லெனின் மற்றும் ஸ்டாலின் தலைமையிலான ரஷ்ய சோசலிச சோவியத்து குடியரைசையும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலுள்ள பிற்போக்கு முதலாளித்துவ அரசுகளுக்கும் இடையிலான வேற்றுமைகளை புரிந்து கொள்வோம். அதிலிருந்து இந்தியா போன்ற நாடுகளில் தற்போது நிலவும் பிற்போக்கு அரசுகள் நீடிக்க வேண்டுமா? அல்லது இந்த மக்கள் விரோத பிற்போக்கு அரசுகளை அகற்றிவிட்டு,லெனின் மற்றும் ஸ்டாலின் தலைமையில் செயல்பட்ட ரஷ்ய சோவியத்து சோசலிசக் குடியரசு போன்ற சோசலிச அரசு முறைகளை இங்கு உருவாக்க வேண்டுமா? என்பது பற்றி நாம் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
1917ஆம் ஆண்டு லெனின் மற்றும் ஸ்டாலின் தலைமையிலான ரஷ்ய போல்ஷ்விக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைமையில் ரஷ்யாவிலுள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளைத் திரட்டி போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்தி பல ஆயிரக்கணக்கானோர் உயிர்தியாகம் செய்து உருவாக்கப்பட்டதுதான் ரஷ்ய USSR என்று சொல்லப்படும்தேசியஇனங்களின்சோசலிசகூட்டரசுஆகும்.இந்த அரசு உருவாகும் போதே ரஷ்யாவிலுள்ள பல தேசிய இனங்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட கூட்டரசாகவே உருவாகியது.
இந்தியாவிலுள்ள தேசிய இனங்களின் உரிமை களை காலில் போட்டு மிதித்துவிட்டு, தேசியஇனங்களை அடிமைப்படுத்தி, கட்டாயமாக இணைக்கப்பட்டு ஒற்றை ஆட்சி முறையைக்கு மாறாக ஒவ்வொரு தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமையை வழங்கி, அவர்கள் விரும்பினால் பிரிந்துபோகும் உரிமைகளை வழங்கி, ஒவ்வொரு தேசிய இனங்களுக்கும் அதன் அரசியல் பொருளாதாரத்தை சுதந்திரமாகத் தீர்மானிக்கும் உரிமைகள் வழங்கப்பட்டுரஷ்யஒருகூட்டுஅரசாங்கமாகவேஅமைக்கப்பட்டது.இந்தியாவில் தேசிய இனங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று பொய்யைச் சொல்லி தேசிய இனங்களின் விருப்பங்களைக் கண்டுகொள்ளாமல்தான் இங்கு மாநிலங்கள் உருவாக்கப்பட்டது.
உதாரணமாக தமிழர்கள் அதிகமாக வாழும் தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகளை கேரள மாநிலத்தோடு இணைத்து அங்கு வாழும் தமிழ் மக்களின் மொழி உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் அந்த மக்கள் இன்றும் வாழுகின்றதைப் பார்க்கிறோம். முல்லைப் பெரியார் நீரை கேரள மற்றும் தமிழ் மக்கள் முறையாகப் பகிர்ந்துகொள்வதற்கு வழி செய்யாமல் கேரளம் மற்றும் தமிழ் மக்களிடையே பகையைத் தூண்டிவிட்டு, இரு மாநில மக்களையும் பிளவுபடுத்தி, இந்தியாவை ஆண்ட அந்நியனான பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து கற்றுக்கொண்ட அதே பிரித்தாளும் கொள்கை யையின் அடிப்படையிலேயே இந்தியப் பெருமுதலாளிகள் இந்திய மக்களை தேசிய இனங்களாகப் பிரித்து ஆண்டுகொண்டு இருக்கிறார்கள். இதற்கு நேர்மாறாக ரஷ்ய சோவியத்து அரசானது ரஷ்யாவிலுள்ள ஒவ்வொரு தேசிய இனங்களுக்கும் உரிமைகளை வழங்கி அந்த தேசிய இன மக்களிடையே ஒற்றுமைக்காகத் தொடர்ந்து பாடுபட்டது. ரஷ்யாவில் சோசலிச அரசு வீழ்த்தப்பட்டு அரசு அதிகாரிகளின் சர்வாதிகாரம் நிலைநாட்டப்படும் வரை அங்கு தேசிய இனங்களுக்குஇடையேஒற்றுமைநீடித்தது.அங்கு சோவியத்து அரசை சதிகாரர்கள் வீழ்த்திய பிறகுதான் அங்குள்ள தேசிய அரசுகள்பிரிந்துசென்றது.ஆகவே ஒரு நாட்டில் எந்தளவு சோசலிசம் உறுதி செய்யப்பட்டு நீடிக்கிறதோ அந்தளவுக்கு அந்த நாட்டு மக்களிடம் ஒற்றுமையும், மகிழ்ச்சியான மக்களது வாழ்வும் நீடிக்கும் என்பதை ரஷ்ய வரலாறு காட்டுகிறது.
லெனின், ஸ்டாலின் தலைமையிலான சோவியத்து சோசலிசக் குடியரசு ரஷ்யாவில் நீடிக்கும்வரை, ரஷ்யாவானது மக்களுக்கான பொன்னுலகமாகவே இருந்தது. அந்த நாட்டில் தொழிலாளர்களும் விவசாயிகளும் சுரண்டலற்று ஒரு புதிய சமூகத்திலேயே வாழ்ந்து வந்தனர்.
அந்த மக்களிடையே சோசலிசப் பண்புகள் வளர்க்கப்பட்ட புதிய தலைமுறை உருவானது.
உதாரணமாக ஒரு கூட்டுப் பண்ணையில் ஒரு டிராக்டர் தீப்பிடித்து எரிந்தது. அந்த கூட்டுப் பண்ணை முழுவதும் நாசமாகிவிடும் என்ற நிலையில் ஒரு விவசாயி அந்த டிராக்டரை ஓட்டிச் சென்று பண்ணையை ஆபத்திலிருந்து பாதுகாத்து தனது உயிரைத் தியாகம் செய்தார்.
ரஷ்ய நாட்டு மக்களின் பொதுச் சொத்துக்களை உருவாக்குவதற்காக ஓய்வு நாளில் கூடுதலாக எவ்விதமான கூலியும் பெற்றுக்கொள்ளாமல் நாட்டின் முன்னேற்றத்துக்காக இலவசமாக தங்களது உழைப்பை சுய விருப்பத்தோடு வழங்க வேண்டும் என்று லெனின் மக்களிடம் கோரிக்கை வைத்தபோது அதனை ஏற்றுக்கொண்டு மக்கள் அவர்களாக விருப்பப்பட்டு பணி செய்தார்கள். இத்தகைய பண்புகள் மக்களிடம் சிறுகச் சிறுக வளர்க்கப்பட்டது. இந்தியாவில் இப்படிப்பட்ட உணர்வுள்ள மக்களை உருவாக்கி வளர்க்கும் முயற்சி உள்ளதா? இந்தியாவை ஆளும் அரசியல்வாதிகள் சுயநலவாதிகளாவே இருப்பதை நாம் காணுகிறோம். அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மக்களுக்கு நன்மை செய்வதாக வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வாக்குறுதிகளை மறந்துவிட்டு முதலாளிகளுக்காக குறிப்பாக உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளின் நலனுக்கான சட்டங்களையும் திட்டங்களையும் போட்டுச் செயல்படுகிறார்கள். மேலும் இந்த முதலாளிகளின் நலன் காப்பதற்காக உழைக்கும் மக்களுக்கு மிகவும் கடுமையான துரோகங்கள் செய்கிறார்கள். மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு மக்களின் வறுமையைப் பயன்படுத்தி மக்களுக்கு லஞ்சம் கொடுத்து ஓட்டுக் கேட்கிறார்கள். அதன் மூலம் மக்களின் பண்புகளையும் கெடுக்கிறார்கள். ரஷ்யாவில் சோவியத்து கம்யூனிஸ்டு ஆட்சியில் மக்களிடம் சோசலிசப் பண்புகளை வளர்த்ததையும், இந்தியாவிலுள்ள பிற்போக்கு அரசியல்வாதிகள் மக்களிடம் சுயநல, ஊழல் பண்புகளை வளர்ப்பதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். எத்தகைய ஆட்சி சிறந்தது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நமக்குத் தேவை சோவியத்து ஆட்சி முறையா? இந்தியாவில் நிலவும் மக்களை ஏமாற்றும் ஆட்சி முறையா? எத்தகைய ஆட்சி முறை நமக்குத் தேவை சிந்தியுங்கள்.
ரஷ்யாவில் புரட்சி நடத்தி கம்யூனிஸ்டுகள் சோவியத்து ஆட்சியை உருவாக்கியவுடன், “உழைக்கும் மக்களே இப்பொழுது நீங்கள்தான் ஆட்சியில் உள்ளீர்கள். அனைத்துவகையான அரசியல் அதிகாரங்களும் இனிமேல் ரஷ்ய உழைக்கும் மக்களின் கைகளுக்கு வந்துவிட்டது. ஆகவே ரஷ்ய உழைக்கும் மக்களே நீங்கள் உடனடியாக அனைத்து அரசியல் பொருளாதார விவகாரங்களைத் தீர்க்கும் அதிகாரத்தை உங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்காக நீங்கள் பிறர் தயவை நாட வேண்டாம். இப்பொழுது முதல் சோவியத்துகள் தான் அரசு அதிகார உறுப்புகளாகும். முழு அதிகாரம் படைத்த சட்ட மன்றங்களாகிய உங்களது சோவியத்துகள் மூலம் உழைக்கும் மக்களே ஒன்று திரளுங்கள், உங்களது சோவியத்தை நீங்கள் பலப்படுத்தி வளருங்கள். அதற்காக நீங்களே களத்தில் இறங்குங்கள்”என்று உழைக்கும் மக்களுக்கு அறைகூவி லெனின் வழிகாட்டினார்.
இந்தியாவில் பிரிட்டீஷ்காரர்கள் வெளியேறிய பின்பு இந்திய அரசை நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி லெனினைப் போன்றாகவா இந்திய அரசை உருவாக்கி அமைத்தது?. அதிகாரத்தை கையில் ஏந்தியவுடன் போராடிக் கொண்டிருந்த தெலுங்கானா விவாசாயிகளைப் படுகொலை செய்வதற்கு இந்திய இராணுவத்தை ஏவி தெலுங்கானாவிலுள்ள விவசாயிகளை கொடூரமாகக் கொலை செய்யும் நடவடிக்கையில் இறங்கியதுதான் சுதந்திர இந்திய நேருவின் அரசாகும். விவசாயிகளை இப்போதும் படுகொலை செய்துகொண்டு இருக்கும் அரசாகவே இந்திய அரசு இருக்கிறது.
பல லட்சம் இந்திய விவசாயிகளின் தற்கொலைக்கு காரணமான அரசாகவே இந்திய அரசு இருக்கிறது.
ரஷ்யாவில் சோவியத்து அரசு உருவானபோது அதன் முதல் தலைவராக இருந்த லெனினை சந்திக்க ஒரு விவசாயி லெனினது அலுவலகத்துக்கு வந்தார். அந்த விவசாயியை எவ்விதமான ஆடம்பரமும் இல்லாத லெனின் சந்தித்தார். லெனினிடம் பேசிய அந்த விவசாயி, சோவியத்து ஆட்சி ஏற்பட்டால் ஏழை உழவர்களுக்கு பண்ணையார்களிடமிருந்து நிலங்களை பறிமுதல் செய்து கொடுக்கப்படும் என்று சொன்னீர்கள். ஆனால் இதுவரை விவசாயிகளுக்கு நிலங்கள் கிடைக்கவில்லை. ஆகவே லெனின் இதில் தலையிட்டு விவசாயிகளுக்கு பண்ணையார்களிடமிருந்து நிலங்களைப் பறித்து தரவேண்டும் என்று லெனினிடம் முறையிட்டார். அதற்குப் பதில் சொல்லும் போது சோவியத்து அரசு என்பது உழைக்கும் மக்களது அரசாகும் ஆகவே பண்ணையார்களிடமிருந்து விவசாயிகளே நிலங்களைப் பறித்துக்கொள்ளலாம். அதனை பண்ணையார்கள் தடுத்தால் பண்ணையார்களின் மீது உழைக்கும் மக்களால் உருவாக்கப்பட்ட சோவியத்து படைவீரர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றார். இதன் மூலம் சோவியத்து அதிகாரம் என்பது உழைக்கும் மக்களின் அதிகாரம் என்பதையும் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்கள் மக்களுக்கு தலைமைதாங்கி வழிகாட்டுபவர்களே என்பதை லெனின் விளக்கினார். .
ஆனால் இந்தியாவில் தெலுங்கானாவில் விவசாயிகள் போராடி உயிர்தியாகம் செய்து பண்ணையார்களிடமிருந்த பறித்த நிலங்களை விவசாயிகளிடமிருந்து பறித்து மீண்டும் பண்ணையார்களிடமே ஒப்படைத்த அரசுதான் நேருவின் இந்திய அரசாகும். ஆகவே லெனின் மற்றும் ஸ்டாலின் தலைமையிலான சோவியத்து அரசு விவசாயிகளுக்கானதா? அல்லது நேரு துவங்கி இன்றைய மோடி வரையிலான பிற்போக்கு தலைவர்களின் அரசுகள் விவசாயிகளுக்கான அரசா? சிந்தியுங்கள்.
சாதாரணமான தொழிலாளியும், விவசாயியும் சோவியத்து ரஷ்யாவில் சோவியத்துக்கு உறுப்பினர்களாக ஆகலாம். ஆனால் இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் மட்டுமே அதாவது தேர்தலில் பணம் செலவழிக்கும் சக்தி படைத்தவர்கள் மட்டுமே சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களாக ஆகலாம். சோவியத்து ரஷ்யாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சோவியத்து உறுப்பினர் தவறு செய்தால் அவரை உடனடியாக சோவியத்து உறுப்பினர் பதவியிலிருந்து விலக்கிக்கொள்ள உழைக்கும் மக்களுக்கு அதிகாரம் இருந்தது. இது பெயரளவுக்கு அல்ல உண்மையிலேயே நடைமுறையில் இருந்து. ஆயிரக்கணக்கான சோவியத்து உறுப்பினர்களும் நூற்றுக்கணக்கான சுப்ரீம் சோவியத்து உறுப்பினர்களும் மக்களால் பதவி பறிக்கப்பட்டு திரும்பப் பெறப்பட்டனர். இதுபோன்ற உரிமை இந்திய மக்களுக்கு இருக்கிறதா? இல்லை, இல்லவே இல்லை. ஒருமுறை சட்டமன்ற அல்லது பாராளுமன்றத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டு விட்டால் அவர் அவரது ஐந்தாண்டு பதவிகாலத்தில் மக்களுக்கு எதிராக எவ்வளவு காரியங்களிலும் ஈடுபடலாம் அவர் மீது மக்கள் நடவடிக்கை எடுக்க முடியாது.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி இந்த ஆட்சியாளர்கள் தொடர்ந்து மக்களுக்கு எதிராகவே செயல்படுகிறார்கள். ஆட்சியாளர்களின் இந்த தவறுகளை மக்கள் தட்டிக்கேட்க்க வழி இல்லாத இந்த நிலைதான் ஜனநாயகமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தவறு செய்தால் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மக்களுக்கு இருக்கும் சோவியத்து முறை உண்மையான ஜனநாயகமா? சிந்தியுங்கள்.
ரஷ்ய சோவியத்து அரசானது மக்களுக்கு விரிவான ஜனநாயக முறையிலான சுதந்திரத்தைக் கொடுத்த அரசு என்ற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சோவித்து அரசாங்கம் உருவான போது. அந்த அரசால் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தை அதாவது அதனுடைய நகலை ரஷ்ய மக்கள் அனைவருக்கும் விவாதிப்பதற்காகவும் அதன் மீது கருத்துக்களை மக்கள் தெரிவிப்பதற்காகவும் மக்களிடம் சுற்றுக்குவிடப்பட்டது. நான்கு மாதங்களாக இந்த அரசியல் சட்டத்தின் மீது விவாதங்கள் நடத்தப்பட்டது. அதில் பதிநான்கு கோடிக்கும் மேற்பட்ட ரஷ்ய மக்கள் இந்த விவாதத்தில் கலந்துகொண்டனர். அரசியல் சட்ட ஆணைக் குழுவிற்கு நான்கு லட்சம் ஆலோசனைகள் மக்கள் அனுப்பிவைத்தார்கள். விவாதம் நடைபெற்ற காலங்களில் ரஷ்ய கம்யூனிஸ்டுகளின் பத்திரிக்கையான பிராவ்தா பத்திரிக்கைக்கு 30510 கடிதங்கள் மக்களிடமிருந்து வந்தது. இவ்வாறு நாட்டின் அரசியல் சட்டம் குறித்து நாட்டு மக்களிடம் நான்கு மாதங்களாக வெளிப்படையான விவாதம் நடத்தி அதன் அடிப்படையில் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கி செயல்படுத்துகின்ற ரஷ்ய சோவியத்து அரசு உண்மையான ஜனநாயக அரசா? அல்லது சொத்துடையவர்களால் மட்டும் தேர்ந்தெடுக்கப் பட்ட ஜமீன்தார்கள், பெருமுதலாளிகள், மெத்தப்படித்த மக்கள் மீது எவ்விதமான அக்கறையும் இல்லாத மேட்டுக்குடியினர்கள் அடங்கிய ஓர் அரசியல் நிர்ணய சபை கூடி, அதுவும் பிரிட்டீஷாரின் ஆட்சி நடந்துகொண்டு இருக்கும் போதே கூடி, பிரிட்டீஷார் உருவாக்கிய காலனியச் சட்டங்களை பெரும்பாலும் அப்படியே ஏற்றுக்கொண்டு உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிற இந்திய அரசு உண்மையான ஜனநாயக அரசா? சிந்தியுங்கள்.
சமீபத்தில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசானது விவசாயிகளுக்கான சட்டம் என்று ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தது. அந்தச் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது என்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துவிடும் என்று விவசாயிகள் போராடினார்கள். இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு இருக்கிறது ஆகவே இந்தச் சட்டத்தை மக்களிடம் சுற்றுக்குவிட்டு மக்களிடம் கருத்து கேட்டதா? இந்த அரசு, இல்லை இல்லவே இல்லை. விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடுகிறோம் என்று போராடிய காங்கிரஸ் கட்சி உட்பட யாராவது இந்தச் சட்டத்தை சுற்றுக்குவிட்டு மக்களிடம் கருத்து கேட்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்களா? மக்களின் உணர்வுகளைப் பற்றி எவ்விதமான கவலையும் இல்லாமல்பாராளுமன்றமே சகல அதிகாரமும் படைத்த ஒரே நிறுவனம் என்றும் அதன் மூலம் மட்டுமே சட்டங்கள் உருவாக்கப்படும் என்றும், அதுதான் ஜனநாயகம் என்றும் பேசுபவர்கள்,
சிந்திப்பவர்கள் ரஷ்ய சோவியத்து அரசில் மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் செயல்பட்ட பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தைப் புரிந்துகொள்ள முடியுமா? ஆகவே உண்மையிலேயே பெரும்பான்மையான மக்களின் விருப்பங்களின் அடிப்படையிலேயே சட்டங்கள் இயற்றுவதும் திட்டங்கள் போட்டு செயல்படுத்தும் முறையான சோவியத்து ஆட்சி முறையே உண்மையான ஜனநாயக ஆட்சி முறையாகும். இத்தகைய ஆட்சி முறையையே பாட்டாளி வர்க்க ஜனநாயக ஆட்சி முறை என்கிறோம். இதற்கு மாறாக பெரும்பான்மை மக்களுக்கு எதிராக சிறுபான்மையினரான பாராளுமன்ற உறுப்பினர் களால் போடப்படும் சட்ட திட்டங்களின் அடிப்படையில் செயல்படும் இந்த பாராளுமன்ற ஆட்சி முறையானது ஜனநாயக ஆட்சிமுறை ஆகாது என்பதை உழைக்கும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ரஷ்யாவில் லெனின் மற்றும் ஸ்டாலின் காலத்தில் செயல்பட்ட சோவியத்து ஆட்சி முறையில் ரஷ்ய மக்கள் எந்தளவுக்கு நன்மை அடைந்தார்கள் என்ற உண்மையை இந்த முதலாளித்துவவாதிகளும், முதலாளித்துவ சீர்திருத்தவாதிகளும், உழைக்கும் வர்க்க அமைப்பிற்குள்ளே செயல்படும் துரோகத் தலைவர்களும் மூடிமறைக்கிறார்கள். மேலும் சோவியத்து ஆட்சி தவறானது என்ற பொய்யைப் பேசி உழைக்கும் மக்களை குழப்புகிறார்கள்.
ஆகவே இவர்களது பிரச்சாரங்கள் பொய்யானது என்பதை அறிந்துகொள்ள சோவியத்து ரஷ்யாவில் சோவியத்து அரசின் மூலம் மக்கள் அடைந்த நன்மைகளை நாம் தெரிந்துகொண்டு மக்களிடம் பிரச்சாரம் செய்வதை நமது முதன்மையான கடமையாகக் கருதி மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
லெனின் மற்றும் ஸ்டாலின் காலத்தில் ரஷ்யாவில் நடைபெற்ற சோசலிச சோவியத்து ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த நன்மைகளைப் பற்றி கம்யூனிஸ்டுகள் அல்லாத நமது நாட்டைச் சேர்ந்த கல்வியாளர்களும், பத்திரிக்கையாளர்களும் ரஷ்யாவுக்கு சென்று வந்து அந்த ஆட்சியைப் பற்றிப் புகழ்ந்து எழுதியுள்ளனர். அவர்களின் எழுத்துக்களை நாம் தேர்ந்தெடுத்து தொகுத்து நமது மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
ரஷ்ய மக்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியவுடன் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முதல் அரசாணை லெனின் கையெழுத்திட்டு வெளியிட்டார். அதுவரை விவசாயிகளை கொடூரமாக அடக்கி ஒடுக்கி சுரண்டிவந்த பண்ணையார்களிடமிருந்து நிலங்கள் பறிக்கப்பட்டு உழுபவனுக்குச் சொந்தமாக நிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் ஏராளமான விவசாயிகள் பண்ணையார்களின் சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெற்றார்கள். ஆனால் இந்தியாவில் விவசாயிகள் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சித் தலைமையில் போராடி பண்ணையார்களிடமிருந்து நிலங்களைப் பறித்து விவசாயிகளுக்குச் சொந்தமாக ஆக்கினார்கள். விவசாயிகளின் இந்த முயற்சியை அழித்துவிட்டு பல விவசாயிகளைப் படுகொலை செய்து விவசாயிகள் பெற்ற நிலங்களை விவசாயிகளிட மிருந்து பறித்து பண்ணையார் களிடம் ஒப்படைத்தது நேரு அரசு. இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான நிலங்களை கடனுக்காக இழந்து தற்கொலை செய்து சாகும் நிலைக்கு அவர்களைத் தள்ளிவிட்டுக்கொண்டு இருக்கிறது இந்திய அரசாங்கங்கள்.
ரஷ்ய நாட்டின் உற்பத்தியைப் பெருக்குவதற்கும், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் ஐந்தாண்டு திட்டங்கள் போட்டு மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி மக்களைத் திரட்டி கூட்டாக உற்பத்தியில் மக்களை ஈடுபடுத்தி, மக்களை உற்சாகப்படுத்தி செயல்படுத்தியது ரஷ்ய சோவியத்து அரசு. இதன் மூலம் அந்தத் திட்டங்களை ஐந்தாண்டுகளுக்கும் குறைவான காலத்திலேயே நிறைவு செய்து நாட்டின் செல்வத்தை உயர்த்தி ரஷ்ய மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கையை சோவியத்து அரசு ஏற்படுத்திக் கொடுத்தது. முதன்மையாக சோவியத்து நாட்டை முழுவதுமாக முதல் ஐந்து ஆண்டுகளுக்குள்ளேயே மின்சாரமயமாக்குவதில் சோவியத்து அரசும் சோவியத்து மக்களும் சாதித்தார்கள். ஒரு நாடு தொழில்துறையிலும் விவசாயத்திலும் வளர வேண்டுமானால் அந்த நாடு மின்சாரத் துறையில் தன்நிறைவு பெற்றிருக்க வேண்டும் என்ற லெனினது கொள்கையை முதலில் செயல்படுத்திச் சாதனை புரிந்தவர்கள் உலகில் சோவியத்து ரஷ்ய மக்கள்தான்.
இந்தியாவில் வெள்ளையர்கள் வெளியேறி பல ஆண்டுகள் ஆனபோதும் மின்துறையில் இந்தியா இந்தச் சாதனைகளைப் புரியவில்லை. தற்போது மின்துறையை மக்களின் உழைப்பை கொள்ளையடிக்கும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் நிலையைப் பார்க்கிறோம். சோவியத்து அரசு மக்களை முன்னேற்றியதா, இல்லை இந்திய பிற்போக்கு அரசு மக்களை முன்னேற்றியதா சிந்தியுங்கள்.
அனைத்து மக்களுக்கும் கல்வி கொடுப்பது அரசின் கடமை, கல்விகற்ற அனைவருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பது அரசின் கடமை, என்ற கொள்கையை வகுத்து அதனை சட்டமாக்கி செயல்பட்டது ரஷ்ய சோவியத்து அரசு. அதனை மிகக்குறுகிய காலத்திலேயே மக்களின் துணைகொண்டு சாதித்தது சோவியத்து அரசு. மக்களே அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள் என்ற கொள்கை கொண்டவர்கள் ரஷ்ய கம்யூனிஸ்டுகள்.
அந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே ரஷ்ய சோவியத்து அரசு செயல்பட்டது. ஆனால் இந்தியாவிலுள்ள ஆட்சியாளர்கள் மக்களை நம்புவதும் இல்லை, மக்களை மதிப்பதும் இல்லை. ஏதோ இவர்கள்தான் சகலவிதமான சக்தி படைத்தவர்களாகக் கருதிக்கொண்டு,
மக்களை கண்டுகொள்ளாமலேயே ஆட்சி நடத்துவதன் விளைவாகவே இந்தியாவில் மக்கள் முன்னேறாமல் மக்கள் பசியிலும் பிணியிலும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். மக்களுக்கு கல்வியும் வேலைவாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்த ரஷ்ய சோவியத்து அரசு மக்களுக்கான அரசா, இல்லை மக்களை கல்வி அறிவற்ற தற்குறிகளாக அலையவிட்டும், அவர்களுக்கு
வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்காமல் ஒரு சிலருக்கு மட்டும் கல்வி வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் இடஒதுக்கீட்டுக் கொள்கையைக் காட்டி மக்களை ஏமாற்றும் இந்தியப் பிற்போக்கு அரசு மக்களுக்கான அரசா சிந்தியுங்கள்.
ரஷ்யாவிலுள் அனைத்து மக்களுக்கும் குடியிருப்பதற்கு வீடு அவசியம் என்ற கொள்கை வகுத்து அனைத்து மக்களுக்கும் வீடு கட்டிக்கொடுத்தது ரஷ்ய சோவியத்து அரசு. ஆனால் இந்தியாவில் பலருக்கு சொந்தமாக குடியிருக்க வீடு இன்றுவரை இல்லை. பிளாட்பாரமே வீடுகளாக்கொண்ட மக்கள் இன்றும் இந்தியாவில் வாழ்கிறார்கள். அனைத்து மக்களுக்கும் மட்டுமல்லாமல் ரஷ்யாவில் குடியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கும் இலவசமாக மருத்துவ வசதி செய்துகொடுக்க வேண்டியது அரசின் கடமை என்ற கொள்கை வகுத்து முதன்முதலாக செயல்படுத்தியது ரஷ்ய சோவியத்து அரசு. ஆனால் இந்தியாவில் மக்களுக்கு மருத்துவ வசதி செய்துகொடுக்க வேண்டியது அரசின் கடமை இல்லை என்று அதனை கைவிட்டுவிட்டு அதனை தனியாரிடம் இந்திய அரசு ஒப்படைத்துக்கொண்டு இருக்கிறதை நாம் பார்க்கிறோம்.
இதுவரை உழைத்து பாடுபட்ட மக்கள் வயது முதிர்வின் காரணமாக உழைத்து வாழமுடியாத நிலையில் உள்ளவர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கியது சோவியத்து அரசு. ஆனால் இந்தியாவிலோ அரசாங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் ஓய்வூதியம் கொடுக்க இந்திய அரசு மறுக்கிறது. அவர்கள் பணியில் இருக்கும் போது அவர்கள் வாங்கும் சம்களத்திலிருந்து பிடித்தம் செய்த பணத்தையே அவர்கள் ஓய்வுபெற்ற பின்பு வழங்கும் கொள்கையை செயல்படுத்துகிறது. இத்தகைய அரசு வயதானவர்களை எங்கே கவனிக்கப் போகிறது.
ரஷ்யாவில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் மட்டுமே உழைப்பில் ஈடுபட வேண்டும் என்ற கொள்கையை செயல்படுத்தியது சோவியத்து அரசு. ஆனால் இந்தியாவில் 8 மணி நேரக் கொள்கையை மறுத்துவிட்டு தொழிலாளர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்துவிட்டு கார்ப்பரேட்டு முதலாளிகளின் நலனுக்கான சட்டங்களைப் போட்டு தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரான அரசாக இந்திய மோடி அரசு செயல்படுகிறது. இந்த அடிப்படை உரிமைகளை யாரும் மறுக்கக்கூடாது என்றும் அவற்றை மறுப்பவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டம் போட்டுச் செயல்படுத்தியது சோவியத்து அரசு.
ஆனால் இந்தியாவில் கார்ப்பரேட்டு முதலாளிகளின் நலன்களுக்காவும் தொழிலாளர் களின் நலன்களுக்கு எதிராகவும் சட்டம் போட்டு, இந்தச் சட்டத்தை மீறுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று மிரட்டுகிறது மோடி அரசு. அன்றைய சோவியத்து அரசு தொழிலாளர்களுக்கான அரசா அல்லது இன்றைய மோடி அரசு தொழிலாளர்களுக்கான அரசா சிந்தியுங்கள். ரஷ்ய நாட்டிலுள்ள கனிம வளங்களை தோண்டியெடுத்து ரஷ்ய நாட்டின் வளர்ச்சிக்காகத் திட்டம் தீட்டி செயல்பட்டது லெனின் மற்றும் ஸ்டாலின் தலைமையிலான சோவியத்து அரசு. இந்த சோவியத்து அரசு தேசபக்த, ஏகாதிபத்திய எதிர்ப்பு, உழைக்கும் மக்களுக்கான அரசா?. ஆனால் இந்தியாவில் கனிம வளங்களை அந்நிய ஏகபோக நிதிமூலதன கார்ப்பரேட் முதலாளிகள் இங்கிருந்து கொள்ளையடித்துச் செல்வதற்கு அனுமதி வழங்கிய மன்மோகன் மற்றும் மோடி தலைமையிலான அரசுகள் தேசபக்த, ஏகாதிபத்திய எதிர்ப்பு, உழைக்கும் மக்களுக்கான அரசுகளா? சிந்தியுங்கள்.
ரஷ்யாவில் லெனின் மற்றும் ஸ்டாலின் காலத்தில் பின்தங்கிய ரஷ்ய நாட்டை முன்னேறிய தொழில்வளம் மிகுந்த நாடாக மாற்றிய பெருமை அந்த சோவியத்து அரசுக்கு உண்டு. மிகச் சிறந்த கட்டுமானங்களை சோவியத்து அரசு மக்களின் துணைகொண்டு கட்டி வளர்த்திருந்தது.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் பாசிச ஹிட்லரின் ஜெர்மனிய இராணுவம் ரஷ்யாவையையே பெரும்பகுதி அழித்துவிட்டது. அத்தகைய அழிவை எந்த நாடு சந்தித்திருந்தாலும் அதிலிருந்து மீள முடியாது. ஆனால் ஸ்டாலினது தலைமையிலான சோவியத்து அரசும், சோவியத்து கம்யூனிஸ்டுக் கட்சியும் அந்த மக்களும் கூட்டு சேர்ந்து அந்த இடிபாடுகளை அகற்றி மீண்டும் ரஷ்ய நாட்டை கட்டியெழுப்பியது உலக வரலாற்றில் இதுவரை யாரும் சாதித்திடாத அரிய சாதனை ஆகும். இன்றும் அந்த சாதனைகளின் விளைவுகளை ரஷ்ய மக்கள் அனுபவித்து வருகிறார்கள். அன்றைய காலங்களில் ரஷ்யாவில் சோவியத்து அரசு உருவான போது ரஷ்யா மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்தது.
பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்களின் ஆதரவுடன் ரஷ்யாவில் விவசாயத்தை வளர்க்க புதிய அனைகள் கட்டுவது, கால்வாய் வெட்டுவது போன்ற பணிகளையும் தொழில்துறையை வளர்த்து ஏராளமான டிராக்டர்களை உற்பத்தி செய்து விவசாயத்தை வளர்த்தது போன்ற பணிகளைச் செய்வதில் சோவியத்து அரசாங்கம் ஈடுபட்டது. அப்போது அதனை சாதிப்பதற்கு அந்நியர்களான ஏகாதிபத்திய முதலாளிகளைச் சார்ந்தும் அவர்களின் உதவியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கருத்து எழுந்தபோது அதனை ஸ்டாலின் மறுத்தார்.
அதற்கு மாறாக தனது சொந்த தொழில்நுட்பத்தைச் சார்ந்தும், தனது சொந்த மூலதனத்தைச் சார்ந்தும், சொந்த மக்களைச் சார்ந்தும், சொந்த நாட்டுச் சந்தையைச் சார்ந்து ஒரு நாடு செயல்படுவதன் மூலமே ஒரு நாடு அந்நிய ஏகாதிபத்தியவாத முதலாளிகளுக்கு அடிமைப்படாமல் தனது சுதந்திரத்தைப் பாதுகாக்க முடியும் என்ற கொள்கையை ஸ்டாலின் அறிவித்தார். அதனை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். இந்தக் கொள்கையை செயல்படுத்தியதன் மூலமே ரஷ்ய சோவியத்து மக்களை நிதிமூலதன முதலாளிகளால் அடிமைப்படுத்த முடியவில்லை. ஆனாலும் இறுதியாக ஹிட்லர் படையெடுத்துவந்து ரஷ்ய சோவியத்தை அடிமைப்படுத்த செய்த முயற்சியையும் ஸ்டாலின் தலைமையிலான கம்யூனிஸ்டுக் கட்சியும், செம்படையும், ரஷ்ய மக்களும் ஒன்றுபட்டு பாசிச ஹிட்லரின் படையை ஜெர்மன் தலைநகர்வரை ஓட ஓட விரட்டியடித்தனர். இந்த வரலாற்று உண்மையை மூடிமறைத்துவிட்டு இதில் ஸ்டாலினுக்கு எவ்விதமான பங்கும் இல்லை என்று பொய்பேசித் திரிகிறது ஒரு கூட்டம். இந்த சாதனை புரிந்ததில் ரஷ்ய மக்களுக்கும், செம்படைக்கும்,ரஷ்ய கம்யூனிஸ்டுகளுக்கும் முக்கியமான பங்கு இருக்கிறது. அதே வேளையில் அந்தக் காலத்தில் ரஷ்ய மக்களுக்கு தலைமைதாங்கி வழிகாட்டிய தலைவர் ஸ்டாலினுக்கும் ஒரு முக்கியமான பங்கு உண்டு என்பதை சாதாரணமான அறிவுள்ள எவரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் கம்யூனிஸ்டுகள் என்று தங்களைச் சொல்லிக்கொண்டு கார்ப்பரேட் முதலாளிகளிடம் சோரம் போனவர்கள் ஸ்டாலினுக்கு இதில் பங்கில்லை என்றும் ஸ்டாலின் ஏகாதிபத்தியங்களுக்கு அடிபணிந்து போனார் என்றும் பொய் பேசித் திரிகின்றனர்.
ரஷ்யாவில் சோவியத்து அரசு உருவாவதற்கு முன்பு விவசாயமானது பின்தங்கிய நிலையிலேயே இருந்தது. விவசாயிகளிடம் சோசலிச உணர்வுகள் இல்லை. தனிவுடமை சிந்தனையே மேலோங்கி இருந்தது. இந்த சூழலில் அங்கு விவசாயத்தை வளர்க்க மக்களே இணைந்து நடத்தும் கூட்டுப் பண்ணைகளை சோவியத்து அரசு மக்களின் ஆதரவோடு அமைத்தது.
இந்தக் கூட்டுப் பண்ணையானது மிகப்பிரமாண்ட மாக பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் அமைந்திருந்தது. அந்தக் கூட்டுப் பண்ணையில் பணியாற்றும் விவசாயிகளுக்கு அந்தக் கூட்டுப் பண்ணைக்குள்ளேயே வீடுகள் கட்டித்தரப் பட்டிருந்தது. கூட்டுப் பண்ணைக் குழுக்களுக்கு இடையே போட்டி ஏற்படுத்தப்பட்டது. அதிகமாக விளைச்சல் செய்தவர்கள் பாராட்டப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு கூட்டுப் பண்ணைக்கும் ஒரு விமானத்தை சோவியத்து அரசு வழங்கியிருந்தது. அதனைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களது விளைபொருளை விரைவாக தேவையான இடங்களுக்கு கொண்டு சென்று அதனை விற்று பயன் அடைந்தார்கள். ஆனால் இந்தியாவில் சிறுசிறு விவசாயிகள் அவர்களது துண்டு நிலங்களில் பயிர் செய்ய வேண்டுமானால் கடன் வாங்கியே விவசாயம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. விவசாயிகளுக்குத் தேவையான கடன் வசதியோ, நீர்ப்பாசன வசதியோ, போக்குவரத்து வசதியோ, அவர்களின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கான வசதியையோ இந்தியாவை ஆளுகின்ற அரசாங்கங்கள் செய்து கொடுப்பதில்லை. விவசாயிகள் கடன் தொல்லையால் செத்து மடிவதையே நாம் இங்கு பார்க்கிறோம்.
சோவியத்து ஒன்றியத்தின் உஸ்பெக்கிஸ்தான் குடியரசிலுள்ள பாலைவனத்திற்கு அருகிலுள்ள எதற்கும் பயன்படாத சதுப்பு நிலத்தில் தண்ணீர் தேங்கி இருக்கும். அங்கே இருக்கும் தண்ணீரை இந்த பாலைவனப்பகுதிக்கு கொண்டுவந்து அந்தப் பாலைவனப் பகுதியில் பருத்தியை விளைய வைத்து விவசாயிகளின் வளமான வாழ்க்கைக்கு சோவியத்து அரசு வழிவகுத்துக் கொடுத்தது. இந்தியாவில் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று சொல்லப்படும் தஞ்சைப் பகுதியிலிருந்து கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக மீதேன் எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி நன்கு விவசாயம் செய்திடப்பட்ட பகுதியையே பாலைவனமாக மாற்றிக்கொண்டிருக்கும் அரசுதான் இந்திய அரசாகும். பாலைவனத்தை விவசாய நிலமாக மாற்றியது ரஷ்ய சோவியத்து அரசு. நல்ல விளை நிலங்களை அழித்து பாலைவனமாக மாற்றுகிறது இந்திய பொருமுதலாளிகளின் அரசு. இந்த கேடுகெட்ட இந்தியப் பெருமுதலாளிகளின் அரசைத்தான் மிகச் சிறந்த ஜனநாயக அரசு என்று நாட்டை ஆளும் முதலாளித்துவக் கட்சிகளும் நாட்டின் சில பகுதிகளை ஆளும் சீர்திருத்தவாதக் கட்சிகளும், கம்யூனிஸ்டுகள் என்று தங்களைச் சொல்லிக்கொண்டு கார்ப்பரேட் முதலாளிகளிடம் விலைபோன திருத்தல்வாதிகளும் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இதில் எது உண்மை என்பதை சிந்தியுங்கள்.
கம்யூனிஸ்டுகளின் ஆட்சி என்பதே மக்களின் மீதான சர்வாதிகாரம் என்றும், அந்த ஆட்சியில் மக்களுக்கு எவ்விதமான உரிமையும் இல்லை என்றும் சாதாரணமான விவசாயிகளிடமிருந்தும் சிறிய அளவிலான நிலங்களையும் அவர்களால் வளர்க்கப்படும் கால்நடைகளையும் கூட கம்யூனிஸ்டுகள் பறித்துக்கொள்வார்கள் என்றும் இன்னும் பலவாறு சோசலிச சோவியத்து ஆட்சியைப் பற்றி பல அவதூறான பொய்யான கட்டுக்கதைகளை ஏகாதிபத்தியவாதிகளும், பிற்போக்கு முதலாளித்துவவாதிகளும் அவிழ்த்துவிட்டு கம்யூனிசக் கொள்கைகளைப் பற்றி மக்கள் வெறுப்படையச் செய்து ஏமாற்றுகிறார்கள். இந்த அடிப்படையிலேயே மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்துவரும் நவீன டிராட்ஸ்கியவாதிகளும் ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி என்று பொய்ப்பிரச்சாரம் செய்து ஸ்டாலின் தலைமையிலான சோவியத்து ஆட்சியை ஒரு சர்வாதிகார ஆட்சி என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இது உண்மையா? இல்லை. இத்தகைய பிரச்சாரம் அனைத்தும் வடிகட்டிய பொய்யாகும்.
சோவியத்து ஆட்சி முறையில் அரசியல் அதிகாரம் படைத்த நிறுவனம் சோவியத்து ஆகும்.
இந்த சோவியத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே உறுப்பினராக ஆக முடியும். அதே வேளையில் இந்த உறுப்பினர் மக்களுக்கு விரோதமாக செயல்பட்டால், இவரைத் தேர்ந்தெடுத்த மக்கள் இவரை திருப்பி அழைத்துக்கொள்வதற்கு மக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த முறையை நடைமுறையில் செயல்படுத்திய சோவியத்து அரசு சர்வாதிகார அரசா? இல்லை இந்த அரசுதான் உலகத்தில் முதன்முதலாகத் தோன்றிய உண்மையான ஜனநாயக அரசாகும். இந்த ஜனநாயக முறை ஸ்டாலின் காலத்தில் மாறிவிட்டதா? இல்லை. இந்த ஜனநாயக முறையில் மாற்றம் ஏற்படாத நிலையில் ஸ்டாலின் தலைமையிலான சோவியத்து அரசை சர்வாதிகார அரசு என்பது சரியா? இல்லை என்பதே எமது வாதம் ஆகும்.
இந்தியா, போன்ற நாடுகளில் நாடாளுமன்றமே அரசியல் அதிகாரம் பெற்ற அமைப்பாக விளங்குகின்றது. இந்த பாராளுமன்றத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களுக்கு எதிராக தவறு செய்தால் அவர்களை திரும்ப அழைத்துக்கொள்வதற்கு மக்களுக்கு அதிகாரம் உள்ளதா? இல்லை. இதன் காரணமாகவே இந்த பாராளுமன்றத்தில் போடப்பட்ட விவசாயச் சட்டத்தை பெருவாரியான விவசாயிகள் எதிர்த்தும் அந்த சட்டங்கள் திரும்பப் பெறப்படவில்லை, பெயரவில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் வாக்களித்தவர்கள் அனைவரும் பெரும் பான்மையான விவசாயிகளுக்கு எதிரான குற்றவாளிகளே ஆவார்கள். இந்த பாராளுமன்ற உறுப்பினர்களை திரும்ப அழைத்துக்கொள்ளும் அதிகாரம் இந்திய மக்களுக்கு இருக்குமானால் இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் இந்த மக்கள் திருப்பி அழைத்திருப்பார்கள். அவர்களின் பதவியும் பறியோயிருக்கும். இவ்வாறு இந்த எம்பிக்களின் பதவி பறிபோவதற்கு வாய்ப்பு
இருந்திருக்குமானால் இவர்கள் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்திற்கு வாக்களிக்க அஞ்சியிருப்பார்கள். இத்தகைய மக்கள் விரோத சட்டங்களையும் திட்டங்களையும் இந்த பாராளுமன்ற அரசியல்வாதிகளால் போடவோ அதனை செயல்படுத்தி மக்களின் வாழ்வை நசுக்கவோ வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும். ஆகவே மக்களுக்கு எதிரான சட்டங்களையும் திட்டங்களையும் போடுவதற்கு வாய்ப்புள்ள இந்த பாராளுமன்ற முறையிலான ஆட்சி ஜனநாயக ஆட்சியா? ஸ்டாலின் தலைமையிலான சோவியத்து ஆட்சி ஜனநாயக ஆட்சியா? சிந்தியுங்கள்.
காலம் காலமாக ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்பட்டு வந்த பெண்களுக்கு சமூகத்தின் அனைத்து துறைகளிலும் சம உரிமையை வழங்கியதோடு அதை சட்டமாக்கி நடைமுறைப்படுத்திய ஒரே நாடு சோவியத்து ரஷ்யா மட்டும்தான். ஆண்களைப் போலவே அனைத்து துறைகளிலும் பெண்கள் ஈடுபட்டார்கள். வின்வெளிக்கு வாலெண்டினா என்ற பெண்ணை அனுப்பியது சோவியத்து அரசு. உடல் உழைப்பு மூளை உழைப்பு ஆகிய இருவேறு உழைப்பு நடவடிக்கையிலும் பெண்கள் ஈடுபடுவதற்கு பெண்களுக்கு சுதந்திரத்தைக் கொடுத்தது சோவியத்து அரசு. இந்தியாவில் பெண்களின் நிலை என்ன? பள்ளியில் படித்துவந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்படுகிறாள். அதனை தற்கொலை என்று முடிவெடுக்கும் அதிகார வர்க்க அமைப்பு. பெண்கள் என்றாலே போகப் பொருளாகப் பார்க்கும் கண்ணோட்டம் வளர்ந்துகொண்டிருக்கும் நிலை. பெண்கள் பற்றி சனாதனம் சொல்லும் கருத்தே அதாவது பெண்கள் அனைவரும் அடிமைகளாக இருப்பதற்கே ஆண்டவனால் படைக்கப்பட்டவள் என்று கருத்தைக் கொண்டிருக்கும் சமூக அமைப்பு. பெண்களை இழிவுபடுத்தும் பத்திரிக்கைகளோ, சினிமாவோ, நாடகங்களோ எதுவும் சோவியத்தில் கிடையாது, அவ்வாறு பெண்களை இழிவுபடுத்தியோ ஆபாசமாக சித்தரித்தாலோ அவர்களை சட்டப்படி கடுமையாக சோவியத்து அரசு தண்டித்தது.
வறுமையையும்,கல்வி அறிவின்மையையும் எப்படி ஒழிக்கப்பட்டதோ அதே போலவே அங்கு விபச்சாரமும் ஒழிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் பெண்களை பத்திரிக்கைகள் மற்றும் சினிமாவின் மூலம் இழிவுபடுத்தப்படுகிறது. மேலும் இங்கு விபச்சாரம் ஒழிக்கப்படாமல் தொடர்கிறது. பெண்கள் அவர்கள் கருவுற்று இருக்கும் காலங்களில் குழந்தை பிறப்பதற்கு முன்பும் பின்பும் மொத்தம் நான்கு மாதங்கள்சம்பளத்தோடு கூடிய விடுப்பு அனுமதிக்கப்பட்டது. குழந்தைகளை சோவியத்து அரசே வளர்க்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டது. அதேபோல் வயதானவர்களின்வாழ்க்கைக்கான பொறுப்பையும்சோவியத்து அரசே ஏற்றுக்கொண்டது. குழந்தைகளை அவர்களது பெற்றோரைக்காட்டிலும் மிகுந்த அக்கறையோடு சோவியத்து அரசு உருவாக்கிய நிறுவனங்களில் பணியாற்றிய தாதிமார்கள் கவனித்துக்கொண்டார்கள்.அன்றைய சோவியத்து சூழலோடு இன்றைய இந்தியச் சூழலை ஒப்பிட்டுப் பாருங்கள். பெண்களைப் பொறுத்தவரை சோவியத்து அரசு ஜனநாயக அரசா? பிற்போக்கு இந்திய அரசு ஜனநாயக அரசா? சிந்தியுங்கள்.
சோவியத்து அரசின் பெருமைகளையும் ஸ்டாலினது சிறப்புகளையும் நாம் சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு சிறப்பான விசயங்கள் உள்ளது. இவ்வாறு சிறப்புகள் அடங்கிய சோவியத்து அரசு மற்றும் ஆட்சி முறையையும் அந்த சமூக அமைப்பில் வாழ்ந்த மக்களின் சிறப்பான வாழ்க்கையோடு இந்திய அரசையும், இந்திய ஆட்சிமுறையையும் இந்திய சமூக அமைப்பு முறையையும் உழைக்கும் மக்களை நேசிக்கும் உயர்ந்த குணமுள்ளவர்கள் ஒப்பிட்டு சிந்தியுங்கள். நாம் இந்திய அரசமைப்பையும் சமூக அமைப்பையும் பாதுகாக்க பாடுபட வேண்டுமா? அல்லது சோவியத்து வடிவத்திலான மிகச் சிறந்த ஜனநாயக அரசமைப்பிற்காகவும், சோவியத்து ஆட்சி முறைக்காகவும், சோவியத்து வகைப்பட்ட சமூக அமைப்பை இந்தியாவில் உருவாக்குவதற்காகப் பாடுபட வேண்டுமா? சிந்தித்து முடிவெடுத்து செயல்படுவோம் வாருங்கள் என்று அழைக்கிறது இலக்கு இணையதளம்….. தேன்மொழி.
No comments:
Post a Comment