மார்க்ஸ் முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கையிலிருந்து- 26-06-2026 விவாதிக்க

இந்த ஆவணம் கார்ல் மார்க்ஸ் 1841 இல் எழுதிய ஆய்வறிக்கையின் உள்ளடக்கத்தை விவரிக்கிறது. இது முக்கியமாக டெமோக்ரிட்டஸ் மற்றும் எபிகியூரஸ் ஆகிய இரு கிரேக்க தத்துவவாதிகளின் இயற்கையியல் கொள்கைகளுக்கு இடையே உள்ள நுணுக்கமான வேறுபாடுகளை ஆராய்கிறது. அணுக்களின் இயக்கம், காலத்தின் தன்மை மற்றும் விண்வெளி நிகழ்வுகள் போன்ற பல தலைப்புகளில் மார்க்ஸ் தனது கருத்துகளை இதில் பதிவு செய்துள்ளார். மேலும், மதக் கோட்பாடுகள், இறையியல் மீதான விமர்சனங்கள் மற்றும் மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான உறவு குறித்தும் இந்தத் தொகுப்பு பேசுகிறது. பழைய தத்துவங்களை மார்க்ஸ் எவ்வாறு மறுஆய்வு செய்தார் என்பதை அறிய இந்த மூலப்பொருள் ஒரு முக்கிய வழிகாட்டியாக அமைகிறது. இது மார்க்ஸின் ஆரம்பகால தத்துவ சிந்தனைகளின் வளர்ச்சியைப் புரிந்துகொள்ள உதவுகிறது....

The Difference Between the Democritean and Epicurean Philosophy of Nature....

இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

மார்க்ஸ் முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கையிலிருந்து

1839 ஆரம்பத்திலிருந்து மார்க்ஸ் தத்துவஞான வரலாற்றை பயிலுவதில் மூழ்கினார். பண்டைய உலகத்தின் தத்துவஞான சிந்தனையைப் பற்றி குறிப்பாக எப்பிக்கியூரியனிஸம் (பழைய காலத்து லோகாயத வாதம்), ஸ்டாய்ஸிஸம் (சீனோ என்னும் கிரேக்க தத்துவ ஞானியின் மரபில் ஒருவகை கடுந்துறவு நிலை வாதம்) மற்றும் செப்டிஸிஸம் (பிரோ என்னும் அறிஞரின் ஐயுறவு வாதம்) முதலியவைகளைப் பற்றியும் இன்னும் மிகவும் விரிவான பலவகைப்பட்ட தத்துவ ஞானப் பிரிவுகளையும் பயிலத் தொடங்கினார். இத்தகைய முக்கிய பண்டைய தத்துவஞானப் பிரிவுகளை ஆராயத் தேர்ந்தெடுத்ததற்கு இரு காரணங்கள் : ஒன்று இளம் ஹெகலியர்கள் இந்த தத்துவஞான வகை முறைகளின் மீது மிகவும் அக்கறைமிக்க விருப்பம் காட்டினார்கள். இவைகளை சுய சிந்தனையான உணர்வுநிலையின் தத்துவஞானத்தின் முன்னோடிகள் என்று கருதினார்கள். மேலும் இரண்டாவதாக பெரும்பாலும் மார்க்ஸே இந்த தத்துவஞானப் பிரிவுகளைப் படித்தறிவதில் பெரும் அளவில் அக்கறை காட்டினார். அவருடைய நாத்திகக் கண்ணோட்டம் வளர வளர, மார்க்ஸ் இயல்பாகவே எப்பிக்கூரஸின் தத்துவ ஞானத்தின் மீது மிகுந்த ஈர்ப்புடன் ஆர்வம் கொண்டார். எப்பிக்கூரஸ் என்பவர் பண்டைய உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர். அவரைப் பற்றி மார்க்ஸ் அவர் ஒரு தலைசிறந்த ஆகப் பெரிய கிரேக்க அறிவு ஒளியாளர் என்று குறிப்பிட்டார். ஒழுக்கவியல் பிரச்சனைகளைப் பற்றியும் தன்னைச் சூழ்ந்துள்ள உலகைப் பற்றிய மனிதனுடைய மனப் பான்மையைப் பற்றியும் கூறுகிற விவாதிக்கிற தத்துவஞானப் பிரிவுகளைப் பற்றி மார்க்ஸ் மிக ஆழ்ந்த கவனத்துடன் அக்கறைக் காட்டிப் படித்தார். இறுதியாக தத்துவஞான வரலாற்றைப் பற்றிய மார்க்ஸினுடைய ஆராய்ச்சி தத்துவஞானம் புற உலகைப் பற்றி எவ்வாறு ஆய்ந்து கூறுகிறது. அதாவது அது நிலைகொண்டுள்ள எல்லாவற்றையும் அது அறிவுபூர்வமானது என்றும் அவசியமானதென்றும் ஒப்புக் கொள்கிறதா அல்லது எது இருக்க வேண்டுமோ அதை எதிர்த்து இருப்பது என்பதைத் தன்னகத்தே அடக்கி வைத்திருக்கிறதா என்னும் ஒரு அடிப்படையான சூடான கேள்விக்கு விடை காண்பதற்கு உதவி செய்தது. மார்க்ஸ் தன்னுடைய மிக ஆரம்பகால ஆராய்ச்சியில் அருவமான பொருளுக்கு அப்பால் கருத்தூன்றிச் சென்று ஒரு கண்ணோட்டத்தை கீழ்க்கண்ட மிக முக்கியமான கேள்விக்கு விடை காண்பதற்கு உதவி செய்யக்கூடிய ஒரு கண்ணோட்டத்தை உருவாக்குவதற்கான அவசியத்திற்கு சுத்தமான தத்துவ நிலைக்கும் அப்பால் சென்று ஆராய்ச்சி செய்தார்; அந்தப் பிரதான கேள்வி: மனிதன் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படுவது எவ்வாறு, அவன் சுதந்திரம் ஆக்கப்படுவது எவ்வாறு? என்பதாகும்.

அவருடைய ஆராய்ச்சியின் முதல் பலன் 1839-ல் அவர் எழுதிய ஏழு குறிப்புப் புத்தக வரிசையாகும். அதில் பல தயாரிப்பு விவரங்கள் அடங்கியிருந்தன. அவைகளை இப்போது எப்பிக்கூரியன், ஸ்டாயிக் மற்றும் செப்டிக் தத்துவஞானங்களின் குறிப்புப் புத்தகங்கள் என்று அழைக்கிறோம். இந்த நூலில் மார்க்ஸ், தத்துவஞானம் மதத்துடன் ஒத்துப்போக முடியாதது என்று காட்டியுள்ளார். அவர் ஏற்கனவே தத்துவஞானம் ஒரு செயலூக்கமுள்ள சக்தி என்றும் அது உலகின் மீது தனது செல்வாக்கைச் செலுத்துவதற்கு சக்தி படைத்தது என்றும் நிச்சயப்படுத்திக் கொண்டிருந்தார். அவர் எழுதியதாவது: "புரோடீயுஸ் சுவர்க்கத்திலிருந்து நெருப்பைத் திருடிக் கொண்டுவந்து வீடுகளைக் கட்டத் தொடங்கி அதன்மூலம் பூமியில் நிலைத்து வாழ்வதற்கு ஏற்பாடு செய்ததைப் போல தத்துவஞானமும் உலகம் முழுவதையும் தழுவுவதற்கு விரிவடைந்து உலகத் தோற்றத்திற்கு எதிராகத் திரும்புகிறது." (MEGA, Abt. 1, Bd. 1, Halbband 1, S. 131.)

 

ஒரு தத்துவஞானம் மிகவும் செயலூக்கத்துடன் வாழ்க்கையில் ஊடுருவுவதன் வெளிச்சத்தில்தான் மார்க்ஸ் ஹெகலுடைய சீடர்களை "நல்லது கெட்டது அல்லாத சாதாரண திறமையர் முழு முதல் உணர்வின் சர்வ சாதாரண வெளிப்பாடாகும்"(MEGA, Abt. 1, Bd. 1, Halbband 1, S. 132.) என்று கூறியவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்தார். தத்துவஞான ஞானத்திற்கு ஆக விரிவான பரந்த புலனறியும் சாத்தியப்பாடுகள் உண்டென்றும உலகின் மீது மிகப்பெரிய அளவில் தனது செல்வாக்கைப் பிரயோகிக்கும் சக்தி படைத்தது என்றும் அவர் வலியுறுத்தினார். மனது மிகவும் வலுவானது என்று அவர் வாதிட்டார். அவர் தன்னுடைய ஆகக் கூர்மையான முள்முனையை, மனித உணர்வின் மெய்க்கருத்து பொருள்களின் சாரத்தைப் புரிந்துகொள்வதற்கு சக்தியற்றது என்றும் புலனறிய முடியாத உண்மை நிலைகளைக் கொண்ட உலகைக் கண்ணை மூடிக் கொண்டு ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் பிரச்சாரம் செய்பவர்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டார். இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் கடியன் அஞ்ஞானவாதிகள். இவர்கள் மடமையைப் பிரச்சாரம் செய்வதை தொழிலாகவே கொண்டுள்ள குருக்கள் என்று மிகவும் பொருத்தமாக அவர்களைப் பற்றி மார்க்ஸ் குறிப்பிட்டார். அவர்களுடைய தினசரி தொழிலின் தங்களுடைய ஏலாமையைப் பற்றியும் சக்தியின்மையைப் பற்றியும் சதா ஜபம் செய்து கொண்டிருப்பதும் அடங்கியிருக்கிறது" என்றும் குறிப்பிட்டார்.

இளம் மார்க்ஸின் தீவிரவாதமும் சுதந்திரச் சிந்தனையும் எப்பிக் கூரஸினுடைய (தத்துவ ஞானத்தைப் பற்றிய) அவருடைய அணுகும் முறை மிகவும் அலாதியாக நின்றது. சுதந்திரம் பற்றிய பிரச்சனை மீது எப்பிக்கூரஸின் கருத்தோட்டத்தை மார்க்ஸ் சிறப்பாக வலியுறுத்தினார். மெய்க்கருத்தின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும், மதம், மூட நம்பிக்கை, அடுத்த பிறப்புகளில் பழிபாவம் வந்து விடுமோ என்னும் அச்சம் முதலிய மடத்தளைகளிலிருந்து விடுதலைக்கும் அவர் செய்த அரும் முயற்சியைப் புகழ்ந்தார். இதே மாதிரியான ஒத்த கருத்துக்களைப் புகழ்பெற்ற ரோமானிய தத்துவஞானியும் கவிஞருமான லுக்கிரா ரெட்டீஸின் நூல்களினும் மார்க்ஸ் கண்டு அவைகளை வெளிக் கொணர்ந்தார்.

எப்பிக்கூரஸிற்கும் அவரை நாத்திகவாதி என்று குற்றம் சாட்டி நீதிநெறி புகட்டிக் கொண்டிருந்த வரலாற்றாளர் புளூட்டார்க்கிற்கும் இடையில் நடைபெற்றிருந்த வாக்கு வாதத்தில் மார்க்ஸ் எப்பிக்கூரஸ் பக்கம் நின்றார். அவருடைய எல்லா நாத்திக முடிவுகளையும் ஏற்றுக் கொண்டார். மதவாதிகள் தங்களுடைய சொந்த குணாதிசயங்களை தாங்கள் கடவுள் என்றழைத்த ஒரு மேலான வடிவத்தின் மீது புகுத்தி வெளிக் காட்டினார்கள் என்று கூறிய பழைய நாத்திகவாதிகளுடைய கருத்தை மார்க்ஸ் ஏற்றுக் கொண்டார்.

அவருக்கே உரித்தான முழு நிறைவான திட்ட நுட்பத்தோடு மார்க்ஸ் 1839 ஆம் ஆண்டு முழுவதிலும் 1840 ஆம் ஆண்டின் ஒரு பகுதியிலும் பண்டைய தத்துவ ஞானத்தின் வரலாற்றைப் பற்றி ஆராய்ந்து பணியாற்றினார். 1841 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் "டெமாக்ரிட்டியன் மற்றும் எப்பிக்கூரியன் ஆகியோருடைய இயற்கையின் தத்துவ ஞானத்திற்கிடையிலுள்ள வேறுபாடுகள் என்னும் தலைப்பில் ஒரு பேராய்வு (டாக்டோரல்)க் கருத்துரை ஒன்று எழுதத் தீர்மானித்தார். இதைப் பற்றிய பல்வேறு குறிப்புகளையும் விளக்கங்களையும் ஏற்கனவே அவர் தன்னுடைய "குறிப்புப் புத்தக நூல்களில்" (Marx, Engels, Werke, Ergänzungsband, Erster Teil, S. 70.) தொகுத்திருந்தார். அவருடைய இந்த பாடப்பொருளை அவர் தொகுத்து உருவாக்கியதே ஹெகலுக்கு எதிராக ஒரு எதிர் வாக்குவாதத்தைப் போன்றதாகும். ஹெகல் ஒரு தெளிவான ஒருதலைப்பட்சமான கருத்தோட்டத்தோடு, டெமாக்ரட்டஸ், எப்பிக்கூரஸ், ஜவ்கரிட்டஸ் ஆகியோருடைய பண்டைய அணுவாதம், பொருள் முதல் வாதம் ஆகியவை பற்றி மேற்கொண்டிருந்தார். தன்னுடைய ஆய்வுக் கருத்துரைக்கு அவர் 1841ஆம் ஆண்டில் எழுதிய முன்னுரையில் மார்க்ஸ் அநேகமாக முழுமையாகவே ஹெகல் இந்தத் தத்துவ ஞான வகை முறைகளைப் பற்றி குறைத்து மதிப்பிட்டிருந்ததைக் கடுமையாகக் கண்டித்தார். அத்துடன் அவைகள் "கிரேக்க தத்துவஞான வரலாற்றிற்கு மிக முக்கிய வழித்துணையை"( Marx, Engels, Werke, Ergänzungsband, Erster Teil, S. 262.) அமைத்துக் கொடுத்திருக்கின்றன என்று சுட்டிக் காட்டினார்.

அவருடைய ஆய்வுக் கருத்துரை டெமாக்ரட்டஸ், எப்பிக்கூரஸ் ஆகியோரது கருத்தோட்டங்கள் மனிதகுலத்தின் மெய்க் கருத்து வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியத்துவம் மிக்கது என்பதை வலியுறுத்திக் காட்டுகிறது. அத்துடன் எப்பிக்கூரஸின் தத்துவஞான வகை முறையில் தர்க்கவியல் அம்சங்கள் இருப்பதையும் வெளிக் கொணர்ந்தார். குறிப்பாக அணுக்கள் தானாகவே சரிந்து வீழ்வது பற்றிய அவருடைய போதனையை எடுத்துக் காட்டினார். அதில் சுய இயக்கம் என்னும் தர்க்கவியல் கோட்பாடு வெளிப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டார். அந்தக் கோட்பாடு ஊக்கமுடன் செயல்படக் கூடிய ஒன்று என அவர் வியாக்கியானம் செய்தார். அவர் சொன்னார்: "எனவே நல்லது என்பது தீமையினின்று விலகி ஓடுவதாகையால் சுகம் என்பது துக்கத்திலிருநது விலகிடுவதாகும்" (Marx, Engels, Werke, Ergänzungsband, Erster Teil, S. 283). இயற்கையைப் பற்றி டெமாக் - ரிட்டஸ், எப்பிக்கூரஸ் ஆகிய இருவருடைய கருத்தோட்டத்தையும் ஒப்பிடும்போது மார்க்ஸ் எப்பிக்கூரஸ் பக்கம் நின்றார். காரணம் அவருடைய தத்துவ ஞானம் அவருடைய நெறிமுறை பற்றிய கருத்தோட்டங்களுக்குக் குறிப்பாக சுதந்திரம் பற்றிய அவருடைய தத்துவவக் கோட்பாடு போன்ற நெறிமுறைகளுக்கு ஒரு அடிப்படையை அமைத்துக் கொடுத்தது. ஒழுக்க நெறிப் பிரச்சனைகளின் பால் மார்க்ஸின் அணுகுமுறையில் தத்துவஞானம் வாழ்க்கையில் செயலூக்கத்துடன் தலையிட வேண்டும் என்ற கருத்து உள்ளடங்கி யிருக்கிறது. பகுத்தறிவுக்குப் பொருந்தாத உலகைத் திருத்தி சீரமைப்பதற்கு அவர் சாதகமாக இருந்தார். தத்துவ ஞானத்திற்கும் வாழ்க்கைக்கும் தர்க்க ரீதியான ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் கீழ்க்கண்டவாறு எழுதினார்: "உலகம் தத்துவஞானத் தன்மை பெறும்போது தத்துவஞானம் உலகத் தன்மையைப் அடைகிறது... அதை செயல்பட வைப்பது என்பது அதை இழப்பதாகும்." (1. Marx, Engels, Werke, Ergänzungsband, Erster Teil, S. 328.) அவர் கூறுவதன் பொருள் என்னவென்றால் தத்துவ ஞானத்தை வாழ்க்கை நடைமுறைச் செயல்பாட்டிற்கு மாற்றும்போது அது வாழ்க்கையை ஒரு புதிய மேலான கட்டத்திற்கு உயர்த்துகிறது. அப்பொழுது தத்துவ ஞானமே வெறும் சுத்தமான வரட்டுத் தத்துவமாக இல்லாமல் நடைமுறைச் செயல்பாட்டுடன் உருவிணைந்து விடுகிறது. இங்கு அவருடைய எதிர்காலத்திய தத்துவக் கோட்பாடான தத்துவமும் நடைமுறை ஆகியவற்றின் பரஸ்பர இணைப்பு ஒற்றுமையின் ஆரம்ப முளை வடிவம் இதில் இருப்பதைக் காண்கிறோம்.

மார்க்ஸினுடைய ஆய்வுக் கருத்துரை அவருடைய நாத்திகக் கருத்தோட்டத்தில் ஒரு முன்னேற்றத்தைக் காட்டுகிறது. ஒரு தீவிரமான போர்க்குணம் மிக்க நாத்திக மெய்க் கருத்துடன் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான ஒரு வெறுப்புடனும் அது வெடித்து வெளிப்பட்டது. மத எல்லைக் கோடுகளுக்குள் விஞ்ஞான தாகத்தை உறைய வைப்பதற்கும் மதத்தின் நலனுக்காக விஞ்ஞானத்தைக் கீழடங்கச் செய்யவும் அரும்பாடுபட்ட எல்லா விதமான பிற்போக்கு தத்துவ ஞானத்திற்கும் எதிராகக் குறிவைத்து அடித்தது. அதற்கான முகவுரையில் மார்க்ஸ் நாத்திகமே தனது சமயக் கோட்பாடு எனப் பிரகடனம் செய்தார். அவர் கீழ்க்கண்டவாறு எழுதினார்: "தத்துவ ஞானம்..... எப்பிக்கூரஸினுடைய கூக்குரலுடன் தன்னுடைய பகைவர்களுக்குப் பதிலளிப்பதில் எப்போதுமே களைப்படைவதில்லை; எப்பிக்கூரஸ் எழுப்பிய குரல் 'கோடிக்கணக்கான பொது நிலையான மக்களால் வணங்கப்படும் கடவுள்களை மறுக்கும் மனிதன் புனிதமற்றவரல்ல. ஆனால் அந்த கோடிக்கணக்கான சாமானிய மக்கள் நம்பிக்கை கொண்டுள்ள கடவுள்களை சரி என ஏற்றுக் கொள்பவன் தான் தூய்மையற்றவன்'.... புரோடீயுஸ் வெளிப்படையாக ஒப்புக் கொண்டது: 'எளிய சாதாரண வார்த்தைகளில் நான் இந்தக் கடவுள் கூட்டத்தை வெறுக்கிறேன்' என்பது. அது தானே சொந்தமாக வெளிப்படையாக ஒப்புக் கொண்டதாகும். பூமியிலும் சுவர்க்கத்திலும் உள்ள எல்லா கடவுள்களுக்கும் எதிராகக் கூறிய தனது சொந்த ஒப்புதல் மணிமொழியாகும்."( MEGA, Abt. 1, Bd. 1, Halbband 1, S. 10.)

தன்னுடைய ஆய்வுக் கருத்துரையில் மார்க்ஸ் கடவுள் இருப்பதாகக் கூறப்படும் நிரூபணங்கள் எல்லாம் வெறும் கிளிப்பிள்ளை வாதங்களைத் தவிர வேறில்லை என்று வலியுறுத்தினார். அதே சமயத்தில் மதக் கண்ணோட்டம் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்ற போதிலும் மதம் ஒரு வலுவான சக்தியாக அமைந்துள்ளது என்பதை உணர்ந்தார். உண்மையான விஞ்ஞானத்தின் கடமைப்பாடு மதத்தைக் கீழடக்கி வெல்வதற்கு உதவி செய்வதற்கு பெருமுயற்சி எடுப்பதாகும். அதனுடைய குருட்டுக் கோட்பாடுகளைத் தூக்கி எறிவதற்கு மட்டுமல்ல அதனுடைய சாராம்சம் அதன் மூலாதாரங்கள் ஆகியவைவகளை விளக்கமாக எடுத்துக் கூறி அவைகளைப் பரவலாக அனைவரும் ஒப்புக்கொள்ளச் செய்வதாகும். கடவுள்களின் மீது நம்பிக்கைத் தோன்றியது என்பது மனிதனின் உணர்வு நிலையின் வளர்ச்சியின் முதல் கட்டத்தின் பிரதிபலிப்பாகும் என்றும் ஆரம்பகால புராதன நிலைச் சிந்தனையாகும் என்றும் அவைகளால் அன்று தன்னைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்து கொள்வதற்கும் விளக்கி வியாக்கியானம் செய்வதற்கும் சக்தியற்றதாகவும் அவற்றையெல்லாம் இயற்கையைக் கடந்த கடவுள் சக்திக்கும் பகுத்தறிவுக்கெட்டாத சாரப் பொருள்களின் செயல்களுக்கும் உரியதாக்கினார் என்றும் மார்க்ஸ் முடிவுகளுக்கு வந்தார். மார்க்ஸ் கீழ்க்கண்டவாறு சுட்டிக் காட்டினார்: "யாருக்கு காரணமின்றி பகுத்தறிவிற்கு ஆதாரமின்றி இந்த உலகம் தோன்றுகிறதோ காட்சியளிக்கிறதோ, அதனால் யார் தனக்குத்தானே அறிந்து கொள்ளாமல் தானே காரணமின்றி இருக்கிறானோ அவனுக்கு கடவுள் இருக்கிறார்." (MEGA, Abt. 1, Bd. 1, Halbband 1, S. 81.)

அக்காலத்தில் பெர்லின் பல்கலைக்கழகத்தில் ஒருவர் தன்னுடைய ஆய்வுக் கருத்துரையைத் தற்காத்துப் பேணிப் பேசுவது என்றால் மிகவும் சிக்கல் நிறைந்ததாகும், மிகுந்த பணச்செலவு நிறைந்ததாகும். எனவே மார்க்ஸ் தன்னுடைய ஆய்வுக் கருத்துரையை ஜெனா பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்தார். 1841 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி அவருக்கு தத்துவஞானத்தில் பேரறிஞர் (டாக்டர்) பட்டம் கொடுக்கப்பட்டது.

மார்க்ஸினுடைய டாக்டர் பட்டத்துக்குரிய ஆய்வுக் கருத்துரை அவருடைய சித்தாந்த வளர்ச்சியில் ஒரு முக்கியமான கட்டத்தைக் குறித்தது. அவர் அப்போது மொத்தத்தில் ஒரு எண்ண முதல்வாதியாகவும் ஒரு ஹெகலியராகவும் இருந்த போதிலும் அவர் மிகவும் துணிவுடன் நடறிருந்த நாத்திகவாதியாக இருந்தார். தத்துவஞானம் உண்மை நிலையின்மீது ஒரு செயலூக்க மிக்க நிலை கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். அவருக்கு ஹெகல் அப்போதும் மிகப்பெரிய மேற்கோள் காட்டக்கூடிய அளவிலான அரிய நிபுணராகவும் "ஒரு அசுரத்தனமான சிந்தனையாளராகவும்" இருந்தார்.

 ஆனால் இந்த இளைஞர் மிகுந்த ஆர்வத்துடன் சுய நாட்டம் கொண்டு பணியாற்றி சில பிரச்சனைகளில் ஹெகலுடைய கருத்துக்களுக்கு மாறுபட்ட முடிவுகளை உள்ளடக்கியக் கொண்டுள்ள தனது சொந்த முடிவுகளையும் உருவாக்கினார். மார்க்ஸினுடைய ஆய்வுக் கருத்துரை அவர் தன்னுடைய சொந்தக் கண்ணோட்டத்தை உருவாக்குவதில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை அடையாளம் காண்பதற்கு உதவியது. அவர் தொடர்ந்து தத்துவஞானத்திற்கும் உண்மை நிலைக்கும் இடையில் உள்ள உறவு பற்றிய பிரச்சனையைப் பிடிவாதமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தார். அதன் காரணத்தால் அப்பொழுதோ அதற்கப் பின்னரோ விரைவில் ஒரு நாள் சிந்தனைக்கும் நிலைநிற்பிற்கும் இடையிலுள்ள உறவு பற்றியவற்றை எதிர்த்து கட்டாயம் மேலே வருவார் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவருடைய தீவிரமான போர்க் குணம் மிக்க நாத்திகவாதம் எண்ண முதல்வாதத்திற்கு அடிப்படையில் ஒத்துவராததும் பகைமை மிக்கதுமானதால் அது அவர் அடுத்தபடியான நாட்களில் பொருள் முதல் வாதத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஏதுவாக வசதி செய்தது.

மேல்காணும் பகுதி காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு நூலிலிருந்து- அலைகள் வெளியீட்டகம்- பக்க எண்கள் 62 முதல் 67 வரை.


தொடர்புடைய கட்டுரைகள்:

இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்