தமிழகத்தில் அடிமைமுறை

 மனித குல வரலாற்றின் தொடக்க காலமான ஆதிப் பொதுவுடைமைச் சமூகத்தில், போர்க்களங்களில் சிறைபிடிக்கப்படும் கைதிகள் கொல்லப்படுவதே வழக்கமாக இருந்தது. உற்பத்தி முறைகள் வளர்ச்சியுற்ற காலகட்டத்தில், அக்கைதிகளைக் கொல்வதற்குப் பதிலாக அவர்களை உற்பத்திப் பணிகளில் ஈடுபடுத்தும் வழக்கம் உருவானது. இதுவே அடிமைமுறையின் வித்தாக அமைந்தது.

பண்டைய எகிப்தில் போர்க் கைதிகள் முதலில் "கொல்லப்பட்டவர்கள்" (Killed) என்றே அழைக்கப்பட்டனர்; பின்னர் அவர்களை வேலைக்கு அமர்த்தியபோது "உயிருடன் இருக்கும் கொல்லப்பட்டவர்கள்" (Living Killed) என்று அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது. இதேபோல, வேத கால இந்தியாவில் "தஸ்யூ" அல்லது "தாஸ" எனும் சொல் முதலில் பகைவர்களைக் குறிப்பதாகவும், காலப்போக்கில் அதுவே அடிமைகளைக் குறிக்கும் சொல்லாகவும் மாறியது.
உபரி உற்பத்தியும் அதிகாரக் குவிப்பும் குலங்கள் மற்றும் கணங்களுக்கு எனத் தனியே அடிமைகளை வைத்துக்கொள்ளும் முறை தோன்றிய பின்னர், சமூகத்தில் உபரி உற்பத்தி பெருகியது. ஆனால், அந்த உற்பத்தியை நிகழ்த்திய அடிமைகளுக்கு, அப்பொருட்களின் மீது எவ்வித உரிமையும் இருக்கவில்லை. அவர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான குறைந்தபட்ச உணவு மட்டுமே வழங்கப்பட்டது. அவர்களது உழைப்பு, அவர்களது தேவைகளுக்காக அன்றி, பிறருடைய செல்வத்தைப் பெருக்குவதற்காகவே உறிஞ்சப்பட்டது. இவ்வாறு பலவந்தமாகப் பெறப்பட்ட உழைப்பினால், சமுதாயம் தனிச்சொத்துடைமைச் சமூகமாக மாறத் தொடங்கியது.
ஆதிப் பொதுவுடைமைச் சமூகத்தின் இறுதிக்கட்டத்தில், குழுத் தலைவர்களும் பூசாரிகளும் குலத்தின் பொதுச்சொத்தாக இருந்த அடிமைகளைத் தங்களின் தனிச் சொத்துக்களாக மாற்றிக்கொண்டனர். எவன் ஒருவன் அதிகமான அடிமைகளை வைத்திருந்தானோ, அவனே அதிகமான உபரி உற்பத்தியின் உரிமையாளனாகவும், சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் வலிமை மிக்கவனாகவும் மாறினான்.
அடிமைச் சந்தைகள் அடிமைகளுக்கான தேவை அதிகரிக்கவே, போர்க்களங்கள் மட்டுமின்றிப் பிற வழிகளிலும் மனிதர்கள் அடிமைகளாக்கப்பட்டனர். கடன் பட்டவர்கள், அடிமைகளுக்குப் பிறந்த குழந்தைகள், வறுமையால் பெற்றோராலேயே விற்கப்பட்ட குழந்தைகள், மற்றும் கடத்தப்பட்டவர்கள் எனப் பலரும் அடிமைச் சந்தையில் விற்கப்பட்டனர்.
பண்டைய நாகரிகத்தின் தொட்டில்களாகக் கருதப்படும் கிரேக்கம், ரோம், எகிப்து, பாபிலோன் போன்ற நாடுகளின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கியது இந்த அடிமைகளின் உழைப்புதான். உதாரணமாக, ஆசியா மைனரில் நடந்த ஒரு போரில் கிரேக்கப் படை 20,000-க்கும் மேற்பட்ட மக்களைச் சிறைபிடித்து அடிமைகளாக விற்றது. ஆடு மாடுகளைப் போலவே ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் சந்தைகளில் நிறுத்தப்பட்டனர். வாங்குபவர்கள் அவர்களது தசைகளைக் கிள்ளியும், பளுவைத் தூக்கச் சொல்லியும், ஓடவிட்டும் அவர்களது உடல் வலிமையைச் சோதித்தப் பிறகே விலைக்கு வாங்கினர்.
பேசும் கருவிகள் அடிமைகள் மனிதர்களாகவே கருதப்படவில்லை; அவர்கள் வெறும் உற்பத்தி இயந்திரங்களே. சுரங்கங்கள், ஒயின் தொழிற்சாலைகள் மற்றும் ரோம் நாட்டின் விவசாயப் பண்ணைகளில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ரோமானிய எழுத்தாளர் வார்ரோ, விவசாயக் கருவிகளை மூன்றாகப் பிரிக்கிறார்:
பேசும் கருவிகள் (அடிமைகள்)
தெளிவற்ற ஒலிகளை எழுப்பும் கருவிகள் (கால்நடைகள்)
பேசாத கருவிகள் (வண்டி, ஏர் போன்றவை).
கிரேக்க தத்துவமேதை அரிஸ்டாட்டில் கூட அடிமைகளை "பேசும் கருவி" என்றே குறிப்பிடுகிறார். மெசபடோமியாவில் அடிமைகளை 'கண் உயர்த்திப் பார்க்காதவர்' (Not raising eyes) என்ற பொருள்படும் "gi-nu-du" என்ற சொல்லால் அழைத்தனர். தங்களை விலைக்கு வாங்கிய எஜமானர்களை ஏறிட்டுப் பார்க்கக் கூட அவர்களுக்கு உரிமையில்லை. ஆடு மாடுகளுக்குச் சூடு போடுவது போல, இவர்களது உடலிலும் அடையாளச் சின்னங்கள் பொறிக்கப்பட்டன.
உரிமையற்ற வாழ்வும் சட்டங்களும் பாபிலோனிய மன்னன் ஹமுராபியின் (கி.மு. 1792-1750) சட்டத் தொகுப்பு, அக்கால அடிமைமுறையின் கொடூரத்தைச் சட்டப்பூர்வமாக அங்கீகரித்தது. தப்பியோடிய அடிமைக்கு அடைக்கலம் தருபவன் கொல்லப்படுவான் என்றும், அடிமையின் அடையாளச் சின்னத்தை அழிப்பவனின் விரல்கள் துண்டிக்கப்படும் என்றும் அச்சட்டம் கூறியது. கடன் பெற்றவன் கடனை அடைக்கத் தன் மனைவி, மக்களை அடிமைகளாக விற்கவும் அச்சட்டம் வழிவகை செய்தது.
வேலை செய்யும் வலுவிழந்த அடிமைகள், ஆள் நடமாட்டமில்லாத தீவுகளில் தனித்து விடப்பட்டு, பசி தாகத்தால் துடித்துச் சாகும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
கேளிக்கைப் பொருட்கள் (Gladiators) ரோமானியப் பிரபுக்களின் குரூரமான மகிழ்ச்சிக்காக, உடல் வலிமை மிக்க அடிமைகள் 'கிளாடியேட்டர்கள்' (Gladiators) ஆக்கப்பட்டனர். மரணப் போரிடும் இவர்களை, 'ஆம்பி தியேட்டர்' (Amphi Theatre) எனப்படும் அரங்குகளில் ஒருவரோடு ஒருவர் மோதவிட்டும், சிங்கம், புலி போன்ற விலங்குகளுடன் சண்டையிடச் செய்தும் ரசித்தனர். தோற்கடிக்கப்பட்ட ஒரு கிளாடியேட்டரின் உயிர், கூட்டத்திலிருக்கும் பிரபுக்களின் கட்டைவிரல் அசைவில் ஊசலாடும்.
உலகப் புகழ்பெற்ற சீனப் பெருஞ்சுவரும், எகிப்தியப் பிரமிடுகளும் வெறும் கற்களால் ஆனவை அல்ல; அவை இலட்சக்கணக்கான அடிமைகளின் இரத்தம் மற்றும் சதையால் பிணைக்கப்பட்டவை. வரலாற்று ஆசிரியர் குரோவ்கின் (Korovkin) குறிப்பிடுவது போல, "வேறெந்தத் தொன்மை நாகரிகமும் ரோமைப் போல இவ்வளவு கொடூரமாக அடிமைகளை நடத்தியதில்லை".
இந்த அடக்குமுறையின் உச்சத்தில்தான், 'ஸ்பார்ட்டகஸ்' தலைமையிலான மாபெரும் அடிமை எழுச்சி வெடித்தது. அது ஒடுக்கப்பட்டாலும், வரலாற்றில் அழியாத தடம் பதித்தது. லெனின் குறிப்பிடுவது போல, "மாபெரும் அடிமைப் புரட்சிகளின் மிக முக்கியமான வீரர்களுள் ஸ்பார்ட்டகஸும் ஒருவன்." மனிதகுல வரலாற்றின் இந்த இருண்ட பக்கங்களை அறிந்துகொள்வது, சுதந்திரத்தின் மதிப்பை உணர்வதற்கு அவசியமாகிறது.
Rajasekar Pandurangan
____________________________
தமிழ்நாட்டில் சோழர்கள் ஆட்சியில் விற்பனை செய்யப்பட்ட அடிமைகளின் வரலாறு
எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன்
பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டில் பெரிய அளவில் அடிமை முறை இருந்ததாக விவரிக்கிறது சமீபத்தில் வெளியான புத்தகம் ஒன்று. தங்களைத் தாங்களே விற்றுக் கொள்ளும் அளவுக்கு அப்போது இருந்த நிலைமை என்ன? புத்தகத்திலிருந்து விரிவான தகவல்கள்.
மனிதர்களை உடைமையாக வாங்கி, பயன்படுத்தும் அடிமை முறை குறித்துப் பேசும்போது பெரும்பாலும் வெளிநாடுகள் குறித்த பதிவுகளே காணக் கிடைத்து வந்தன. குறிப்பாக எகிப்து, கிரேக்கம், ரோம், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்த அடிமை முறை குறித்துப் பல பதிவுகள் தமிழில் காணக் கிடைக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் இருந்த அடிமை முறை குறித்த பதிவுகள் முறையாகத் தொகுக்கப்படவே இல்லை.
இந்த நிலையில்தான், 1980களின் ஆரம்பத்தில் சில ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டிலும் அடிமைகள் இருந்தனர் என ஒரு சிறு நூலை வெளியிட்டார் ஆ. சிவசுப்பிரமணியன். பிறகு அது விரிவாக்கப்பட்டு 2005ஆம் ஆண்டில் 'தமிழகத்தில் அடிமை முறை' என்ற நூலாக காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது.
அந்தப் புத்தகம் வெளியாகி 18 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகப் பகுதியில் நிலவிய அடிமை முறை குறித்து 'தமிழகத்தில் அடிமை முறையும் ஆள் விற்பனையும்' என்ற நூல் தற்போது வெளிவந்திருக்கிறது.
இந்த நூலை எழுதியவர் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டு - தொல்லியல் துறையின் முன்னாள் தலைவரும் ஆய்வாளருமான புலவர் செ. ராசு. அவர் சமீபத்தில்தான் உயிரிழந்த நிலையில், இந்தப் புத்தகம் வெளியாகிருக்கிறது.
ஆ. சிவசுப்பிரமணியனின் புத்தகத்தில் 29 ஆவணங்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த நூலில் 50 ஆவணங்களைப் பதிவு செய்து இங்கிருந்த அடிமை முறை குறித்துக் கூறுகிறார் செ. ராசு.
தமிழ்நாட்டில் நிலவிய அடிமை முறை குறித்த ஆதாரங்கள்
மன்னர்கள் காலத்தில் அடிமைகள்
தமிழ்நாட்டின் வரலாற்று நூல்களில் இங்கிருந்த அடிமை முறை குறித்து சரியான வகையில் எழுதப்படாததாகக் குறிப்பிடும் ஆசிரியர், சில நூல்களில் அது மறைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்.
இருந்தபோதும் 1931-33ஆம் ஆண்டுகளில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை சில அடிமை ஆவணங்களைத் தொகுத்தனர். அதற்குப் பிறகு அ.கா. பெருமாள், செ. போஸ், க.பன்னீர்செல்வம், எம்.ஏ.கிருஷ்ணன், மார்க்சிய காந்தி போன்றவர்கள் சில அடிமை ஆவணங்களைக் கண்டறிந்தனர். இதற்குப் பிறகு ஆ. சிவசுப்பிரமணியனின் நூல் வெளிவந்தது.
இந்த நிலையில், 1982இல் தமிழ்ப் பல்கலைக்கழகப் பணியில் சேர்ந்த புலவர் ராசு, அடிமை ஆவணங்களைச் சேகரிக்கத் தொடங்கினார். கல்வெட்டுகள், ஓலைகள் என மொத்தமாக ஐம்பது ஆவணங்கள் அவருக்குக் கிடைத்தன.
அடிமைகள் விற்கப்படுவதை பதிவு செய்யும் இந்த ஆவணங்கள் 'ஆள்விலைப் பிரமாண இசைவுச் சீட்டு' எனக் குறிப்பிடப்படுகின்றன. இந்த ஆவணங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாக நிலவிய அடிமை முறை குறித்த அதிர வைக்கும் தகவல்களை முன்வைக்கிறார் ராசு.
பொதுவாக மன்னர்களின் ஆட்சிக் காலம் பொற்காலம் எனக் கூறப்படும் நிலையில், அந்தக் காலகட்டங்களில்தான் மிகப் பெரிய அளவில் அடிமை விற்பனை அமலில் இருந்ததைக் குறிப்பிடுகிறார் அவர். செ. ராசுவின் நூலில் பிற்காலச் சோழர் காலம் துவங்கி, 19ஆம் நூற்றாண்டுவரை அடிமைகள் குறித்துக் குறிப்பிடும் தகவல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
பிற்காலச் சோழர் காலத்தில் அடிமைகள்:
மன்னர்கள் காலத்தில் அடிமைகள்
ராஜராஜ சோழனின் ஐந்தாம் ஆட்சியாண்டில் பிள்ளையார் பிருதிகங்கர் கோவில் கன்மிகளுக்கு (தொழிலாளர்களுக்கு) ஒரு அடிமை ஆவணம் கல்வெட்டின் மூலம் அளிக்கப்பட்டது. இரண்டு பேர் இந்தக் கல்வெட்டை வெட்டி, தங்களை அடிமை என அறிவித்துக் கொண்டனர். தாங்களும் தங்கள் வழித்தோன்றல்களும் பிள்ளையாருக்கே பணி செய்து கொடுப்பதாக எழுதிக் கொடுத்தனர்.
இரண்டாம் ராஜாதிராஜன் காலம் முதல் மூன்றாம் ராஜராஜனின் காலம் வரை தமிழ்நாட்டில் அதிக அளவில் அடிமைகள் இருந்தார்கள் என்கிறார் ராசு. மூன்றாம் குலோத்துங்கன் வீரபாண்டியனை கொன்று அவனது மனைவியை அடிமையாகக் கொண்டு வந்ததாக ஒரு ஆவணம் கூறுகிறது.
சோழ மன்னர்கள் சிலர், போரில் தோற்ற நாட்டின் பெண்களை அடிமைகளாகக் கொண்டு வந்ததும் அல்லாமல், சில பெண்களின் மூக்கை அரிந்துள்ளனர். அதற்குப் பிறகு வந்த விஜயநகர மன்னர்கள் காலத்திலும் அடிமை முறை நீடித்தது. 1568இல் செஞ்சி மன்னன் சூரப்ப நாயக்கர் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு சில அடிமைகளை தானமாக அளித்தார்.
தஞ்சாவூரில் 1676 முதல் 1855 வரை மராட்டியர் ஆட்சி நடந்தபோதும் அரசு அதிகாரிகளே அடிமை வணிகத்தில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் மோதி மொழியில் கிடைத்திருக்கின்றன. உதாரணமாக, அக்கப்பட்டி மிராசு சிதம்பரம் என்பவர் பிழைக்க வழிதேடி இரு மகள்களுடன் தஞ்சாவூருக்கு வந்து தங்கினார்.
அவர் வீட்டில் இல்லாதபோது அரண்மனைக்கு அடிமை சேகரிக்கும் ஆட்கள் அவரது இரண்டு பெண்களையும் அடிமைகளாக இழுத்துச் சென்றனர். சிதம்பரம் ஆளுநரிடம் புகார் செய்தபோது, ஆளுநர் 'ஒன்றும் செய்வதற்கில்லை' என்று பதிலளித்தார். இது நடந்தது 1842இல்.
அடிமைகளின் விலை என்ன?
மன்னர்கள் காலத்தில் அடிமைகள் பட மூலாதாரம்,Getty Images
அடிமைகளின் விலையைப் பொறுத்தவரை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி இருந்திருக்கிறது. வாங்குவோரின் பொருளதார நிலையும் அதைத் தீர்மானித்திருக்கிறது. வேதாரண்யம் கோவிலில் 1221ஆம் ஆண்டு 10 அடிமைகள் 1,000 காசுக்கு வாங்கப்பட்டுள்ளனர்.
இதற்கு நாற்பது ஆண்டுகள் கழித்து 1,261ஆம் ஆண்டில் 4 அடிமைகள் 700 காசுக்கு வாங்கப்பட்டுள்ளனர். 1781இல் புதுச்சேரியில் ஒரு பெண் 2 ரூபாய்க்கும் தஞ்சாவூரில் 1845இல் ஒரு பெண் 8 ரூபாய்க்கும் விற்கப்பட்டுள்ளார்.
கோவில்களில் அடிமைகளுக்கு அதிக விலை கொடுக்கப்பட்டது. பெண்களைவிட ஆண்களுக்கு அதிக விலை கொடுக்கப்பட்டது. குழந்தைகளின் விலை மிக மிகக் குறைவாக இருந்திருக்கிறது.
அடிமைகளாவதற்கான காரணம் என்ன?
மன்னர்கள் காலத்தில் அடிமைகள் பட மூலாதாரம், ஆரம்பத்தில், போரில் பிடித்து வரப்படுவது, சாதி போன்ற பல காரணங்கள் அடிமை முறைக்கு அடிப்படையாக இருந்தாலும் பிற்காலங்களில் வறுமை மிக முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது.
1833, 1854 ஆகிய வருடங்களில் திருமணம் செய்வதற்காக கடன் வாங்கியவர்கள் திருமணம் முடிந்த பிறகு தன் மனைவியுடன் அடிமையாகியிருக்கிறார்கள். 1890இல் தன் சகோதரனின் இறுதிச் சடங்கிற்காக கடன் வாங்கியவர், அதற்குப் பதிலாக தன்னை எழுதிக் கொடுத்திருக்கிறார்.
சில தருணங்களில் வறுமை தாங்க முடியாமல், சாவதைத் தடுக்க கோவிலுக்குத் தாங்களே அடிமை ஆகியிருக்கிறார்கள். மூன்றாம் குலோத்துங்க சோழனின் 23வது ஆட்சியாண்டில் காட்டுடையான் என்பவர் தன் மனைவி, மக்களோடு திருப்பாம்புரமுடையார் கோவிலுக்கு அடிமை ஆனார்.
தனியார் ஒருவரிடம் அடிமையாய் இருப்பதைவிட கோவில்களில் அடிமையால் இருப்பது சற்று மேம்பட்டதாய் இருந்திருக்கிறது. சில இடங்களில் கோவில்கள் அடிமைகளுக்கு நிலமும் வீடும் அளித்திருக்கின்றன.
சங்க காலத்திலும் அடிமை முறை
மன்னர்கள் காலத்தில் அடிமைகள் பட மூலாதாரம்,Getty Images
தற்போது வெளிவந்திருக்கும் புத்தகத்தைப் போலவே, ஆ. சிவசுப்பிரமணியன் எழுதி 2005இல் வெளிவந்த தமிழகத்தில் அடிமை முறை என்ற புத்தகமும் இங்கு நிலவிய அடிமை முறை பற்றிக் கூறுகிறது.
இந்தப் புத்தகத்தைப் பொறுத்தவரை பட்டினப்பாலை, முல்லைக்கலியில் வரும் பாடல்களை வைத்து சங்க காலத்தில் இருந்தே அடிமை முறை இருந்ததைக் குறிப்பிடுகிறது. அதேபோல கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை நீடித்த பல்லவர் ஆட்சிக் காலத்திலும் அடிமை முறை நிலவியதை பக்தி இயக்கப் பாடல்களில் வரும் சொற்களை வைத்துச் சுட்டிக்காட்டுகிறார் ஆ. சிவசுப்பிரமணியன்.
அதேபோல, பத்தாம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரையான பிற்காலச் சோழர்களின் ஆட்சிக் காலத்திலும் அடிமை முறை இருந்தது என்கிறார் ஆ. சிவசுப்பிரமணியன். ஆனால், இவர்களது வாழ்க்கை நிலை எப்படி இருந்தது என்பது குறித்த பதிவுகள் இல்லை என்கிறார் அவர்.
இதற்குப் பிறகு விஜயநகரப் பேரரசின் ஆதிக்கத்தில் தமிழ்நாடு வந்தபோது செஞ்சி, தஞ்சாவூர், மதுரையை தலைநகராகக் கொண்ட நாயக்கர் ஆட்சி தோன்றியது. அப்போதும் அடிமை முறை நிலவியது.
பல்வேறு கால கட்டங்களிலும் இந்த அடிமைகள் தங்கள் கடமைகளில் இருந்து தவறினால் தண்டிக்கப்பட்டனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பண்ணைகளில் அடிமைகளாக இருந்தவர்கள் மிகக் கொடூரமாக துன்புறுத்தப்பட்டதையும் ஆ. சிவசுப்பிரமணியனின் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.
"ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்களின் தொழில்கள் மாறி வந்துள்ளன. உற்பத்தி உறவுகள் மாறி வந்துள்ளன. இதைப் புரிந்துகொண்டபோதுதான் வெளிநாடுகளைப் போல இங்கேயும் அடிமைகள் இருந்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன்.
மெல்ல மெல்ல அதற்கான ஆவணங்களைத் தேடும்போது, ஒவ்வொன்றாகக் கண்ணில்பட ஆரம்பித்தன. அவற்றை வைத்து 1980களின் தொடக்கத்தில் ஒரு சிறிய உரையை நிகழ்த்தினேன். பிறகு அதை ஒரு சிறிய புத்தகமாக வெளியிட்டேன். பிறகு ஆதாரங்களையெல்லாம் இணைத்து 2005இல் வெளியிட்டேன்," என்கிறார் ஆ. சிவசுப்பிரமணியன்.
இந்தியாவின் பல பகுதிகளிலும் அடிமை முறை இருந்தாலும், சமீப காலம் வரை வரலாற்று ஆசிரியர்கள் அதுகுறித்து எழுதுவதைத் தவிர்த்து வந்தார்கள் என்கிறார் ஆய்வாளர் பொ. வேல்சாமி.
"அடிமை முறை என்பது உலகம் பூராவுமே இருந்தது. அதேபோல இந்தியாவிலும் தமிழகப் பகுதிகளிலும் இருந்தது. ஆனால், இதுபோன்ற அடிமை முறை இந்தியாவில் கிடையாது என்று நவீன கால வரலாற்றைப் பேசுபவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால், உண்மையில் இன்றைக்கு ஏற்றத் தாழ்வுகள் இருந்ததைப் போலவேதான், அந்தக் காலகட்டத்திலும் இருந்தது. சுமார் 1,500 ஆண்டுகளுக்கு இதுபோன்ற அடிமை முறை நீடித்தது," என்கிறார் வரலாற்று ஆய்வாளரான பொ. வேல்சாமி.
மன்னர்கள் காலத்தில் அடிமைகள் பட மூலாதாரம்,Getty Images
சமீப காலம்வரை அதாவது, 19ஆம் நூற்றாண்டு வரை இந்த அடிமை முறை நீடித்திருந்தது என்கிறார் வேல்சாமி.
"இதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. தஞ்சை சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் 'தாது வருடப் பஞ்சம்' என்ற நூல் இருக்கிறது. அந்த நூலில் தாது வருடப் பஞ்சத்தின்போது விழுப்புரம் மாவட்டத்தில் வறுமையின் கொடுமையால் பெண்கள் தங்களை விற்றுக் கொண்டார்கள் என்ற தகவல் இருக்கிறது. தாது வருடப் பஞ்சம் 1876இல் ஏற்பட்டது. ஆகவே 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரை அடிமை முறை இருந்தது தெரிய வந்திருகிறது.
ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலம் வந்த பிறகுதான் மனிதர்கள் சமம் என்பது உலகம் முழுவதும் பரவலாக ஏற்கப்பட்டது. உலகம் முழுவதும் அடிமைகள் உருவாவதை போரின் வெற்றி தோல்விகளும் பொருளாதாரக் காரணிகளும்தான் தீர்மானித்தன. ஆனால், இந்தியாவில் அடிமை முறையைத் தீர்மானிப்பதில் சாதிய ஏற்றத் தாழ்வுகளும் அடிமைத்தனத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தன. எல்லா மன்னர்களின் காலத்திலும் இது நீடித்திருக்கிறது," என்கிறார் பொ. வேல்சாமி.
ஆனால், வெளிநாட்டில் இருந்த அடிமை முறைக்கும் இங்கிருந்த அடிமை முறைக்கும் இடையிலான ஒரு சிறிய வித்தியாசத்தை ஆ. சிவசுப்பிரமணியன் சுட்டிக் காட்டுகிறார். "ரோம் போன்ற நாடுகளில் சங்கிலியால் கட்டப்பட்ட அடிமைகள் உண்டு. இங்கே அதுபோல கிடையாது. இங்கே அவர்களிடம் கடுமையாக வேலை வாங்கப்படும். ஆனால், சங்கிலியால் கட்டிப் போடும் வழக்கம் கிடையாது," என்கிறார் அவர்.
அம்பேத்கரை பொறுத்தவரை, தீண்டாமை என்பது இந்திய அடிமை முறையின் ஒரு வடிவம். இந்த வரலாற்றை பள்ளியிலிருந்தே கற்றுக்கொடுத்தால், சாதி குறித்த புரிதல் வேறு மாதிரியிருக்கும் என்கிறார் ஆ. சிவசுப்பிரமணியன்.
இந்தியாவில் 1843ஆம் ஆண்டு அடிமைகளை வைத்துக்கொள்வது சட்டப்படி தடைசெய்யப்பட்டது. தற்போது இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 370, 371வது பிரிவுகள் அடிமைகளை வைத்திருப்பதையும் அடிமை வணிகம் செய்வதையும் தண்டனைக்குரிய குற்றங்களாக கூறுகின்றன.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்