ரஷ்ய கம்யூனிஸ்டு இயக்கம், இந்திய கம்யூனிஸ்டு இயக்கம் ஒரு ஒப்பீடு - தேன்மொழி

 


ரஷ்ய கம்யூனிச இயக்கத்தின் ஆரம்பத்தில் பல கம்யூனிச குழுக்கள் ஆங்காங்கேசெயல்பட்டுக் கொண்டு இருந்தன. அந்த குழுக்கள் அனைத்தும் ஜாரின் எதேச்சிகார ஆட்சியை தூக்கியெறிய வேண்டும் என்ற கொள்கையில் ஒன்றுபட்டு இருந்தன. அதனை செயல்படுத் துவதற்கான கொள்கையில் அக்குழுக்களுக்கு இடையே வேறுபட்ட கருத்துக்கள் நிலவின. இந்த வேறுபாடுகளுக்கு இடையிலும் இந்த குழுக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு ஒரு ஒன்று பட்ட கட்சியை கட்ட வேண்டும் என்று அந்த குழுக்களிலுள்ளோர் விரும்பினர். அதன் அடிப்படையில் அக்குழுக்கள் ஒன்றுபட்டு ஒரு மத்திய கமிட்டி உருவானது. எனினும் அந்த மத்திய கமிட்டியிலுள்ள தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதால் அந்த ஒன்றுபட்ட கட்சியால் தொடர்ந்து செயல்பட முடியாமல் போய்விட்டது. மீண்டும் ஒன்றுபட்ட கட்சியை கட்ட வேண்டும் என்று அந்த குழுக்களிலுள்ள தலைவர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் அத்தகைய கட்சியை அவசரப்பட்டு கட்டிவிடக் கூடாது என்றும், ரஷ்ய சமூகத்தை புறநிலையில் ஆய்வு செய்து, சமூகத்தை மாற்றுவதற்கான ஒரு விஞ்ஞானப் பூர்வமான திட்டத்தை உருவாக்கி அதன் அடிப்படையில் ஒரு காங்கிசை கூட்டி அனைத்துக் குழுவைச் சேர்ந்தவர்களின் ஒப்புதலைப் பெற்று கட்சியை உருவாக்க வேண்டும் என்றும். அதன்பொருட்டு குழுக்களுக்கு இடையில் ஒரு சித்தாந்தப் போராட்டத்தை நடத்திட வேண்டும் என்றும் அதற்கு நமக்கு ஒரு பொது பத்திரிக்கை வேண்டும் என்று லெனின் கூறினார். அத்தகைய பொதுப் பத்திரிக்கையாக லெனினது பத்திரிக்கையான இஸ்கரா பத்திரிக்கை செயலாற்றியது. 

மார்க்சிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் அங்கு சித்தாந்தப் போராட்டம் நடத்தப்பட்டு அனைத்து குழுக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டம் உருவாக்கப்பட்டு ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி கட்டப்பட்டது. அதன் தலைமையில் ரஷ்யாவில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. அந்த கட்சியானது போல்ஷ்விக்குகள், மற்றும் மென்ஷ்விக்குகள் என்ற ஒரு பிளவை மட்டும் சந்தித்தது. அதன் பின்பு போல்ஷ்விக் கட்சியில் எந்தவகையான பிளவுகளும் ஏற்படாமல் போல்ஷ்விக்குகளின் தலைமையில் ரஷ்யாவில் புரட்சி நடத்தப்பட்டு தொழிலாளி வர்க்க அரசு உருவானது. தொகுத்துப் பார்த்தால், ரஷ்யாவில் ஆரம்பத்தில் பல கம்யூனிச குழுக்கள் இருந்தது. பின்பு இந்த குழுக்கள் ஒன்றுபட்டு தொழிலாளி வர்க்க கட்சி உருவானது. பின்பு உருவான தொழிலாளர் வர்க்க கட்சி ஒரே ஒரு பிளவை மட்டும் சந்தித்தது. அதற்குப் பிறகு போல்ஷ்விக் கட்சி பிளவுபடவே இல்லை. இறுதியாக போல்ஷ்விக்குகள் வெற்றி பெற்றார்கள். இதுதான் ரஷ்ய கம்யூனிச இயக்கத்தின் சுறுக்கமான வரலாறு. 1917ஆம் ஆண்டு ரஷ்யாவில் போல்ஷ்விக்குகள் நடத்திய புரட்சியினால் கவரப்பட்ட இந்திய அறிவு ஜீவிகளால் இந்தியாவில் கம்யூனிஸ்டு கட்சி கட்டப்பட்டது. இந்தியாவில் பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருந்த குழுக்களை ஒன்றுபடுத்தி 1925ஆம் ஆண்டு இந்தியாவில் கம்யூனிஸ்டு கட்சி கட்டப்பட்டது. மார்க்சிய லெனினிய தத்துவத்தை இந்தியகம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் உள்வாங்கவில்லை. அதன் அடிப்படையில் இந்திய சமூகத்தை வரலாற்றுரீதியாக ஆய்வு செய்யவில்லை. அதன் அடிப்படையில் சமூகமாற்றத்திற்கான ஒரு திட்டத்தை உருவாக்கவில்லை. ரஷ்யாவில் நடந்தது போன்ற புரட்சியைஅதாவது அன்று இந்தியாவை ஆண்டு வந்த பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடி பிரிட்டீஷாரை விரட்டிவிட முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே கம்யூனிஸ்டு கட்சி இங்கு கட்டப்பட்டது. பிரிட்டீஷாரை எதிர்த்தப் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தலைமை ஏற்று நடத்தும் என்ற நம்பிக்கையிலேயே கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் செயல்பட்டார்கள். ஜனநாயகப் புரட்சியை முதலாளிகளே தலைமை தாங்கி நடத்துவார்கள் என்று கருதிய ரஷ்ய மென்ஷ்விக்குகள் போலவே இந்திய கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களும் கருதினார்கள். சுதந்திரப் போராட்டத்திற்கு காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி பல தடவைகளில் துரோகம் செய்த போதும் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் பெயரளவில் அதனை கண்டித்துவிட்டு காங்கிரஸ் கட்சியின் தலைமையையே பின்பற்றினார்கள். 1945, 46ஆம் ஆண்டுகளில் இந்திய கடற்படை வீரர்களும், பொதுவாக இந்திய இராணுவமும், நேதாஜி தலைமையிலான இந்திய தேசிய இராணுவமும் பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராக நடத்திய போராட்டங்களின் விளைவாக, அதாவது எந்த இராணுவத்தைக்கொண்டு இந்திய மக்களை பிரிட்டீஷார் அடக்கி ஆண்டார்களோ, அந்த இராணுவமே பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தவுடன், இனிமேல் இந்திய மக்களை பிரிட்டீஷாரால் ஆளமுடியாது என்ற முடிவிற்கு பிரிட்டீஷார் வந்தனர். மேலும் சர்வதேச அளவில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முதலாளிகளின் ஆட்சிகள் வீழ்த்தப்பட்டு கம்யூனிஸ்டுகளின் ஆட்சி ஏற்பட்டது. உலகம் முழுவதிலும் ஏகாதிபத்திய வாதிகளின் காலனி ஆட்சிகளுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துக்கொண்டு இருந்தது. ஆகவே பிரிட்டீஷார் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்து, அவர்களிடமிருந்த அதிகாரத்தை அவர்களின் நம்பிக்கைக்கு உரிய காங்கிரஸ் கட்சியிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்கள். அதன் அடிப்படையிலேயே பிரிட்டீஷாரின் ஆட்சி இங்கு இருக்கும் போதே பிரிட்டீஷாரில்லாத இந்தியாவிற்கான அரசியல் சட்டத்தை பிரிட்டீஷாரின் வழிகாட்டுதலோடு அம்பேத்கார் தலைமையில் உருவாக்கினர். 

பிரிட்டீஷார் உள்ளிட்ட அந்நிய ஏகாதிபத்தியவாதிகளின் நலன்களின் அடிப்படையிலும், அவர்களைச் சார்ந்து வாழும் இந்திய பெருமுதலாளிகளின் நலன்களை பாதுகாப்பதன் அடிப்படையிலேயே இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது. இந்த அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் ஜெமீன்தார்கள், பெருமுதலாளிகள் மற்றும் முதலாளித்துவ அறிவுஜீவிகள் ஆவார்கள். அனைத்து இந்திய மக்களின் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டம் அல்ல, இந்திய அரசியல் சட்டம்.இவ்வாறுதான் சுதந்திர இந்தியா என்று சொல்லப்படும் போலி சுதந்திர இந்தியாவை பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகள் உருவாக்கினார்கள். இதன் மூலம் கோபம் கொண்ட இந்திய மக்களிடமிருந்து பிரிட்டீஷ் ஏகாதிபத்திய காலனியாதிக்கவாதிகள் தப்பித்துக் கொண்டனர். இந்திய போலி சுதந்திரத்திற்குப் பிறகு நேரு தலைமை யிலான காங்கிரஸ் கட்சி இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. அந்த சமயத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இந்த சுதந்திரத்தைஏற்றுக் கொள்ளவில்லை. இதனை போலி சுதந்திரம் என்றே மதிப்பிட்டிருந்தது. இந்தகம்யூனிஸ்டு கட்சியை நேருவின் அரசாங்கம் தடைசெய்திருந்தது. கம்யூனிஸ்டுகள் தலைமறைவாகவே செயல்பட்டனர். தெலுங்கானாவில் ஆயுதம் தாங்கிய விவசாயிகளின் போராட்டத்திற்கு கம்யூனிஸ்டுகள் தலைமை தாங்கினர். இந்தியாவில் சமூக மாற்றத்திற்கானவழி தெலுங்கானாவின் வழியே என்றே கம்யூனிஸ்டுகள் முடிவு செய்தனர். ஆனால் ஜனநாயகசோசலிச சிற்பி என்று வர்ணிக்கப்பட்ட நேருவின் உண்மையான முகம் ஜனநாயகத்திற்கு எதிரான பாசிசமே என்று எல்லோராலும் புரிந்துகொள்ளும் விதமாக தெலுங்கானாவில்போராடிய விவசாயிகளின் போராட்டங்களை ஒடுக்க நேருவின் இராணுவம்தெலுங்கானாவுக்குள் நுழைந்தது. நேருவின் பாசிச இராணுவம் தெலுங்கானாவில் செய்தகொடுமையானது ஹிட்லரின் இராணுவம் யூதர்களுக்கு எதிராக செய்த கொடுமைகளையும்விஞ்சிவிட்டது. ஜனநாயகவாதி என்ற பெயரில் நேருவின் நடவடிக்கை ஹிட்லரின்நடவடிக்கையைக் காட்டிலும் கொடுமையானது. அப்போது இந்தியா முழுவதும் கம்யூனிஸ்டுகள் நேருவின் ஆட்சியால் வேட்டையாடப் பட்டார்கள். இந்த அரசு பயங்கரவாதத்திற்கு அஞ்சி கம்யூனிஸ்டுகள் தெலுங்கானா போராட்டத்தை கைவிட்டனர்.

இதற்குப் பிறகு நடந்த முதல் தேர்தலில் கம்யூனிஸ்டுகள் தேர்தலில் நின்று பல இடங்களில் வெற்றி பெற்றார்கள். கேரள மாநிலத்தில்ஆட்சியையே கைப்பற்றினார்கள். அதன் பிறகு இந்திய சமூக மாற்றத்திற்கு தெலுங்கானா வழியை கைவிட்டுவிட்டு கேரள வழியை கடைபிடிப்பது என்று கம்யூனிஸ்டுகள் முடிவு செய்தார்கள். அதாவது மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் ஆட்சியைப் பிடிப்பது பின்பு தொடர்ந்து மத்தியில் ஆட்சியை தேர்தல்களின் மூலம் பிடித்து இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் ஆட்சியை அமைப்பது என்ற கொள்கையை கம்யூனிஸ்டுகள் பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர்.

ரஷ்யாவில் ஸ்டானினது மறைவிற்குப் பின்பு ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக குருஷேவ் பொறுப்பிற்கு வருகிறார். ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சியின் இருபதாவது காங்கிரஸ் கூட்டப்படுகிறது. அந்த காங்கிரசில் குருஷேவ் தனது திருத்தல்வாதக் கொள்கைகளை முன்வைக்கிறார். அதே சமயத்தில் சர்வதேச கம்யூனிஸ்டுகளின்கூட்டமைப்பும் மாஸ்கோவில் கூட்டப்படுகிறது. அந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மாவோவின் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்டு கட்சி, குருஷேவின் திருத்தல்வாதத்தை விமர்சித்தது. அதனை எதிர்த்து குருஷேவின் ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சி போராடியது. இவ்விரண்டு கட்சிக்களுக்குஇடையிலான முரண்பாடு அனைத்துலக கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு உள்ளே எதிரொலித்தது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்குள்ளும் எதிரொலித்தது. சமாதான போட்டி, சமாதான மாற்றம், சமாதான,சக வாழ்வு என்ற குருஷேவின் அமைதிவழி மாற்றம், பாராளுமன்ற பாதை என்கின்ற திருத்தல்வாத வழியை இந்திய கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் வரவேற்று அதனையே பின்பற்ற ஆரம்பித்தனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் தூண்டுதலின் பெயரில் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையான நேருவின் அரசாங்கம் மக்கள் சீனத்தின் மீது போர் தொடுத்தது. இந்த நடவடிக்கையை கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் சிலர் கண்டித்தனர். அவ்வாறு கண்டித்தவர்களை கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களில் சிலரே காட்டிக் கொடுத்தனர்.

இவ்விரு காரணங்களால் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களின் மீது வெறுப்புக் கொண்ட தலைவர்கள், இந்திய கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களை விமர்சனம் செய்தனர். இந்த விமர்சனங்களை ஒரு உட்கட்சிப் போராட்டத்தின் மூலம் தீர்ப்பதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் முன்வரவில்லை. ஆதலால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி முதன் முதலாக ஒரு பிளவை சந்தித்தது. புதிய கட்சியாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்டு) உருவானது.

புதிதாக உருவான மார்க்சிஸ்டு கட்சியானது பழைய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருத்தல்வாதக் கொள்களை மறுத்துவிட்டு புரட்சிகரமான கட்சியாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆளுகின்ற காங்கிரஸ் அரசாங்கமானது மார்க்சிஸ்டு கட்சித்தலைவர்களை மிரட்டியது. இந்த மிரட்டலுக்கு அஞ்சி மார்க்சிஸ்டு கட்சித் தலைவர்கள் தாங்கள் ஒருபோதும் தெலுங்கானா பாதையை பின்பற்ற மாட்டோம். இந்திய கம்யூனிஸ்டு கட்சி பின்பற்றும் அதே பாதைதான் தங்களது பாதையும் என்று காங்கிரஸ் அரசாங்கத்திற்கு உறுதிமொழி கொடுத்து, காங்கிரஸ் அரசாங்கத்திடம் சரணடைந்தது. மேலும் மேற்குவங்க மாநிலத்திலுள்ள நக்சல்பாரி என்ற கிராமத்தில் மார்க்சிஸ்டு கட்சித் தலைமையிலான விவசாயிகளின் போராட்டத்தையே மேற்குவங்க மாநில அரசில் பங்குபெற்ற மார்க்சிஸ்டு கட்சியானது தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி நசுக்கியது. அதன் மூலம் மார்க்சிஸ்டு கட்சித் தலைவர்கள் பாட்டாளி மற்றும் விவசாயிகளின் நலன்களை கைவிட்டு விட்டதை புரிந்துகொண்ட, மார்க்சிஸ்டு கட்சிக்குள் இருந்த புரட்சியாளர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். இவர்களும் மார்க்சிஸ்டு கட்சிக்குள் விமர்சனம் வைத்துப் போராடினார்கள்.

ஆனால் மார்க்சிஸ்டு கட்சித் தலைவர்கள், கட்சிக்குள் போராடிய இவர்களை கட்சியைவிட்டு வெளியேற்றியது. அதன் விளைவாக, மார்க்சிஸ்டு கட்சிக்குள் இருந்த அதிருப்தியாளர்கள் ஒன்றுகூடி வேறுஒரு புதிய கட்சியை உருவாக்கினார்கள். இவ்வாறு உருவான இரண்டாவது பிளவின் விளைவுதான் இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்டு-லெனினிஸ்டு) என்ற கட்சியாகும். இவ்வாறு உருவான மார்க்சிஸ்டு-லெனிஸ்டு கட்சியானது இடது, வலது திருத்தல்வாதத்தை எதிர்த்தது அதன் சிறப்பாகும். ஆனால் கோட்பாடு ரீதியாக, ரஷ்யாவில் நரோத்தினியத்தையும், பொருளாதாரவாதத்தையும் எதிர்த்துப் போராடி லெனின் வீழ்த்தியதைப் போன்று இங்கு இந்திய திருத்தல்வாதத்தை கோட்பாடு ரீதியாக போராடி வீழ்த்த தவறியது மா.லெ. கட்சி. வரலாற்றை படைப்பது வீரர்கள் அல்ல, மாறாக மக்களே வரலாற்றை படைக்கிறார்கள் என்ற மார்க்சிய கோட்பாட்டை மா.லெ தலைவர்கள் புறக்கணித்துவிட்டார்கள்.சமூக மாற்றத்தை உருவாக்கும் மக்களை அவர்களது வர்க்க அமைப்புகளில் திரட்ட வேண்டும் என்ற கொள்கையை கைவிட்டுவிட்டு, தொழிற்சங்கம், விவசாயிகளின் சங்கம் போன்றவற்றில் வேலை செய்வதை தவிர்த்துவிட்டார்கள். அவ்வாறு வேலை செய்வது திருத்தல்வாதம் என்ற தவறான முடிவெடுத்தார்கள். ஒரு சிலரைக் கொண்ட குழுவை உருவாக்கி கிராமங்களில் இருக்கும் வட்டிக்காரர்கள் போன்ற கொடூரமானவர்களை கொலை செய்துவிட்டால் மக்கள் உற்சாகம் அடைந்து கட்சிக்குள்ளும் கட்சியால் உருவாக்கப்படும் படைகளிலும் சேருவார்கள் என்றும் அப்படி உருவாக்கும் படையின் மூலம் ஆயுதப் போராட்டத்தை நடத்தி உழைக்கும் வர்க்கம் ஆட்சியைப் பிடிக்கும் என்ற தவறான எண்ணத்தின் அடிப்படையில் அழித்தொழிப்பு என்ற கொள்கையை பின்பற்றி மக்களிடமிருந்துதனிமைப்பட்டுப் போனார்கள். இது ஒரு தவறான முறை என்று சீனக் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களின் விமர்சனத்தையும் பொருட்படுத்தவில்லை. கட்சிக்குள் இதுபற்றி ஜனநாயகப்பூர்வமான விவாதங்களையும் நடத்தவில்லை.

எனினும் 1970ஆம் ஆண்டு தோன்றிய எம்.எல். கட்சியானது ஒரு திட்டத்தை முன்வைத்து கட்சியை கட்சியது வரவேற்க தக்கதாகும். அந்த திட்டத்தை தொடர்ந்து செழுமைப்படுத்த வேண்டும் என்ற முடிவெடுத்ததும் பாராட்டப்பட வேண்டியதாகும். இந்த திட்டத்தை நடைமுறையில் செயல்படுத்தி சோதித்துப் பார்த்திருந்தால், அதன் அடிப்படையில் திட்டத்தை செழுமைப்படுத்தி இருந்தால் இந்திய பொதுவுடமை இயக்கத்தின் வரலாறு வேறு சரியான திசையில் முன்னேறியிருக்க வாய்பு ஏற்பட்டிருக்கும். ஆனால் அத்தகைய திசைவழியில் கம்யூனிச இயக்கம் செல்லாமல் தடை ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும்.

1970ஆம் ஆண்டு உருவக்கப்பட்ட திட்டத்தை அன்றை மா.லெ. கட்சியுள்ள தோழர்கள் விமர்சனம் செய்தார்கள். அவர்களது விமர்சனங்களை கட்சி முழுவதும் சுற்றுக்கு விட்டு விவாதித்திருந்தால் திட்டத்தை செழுமைப்படுத்தும் முயற்சி முதலில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும்.

இத்தகைய ஜனநாயக முறையை அன்றைய மா.லெ. தலைவர்கள் பின்பற்றவில்லை. இதுஅவர்கள் செய்த முதல் தவறு. இரண்டாவதாக மா.லெ. தலைவர்கள் வர்க்க அமைப்புகளில் மக்களை திரட்டிப் போராட மறுத்தனர். அவர்களால் உருவாக்கப்பட்ட திட்டத்தை சோதித்துப் பார்க்க வேண்டுமானால் இந்த வர்க்களின் போராட்டங்களின் மூலமே சோதித்து அறிய முடியும். ஆனால் மா.லெ. தலைவர்கள் அவர்களது திட்டத்தை சோதித்து அறிவதற்கான வாய்ப்பையும் நழுவவிட்டனர். ஆகவே அவர்களால் திட்டத்தை செழுமைப்படுத்தவே இறுதிவரை முடியவில்லை. இவர்களின் தவறான திட்டத்தின் காரணமாகவும், இவர்கள் பின்பற்றிய அழித்தொழிப்பு நடவடிக்கையின் காரணமாகவும் இவர்கள் மக்களிடமிருந்து தனிமைப்பட்டார்கள். இந்த தவறுகளை தொடர்ந்து புரிந்துகொள்ளத் தவறியதால் இவர்களால்இவர்களின் தவறுகளிலிருந்து மீண்டுவரமுடியவில்லை. ஆகவே தொடர்சியாக இவர்கள் பலகுழுக்களாக பிளவுண்டு சிதறிவிட்டார்கள். இதுதான் இந்திய கம்யூனிச இயக்கத்தில் ஏற்பட்ட மூன்றாவது பிளவு ஆகும். இந்தப் பிளவின் விளைவுதான் இந்திய கம்யூனிச இயக்கம் சந்திக்கும் மிகப்பெரிய ஆபத்தான விளைவாகும். இந்த ஆபத்தானது கடந்த நாற்பதுஆண்டுகளாக நீடித்து கெட்டிதட்டிப் போய்யுள்ளது. இந்த ஆபத்தான நிலையிலிருந்து கம்யூனிச இயக்கம் மீண்டுவராமல் கம்யூனிச இயக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை.இவ்வாறு கம்யூனி இயக்கமானது பல்வேறு குழுக்களாக பிளவுண்டு இருப்பது முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்தியங்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய விசயமாக இருக்கிறது. ஆனால் உழைக்கும் மக்களுக்கும், கம்யூனிசத்தின் மீது பற்றுக்கொவண்டவர்களுக்கும் வேதனை அளிப்பதாக உள்ளது.

இவ்வாறு குழுக்களாக பிளவுபட்ட பின்பு, கம்யூனிச இயக்கம் பிளவுபட்டதற்கு காரணம் என்ன? மீண்டும் கம்யூனிச குழுக்கள் ஒன்றுபடுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திக்கிறார்களா? சந்தேகமே, பெயரளவிற்கு நாம் ஒன்றுபட வேண்டும் என்று வாய்மொழியாக பேசுகிறார்கள், ஆனால் அதற்கான நடைமுறை எதுவும் இவர்களிடம் இல்லை. அதற்கு காரணம் நமது தலைவர்கள் செய்த தவறுகளை இவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. அவர்களது தவறுகளை யாரும் எடுத்துச் சொன்னால், அவர்களை கம்யூனிச விரோதி என்று முத்திரை குத்துகிறார்கள்.

நமது தலைவர்கள் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள்தான். எனினும் மக்களின் நலன்களை அடைவதற்கான விஞ்ஞான வழியை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை, அறிந்துகொள்ள முயற்சியும் அவர்கள் எடுக்கவில்லை. அவ்வாறான அறிவு அவர்களுக்கு இருந்திருக்குமானால் ஒரு கம்யூனிஸ்டு கட்சிக்கு விஞ்ஞானப்பூர்வமான திட்டம் வேண்டும் என்பதையும், அந்த திட்டத்தை விரிவாக விவாதித்து பலராலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் மேலும் அந்த திட்டத்தை செயல்படுத்திசோதித்து அறிய வேண்டும் என்பதை உணர்ந்து சோதித்துப் பார்த்திருக்க வேண்டும். இதனை ஒரு குழுவாக செய்ய முடியாது.பல்வேறு குழுக்களிலுள்ள தோழர்களும் இணைந்து செய்ய வேண்டும் என்பதை இந்த குழுத் தலைவர்கள் உணரவில்லை. மாறாக அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக திட்டம் என்ற பெயரில் ஒன்றை வைத்துக்கொண்டு தங்களது திட்டம்தான் சரியான திட்டம் என்ற மமதையிலேயே ஊறிக்கிடக்கிறார்கள். இன்னும் சிலர் தங்களுக்கென்று ஒரு திட்டத்தையும் உருவாக்காமல் எழுபதாம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட திட்டம்தான் அடிப்படையில் சரி என்று சொல்லிக்கொண்டு காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். கம்யூனிச இயக்க வரலாற்றிலேயே ஒரு நீண்ட காலம், சுமார் நாற்பது ஆண்டுகள் குழுக்களாகவே கம்யூனிச இயக்கம் நீடிக்கும் காலம் இதுதான். இதுபோன்று ஒரு நீண்டகாலம் குழுக்களாக கம்யூனிச இயக்கம் எப்போதும் இருந்தது இல்லை. இவ்வாறு உருவான குழுக்களில் பல வேடிக்கைகள் நடந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு குழுவின் தலைவர்களும் தாங்கள்தான் மிகச் சிறந்த அறிவாளிகள் என்று கருதிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள்தான் மிகச் சரியான கொள்கைகளை முன்வைத்திருப்பவர்களாக கருதுகிறார்கள். 

இந்த தலைவர்களிடமுள்ள இந்த பண்பை, கண்ணோட்டத்தை அந்த குழுவிலுள்ள ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் போதிக்கிறார்கள். அதன் அடிப்படையில் ஒவ்வொரு குழுவிலுள்ள உறுப்பினர்களும் இதற்கு பலியாகி தன்னுடைய குழுதான் சிறந்த குழு என்றும், தனது குழுத் தலைவர்கள்தான் சிறந்தவர்கள் என்றும், இதனை பின்பற்றும் தன்னையே பெருமைக்குரியவர்கள் என்றும் கருதும் உணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய பெருமை கொள்பவர்கள் பிற குழுக்களையும், பிற குழுவிலுள்ளவர்களையும் மதிப்பதில்லை. இந்த நிலையில் குழுக்களுக்கு இடையில் எப்படி ஒற்றுமை ஏற்படும்? இந்த வகையில் இந்த குழுக்களிலுள்ள தலைவர்கள் கம்யூனிஸ்டுகளுக்கு இடையில் ஒற்றுமை ஏற்படுவதற்கு தடையாக உள்ளனர்.

சில கம்யூனிச குழுக்களிலுள்ள தலைவர்கள், குழுக்களையெல்லாம் இணைக்க வேண்டும், அதற்கு சித்தாந்தப் போராட்டம் நடத்த வேண்டும். சமூகப் பொருளாதாரத்தை ஆய்வுசெய்துஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று அறிக்கை அளித்தார்கள். அதனை எப்படி சாதிப்பது? அதனை சாதிக்கக் கூடிய சக்தி எது? மார்க்சிய லெனினிய தத்துவ, அரசியல் பொருளாதார அறிவுள்ளவர் களால்தான் இதனை சாதிக்க முடியும் என்பது எதார்த்த உண்மை. இந்த உண்மையை உணர்ந்து அந்த குழுவின் தலைவர்கள் இந்த சாதனை புரியக் கூடிய அறிவுஜீவிகளை அடையாளம் கண்டு அவர்களை அமைப்பாக்கி, அவர்களுக்கு வேலைகளை பகிர்ந்துகொடுத்து அந்தப் பணியை செய்திருந்தார்கள் என்றால், ஒருவேளை திட்டப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்க முடியும். இந்தப் பணிகளை அந்த அறிவுஜீவிகள் செய்யும்போது பல்வேறுவகையான கருத்து முரண்பாடுகள் எழுவது இயல்பானதே.

அத்தகைய கருத்து முரண்பாடுகளை மார்க்சிய தத்துவ வெளிச்சத்தில் விவாதித்து தீர்த்திருக்க வேண்டும். அதற்கு மாறாக ஒருசில அறிவுஜீவிகள் முன்வைத்த கருத்தைக் கொண்டு அவர்கள் ஏகாதிபத்திய எடுபிடிகள் என்றும், மார்க்சியத்திற்கு எதிரானவர்கள் என்றும் பலவாறு முத்திரை குத்தப்பட்டார்கள். அதனால் வெறுப்படைந்த அந்த அறிவுஜீவிகள் அவர்கள் செய்த பணிகளை கைவிட்டுவிட்டு அமைப்பிலிருந்து வெளியேறினார்கள். மேலும் வெளியேறிய அவர்களும் இந்த சித்தாந்தப் பணியை செய்யவில்லை.

மார்க்சிய லெனினிய கம்யூனிஸ்டு கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றியபோது அதனை ஒரு உட்கட்சி சித்தாந்தப் போராட்டத்தை நடத்தி கட்சியின் ஒற்றுமையை காக்க தவறிவிட்டு, பின்பு மேலும் மேலும் பிளவுகளை ஏற்படுத்தி சிறு குழுக்களாக சிதறியது, அதனை மா.லெ. கட்சியை கலைத்ததாக பொருள் கொள்ள வேண்டும். இன்றைய குழுக்களின் தலைவர்களாக இருப்பவர்களுக்கு மா.லெ. கட்சியை கலைத்து பல குழுக்களாக மாற்றியதில் பொறுப்பு இருக்கிறது அல்லவா? இவ்வாறு கட்சியை கலைத்தவர்கள் மேலும் மேலும் சிறு குழுக்களாக சிதறிக் கொண்டிருப்பவர்கள் கலைப்புவாதம் என்று பேசுகிறார்களே ஏன்? குழுக்கள் பிளவு படுவதற்கு காரணம் இந்த குழுக்களிலுள்ள தலைவர்களுக்கு இடையே நடக்கும் தலைமைக்கான போட்டிதானே காரணம். இதனை மூடி மறைத்துவிட்டு கலைப்புவாதம் என்ற கருத்தை முன்வைக்கிறார்களே. நியாயமா?

கம்யூனிச இயக்கத்திற்குள் கலைப்புவாதம் எப்போது முதன்முதலாகத் தோன்றியது? 1905ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த முதல் புரட்சி தோல்வியடைந்தது. அவ்வாறு தோல்வி யடைந்தவுடன் ரஷ்ய தொழிலாளர் கட்சியி லிருந்தவர்களில் சிலர் கலைப்புவாதம் என்ற கருத்தைக் கொண்டுவந்தனர். அதனை எதிர்த்து பிளெக்னோவும், லெனினும் போராடினார்கள். அப்போது சித்தாந்தத் துறையில் கலைப்புவாதம் என்பது இயக்கவியல் பொருள்முதல்வாதத்தோடு கருத்துமுதல்வாதத்தை கலப்பது சித்தாந்தத் துறையில் கலைப்புவாதம் என்று ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சி முடிவு செய்தது. அரசியல் துறையில் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் இடையில் ஒன்றுபடுகின்ற கருத்துக்கள் உண்டு, அதாவது உதாரணமாக இந்தியாவில் சாதி வேற்றுமை கூடாது என்று முதலாளிகளும் விரும்புவார்கள், தொழிலாளிகளும் விரும்புவார்கள். இந்தப் பிரச்சனையில்முதலாளித்துவ சீர்திருத்தவாதிகளின் கொள்கையையும் மார்க்சிய கொள்கையையும் கலக்க வேண்டும் என்பது அரசியல் துறையில் கலைப்புவாதமாகும் என்று ரஷ்ய கம்யூனிஸ்டுகள் சொன்னார்கள். அமைப்புத் துறையில் அன்றைய தலைமறைவு கட்சிக்குப் பதிலாக வெளிப்படையான கட்சி வேண்டும் என்றும் கட்சியின் போர்த்தந்திர திட்டங்களை கைவிட வேண்டும் என்றும், உறுதியான கட்டுப்பாடான கட்சிக்குப் பதிலாக கட்டுபாடற்றதொளதொளப்பான கட்சி அதாவது கட்சி என்று சொல்வதற்கே தகுதியில்லாத கட்சியாகவேண்டும் என்று கலைப்புவாதிகள் சொன்னார்கள். இதுதான் கலைப்புவாதம் பற்றிய கருத்துக்களாகும். ஆனால் இந்த குழுக்களின் தலைவர்களை எதிர்த்து கேள்விகேட்ப்பவர்களை உதாசீனப்படுத்துவது, அவதூறு செய்வது போன்ற இழிவான செயல்களில் ஈடுபடும் போது, அதனை பொறுக்க முடியாமல் சிலர் அந்த குழுக்களிலிருந்து வெளியேறுபவர்களைப் பார்த்து கலைப்புவாதிகள் என்று சொல்கிறார்கள். இந்த குழுக்களின் தலைவர்களுக்கு கலைப்புவாதி என்றால் என்னவென்று தெரியுமா? சந்தேகம்தான். அவர்களது இந்த பிரச்சாரத்தை நியாயப்படுத்த குழுவை கலைத்தாலும் கலைப்புவாதமே என்று வாதிடுகிறார்கள்.

ஆனால் இந்த குறுங்குழுவாதத் தலைவர்கள்தான் ஒரு குழுவை பல சிறு குழுக்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். மா.லெ.கட்சி கலைந்துபோனதைப் பற்றி இவர்களுக்கு எவ்விதமான கவலையும் இல்லை. கலைந்துபோன கட்சியை மீண்டும் கட்டுவதற்கு எவ்விதமான முயற்சியும் எடுக்காத இவர்கள் கலைப்புவாதம் பற்றி பேசுவதற்கு எவ்விதமான தகுதியும் இல்லை.

ரஷ்ய கம்யூனிச இயக்கத்தையும் இந்திய கம்யூனிச இயக்கத்தையும் ஒப்பிட்டு பார்ப்போம்.

1. ரஷ்யாவில் கம்யூனிச குழுக்கள் சிறிது காலம் இருந்து பின்பு மறைந்து விட்டது. ஆனால் இந்தியாவில் கம்யூனிசக் குழுக்கள் நீண்டகாலம் நீடிக்கிறது, இன்னும் மறையவில்லை.

2. ரஷ்யாவில் ஆரம்பத்தில் கம்யூனிச குழுக்கள்தான் இருந்தன. ஆனால் இந்தியாவில்ஆரம்பத்தில் கம்யூனிஸ்டு கட்சி உருவாகிவிட்டது.

3. ரஷ்யாவில் குழுக்கள் ஒன்றுபட வேண்டும் என்ற விருப்பம் ஆரம்பத்திலிருந்தே அனைத்துக் குழுக்களிடமும் காணப்பட்டது. ஆனால் இந்தியாவிலுள்ள குழுக்களிடத்தில் ஒன்றுபடவேண்டும் என்ற விருப்பம் இல்லை.

4. ரஷ்யாவிலிருந்த குழுக்களிலுள்ளவர்களுக்கு மார்க்சிய அறிவு இருந்தது. அதன் அடிப்படையிலேயே அவர்களுக்கு இடையில் விவாதங்கள் நடத்தப்பட்டது. ஆனால் இந்தியாவிலுள்ள குழுக்களுக்களிலுள்ளவர்களுக்கு மார்க்சிய அறிவு போதாமையாக உள்ளது. இவர்களுக்கு இடையே விவாதங்களே நடைபெறவில்லை. ஒவ்வொரு குழுவைச் சேர்ந்தவர்களும் தங்களது குழுவின் முடிவே சரியானது என்று கருதிக்கொண்டிருக்கிறார்கள்.

5. ரஷ்யாவில் ஒரு பக்கம், தொழிலாளர்களின் தன்னியல்பான போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தது, மறுபக்கம் மார்க்சிய படிப்புக் குழுக்கள் மார்க்சிய தத்துவ அறிவை வளர்த்துக் கொள்ளுவதற்கு முயற்சிகள் நடந்தது. இவ்விரண்டையும் இணைக்கும் பணியை லெனின் செயல்படுத்தி ஒரு ஒன்றுபட்ட கட்சி கட்டப்பட்டது. ஆனால் இந்தியாவில் தன்னியல்பான போராட்டங்கள் நடக்கிறது, ஆனால் மார்க்சிய தத்துவ அறிவை வளர்ப்பதற்கான முயற்சி இல்லை. மேலும் இவ்விரண்டையும் இணைக்கும் முயற்சி இங்கு இல்லை.

6. ரஷ்யாவில் கம்யூனிஸ்டுகளுக்கு இடையே அரசியல் சித்தாந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டது. ஆனால் இந்தியாவில் கம்யூனிஸ்டுகளுக்கு இடையில் அரசியல் சித்தாந்தப் போராட்டத்திற்கு மாறாக தனிநபர் தாக்குதல், மற்றும் குழுக்களுக்கிடையிலான தாக்குதல்கள்தான் நடந்துகொண்டிருக்கிறது.

7. ரஷ்யாவில் மார்க்சியத்திற்கு எதிரான நரோத்தினியம் மற்றும் பொருளாதாரவாத கருத்துக்களை கம்யூனிஸ்டுகள் வீழ்த்தினார்கள். அதன் அடிப்படையிலேயே அங்கு கட்சி கட்டப்பட்டது. ஆனால் இந்தியாவில் இதுபோன்ற மார்க்சியத்திற்கும் மக்களுக்கும் எதிரான கருத்துக்களான டிராட்ஸ்கியம், அடையாள அரசியல், பின்நவீனத்துவவாதம், முதலாளித்துவ சீர்திருத்தவாதம், தலித்தியவாதம், திருத்தல்வாதம், கலைப்புவாதம், பிளவுவாதம், குறுங் குழுவாதம் போன்ற பல்வேறு மக்கள் விரோத கருத்துக்களை இந்திய கம்யூனிஸ்டுகள் முறியடிக்கவில்லை.

ஆகவே மார்க்சியத்திற்கும், மக்களுக்கும் எதிரான பல்வேறுவிதமான கருத்துக்களை தெளிவான சித்தாந்தப் போராட்டம் நடத்தி முறியடிப்பதும் அதன் அடிப்படையில் கம்யூனிச குழுக்களையும், அமைப்புசாரா கம்யூனிஸ்டுகளையும் ஒருங்கிணைத்து ஒரு ஒன்றுபட்ட கம்யூனிஸ்டு கட்சியை கட்டுவதன் மூலம் வர்க்கப் போராட்டத்தில் முன்னேறி உழைக்கும் மக்களை கூலி அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்போம்.

தேன்மொழி

கம்யூனிசத்திற்கு எதிரான துரோகிகளை முறியடிப்போம் -தேன்மொழி

 கவிதா கிருஷ்ணன் அவர்கள் சிபிஅய்(எம்-எல்)லிபரெசனில் இருந்து வெளியேறிய பொழுது வைத்த குற்றசாட்டுகளுக்கு அந்த அணி பதிலளிக்கவில்லை அதே போன்று வலதுசாரிகள் அதனை தூக்கி நிறுத்தியிருந்தவை ஏன் என்பதனை பற்றி ஒரு சிறிய அலசல் இந்தக் கட்டுரை உங்களின் மேலான விவாதத்தை தொடக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.



கவிதா கிருஷ்ணன், ஒரு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர். தொண்டு நிறுவனம் என்பது உழைக்கும் மக்களுக்கு ஆதரவானவர்கள் போல் நடித்துக்கொண்டு, உழைக்கும் மக்களை சுரண்டி வாழும் முதலாளிகளுக்கு ஆதரவாக உழைக்கும் மக்களை ஏமாற்றும் கொள்கை கொண்டவர்கள்தான் இந்த தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். அந்த வகையில் கவிதா கிருஷ்ணன் என்பவர் உழைக்கும் மக்களுக்காக பாடுபடுவது போல் நடிக்கும், உழைக்கும் மக்களை ஏமாற்றும் துரோகிதான். தற்போது உலகெங்கிலும் உழைக்கும் மக்கள் ஏகாதிபத்தியவாதிகளை எதிர்த்துப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஏகாதிபத்தியவாதிகள்தான் உலகெங்கிலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள். இந்த ஏகாதிபத்திய ஆட்சியாளர்களால் மக்கள் சந்திக்கும்

எந்தப் பிரச்சனையையும் தீர்க்க முடியாத நிலையில் உள்ளார்கள். ஆகவேதான் உழைக்கும் மக்கள் தங்களது பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தயாரில்லாத இந்த ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

உதாரணமாக இந்தியாவில் விவசாயிகளின் போராட்டம், வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம், தமிழ்நாட்டில் நடைபெற்ற மெரினா

கடற்கரை போராட்டம், தூத்துக்குடி போராட்டம் போன்றவைகளை ஒடுக்குவதற்கு பல்வேறு முறைகளை ஆளும் வர்க்க ஆட்சியாளர்கள் கையாண்டார்கள். ஆனாலும் இந்த அடக்கு முறைகளின் மூலம் மட்டுமே உழைக்கும் மக்களை அடக்கிவிட முடியாது. ஆகவே ஆளும் வர்க்கமும் அதன் ஆட்சியாளர்களும் கவிதாகிருஷ்ணன் போன்ற மக்களின் துரோகிகளை பயன்படுத்திமக்களிடையேயும்,மக்களுக்காகப் பாடுபடும் முன்னணிகளிடமும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். இதன் மூலம் மக்களின் கோபத்திலிருந்து ஆளும் வர்க்கங்களும், அதன் அரசியல்வாதிகளும், அதன் ஆட்சியாளர்களும் தப்பிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் சமூக இயக்கமானது இவர்கள் நினைப்பது போன்று இருக்காது. வறுமையில் வாடுபவர்கள் எப்போதும் ஒரே மாதிரி இவர்களை நம்பி ஏமாந்து கொண்டேஇருக்க மாட்டார்கள். மக்களை ஏமாற்றும் இத்தகைய துரோகிகளை நிச்சயமாக அடையாளம் கண்டு கொள்வார்கள். இவர்களை புறக்கணித்துவிட்டு ஆளும் வர்க்கங்களுக்கு எதிராகவும் அவர்களின் ஆட்சிக்கு எதிராகவும் உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு போராடுவார்கள். ஒன்றுபட்ட உழைக்கும் மக்கள் புதிய உலகத்தை படைப்பார்கள்.

தோழர் ஸ்டாலினைப் பற்றியும் சோசலிச சோவியத்து ஆட்சியைப் பற்றியும் இந்த கவிதாகிருஷ்ணன் முன்வைக்கும் கருத்து என்ன? ஸ்டாலின் காலத்தில் ரஷ்யாவில் சோசலிசம் என்ற பெயரில் சர்வாதிகார ஆட்சி நடந்ததாக இவர் கூறுகிறார். முதலாளித்துவத்திற்கும் கம்யூனிசத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு அரசு முறை உண்டு அது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்தான் என்று மார்க்ஸ் முதல் லெனின், ஸ்டாலின் மாவோ வரை கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாகவே கூறியுள்ளார்கள். அதனை கம்யூனிஸ்டுகள் மூடி மறைத்தது இல்லை.

இதற்கு மாறாக முதலாளித்துவவாதிகள் தான் அனைத்து மக்களுக்கான ஜனநாயகம் என்று சொல்லி முதலாளித்துவ சர்வாதிகாரஆட்சியை உலகெங்கும் நடத்திவருகிறார்கள்.

முதலாளித்துவவாதிகள் எப்படி ஜனநாயகம் என்று பொய் சொல்லி மக்களை ஏமாற்றி முதலாளித்துவசர்வாதிகாரத்தைசெயல்படுத்து கிறார்களோ அதே கருத்தைத்தான் கவிதா கிருஷ்ணன் அவரது பாணியில் சொல்லி பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை எதிர்க்கிறார்.

ஸ்டாலினை சர்வாதிகாரி என்று சொல்லி பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை எதிர்ப்பதுதான் இவர்களது கொள்கையாகும். அதன் மூலம் ஜனநாயகம் என்று பொதுவாகச் சொல்லிமுதலாளித்துவ சர்வாதிகாரத்துக்கு இவர்கள் வக்காலத்து வாங்குகிறார்கள்.

எனினும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை ரஷ்யாவில் நடைமுறைப் படுத்துவதில் ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சி தோல்வியடைந்தது. அதாவது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டுவிட்டு முதலாளித்துவ சர்வாதிகாரத்தை கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் ஊடுருவிய அதிகார வர்க்கத் தன்மை கொண்டவர்கள் மாற்றிவிட்டார்கள் என்பது உண்மையே. தோழர் ஸ்டானினது கவனம் அதிகமாக சோசலிசத்துக்கும், கம்யூனிசத்துக்கும் அடிப்படையான பொருளாதார வளர்ச்சி அதாவது உற்பத்தியை மேலும் மேலும் சமூகமயமாக்குவதில் குவிந்துஇருந்தது. மேலும் ஜெர்மனியரின் ஆக்கிரமிப்புப் போரால் ரஷ்யா மிகக் கடுமையானஇழப்புகளை சந்தித்து இருந்தது. அந்த இழப்புகளை சீர்செய்து மீண்டும் ரஷ்யாவில்தொழில்துறையை முன்னேற்றும் பணியில் ஸ்டாலின் ஈடுபட்டார். அதனால் அவரால்கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் ஊடுருவிய அதிகாரவர்க்கத்தினரை கண்காணித்துநடவடிக்கை எடுக்க முடியவில்லை. ஆனாலும் ஸ்டாலின் இருக்கும்வரை ஊடுருவிய அதிகார வர்க்கத்தினர் அங்கு முதலாளித்துவ மீட்சியை கொண்டுவர முடியவில்லை என்பது வரலாறு.ஸ்டாலினை கொலை செய்த பின்புதான், இந்த அதிகார வர்க்க நபர்களுக்கு ஆதரவு கொடுக்கும் குருஷேவ் ஆட்சிக்கு வந்த பின்புதான் சிறிது சிறிதாக சோசலிச பொருளாதார கொள்கையை கைவிட்டுவிட்டு இந்த அதிகாரவர்க்க நபர்களின் நலன்களுக்கான கொள்கையை கொண்டுவந்தார்கள். அப்போதும் அங்கே தனிநபர்கள் முதலாளிகளாக இருந்து உழைப்பின் பலன்களை நுகரவில்லை. மாறாக உழைப்பின் பலனில் பெரும்பகுதியை இந்த அதிகாரவர்க்க நபர்கள்தான் அனுபவித்தார் கள். ரஷ்யாவில் இந்த அதிகாரவர்க்க நபர்களின் சர்வாதிகாரத்தை ஏற்படுத்தினார்கள். ஆகவே ஸ்டாலின் காலத்திலிருந்த சர்வாதிகாரம்பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாகும். ஸ்டாலினது மறைவிற்குப் பிறகுதான் இந்த அதிகார வர்க்கங்களின் சர்வாதிகாரம் அங்கு ஏற்பட்டது. இந்த உண்மையை ஸ்டாலினையும்சோசலிசக் கொள்கைகளை எதிர்க்கும் ஏகாதிபத்தியவாதிகளும், டிராட்ஸ்கியவாதிகளும் மூடி மறைத்துவிட்டு ஸ்டாலினையும் சோசலிச ஆட்சியையும் சர்வாதிகாரம் என்று சொல்லி உழைக்கும் மக்கள் கம்யூனிச கொள்கையின் பக்கம் வரவிடாமல் தடுப்பதற்கு முயற்சி செய்கிறார்கள்.

ஆகவே கம்யூனிஸ்டுகளாகிய நாம் உழைக்கும் மக்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து கம்யூனிசத்தின் முக்கியத்துவத்தை போதித்து அவர்களுக்கு புரியவைப்போம். மேலும் கம்யூனிசத்தை ஏற்றுக்கொண்டவர்கள் போல் நடித்துக் கொண்டு கம்யூனிச கொள்களுக்கு எதிரான கொள்கையை பிரச்சாரம் செய்யும் டிராட்ஸ்கியவாதிகளையும் கவிதா கிருஷ்ணன் போன்ற துரோகிகளின் உண்மையான கம்யூனிச விரோத முகத்தை தோலுரித்துக் காட்டுவோம். கவிதா கிருஷ்ணன் போன்ற கம்யூனிச துரோகிகளைக் கண்டு கம்யூனிஸ்டுகள் சோர்வடைய வேண்டாம். கம்யூனிச கொள்கையை நோக்கி மக்கள் உலகம் முழுவதும் வந்துகொண்டிருக்கிறார்கள். அவ்வாறு கம்யூனிசத்தின் பக்கம் மக்கள் வருவதை தடுப்பதற்காகவே இந்த துரோகிகள் ஸ்டாலின் சர்வாதிகாரி என்றும் சோசலிச ஆட்சியே சர்வாதிகார ஆட்சிதான் என்று மக்களிடம் பிரச்சாரம் செய்ய முன்வந்துள்ளார்கள். இவர்களின் இந்த இழிவான செயல் ஏகாதிபத்தியவாதிகளின் அச்சத்தையும் பலவீனத்தையும்தான் வெளிப்படுத்துகிறது. ஆகவே நாம் மக்களிடம் செல்வோம், கம்யூனிச கொள்கைகளை பரப்புவோம். உழைக்கும் மக்கள் கம்யூனிச கொள்கையை ஏற்றுக்கொள்வதில் எந்த தயக்கமும் காட்டமாட்டார்கள். ஏனெனில் உலகிலுள்ள அனைத்து மக்களும் சமத்துவமாக வாழ வேண்டும் என்ற கொள்கையை உழைக்கும் மக்கள் விருப்பத்துடன் ஏற்றுக்கொள்வார்கள்.

ஆனால் கம்யூனிச கொள்கையை இந்த சுரண்டல் சமூகத்தில் பலன் பெறுபவர்களும்,முதலாளிகளும், ஆதிக்கவாதிகளும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆகவே மக்களை சுரண்டி வாழ்பவர்களும் உழைக்கும் மக்களுக்கு எதிரானவர்களும் கம்யூனிசத்தைப் பற்றி தவறான பிரச்சாரம் செய்வார்கள் என்பதையும் அத்தகைய பிரச்சாரத்தை மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்றும் நாம் மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும். நமது பிரச்சாரமானது உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது, உழைக்கும் மக்களின் நலன் அடிப்படையிலேயே நமது பிரச்சாரம் இருக்கும். ஆகவே உழைக்கும் மக்கள் நம்மை நம்புவார்கள். கம்யூனிசத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்பவர்கள் மக்களிடம் அம்பலப்பட்டுப்போவார்கள்.

ஸ்டாலினுக்கு எதிராகவும் சோசலிசத்திற்கு எதிராகவும் சர்வாதிகாரம் என்ற பூச்சாண்டி காட்டிபிரச்சாரம் செய்பவர்களுக்கு ஆளும் வர்க்கங்கள், ஆட்சியாளர்கள் மற்றும் ஆளும்வர்க்கங்களின் செய்தி ஊடகங்களின் ஆதரவு மட்டுமே உண்டு இந்த ஆதரவின் பலத்திலேயே கம்யூனிசத்திற்கு எதிராக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று இவர்கள் கனவுகாணுகிறார்கள். ஆனால் இந்த துரோகிகளாலும், இவர்களுக்கு பின்புலமாக இருக்கும் ஆளும்வர்க்கமும் அதன் ஆட்சியாளர்களால் மக்களுக்கு ஒரு குண்டூசி அளவுகூட நன்மை செய்துவிட முடியாது மாறாக மக்களுக்கு மேலும் மேலும் துண்பங்கள்தான் கொடுக்க முடியும்.

இந்த உண்மையை மக்களிடம் நாம் எடுத்துச் சொன்னால், மக்கள் இவர்களை தெளிவாகப்புரிந்துகொள்வார்கள். மேலும் மக்களுடைய பிரச்சனைகளை யாரோ தீர்ப்பார்கள் என்றகருத்து உள்ளது. அது தவறான கருத்து என்பதையும் மக்கள் தங்களுடைய பிரச்சனைகளை கூட்டாக ஒன்று சேர்ந்து பாடுபட்டு அவர்களது சொந்த முயற்சியின் மூலம்தான் தீர்க்க முடியும்என்ற உண்மையைச் சொல்லி பாதிப்புக்குள்ளாகும் அனைத்து மக்களும் ஒன்று சேர வேண்டும்என்ற உண்மையும், மக்களின் எதிரிகளை அடையாளங்கண்டு ஒன்றுபட்ட மக்கள்தான்போராட வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் மக்களுக்கு விளக்க வேண்டும். அதற்குவழிகாட்டுபவர்கள்தான் கம்யூனிஸ்டுகள் என்பதையும் நாம் மக்களுக்கு விளக்க வேண்டும்.

மேலும் மிகவும் முக்கியமான விசயம் கம்யூனிஸ்டுகளாகிய நாம் முதலில் ஒன்றுபட வேண்டும்.

கம்யூனிஸ்டுகளாகிய நாம் ஒன்று பட்டால்தான் கம்யூனிச துரோகிகளை எதிர்த்துப் போராடமுடியும்.

ஜோசப் ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரியே. ஆனால், ஏகாதிபத்தியவாதிகளும், டிராட்ஸ்கியவாதிகள் சொல்வது போன்ற சர்வாதிகாரி அல்ல. மாறாக ஸ்டாலின் ஒரு பாட்டாளிவர்க்க சர்வாதிகாரி ஆவார். இந்த உண்மையை கம்யூனிஸ்டுகள் மறைத்தது இல்லை. பாட்டாளிவர்க்க சர்வாதிகரம் என்பதுதான் கம்யூனிஸ்டுகளின் கொள்கை யாகும்.

ஆனால் முதலாளித்துவவாதிகள் ஜனநாயகம் என்று பொய் சொல்லிக்கொண்டு முதலாளிகளின் சர்வாதிகாரத்தை செயல்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் நடைபெறும் ஆட்சி, ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகார ஆட்சிதான் மோடியின் ஆட்சி. இந்த ஆட்சியில் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், நடுத்தரமக்களுக்கும் எதிரான ஜிஎஸ்டி போன்ற சட்டங்களைப் போட்டு உழைக்கும் மக்களுக்கு எதிரான திட்டங்களைப் போட்டு மோடி கும்பல் ஆட்சி செய்கிறதே, இந்த சர்வாதிகார ஆட்சி எந்த வர்க்கத்திற்கானது என்பது தெளிவாக தெரிகிறது. உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட்டு முதலாளிகளின் நலனுக்காகவே மோடி ஆட்சி நடக்கிறது.

ஆனால் ரஷ்யாவில் ஜோசப் ஸ்டாலினது சர்வாதிகார ஆட்சியில் உழைக்கும் மக்களுக்கு எதிரான சட்டங்கள் போட்டதுண்டா? உழைக்கும் மக்களுக்கு எதிரான திட்டங்கள் போட்டதுண்டா? இல்லை என்பது வரலாறு. அதற்கு மாறாக பெருமுதலாளிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு மக்களின் சொத்தாக மாற்றப்பட்டது, அதனை அந்த முதலாளிகளின் மீது சர்வாதிகாரத்தை ஏவியே செயல்படுத்தப்பட்டது. ஆகவே ஜோசப் ஸ்டாலினது ஆட்சியானது முதலாளிகளுக்கு எதிரான சர்வாதிகார ஆட்சிதான் என்று கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் வெளிப்படையாக அறிவிக்கிறோம்.

அதே வேளையில் ரஷ்யாவில் ஸ்டாலினது ஆட்சி காலத்தில் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் கல்வி கொடுக்கப்பட்டது, அனைவருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டது,அனைவருக்கும் மருத்துவம் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் ஜோசப் ஸ்டாலினதுஆட்சியானது உழைக்கும் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கக் கூடிய அரசாக இருந்தது.ஆகவே ஓர் அரசானது முதலாளிகளுக்கு ஜனநாயகத்தை வழங்கக் கூடிய அரசாக இருந்தால்,அந்த அரசு நிச்சயமாக உழைக்கும் மக்களின் மீது சர்வாதிகாரத்தை ஏவுகின்ற அரசாகமட்டுமே இருக்க முடியும். அதேபோல் ஓர் அரசானது உழைக்கும் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கக் கூடிய அரசாக இருந்தால் அந்த அரசானது முதலாளிகளின் மீது சர்வாதிகாரத்தை ஏவக் கூடிய அரசாக மட்டுமே இருக்க முடியும். இதற்கு மாறாக முதலாளிகளுக்கும், உழைக்கு மக்களுக்கும் ஒரே நேரத்தில் ஜனநாயகத்தை வழங்கக் கூடிய அரசு உலகத்தில் எங்கும் இருக்க முடியாது என்ற உண்மையை கம்யூனிஸ்டுகள் நன்கு புரிந்துள்ளார்கள். இந்த உண்மையையே கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார்கள்.

ஆகவே ஜோசப் ஸ்டாலின் சர்வாதிகாரி என்றால், ஆம் அவர் முதலாளிகளின் மீது சர்வாதிகாரத்தை ஏவிய சர்வாதிகாரிதான் என்று கம்யூனிஸ்டுகள் உரக்கச் சொல்லுவோம்.

அத்தகைய சர்வாதிகாரமே உழைக்கும் மக்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கும். ஆகவே கம்யூனிஸ்டுகளின் லட்சியம் உழைக்கும் மக்களை அரசியல் அதிகாரம் படைத்தவர்களாக மாற்றுவதே ஆகும்.

மக்களை அரசியல் அதிகாரம் படைத்தவர்களாக மாற்றுவதை எதிர்ப்பவர்கள்தான் ஜோசப்ஸ்டாலினை சர்வாதிகாரி என்றும், சோசலிச அரசை சர்வாதிகார அரசு என்றும் பிரச்சாரம் செய்கிறார்கள். இத்தகைய கம்யூனிசத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களை உழைக்கும் மக்கள் இனம் கண்டு புறக்கணிக்க வேண்டும்…

……………… தேன்மொழி


இலக்கு 9 இணைய இதழ் PDF வடிவில்

இலக்கு - 9 இணைய இதழ் இங்கே அழுத்தி பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் 

இந்தியத் தத்துவம் எளிய அறிமுகம் 8. வைசேஷிகம் –அ.கா.ஈஸ்வரன்

 


அறிவைப்பெறுகிற வழியை இந்தியத்தத்துவங்கள் பிரமாணங்கள் என்றுகூறுகிறது. இந்த பிரமாணங்களை முதலில் நன்றாகப் புரிந்து கொண்டால் தத்துவங்களை படித்தறிவது எளிதாக இருக்கும். தத்துவங்களைஅறியத் தொடங்கு வதற்கு முன்பேஇதனை அறிந்து கொள்ள வேண்டும்.

பிரமாணங்கள்

பிரமாணங்கள் என்றால் அறிவதற்கான வழிமுறை. இந்தப் பிரபஞ்சத்தை அறிய வேண்டுமானால் அதற்கான வழிமுறையை சரியாக ஏற்க வேண்டும். எந்த பிரமாணங்களைக் கொண்டுஅறிகிறோமோ முடிவுகள் அதன் தன்மையினதாகவே இருக்கும். பிரமாணங்கள் பலவாகும்.

பிராமாணங்களில் சிலவற்றைப் பார்க்கலாம். 1.பிரத்தியட்சம் (புலனுணர்வு), 2.அநுமானம் (உய்த்துணர்வு), 3.ஆப்தவாக்கியம் (உரைச்சான்று), 4.உபமானம் (ஒப்புநோக்கு), 5.அர்த்தாபத்தி (சூழ்நிலைசார்உய்த்துணர்வு), 6.அனுபலப்தி (எதிர்மறைச்சான்று).

1.பிரத்தியட்சம்என்பது நேரடியாக அறிவதாகும், பார்வை முதலான புலன்களின்உதவியினால் அறிவது அனைத்தும்பிரத்தியட்சம். இதனைதமிழில் காட்சியளவை, காண்டலளவை, புலனுணர்வு என்பர்.

2.அநுமானம்என்றால் காட்சிக்கு தெரியாதப்பொருளை, இதற்கு முன்நேரடியாக அறிந்ததைக் கொண்டுஊகிப்பது. அதாவது உய்த்துணர்தல். வீட்டின் உள்ளே இருக்கும் போது வெளியேபெய்யும் மழையை கண்ணும் காதும் அறிவதில்லை, ஆனால்திடிரென்று ஏற்பட்ட குளிர்ச்சியின் மூலம் மழைபெய்வதை அறியலாம், அவ்வாறுஊகித்து அறிவது அநுமானம். மழை பெய்யும் போதெல்லாம் குளிர்ச்சி ஏற்பட்ட நேரடிஅனுபவங்களின் அடிப்படையில் இவ்வாறு முடிவெடுத்தல் அநுமானம்.

பிறர் அனுபவங்களின் அடிப்படையிலும் முடிவெடுப்பதும் அநுமானமாகும். ஊட்டி, கொடைக்கானல் என்கிற ஊர்கள், மலைகளைக் கொண்டது என்பதைநேரில் சென்று பார்க்காதவர்களும், பிறரது அனுபவத்தால்கூறிட முடியும். நெருப்புசுடும் என்பதை அனுபவிக்காதுகூறுவது பிறரது அனுபவமே.

3.ஆப்தவாக்கியம்என்றால் நேரடியாகவும் அநுமானத்தாலும் அறிய முடியாததைநூல்களின் மூலம் அறிந்துகொள்வது. ஆப்தவாக்கியத்தை சாஸ்திரபிராமாணம் என்றும் கூறுவர். தமிழில் இதனை உரைச்சான்றுஎன்று கூறப்படுகிறது. முன்னோர்கள்கூறியது, பெரியோர்கள் கூறியதுஅனைத்தும் உரைச்சான்றே. கடவுள் உலகைப் படைத்தார் என்பது உரைச்சான்று. கடவுள் உலகத்தைப்படைக்கவில்லை என்பதும் உரைச்சான்றுதான். ஏதை ஏற்பதுஎன்பதை அவரவர் அனுபவங்களின்படி உரைச்சான்றை முடிவெடுப்பர். பிரத்யட்சம், அனுமானம், ஆப்தவாக்கியம் என்கிற இந்த மூன்றே பிரமாணங்களில் முதன்மையானதாகும்.

4.உபமானம்என்றால் தெரியாத ஒன்றை, தெரிந்ததை கொண்டு ஒப்பிட்டுஅறிதல். அறிந்த ஒன்றின்அடிப்படையில் அறியாத ஒன்றைஅறிதல், அதாவது ஒப்புநோக்குதல். பலவற்றில் உள்ளவேறுபாடுகளை ஒப்பிட்டு அதில் உள்ள ஒற்றுமை வேற்றுமை ஆகியவற்றைக் கொண்டு முடிவெடுப்பது.

5. அர்த்தாபத்திஎன்றால் சூழ்நிலைசார்ந்து உய்த்துணர்தல். மேலே கண்டபிரத்தியட்சம், .அநுமானம், .ஆப்தவாக்கியம், உபமானம்ஆகிய நான்கு வழிகளில்கிடைக்காததைப் “பெறும்வழி” என்று கூறலாம். அதாவது இந்த நான்குவழியில் கிட்டாததை அறியும் “வழி முறையே” அர்த்தாபத்தி. தொடர் உண்ணாநோன்பு இருப்பதாக கூறியவன், ஒரு வாரத்துக்குப் பிறகும்சோர்வு அடையாமல் இருக்கிறான்என்றால், யாரும் அறியாதபோது உணவு சாப்பிட்டிருக்கிறான் என்று அறிவது அர்த்தாபத்தி.

6. அனுபலப்திஎன்றால் இல்லாத ஒன்றை “இல்லை” என்று அறிவது. அலுவலகத்தில் உள்ள கணவர்மனைவியிடம் அலைபேசியில், வீட்டிற்குவிருந்தினர் வந்துள்ளனரா என்றுகேட்டதற்கு, “இல்லை” இதுவரை வரவில்லை என்று வராததை அறிவது அனுபலப்தி. நெல்லை விரைவு ரயில் வந்துவிட்டதா? என்றுகேட்பவரிடம் ரயில் வரவில்லை என்பதை அறிந்து அவருக்கு சொல்வது அனுபலப்தி. இதை எதிர்மறைச் சான்று என்றுகூறலாம். பிரத்யட்சம் என்றஒரு பிரமாணத்தை மட்டும்ஏற்பவர் உலகாயதர். பிரத்யட்சம், அநுமானம் ஆகியஇரண்டை மட்டும் ஏற்பவர் வைசேஷிகர். பிரத்யட்சம், அநுமானம், ஆப்தவாக்கியம் ஆகிய மூன்றைஏற்பவர் சைவசித்தாந்தி. பிரத்யட்சம், அநுமானம், ஆப்தவாக்கியம், உபமானம் ஆகியநான்கை ஏற்றுக் கொள்பவர்நியாய தத்துவவாதி. பிரத்யட்சம், அநுமானம், ஆப்தவாக்கியம், உபமானம், அர்த்தாபத்தி ஆகிய ஐந்தையும் ஏற்பவர்மீமாம்சைப் பிரிவில் உள்ள பிரபாகரர். பிரத்யட்சம், அநுமானம், ஆப்த வாக்கியம், உபமானம், அர்த்தாபத்தி, அனுபலப்தி ஆகிய ஆறு பிரமாணங் களையும் ஏற்றுக்கொள்பவர்கள் மீமாம்சைப் பிரிவில் உள்ள பட்டர், வைதீகவேதாந்திகள்.

வைசேஷிகம்

ஐந்துதரிசனங்கள் என்று கூறப்படுகிற மரபில் வைசேஷிகம் மூன்றாவதாக வருகிறது. இதுவும் மிகமிகபழையான தத்துவப் போக்காகும்.

வைசேஷிகத்துக்கு தொடக்கநூலாகக் கிடைப்பது “வைசேஷிக சூத்திரம்”. இந்தநூலை கணாதர் என்பவர்சுமார் கி.மு. 200 ஆம் ஆண்டில் எழுதினார். பத்து அத்தியாயங்களையும் மொத்தம் 374 சூத்திரங்களையும் கொண்டதுஇந்த நூல்.

பிரபஞ்சம் தோன்றுவதற்குஅணுவே அடிப்படை என்றுவைசேஷிகம் அணுக் கோட்பாட்டை முன்வைக்கிறது. இந்தியத் தத்துவங்களில்அணுவை அடிப்படையாக பலதத்துவங்கள் கூறினாலும் வைசேஷிகம் அணுக் கோட்பாட்டை சிறப்பாககூறியுள்ளது.அனைத்தும் அணுவில்இருந்து தோன்றுகிறது என்றுகூறுகிற வைசேஷிகம். எந்தபொருளையும் பிரித்துப் பார்த்தால் இறுதியில் பிரிபடாத அணுகாணப்படும்,அந்த அணுவேபொருளாக பிறப் பெடுப்பதற்குக் காரணம்ஆகும். அத்தகைய அணுவைஒற்றைப் பொருளாக பார்க்கவில்லை பல என்று கருதினர். ஒவ்வொரு பொருளுக்கு பலஅணுக்கள் தேவைப்படுகிறது. சிறியபொருளுக்கு சிறிய தொகைஅளவிலா அணுக்களும் பெரிய பொருளுக்கு பெரிய தொகைஅளவிலான அணுக்களும் அடிப்படையாகும்.

ஒவ்வொருபொருள் தோன்றுவதற்கும் ஒவ்வொருஅணு இருப்பதாக கூறுவதால், வைசேஷியர்கள் பன்மைவாதிகள் ஆவார். ஒவ்வொரு தனிப்பொருளும் பல்வேறு கூட்டுப்பொருளால் ஆனது, அந்த கூட்டுப் பொருளைஒவ்வொன்றாக பிரித்தால் இறுதியில் அந்த பொருளுக்கு உரிய அணுவைக் காணலாம். இந்தஅணுவை பிரிக்க முடியாது என்று வைசேஷியர்கள் கருதினர். இந்த அணு நிலைத்தவை. இதற்கு தொடக்கமோ இறுதியோகிடையாது. அணுக்களால் உருவானபொருட்களே அழிவடையும், இந்தஅணு அழியாது என்பதே வைசேஷிகத்தின் கருத்து.

வைசேஷிகத்தின் அணுக் கோட்பாடு கிரேக்க சிந்தனையில் இருந்து வந்ததாக சில தத்துவ அறிஞர்கள் கருதுகின்றனர். எந்த கருத்தும் அது தோன்றுவதற்கு சூழ்நிலை இல்லாமல் ஏற்படாது. இதனடிப்படையில் எந்த சூழ்நிலைமையினால் கிரேக்கத்தில் அணுக் கோட்பாடு உருவாக்கியதோ, அதே நிலைமை இங்கே உருவான போது வைசேஷிகம் போன்று நம் நாட்டு தத்துவங்களில் அணுக் கோட்பாடு தோன்றி இருக்கலாம் என்று கருதுவது தவறாகாது. பொருட்களின்தோற்றத்துக்கு அணுக்களின் தொகையேகாரணமாக கூறப்படுகிறதே தவிர, அணுவில் உள்ளே, அந்த பொருளுக்கான காரணம் இருக்கிறதுஎன்று வைசேஷிகம் கருதவில்லை. அதனால் வைசேஷிகத்தை அசத்காரியவாதம் என்று கூறப்படுகிறது.

காரணத்தில் இருந்தேகாரியம் நிகழ்கிறது என்பதுசத்காரியவாதம். வைசேஷிகத்தில் அணுவானது பொருளுக்கு காரணமாக கூறப்படவில்லை. தோற்றத்துக்கு அடிப்படையான அணுவை தொகைஅளவால் விளக்கப்படுகிறது. அணுவேகாரணம் என்று கூறப்படவில்லைஎன்பதனால் வைசேஷிகம் சத்காரியத்துக்கு எதிரான அசத்காரியவாதம் என்று அழைக்கின்றனர்.

காரணத்தில் இல்லாதது காரியத்தில் காணப்படுவதால் அசத்காரியவாதமாக கூறப்படுகிறது. அதாவது எந்த அணுவிலும் பொருள் உருவாவதற்கான காரணம் அதில் அடங்கி இருக்கவில்லை.

இருந்தாலும் உலகப் படைப்புக்கு, உலகுக்குஅப்பாற்பட்ட சக்தியாக-தெய்வமாக எதையும் வைசேஷிகத் தத்துவம் கூறாததால், இதனை தொடக்கநிலை பொருள் முதல் வாதமாகக் கூறலாம். தொடக்கால வைசேஷியத்தில் தெய்வத்தைப் பற்றி கூறவில்லை, உலகப் படைப்புக்கு தெய்வத்தை காரணமாகக் காட்டவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அறியப்படும் உலகம்உண்மை எனவும் இந்த புறநிலையாக இருக்கிற உலகைஅறிய முடியும் என்றுவைசேஷிகம் உறுதியாகக் கூறுகிறது. அறியப்படும் பிரபஞ்சமே உண்மையானது என்று கருதுவதினால் படைப்புக்கு வைசேஷிகம் தெய்வ சக்தியைகூறவில்லை. அதற்கு பதில்பொருள்தன்மை உடைய “அதிர்ஷ்டம்” என்பதையே, பிரபஞ்சத் தொடக்கத்துக்கு உரியதாகக் கூறியது.

அணுக்கள்பொருளாக மாறுவதற்கு “அதிர்ஷ்டம்” என்ற ஒன்றை தொடக்ககால வைசேஷியர்கள் கூறினர். காரணம் எதுவும் இல்லாதுஇந்தப் பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பதே வைசேஷிகர் கொள்கை.அணுக்களை ஒன்றிணைப்பது “அதிர்ஷ்டம்”. இந்தஅதிர்ஷ்டம் என்பது பிரம்மம், தெய்வம் போன்றதல்ல. அணுக்களைபொருளாக மாற்றுவதற்கு சேர்க்கையின் தொடக்கத்தையே “அதிர்ஷ்டம்” என்றனர். “அதிர்ஷ்டம்” என்றால்தொடக்கம் என்று பொருள்கொள்ளலாம். இந்த “அதிர்ஷ்டம்” என்பதை சாங்கியம் கூறுகிறசுபாவத்தோடு இணைத்துப் பார்க்கலாம்.

நெருப்பு மேல்நோக்கி எரிவதற்கும், காற்று நாலாபக்கம் வீசுவதற்கும், அணுக்கள் செயல்படத் தொடங்கியதற்கும் “அதிர்ஷ்டம்” தான் அடிப்படை என்கிறது (5:2.13) வைசிஷேக சூத்திரம்.

தொடக்காலசைவேஷிகத்தில் தெய்வம் படைப்புக்குக்காரணமாகக் கொள்ளவில்லை என்பதுநன்றாகத் தெரிகிறது. ஆனால் பிற்காலத்திய வைசேஷிக நூல்களிலும், விளக்கங்களிலும் தெய்வம் சேர்க்கப்பட்டுள்ளது.

இது பற்றிகி.லக்ஷ்மணன் கூறுவதைப் பார்ப்போம்.

“வைசேடிகருள், காலத்தால் முற்பட்டோர் “அதிர்ஷ்டம்” என்றதத்துவம் அணுக்களை இயக்குகின்றதுஎனக் கொண்டனரேனும், பின்வந்தோர்அணுக்களை ஒன்று சேர்த்து உலகை ஆக்குவோனும், பின்அவற்றைப் பிரிப்பதன் மூலம்உலகை அழிப்போனும் இறைவனேஎனக் கொண்டனர்”

(இந்தியத் தத்துவஞானம்- பக்- 241)

அனைத்து தொடக்கநிலை பொருள் முதல்வாதத் தத்துவத்துக்கு என்ன நேர்ந்ததோ அதுவே வைசேஷிகத்துக்கும் நேர்ந்தது. அதனால் இன்றைய நிலையில் உள்ள வைசேஷிக விளக்கங்கள் கலப்புற்றதாகவே காணப்படுகிறது.

இந்த உலகம்ஏழு வகையினங்களால் (பதார்த்தங்களால்) ஆனதாக பிற்கால வைசேஷிகம் கருதுதியது.

1) பொருள் (திரவியம்) 2) பண்பு (குணம்) 3) செயல் (கர்மம்) 4) பொதுவானது (சாமான்யம்) 5) சிறப்பானது (விசேஷம்) 6) இயல்பு (சமவயம்) 7) இன்மை (அபாவம்).

1) திரவியம் என்றால் பொருள். ஏழு வகையினங்களில் பொருள் முதன்மையானது. உயிருள்ள பொருள், உயிரற்றப் பொருள் ஆகிய அனைத்தையும் பொருள் என்றுகூறப்படுகிறது. ஒவ்வொரு பொருளும் ஒன்பது கருப் பொருளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பொருளின் பண்புகளும் அதற்கான செயல்களும் கருப்பொருளில் உள்ளடங்கி உள்ளது.

1) நிலம் (பிருதிவி) 2) நீர் (அப்பு) 3) நெருப்பு (தேஜஸ்) 4) காற்று (வாயு) 5) வானம் (ஆகாசம்) 6) காலம் 7) திசை (திக்கு) 8) ஆத்மா 9) மனம்.

முதல் ஐந்தும்ஐந்து பூதங்களே ஆகும். இதில் முதல் நான்குநேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் உள்ளது, வானத்தை முழுமையாக அறிந்து கொள்ளமுடியாது என்று வைவேஷிகம்கருதியது.

முதல் நான்கும்இயக்கங்களைக் கொண்டதாகவும் வானம்இயக்க மற்றது என்றும்கூறுகிறது. காலம், திசைஆகிய இரண்டும் வானத்தைப்போன்றே முடிவற்றவை அழியாதவை. ஆத்மா என்பது பேருணர்வு. இந்தப் பேருணர்வு உடலின்பகுதியாக கருதப்படவில்லை..

பிறப்புக்கு முன்பும் இறப்புக்குப் பின்பும் இருப்பதாக கூறப்படுகிறது. கண்களால்அறிய முடியாதது ஆத்மா. ஆத்மா பல என்பதேவை சேஷியர்களின் முடிவு. ஆத்மாவோடு இணைகிற இன்பம்-துன்பம், சிறப்பு-இழிவு ஆகியவை நிலைத்தவை அல்ல. விடுதலை அடையும் போது ஆத்மாவிடம் எந்தப் பண்புகளும் இருப்பதில்லை என்பதே பிற்கால வைசேஷிகத்தின்ஆத்மா பற்றிய கருத்தாகும். பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட ஆத்மா என்பது அணுக்கொள்கைக்கு முரணாக இருக்கிறது.

அடுத்துமனம். அனைத்து ஆத்மாவுக்கும்மனம் என்ற ஒன்று இருக்கிறது. மனம் அறிதலுக்கான கருவியாக கருதினர். மனத்தின்மூலமே பொருட்களுடன் தொடர்பு கொள்ளப் படுகிறது மேலும்பொருட்கள் அறியப்படுகிறது.

2) குணம்என்பது பொருட்களின் பண்புஆகும். பொருளுக்கான பண்புகளாக சிலவற்றைப் பார்ப்போம். நிறம், சுவை, மணம், ஊறு, ஓசை, எண், அளவு, தனித்திருத்தல், சேர்தல், பிரிதல், சேய்மை, அண்மை, அறிவு, இன்பம், துன்பம், விருப்பு, வெறுப்பு, முயற்சி, மந்தம், நீர்மை, தீமைஎன்கிற இவை அனைத்தும் பொருட்களின் பண்புகளாகும்.

3) செயல்என்பது பொருளின் இயக்கம். அந்த இயக்கம் ஐந்துவகையினதாகும். மேல்நோக்கியஇயக்கம், கீழ்நோக்கிய இயக்கம், சுருங்குதல், விரிதல், இடப்பெயர்வுஆகிய இவைகளே ஐந்துஇயக்க வகைகள் ஆகும்.

4) பொதுவானது (சாமான்யம்) என்பது பொருட்களின் பொதுத்தன்மை ஆகும். அதாவது பல்வேறு பொருட்களுக்கு இடையே காணப்படும், குறிப்பிட்ட ஒத்ததன்மையைக் குறிக்கிறது. சிவப்பு, கருப்பு, பச்சை, மஞ்சள், நீலம் என்பது தனிப்பட்ட நிறங்கள். அனைத்தையும் குறிக்கும் பொதுவான சொல் நிறம். இங்கே நிறம் என்பதுபொதவானது. பொன் மீன், நட்சத்திர மீன் என்பது குறிப்பானது, மீன்கள் என்பதுபொதுத்தன்மை ஆகும்.

5) சிறப்பானது (விசேஷம்) என்பது பல்வேறு பொருட்களுக்கு இடையே தனித்து காணப்படும் தன்மையைக் குறிக்கிறது. நிறம் என்பது பொதுவானது, சிவப்பு, கருப்பு, பச்சை, மஞ்சள், நீலம் என்பது குறிப்பானது-சிறப்பானது. அதே போல் மீன்கள் என்பது பொதுவானது. பொன்மீன், நட்சத்திர மீன்என்பது சிறப்பானது. ஒவ்வொருபொருளுக்கும் உரிய குறிப்பானதையேசிறப்பானது என்று கூறப்படுகிறது. மனிதன் என்பது பொதுவானது, மார்க்ஸ், லெனின், பெரியார், அம்பேத்கர் என்பது சிறப்பானது.

6) இயல்பு (சமவயம்) என்பது “பிரிக்க முடியாது இணைந்தே” இருப்பதைக் குறிக்கிறது. நெருப்போடு வெப்பம் இணைந்திருப்பது இயல்பு, நீரோடு குளிர்ச்சி இணைந்திருப்பது இயல்பு. புயல் என்பதில் காற்றுக்கும்அதன் வேகத்துக்கும் உள்ள இணைப்பு இயல்பானது.

7) இன்மை (அபாவம்) என்பதுஎதிர்மறை சொல். நான்குவகையான இன்மை கூறப்படுகிறது. முன் இன்மை (பிராக அபாவம்), பின்இன்மை (பிரத்துவம்ச அபாவம்), நெருங்கிய இன்மை (அன்யோன்யஅபாவம்), முற்றிலும் இன்மை (அத்யந்த அபாவம்).

ஒரு பொருள் உருவாக்காத போது கூறப்படுவதே முன் இன்மை. மரம் இருக்கிறது, அதனை செய்வதற்கு தச்சர் இருக்கிறார், தச்சுக்குத் தேவையான கருவிகளும் இருக்கிறது. நாற்காலி இல்லை என்று நாற்காலி செய்து முடிக்காதவரை கூறுவதே முன் இன்மைஎன்று கூறப்படுகிறது. நாற்காலி செய்யப்பட்டவுடன் முன்இன்மை முடிவுக்கு வருகிறது.

பின் இன்மை என்பது இருப்பது இல்லாது போதல், அதாவது அழிந்துபோதல். புயலுக்கு முன்இங்கே ஒரு பெரியமரம் இருந்தது. புயலுக்குப்பின் மரம் இல்லாதுபோனது, இந்த இல்லாததையே பின் இன்மை என்று கூறப்படுகிறது.

நெருங்கிய இன்மை என்பது பொருட்களின் வேறுபாட்டைக் குறிக்கும். குரங்குஎன்பது மனிதன் அல்ல, மனிதன் மாடு அல்ல, மாடு ஆடு அல்ல, ஆடு வீடு அல்ல, வீடு அலுவலகம் அல்ல என்பது போன்று உள்ளவற்றைப் பிரித்தறிவதாகும்.

இதுவரை ஏழுவகையினங்களை சுருக்கமாகப் பார்த்தோம்.

சைவேஷிகத் தத்துவத்தின்அடிப்படை அணுக்கோட்பாடாகும் என்பதைஅறிந்தோம். அனைத்தும் அணுக்களால் ஆனது, அனைத்தையும் பிரிக்கலாம், பிளக்கலாம், ஆனால் அணுவைப் பிளக்கமுடியாது. இதுவே அன்றைய அணுக்கோட்பாட்டின் அடிப்படை. இன்றைய விஞ்ஞானம் அணுவைபிளந்து காட்டி உள்ளது. இதை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவர்கள் அறிந்திருக்க முடியாது.

இருந்தாலும் பிரபஞ்சப்படைப்புக்கு பொருள்சாரா ஒருசக்தியை கூறாது அணுவைக்கூறியது, அன்றைய நிலையில் அது போற்றத் தக்கதே. அணுவை இன்று பிளந்தாலும் அதன் பொருள் தன்மை மறைந்திடவில்லை, அணுவை ஒன்று மில்லாது ஆக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.19ஆம்நூற்றாண்டு இறுதியில் அணுக்கள் பிளவுபடக்கூடியது என்றுவிஞ்ஞானத்தால் அறிவிக்கப்பட்டது. அப்போது அனைத்துப் பொருட்களின் அடிப்படைஅணுக்கள் என்ற கருத்து கேள்விக்கு உள்ளானது. அந்தநேரத்தில் சில கருத்துமுதல்வாதிகள் பொருளே மறைந்துபோய்விட்டது, அதனால் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் தவறு என்பதை நிரூபித்துவிட்டது என்றுகூக்குரல் இட்டனர்.

பருப்பொருள்மறைந்திடவில்லை, பருப்பொருளைப் பற்றி நாம் எந்தளவுக்கு தெரிந்திருந்தோமோ அந்தஎல்லை தான் மறைந்ததுஎன்று லெனின் கூறினார்.

“பருப்பொருள்மறைந்து விடுகிறது” என்றால் நாம் பருப்பொருளைப் பற்றி இதுவரை அறிந்திருக்கின்ற எல்லைகள் மறைந்து விடுகின்றன, நம்அறிவு மேலும் ஆழமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்றுபொருள், பருப்பொருளின் குணாம் சங்களும் (ஊடுருவ முடியாத் தன்மை, சடத்துவம், திண்மை, இதரவை) மறைந்து கொண்டிருக்கின்றன, முன்னர் அறுதி யானவையாக, மாறாநிலை உடையவையாக, முதன்மையாகத் தோன்றியவை தற்பொழுது சார்பு நிலையானவையாக, பாருப்பொருளின் சில நிலைகளுக்கு மட்டுமே குறியடையாள மானவையாக தம்மை வெளிப்படுத்துகின்றன. ஏனென்றால் பருப்பொருளின் ஒற்றை “குணாம்சம்” புறநிலை யதார்த்தமாக இருத்தல், நம்முடைய உணர்வுக்கு வெளியே இருத்தல் என்ற குணாம்சமாகும், அதை அங்கீகரிப்பதுடன் தத்துவஞானப் பொருள் முதல்வாதம் சம்பந்தப்பட்டிருக்கிறது”(பொருள் முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்)

அணு பிளக்கப்பட்டதை அறிந்த பிறகு லெனின் பருப்பொருளைப் பற்றிய கருத்தை நுட்பமாக மேம்படுத்தினார். மனிதனுக்குப் புறத்தே இருப்பது பருப்பொருள். புறநிலையானது அனைத்தும் பருப்பொருள் என்று லெனின் விளக்கம் கொடுத்தார்.

இது போன்று ஒவ்வொரு புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கும் பொருள்முதல்வாத அடிப்படையில் விளக்கம் கொடுக்க வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். பிற்காலத்தில் ஆத்மாவை வைசேஷிகத்தில் சேர்க்கப்பட்டாலும் தொடக்கக் கால வைசேஷிகத்தில் ஆன்மீகக் கலப்பற்றதாகவே இருந்துள்ளது என்று பல அறிஞர்கள் கருதுகின்றனர். ஹிரியண்ணா என்கிற அறிஞர் கூறுவதைப்பார்ப்போம்.

“இக் (வைசேஷிகத்தில்) கொள்கையைப் பற்றிப் பேசும்போது இந்தத் தர்சனத்தில் கடவுள் பற்றிய கருத்தைக் குறிப்பிட வேண்டும். இதுபற்றிய குறிப்புக்கள் இந்தத் தர்சனத்தில் இருக்கின்றன என்று உரையாசிரியர்கள் கூறினாலும், அவை அங்கே காணப் பெறவில்லை. கடவுளைப் பற்றிக் கௌதமர் தற்செயலாக மட்டுமே குறிப்பிடுகிறார். தொடக்கத்தில் நியாய தர்சனம் கடவுள் கொள்கை உடையதாயிருந்ததா என்பதைப் பற்றிச் சிலர் ஐயங் கொள்கின்றனர்”

(இந்தியத் தத்துவம்- பக்-74)

வைசேஷிகத்தை மட்டும் குறிப்பிடாது நியாயத்தையும் சேர்த்தே ஹிரியண்ணா கூறியுள்ளார். வைசேஷிகத்தை ஆன்மீகமாக அல்லாது, அணுக்கோட்பாட்டின் அடிப் படையாகக் கொண்ட தொடக்க நிலை பொருள்முதல்வாதத் தத்துவமாகத்தான் கூறிட முடியும். ஆத்மாவையும், கடவுளையும் ஏற்றுக் கொண்ட பிற்கால வைசேஷிகம், இந்த உலகம் துன்பயமானதாக கருதி, இதனை விடுத்து ஆத்ம விடுதலைப் பற்றி பேசுகிறது. வைசேஷகரின் முக்தி பற்றிய கருத்தை அடுத்தப் பகுதியான நியாயத்தில் காண்போம். ஏன் என்றால் முக்தி பற்றிய ஒத்த கருத்தையே பிற்கால சைவேஷிக தத்துவமும் நியாயத் தத்துவமும் கூறுகிறது.

வைசேஷிகத்தில் ஆன்மீக கலப்பும், கடவுள் கலப்பும் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதற்கு காரணம் என்ன? அதற்கு முக்கியமானக் காரணம், நம் நாட்டுத் தத்துவங்களில் பெரும்பான்மையான தத்துவங்கள் ஆன்மீகத்துக்கு மாறாக, தொடக்கநிலை பொருள்முதல்வாதமாக இருப்பதே ஆகும்.

அவர்கள் வேலையை அவர்கள் செய்தார்கள் நமது வேலையை நாம் செய்வோம்.

இந்திய தொடக்கநிலைப் பொருள்முதல்வாத வழியில் மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை சென்று அடைவோம்.

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்