ரஷ்ய கம்யூனிச இயக்கத்தின் ஆரம்பத்தில் பல கம்யூனிச குழுக்கள் ஆங்காங்கேசெயல்பட்டுக் கொண்டு இருந்தன. அந்த குழுக்கள் அனைத்தும் ஜாரின் எதேச்சிகார ஆட்சியை தூக்கியெறிய வேண்டும் என்ற கொள்கையில் ஒன்றுபட்டு இருந்தன. அதனை செயல்படுத் துவதற்கான கொள்கையில் அக்குழுக்களுக்கு இடையே வேறுபட்ட கருத்துக்கள் நிலவின. இந்த வேறுபாடுகளுக்கு இடையிலும் இந்த குழுக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு ஒரு ஒன்று பட்ட கட்சியை கட்ட வேண்டும் என்று அந்த குழுக்களிலுள்ளோர் விரும்பினர். அதன் அடிப்படையில் அக்குழுக்கள் ஒன்றுபட்டு ஒரு மத்திய கமிட்டி உருவானது. எனினும் அந்த மத்திய கமிட்டியிலுள்ள தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதால் அந்த ஒன்றுபட்ட கட்சியால் தொடர்ந்து செயல்பட முடியாமல் போய்விட்டது. மீண்டும் ஒன்றுபட்ட கட்சியை கட்ட வேண்டும் என்று அந்த குழுக்களிலுள்ள தலைவர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் அத்தகைய கட்சியை அவசரப்பட்டு கட்டிவிடக் கூடாது என்றும், ரஷ்ய சமூகத்தை புறநிலையில் ஆய்வு செய்து, சமூகத்தை மாற்றுவதற்கான ஒரு விஞ்ஞானப் பூர்வமான திட்டத்தை உருவாக்கி அதன் அடிப்படையில் ஒரு காங்கிசை கூட்டி அனைத்துக் குழுவைச் சேர்ந்தவர்களின் ஒப்புதலைப் பெற்று கட்சியை உருவாக்க வேண்டும் என்றும். அதன்பொருட்டு குழுக்களுக்கு இடையில் ஒரு சித்தாந்தப் போராட்டத்தை நடத்திட வேண்டும் என்றும் அதற்கு நமக்கு ஒரு பொது பத்திரிக்கை வேண்டும் என்று லெனின் கூறினார். அத்தகைய பொதுப் பத்திரிக்கையாக லெனினது பத்திரிக்கையான இஸ்கரா பத்திரிக்கை செயலாற்றியது.
மார்க்சிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் அங்கு சித்தாந்தப் போராட்டம் நடத்தப்பட்டு அனைத்து குழுக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டம் உருவாக்கப்பட்டு ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி கட்டப்பட்டது. அதன் தலைமையில் ரஷ்யாவில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. அந்த கட்சியானது போல்ஷ்விக்குகள், மற்றும் மென்ஷ்விக்குகள் என்ற ஒரு பிளவை மட்டும் சந்தித்தது. அதன் பின்பு போல்ஷ்விக் கட்சியில் எந்தவகையான பிளவுகளும் ஏற்படாமல் போல்ஷ்விக்குகளின் தலைமையில் ரஷ்யாவில் புரட்சி நடத்தப்பட்டு தொழிலாளி வர்க்க அரசு உருவானது. தொகுத்துப் பார்த்தால், ரஷ்யாவில் ஆரம்பத்தில் பல கம்யூனிச குழுக்கள் இருந்தது. பின்பு இந்த குழுக்கள் ஒன்றுபட்டு தொழிலாளி வர்க்க கட்சி உருவானது. பின்பு உருவான தொழிலாளர் வர்க்க கட்சி ஒரே ஒரு பிளவை மட்டும் சந்தித்தது. அதற்குப் பிறகு போல்ஷ்விக் கட்சி பிளவுபடவே இல்லை. இறுதியாக போல்ஷ்விக்குகள் வெற்றி பெற்றார்கள். இதுதான் ரஷ்ய கம்யூனிச இயக்கத்தின் சுறுக்கமான வரலாறு. 1917ஆம் ஆண்டு ரஷ்யாவில் போல்ஷ்விக்குகள் நடத்திய புரட்சியினால் கவரப்பட்ட இந்திய அறிவு ஜீவிகளால் இந்தியாவில் கம்யூனிஸ்டு கட்சி கட்டப்பட்டது. இந்தியாவில் பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருந்த குழுக்களை ஒன்றுபடுத்தி 1925ஆம் ஆண்டு இந்தியாவில் கம்யூனிஸ்டு கட்சி கட்டப்பட்டது. மார்க்சிய லெனினிய தத்துவத்தை இந்தியகம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் உள்வாங்கவில்லை. அதன் அடிப்படையில் இந்திய சமூகத்தை வரலாற்றுரீதியாக ஆய்வு செய்யவில்லை. அதன் அடிப்படையில் சமூகமாற்றத்திற்கான ஒரு திட்டத்தை உருவாக்கவில்லை. ரஷ்யாவில் நடந்தது போன்ற புரட்சியைஅதாவது அன்று இந்தியாவை ஆண்டு வந்த பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடி பிரிட்டீஷாரை விரட்டிவிட முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே கம்யூனிஸ்டு கட்சி இங்கு கட்டப்பட்டது. பிரிட்டீஷாரை எதிர்த்தப் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தலைமை ஏற்று நடத்தும் என்ற நம்பிக்கையிலேயே கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் செயல்பட்டார்கள். ஜனநாயகப் புரட்சியை முதலாளிகளே தலைமை தாங்கி நடத்துவார்கள் என்று கருதிய ரஷ்ய மென்ஷ்விக்குகள் போலவே இந்திய கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களும் கருதினார்கள். சுதந்திரப் போராட்டத்திற்கு காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி பல தடவைகளில் துரோகம் செய்த போதும் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் பெயரளவில் அதனை கண்டித்துவிட்டு காங்கிரஸ் கட்சியின் தலைமையையே பின்பற்றினார்கள். 1945, 46ஆம் ஆண்டுகளில் இந்திய கடற்படை வீரர்களும், பொதுவாக இந்திய இராணுவமும், நேதாஜி தலைமையிலான இந்திய தேசிய இராணுவமும் பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராக நடத்திய போராட்டங்களின் விளைவாக, அதாவது எந்த இராணுவத்தைக்கொண்டு இந்திய மக்களை பிரிட்டீஷார் அடக்கி ஆண்டார்களோ, அந்த இராணுவமே பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தவுடன், இனிமேல் இந்திய மக்களை பிரிட்டீஷாரால் ஆளமுடியாது என்ற முடிவிற்கு பிரிட்டீஷார் வந்தனர். மேலும் சர்வதேச அளவில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முதலாளிகளின் ஆட்சிகள் வீழ்த்தப்பட்டு கம்யூனிஸ்டுகளின் ஆட்சி ஏற்பட்டது. உலகம் முழுவதிலும் ஏகாதிபத்திய வாதிகளின் காலனி ஆட்சிகளுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துக்கொண்டு இருந்தது. ஆகவே பிரிட்டீஷார் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்து, அவர்களிடமிருந்த அதிகாரத்தை அவர்களின் நம்பிக்கைக்கு உரிய காங்கிரஸ் கட்சியிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்கள். அதன் அடிப்படையிலேயே பிரிட்டீஷாரின் ஆட்சி இங்கு இருக்கும் போதே பிரிட்டீஷாரில்லாத இந்தியாவிற்கான அரசியல் சட்டத்தை பிரிட்டீஷாரின் வழிகாட்டுதலோடு அம்பேத்கார் தலைமையில் உருவாக்கினர்.
பிரிட்டீஷார் உள்ளிட்ட அந்நிய ஏகாதிபத்தியவாதிகளின் நலன்களின் அடிப்படையிலும், அவர்களைச் சார்ந்து வாழும் இந்திய பெருமுதலாளிகளின் நலன்களை பாதுகாப்பதன் அடிப்படையிலேயே இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது. இந்த அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் ஜெமீன்தார்கள், பெருமுதலாளிகள் மற்றும் முதலாளித்துவ அறிவுஜீவிகள் ஆவார்கள். அனைத்து இந்திய மக்களின் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டம் அல்ல, இந்திய அரசியல் சட்டம்.இவ்வாறுதான் சுதந்திர இந்தியா என்று சொல்லப்படும் போலி சுதந்திர இந்தியாவை பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகள் உருவாக்கினார்கள். இதன் மூலம் கோபம் கொண்ட இந்திய மக்களிடமிருந்து பிரிட்டீஷ் ஏகாதிபத்திய காலனியாதிக்கவாதிகள் தப்பித்துக் கொண்டனர். இந்திய போலி சுதந்திரத்திற்குப் பிறகு நேரு தலைமை யிலான காங்கிரஸ் கட்சி இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. அந்த சமயத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இந்த சுதந்திரத்தைஏற்றுக் கொள்ளவில்லை. இதனை போலி சுதந்திரம் என்றே மதிப்பிட்டிருந்தது. இந்தகம்யூனிஸ்டு கட்சியை நேருவின் அரசாங்கம் தடைசெய்திருந்தது. கம்யூனிஸ்டுகள் தலைமறைவாகவே செயல்பட்டனர். தெலுங்கானாவில் ஆயுதம் தாங்கிய விவசாயிகளின் போராட்டத்திற்கு கம்யூனிஸ்டுகள் தலைமை தாங்கினர். இந்தியாவில் சமூக மாற்றத்திற்கானவழி தெலுங்கானாவின் வழியே என்றே கம்யூனிஸ்டுகள் முடிவு செய்தனர். ஆனால் ஜனநாயகசோசலிச சிற்பி என்று வர்ணிக்கப்பட்ட நேருவின் உண்மையான முகம் ஜனநாயகத்திற்கு எதிரான பாசிசமே என்று எல்லோராலும் புரிந்துகொள்ளும் விதமாக தெலுங்கானாவில்போராடிய விவசாயிகளின் போராட்டங்களை ஒடுக்க நேருவின் இராணுவம்தெலுங்கானாவுக்குள் நுழைந்தது. நேருவின் பாசிச இராணுவம் தெலுங்கானாவில் செய்தகொடுமையானது ஹிட்லரின் இராணுவம் யூதர்களுக்கு எதிராக செய்த கொடுமைகளையும்விஞ்சிவிட்டது. ஜனநாயகவாதி என்ற பெயரில் நேருவின் நடவடிக்கை ஹிட்லரின்நடவடிக்கையைக் காட்டிலும் கொடுமையானது. அப்போது இந்தியா முழுவதும் கம்யூனிஸ்டுகள் நேருவின் ஆட்சியால் வேட்டையாடப் பட்டார்கள். இந்த அரசு பயங்கரவாதத்திற்கு அஞ்சி கம்யூனிஸ்டுகள் தெலுங்கானா போராட்டத்தை கைவிட்டனர்.
இதற்குப் பிறகு நடந்த முதல் தேர்தலில் கம்யூனிஸ்டுகள் தேர்தலில் நின்று பல இடங்களில் வெற்றி பெற்றார்கள். கேரள மாநிலத்தில்ஆட்சியையே கைப்பற்றினார்கள். அதன் பிறகு இந்திய சமூக மாற்றத்திற்கு தெலுங்கானா வழியை கைவிட்டுவிட்டு கேரள வழியை கடைபிடிப்பது என்று கம்யூனிஸ்டுகள் முடிவு செய்தார்கள். அதாவது மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் ஆட்சியைப் பிடிப்பது பின்பு தொடர்ந்து மத்தியில் ஆட்சியை தேர்தல்களின் மூலம் பிடித்து இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் ஆட்சியை அமைப்பது என்ற கொள்கையை கம்யூனிஸ்டுகள் பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர்.
ரஷ்யாவில் ஸ்டானினது மறைவிற்குப் பின்பு ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக குருஷேவ் பொறுப்பிற்கு வருகிறார். ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சியின் இருபதாவது காங்கிரஸ் கூட்டப்படுகிறது. அந்த காங்கிரசில் குருஷேவ் தனது திருத்தல்வாதக் கொள்கைகளை முன்வைக்கிறார். அதே சமயத்தில் சர்வதேச கம்யூனிஸ்டுகளின்கூட்டமைப்பும் மாஸ்கோவில் கூட்டப்படுகிறது. அந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மாவோவின் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்டு கட்சி, குருஷேவின் திருத்தல்வாதத்தை விமர்சித்தது. அதனை எதிர்த்து குருஷேவின் ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சி போராடியது. இவ்விரண்டு கட்சிக்களுக்குஇடையிலான முரண்பாடு அனைத்துலக கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு உள்ளே எதிரொலித்தது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்குள்ளும் எதிரொலித்தது. சமாதான போட்டி, சமாதான மாற்றம், சமாதான,சக வாழ்வு என்ற குருஷேவின் அமைதிவழி மாற்றம், பாராளுமன்ற பாதை என்கின்ற திருத்தல்வாத வழியை இந்திய கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் வரவேற்று அதனையே பின்பற்ற ஆரம்பித்தனர்.
அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் தூண்டுதலின் பெயரில் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையான நேருவின் அரசாங்கம் மக்கள் சீனத்தின் மீது போர் தொடுத்தது. இந்த நடவடிக்கையை கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் சிலர் கண்டித்தனர். அவ்வாறு கண்டித்தவர்களை கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களில் சிலரே காட்டிக் கொடுத்தனர்.
இவ்விரு காரணங்களால் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களின் மீது வெறுப்புக் கொண்ட தலைவர்கள், இந்திய கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களை விமர்சனம் செய்தனர். இந்த விமர்சனங்களை ஒரு உட்கட்சிப் போராட்டத்தின் மூலம் தீர்ப்பதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் முன்வரவில்லை. ஆதலால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி முதன் முதலாக ஒரு பிளவை சந்தித்தது. புதிய கட்சியாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்டு) உருவானது.
புதிதாக உருவான மார்க்சிஸ்டு கட்சியானது பழைய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருத்தல்வாதக் கொள்களை மறுத்துவிட்டு புரட்சிகரமான கட்சியாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆளுகின்ற காங்கிரஸ் அரசாங்கமானது மார்க்சிஸ்டு கட்சித்தலைவர்களை மிரட்டியது. இந்த மிரட்டலுக்கு அஞ்சி மார்க்சிஸ்டு கட்சித் தலைவர்கள் தாங்கள் ஒருபோதும் தெலுங்கானா பாதையை பின்பற்ற மாட்டோம். இந்திய கம்யூனிஸ்டு கட்சி பின்பற்றும் அதே பாதைதான் தங்களது பாதையும் என்று காங்கிரஸ் அரசாங்கத்திற்கு உறுதிமொழி கொடுத்து, காங்கிரஸ் அரசாங்கத்திடம் சரணடைந்தது. மேலும் மேற்குவங்க மாநிலத்திலுள்ள நக்சல்பாரி என்ற கிராமத்தில் மார்க்சிஸ்டு கட்சித் தலைமையிலான விவசாயிகளின் போராட்டத்தையே மேற்குவங்க மாநில அரசில் பங்குபெற்ற மார்க்சிஸ்டு கட்சியானது தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி நசுக்கியது. அதன் மூலம் மார்க்சிஸ்டு கட்சித் தலைவர்கள் பாட்டாளி மற்றும் விவசாயிகளின் நலன்களை கைவிட்டு விட்டதை புரிந்துகொண்ட, மார்க்சிஸ்டு கட்சிக்குள் இருந்த புரட்சியாளர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். இவர்களும் மார்க்சிஸ்டு கட்சிக்குள் விமர்சனம் வைத்துப் போராடினார்கள்.
ஆனால் மார்க்சிஸ்டு கட்சித் தலைவர்கள், கட்சிக்குள் போராடிய இவர்களை கட்சியைவிட்டு வெளியேற்றியது. அதன் விளைவாக, மார்க்சிஸ்டு கட்சிக்குள் இருந்த அதிருப்தியாளர்கள் ஒன்றுகூடி வேறுஒரு புதிய கட்சியை உருவாக்கினார்கள். இவ்வாறு உருவான இரண்டாவது பிளவின் விளைவுதான் இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்டு-லெனினிஸ்டு) என்ற கட்சியாகும். இவ்வாறு உருவான மார்க்சிஸ்டு-லெனிஸ்டு கட்சியானது இடது, வலது திருத்தல்வாதத்தை எதிர்த்தது அதன் சிறப்பாகும். ஆனால் கோட்பாடு ரீதியாக, ரஷ்யாவில் நரோத்தினியத்தையும், பொருளாதாரவாதத்தையும் எதிர்த்துப் போராடி லெனின் வீழ்த்தியதைப் போன்று இங்கு இந்திய திருத்தல்வாதத்தை கோட்பாடு ரீதியாக போராடி வீழ்த்த தவறியது மா.லெ. கட்சி. வரலாற்றை படைப்பது வீரர்கள் அல்ல, மாறாக மக்களே வரலாற்றை படைக்கிறார்கள் என்ற மார்க்சிய கோட்பாட்டை மா.லெ தலைவர்கள் புறக்கணித்துவிட்டார்கள்.சமூக மாற்றத்தை உருவாக்கும் மக்களை அவர்களது வர்க்க அமைப்புகளில் திரட்ட வேண்டும் என்ற கொள்கையை கைவிட்டுவிட்டு, தொழிற்சங்கம், விவசாயிகளின் சங்கம் போன்றவற்றில் வேலை செய்வதை தவிர்த்துவிட்டார்கள். அவ்வாறு வேலை செய்வது திருத்தல்வாதம் என்ற தவறான முடிவெடுத்தார்கள். ஒரு சிலரைக் கொண்ட குழுவை உருவாக்கி கிராமங்களில் இருக்கும் வட்டிக்காரர்கள் போன்ற கொடூரமானவர்களை கொலை செய்துவிட்டால் மக்கள் உற்சாகம் அடைந்து கட்சிக்குள்ளும் கட்சியால் உருவாக்கப்படும் படைகளிலும் சேருவார்கள் என்றும் அப்படி உருவாக்கும் படையின் மூலம் ஆயுதப் போராட்டத்தை நடத்தி உழைக்கும் வர்க்கம் ஆட்சியைப் பிடிக்கும் என்ற தவறான எண்ணத்தின் அடிப்படையில் அழித்தொழிப்பு என்ற கொள்கையை பின்பற்றி மக்களிடமிருந்துதனிமைப்பட்டுப் போனார்கள். இது ஒரு தவறான முறை என்று சீனக் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களின் விமர்சனத்தையும் பொருட்படுத்தவில்லை. கட்சிக்குள் இதுபற்றி ஜனநாயகப்பூர்வமான விவாதங்களையும் நடத்தவில்லை.
எனினும் 1970ஆம் ஆண்டு தோன்றிய எம்.எல். கட்சியானது ஒரு திட்டத்தை முன்வைத்து கட்சியை கட்சியது வரவேற்க தக்கதாகும். அந்த திட்டத்தை தொடர்ந்து செழுமைப்படுத்த வேண்டும் என்ற முடிவெடுத்ததும் பாராட்டப்பட வேண்டியதாகும். இந்த திட்டத்தை நடைமுறையில் செயல்படுத்தி சோதித்துப் பார்த்திருந்தால், அதன் அடிப்படையில் திட்டத்தை செழுமைப்படுத்தி இருந்தால் இந்திய பொதுவுடமை இயக்கத்தின் வரலாறு வேறு சரியான திசையில் முன்னேறியிருக்க வாய்பு ஏற்பட்டிருக்கும். ஆனால் அத்தகைய திசைவழியில் கம்யூனிச இயக்கம் செல்லாமல் தடை ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும்.
1970ஆம் ஆண்டு உருவக்கப்பட்ட திட்டத்தை அன்றை மா.லெ. கட்சியுள்ள தோழர்கள் விமர்சனம் செய்தார்கள். அவர்களது விமர்சனங்களை கட்சி முழுவதும் சுற்றுக்கு விட்டு விவாதித்திருந்தால் திட்டத்தை செழுமைப்படுத்தும் முயற்சி முதலில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும்.
இத்தகைய ஜனநாயக முறையை அன்றைய மா.லெ. தலைவர்கள் பின்பற்றவில்லை. இதுஅவர்கள் செய்த முதல் தவறு. இரண்டாவதாக மா.லெ. தலைவர்கள் வர்க்க அமைப்புகளில் மக்களை திரட்டிப் போராட மறுத்தனர். அவர்களால் உருவாக்கப்பட்ட திட்டத்தை சோதித்துப் பார்க்க வேண்டுமானால் இந்த வர்க்களின் போராட்டங்களின் மூலமே சோதித்து அறிய முடியும். ஆனால் மா.லெ. தலைவர்கள் அவர்களது திட்டத்தை சோதித்து அறிவதற்கான வாய்ப்பையும் நழுவவிட்டனர். ஆகவே அவர்களால் திட்டத்தை செழுமைப்படுத்தவே இறுதிவரை முடியவில்லை. இவர்களின் தவறான திட்டத்தின் காரணமாகவும், இவர்கள் பின்பற்றிய அழித்தொழிப்பு நடவடிக்கையின் காரணமாகவும் இவர்கள் மக்களிடமிருந்து தனிமைப்பட்டார்கள். இந்த தவறுகளை தொடர்ந்து புரிந்துகொள்ளத் தவறியதால் இவர்களால்இவர்களின் தவறுகளிலிருந்து மீண்டுவரமுடியவில்லை. ஆகவே தொடர்சியாக இவர்கள் பலகுழுக்களாக பிளவுண்டு சிதறிவிட்டார்கள். இதுதான் இந்திய கம்யூனிச இயக்கத்தில் ஏற்பட்ட மூன்றாவது பிளவு ஆகும். இந்தப் பிளவின் விளைவுதான் இந்திய கம்யூனிச இயக்கம் சந்திக்கும் மிகப்பெரிய ஆபத்தான விளைவாகும். இந்த ஆபத்தானது கடந்த நாற்பதுஆண்டுகளாக நீடித்து கெட்டிதட்டிப் போய்யுள்ளது. இந்த ஆபத்தான நிலையிலிருந்து கம்யூனிச இயக்கம் மீண்டுவராமல் கம்யூனிச இயக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை.இவ்வாறு கம்யூனி இயக்கமானது பல்வேறு குழுக்களாக பிளவுண்டு இருப்பது முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்தியங்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய விசயமாக இருக்கிறது. ஆனால் உழைக்கும் மக்களுக்கும், கம்யூனிசத்தின் மீது பற்றுக்கொவண்டவர்களுக்கும் வேதனை அளிப்பதாக உள்ளது.
இவ்வாறு குழுக்களாக பிளவுபட்ட பின்பு, கம்யூனிச இயக்கம் பிளவுபட்டதற்கு காரணம் என்ன? மீண்டும் கம்யூனிச குழுக்கள் ஒன்றுபடுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திக்கிறார்களா? சந்தேகமே, பெயரளவிற்கு நாம் ஒன்றுபட வேண்டும் என்று வாய்மொழியாக பேசுகிறார்கள், ஆனால் அதற்கான நடைமுறை எதுவும் இவர்களிடம் இல்லை. அதற்கு காரணம் நமது தலைவர்கள் செய்த தவறுகளை இவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. அவர்களது தவறுகளை யாரும் எடுத்துச் சொன்னால், அவர்களை கம்யூனிச விரோதி என்று முத்திரை குத்துகிறார்கள்.
நமது தலைவர்கள் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள்தான். எனினும் மக்களின் நலன்களை அடைவதற்கான விஞ்ஞான வழியை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை, அறிந்துகொள்ள முயற்சியும் அவர்கள் எடுக்கவில்லை. அவ்வாறான அறிவு அவர்களுக்கு இருந்திருக்குமானால் ஒரு கம்யூனிஸ்டு கட்சிக்கு விஞ்ஞானப்பூர்வமான திட்டம் வேண்டும் என்பதையும், அந்த திட்டத்தை விரிவாக விவாதித்து பலராலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் மேலும் அந்த திட்டத்தை செயல்படுத்திசோதித்து அறிய வேண்டும் என்பதை உணர்ந்து சோதித்துப் பார்த்திருக்க வேண்டும். இதனை ஒரு குழுவாக செய்ய முடியாது.பல்வேறு குழுக்களிலுள்ள தோழர்களும் இணைந்து செய்ய வேண்டும் என்பதை இந்த குழுத் தலைவர்கள் உணரவில்லை. மாறாக அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக திட்டம் என்ற பெயரில் ஒன்றை வைத்துக்கொண்டு தங்களது திட்டம்தான் சரியான திட்டம் என்ற மமதையிலேயே ஊறிக்கிடக்கிறார்கள். இன்னும் சிலர் தங்களுக்கென்று ஒரு திட்டத்தையும் உருவாக்காமல் எழுபதாம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட திட்டம்தான் அடிப்படையில் சரி என்று சொல்லிக்கொண்டு காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். கம்யூனிச இயக்க வரலாற்றிலேயே ஒரு நீண்ட காலம், சுமார் நாற்பது ஆண்டுகள் குழுக்களாகவே கம்யூனிச இயக்கம் நீடிக்கும் காலம் இதுதான். இதுபோன்று ஒரு நீண்டகாலம் குழுக்களாக கம்யூனிச இயக்கம் எப்போதும் இருந்தது இல்லை. இவ்வாறு உருவான குழுக்களில் பல வேடிக்கைகள் நடந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு குழுவின் தலைவர்களும் தாங்கள்தான் மிகச் சிறந்த அறிவாளிகள் என்று கருதிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள்தான் மிகச் சரியான கொள்கைகளை முன்வைத்திருப்பவர்களாக கருதுகிறார்கள்.
இந்த தலைவர்களிடமுள்ள இந்த பண்பை, கண்ணோட்டத்தை அந்த குழுவிலுள்ள ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் போதிக்கிறார்கள். அதன் அடிப்படையில் ஒவ்வொரு குழுவிலுள்ள உறுப்பினர்களும் இதற்கு பலியாகி தன்னுடைய குழுதான் சிறந்த குழு என்றும், தனது குழுத் தலைவர்கள்தான் சிறந்தவர்கள் என்றும், இதனை பின்பற்றும் தன்னையே பெருமைக்குரியவர்கள் என்றும் கருதும் உணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய பெருமை கொள்பவர்கள் பிற குழுக்களையும், பிற குழுவிலுள்ளவர்களையும் மதிப்பதில்லை. இந்த நிலையில் குழுக்களுக்கு இடையில் எப்படி ஒற்றுமை ஏற்படும்? இந்த வகையில் இந்த குழுக்களிலுள்ள தலைவர்கள் கம்யூனிஸ்டுகளுக்கு இடையில் ஒற்றுமை ஏற்படுவதற்கு தடையாக உள்ளனர்.
சில கம்யூனிச குழுக்களிலுள்ள தலைவர்கள், குழுக்களையெல்லாம் இணைக்க வேண்டும், அதற்கு சித்தாந்தப் போராட்டம் நடத்த வேண்டும். சமூகப் பொருளாதாரத்தை ஆய்வுசெய்துஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று அறிக்கை அளித்தார்கள். அதனை எப்படி சாதிப்பது? அதனை சாதிக்கக் கூடிய சக்தி எது? மார்க்சிய லெனினிய தத்துவ, அரசியல் பொருளாதார அறிவுள்ளவர் களால்தான் இதனை சாதிக்க முடியும் என்பது எதார்த்த உண்மை. இந்த உண்மையை உணர்ந்து அந்த குழுவின் தலைவர்கள் இந்த சாதனை புரியக் கூடிய அறிவுஜீவிகளை அடையாளம் கண்டு அவர்களை அமைப்பாக்கி, அவர்களுக்கு வேலைகளை பகிர்ந்துகொடுத்து அந்தப் பணியை செய்திருந்தார்கள் என்றால், ஒருவேளை திட்டப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்க முடியும். இந்தப் பணிகளை அந்த அறிவுஜீவிகள் செய்யும்போது பல்வேறுவகையான கருத்து முரண்பாடுகள் எழுவது இயல்பானதே.
அத்தகைய கருத்து முரண்பாடுகளை மார்க்சிய தத்துவ வெளிச்சத்தில் விவாதித்து தீர்த்திருக்க வேண்டும். அதற்கு மாறாக ஒருசில அறிவுஜீவிகள் முன்வைத்த கருத்தைக் கொண்டு அவர்கள் ஏகாதிபத்திய எடுபிடிகள் என்றும், மார்க்சியத்திற்கு எதிரானவர்கள் என்றும் பலவாறு முத்திரை குத்தப்பட்டார்கள். அதனால் வெறுப்படைந்த அந்த அறிவுஜீவிகள் அவர்கள் செய்த பணிகளை கைவிட்டுவிட்டு அமைப்பிலிருந்து வெளியேறினார்கள். மேலும் வெளியேறிய அவர்களும் இந்த சித்தாந்தப் பணியை செய்யவில்லை.
மார்க்சிய லெனினிய கம்யூனிஸ்டு கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றியபோது அதனை ஒரு உட்கட்சி சித்தாந்தப் போராட்டத்தை நடத்தி கட்சியின் ஒற்றுமையை காக்க தவறிவிட்டு, பின்பு மேலும் மேலும் பிளவுகளை ஏற்படுத்தி சிறு குழுக்களாக சிதறியது, அதனை மா.லெ. கட்சியை கலைத்ததாக பொருள் கொள்ள வேண்டும். இன்றைய குழுக்களின் தலைவர்களாக இருப்பவர்களுக்கு மா.லெ. கட்சியை கலைத்து பல குழுக்களாக மாற்றியதில் பொறுப்பு இருக்கிறது அல்லவா? இவ்வாறு கட்சியை கலைத்தவர்கள் மேலும் மேலும் சிறு குழுக்களாக சிதறிக் கொண்டிருப்பவர்கள் கலைப்புவாதம் என்று பேசுகிறார்களே ஏன்? குழுக்கள் பிளவு படுவதற்கு காரணம் இந்த குழுக்களிலுள்ள தலைவர்களுக்கு இடையே நடக்கும் தலைமைக்கான போட்டிதானே காரணம். இதனை மூடி மறைத்துவிட்டு கலைப்புவாதம் என்ற கருத்தை முன்வைக்கிறார்களே. நியாயமா?
கம்யூனிச இயக்கத்திற்குள் கலைப்புவாதம் எப்போது முதன்முதலாகத் தோன்றியது? 1905ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த முதல் புரட்சி தோல்வியடைந்தது. அவ்வாறு தோல்வி யடைந்தவுடன் ரஷ்ய தொழிலாளர் கட்சியி லிருந்தவர்களில் சிலர் கலைப்புவாதம் என்ற கருத்தைக் கொண்டுவந்தனர். அதனை எதிர்த்து பிளெக்னோவும், லெனினும் போராடினார்கள். அப்போது சித்தாந்தத் துறையில் கலைப்புவாதம் என்பது இயக்கவியல் பொருள்முதல்வாதத்தோடு கருத்துமுதல்வாதத்தை கலப்பது சித்தாந்தத் துறையில் கலைப்புவாதம் என்று ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சி முடிவு செய்தது. அரசியல் துறையில் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் இடையில் ஒன்றுபடுகின்ற கருத்துக்கள் உண்டு, அதாவது உதாரணமாக இந்தியாவில் சாதி வேற்றுமை கூடாது என்று முதலாளிகளும் விரும்புவார்கள், தொழிலாளிகளும் விரும்புவார்கள். இந்தப் பிரச்சனையில்முதலாளித்துவ சீர்திருத்தவாதிகளின் கொள்கையையும் மார்க்சிய கொள்கையையும் கலக்க வேண்டும் என்பது அரசியல் துறையில் கலைப்புவாதமாகும் என்று ரஷ்ய கம்யூனிஸ்டுகள் சொன்னார்கள். அமைப்புத் துறையில் அன்றைய தலைமறைவு கட்சிக்குப் பதிலாக வெளிப்படையான கட்சி வேண்டும் என்றும் கட்சியின் போர்த்தந்திர திட்டங்களை கைவிட வேண்டும் என்றும், உறுதியான கட்டுப்பாடான கட்சிக்குப் பதிலாக கட்டுபாடற்றதொளதொளப்பான கட்சி அதாவது கட்சி என்று சொல்வதற்கே தகுதியில்லாத கட்சியாகவேண்டும் என்று கலைப்புவாதிகள் சொன்னார்கள். இதுதான் கலைப்புவாதம் பற்றிய கருத்துக்களாகும். ஆனால் இந்த குழுக்களின் தலைவர்களை எதிர்த்து கேள்விகேட்ப்பவர்களை உதாசீனப்படுத்துவது, அவதூறு செய்வது போன்ற இழிவான செயல்களில் ஈடுபடும் போது, அதனை பொறுக்க முடியாமல் சிலர் அந்த குழுக்களிலிருந்து வெளியேறுபவர்களைப் பார்த்து கலைப்புவாதிகள் என்று சொல்கிறார்கள். இந்த குழுக்களின் தலைவர்களுக்கு கலைப்புவாதி என்றால் என்னவென்று தெரியுமா? சந்தேகம்தான். அவர்களது இந்த பிரச்சாரத்தை நியாயப்படுத்த குழுவை கலைத்தாலும் கலைப்புவாதமே என்று வாதிடுகிறார்கள்.
ஆனால் இந்த குறுங்குழுவாதத் தலைவர்கள்தான் ஒரு குழுவை பல சிறு குழுக்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். மா.லெ.கட்சி கலைந்துபோனதைப் பற்றி இவர்களுக்கு எவ்விதமான கவலையும் இல்லை. கலைந்துபோன கட்சியை மீண்டும் கட்டுவதற்கு எவ்விதமான முயற்சியும் எடுக்காத இவர்கள் கலைப்புவாதம் பற்றி பேசுவதற்கு எவ்விதமான தகுதியும் இல்லை.
ரஷ்ய கம்யூனிச இயக்கத்தையும் இந்திய கம்யூனிச இயக்கத்தையும் ஒப்பிட்டு பார்ப்போம்.
1. ரஷ்யாவில் கம்யூனிச குழுக்கள் சிறிது காலம் இருந்து பின்பு மறைந்து விட்டது. ஆனால் இந்தியாவில் கம்யூனிசக் குழுக்கள் நீண்டகாலம் நீடிக்கிறது, இன்னும் மறையவில்லை.
2. ரஷ்யாவில் ஆரம்பத்தில் கம்யூனிச குழுக்கள்தான் இருந்தன. ஆனால் இந்தியாவில்ஆரம்பத்தில் கம்யூனிஸ்டு கட்சி உருவாகிவிட்டது.
3. ரஷ்யாவில் குழுக்கள் ஒன்றுபட வேண்டும் என்ற விருப்பம் ஆரம்பத்திலிருந்தே அனைத்துக் குழுக்களிடமும் காணப்பட்டது. ஆனால் இந்தியாவிலுள்ள குழுக்களிடத்தில் ஒன்றுபடவேண்டும் என்ற விருப்பம் இல்லை.
4. ரஷ்யாவிலிருந்த குழுக்களிலுள்ளவர்களுக்கு மார்க்சிய அறிவு இருந்தது. அதன் அடிப்படையிலேயே அவர்களுக்கு இடையில் விவாதங்கள் நடத்தப்பட்டது. ஆனால் இந்தியாவிலுள்ள குழுக்களுக்களிலுள்ளவர்களுக்கு மார்க்சிய அறிவு போதாமையாக உள்ளது. இவர்களுக்கு இடையே விவாதங்களே நடைபெறவில்லை. ஒவ்வொரு குழுவைச் சேர்ந்தவர்களும் தங்களது குழுவின் முடிவே சரியானது என்று கருதிக்கொண்டிருக்கிறார்கள்.
5. ரஷ்யாவில் ஒரு பக்கம், தொழிலாளர்களின் தன்னியல்பான போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தது, மறுபக்கம் மார்க்சிய படிப்புக் குழுக்கள் மார்க்சிய தத்துவ அறிவை வளர்த்துக் கொள்ளுவதற்கு முயற்சிகள் நடந்தது. இவ்விரண்டையும் இணைக்கும் பணியை லெனின் செயல்படுத்தி ஒரு ஒன்றுபட்ட கட்சி கட்டப்பட்டது. ஆனால் இந்தியாவில் தன்னியல்பான போராட்டங்கள் நடக்கிறது, ஆனால் மார்க்சிய தத்துவ அறிவை வளர்ப்பதற்கான முயற்சி இல்லை. மேலும் இவ்விரண்டையும் இணைக்கும் முயற்சி இங்கு இல்லை.
6. ரஷ்யாவில் கம்யூனிஸ்டுகளுக்கு இடையே அரசியல் சித்தாந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டது. ஆனால் இந்தியாவில் கம்யூனிஸ்டுகளுக்கு இடையில் அரசியல் சித்தாந்தப் போராட்டத்திற்கு மாறாக தனிநபர் தாக்குதல், மற்றும் குழுக்களுக்கிடையிலான தாக்குதல்கள்தான் நடந்துகொண்டிருக்கிறது.
7. ரஷ்யாவில் மார்க்சியத்திற்கு எதிரான நரோத்தினியம் மற்றும் பொருளாதாரவாத கருத்துக்களை கம்யூனிஸ்டுகள் வீழ்த்தினார்கள். அதன் அடிப்படையிலேயே அங்கு கட்சி கட்டப்பட்டது. ஆனால் இந்தியாவில் இதுபோன்ற மார்க்சியத்திற்கும் மக்களுக்கும் எதிரான கருத்துக்களான டிராட்ஸ்கியம், அடையாள அரசியல், பின்நவீனத்துவவாதம், முதலாளித்துவ சீர்திருத்தவாதம், தலித்தியவாதம், திருத்தல்வாதம், கலைப்புவாதம், பிளவுவாதம், குறுங் குழுவாதம் போன்ற பல்வேறு மக்கள் விரோத கருத்துக்களை இந்திய கம்யூனிஸ்டுகள் முறியடிக்கவில்லை.
ஆகவே மார்க்சியத்திற்கும், மக்களுக்கும் எதிரான பல்வேறுவிதமான கருத்துக்களை தெளிவான சித்தாந்தப் போராட்டம் நடத்தி முறியடிப்பதும் அதன் அடிப்படையில் கம்யூனிச குழுக்களையும், அமைப்புசாரா கம்யூனிஸ்டுகளையும் ஒருங்கிணைத்து ஒரு ஒன்றுபட்ட கம்யூனிஸ்டு கட்சியை கட்டுவதன் மூலம் வர்க்கப் போராட்டத்தில் முன்னேறி உழைக்கும் மக்களை கூலி அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்போம்.
தேன்மொழி