தேசம், தேசிய இன பிரச்சினை

 தேசம், தேசிய இனம் என்றால் என்ன?

ஸ்டாலின் வரையறைப்படி, "ஒரு தேசம் என்பது ஒரு பொதுவான மொழி, பொதுவான வாழும் பகுதி, பொருளாதார வாழ்வு மற்றும் மன இயல்பு ஆகிய எல்லா அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகம்". 
இது மனித குல வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கால கட்டத்தைச் சேர்ந்த வகையினம் - அதாவது முதலாளித்துவமும் சரக்கு உற்பத்தியும் தோன்றியபின்தான் தேசங்கள் தோன்றின. அவற்றின் வளர்ச்சியோடு சேர்ந்தே வளர்ந்தன. அவற்றின் முடிவில் அதாவது முழு பொது உடமை சமுதாயத்தில் தேசங்களும் மனிதர்களுக்கிடையே தேசிய இன வேறுபாடுகளும் மறைந்துவிடும் என்பது இதிலிருந்து பெறப்படுகிறது. 
முதலாளித்துவத்திற்கு முன்பு தேசங்கள் இல்லையா என்றால் பண்டைய பழங்குடி சமூகங்களின் அழிவில் தேசிய இனங்களுக்கான சில கூறுகள்தாம் தோன்றி நாளாவட்டத்தில் வளர்ந்து வந்தன. நிலப்பிரபுத்துவத்தின் இறுதியில் அதாவது முதாலாளித்துவம் வளர்ச்சியடையும் கட்டத்தில்தான் மக்கள் தேசங்களாக உருவாகின்றனர். தேசிய இயக்கங்கள் தோன்றுகின்றன. தேசிய இயக்கங்கள் முதலாளித்துவத்துடனும் சரக்கு உற்பத்தியுடனும் தொடர்புடையது என்றும் தேசம் என்பது இவ்வாறு ஒரு குறிப்பிட்ட வரலாற்று காலகட்டத்தைச் சேர்ந்த வகையினம் என்றும் ஏன் கூறுகிறோம்? 
சரக்கு உற்பத்தியும் சரக்கு பரிவர்த்தனையும் துரிதமாக நடந்தேறுவதற்கு மக்களுக்கிடையே நெருங்கிய தொடர்புகளும், ஸ்தல சந்தைகள் ஒன்றோடொன்றுடன் பிணைக்கப்படுதலும் அவசியம். 
மனித உறவுகளுக்கு மிக முக்கிய சாதனம் மொழியாதலால் ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் மக்களிடையே பரிவர்த்தனை உறவுகள் மிக விரைவில் வளர வாய்ப்புள்ளது. எனவே சரக்கு உற்பத்தி வளரத் தொடங்கியதும் அது ஒரு மொழிப் பகுதியில் பற்றி படர்கிறது. ஒரு குறிப்பிட்ட மொழிப் பகுதி அரசாங்க ரீதியில் ஐக்கியப்பட்டதாக வழியிருந்தால் சரக்கு உற்பத்தியின் பெருக்கத்திற்கும் அப்பெருக்கத்தை அடிப்படையாக கொண்ட வர்க்கமான முதலாளித்துவ வர்க்கத்தின் அபிவிருத்திற்கும் மிகவும் உகந்தது. எனவே முதலாளித்துவம் தனது சந்தை நலன்களிலிருந்து ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை கைப்பற்ற விரும்புவதுடன் அப்பகுதி அரசாங்க ரீதியில் ஐக்கியப்பட்டதாகவுமிருக்க விரும்புகிறது. அம்மொழியின் ஐக்கியத்தையும் அதன் தங்குதடையற்ற வளர்ச்சியையும் விரும்புகிறது. ஆகவேதான் எல்லா இடங்களிலும் தேசிய இயக்கங்களும் தேசிய அரசு அமைத்தலுக்கான முயற்சிகளும் முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டுள்ளன. தேசிய இயக்கங்களின் பொருளியல் அடிப்படையைப் பற்றி லெனின் பின்வருமாறு கூறுகிறார்."உலக முழுவதிலும் முதலாளித்துவமானது நிலப்பிரபுத்துவத்தின் மீது இறுதி வெற்றி கொள்ளும் காலகட்டம் தேசிய இயக்கங்களுடன் இணைந்துள்ளது. சரக்கு உற்பத்தியின் முழுவெற்றிக்கு உள்நாட்டு மார்க்கெட்டைப் பூர்சுவாக்கள் கைப்பற்ற வேண்டியது அவசியம்; ஒரே மொழி பேசும் மக்களைக்கொண்ட அரசாங்க ரீதியில் ஐக்கியப்படுத்தப் பட்ட நிலப்பரப்புகள் அதற்கு வேண்டும். அம்மொழியின் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியம் உருப்பெற்றுத் திகழ்வதற்கும் முட்டுக் கட்டையாக உள்ள தடைகள் அகற்றப்பட்ட வேண்டும். இங்கேதான் தேசிய இயக்கங்களின் பொருளியல் அடித்தளம் இருக்கிறது. மனித உறவுகளுக்கு மிகமிக முக்கியமான சாதனம் மொழி. நவீன முதலாளித்துவத்துக்கு ஏற்ற அளவில் உண்மையிலேயே சுதந்திரமான, விரிவான வாணிகத்துக்கும், மக்கள் சுதந்திரமாகவும் விரிவாகவும் பல்வேறு வர்க்கங்களாக அமைவதற்கும், இறுதியாக மார்க்கெட்டுக்கும் ஒவ்வொரு சிறிய, பெரிய உடமையாளனுக்கும், விற்போருக்கும் வாங்குவோருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்து வதற்கும் மிக மிக முக்கியமானத் தேவையான சூழ்நிலைகள், மொழியின் ஐக்கியமும் தடையற்ற வளர்ச்சியும்தான்."(லெனின்-தேசிய இயக்கங்களின் சுயநிர்ணய உரிமை).

இனி தேசிய இன பிரச்சனை என்றால் என்ன? அது ஏன் எழுகிறது என பார்ப்போம். ஒரு தேசிய இனத்தின் பொருளாதார வாழ்வு, மொழி, கலாச்சாரம் இவற்றின் தங்குதடையற்ற வளர்ச்சி அனுமதிக்கப்படவில்லையெனில் அங்கு தேசிய இன பிரச்சனை எழுகிறது. ஒரு நாட்டின் ஆளும் வர்க்கம் அங்கு ஜனநாயகத்தை அனுமதிக்கவில்லையெனில், ஜனநாயகமற்ற அரசமைப்பைக் கொண்டு சுயேச்சையான முதலாளித்துவ வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்போது அந்நாட்டில் தேசிய இன ரீதியில் தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பரப்புகளும் இருக்குமேயானால் அப்பொழுது அங்கு நிலவுகின்ற ஜனநாயகமற்ற ஆட்சிமுறையானது அத்தேசிய இனங்களின் சுயேச்சையான வளர்ச்சிக்கு விலங்கிடுகிறது; அதன் மூலம் அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கே விலங்கிடுகிறது. அப்போது தேசிய இன ஒடுக்குமுறையும் அதனை எதிர்த்து தேசிய இக்கங்களும் தோன்றுகின்றன. இம்முரண்பாட்டையே தேசிய இன பிரச்சனை என்கிறோம். எனவே இம்முரண்பாட்டிற்கு அடிப்படையாக தீர்க்கமான பொருளாதார காரணிகள் இருப்பதைப் பார்க்கமுடியும். வளரும் உற்பத்தி சக்திகளுக்கு உகந்த உற்பத்தி உறவுகள் நிலவுகின்றனவா இல்லையா, அந்நாட்டின் அரசமைப்பு முறை உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு இடையுறாக இருக்கின்றதா இல்லையா என்ற விஷயங்கள் இப்பிரச்சனை தோன்றுவதற்கு அடிப்படையாக விளங்குகின்றன.
தேசிய இன பிரச்சனையானது வரலாற்று ரீதியில் மூவகையாக தீர்க்கப்பட்டுள்ளது. முதலில் மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவம் உதித்த காலகட்டம். இக்கட்டத்தில் நிலப்பிரபுத்துவ உறவுகள் முதலாளித்துவ உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதுடன் நிலப்பிரபுத்துவ அரசமைப்பு முறைகள் ஒருங்கிணைந்த தேசிய சந்தைகள் உருவாவதை தடுக்கின்றன. தேசிய இன ஐக்கியத்தை தடுக்கின்றன. ஆகவே வெற்றியடைந்த முதலாளித்துவ வர்க்கங்கள் அனைத்தும் நிலப்பிரபுத்துவ அமைப்புகளை தகர்த்துவிட்டு ஜனநாயக அரசுகளை நிறுவின. இந்நிகழ்ச்சிப்போக்கில் தனித்தனி தேசிய அரசுகள் அமைந்தன. இவ்வாறு இப்பிரச்சனை பழையவகைப்பட்ட முதலாளித்துவ ஜனநாயக புரட்சியின் பகுதியாக தீர்க்கப்பட்டன. ஒரே அரசின் எல்லைக்குள் பல தேசிய இனங்கள் வாழும்போதுகூட அங்கு ஜனநாயக அரசு நிலவினால் தேசிய இனங்கள் அமைதியாக சேர்ந்து வாழ முடியும் அல்லது அமைதியாக பிரிய முடியும் என முதலாளித்துவம் நிரூபித்தது. (உம். சுவிட்சர்லாந்து, நார்வே) அடுத்து தாமதமாக முதலாளித்துவம் வளரத் தொடங்கிய கிழக்கு ஐரோப்பாவில் அதாவது முதலாளித்துவ ஜனநாயகபுரட்சிகள் நிறைவு பெறாதிருந்த நாடுகளில் பல தேசிய அரசுகள் நிலவிய இடங்களிலெல்லாம் அந்த ஜனநாயகமற்ற அரசமைப்புமுறைகளுக்கும் முதலாளித்துவம் வளர்ந்துவந்த தேசிய இன பரப்புகளுக்குமிடையே முரண்பாடு கூர்மையடைந்தது (உ.ம். ஜாரிச ரஷ்யாவில் போலந்து, உக்ரேன்) இம்முரண்பாடுகள் தேசிய இனப் பிரச்சனையாக உருவெடுத்தன. அதே சமயம் முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக பரிணமித்துவிட்டபடியால் முதலாளித்துவம் புரட்சிகர குணத்தை இழந்து பிற்போக்காக மாறிவிட்டபடியால், உலக முதலாளித்துவ புரட்சிக் கட்டம் முடிவுக்கு வந்து உலக பாட்டாளி வர்க்க புரட்சிக்கட்டம் தொடங்கிவிட்டது. எனவே பழைய வகை முதலாளித்துவ புரட்சி கட்டத்தின் போது தீர்க்கப்படாதிருந்த புரட்சிக்கடமைகளை பாட்டாளிவர்க்கம் எடுத்து நிறைவேற்றுகிறது. ஆகவே தேசிய இனப்பிரச்சனைகளும் உலக பாட்டாளி வர்க்க புரட்சியின் பகுதியாக மாறுகின்றன. அக்டோபர் புரட்சியினால் தீர்த்துவைக்கப்பட்டன. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் பிரிந்து செல்லும் ஜனநாயக உரிமை உத்திராவாதம் செய்யபடுகின்ற ஜனநாயக அமைப்பில் பல தேசிய இனங்கள் சமத்துவமாக வாழ முடியும், இன ஒடுக்குமுறையை முடிவுக்கு கொண்டுவர முடியும் என பாட்டாளி வர்க்கம் நிரூபித்தது. முன்பு முதலாளித்துவத்தின் கீழ் விதிவிலக்காகயிருந்த இன சமத்துவ அரசுகள் தற்போது பொது விதியாக மாறுகின்றன.
அடுத்து ஏகாதிபத்திய சகாப்தத்தில் தேசிய இன பிரச்சனை வேறொரு வடிவத்திலும் எழுந்தது. முதலில் வளர்ந்த ஏகாதிபத்திய அரசுகள் பின் தங்கியிருந்த ஏராளமான நாடுகளை தமதுகாலனி, அரைக்காலனி நாடுகளாக மாற்றின. இதன் மூலம் அக்காலனி, அரைக்காலனி நாடுகளின் சுயேச்சையான முதலாளித்துவ வளர்ச்சியையும், பொருளாதார, சமூக வளர்ச்சியையும் தடுத்தன. உலக முழுவதும் ஒடுக்கும் நாடுகளாகவும், ஒடுக்கப்படும் நாடுகளாகவும் பிரிந்தன. இவ்வாறு தேசிய இன பிரச்சனையானது காலனி, அரைக்காலனி நாடுகளுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்குமிடையேயான முரண்பாடாக வடிவெடுத்தது. இதனை எதிர்த்து காலனி, அரைகாலனி நாடுகளில் தேசவிடுதலை இயக்கங்கள் தோன்றின. ஏகாதிபத்தியம் மற்றும் பாட்டாளி வர்க்க சகாப்தமாக இருப்பதால் அந்த தேச விடுதலை இயக்கங்களுக்கு அந்தந்த நாட்டு முதலாளித்துவ வர்க்கங்கள் தலைமை தாங்க முடியவில்லை. ஆகவே இவ்வியக்கங்கள் உலக பாட்டாளி வர்க்க சோசலிச புரட்சியின் பகுதியாக அந்தந்த நாடுகளில் நடைபெறும் புதிய வகைப்பட்ட ஜனநாயகப் புரட்சியின் ஒருங்கிணைந்த பகுதிகளாகமாறின, இப்புரட்சி முற்றுப் பெற்ற இடங்களில் இத்தேசியயின பிரச்சனைகளுக்குத் தீர்வுக்காணப்பட்டன. (உ-ம். மக்கள் சீனம்) இந்த மூன்றாவது காலகட்டம் இன்னும் முற்றுப் பெறவில்லை. உலக ஏகாதிபத்திய அமைப்பு முடிவுக்கு வரும்போதுதான் இக்கட்டம் முடிவுக்கு வரும்.

இம்மூன்று கட்டங்களிலும் பொதுவாக ஒரு விஷயம் காணப்படுகிறது. ஜனநாயகமற்ற ஆட்சிமுறை நிலவுவதால்தான் தேசிய இனப்பிரச்சனை எழுகிறது. ஆகவே அரசை ஜனநாயக ரீதியில் சீரமைப்பைதில் அதாவது ஜனநாயகப் புரட்சியின் வெற்றியில்தான் இப்பிரச்சனையின் தீர்வு அடங்கியுள்ளது. தேசிய இனப் பிரச்சனையை புரட்சியின் வெற்றிப் பிரச்சனையிலிருந்து தனித்துப்பார்க்காமல் அப்பிரச்சனையிலிருந்து பிரிக்க முடியாத தொடர்புடையதாக புரட்சியின் பொதுவான பிரச்சனையின் பகுதியாக பார்க்க வேண்டும். (ஸ்டாலின் - மீண்டும் தேசிய இன பிரச்சனை குறித்து) அத்துடன் ஜனநாயகத்தை பூர்த்தி செய்ய விரும்புகிற பாட்டாளிவர்க்கம் எல்லாவிடங்களிலும் தேசிய இன ஒடுக்குமுறையை அது எந்த வடிவத்தைலிருந்தாலும் விட்டுக் கொடுக்காது எதிர்க்க வேண்டும் என்பதும் இதிலிருந்து பெறப்படுகிறது. தேசிய இன ஒடுக்குமுறை, ஒடுக்கப்பட்ட இனத்து முதலாளித்து வர்க்கத்தை மட்டுமல்ல அனைத்து மக்களது மொழியுரிமை, எழுத்துரிமை, மற்ற ஜனநாயக உரிமைகளையும் கட்டுப்படுத்துகிறது. அனைத்து வர்க்கங்களின் சுயேச்சையான வளர்ச்சிக்கு விலங்கிடுகிறது. ஒடுக்கப்பட்ட இனத்தின் பொதுவான சமூக வளர்ச்சியே பாதிக்கப்படுகிறது. இவை மட்டுமின்றி பாட்டாளிவர்க்கத்தின் பெரும்பகுதியினரை வர்க்கப் போராட்டத்திலிருந்து திசை திருப்பி வர்க்க ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கிறது. எனவே பாட்டாளிவர்க்கம் எல்லாவிடங்களிலும் சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிக்க வேண்டும். இன சமத்துவத்தை உயர்த்தி பிடிக்கவேண்டும்.

சுயநிர்ணய உரிமை என்றால் என்ன? ஒரே அரசின் கீழ் உள்ள பல தேசிய இனங்கள் அதே அரசின் கீழ் வாழ்வதா, பிரிந்துசென்று தனியரசு அமைத்துக் கொள்வதா என அந்தந்த இனத்து மக்கள் தாமாகவே முடிவெடுக்கும் உரிமையிது. ஒரு தேசிய இனம் ஒரு அரசிலிருந்து பிரிந்து செல்ல விரும்பினால் அவ்வாறு பிரிந்து செலவதற்கு அதற்கு சுதந்திரம் இருக்க வேண்டும் என்ற ஜனநாயக உரிமையிது. சுயநிர்ணய உரிமை என்றால் பிரிந்து செல்லும் உரிமையே. பல இனங்கள் ஒரே அரசின் கீழ் வாழ்வதால் அங்கு பிரிந்து செல்லும் உரிமை நிலவும் போதுதான் இன சமத்துவத்தை ஏற்படுத்த முடியும். இத்தகைய இன சமத்துவம் என்ற இடைக்கட்டத்தின் மூலம்தான் தேசங்களின் பரிபூரண ஐக்கியத்தை நோக்கி முன்னேறமுடியும். அனைத்து இனங்களின் சமத்துவத்திற்காகப் போராடுவது முதலாளி வர்க்கத்தின் நோக்கமல்ல. அது தனது 'தேசிய உரிமைகளைப் பற்றி மட்டுமே கவலைப்படும். பாட்டாளிவர்க்கம் மட்டுமே அனைத்து இனங்களின் சமத்துவத்தை, முரண்பாடற்ற ஜனநாயகத்தை நோக்கமாகக் கொண்டது. எந்த அரசின் கீழ் இருப்பது என்பது மக்களின் விருப்பங்களின்படி தீர்மானிக்கபடுவதாகவும் விரும்பினால் பிரிந்து போகவும் உரிமை இருக்கக்கூடிய நிலையில்தான் தேசிய ஒடுக்குமுறைகளை ஒழிப்பதற்கான வாய்ப்புகள் யதார்த்தமாகின்றன. அத்தகைய ஜனநாயக ரீதியில் அமையப்பெற்ற அரசு நிறுவப்படுவது ஜனநாயக புரட்சியை பூர்த்தி செய்து சோசலிசத்திற்கு முன்னேறுவதற்கு கூட முன்னிபந்தனையாகும். ஆகவே பாட்டாளிவர்க்கம் புரட்சிக்கு முன்பு மட்டுமல்ல. புரட்சிக்கு பின்பும் சோசலிசத்தின் கீழும்கூட சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிக்க வேண்டும்; இனசமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் அத்துடன் இது ஏகாதிபத்திய சக'ப்தமாகியிருப்பதால், பழைய வகைப்பட்ட உலக முதலாளித்துவ ஜனநாயக புரட்சிக்காலம் ஏற்கனவே முடிந்துவிட்டு உலகப் பாட்டாளிவர்க்க புரட்சிக்காலம் தொடங்கிவிட்ட படியால் தேசிய இனப் பிரச்சனை உலக பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் நடைபெறும் புரட்சிகளின் பகுதியாக ஆகிவிட்டது.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்