாகக் கொண்டது. “ஆரிய மேலாதிக்கம்”என்பதையே தனது கொள்கையாக அறிவித்தது. இந்த “ஆரியமேலாண்மை” சித்தாந்தமானது 19-ம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் குறிப்பாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தங்களது காலனியாதிக்கத்தை ஐரோப்பியா்கள் மத்தியில் நியாயப்படுத்தவும் மற்றும் காலனிய ஆதிக்கத்தை பாதுகாக்கவும் மற்றும் காலனிய நாட்டு மக்களை பிரித்து ஒடுக்கி ஆட்சிசெய்யும் நோக்கத்தில் ஜெர்மன், பிரிட்டன், பிரான்சு மற்றும் ஏனைய முதலாளித்துவ நாடுகளைச் சேர்ந்த இனவியலாளர்களைக் கொண்டு “இனவியல் ஆராய்ச்சி” என்ற அபத்தத்தின் பேரில் ஆரிய இனவியல் கோட்பாட்டை ஆதாவது ஆரிய மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கியிருந்தனர். இதன் மூலம் உலகிலேயே ”வெள்ளைத்தோல் ஆரிய இனம்தான் உயர்ந்த இனம்,”ஏனைய இனங்கள் அதற்கு கீழ்ப்பட்டவைதான் என்று வரலாற்றிற்கும் மற்றும்விஞ்ஞானத்திற்கும் புறம்பாக செயற்கையாக மனிதா்களை அவா்களது உடல்தோற்றத்தை வைத்து (மனிதா்களின் நிறம்,உயரம், அவா்களது மூக்கு, கண், காதுமற்றும் முடி இவற்றை வைத்து) வேறுபடுத்தும் இனரீதியான (Racial) பிரிவினைக்கு உட்படுத்தும் கோட்பாட்டை உருவாக்கியிருந்தனா். இதில் அதிக ஆர்வமும் அக்கறையும் எடுத்துக்கொண்டது பிரிட்டன்தான். காரணம், உலகத்தில் இந்தியா உட்படஅதிகமான காலனிகள் பிரிட்டனிடம்தான் இருந்தன. இந்த காலனிய (நிதிமூலதனகாலனியத்திற்கு முந்தைய) ஆதிக்கத்தை உலகம் முழுக்க நியாயப்படுத்த உருவாக்கியிருந்த இனவியல் கோட்பாட்டைத்தான் நிதிமூலதனக் காலக்கட்டத்தில் தனது பாசிச இயக்கத்திற்கான சித்ததாந்தமாக முன்வைத்தான் ஹிட்லா். அக் கொள்கையின்படி “ஆரிய இனமே உலகத்தில் உன்னதமான மற்றும் தூய்மையான இனம்”, ”உலகத்தை ஆளப்பிறந்த இனம்,” ”மற்ற இனங்கள் யாவும் அடிமையாக இருக்கத்தான் தகுதிபெற்ற இனம், “ஆரியர்களின் தாய்நாடு ஜெர்மனி”,“ஜெர்மனி, ஆரியருக்கு மட்டுமே சொந்தமானது”. ஏனைய இனங்களுடன் கலந்துவாழ்ந்ததன் விளைவாகத்தான் ஜொ்மனி முன்னேற முடியவில்லை. குறிப்பாக யூதர்கள் இந்த நாட்டில் குடியேறியதால்தான் நாடு சீர்குலைந்துபோய்விட்டது. ஐரோப்பியர்களால் குறிப்பாக பிரான்சால் நம் நாடு அடிமைப்படுத்தப்பட்டது. ஜெர்மனியிலிருந்து பலபகுதிகள் (பவேரியா) தனியாகப் பிரிந்து போனதற்குக் காரணமும் யூதர்கள்தான். அவர்கள் நாட்டின் சிறுபான்மையாக இருந்தாலும் நாட்டின் தலையெழுத்தையே தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள். யூதர்கள் செய்த துரோகமே உலக யுத்தத்தில் ஜெர்மன் தோல்விக்கு காரணமாகும் ஆகையால் நம்நாட்டின் அத்தனை கேடுகளுக்கும் காரணமாண யூதர்களின் குடியுரிமையை பறிக்க வேண்டும். அவர்களை நாட்டைவிட்டுவிரட்ட வேண்டும் அல்லது கொன்றொழிக்க வேண்டும்” என்ற உண்மைக்கு புறம்பானமற்றும் ஈனத்தனமான கொள்கையை நாஜிக்கட்சியானது நாடு முழுவதும் பிரச்சாரம்செய்து வந்தது. அதேசமயத்தில் ஜெர்மானிய தேசியவெறியூட்டப்பட்ட “பழுப்புச்சட்டை” பாசிசப் பட்டாளத்தையும் உருவாக்கி வந்தது. நாஜிக்கட்சியில் 1921-ல் ஹிட்லர் உறுப்பினராக சேர்ந்தான். நாஜிக் கட்சியில் பொய் மற்றும் புரட்டு இவற்றை அடிப்படையாகக் கொண்ட இனறெியைத் தூண்டும் இவனது வாய்வீச்சு பேச்சாற்றலானது கட்சியில் முன்னணித் தலைவர்களுள் ஒருவனாக ஆக்கியது. நாஜிக் கட்சியின் தொடர் பாசிசப் பிரச்சாரம் மற்றும் போராட்டத்தில் கலந்து கொண்டதன் விளைவாக கட்சியின் முதன்மைத் தலைவனானான்.. 1933 ம் ஆண்டு நடந்த ரைஸ்டாக் (பாராளுமன்றம்) தேர்தலில் நாஜிக்கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.
ஆட்சியில் ஹிட்லர் அமர்ந்தவுடன் இத்தாலியின் முசோலினியைப் போலவே அனைத்து தொழிற்சங்கங்களையும் விவசாய சங்கங்களையும் கலைத்ததான்.
ஜனநாயகம் ஆபத்து என்றான். மக்களுக்கு பேச்சுரிமை, எழுத்துரிமை மற்றும் கூட்டம் கூடும் உரிமை மறுக்கப்பட்டது. பகுத்தறிவாளா்களும், அறிவுஜீவிகளும் விஞ்ஞானிகளும் மிரட்டப்பட்டு நாட்டை விட்டு துரத்தப்பட்டனா்.
கம்யூனிஸ்டுகளும் கொடுமைகளை எதிர்த்து போராடும் ஜனநாயக சக்திகளும் படுகொலை செய்யப்பட்டனா். நாஜி அரசானது அரசு நிர்வாகம், இராணுவம், போலீஸ் போன்ற அனைத்து துறைகளிலும் யூதர்களை நீக்கியது. அனைத்து அரசு அமைப்புகளையும் நாஜிச மயமாக்கியது. யூதா்களுக்கு குடியுரிமையை மறுத்தது.
அவா்களைஇரண்டாம்தரகுடிமக்களாக்கியது. யூதர்களுக்கு அடையாளமாக தனிச் சின்னத்தை அவர்களது உடையில் கட்டாயமாக அணியவைத்தது. அவர்களின் சொத்துக்களை பதிவு செய்யக் கூறியது. பிறகு அவற்றைக் நாஜிகட்சியினரை கொண்டே கொள்ளையடித்தது. அதில் ஒரு பகுதியை நாஜிக் கட்சியினருக்கு பங்கு போட்டுக் கொடுத்துவிட்டு மீதியை அரசு தனது கஜானாவுக்கு கொண்டு சென்றது. யூதர்களை ஜெட்டோ என்ற தனி வெளிச்சிறையில் (வதைமுகாம்களில்) அடைத்துவைத்தது.குறிப்பிட்ட நேரத்தில் வெளியே செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்பி வரவேண்டும் என்று கட்டளையிட்டது.. அவர்களது வியாபார நிறுவனங்கள் தொழில் நிலையங்களை கைப்பற்றியது. அவர்களின் வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன. பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
ஹிட்லர் படையெடுத்த நாடுகளிலெல்லாம் இந்த நடைமுறையைக் கையாண்டான். பிரான்ஸ் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலுள்ள பெண்கள் மற்றம் சிறுகுழந்தைகள் உட்பட லட்சக்கணக்கான யூதர்களையும் இன்னபிற தேசிய இனங்களையும் “ஆரிய இனத்தைத் தூய்மைப் படுத்துகிறோம்” என்று கூறி போலந்திலுள்ள ஆஷ்டுவிஸ்ச் பகுதியிலுள்ள வெகுஜன கொலைக்களத்திற்கு கொண்டுசென்று ”ஹோலகாஸ்ட்” என்றழைக்கப்படுகிற கூட்டுப் படுகொலையை நிகழ்த்தினான். (2002ல் குஜராத்தில் R.S.S இந்துத்துவா மதவெறி பாசிஸ்டுகள் முதியோர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1000க் கணக்கில் முஸ்லிம்களை கொன்று குவித்ததை நினைவில் கொள்வோம்.)
முதலில் விஷவாயுவைச் செலுத்திக் கொல்வது, பிறகு பிணங்களை குவியலாக எரிப்பது, இவ்வாறு ஐரோப்பாவிலிருந்த யூதர்களில் 65 லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் ஒரு கோடியே 10 லட்சம் யூதர்கள் பலதரப்பட்ட வகையில் சித்திரவதைக்கு உள்ளாயினர். இவைதான் ஹிட்லர், அவன் நாஜிக்கட்சி மற்றும் அவனது நாஜிச சர்வாதிகார ஆட்சி நடத்திய இனப்படுகொலைத் தாண்டவம்.
பாசிசத்தின் நடைமுறை இதுதான். இதன் பொருளாதார நோக்கம் ”ஜெர்மன் நிதிமுதலாளிகள் உலகத்தின் அனைத்து நாடுகளையும் ஆட்சிசெய்ய வேண்டும்” என்ற பேராதிக்க கொள்கையே ஆகும். அதாவது ஜொ்மானிய நிதி மூலதனக் கும்பலுக்கானபேரரசு விரிவாக்கமே.
ஜெர்மனியின் “ரைக்ஸ்டாக் பாராளுமன்றமானது உலகத்தை 1000ஆண்டுகாலம் ஆட்சி செய்யும்” என்று ஜெர்மானிய ஆதிக்கவெறியை வெளிப்படையாகவே தனது பாசிச திட்டத்தில் அறிவித்தான் ஹிட்லர்.
ஜெர்மனியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாசிசமும் இத்தாலியைப் போன்று தேசியவெறியையும் பிற தேசங்களை ஆக்கிரமித்து ஜெர்மனிக்கு கீழ்படுத்த வேண்டும் என்ற தேசிய ஆக்கிரமிப்பு கொள்கையை முன்வைத்தது. அத்துடன் கூடவே சொந்த தேசத்திலேயே பலநூறு ஆண்டுகள் இரண்டறக் கலந்து வாழ்ந்து வந்த யூதஇனத்தை ஜெர்மானியர்களுக்கு செயற்கையாக எதிரியாக சித்தரித்து யூதமொழி தேசியஇனஅழிப்பை செயல்படுத்தியதுதான் ஜெர்மானிய பாசித்தின் குறித்த பண்பாகும்.
தொடரும்……..