ஜனநாயகப் புரட்சியில் சமூக – ஜனநாயகவாதத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள். லெனின் பாகம் 5. 4. முடியரசை ஒழித்தல். குடியரசு
தீர்மானத்தின் அடுத்த
பகுதியைப் பார்ப்போம்:”இரண்டு வழக்குகளிலும் இப்படிப்பட்ட
வெற்றி புரட்சி சகாப்தத்தில் ஒரு புதிய கட்டத்தை துவக்கி வைக்கும்.”
“அரசியல்ரீதியிலே
விடுதலைபெற்ற முதலாளித்துவச் சமுதாயத்தின் பகுதிகளிடையே நடக்கும் பரஸ்பரப்
போராட்டத்தின் நிகழ்வுப் போக்கிலே அவற்றின் சமுதாய நலன்களை நிறைவாக்குவதற்கும்
நேரடியாக அரசதிகாரத்தைப் பெறுவதற்கும் சமுதாயப் படிநிலைகளைக் கொண்டுள்ள முடியரசு
அமைப்பு முறை முழுவதையும் இறுதியாக ஒழித்தல் – சமுதாய வளர்ச்சியின் புறநிலைமைகள்
தன்னியல்பாகத் தோற்றுவிக்கும் இந்தப் புதிய கட்டத்தில் உள்ள பணி இதுவே.
“ஆகவே
வரலாற்றுத் தன்மையில் முதலாளித்துவ வழிப்பட்ட இந்தப் புரட்சியின் பணிகளை நிறைவேற்ற
முன்வரும் ஒரு தற்காலிக அரசாங்கம் விடுதலைபெறும் போக்கிலுள்ள ஒரு தேசத்தைச்
சேர்ந்த பகைமையான வர்க்கங்களுக்கிடையே நடக்கும் பரஸ்பரப் போராட்டத்தை ஒழுங்கு
முறைப்படுத்தி, புரட்சிகரமான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்பது மட்டுமல்ல, அந்த வளர்ச்சியில் முதலாளித்துவ அமைப்பு முறையின் அடித்தளங்களை அச்சுறுத்தும்
காரணிகளை எதிர்த்தும் போராட வேண்டும்”.
தீர்மானத்தில் ஒரு
சுதந்திரமான பகுதியாக இருக்கும் இப்பிரிவைப் பரிசீலிப்போம். மேலே மேற்கோள் காட்டிய
வாதங்களில் உள்ள அடிப்படை கருத்து காங்கிரஸ் தீர்மானத்தின் மூன்றாம் பிரிவுக்
கூற்றில் விவரிக்கப்பட்டுள்ளதோடு பொருந்துகிறது. என்றபோதிலும், இரண்டு தீர்மானங்களின் இந்தப் பகுதிகளை விபரமாக ஒப்புநோக்கினால் அவற்றிடையே பின்வரும்
அடிப்படையான வேற்றுமை இருக்கிறதை உடனே காட்டிவிடும். புரட்சியின் சமுதாய -
பொருளாதார அடிப்படையைச் சுருக்கமாக வர்ணிக்கும் காங்கிரஸ் தீர்மானம் திட்டவட்டமான ஆதாயங்களுக்காக
வர்க்கங்கள் நடத்தும் நன்கு வரையறுக்கப்பட்ட போராட்டத்தின் மீதே கவனம் முழுவதையும்
செலுத்திப் பாட்டாளிவர்க்கத்தின் போராட்டப் பணிகளை முன்னணியில் நிறுத்துகிறது. புரட்சியின்
சமுதாய - பொருளாதார அடிப்படையைப் பற்றி ஒரு நீளமான, உருத்தெளிவில்லாத, குழப்பமான வர்ணணனையைக் கொண்டிருக்கும் மாநாட்டுத் தீர்மானம் திட்டவட்டமான
ஆதாயங்களுக்குரிய போராட்டத்தைப் பற்றி பிடிகொடுக்காமல் பேசுகிறது, பாட்டாளி வர்க்கத்தின் போராட்டப் பணிகளை அப்படியே
பின்னணியில் விட்டு வைக்கிறது.
சமுதாயத்தின் பல்வேறு பகுதிகளிடையே பரஸ்பரப் போராட்டம் நிகழ்ந்து வரும் போக்கில் பழைய
அமைப்பு முறையை ஒழிப்பதைப் பற்றி மாநாட்டுத் தீர்மானம் பேசுகிறது.
பாட்டாளி வர்க்கக் கட்சியாகிய நாம் இந்த ஒழிப்புப் பணியை செய்து முடிக்க
வேண்டும் என்று காங்கிரஸ் தீர்மானம் சொல்லுகிறது; ஜனநாயகக் குடியரசு நிறுவுவது ஒன்றுதான் உண்மையாகவே பழைய அமைப்பு
முறையை ஒழிப்பதைக் குறிக்கிறது என்றும் சொல்கிறது; அந்த குடியரசை நாம் வென்று தீரவேண்டும் என்றும் சொல்கிறது; அதற்காகவும் முழுமையான சுதந்திரத்துக்காகவும் நாம் போராடுவோம், எதேச்சிகார முறையை எதிர்த்து மட்டுமல்ல, நம் ஆதாயங்களை நம்மிடமிருந்து
முதலாளித்துவ வர்க்கம் பறிக்க முயற்சிக்கும் போதும் (நிச்சயமாகப்
பறிக்கத்தான் முயற்சிக்கும்) அதையும் எதிர்த்துப் போராடுவோம் என்றும்
சொல்கிறது. காங்கிரஸ் தீர்மானம் சரிநுட்பமாக வரையறுத்த உடனடிக்
குறிக்கோளுக்காக ஒரு திட்டவட்டமான வர்க்கத்தைப் போராட்டத்திற்கு அறைகூவி அழைக்கிறது..
மாநாட்டுத் தீர்மானமோ பல்வேறு சக்திகளின் பரஸ்பரப் போராட்டத்தைப் பற்றி நீட்டிப் பேசுகிறது.
ஒரு தீர்மானம் செயலூக்கமுள்ள போராட்டத்துக்குரிய மனநிலையை
வெளியிடுகிறது, மற்ற தீர்மானம் செயலற்ற பார்வையாளரின்
மனநிலையை வெளியிடுகிறது; ஒன்று உயிர்ப்புள்ள செயலுக்கு
அழைக்கும் அறைகூவலை முழங்குகிறது,
மற்றது உயிரற்ற ஏட்டறிவுவாதத்தில்
ஊறிப்போயிருக்கிறது. இன்றையப் புரட்சி நம் முதற்படி மட்டுந்தான், அதைத் தொடர்ந்து இரண்டாவது படி வரும் என்று இரு தீர்மானங்களும்
கூறுகின்றன; எனினும் இதிலிருந்து ஒரு தீர்மானம் நாம் இந்த முதற்படியை
முடிந்தவரை விரைவிலேயே கடந்து, முடிந்தவரை விரைவிலே ஒழித்து, குடியரசை வென்று, ஈவிரக்கமின்றி எதிர்ப்புரட்சியை
நசுக்கி, இரண்டாவது படிக்கு தயார் செய்ய
வேண்டும் எனும் முடிவுக்கு வருகிறது. ஆனால் மற்ற தீர்மானம் முதற்படியைப் பற்றிய சொற்பெருக்குள்ள
வர்ணணனைகளைக் கொட்டுகிறது, அதைப் பற்றி அசைபோட்டவாறு
இருக்கிறது (நயமற்ற சொல்லுக்கு மன்னிக்க).பழையதாக இருப்பினும் எக்காலத்துக்கும் புதுமைப்
பொலிவுடன் விளங்கும் மார்க்சியத்தின் கருத்துக்களை (ஜனநாயகப் புரட்சியின் முதலாளித்துவத் தன்மையை) ஒரு முன்னுரையாக
அல்லது முதல் மெய்க்கோளாகக் காங்கிரஸ் தீர்மானம் எடுத்துக்
கொள்கிறது; ஜனநாயகப் புரட்சிக்காகவும் சோசலிசப் புரட்சிக்காகவும்
ஒருங்கே போராடும் முற்போக்கான வர்க்கத்தின் முற்போக்கான பணிகளைப் பற்றி
அதிலிருந்து முடிவுகளை எடுக்கிறது.
மாநாட்டுத் தீர்மானம் அந்த முன்னுரையைத் தாண்டிப் போகவில்லை அதை வாயில் வைத்து
அசைபோட்டவாறு இருக்கிறது, அதைக் கொண்டு தனது கெட்டிக்காரத்
தனத்தைக் காட்டிக் கொள்ளவும் முயல்கிறது.
இதே வேறுபாடுதான் வெகு காலமாக ரஷ்ய மார்க்சியவாதிகளை இரு பிரிவுகளாகப் பிரித்திருக்கிறது:
“சட்டப்பூர்வமான மார்க்சியம்"20 நிலவியபழைய நாட்களில் ஏட்டறிவுவாதப்
பிரிவு என்றும் போர்த்துடிப்புள்ள பிரிவு என்றும் இருந்தன, துவக்க நிலையிலிருந்த மக்கள் திரளின் இயக்கக் காலத்தில் பொருளாதாரப்
பிரிவு என்றும் அரசியல் பிரிவு என்றும் இருந்தன. பொதுவாக வர்க்கப்
போராட்டத்துக்கும் குறிப்பாக அரசியல் போராட்டத்துக்கும் உள்ள ஆழமான
பொருளாதார வேர்கள் சம்பந்தப்பட்ட சரியான மார்க்சிய மெய்கோளிலிருந்து
நாம் அரசியல் போராட்டத்தின் பால் முதுகைத் திருப்பிக் கொண்டு
அதன் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்றும் அதன் செயல் பரப்பைக்
குறுக்க வேண்டும் என்றும் அதன் குறிக்கோள்களைத் தாழ்த்த வேண்டுமென்றும்
“பொருளாதாரவாதிகள்” வேடிக்கையான முடிவுக்கு வந்தனர். அதற்கு மாறாக அரசியல் பிரிவினர் இதே மெய்கோள்களிலிருந்து
வேறொரு முடிவுக்கு வந்தனர்: அதாவது,
இன்றைய நம் போராட்டத்தின்வேர்கள்
எவ்வளவுக்கு கெவ்வளவு ஆழமாக உள்ளனவோ அவ்வளவுக்கவ்வளவு
விரிவாகவும் துணிவுடனும் மன உறுதியுடனும் அதிக முன்முயற்சியுடனும் இந்தப் போராட்டத்தை
நாம் நடத்த வேண்டும் என்று. இதே சர்ச்சைதான் இப்போதும் நம்முன் உள்ளது,
ஆனால் நிலைமைகளும் வடிவமும் மட்டும்தான் மாறியுள்ளன. ஜனநாயகப் புரட்சி என்பது சோசலிசப்
புரட்சியிலிருந்து மிகவும் வேறுபட்டது, ஜனநாயகப் புரட்சியில்
“அக்கறை” கொண்டவர்கள் ஏழைகள் மட்டுமல்ல, முதலாளித்துவச் சமுதாயம் முழுவதின் தவிர்க்க முடியாத அவசியமான
தேவைகளில்ஆழமாகவேரூண்டியிருக்கிறது எனும் இந்த மெய்கோள்களிலிருந்து
நாம் எடுக்கும் முடிவு இதுதான்: முன்னணியிலுள்ள வர்க்கம் தன்னுடைய ஜனநாயகக்
குறிக்கோள்களை மேலும் தைரியமாக வகுத்துக் கொள்ள வேண்டும், அவற்றை மேலும் கூராகவும் முழுமையாகவும் வெளியிட வேண்டும், குடியரசு வேண்டும் எனும் உடனடியான கோஷத்தை முன்வைக்க
வேண்டும், ஒரு தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தை நிறுவுவது
தேவை, எதிர்ப்புரட்சியை ஈவிரக்கமின்றி நசுக்குவது தேவை எனும்
கருத்தை மக்களிடையே பரப்ப வேண்டும்,
என்று. ஆனால், நம் எதிர்ப்பாளர்களாகிய புதிய இஸ்க்ரா குழுவினர் இதே மெய்க்கோள்களிலிருந்து
எடுக்கும் முடிவு இவ்வாறு: ஜனநாயக முடிவுகளை முழுமையாக வெளியிடக்கூடாது, நடைமுறை கோஷங்களிலிருந்து குடியரசு
வேண்டும் எனும் கோஷத்தை விலக்கிவிடலாம், தற்காலிகப் புரட்சி
அரசாங்கம் தேவை எனும் கருத்தை மக்களிடையே நாம் பரப்பாமல்
இருந்துவிட முடியும், அரசியல் நிர்ணய சபையைக் கூட்டுவது
எனும் வெறும் முடிவையே ஒரு நிர்ணயமான வெற்றியாகச் சொல்ல முடியும், எதிர்புரட்சியை எதிர்த்துப் போராடும் பணியை நம்முடைய செயலுக்குரிய
குறிக்கோளாகமுன்நிறுத்தத் தேவையில்லை,
இதனால் “பரஸ்பரப் போராட்டத்தின் நிகழ்வுப் போக்கு” எனும் ஓர் உருத்தெளிவற்ற (தவறாக வரையறுக் கப்பட்டது என்பதையும் கீழே பார்க்கப் போகிறோம்)
சுட்டுக்குறிப்பில் அதை அமிழ்த்துவிடலாம்,என்று. இது அரசியல் தலைவர்கள் பேசும் மொழியல்ல, ஆயப்புரையில்அடைந்து கிடக்கும் பழைய பேர்வழிகள் பேசும் மொழி புதிய இஸ்க்ரா குழுவினரின்
தீர்மானத்திலுள்ள பல்வேறு வரையறுப்புகளை எவ்வளவுக்கெவ்வளவு நெருங்கிப்
பரிசீலிக்கிறோமோ அவ்வளவுக் கவ்வளவு தெளிவாக மேலே சொன்ன
அதன் அடிப்படையான முனைப்புக் கூறுகள் தெரிகின்றன. எடுத்துக்காட்டாக, “அரசியல் ரீதியிலே விடுதலை பெற்ற முதலாளித்துவச் சமுதாயத்தின்
பகுதிகளிடையே நடக்கும் பரஸ்பர போராட்டத்தின் நிகழ்வுப் போக்கு” என்று சொல்கிறார்கள். இந்தத் தீர்மானம் எடுத்துக் கவனிக்கும்
(தற்காலிகப் புரட்சி அரசாங்கம் எனும்) விஷயப் பொருளை நினைவில் கொண்டு பரஸ்பரப்
போராட்டத்தின் நிகழ்வுப்போக்கை நீங்கள் குறிப்பிடுகிறதாயிருந்தால் அரசியல் ரீதியிலே முதலாளித்துவச் சமுதாயத்தை
அடிமைப்படுத்துகிற பகுதிகளைப் பற்றி எப்படி நீங்கள் மௌனம் சாதிக்கமுடியும்? புரட்சி வெற்றி பெறும் என்று மாநாட்டுக்காரர்கள் அனுமானித்துக்
கொண்டிருப்பதால் இப்பகுதிகள் ஏற்கனவே மறைந்து போய்விட்டதாக
உண்மையாகவே நினைக்கிறார்களா? என்று வியப்புடன் வினவுகிறோம்.
பொதுவாகச் சொன்னால் இப்படிப்பட்ட கருத்து அபத்தமானது, குறிப்பாகச் சொன்னால் அது மாபெரும் அரசியல் வெகுளித்தனமும் அரசியல்
கிட்டப் பார்வையும் வெளியிடுவதாகும் எதிர்ப்புரட்சியை எதிர்த்துப்
புரட்சி வெற்றிபெற்ற பின் எதிர்புரட்சி மறைந்துவிடாது; மாறாக, தவிர்க்க முடியாதபடி அது ஒரு
புதிய, மேலும் கடுமையான போராட்டத்தைத்
தொடங்கும். புரட்சி வெற்றிபெறும் போது
நம்முன் எழும் பணிகளை
ஆராய்வதே நம்முடைய தீர்மானத்தின் நோக்கம்,
எனவே எதிர்ப்புரட்சித் தாக்குதல்களை முறியடிப்பதற்கான பணிகளில் (காங்கிரஸ் தீர்மானத்தில் செய்துள்ளது
போல்) மாபெரும் கவனம் செலுத்துவது நம் கடமையாகும்; இன்றையப் புரட்சிக் காலப் பகுதிக்குப்பின் என்ன நடக்கும், அல்லது “அரசியல் ரீதியிலே விடுதலை
பெற்ற சமுதாயம்” ஏற்கனவே இருக்கையில் என்ன
நடக்கும் என்பதைப் பற்றிய பொதுப்படையான விவாதங்களிலே போர்த்துடிப்புள்ள கட்சியின் இந்த உடனடியான, அவசரமான, உயிர்நிலையான அரசியல் பணிகளை மூழ்கடிப்பதல்ல நம் கடமையாகும். பொருளாதாரத்துக்குக் கீழ்படுத்தப்பட்டதே
அரசியல் எனும் பொது உண்மையைத் திருப்பிச் சொல்வதின் வழியே “பொருளாதாரவாதிகள்” அவசரமான அரசியல் பணிகளைப் புரிந்து
கொள்ளத் தமக்குத் திறமையில்லாததை மூடிமறைத்தார்களோ அது போல், அரசியல் ரீதியிலே விடுதலை பெற்ற சமுதாயத்தில் போராட்டங்கள் நடக்கும் எனும் பொது உண்மையைத் திருப்பிச் சொல்வதின்
வழியே புதிய - இஸ்க்ரா குழுவினர் அந்த சமுதாயத்தின் அரசியல் விடுதலை
பற்றிய அவசரமான புரட்சிப் பணிகளை புரிந்துகொள்ளத் தமக்கு திறமை
இல்லாததை மூடிமறைக்கிறார்கள். “சமுதாயப் படிநிலைகளைக் கொண்டுள்ள முடியரசு அமைப்பு முறை முழுவதையும் இறுதியாக
ஒழித்தல்” எனும் சொற்றொடரை
வேண்டுமெனில், எடுத்துக் கொள்ளுங்கள்.
முடியரசு அமைப்பு முறையை இறுதியாக ஒழித்தல் என்பதற்கு பொருள் ஒரு ஜனநாயகக் குடியரசை அமைப்பது என்பதாகும்.
ஆனால் நல்லவரான நம்முடைய மார்தீனவும் அவரை மெச்சிப் போற்றுகின்றவர்களும்
இந்தச் சொற்றொடர் மிதமிஞ்சிய தெளிவும் எளிமையும் கொண்டுள்ளது
என்று கருதுகிறார்கள். அதை மேலும் “பொருளாழமுள்ளதாக” ஆக்க வேண்டும், மேலும்” கெட்டிக்காரத்தனமாகச்” சொல்ல வேண்டும் என்று மிகவும் விரும்புகிறார்கள். அதன் விளைவாக
அறிவாழமிக்கவர்களாகக் காட்டிக்கொள்ள முயலும் கேலிக்கிடமான வீண் முயற்சிகள் ஒருபுறம் கிடைக்கின்றன; மறுபுறம் கோஷத்துக்குப் பதிலாக வர்ணணனையும்,
முன்னேறுமாறு அழைக்கும் கிளர்ச்சியூட்டும் அறைகூவலுக்குப் பதிலாக ஒருவிதமான வாட்டத்தோடு
பின்னோக்கிச் சிந்திக்கும் போக்கும் கிடைக்கிறது. இன்றே இப்பொழுதே
குடியரசிற்காகப் போராட ஆர்வம் காட்டும் உயிர்ப்புள்ள மனிதர்களைப்
பார்ப்பதாக நமக்குப் படவில்லை,
Sub Specie aeternitatis* plusquamperfectum** எனும் பார்வை நிலியிலிருந்து பிரச்சனையைக் கவனிக்கும்
வதங்கிய பிணங்கள் போலத்தான் அத்தனைபேரும் நமக்குப் படுகின்றனர்.
மேலே போவோம்: “முதலாளித்துவ வழிப்பட்ட
இந்தப் புரட்சியின் பணிகளை நிறைவேற்ற முன்வரும் ஒரு தற்காலிக அரசாங்கம் ...”
--------------------
* காலமுடிவற்ற பார்வை நிலையிலிருந்து (லத்தீன்) -- ப-ர்.
** நெடுநாளைக்கு முன்சென்ற காலம் (ஜெர்மன்) --- ப-ர்.
--------------------
பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் தலைவர்களை எதிர்நோக்கியுள்ள ஒரு ஸ்தூலமான பிரச்சனையை
நம்முடைய மாநாட்டுக்காரர்கள்பார்க்கத் தவறியிருப்பதன் விளைவை இங்கே
உடனே பார்க்கிறோம், பொதுவாக முதலாளித்துவப் புரட்சியின்
குறிக்கோள்களை நிறைவேற்றவிருக்கும் எதிர்கால அரசாங்கங்களின் வரிசைத்
தொடர் பற்றிய பிரச்சனையானது அவர்களின் பார்வைப் புலத்திலிருந்து
தற்காலிகப் புரட்சி அரசாங்கம் பற்றிய ஸ்தூலமான பிரச்சனையை மறைக்கிறது.
“வரலாற்று வழியில்” நீங்கள் பிரச்சனையைப் பார்க்கவிரும்பினால், “தற்காலிகமானவை யாக” அறவே இல்லாத அரசாங்கங்களின் வரிசைத்
தொடர்தான் முதலாளித்துவப் புரட்சியின் வரலாற்றுரீதியான குறிக்கோள்களை நிறைவேற்றியுள்ளதையும்,
புரட்சியை முறியடித்த அரசாங்கங்களுங்கூட அப்படி முறியடிக்கப்பட்ட புரட்சியின் வரலாற்று
ரீதியான குறிக்கோள்களைக் கட்டாயத்தின் பேரில் நிறைவேற்ற வேண்டியிருந்ததையும்
எந்த ஐரோப்பிய நாட்டின் எடுத்துக்காட்டும் உங்களுக்குப் புலப்படுத்தும். ஆனால் நீங்கள் குறிப்பிடுவதைத் “தற்காலிகப் புரட்சி அரசாங்கம்” என்று அழைக்கிறதில்லை.
அது புரட்சி சகாப்தத்தின் அரசாங்கத்துக்கு, தூக்கியெறியப்பட்ட அரசாங்கத்தின் இடத்தில் அமர்ந்து
மக்களின் புரட்சியெழுச்சியின் அடிப்படையில்செயல்படுகிறஅரசாங்கத்துக்கு
கொடுக்கப்படுகிற பெயராகும்;
இந்த அரசாங்கம் மக்களிடமிருந்து
தோன்றிய ஏதோவொரு வகையான பிரதிநிதித்துவ நிறுவனத்தின் மீது ஆதாரப்பட்டிருப்பதல்ல. தற்காலிகப் புரட்சி
அரசாங்கம் என்பது புரட்சியின் உடனடியான வெற்றிக்காகவும் எதிர்ப்புரட்சி
முயற்சிகளை உடனடியாக முறியடிப்பதற் காகவும் இருக்கிற போராட்ட
உறுப்பாகும், பொதுப்படையாக முதலாளித்துவப் புரட்சியின்
வரலாற்று ரீதியான குறிக்கோள்களை நிறைவேற்று வதற்குரிய உறுப்பு அல்லவே அல்ல. நாமோ
வேறெதாவோர் அரசாங்கமோ முதலாளித்துவப் புரட்சிக்குரிய பணிகளில் என்னென்னவற்றை நிறைவேற்றியுள்ளோம்
என்று சரிநுட்பமாக நிர்ணயிப்பதை ஒரு எதிர்காலத்திய ரூஸ்கயா ஸ்தரீனாவின்21 எதிர்கால வரலாற்றாசிரியர்களிடம் விட்டுவிடுவோம்.அடுத்தமுப்பதாண்டுகளுக்குப் பின் அதைச் செய்வதற்குப்
போதிய நேரம் இருக்கிறது, தற்சமயம் குடியரசுக்கான போராட்டத்துக்கும்
அந்தப் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் மிகத் தீவிரமாகக்
கலந்து கொள்வதற்கும் நாம் கோஷங்களை முன்வைக்க வேண்டும், நடைமுறைக்குரிய வழிகாட்டிக் கட்டளைகள் கொடுக்க வேண்டும்.
மேலே சொன்ன காரணங்களுக்காக, தீர்மானத்தின் மேலே மேற்கோள் காட்டிய பகுதியிலுள்ள இறுதியான
கருத்துரைகளும் திருப்திகரமாயில்லை. பகையான வர்க்கங்களுக்கிடையே
நடக்கும் பரஸ்பரப் போராட்டத்தைத் தற்காலிக அரசாங்கம் “ஒழுங்குமுறைப்படுத்த” வேண்டியிருக்கும் எனும் சொற்றொடர் மிகவும் பொருத்தமற்றது, அல்லது எப்படிப் பார்த்தாலும் தடுமாற்றமுள்ள வகையில் சொல்லப்படுகிறது.
இவ்விதமான மிதவாத, ஒஸ்வபஷ்தேனியே வழிப்பட்ட சூத்திரங்களை
மார்க்சியவாதிகள் பயன்படுத்தக்கூடாது;வர்க்கப் போராட்டத் திற்க்குரிய உறுப்பாகச் செயல்படாமல் அதை “ஒழுங்குமுறைப் படுத்தும் சாதனமாகச்” செயல்படுகிற அரசாங்கங்கள் இருப்பது சாத்தியமே என்று அச்சூத்திரங்கள் நம்மை நம்பச் செய்யப்
பார்க்கின்றன... அரசாங்கமானது “புரட்சிகரமான வளர்ச்சியை முன்னேற்ற
வேண்டும் என்பது மட்டுமல்ல, அந்த வளர்ச்சியில் முதலாளித்துவ
அமைப்பு முறையின் அடித்தளங்களை அச்சுறுத்தும் காரணிகளை எதிர்த்தும்
போராட வேண்டும்” ஆனால், பாட்டாளி வர்க்கமல்லவா (இதன் பெயரில்தான் தீர்மானம் பேசுகிறது) இந்தக் “காரணியாக”
இருக்கிறது! தற்காலத்தில்
எப்படிப் பாட்டாளி வர்க்கம் “புரட்சிகரமான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும்” (அரசியல் சட்டவாத முதலாளி வர்க்கத்தினர் முன்னேற்ற
வேண்டுமென்று காட்டும் விருப்பத்தைவிட வெகுதூரத்துக்கு முன்னேற்ற வேண்டும்) என்று சுட்டிக் காட்டுவதற்குப் பதிலாக, புரட்சியின் ஆதாயங்களுக்கு எதிராக முதலாளி வர்க்கம் திரும்புகிறபோது
அதை எதிர்த்துப் போராடுவதற்குத் திட்டவட்டமான தயாரிப்புகளைப்
பற்றி அறிவுரை அளிப்பதற்குப் பதிலாக, தொடர் நிகழ்வுப் போக்கு
பற்றிய பொதுவான வர்ணணனை – நம்முடைய நடவடிக்கையின் ஸ்தூலமான குறிக்கோள்களைப்
பற்றி ஒன்றும் சொல்லாத ஒரு வர்ணணனை -- நமக்குத் தரப்படுகிறது, புதிய – இஸ்க்ரா பாணியில் தன்னுடைய கருத்துக்களைச்
சொல்வது, இயக்க இயலின்
கருத்துக்களுக்குப் புறம்பான பழைய பொருள்முதல்வாதத்தைப் பற்றி மார்க்ஸ் (ஃபாயர்பார்க்
பற்றிய தமது புகழ் பெற்ற “ஆய்வுரைகளில்”) கூறிய கருத்தை நினைவூட்டுகிறது.
தத்துவஞானிகள் உலகத்தைப் பற்றிப் பல்வேறு வழிகளில் வியாக்கியானந்தான்
செய்தார்கள், ஆனால் அந்த உலகத்தை மாற்ற வேண்டும்
என்பதுதான் விஷயம் என்று கூறினார் மார்க்ஸ்.22 அதுபோல் புதிய - இஸ்க்ரா குழுவினருக்குத் தங்கள் கண்ணெதிரே நிகழும் போராட்ட
நிகழ்வுப் போக்கைப் பற்றி பரவாயில்லை என்று சொல்லத்தக்க ஒரு வர்ணணனையும்
விளக்கமும் கொடுக்க முடியும்,
ஆனால் இந்தப் போராட்டத்துக்கு
ஒரு சரியான கோஷம் அளிக்கும் திறமை அவர்களுக்குச் சிறிதேனும் கிடையாது. அவர்கள்
நல்ல வழிநடைக்காரர்கள்தாம், ஆனால் மோசமான தலைவர்கள்; புரட்சியின்
பொருளாதாய முன்தேவைகளைப் பற்றி உணர்ந்து கொண்டு முற்போக்கான வர்க்கங்களுக்கு தலைமை
தாங்கும் நிலை எடுத்துக் கொண்டுள்ள கட்சிகள் வரலாற்றில் வகிக்க முடிகிற, வகித்துத் தீரவேண்டிய, செயல்பூர்வமானதும் தலைமையானதும் வழிகாட்டுந்தன்மையுள்ளதுமானபாத்திரத்தைப் புறக்கணிப்பதின் வழியே
அவர்கள் வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டத்தை
இழிவுபடுத்துகின்றனர்.
நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை
1. பாட்டாளி வர்க்கத்தின் முதன்மையான பணி வர்க்கப் போராட்டத்தை நடத்துவதே என்று மார்க்சிய
ஆசான்கள் வலியுறுத்துகிறார்கள். அதனை உழைக்கும் வர்க்கம் உள்வாங்கிக்
கொள்ள வேண்டும், மேலும் அதனை எப்போதும் மறந்துவிடக்
கூடாது.
2. ரஷ்யாவில் ஜனநாயகப் புரட்சிக்கான பணிகள் நடக்கும் போது புரட்சியில் சாதிக்க வேண்டிய பணிகள்
குறித்து லெனின் பேசும் போது புரட்சியின் மூலம் ஆட்சி அதிகாரத்தை பெறுவதற்கும்
அதனை பாதுகாப்பதற்கும்,முந்தைய நிலப்பிரபுத்துவ சமுதாய
முறைகளை முற்றிலுமாக ஒழித்திட வேண்டும் என்றார் லெனின்.
ஆனால் லெனினது இந்த வழிகாட்டுதலை இந்தியாவில் பிரிட்டீஷ் காலனி
ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் பிரிட்டீஷ் காலனி ஆதிக்க முறைகளை
முழுவதுமாக ஒழிப்பதற்கு மக்கள் போராட வேண்டும் என்ற கருத்தை
உழைக்கும் மக்களிடம் பரப்பத் தவறியது இந்திய கம்யூனிஸ்டுக்
கட்சி. அதன் காரணமாக இந்திய அரசியல் சட்டமானது பிரிட்டீஷ் காலனி
ஆதிக்கவாதிகளால் இந்திய மக்களை அவர்கள் அடக்கி ஆள்வதற்காக
அவர்களால் கொண்டுவரப்பட்ட சட்டங்களில் பலவற்றை ஏற்றுக்கொண்டு உருவாக்கப் பட்ட சட்டமாகவே இந்திய அரசியல் சட்டம்
அமைந்துள்ளது. இப்போதும் காலனி ஆதிக்கவாதிகளால் கொண்டுவரப்பட்ட
சட்டத்தைக் காட்டிலும் மிகக் கொடுமையான மக்கள் விரோத சட்டங்களை
காலனிய தாசர்களின் அரசாங்கங்களான காங்கிரஸ் மற்றும் பாஜக அரசாங்கங்கள் கொண்டு வருவதை நாம் பார்க்கலாம்.
ஆகவே தற்போதும் நடைமுறையிலிருக்கும் காலனி ஆதிக்க முறைகளை எதிர்த்து மக்கள் போராட வேண்டும். அதற்கு
ரஷ்யாவில் லெனின் தலைமையிலிருந்த புரட்சிகரமான போல்ஷ்விக் கட்சி
போன்ற புரட்சிகரமான கட்சி இந்திய மக்களை வழிநடத்திடத் தேவையாகும்.
இத்தகைய கட்சியாக இந்தியாவிலுள்ள சிபிஐ, சிபிஎம் போன்ற தேர்தல்வாதக் கட்சிகளோ அல்லது பல சிறுசிறு குழுக்களாக
சிதைந்துகொண்டு இருக்கும் குறுங்குழுவாத எம்எல் அமைப்புகளாளோ மக்களுக்கு பயன்பட மாட்டார்கள். நமக்குத்
தேவை போல்ஷ்விக் பாணியிலான ஒன்றுபட்ட புரட்சிகர கட்சிதான் அவசியமாகும்.
அதற்கு இந்த கம்யூனிச அமைப்புகள் பின்பற்றும் மார்க்சியத்திற்கு
எதிரான போக்குகள் களையப்பட வேண்டும்.
3. திட்டவட்டமான நலன்களுக்காக அல்லது ஆதாயத்துக்காக உழைக்கும் வர்க்கம் நடத்தும்
நன்கு வரையறுக்கப்பட்ட போராட்டங்களின் மீது கம்யூனிஸ்டுகள் தங்களது கவனத்தை
குவிக்க வேண்டும். மேலும் அத்தகையப் போராட்டங்கள் யாரை எதிர்த்து, யாருடன் கூட்டணி அமைத்து எப்படி போராட வேண்டும் என்று
கம்யூனிஸ்டுகள் உழைக்கும் மக்களுக்கு வழிகாட்ட வேண்டும். போராட்டத்தில்
ஈடுபடும் மக்களுக்கு நிலவுகின்ற சமூகப் பொருளாதாரத்தைப் பற்றிப்
போதித்து போராடும் மக்களிடம் சமூகப் பொருளாதார அறிவை வளர்க்க வேண்டும்.
மேலும் எவ்வகையான சமூகப் பொருளாதாரமானது உழைக்கும் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து உழைக்கும் மக்களுக்கு
நல்ல வாழ்வை கொடுக்கும் என்பதையும் போதித்து, அத்தகைய சமூகப் பொருளாதாரத்தை நாம் அடையும்வரை உழைக்கும் மக்களுக்கு
நல்ல வாழ்க்கை கிடைக்காது என்பதை உணர்த்தி அத்தகைய சமூகப் பொருளாதாரத்தை
அடைவதற்கு தடையாக இருக்கும் சமூகப் பிரிவினர் அதாவது வர்க்கப்
பிரிவுகள் எது என்பதையும், அதற்கு தடையாக உள்ள தற்போதைய
ஆட்சி முறையைப் பற்றியும் விளக்கி எடுத்துச் சொல்லி, இந்த தடைகளை எதிர்த்து நீண்ட விடாப்பிடியான போராட்டங்களை நாம்
நடத்த வேண்டியது அவசியம் என்பதையும் மக்களுக்கு நாம் உணர்த்த வேண்டும்.
அப்போதுதான் உழைக்கும் மக்கள் தங்களது கோரிக்கைகளுக்காப்
போராடி தோல்வி யுற்றாலும்,
சோர்ந்து போகாமல் இந்தத் தடைகளை
எல்லாம் ஒழித்திடுவதன் மூலமே நமக்கு நிரந்தரமான பலன் கிடைக்கும்
என்ற உணர்விலிருந்து மக்களின்
நல்வாழ்விற்கு தடையாக உள்ள அனைத்து தடைகளை நீக்குவதற்காக தொடர்ந்து நம்பிக்கையோடு
விடாப்பிடியாகப் போராட முன்வருவார்கள்.
ஆகவே நிலவுகின்ற சமூகப் பொருளாதார அமைப்பை தலைகீழாகப் புரட்டிப் போடும்வரை
நமது போராட்டம் தொடர வேண்டும் என்ற உணர்வை உழைக்கும் மக்களிடம்
ஏற்படுத்துவது கம்யூனிஸ்டு களின் முதன்மையான கடமையாகும்.
இதற்கு மாறாக தேர்தலில் வெற்றி பெறுவது, தொழிற்சங்கப் போராட்டத்தில் சிறிய வெற்றி பெறுவதிலேயேஉழைக்கும்
மக்களை திருப்திகாண வைத்துவிட்டால்,
உழைக்கும் மக்கள் தோல்வியடையும் போது
சோர்வடைவதை தவிர்க்க முடியாது. அத்தகைய சோர்வைத்தான் உழைக்கும் வர்க்கங்கள்
தற்போது அடைந்துள்ளனர். இந்த சோர்வுக்கு காரணம் இடதுசாரிகள்
லெனினது வழிகாட்டுதலை பின்பற்றத் தவறியதுதான். அதற்கு இடதுசாரி
தலைவர்கள் லெனினது போதனைகளை உள்வாங்கி அதனை அணிகளிடத்திலும், மக்களிடத்திலும் கொண்டு சேர்க்காததுதான் முக்கியமான
காரணம் ஆகும்.
4. ஜனநாயகம் என்ற பெயரில் தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கும் எதேச்சிகார ஆட்சி
முறைக்கு முடிவு கட்ட வேண்டியது கம்யூனிஸ்டுகளின் நீண்டகால பணியாக இருக்கும்
அதே வேளையில் நம்முடைய ஆதாயங்களை முதலாளித்துவ வர்க்கங்கள் பறித்துக் கொண்டிருக்கும் நிலைமைகளை எதிர்த்தும்
அதாவது முதலாளித்துவ வர்க்கங்கள் அன்றாடம் நடத்தும் சுரண்டல்களுக்கு
எதிராகவும் தொழிலாளர்களைத் திரட்டி கம்யூனிஸ்டுகள் போராட
வேண்டும் என்று லெனின் வலியுறுத்துகிறார். அதாவது பாட்டாளி வர்க்கத்திற்கு அரசியல் அதிகாரத்தை அடைவதற்காக
நடத்தப்பட வேண்டிய நீண்டகாலப் போராட்டத்தை நடத்திட வேண்டும்
என்ற காரணத்திற்காக உழைக்கும் மக்கள் அன்றாடம் சந்திக்கும்
பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான போராட்டங்களை நடத்தத் தவறி
அதனை கைவிடக் கூடாது.
அதேபோலவே அன்றாடப் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக உடனடியாக நடத்த வேண்டிய போராட்டங்களை
நடத்துவதற்காக நாம் அரசியல்அதிகாரத்திற்காக நடத்த வேண்டிய நீண்டகாலப் போராட்டங்களை
நடத்திட தவறி அதனை கைவிடக் கூடாது என்கிறார் லெனின். ஆனால் லெனினது இந்த போதனையை இடதுசாரிகள்
பின்பற்றாமல் அன்றாடப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பொருளாதார வகைப்பட்ட போராட்டங்களை மட்டுமே
நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது நீண்டகால அரசியல் போராட்டம்
என்பதை தேர்தலில் வெற்றி பெற்றுஆட்சி அமைப்பதை நோக்கமாகக் கொண்ட தேர்தல் அரசியலில்
மட்டுமே ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதன் காரணமாக இடதுசாரி அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கும்
உழைக்கும் மக்களுக்கும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டியதன் அவசியம்
புரியவில்லை. அது பற்றிய உணர்வே உழைக்கும் மக்களிடம் இல்லை.
வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்ற கையாளாகாத மனநிலையில்தான்
உழைக்கும் மக்கள்உள்ளனர். அன்றாடப் போராட்டத்தில் ஈடுபட்டு முதலாளிகள் வழங்கும்சலுகைகளை
பெற்றாலே போதும் என்ற மனப்பான்மையிலேயே உழைக்கும் மக்கள் வாழ்கிறார்கள்.
லெனினது வழிகாட்டுதலை பின்பற்றாததால் ஏற்பட்டதுதான் இன்றைய இழிவான நிலையாகும். ஆகவே இனி வருங்காலத்திலாவது
இடதுசாரிகள் லெனினது வழிகாட்டுதலைப்பின்பற்ற வேண்டும்.
5.பாட்டாளி வர்க்கமானது ஜனநாயகத்திற் காகவும் அதே வேளையில் சோசலிசத்துக் காகவும்போராடும் தன்மை
படைத்தது என்கிறார் லெனின். ஆகவே பாட்டாளி வர்க்கத் தலைமையை ஆதரிக்கின்ற கம்யூனிஸ்டுகள்வரலாற்றில்
ஜனநாயகத்திற் காகவும் போராடி உள்ளார்கள்,மேலும் சோசலிசத்திற்காகவும் போராடியுள்ளார்கள். ஆனால் சில முதலாளித்துவ சீர்திருத்த வாதிகள் கம்யூனிஸ்டுகளைப்
பார்த்து, கம்யூனிஸ்டுகள் ஜனநாயகத்துக்கு
எதிரான சர்வாதிகாரிகளாகச் சித்தரிக்கின்றனர். அப்படி ஒருவர் ஜனநாயகத்துக்கு எதிரானவராக இருப்பார் என்றால்
அவர் ஒரு கம்யூனிஸ்டாக இருக்க முடியாது. இன்னும் சிலர் ஜனநாயகம் என்றாலே முதலாளித்து வத்திற்கு ஆதரவானது
என்றும் ஒரு கம்யூனிஸ்ட் ஜனநாயகத்திற்காகப் போராடுகிறார் என்றால் அவர்
கம்யூனிஸ்டே அல்ல என்று கருதுகிறார்கள். இத்தகைய நபர்களையே இடது தீவிர சாகசவாதிகள்
என்று மார்க்சியம் வரையறுத்து விலக்குகிறது. ஆகவே சோசலிசம் என்றாலே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்தான். இந்த
சர்வாதிகாரமானது மக்களுக்கு எதிரானவர் களை ஒடுக்குவதற்கான சர்வாதிகாரம்
ஆகும். அதே வேளையில் பெரும்பான்மை யான மக்களின் உணர்வுகளையும்
விருப்பங்களையும் ஏற்றுக்கொண்டு செயல்படும் ஜனநாயகம் ஆகும்.
ஜனநாயகம் என்றாலே பெரும்பான்மையினரது விருப்பங்களை நிறைவேற்றுவதாகும். சிறுபான்மையானவர் களின் விருப்பங்களுக்கு எதிரானவற்றைத்தான்
நிறைவேற்றும். ஆகவே ஜனநாயகம் என்றாலே பெரும்பான்மையினர்களுக்கு
ஆதரவாக சிறுபான்மையினருக்கு எதிராகவும், சிறுபான்மையினர்களது
எதிர்ப்பை நசுக்கும் சர்வாதிகாரம் ஆகும். ஆனால் நமது நாட்டிலுள்ள ஜனநாயகம் அப்படியா
இருக்கிறது? பெரும்பான்மையான விவசாயிகளின்
விருப்பங்களை நிராகரித்து விட்டு சிறுபான்மையினரான அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதாக
உள்ளதையும், பெரும்பான்மையான விவசாயிகளின் போராட்டங்களை
நசுக்குகின்ற சர்வாதிகாரமாக இருப்பதையும் நாம் பார்க்கிறோம். இந்த நிலையை
ஜனநாயகம் என்று சொல்லமுடியுமா? முடியாதல்லவா.ஆகவேதான் வர்க்க
சமுதாயத்தில் பொதுவான ஜனநாயகம் என்பது இல்லை என்றும்ஜனநாயகமானது வர்க்க சார்புள்ளது
என்று மார்க்சியம் சொல்கிறது. இந்தியாவில் நிலவும் ஜனநாயகம் முதலாளிகளுக்கானது
குறிப்பாக கார்ப்பரேட் முதலாளிகளுக்கானது. ஆகவே இதனை கார்ப்பரேட் ஜனநாயகம்
என்று அழைக்கலாம். இந்த கார்ப்பரேட் ஜனநாயகத்துக்கு முடிவு கட்டினால் மட்டுமே
மக்களுக்கான ஜனநாயகம் இங்கே மலரும்.
6. கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இரண்டுவிதமான போக்கினர் இருக்கிறார்கள் என்றார் லெனின். ஒரு போக்கினர் பொருளாதாரத்திற்காக மட்டுமே போராட வேண்டும் என்றும், அரசியல் போராட்டங்களை நாம் தவிர்க்க வேண்டும்என்று கருதுகிறார்கள். இவர்களை பொருளாதாரவாதிகள் என்று அழைக்கப்படு வார்கள். இதற்கு நேர் எதிராக நாம் பொருளாதாரத்துக்காகப் போராடுவதோடு நின்றுவிடக் கூடாது நமது அரசியல் உரிமைளுக்காகவும் போராட வேண்டும் என்ற பிரிவினர்தான் சரியானவர்கள் என்று லெனின் சொன்னார். உதாரணமாக விவசாயிகள் ஓர் ஆண்டு போராடிய போதும்,அவர்களது கோரிக்கை விவசாய திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறுவது, மற்றும் விவசாயிகளின் விளை பொருள்களுக்கு நியாயமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்ற பொருளாதாரக் கோரிக்கைகள்தான் இருந்தது. இதனோடு விவசாயிகளின் நலனுக்கான சட்டங்களை உருவாக்கும் போது அந்த சட்ட நகல்களை அனைத்து விவசாய சங்கங்களிடமும், ப,ந்துபட்ட விவசாயிகளிடமும் தெரிவித்து விவாதித்து பெரும்பாலான விவசாயிகளின்விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக சட்டங்கள் இயற்றிட வேண்டும் என்ற அரசியல் கோரிக்கையையும் இணைத்துப் போராடியிருக்க வேண்டும்.
7. சமுதாயத்தில் ஜனநாயகம் வேண்டும் என்பதை ஏழைகள் மட்டும் விரும்புவதில்லை.
நிலவுகின்ற ஜனநாயகம் என்ற பெயரில் முதலாளித்துவசர்வாதிகார அரசியல் அமைப்பில் பாதிக்கப்படுகின்ற
நடுத்தர மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தினரில் ஒரு சிறு பிரிவினரும் கூட இந்தச் சூழலில் ஜனநாயகத்தை
விரும்புகிறார்கள் என்றார் லெனின். இந்தச் சூழலில் ஜனநாயகத்துக்காகப்
பாடுபடுவதில் முன்னணி வர்க்கமான பாட்டாளி வர்க்கமானது தனது
ஜனநாயகக் குறிக்கோள்களை மேலும்தைரியமாகவும் உறுதியாகவும் வகுத்துக்கொள்ள வேண்டும்.
அந்தக்குறிக்கோள்களை கூர்மையாகவும்,
முழுமையாகவும், தெளிவாகவும் எல்லோருக் கும் புரியும் விதத்தில்
எளிமையாகவும் வெளியிடும் ஆற்றலைப் பெறவேண்டும் என்றார் லெனின். உழைக்கும் மக்களுக்கு ஜனநாயகம் வேண்டும்
என்ற முழக்கத்தை ஓங்கி முழங்க வேண்டும்.
அதற்குப் பொருத்தமான முறையில் இந்திய சட்டங்கள் உருவாக்கப்படவேண்டும்.
உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும்கருப்புச் சட்டங்கள் உடனடியாக நீக்கப்பட
வேண்டும் என்று முழங்கவேண்டும். இந்தக் கருத்தை அனைத்து உழைக்கும் மக்களிடமும் கொண்டுசெல்ல வேண்டியது
ஒவ்வொரு கம்யூனிஸ்டுகளின் கடமையாகும்.
இத்தகைய கருப்புச் சட்டங்களை நீக்குவதற்கான போராட்டங்களில் மக்களுக்கு கிடைக்கும்
வெற்றியின் மூலமே உழைக்கும் மக்களுக்கு கம்யூனிஸ்டுகளின் மீது நம்பிக்கை
அதிகரிக்கும். உழைக்கும் மக்களுக்கும் தாங்கள் ஒன்றுசேர்ந்து போராடினால்
சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்படும். ஆளும் முதலாளி வர்க்கங்களும்
உழைக்கும் மக்களின் மீது தாக்குதல்கள் தொடுத்து அடக்கும் முயற்சியிலிருந்து பின்வாங்குவார்கள்.
தற்போதும் மோடி கும்பல் பல கறுப்புச் சட்டங்களை கொண்டுவந்துள்ளது, அந்தக் கறுப்புச் சட்டங்களை எதிர்த்து தீவிரப் பிரச்சாரம் செய்வது கம்யூனிஸ்டுகளின்
கடமையாகும். இதன் மூலம் மட்டுமே உழைக்கும் மக்களுக்கான ஜனநாயகத்தின்
அவசியத்தை நாம் புரியவைக்க வேண்டும்.
8.நிலவுகின்ற முதலாளித்துவ சமுதாயத்தில், முதலாளிகளின் சுரண்டலையும், ஆதிக்கத்தையும் எதிர்த்து உழைக்கும் மக்கள் போராடுகிறார்கள்.
இந்த போராட்டமானது தொடர்ந்து நடத்தப்பட்டு ஒரு கட்டத்தில் புரட்சியாக வெடிக்கிறது.
இத்தகைய புரட்சிக்கும், போராட்டங்களுக்கும் எதிராக
முதலாளித்துவ வர்க்கங்கள் அதன் அரசுப் படைகளைக்கொண்டும், அரசியல் கட்சிகளைக் கொண்டும், தொழிலாளி வர்க்கத்திலுள்ள கருங்காலிகளைக்
கொண்டும் எதிர்ப்புரட்சிகரநடவடிக்கையில் ஈடுபட்டு உழைக்கும் வர்க்கங்கள் நடத்தும் போராட்டங்களையும்
புரட்சியையும் திசைதிருப்புவது அல்லது நசுக்குவது போன்ற செயலில் ஈடுபடுவதை வரலாற்றில்
நாம் காண்கிறோம்.
இத்தகைய எதிர்ப்புரட்சிகர சதித்தனங்கள் அனைத்தையும் முறியடித்து புரட்சி வெற்றிபெற்ற
பின்பும் எதிர்ப்புரட்சியும், எதிர்ப்புரட்சிகர சக்திகளும் உடனே ஒழிந்து விடாது என்று லெனின்
எச்சரித்தார். புரட்சி வெற்றி பெற்ற பிறகுதான் எதிர்ப்புரட்சிகர
சக்திகள் முன்னிலும் வலிமையாகவும்,
சதித்தனமாகவும் அவர்களது
எதிர்ப்புரட்சிகர சதித்திட்டங்களை கூர்மைப்படுத்தி மிகவும் தந்திரமாக புரட்சிகர சக்திகளின்
மீது தாக்குதல்கள்நடத்துவார்கள் என்று லெனின் எச்சரித்தார். லெனின் எச்சரித்தது போலவேரஷ்யாவில்
உழைக்கும் மக்கள் புரட்சி நடத்தி முதலாளித்துவ அரசைவீழ்த்தி தொழிலாளி வர்க்க சோவியத்து
அரசை உருவாக்கிருந்த போதிலும், முதலாளிகள் சதித்தனமான முறையில்
ரஷ்ய கம்யூனிஸ்டுக் கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் ஊடுருவி எதிர்ப்புரட்சிகர சதி
வேலைகளில் ஈடுபட்டு புரட்சியையும் புரட்சிகர சக்திகளையும் வீழ்த்தினார்கள். ஆகவே இந்தியாவில் கம்யூனிஸ்டுகள்
புரட்சி நடத்தி உழைக்கும் வர்க்கத்தின் சர்வாதிகார ஆட்சியை அமைக்க
வேண்டுமானாலும், அவ்வாறுஅமைக்கப்படும் அரசை
பாதுகாக்க வேண்டுமானாலும் மார்க்சியஆசான்களது போதனைகளை படித்து உள்வாங்குவதோடு, உலகம் முழுவதிலும் பல நாடுகளில்
நடந்த புரட்சியின் அனுபவங்களை கற்றுக் கொள்வதோடு எதிர்ப்புரட்சிகர
சதித்தனங்களையும் புரிந்துகொண்டு உழைக்கும் மக்களிடம் புரட்சி
பற்றி சொல்வதோடு எதிர்ப்புரட்சிகர சதித்தனங் களையும் சொல்லி எதிர்ப்புரட்சிகர
கருத்துக்களை எதிர்த்துப் போராடவேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும். 9. பொருளாதரத்துக்கு கீழ்ப்பட்டதே
அரசியல் என்கிறது மார்க்சியம். அதாவது நிலவுகின்ற பொருளாதார
அமைப்பை அதாவது முதலாளிகளின் சுரண்டலை பாதுகாக்கும் சோக்கம்
கொண்டதே ஆதிக்கத்திலுள்ள அரசியலாகும். பொருளாதாரவாதிகள் இந்த பொது உண்மையை அதாவது பொருளாதாரத்துக்கு
கீழ்ப்பட்டதே அரசியல் என்று சொல்லி அவசரமான,அவசியமான அரசியல் போராட்டங்கள் நடத்த வேண்டிய அவசியத்தை புரிந்துகொள்ளாமல்
புரிந்து கொள்ளும் திறமை இல்லாததை மூடி மறைத்து விட்டு அரசியல் போராட்டங்களை
தவிர்த்தார்கள்என்றுபொருளாதாரவாதிகளைப் பற்றி லெனின் மதிப்பீடு செய்தார். அதேபோலவே ரஷ்ய மென்ஷ்விக்குகளான
திருத்தல்வாதிகள் ஒரு நாட்டில் போராட்டங்களின் மூலம் அரசியல்
விடுதலை மக்களுக்கு கிடைத்துவிட்டாலும் அங்கு தொடர்ந்து அரசியல் போராட்டங்கள் நடக்கும்என்ற
பொது உண்மையை எடுத்துச் சொல்லிக்கொண்டே அரசியல் போராட்டத்தி ற்கான பணிகளை புரிந்துகொள்ளும்
திறமையின்றி உழைக்கும் வர்க்கம் நடத்திட வேண்டிய அரசியல் போராட்டங்களை மறுத்தார்கள் என்கிறார் லெனின்.
ஆகவே இந்தியாவில் பொருளாதாரப் போராட்டங் களையும் தேவையான அரசியல்
போராட்டங்களையும் சூழ்நிலைகளை மதிப்பீடு செய்து நடத்துவதற்கான திறனை கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களும்
கம்யூனிஸ்டுகளும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.லெனினது போதனையிலிருந்து நாம் புரிந்துகொள்ள
வேண்டிய பல விசயங்களில் இது ஒன்றாகும்.
10. ரஷ்யாவில் ஜனநாயகப் புரட்சி நடந்துகொண்டிருக்கும் போது தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தைப் பற்றி லெனின் குறிப்பிடும் போது ”தற்காலிகப் புரட்சி அரசாங்கம் என்பது புரட்சியின் உடனடியானவெற்றிக்காகவும் எதிர்ப்புரட்சி முயற்சிகளை உடனடியாகமுறியடிப்பதற்காகவும் இருக்கிற போராட்ட உறுப்பாகும்” என்றார். மேலும் “பொதுப்படையாக முதலாளித்துவப் புரட்சியின் வரலாற்று ரீதியான குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்குரிய உறுப்பு அல்லவே அல்ல” என்றார் லெனின். இவ்வாறு தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தைப் பற்றி விளக்கிவிட்டு தொழிலாளி வர்க்கம் இந்தச் சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகையில் “தற்சமயம் குடியரசுக்கானபோராட்டத்துக்கும் அந்தப் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் மிகத்தீவிரமாகக் கலந்து கொள்வதற்கும் நாம் கோஷங்களை முன்வைக்கவேண்டும், நடைமுறைக்குரிய வழிகாட்டிக் கட்டளைகள் கொடுக்க வேண்டும்” என்றார் லெனின். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் கம்யூனிஸ்டுகளின் முன்னால் பலப் பிரச்சனைகள் இருக்கும் அவற்றுள் பாட்டாளி வர்க்கம் செய்ய வேண்டிய முதன்மையான பிரச்சனை ஒன்று இருக்கும். அந்த முதன்மையான பிரச்சனையை சரியாகப் புரிந்துகொண்டு அந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான பணியில் ஈடுபடுவதுதான் சரியான நடைமுறைப் பணியாகும். இந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் இந்தியாவில்கம்யூனிஸ்டுகள் பல குழுக்களாகப் பிரிந்திருப்பதன் காரணமாகவே கம்யூனிஸ்டுகளுக்கு இடையில் ஒற்றுமை இல்லாதது மட்டுமல்லாமல், கம்யூனிஸ்டுகளின் மீது நம்பிக்கை கொண்ட உழைக்கும் மக்களுக்குஇடையிலும் ஒற்றுமை இல்லை. உண்மையில் உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு ஓர் அணியில் திரண்டு மக்களின் எதிரிகளை எதிர்த்துப் போராடினால் மட்டுமே உழைக்கும் மக்கள் வெற்றிபெற முடியும். ஆகவே தற்போது கம்யூனிஸ்டுகள் எதிர் கொண்டிருக்கும் பல பிரச்சனைகளில் முதன்மையான பிரச்சனை அவர்களிடம் ஒற்றுமை இல்லை என்பதே ஆகும். ஆகவே கம்யூனிஸ்டுகளுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவோம் என்ற முழக்கத்தின் அடிப்படையில் செயல்திட்டம்வகுத்துச் செயல்படுவதுதான் தற்போதைய முதன்மையான பணியாகும்.
11. பகையான வர்க்கங்களுக்கிடையே நடக்கும் பரஸ்பரப் போராட்டத்தைத் தற்காலிகஅரசாங்கம்
“ஒழுங்கு முறைப்படுத்த” வேண்டியிருக்கும் எனும் சொற்றொடர் மிகவும் பொருத்தமற்றது, என்றார் லெனின். அதாவது புரட்சிகரமான அரசாங்கமானது
பகையான வர்க்கங்களுக்கு இடையில் நடக்கும் போராட்டத்தை ஒழுங்குபடுத்துவது
அல்ல அதன் பணி, மாறாக வர்க்கப் போராட்டத்தை
திறமையோடு நடத்துவதற்கான உறுப்பாக அந்த அரசாங்கம் இருக்க வேண்டும்
என்றார் லெனின். ஆகவே முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் நோக்கம்
அப்போது அரசாங்கமானது “புரட்சிகரமான வளர்ச்சியை
முன்னேற்ற வேண்டும் என்பது மட்டுமல்ல, அந்த வளர்ச்சியில் முதலாளித்துவ
அமைப்பு முறையின் அடித்தளங்களை அச்சுறுத்தும் காரணிகளை
எதிர்த்தும் போராட வேண்டும்” என்றார்
லெனின். அதாவது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி காலத்தில் முதலாளித்துவ அமைப்பு
முறையில் ஏற்பட வேண்டிய வளர்ச்சிக்குத் தடையாக உள்ள கருத்துக்கள், போக்குகள் அனைத்தையும்
எதிர்த்துப் போராட வேண்டும் என்பதே லெனினது
வழிகாட்டலாகும். இதன் அடிப்படையில் பார்த்தால்இந்தியாவில் வெளிநாட்டு கார்ப்பரேட்டுகள்
இந்தியாவில் தொழில் வளர்ச்சிஏற்படுத்துகின்றோம் என்ற பெயரில் இந்தியாவில் தொழில்களை அழித்துக் கொண்டிருப்பதோடு
கூடவே இங்குள்ள பல தொழிலாளர்கள் வேலை இழப்பதற்கும்
காரணமாக உள்ளனர். ஆகவே இந்தியாவில் புரட்சிகரமான வளர்ச்சியை
முன்னேற்ற வேண்டுமானால் வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகள்
மற்றும் அவர்களைச் சார்ந்தும் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ள
உள்நாட்டு கார்ப்பரேட்டு முதலாளிகளுக்கு ஆதரவான ஆட்சியை
அகற்றிவிட்டு, இவர்களின் நலன்களுக்கு
எதிரான வர்க்கங்களின் ஆட்சியை உருவாக்குவதற்காகப் போராட வேண்டியதுதான் கம்யூனிஸ்டுகளின்
கடமையாகும்.
12. ஒரு நாட்டில் ஜனநாயகப் புரட்சி நடந்து முடிந்த பிறகு, வெற்றிபெற்ற முதலாளித்துவ வர்க்கங்கள்
புரட்சியின் நலன்களுக்கு அல்லது ஆதாயங்களுக்கு எதிராகத் திரும்பலாம்.
அதாவது புரட்சியின் ஆதாயங்களை முதலாளி வர்க்கங்கள் மட்டும் கைப்பற்றிக்கொண்டு உழைக்கும் வர்க்கங்களுக்கு
கிடைக்க வேண்டிய ஆதாயங்களைத் தட்டிப் பறிக்கலாம். அத்தகைய நடவடிக்கையில்
முதலாளி வர்க்கங்கள் ஈடுபடும் போது அதனை எதிர்த்துப் போராட
வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். ஆனால், ரஷ்ய மென்ஷ்விக்குகள் அத்தகைய போராட்டங்களை நடத்த மறுத்தார்கள்
என்று லெனின் மென்ஷ்விக்குகளின் மீது குற்றம் சாட்டினார். இந்தியாவில் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப்
போராடி அவர்களை விரட்டியடித்த பின்பு நேரு தலைமையில் இந்திய தரகுமுதலாளிகளின்
கட்சியான காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பின்பு பிரிட்டீஷார் வெளியேறியதனால் உழைக்கும் மக்களுக்கு கிடைக்க
வேண்டிய நலன்களுக்கு எதிராக நேரு அரசாங்கம் செயல்பட்டது. உதாரணமாக தெலுங்கானா
விவசாயிகள் போராடி பண்ணையார் களிடமிருந்த பறிமுதல் செய்த
நிலங்களைவிவசாயிகளிடமிருந்து பறிமுதல் செய்து பண்ணையார்களிடமே நேரு அரசாங்கம் ஒப்படைத்தது.
மேலும் பெயரளவுக்கு உழைக்கும் மக்களுக்கு சலுகைகளை குழந்தைகளுக்கு மிட்டாய்
கொடுத்து ஏமாற்றுவது போல ஏமாற்றிவிட்டு வெளிநாட்டு ஏகாதிபத்திய முதலாளிகளோடுகூட்டு சேர்ந்து தொழில் நடத்தி நாட்டில்
தொழிற்துறையை வளர்ப்பது என்று சொல்லி
கலப்புப் பொருளாதாரத்தை அறிமுகப் படுத்தி அந்நியர்களை எதிர்த்து மக்கள் எந்த நோக்கத்துக்காகப்
போராடினார்களோ அந்தப் போராட்டவீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்திவிட்டு இந்தியாவில்
புதிய நவீன காலனி ஆதிக்கத்திற்கு வித்திட்டது நேரு அரசாங்கம். அதனால் ஏற்பட்ட தீய விளைவுகளைத்தான்
நாம் இன்று கொடூரமாக அனுபவித்து வருகிறோம். இத்தகைய பிற்போக்கு
அரசாங்கத்துக்கு எதிராக அன்றைய ரஷ்ய மென்ஷ்விக்குகளைப் போலவே
போராடி முறியடிக்கத் தவறிய கட்சிதான் இந்திய கம்யூனிஸ்டுக்
கட்சியாகும். இவர்கள் அப்போதே லெனினது போதனைகளை கைவிட்டுவிட்டார்கள்.
13. ரஷ்ய மென்ஷ்விக்குகள் நல்ல வழிநடைக்காரர்கள்தாம், ஆனால்மோசமான தலைவர்கள்; என்றார் லெனின். மென்ஷ்விக்குகள் அவர்களது கண்ணெதிரே நடக்கும்
கொடுமைகளுக்கு தீர்வுகாணும் வகையில்தேவையான முழக்கங்களை உருவாக்கும் திறன் இல்லாமல்
இருந்தார்கள்
என்றார் லெனின். “புரட்சியின் பொருளாதாய
முன்தேவைகளைப் பற்றிஉணர்ந்து கொண்டு முற்போக்கான வர்க்கங்களுக்கு தலைமை தாங்கும் நிலை எடுத்துக் கொண்டுள்ள
கட்சிகள் வரலாற்றில் வகிக்க முடிகிற, வகித்துத் தீரவேண்டிய, செயல்பூர்வமானதும் தலைமையானதும்வழிகாட்டுந்தன்மையுள்ளதுமான பாத்திரத்தைப்
புறக்கணிப்பதின் வழியே மென்ஷ்விக்குகள் வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டத்தை இழிவுபடுத்துகின்றனர்
என்றார் லெனின். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது
என்னவென்றால் கம்யூனிஸ்டுக் கட்சி என்ற ஒரு அமைப்பு இருந்தால்
மட்டும் போதாது, ஏனெனில் ரஷ்ய மென்ஷ்விக் தலைவர்களைப்
போன்ற தலைவர்களைக் கொண்ட அமைப்பால் ரஷ்ய மக்களுக்கு எவ்விதமான பயனும் இல்லை அல்லவா,
அது போல மென்ஷ்விக் தலைவர்களைப் போன்ற தலைவர்களாலால்இந்திய பொதுவுடமை
இயக்கத்துக்கு ஒரு பயனும் இல்லை. அதற்கு மாறாக ரஷ்யாவில் செயல்பட்ட
போல்ஷ்விக் தலைவர்களைப் போன்ற தலைவர்களின் தலைமையில் ஒரு
கட்சி இருக்குமானால் அது சிறிய கட்சியாக இருந்தாலும் இந்திய
மக்களின் நம்பிக்கையைப் பெற்று பெரிய கட்சியாக வளரும். மக்களை அணிதிரட்டி
புரட்சியை நடத்தும். ஆகவே ஜோசப்.ஸ்டாலின் சொன்னது போல மிகவும் உன்னதமான தலைவர்கள் ஐந்துபேர் கொண்ட அமைப்பாக
இருந்தாலும் அதுதான் சரியான கம்யூனிஸ்டுக் கட்சியாகும்.
அத்தகைய உன்னதமான தலைவர்கள் ஒன்று சேர்ந்து பாடுபட்டால் இந்தியாவில்
புரட்சிகரமான கம்யூனிஸ்டுக் கட்சியைக் கட்ட முடியும். தேன்மொழி
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment