முதல் உலகப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த நேரம் அது! பிளக்கானோவ், காவுத்ஸ்கி உள்ளிட்ட ‘மாபெரும்’தலைவர்களை உள்ளடக்கிய கம்யூனிஸ்ட் அகிலத்தின் பெரும்பான்மையினர் தங்களது “தந்தையர் நாட்டை”போரில் ஆதரிப்பது என முடிவெடுத்தனர்.போர் உருவாக்கியிருந்த பேய்த்தனமான தேசிய வெறியின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சமயம் அது.
முதல் உலகப் போரை,ஏகாதிபத்தியங்கள் காலனிகளை தங்களுக்குள் மறுபங்கீடு செய்ய நடத்தும் ஆக்கிரமிப்புப் போர் என்று கூறி,பரந்துபட்ட மக்களுக்கு போர் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பை முன் வைத்து ஒரு உள்நாட்டுப் போராக இதை உருவாக்கி புரட்சி செய்ய வேண்டும் என்றார் லெனின்.
ஏகாதிபத்தியங்களின் காலடியில் மண்டியிட்டு கிட்டத்தட்ட தம்மையே அவர்களிடம் அர்ப்பணித்த இரண்டாம் அகிலத் தலைவர்களை கடுமையாகச் சாடினார் லெனின். இந்தப் போராட்டத்தை நடத்தும்போது,மொத்த அகிலத்திலும் லெனின் சிறுபான்மையானவர் தான்.
உலகின் முதல் சோசலிசக் குடியரசை அமைத்த பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் மறைந்து 100 ஆண்டுகள் கடந்து விட்டன. ரசியாவில் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியைத் தூக்கியெறிந்ததோடு முதலாளித்துவ சுரண்டலையும் துடைத்தெறிந்து பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகார ஆட்சியை அமைத்தவர் தோழர் லெனின்.
மார்க்சிய சித்தாந்தத்தை ரசிய நிலைமைகளுக்கு ஏற்றவாறு பருண்மையாகப் பிரயோகித்துபுரட்சியை சாதித்தது மட்டுமல்லாது, ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை இயங்கியல்பூர்வமாக அன்றைய நிலைமைகளையொட்டி வரையறுத்தவர் தோழர் லெனின்.
அவரது காலத்தில் ரசிய சமூக ஜனநாயகக் கட்சிகள் கொண்டிருந்த தொழிலாளி வர்க்கக் கட்சி குறித்தப் பார்வையை விமர்சனப் பூர்வமாக அணுகி புரட்சியை சாதிப்பதற்கு ஏற்ற ஒரு கட்சியையும் அதற்கான கோட்பாடுகளையும் வகுத்தார்.
லெனினுக்கு முன்னரே பிளக்கனோவ் உள்ளிட்ட பல்வேறு மார்க்சிய அறிஞர்கள் இருந்தாலும் லெனினால் மட்டும் எப்படி ஒரு புரட்சியை சாதிக்க முடிந்தது ? எது அவரை புரட்சியை சாதித்த மாபெரும் தலைவராக உயர்த்தியது ? அவரது சமகாலத்திய பிற மார்க்சிய அறிஞர்களுக்கும் லெனினுக்கும் என்ன வித்தியாசம் ? இக்கேள்விகளுக்கு தோழர் லெனினின் வாழ்க்கைத் துணைவர் தோழர் நதேழ்தா க்ரூப்ஸ்கையா, “லெனின் மார்க்ஸை எவ்வாறு கற்றார் ?” என்ற நூலில் பதிலளிக்கிறார்.
மார்க்ஸை நன்றாகக் கற்றறிந்து மட்டும் இருக்கவில்லை; அவரது சித்தாந்தத்தை நன்றாகப் பகுத்தாராய்ந்தும் இருந்தார்ஒரு விசயத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதனை அதன் அனைத்துக் கோணங்களில் இருந்தும் பார்த்தால்தான் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.
அதே போல, மார்க்சிய சித்தாந்தத்தைப் படிக்கும் போதும் அதனை அனைத்துக் கோணங்களில் இருந்தும் படித்து தர்க்கரீதியில் அதனைப் புரிந்து கொள்ளவேண்டும் என்கிறார் லெனின்.
புரட்சி குறித்த மார்க்ஸ் எங்கெல்ஸின் கருத்துக்களை அன்றைய சமூக ஜனநாயகவாதிகள் அப்படியே ரசியாவிற்குப் பொருத்த முயன்றதை வன்மையாகக் கண்டித்தார் லெனின். ரசியநிலைமைகளையும் சர்வதேச அளவில் முதலாளித்துவம் அடைந்த மாற்றத்தையும் எதார்த்த நிலைமையில் இருந்து மார்க்சிய கண்ணோட்டத்தோடு ஆய்வு செய்து தீர்வை முன் வைத்தார். அதன் மூலம்தான் ரசியப் புரட்சி சாத்தியமானது.
மார்க்சியத்தின் மூல ஆசான்கள் அவர்களது காலத்திய முதலாளித்துவத்தை எந்தக் கண்ணோட்டத்திலிருந்து – ஆய்வு முறையிலிருந்து பரிசீலித்தார்களோ, அந்தக் கண்ணோட்டத்தை – அந்த ஆய்வுமுறையை – மார்க்ஸ் எங்கெல்ஸின் எழுத்துக்களில் இருந்து லெனின் கற்றுக் கொண்டார்.
மார்க்ஸும் எங்கெல்ஸும் அவர்களது சமகாலத்து முதலாளித்துவம் குறித்து எழுதியதை அப்படியே பெயர்த்தெடுத்து ரசியாவில் அதனை லெனின் நடைமுறைப்படுத்தவில்லை. ஒருவேளை லெனின் அப்படியே எடுத்துப் பொருத்தியிருந்திருப்பாரெனில், வரலாறு ஒரு பிளக்கனோவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தோடு மட்டுமே லெனினையும் கடந்து சென்றிருக்கும். இன்று அவர் பாட்டாளி வர்க்க ஆசானாக அறியப்பட்டிருக்க மாட்டார்.
இன்று புரட்சியின் நாயகனாக முதலாளித்துவத்தாலேயே தவிர்க்க முடியாமல் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய இடத்தில் லெனின் நிற்பதற்கான காரணம், அவர் தமது நாட்டினையும், உலக முதலாளித்துவத்தையும் பரிசீலிப்பதில் சரியான சமூக அறிவியலை –மார்க்சியத்தை பிரயோகித்தார். அத்தகைய சமூக அறிவியல்பூர்வமான ஆய்வுதான் “ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம்” எனும் லெனின் எழுதிய நூல்.
முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக பரிணமித்ததை முன்வைத்ததோடு லெனின் நின்றுவிடவில்லை. ஏகாதிபத்தியமாக வளர்ந்த முதலாளித்துவத்தின் தன்மைகளையும், அதன் பலவீனமான கண்ணியையும் கண்டறிந்தார். அதன் விளைவுதான் ரசிய சோசலிசப் புரட்சி.ரசிய நிலைமைகளில் மார்க்சியத்தைப் பிரயோகிப்பதை வெளிபடுத்தினார் லெனினின்.
“… (1905ம் ஆண்டு) புரட்சி தோல்வியடைந்ததையடுத்து ருஷ்யாவில் எழுந்த பிரச்சினைகளை பற்றி மார்க்ஸ் கூறியவற்றையும், இயங்கியல் மற்றும் வரலாற்றுரீதியான பொருள் முதல் வாதத்தையத்த விஷயங்களையும் அதே சமயத்தில் ஆராய்ந்த லெனின் வரலாற்றுரீதியான வளர்ச்சியைக் கற்றறிய இயங்கியல் பொருள்முதல்வாதத்தை எவ்வாறு உபயோகிப்பது என்பதை மார்க்ஸிடமிருந்து கற்றறிந்தார்.”
“……. இவ்வாறு மார்க்ஸை கற்கும் இந்த முறைதான், மார்க்சியத்தைத் திரித்துரைப்பதை எதிர்த்துப் போராடவும், அதன் புரட்சிக் கருத்துக்களை உறிஞ்சி சாரமற்றதாக்கும் முயற்சிகளைத் தடுக்கவும் லெனினுக்கு உதவியது. அக்டோபர் புரட்சிக்கு ஏற்பாடு செய்வதிலும் சோவியத் ஆட்சியை நிலைநாட்டுவதிலும் லெனினது “அரசும் புரட்சியும்” என்ற நூல் எத்தகைய பிரமாண்டமான பங்கு வகித்தது என்பது நமக்குத் தெரியும். அரசு பற்றிய மார்க்ஸின் புரட்சிகர போதனையை ஆழ்ந்து கற்றதின் அடிப்படையில் தோன்றியதே இந்த நூல்.”
ஒரு பொருளை முழுமையாக ‘வரையறுக்கும்’போது மனித குலத்தின் முழு அனுபவத்தையும் பயன்படுத்த வேண்டும். இந்த அனுபவம் உண்மையின் அளவுகோலாகவும், அப்பொருளுக்கும் மனிதனின் தேவைகளுக்குமிடையே உள்ள தொடர்பை நடைமுறையில் நிர்ணயிக்கவும் பயன்படுகிறது.(இங்கு லெனின் பொதுவான சொல்லாடலாக “பொருள்” எனும் பதத்தைப் பயன்படுத்தியுள்ளார். நமது சமூக நிலைமைகள், கட்சி, புரட்சி என அனைத்தையும் அந்தச் சொல்லில் பொருத்தி புரிந்து கொள்ளலாம்).
இந்திய நிலைகளை லெனின் எழுத்தின் வாயிலாக அறிவோம்.
புரட்சிகரமான கோட்பாடு இல்லாமல் புரட்சிகரமான இயக்கம் இருக்க முடியாது. புரட்சிகரமான இயக்கம் இல்லாமல் புரட்சிகரமாக, சமூக மாற்றத்தை சாதிக்க முடியாது. அதனால் சீர்திருத்த போக்கை கடுமையாக விமர்சிக்க வேண்டும்.
கம்யூனிசத்தின் புரட்சிகரத் தன்மையைக் கைவிட்ட இந்தப் பழைய மார்க்சியவாதிகளின், திருத்தல் போக்கை அம்பலப்படுத்த வேண்டும். சீர்திருத்தத்தால் புரட்சிகரச் சமூக மாற்றத்தை சாதிக்க முடியாது. என்பது தான் நிதர்சனமான உண்மை.
பொருளாதாரப் போராட்டத்துடன் தொழிற்சங்கத்தை முடக்குவது, தன்னியல்பை வழிபடுவதாகும். பொருளாதாரப் போராட்டங்கள் தொழிலாளர்களின் முழுமையான விடுதலைக்கு உதவிடாது, அதனால், பொருளாதாரப் போராட்டத்தை, வர்க்கப்போராட்டமாக,முதலாளிதுவத்தைத் தூக்கி எறிவதற்கான போராட்டமாக மாற்ற வேண்டும்.இன்றுநமதுநாட்டில்,தொழிலாளர்களிடம் செயற்படுகிற கம்யூனிஸ்டுகள் இந்தத் தொழிற்சங்கப் போராட்டத்தைக் கடந்து வர்க்கப் போராட்டத்திற்கு வழிகாட்டுகிறார்களா? என்பது நம் முன் உள்ள கேள்வி.
பொருளாதாரப் போராட்டத்துடன் தொழிற்சங்கத்தைச் சுருக்கிக் கொள்வது, இறுதியில் அது தொழிலாளி வர்க்கத்தை, முதலாளித்துவ வர்க்க தத்துவத்திற்கு ஆட்படுத்துவதில் போய்முடியும்.
கம்யூனிஸ்டுகளின் பணி தன்னியல்பை எதிர்த்துப் போராடுவதேயாகும். முதலாளி வர்க்கத்தின் அரவணைப்பின் கீழ் செல்லும் இந்தத் தன்னியல்பான, தொழிற்சங்கவாத முயற்சியில் இருந்து தொழிலாளி வர்க்க இயக்கத்தைத் திசைமாற்றி, புரட்சிகரமான கம்யூனிசத்தின் அரவணைப்பின் கீழ் கொண்டுவருவதேயாகும்.
உழைக்கும் மக்கள், தாம் சந்திக்கிற
பிரச்சினைகளுக்கு உடனடியாக எதிர்ப்புத் தெரிவித்துப் போராடுவது தன்னியல்பு, இந்தத் தன்னியல்பு, அந்தப் பிரச்சினை ஏன் வந்தது, அதனை எப்படி முழுமையாக நீக்குவது என்பது பற்றி எல்லாம் சிந்திக்காது, அந்தப் பிரச்சினையைத் தனித்துப் பார்த்து அதனைப் போக்குவதற்காகப் போராடுகிறது. அதனால் தான் அதற்குத் தன்னியல்பு போராட்டம் என்று பெயர்.
இந்தத் தன்னியல்பு போராட்டம் ஒரு அரசியல் போராட்டம் தான், கருவடிவிலான வர்க்கப் போராட்டம் தான். ஆனால் இது கம்யூனிச அரசியல் போராட்டம் கிடையாது, முழுமையான வர்க்கப் போராட்டம் கிடையாது.
தன்னியல்பான போராட்டம், பிரச்சினையின் அடிப்படையைப் புரிந்து கொள்ளாது, வடிவத்துடன்போராடுகிறது.குறிப்பிட்டஇந்தப்பிரச்சினை,எதனடிப்படையில் தோன்றியது என்பதை அது அறியாது. தொடர்ந்து வருகிற இந்தப் பிரச்சினையை நிரந்திரமாகத் தீர்ப்பதற்கு அது முயலாது.
உண்மையில் இந்தப் பிரச்சினை முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படுகிறது. இந்தப் பிரச்சினை, திரும்பத்திரும்ப வராமல் முழுமையாக நீக்க வேண்டும் என்றால், இந்த உற்பத்தி முறையையே போக்க வேண்டும்.
ஒவ்வொரு பிரச்சினையையும் தனித்தனியாகப் பார்க்கக்கூடாது. அன்றைய உற்பத்தி உறவுகளில் இருந்து தான் அனைத்துப் பிரச்சினைகளும் தோன்றுகின்றன என்கிற புரிதல் வேண்டும்.
அந்தப் புரிதல் ஏற்பட்டால் தான் கூலி உயர்வுக்காணப் போராட்டத்தை, “கூலி முறை” ஒழிப்பதற்கானப் போராட்டமாக வளர்த்தெடுக்க முடியும். கருவடிவிலான வர்க்கப் போராட்டம், முழுமையான வர்க்கப் போராட்டமாக, சமூகத்தையே மாற்றுகிற, புரட்சிகரப் போராட்டமாக மாற்றமுடியும்.
கூலி உயர்வுக்கான போராட்டத்துடன் நின்றிபோவது, தொழிற்சங்க அரசியலுடன் நின்று போவது இவைகள் அனைத்தும், தன்னியல்பு வழிபாடாகும்.
தொழிற்சங்கத்தில் இணைந்து போராடுவது ஒரு அரசியல் தான், ஆனால் அது கம்யூனிச அரசியல் அல்ல, அரு ஒரு முதலாளித்துவ அரசியல். ஏன் என்றால், கூலி உயர்வுக்காக மட்டும் போராடுவது என்பது, முதலாளித்துவ உற்பத்தி முறைக்குள் நின்று கொண்டு போராடுவதாகும். இந்தப் போராட்டம், பழைய உற்பத்தி முறையை வீழ்த்தி, புதிய உற்பத்தி முறையை ஏற்படுத்தாது.
பொருளாதாரவாதிகள், அதாவது பொருளாதாரப் போராட்டத்துடன் தொழிற்சங்கப் போராட்டத்தை நிறுத்திக் கொள்பவர்கள், அரசியலை முழுதாக நிராகரிப்பது இல்லை. அவர்கள் கம்யூனிச அரசியலில் இருந்து தான் விலகுகிறார்கள்.
தொழிற்சங்கப் போராட்டம் ஒரு வகை அரசியல் போராட்டம் தான். ஆனால் அது கம்யூனிஸ்டுகளின் அரசியல் என்று கூறிவிடமுடியாது.
பொருளாதாரப் போராட்டத்தை லெனின் மறுக்கவே இல்லை. அந்தப் போராட்டத்தை, கம்யூனிசம் பரப்புவதற்கான, தொடக்கமாகப் பயன்படுத்தும்படி வலியுறுத்துகிறார்.
கம்யூனிச கருத்துக்களைப் பரப்புவதற்கான தொடக்கப் புள்ளியாகப் பொருளாதாரப் போராட்டத்தை லெனின் கருதுகிறார். இந்தக் கருவடிவில் காணப்படும் வர்க்கப் போரட்டமான, பொருளாதாரப் போராட்டத்தை, முழுமையான - கம்யூனிச வழிப்பட்ட, வர்க்கப் போராட்டமாக மாற்ற வேண்டும். இதுதான் கம்யுனிச அரசியல்.
கம்யூனிசக் கருத்துக்கள், அந்தரத்தில் இருந்து உருவாக்கப்படவில்லை, முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்முரண்பாடுகளில் இருந்தும் தான் கண்டு அறியப்பட்டது. அதாவது. கம்யூனிசக் கருத்து, சமூகத்திற்கு அப்பால் இருந்து உருவாக்கப்படவில்லை. இந்த முதலாளித்துவச் சமூகத்தின். வளர்ச்சியின் விளைவாக உருவாகியது.
“கம்யூனிஸ்டுகள் பொருளாதாரப் போராட்டத்தை நடத்துவதோடு நின்றுவிடக் கூடாது என்பது மட்டுமல்ல, பொருளாதார அம்பலப்படுத்தல்களை முறையாகத் திரட்டிச் செய்வதை, அவர்களின் நடவடிக்கையின் மிக மேலோங்கிய பகுதியாகிவிட அனுமதிக்கக் கூடாது. நாம் தொழிலாளி வர்க்கத்திற்கு அரசியல் கல்வி அளிப்பதையும், அவ் வர்க்கத்தின் அரசியல் உணர்வை வளர்ப்பதையும் தீவிரமாகச் செய்ய வேண்டும்”
பொருளாதாரப் போராட்டமே போதுமானப் போராட்டம் அல்ல. அது முதலாளித்துவ உற்பத்தி முறையைத் தூக்கி எறிவதற்கான முழுமையான வர்க்கப் போராட்டமாக வளர்க்க வேண்டும், என்பதைத் தான் லெனின் வலியுறுத்துகிறார்.
கம்யூனிச அரசியல் உணர்வு பெறுவதற்கு, பொருளாதாரவாதிகளைப் போல், தொழிற் சங்கப் போராட்டத்துடன் நிறுத்திக் கொள்ளாக்கூடாது. தொழிலாளர்கள் மற்ற மக்களின் நடவடிக்கைகளையும், வர்க்க சக்திகளின் அணிச் சேர்க்கையையும் பார்ப்பதற்குத் தொழிலாளர் திறமை பெற வேண்டும் இதற்குக் கம்யூனிஸ்டுகள் உதவ வேண்டும்.
“தெளிவான சித்திரத்தை” எந்தப் புத்தகங்களில் இருந்து பெற முடியாது என்று லெனின் கூறுகிறார். சுற்றி நடைபெறுவதைக் காண வேண்டும், இன்னின்ன நிகழ்ச்சிகள், இன்னின்ன புள்ளி விவரங்கள், இன்னின்ன நீதி மன்ற தீர்ப்புகள் ஆகியவற்றை, நெருங்கி சென்று பார்க்க வேண்டும்.
அப்போது தான், தொழிலாளி, தம்மை ஒடுக்குகின்ற அதே தீய சக்திகள் தாம் மற்றவர்களையும் ஒடுக்குகிறது என்று அறிவார். அப்படி அறியும் போது தான், ஆதிக்க சக்தியை ஒழிப்பதற்குப் போராட வேண்டும் என்கிற, அடக்க முடியாத ஆர்வம் தொழிலாளர்களிடம் ஏற்படும் என்று லெனின் கூறுகிறார்.
கம்யூனிஸ்ட் ஆவது கடினமான பணியே. ஒரு கம்யூனிஸ்ட் பலவற்றை அலசி ஆராய வேண்டி இருக்கிறது. இந்தப் பொருளாதாரவாதிகள், அதாவது தொழிற் சங்கவாதிகள் வெற்றி பெற்றதற்குக் காரணம் என்னவென்று பார்த்தால், அது தொழிலாளர்களின் உணர்களுக்குத் தக்கபடி தங்களைச் சரிசெய்து கொண்டது தான். அதாவது தொழிலாளர்களின் சிந்தனைக்குத் தக்கபடி, தங்களைத் தாழ்த்திக் கொண்டது தான்.
இத்தகைய போக்கு, தொழிலாளியை. ஒரு கம்யூனிச சிந்தனை உள்ளவராக மாற்றுகிற முயற்சியைத் தடுத்துவிடுகிறது. ஆனால், புரட்சிகரக் கம்யூனிஸ்ட், தொட்டறியத் தக்க பலன்களை மட்டும் கோருகிற கோரிக்கைகளை, சீற்றத்துடன் நிராகரிப்பான். பகுதிக்கான பிரச்சினை. முழுமையில் இருந்தே வந்தது என்பதைக் கம்யூனிஸ்ட் அறிந்துளான். அதனால், பகுதிக்கான போராட்டத்தை முழுமைக்கான போராட்டமாக மாற்றுவான்.
இத்தகைய அறிவுபெற்ற கம்யூனிஸ்டுகளையே தொழிலாளர்கள் விரும்புவர்கள். அவ்வாறு விரும்பினால் தான் அவர்களுக்கு முழுமையான விடுதலை கிடைக்கும்.
எங்கள் நடவடிக்கையைத் “தட்டியெழுப்பும்” தகுதி உங்களுக்கு இல்லை. ஏனெனில், நடவடிக்கை எனும் விஷயந்தான் உங்களிடம் பூஜ்ஜியமாயிருக்கிறது.
கனவான்களே, தன்னியல்புக்கு அடி பணிவதைக் குறைத்துக் கொள்ளுங்கள், உங்கள் சொந்த நடவடிக்கையைத் தட்டியெழுப்புவது பற்றி மேலும் சிந்தியுங்கள்!”
தொழிலாளர்களுக் வேண்டியது என்னவென்பதை லெனின் தொகுத்துத் தந்துள்ளார். மேலே லெனின் கூறியதை சுருக்கமாகப் பார்ப்போம்.
பொருளாதாரப் போராட்ட அரசியல் என்கிற, நீர்த்துப்போன கஞ்சி மட்டும் ஊட்டம் பெறுவதற்கு நாங்கள் குழந்தைகள் அல்ல,
அறிவாளிகள் தெரிந்து கொண்டுள்ள அனைத்தையும் நாங்கள் அறிய வேண்டும். இதையே நாங்கள் விரும்புகிறோம்.
அதனால் கம்யூனிஸ்ட் என்கிற அறிவாளிகள் ஏற்கெனவே நாங்கள் தெரிந்து வைத்திருப்பதைப் பற்றிப் பேசுவதைக் குறைத்துக் கொண்டு, எங்களுக்கு இன்னமும் தெரியாமல் இருக்கும்,எங்கள் தொழிற்சாலை அனுபவத்தில் இருந்தும், பொருளாதாரப் போராட்டத்தில் இருந்தும் என்றைக்கும் கற்றுக் கொள்ள முடியாத, கம்யூனிச அரசியலை அதிகமாகப் பேச வேண்டும்.
லெனின் இங்கே தொழிலாளர் பார்வையில் கூறப்பட்டது மிகவும் கடுமையான கண்ணோட்டத்தில் இருக்கிறது. மிகவும் காட்டமாகத்தான் இருக்கிறது.
நமது நாட்டின், இன்றைய நிலையைக் கணக்கில் கொண்டால், தொழிலாளர்களிடம் காணப்படும் அரசியல் விழிப்புணர்வுகூடப் பல கம்யூனிஸ்டுகளிடம் காணப்படவில்லை என்பதே உண்மையாகும். இந்த நூலின் முந்திய அத்தியாயத்தில், லெனின் கூறியதை மீண்டும் கவனத்தில் கொள்வோம்.
தற்கால இயக்கத்தின் பலம் மக்களின் விழிப்புணர்வில் அடங்கி இருக்கிறது. இயக்கத்தின் பலவீனம் புரட்சிகரமான தலைவர்களின் உணர்வு இன்மையிலும், முன்முயற்சி இன்மையிலும் அடங்கி இருக்கிறது.
இதை யாரும் இதுவரை சந்தேகித்தது இல்லை என்று லெனின் ருஷ்ய நிலைமையை மனதில் கொண்டு கூறியுள்ளார். ஆனால் இங்கே நம் நாட்டுக் கம்யூனிஸ்டுகள், எதையும் சந்தேகப் படவில்லை என்கிற மோசமான நிலையில் தான் நாம் இருக்கிறோம்.
பொருளாதாரப் போராட்டம் மட்டுமே, மக்களை அரசியலில் ஈடுபடுவதற்குக் காரணமாகும் என்ற கருத்தையும் லெனின் மறுத்துள்ளார்.
மார்க்சியத்தை வறட்டுத்தனமாகப் புரிந்து கொண்டவர்கள் பொருளாதாரப் போராட்டம் மட்டுமே அரசியலுக்கு உகந்தது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் அது தவறானதாகும்.
ஒரு பெண்,தான் பெண் என்ற காரணத்திற்காக ஒடுக்கப்படுவதை எதிர்த்து அந்தப் பெண் அரசியலில் ஈடுபடலாம். அது கம்யூனிச அரசியலாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அந்தப் பெண் தனக்கும்,தமது பெண் இனத்திற்கும் ஏற்பட்ட ஒடுக்கு முறைக்கு முதலில் குரல் கொடுக்க அரசிலுக்கு வரலாம், அப்படி வந்த பிறகு, தான் ஒடுக்கப்படுவது ஆணாதிக்கத்தால் மட்டுமல்ல, வர்க்க சமூகத்தில் சொத்துடைமையின் அடிப்படையில் தான் ஒடுக்க முறை நிகழ்கிறது. அதனால் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்றால், வர்க்கத்தை ஒழிக்க வேண்டும் என்ற புரிதலுக்கு வரலாம்.
கம்யூனிஸ்டுகள் பொருளாதாரப் போராட்டத்துடன் முடங்கிப் போகாமல், அனைத்து ஒடுக்கு முறைக்கும் எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.
லெனின் பொருளாதாரப் போராட்டத்தைத் தவிர்த்த மற்ற பிரச்சினைகளில் இருந்தும் மக்கள் அரசியலுக்கு வருவார்கள் என்று கூறுகிறார்.
கட்டுரை சிறப்பு தோழர் பலரும் படித்து சிந்தித்து முடிவெடுத்து செயல்பட வேண்டிய விஷயங்களை பேசி இருக்கிறீர்கள்.
ReplyDeleteநன்றி தோழர்
ReplyDelete