பாட்டாளி வர்க்கக் கட்சி-மாரிஸ் கார்ன் ஃபோர்த் நூல் PDF வடிவில்

 ங்கிலாந்தைச் சேர்ந்த தோழர் மாரிஸ் கார்ன்ஃபோர்த்மார்க்சிய மூல நூல்களுக்கான வாசகர் வழிகாட்டி என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்நூலில் மார்க்சிய லெனினியத்தை எப்படிக் கற்பது என்பதையும், அரசியல்- பொருளாதார- சித்தாந்தப் பிரச்சினைகளை மார்க்சிய லெனினியத்தின் அடிப்படையில் சீர்தூக்கிப் பார்ப்பதற்கான வழிமுறையை மார்க்சிய மூல நூல்களில் இருந்து எப்படி கற்றுக்கொள்வது என்பதைப் பற்றியும் விரிவாக விளக்குகிறார்.

இந்த நூலில் பாட்டாளி வர்க்கக் கட்சிஎன்ற தலைப்பில் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை மார்க்சிய ஆசான்களின் நூலில் இருந்து எப்படி கற்றுக் கொள்வது என்பதை விளக்கியிருக்கிறார். ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியின் முக்கியத்துவம் மற்றும் தன்மைகளை மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் உள்ளிட்ட மார்க்சிய ஆசான்களின் நூல்களில் இருந்து எடுத்துக்காட்டி, அந்நூல்கள் குறித்து அறிமுகப்படுத்துகிறார்.

பாட்டாளி வர்க்கக் கட்சி

முன்னுரை- நமது நாட்டில் பலவீனமான பகுதியை உங்கள் முன் வைக்கவும் இங்குள்ள கட்சிகள் மறந்தே போனவற்றை மார்க்சிய ஆசான்களின் வழிக்காட்டுதலை முன் வைத்து விவாதிக்கவே இந்தப்பகுதியை எழுதும் கட்டாயம். இவை எனது எழுத்துகள் அல்ல முன்னோடிகள் தொகுத்தவற்றை நான் உங்கள் முன் வைக்கிறேன். இதற்கு ஆதரமான நூல்களை துணைக்கொண்டு மெய்விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம் தோழர்களே.

புரட்சிக்கு பதிலாக சீர்திருத்தமும், அரசியல் போராட்டத்தை மறந்து பொருளாதார போராட்டத்தில் எதிரி வர்க்கத்திடம் மண்டியிட்டு கிடக்கும் அவலங்களை உங்கள் முன் வைப்பதோடு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க மார்க்சிய லெனினிய சித்தாந்த அறிவை பெற்றிருப்பதோடு உழைக்கும் வெகுஜன மக்களோடு இணைந்து செயலாற்ற வேண்டும் அவை அவர்களின் விடுதலைக்காக என்பதனை அவர்களை தட்டி எழுப்ப வேண்டும் எப்படி என்பதனை நமது ஆசான்கள் வழிகாட்டியுள்ளனர். வாருங்கள் முழுமையாக கற்று தேர்வதோடு ஒரு உண்மையான பாட்டாளி வர்க்க கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதனை புரிந்து இங்குள்ள கட்சிகளின் நிலையை அறிவதோடு ஒரு பாட்டாளி வர்க்க கட்சி என்பது எப்படி இருக்க வேண்டும் அறிவோம் செயல்படும் தோழர்களே.

மார்க்சியம், பாட்டாளி வர்க்கம் தனக்கென்று ஒரு கட்சியின்றி முதலாளித்துவத்தைத் தோற்கடிக்கவோ, அதிகாரத்தை வெல்லவோ, சோசலிசத்தைக் கட்டியமைக்கவோ முடியவே முடியாது என்று கற்பிக்கிறது.

மார்க்சும் எங்கெல்சும் சுதந்திரமான பாட்டாளி வர்க்கக் கட்சியின் தேவையை எல்லாவற்றிற்கும் மேலாக வலியுறுத்தி வந்தனர். முதலாம் அகிலத்தில் அவர்களால் வகுக்கப்பட்ட விதி ஒன்று “தனக்கென்று தனித்தன்மையுடைய ஒரு கட்சியை, உடைமையாளர்களது பழைய கட்சிகளனைத்திற்கும் எதிராக கட்டியமைத்தாலன்றி ஒருபோதும் ஒரு வர்க்கமாகச் செயல்பட முடியாது” என்கிறது.

மார்க்சும், எங்கெல்சும் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தோன்றிய காலத்தில் எழுதி வந்தவர்கள். அவர்களது பார்வை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பின்வருமாறு தொகுக்கப்படுகிறது. கம்யூனிஸ்டுகள் பிற பாட்டாளி வர்க்கக் கட்சிகளுக்கெதிராக ஒரு கட்சியைக் கட்டவில்லை. மாறாக, அவர்கள் ஒரு பொது அரசியல் திட்டத்தின் அடிப்படையில் பாட்டாளி வர்க்கத்தை ஒன்று திரட்டி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்திற்காக முனைகிறார்கள்.

மார்க்சும் எங்கெல்சும் கட்சிக்குள் முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவக் கருத்துக்கள், கோட்பாடுகளை கடத்தி வர முனைவதை அதை ஒரு வர்க்க சமரசப் போக்கிற்கு உட்படுத்துவதை விடாப்பிடியாக எதிர்த்தனர். கட்சியைப் புரட்சிகர மார்க்சியக் கோட்பாடுகளின் அடிப்படையில் நிறுவவும், அவற்றிற்கு தொழிலாளி வர்க்க நிறுவனங்களை வென்றெடுக்கவும் முயன்றனர். இதுதான் அவர்களின் அரசியல் செயற்பாடாக இருந்தது. மேலும் அவர்கள் பாட்டாளி வர்க்கம் எவ்வகைப் போக்கை பிற வர்க்கங்களின் மீது கடைப்பிடிக்க வேண்டும் என்பதை குறிப்பாக விவசாயி வர்க்கத்தை, பாட்டாளி வர்க்கத்தின் மிக முக்கியத் துணைவர்களாகக் கருதி வரையறுப்பதில் கவனம் செலுத்தினர்.

லெனின் போல்சுவிக் கட்சியை ஏகாதிபத்திய சகாப்தத் தொடக்கத்தில் கட்டினார். மேற்கத்திய நாடுகளின் சோசலிசக் கட்சிகளின் “அமைதியான” வளர்ச்சி கொண்ட பல பத்தாண்டுகளின் முடிவில் சந்தர்ப்பவாதப் போக்குகள் தலைவிரித்தாடின. அகிலத்தின் ஒட்டு மொத்த செயற்பாட்டையும் பரிசோதித்துச் சரி செய்வதும் சந்தர்ப்பவாதத்தை முற்றாக நிராகரிப்பதும் மிக முக்கியத் தேவையானது. போல்சுவிக் கட்சியை அவர் புதிய வகையானதாக முதலாளித்துவத்தை எதிர்த்த பாட்டாளி வர்க்கத்தை ஒன்றிணைத்துத் தலைமை தாங்குவதாகக் கட்டியமைத்தார். இக்கட்சி ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டை, சுய ஒழுங்கை உள்ளடக்கி, புரட்சிகர மார்க்சிய கோட்பாடுகளின் அடிப்படையிலானதாய் அக்கோட்பாடுகளைப் பயன்படுத்தி, முன்னெடுத்துச் செல்லக்கூடியதாய் இருந்தது.

அப்படிப்பட்ட கட்சி புரட்சிகர தத்துவ அடிப்படையிலமைந்து பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படைப்பிரிவாய் அதிகாரத்தை வெல்ல, சோசலிசத்தைக் கட்டியமைக்க, தொழிலாளி வர்க்க இயக்கங்களை ஈர்த்து, வழி நடத்தி, தலைமை தாங்கிச் செல்வதால், பாட்டாளி வர்க்கத்தின் மிக உயர்ந்த அமைப்பு வடிவமாக இருக்கிறது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கான ஒரு கருவியாக உள்ளது. ஒற்றுமையை, ஒழுங்கைக் காப்பதாக, எந்த குழுப்போக்கும் அதன் ஒற்றுமையைக் சிதைந்துவிடாது இருக்கும்படி காக்கிறது. தானே சந்தர்ப்பவாதிகளை வெளித்தள்ளி தூய்மை அடைகிறது. போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தனது கொள்கையை எந்த எதிரிக்கு மரண அடி கொடுப்பது என்பதை நிர்ணயிப்பதாக தாக்குதல் திசைவழியை அமைத்துக் கொள்கிறது. அனைத்து கூட்டாளி வர்க்கங்களையும் இந்த எதிரிக்கு எதிரான போராட்டத்தில் சாத்தியமான எல்லா நட்பு சக்திகளையும் ஒன்றிணைக்கிறது.

போல்சுவிக் கட்சி பாட்டாளி வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாதத்திற்கெதிரான புரட்சிகர மார்க்சியத்தின் போராட்டத்தில் பிறந்தது. அதன் திட்டங்களும், அமைப்புக் கோட்பாடுகளும், தொழிலாளிகள் பொருளாதாரக் கோரிக்கைகளுக்கு போராட வேண்டும் என்னும் “பொருளாதாரவாதத்” திற்கெதிரானதாக அமைந்தது. அவர்களோடு கட்சியில் வர்க்கக் கூட்டிணைப்புக் கோட்பாடுகளைப் புகுத்தி அமைப்பைப் பலவீனப்படுத்தி ஒற்றுமையைக் குலைக்க முயன்ற மென்ஷ்விக்குகளுக்கு எதிரானதாக, கட்சியை மக்களிடமிருந்தே பிரித்து, நட்புச் சக்திகளை நிராகரித்து, போராட்டத்தின் வளர்ச்சிக்கட்ட அடிப்படையிலான கோட்பாட்டுக்குப் பதிலாக “வெற்றுப் புரட்சிகர” வாய்வீச்சில் இறங்கிய “இடதுசாரி”களுக்கெதிரானதாக இருந்தது.

லெனின் இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதத் தலைவர்களை எதிர்த்து அம்பலப்படுத்தி வந்தார். இத்தலைவர்கள் 1914-18-ல் ஏகாதிபத்தியப் போரில் அகிலத்தையே காட்டிக் கொடுத்தவர்கள். லெனின் நியாயமான, நியாயமற்ற போர்களுக்கிடையிலான வேறுபாட்டை விளக்கி போரைப் பற்றிய பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டை உருவாக்கினார்.

லெனினது போதனைகள், புதிய பாணி கட்சியைக் கட்ட கம்யூனிஸ்டுக் கட்சிகளால் ஏற்கப்பட்டு ஸ்டாலினால் மேலும் வளர்த்தெடுக்கப்பட்டன.

லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்?”, “இடதுசாரிக் கம்யூனிசம் ஒரு இளம்பருவக் கோளாறு” என்னும் இரு நூல்களும் மிக அவசியமானவை. இவற்றோடு “ஓரடி முன்னே இரண்டடி பின்னே” என்ற நூலையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஸ்டாலினின் 17,18-ம் சோவியத் ரசியக் கம்யூனிஸ்டுக் கட்சி காங்கிரசில் தந்த அறிக்கைகள் முக்கியமாகப் படிக்க வேண்டியவை.

“வரலாற்றில் காரல் மார்க்சின் போதனைகளுக்கு விதிக்கப்பட்ட வருங்காலம்” என்னும் நூலில் (1913) லெனின் தொழிலாளி வர்க்க இயக்கம் இதுவரை மூன்று கட்டங்களைக் கடந்து வந்துள்ளது என்று காட்டினார். முதற்கட்டம் புரட்சிகர எழுச்சிகளின் காலம், 1848 புரட்சிகளில் இருந்து 1871 பாரீஸ் கம்யூன் வரையிலானது, இந்தக் காலப் பகுதியிலேயே பல சுதந்திர தொழிலாளி வர்க்கக் கட்சிகள் முதன் முதலில் தோன்றின. இரண்டாம் கட்டம் 1905 ரஷ்யப் புரட்சி வரையிலானது. “அமைதியான” வளர்ச்சி நிலவிய காலம். இக்காலகட்டத்தில் தொழிலாளி வர்க்க கட்சிகள் வலிமையுற்று, தங்கள் சொந்தக் கட்சி இதழ்களை நடத்தியும், முதலாளியப் பாராளுமன்றத்தை பயன்படுத்தக் கற்றும் உள்ளன. ஆனால் இக்கட்டத்திலேயே சந்தர்ப்பவாதம் “சமூக அமைதி” எனப் பேசிக்கொண்டு, வர்க்கப் போராட்டத்தை நிராகரித்து இயக்கத்துக்குள் புகுந்தது. கடைசிப் பகுதியாக 1905-க்குப் பிற்பட்ட காலம், புதிய பிரச்சினைகள் முளைத்துள்ள இக்கட்டத்தில் சந்தர்ப்பவாதத்தை கட்சியிலிருந்து துரத்தியடித்து புரட்சிகர மார்க்சியத்தின் வெற்றியைப் பாதுகாக்க வேண்டி இருந்தது.

இந்நூலுக்கு முன்பே மார்க்சியமும் திருத்தல்வாதமும் (1908) என்ற நூலில் திருத்தல்வாதத்தை லெனின் ஆய்கிறார். தங்களை மார்க்சியவாதிகள் என்றழைத்துக் கொண்டே மார்க்சிய அடிப்படைகளைத் திருத்துகின்ற சந்தர்ப்பவாதிகளின் தத்துவமே திருத்தல்வாதம். திருத்தல்வாதிகள் இயக்க இயல் பொருள்முதல்வாதத்துக்குப் பதிலாக முதலாளித்துவ தத்துவத்தின் “மிகப் புதிய விஷயங்களை” சார்ந்திருப்பதைக் காட்டினார். குறிப்பாக முதலாளித்துவ அரசியல் பொருளாதாரவாதிகளின் நவீன தத்துவங்களைக் கையிலெடுத்துக் கொண்டு மார்க்சியத்தைத் “திருத்த” குறிப்பாக மார்க்சின் “மதிப்பு” பற்றிய கோட்பாட்டை, முதலாளித்துவ நெருக்கடிகளின் தவிர்க்க இயலாத தன்மையைத் திருத்த முயன்றனர். ஜனநாயகமும் பொதுமக்கள் வாக்குரிமையும் வர்க்கப் போராட்டத்தின் அடிப்படைகளை அகற்றி விட்டன என்று அவர்கள் உறுதியாகச் சொன்னார்கள்.

திருத்தல்வாதம் சோசலிச லட்சியங்களைக் கைவிட்டு “பாட்டாளி வர்க்க அடிப்படை நலன்களை கற்பனையான அல்லது நிஜமான பொருளாதார நலன்களுக்காக தியாகம் செய்துவிடும்” அளவுக்கு சரிந்தது. பாட்டாளி வர்க்க இயக்கத்தில் இது குட்டி முதலாளித்துவ போக்கைப் பிரதிபலித்தது.

“ஐரோப்பிய தொழிலாளர் இயக்கத்தில் கருத்து வேற்றுமைகள்” (1910) என்னும் நூலில் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் புலப்படும் மார்க்சிய – விரோதப் போக்குகள் தற்செயலானவை அல்ல, மாறாக, அனைத்து முதலாளித்துவ நாடுகளின் பொருளாதார வளர்ச்சியின் தன்மையைப் பொறுத்தது என்று குறிப்பிடுகிறார். ருஷ்ய சமூக ஜனநாயகவாத இயக்கத்தில் சீர்த்திருத்தவாதக் கருத்துக்களின் தாக்கத்தை முதலாளித்துவப் பிரச்சாரத்துடன் தொடர்புபடுத்துகிறார் லெனின். சோசலிசத்திற்கு எதிராக நேரடியாகப் போராடாமல் முதலாளித்துவம் சீரான, துண்டு துண்டுச் சீர்திருத்தங்களை முன்வைக்கக் கற்றுக் கொண்டு உள்ளது எனக் கூறுகின்றனர். இது முதலாளித்துவத்திற்கு ஒட்டுப் போட முனைவது ஆகும்; அவர்கள் அத்தகைய பிரச்சாரத்தைப் பயன்படுத்தி பாட்டாளி வர்க்கத்தைப் பிளவுபடுத்தி வலுவிழக்கச் செய்ய முயலுகிறார்கள்; முதலாளிவர்க்க ஆட்சியை தக்கவைக்கப் பார்க்கிறார்கள். இப்பிரச்சாரம் சீர்திருத்தவாத சித்தாந்தங்கள் வாயிலாக தொழிலாளி வர்க்க இயக்கத்தில் வெளிப்பட ஆரம்பித்து விட்டது – புரட்சிக்குப் பதிலாக சீர்திருத்தங்களை அது முன் வைக்கிறது. (இக் கட்டுரை, ருஷ்யத் தொழிலாளர்கள் ஒருபோதும் புரட்சிப் பாதையை எக்காரணம் முன்னிட்டும் தேர்ந்தெடுக்கக் கூடவே கூடாது என்று பிரச்சாரம் செய்த சீர்திருத்தவாத சோசலிஸ்டுகளைப் பற்றிய பெருந்திரளான விவரங்களுடன் கூடிய வாதத்தை உள்ளடக்கியதாகும்.)

ஏகாதிபத்தியமும் சோசலிசத்தில் பிளவும் (1916) என்ற நூலில் தொழிலாளர் வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாதம் நிலவுவதற்கும் அதன் வலிமைக்கும் அடிப்படைக் காரணங்களைத் தொகுத்து லெனின் உரைக்கிறார். ஏகாதிபத்தியத்தின் உயர்விகித லாபங்கள் தொழிலாளி வர்க்கத்தின் மேல்தட்டுக்கு லஞ்சம் அளிக்கவும், ஊழல்படுத்தவும் பயன்படுத்துகின்றன. இதன் விளைவாகப் பூர்ஷ்வா தொழிலாளர் கட்சி எல்லா ஏகாதிபத்திய நாடுகளிலும் தலை எடுத்தது.

குறிப்பாக பிரிட்டனை ஆய்கின்ற லெனின், அங்கு சந்தர்ப்பவாதம், முறையான ஏகாதிபத்தியம் தோன்றுவதற்குப் பல பத்தாண்டுகளின் முன்பே பிறந்து விட்டதாகக் கூறுகிறார். தொழில்துறையில் தனியாதிக்கமும் (Industrial Monopoly) ஏகாதிபத்தியத்துக்கு முந்தைய முதலாளித்துவ வளர்ச்சியிலேயே அது பிடித்திருந்த செழிப்பான காலனிய நாடுகளும் அவர்களுக்கு உயர் லாபங்களைத் தோற்றுவித்தன. இது ஏகாதிபத்தியத் தோற்றத்தின் முன்பே நிகழ்ந்த போதும் தன்னுள் சில ஏகாதிபத்திய இயல்புகளைக் கொண்டிருந்தது.

இதே கருத்தை லெனின் தனது “இரண்டாம் அகிலத்தின் வீழ்ச்சி” (1915) என்னும் கட்டுரையிலும் கையாள்கிறார். இதில் சந்தர்ப்பவாதம் என்றால் என்ன என்று வரையறுக்கிறார்.

அதாவது “சிறுபான்மையினரின் தற்காலிக நலன்களின் பொருட்டு பெருந்திரளான தொழிலாளர்களின் நலன்களை தியாகம் செய்து விடுவது” எனப் பொருளாகும். வேறு விதமாகச் சொல்வதானால் “தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பிரிவு பெருந்திரளான தொழிலாளி வர்க்கத்திற்கு எதிராக கூட்டு சேர்வது” ஆகும்.

முதலாளிகள் தொழிலாளிகளுக்கிடையில் ஒரு பிரிவுக்கு மட்டும் சலுகை அளிப்பதன் மூலம் அவர்களுக்கிடையில் தகுதிபெற்ற தொழிலாளர் “தட்டு” ஒன்றை ஏற்படுத்த முடிகிறது என்பதால் சந்தர்ப்பவாதம் தோன்றவும் வலிமையடையவும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் “பழக்கங்களின் வலிமை, ஒப்பீட்டளவில் அமைதியான வளர்ச்சிப் போக்குக்குப் பழகிப் போவது, தேசியத் தன்னியல்புப் போக்கு (Prejudice) கூரிய பிளவுகளுக்கு அஞ்சுவது, நம்பிக்கையின்மை முதலியவற்றால் சந்தர்ப்பவாதம் வலிமையடைகிறது என்கிறார் லெனின்.

இரண்டாம் அகிலத்தின் தலைவர்களின் சந்தர்ப்பவாதம் 1914-இல் அவர்கள் தத்தம் ஏகாதிபத்தியங்களோடு கைகோர்த்துக் கொள்வதாக முடிந்தது. ஏகாதிபத்தியப் போருக்குத் துணைபோன அவர்களது வாதங்களைக் கிழிக்கிறார் லெனின். சந்தர்ப்பவாதத் தலைவர்களைப் பொறுத்தவரையில் “சொல்லில் சோசலிசம் நடைமுறையில் பூர்ஷ்வாக்களோடு ஒவ்வொரு முக்கியப் பிரச்சினையிலும் கைகோர்த்து கட்சியிலிருந்து வெளித்தள்ளப்பட வேண்டிய நபர்கள் இவர்கள்” என்று தனது கட்டுரையை லெனின் முடிக்கிறார்.

லெனின்: சோசலிசமும் போரும் (1915) என்னும் தமது நூலில் நியாயமான நியாயமற்ற போர்களுக்கிடையிலான வேறுபாட்டை வரையறுக்கிறார். தொழிலாளி வர்க்கம் நியாயமற்ற ஏகாதிபத்தியப் போர் மீது எவ்வகை நிலைப்பாட்டை வைத்திருக்க வேண்டும் என்பது பற்றிய மார்க்சியப் போதனைகளின் தொகுப்பாக இந்நூல் உள்ளது.

லெனின் 1914-இல் எழுந்த போர் இரண்டு ஏகாதிபத்திய முகாம்களுக்கிடையிலான நியாயமற்ற போர் என்று காட்டுகிறார். இத்தகைய போர்களில் அந்த அந்த நாடுகளின் தொழிலாளி வர்க்கங்கள் தத்தம் ஏகாதிபத்தியங்களை எதிர்க்க வேண்டும். “ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப் போராக” மாற்ற முயல வேண்டும்.

லெனின் –ஏகாதிபத்திய யுத்தங்கள் மூளும்போதும் நியாயமான சமாதானம் ஏகாதிபத்திய அரசுகளைத் தூக்கியெறியாமல் எட்டக் கூடியது அல்ல என்று காட்டுவதன் மூலம், சமாதானவாதிகளும், தாராளவாதிகளும் போர்களின் போது பரப்பும் “சமாதானம்” பற்றிய அரூபமான (Abstract) முழக்கம் போலித்தனமான ஏமாற்று வேலை என்று நிறுவுகிறார்.

இரண்டாம் அகிலத்தின் “சோசலிஸ்டுகள்’’ போருக்காதரவு அளித்தது சோசலிசத்தையே நேரடியாகக் காட்டிக் கொடுத்தது ஆகும் என்கிறார் லெனின். அவர்களின் கொள்கையை குறிக்க சமூகவெறி (Social Chavunism) என்ற சொல்லை உருவாக்கினார். சமூகவெறி என்பது நியாயமற்ற போரில் தங்கள் தாய் நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறிய சோசலிஸ்டுகள் என்று தம்மை அழைத்துக் கொள்பவர்களின் வாதம். சந்தர்ப்பவாதம், சமூக வெறி (Social Chavunism) இரண்டுடனும் சர்வதேசிய அளவில் தொடர்புகளை முறித்துக் கொண்டு மூன்றாம் அகிலம் புரட்சிகர அடிப்படையில் தொடங்கப்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

ஏகாதிபத்தியப் போர் பற்றிய மார்க்சியப் பார்வையை மீண்டும் போர் பற்றி 1917 மே மாதம் தனது பேச்சில் விளக்குகிறார். மீண்டும் நியாயமான, நியாயமற்ற போர்களுக்கிடையிலான வேறுபாட்டை யுணர்த்தி விட்டு, “நாம் எப்பொழுதும் எவ்வர்க்கம் போரை எந்த நோக்கத்திற்காக நடத்துகிறது என்று பார்க்க வேண்டும்” என விளக்குகிறார்.

மற்ற கட்டுரைகளில் உலகப் போரை ஒட்டி யெழுந்த சில சிறப்பான பிரச்சினைகளை ஆய்கிறார்.

“ஐக்கிய ஐரோப்பிய நாடுகள் என்ற முழக்கம்”(1915) என்ற நூலில் தொழிலாளர்கள் இப்படிப்பட்ட முழக்கத்தை ஆதரிக்க முடியாது என்கிறார். ஏகாதிபத்திய சக்திகள் அதிகாரத்தில் உள்ள வரை “ஐக்கிய ஐரோப்பிய நாடுகள் என்பது காலனிகளை, கொள்ளைகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு ஒப்பந்தமே, சோசலிசத்தை கூட்டாக நசுக்கும் ஒரு முகாந்திரமே” என்கிறார்.

சோசலிசம் அதன் வளர்ச்சிப் போக்கில் “உலக ஐக்கிய நாடுகளை” உருவாக்கும். ஆனால் இது இன்றைய நடைமுறைக் குறிக்கோள் அல்ல என்கிறார். சோசலிசத்தின் வெற்றி பல்வேறு நாடுகளிலோ அல்லது ஒரே ஒரு நாட்டிலோ சாத்தியமானதுதான். (இதன் காரணம் முதலாளித்துவத்தின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சிதான்) இந்த நாடு அல்லது நாடுகள் பிற முதலாளித்துவ நாடுகள் சூழ்ந்திருக்கும் போதும் நீண்ட காலம் சோசலிசத்தின் மையங்களாக விளங்கவும் முடியும்.

லெனின், தொழிலாளர்களும் சமாதானவாதமும் (பாசிபிசமும்) என்ற நூலில் முழுமையான ஆயுத ஒழிப்பு என்னும் பாசிபிச முழக்கத்தை அம்பலப்படுத்துகிறார். முதலாளித்துவச் சூழலில் அது சாத்தியமற்றது. எனவே அதற்காக பிரச்சாரம் செய்வது உண்மையில் மெய்யான புரட்சிகரப் போராட்டங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்குமிடையிலான பிரச்சினைகளிலிருந்து நழுவுவதற்கானது.

நசுக்கப்படுகிறவர்கள் சமாதானவாதிகள் ஆக முடியாது. மாறாக ஆயுதங்களைக் கையாளவும், அவற்றை நசுக்குபவர்களுக்கெதிராகத் திருப்பவும் தயாராக தொழிலாளி வர்க்கம் இருக்க வேண்டும். ஆயுதங்களைப் பயன்படுத்தாது நசுக்கப்படுவதற்கும் சம்மதிப்பவர்கள் அடிமைகளாக நடத்தப்பட தகுதியானவர்கள்தான். நாம் பாசிபிஸ்டுகளாக இருக்க முடியாது. ஏனெனில் நாம் நியாயமான போர்கள் இருப்பதை ஏற்கிறோம். நசுக்கப்படுபவர்கள் நசுக்குகிறவர்களுக்கு எதிராக நடத்துவதே நியாயமான போர்களாகும்.இதே கருத்தை1916-ல் எழுதிய “பாட்டாளி வர்க்கப் புரட்சியின் போர்த்திட்டம்” என்னும் நூலில் கையாள்கிறார். இதன் முதல் பகுதியில் சோசலிஸ்டுகள் எல்லாப் போர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல.

அவர்கள் அப்படி இருக்கவும் முடியாது என்று விளக்குகிறார். ஏனெனில் நசுக்கப்பட்டவர்கள் விடுதலைக்காகப் போராடுகிறார்கள். உள்நாட்டுப் போர்கள் நடக்கின்றன; சோசலிசத்தைக் கட்டியமைத்த பின் ஏகாதிபத்தியத் தாக்குதலுக்கெதிரே தற்பாதுகாப்புக்காகப் போராடி ஆக வேண்டி வரலாம். நசுக்கப்படுபவர்கள் விடுதலைக்காகப் போராடத் தயாராக இருக்க வேண்டும். சோசலிச நாட்டின் மக்கள் தங்கள் தாய்நாட்டைக் காக்கப் போர் நடத்த போராடவே வேண்டும்.

இந்த நூலின் பிற்பகுதிகளில் லெனின் ராணுவப் பயிற்சி, ஆயுதங்கள் மற்றும் அவற்றைப் பயன்படுத்துவது பற்றிய பாட்டாளி வர்க்க நிலைப்பாடுகளை எடுத்துரைக்கிறார்.

மார்க்சும் எங்கெல்சும் பிரிட்டனின் சுதந்திரமான தொழிலாளி வர்க்க இயக்கத்தினைக் கட்டியமைப்பதன் முக்கியத்துவத்தை எப்படி வலியுறுத்தி வந்தனர் என்பதைக் குறிப்பிடுகின்றார். அவர்களின் அணுகுமுறை, மார்க்சியம், சோசலிசத்தையும் வெகுஜன தொழிலாளர் இயக்கத்தையும் ஒன்றிணைத்த தத்துவம் என்ற கோட்பாட்டிற்கு உதாரணமாகத் திகழ்கிறது. மார்க்சும் எங்கெல்சும் பழைய சமூக ஜனநாயகவாதக் கூட்டமைப்பு (Social Democratic Federation) என்னும் அமைப்பு பிரிட்டனில் கையாண்ட குறுங்குழுவாதப் போக்கை, தன்னை வெகுஜன இயக்கத்திலிருந்தே தனிமைப்படுத்திக் கொண்டு இருந்த போதும் வரட்டுத்தனமான “தனித்தன்மை”யைப் பற்றி பேசியதை வன்மையாகக் கண்டனம் செய்தனர்.

சோசலிஸ்டுகள் “தங்கள் குறுகிய குறுங்குழுவாதப் போக்கினைத் தூக்கியெறிந்து தொழிலாளர் இயக்கத்தில் இணைய வேண்டும்” என்று மார்க்சும் எங்கெல்சும் வலியுறுத்தினர். அதேசமயம் தொழிலாளர் இயக்கத்தில் சந்தர்ப்பவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தையும் இயக்கத்திற்கு புரட்சிகரத் தத்துவம் ஒன்றின் அவசியத்தையும் வலியுறுத்தினார்கள்.

கொள்கை ஒன்றுக்குப் போராட வேண்டியது எவ்வளவு முக்கியமானது என்பதை லெனின் வலியுறுத்துகிறார். தொழிலாளர் கட்சியின் தொடக்கமே “ஒருவகையில் உண்மையில் உணர்வுள்ள பாட்டாளி வர்க்க நிறுவனங்கள் வர்க்கக் கொள்கைக்கும், சோசலிசத் தொழிலாளர் கட்சி நோக்கியும் எடுத்து வைத்திருக்கும் முதல் கட்டம் ஆகும்” எனக் குறிப்பிடுகிறார். ஆனால் 1918-ல் தொழிலாளர் கட்சி பற்றிக் குறிப்பிட்டபோது “இது தொழிலாளர்களை உள்ளடக்கி உள்ளபோதும் எதிர்ப்புரட்சிக்காரர்களால் தலைமை தாங்கப்படுகிறது” என்று கூறுகிறார்.

பிரிட்டனில் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றினைக் கட்ட வேண்டிய தேவையையும் அது தொழிலாளர் கட்சியோடு உறவு கோர வேண்டியதையும் காட்டுகிறார்.( பார்க்க, லெனின், பொதுவுடைமைக் கட்சியின் பாத்திரம்.)

லெனினும் கம்யூனிஸ்ட் அகிலமும்

பிப்ரவரி புரட்சிக்குப் பின் ரசியா திரும்பிய லெனின் ஏப்ரல் 1917-ல் வெளியிட்ட “நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்” என்ற பிரசுரத்தில் சர்வதேச இயக்கத்தில் நிலவிய மூன்று வகைப் போக்குகளை இனம் பிரித்துக் காட்டினார். அவ்வகைப் போக்குகள் கொண்டவர்களாக இவர்கள் உலகப் போரில் தங்கள் பக்க ஏகாதிபத்தியங்களுடன் கை கோர்த்துக் கொண்டனர். நடுநிலைவாதிகள் மேற்படி நபர்களுடன் ஒத்துப்போனவர்கள். மூன்றாவதாக, மெய்யான சர்வதேசியவாதிகள், இவர்கள் ஏகாதிபத்தியப் போரை முழுமூச்சாக எதிர்த்தனர். லெனின், மூன்றாவது பிரிவினர், இரண்டாம் அகிலத்திலிருந்து வெளியேறி புதிய அகிலத்தை தோற்றுவித்து, சந்தர்ப்பவாதத்திலிருந்து முற்றிலும் துண்டித்துக் கொண்டு, பாட்டாளி வர்க்கத்தை புரட்சிகர மார்க்சிய அடிப்படையில் ஒன்றிணைக்க வேண்டுமென அறை கூவினார்.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் முதல் பேரவை 1919 வசந்தத்தில் நடந்தது. அதன் முடிவில் “மூன்றாம் அகிலமும் வரலாற்றில் அதன் இடமும்” என்ற பிரசுரத்தை வெளியிட்ட லெனின், முதல் அகிலம் சர்வதேசிய அளவில் சோசலிசத்திற்காகப் பாட்டாளி வர்க்கம் போராட வேண்டியதற்கான அடிப்படைகளைத் தந்தது; இரண்டாவது அகிலம் இந்த இயக்கத்தை பல்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்தியது; மூன்றாம் அகிலம் தன்னிலிருந்து சந்தர்ப்பவாதத்தை வெளியேற்றி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் அவசியத்தை அங்கீகரித்ததன் மூலம் புதிய சகாப்தத்தைத் தோற்றுவித்து உள்ளது என்று சுட்டிக் காட்டினார்.

கம்யூனிஸ்ட் அகிலத்திற்கான லெனினது பங்களிப்புகள் அனைத்திலும் சந்தர்ப்பவாதத்தையும், குட்டி முதலாளித்துவ இடதுசாரிப்போக்கையும் அது மக்களிடமிருந்து கம்யூனிஸ்டுகளைத் தனிமைப்பட்டுப் போகச் செய்வதாகையால் எதிர்த்துப் போராட வேண்டியதை வலியுறுத்துகிறார். (பார்க்க: லெனின் இடதுசாரிக் கம்யூனிசம் ஒரு இளம் பருவக் கோளாறு)மூன்றாம் அகிலத்தின் பணிகள் (1919 ஜூலை) என்ற பிரசுரத்தில் மிக முக்கியத் தேவைகளாக கீழ்க்கண்டவற்றைச் சுட்டிக் காட்டுகிறார்:

1.சீர்திருத்தத்துக்கும் புரட்சிக்கும் இடையிலான வேறுபாட்டை திட்டவட்டமாக விளக்குதல். அதே வேளையில் சீர்திருத்தங்கள், முதலாளித்துவ நாடாளுமன்றங்களில் பங்கேற்பது ஆகியவற்றை நிராகரிக்காது இருப்பது.

2. சட்டபூர்வ – சட்ட விரோத வேலைகளை இணைப்பது.

3. தொழிலாளர் இயக்கத்திலிருந்து சந்தர்ப்பவாதிகளை வெளியேற்றப் பணிபுரிவது.

4. காலனிய விடுதலைக்கான புரட்சிப் போராட்டங்களுக்காகத் துணை புரிவது.

5. புரட்சிகர முழக்கங்களினால் எதிர்புரட்சிகரச் செயல்களை மூடி மறைக்க முயல்பவர்களை அம்பலப்படுத்துவது.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது பேரவையின் (1920) போது லெனின் “கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது பேரவையின் அடிப்படை கடமைகள்” பற்றிய படிவத்தைத் தயாரித்தார்.

அதில் சோசலிசத்தில் வெற்றிக்கான தேவைகளாக

1. சுரண்டுபவர்களைத் தூக்கியெறிவது, ஒடுக்குவது;

2. கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமைக்குத் தொழிலாளர்களை வென்றெடுப்பது; தொழிலாளி வர்க்கத்தின் வாழ்விலிருந்து கட்சியைத் தனியாகப் பிரிக்க முடியாத அளவுக்கு மாற்றுவது;

3. ஊசலாட்டப் பிரிவுகளை நடுநிலைப்படுத்துவது – ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றார்.மேலும், கம்யூனிஸ்டுகள் இந்த நிலைமைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தங்கள் பிரதான எதிரிகள் சந்தர்ப்பவாதிகள்தான் என்பதை உணர வேண்டும் என வலியுறுத்துகிறார்.

இரண்டாவது பேரவையில் “சர்வதேசிய நிலைமைகளும், கம்யூனிஸ்ட் அகிலத்தின் அடிப்படைப் பணிகளும்” என்ற அறிக்கையில் போருக்குப் பிந்திய அரசியல், பொருளாதார நிலைமைகளை விரிவாக ஆராய்கிறார்.

இதே காங்கிரசில் “கம்யூனிஸ்ட் அகிலத்தில் இணைவதற்கான நிபந்தனைகளை” லெனின் வரையறுத்தார். இந்த உரையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கும் சீர்திருத்தவாதக் கோட்பாடான அதிகாரத்தை வெல்வது என்பதற்குமிடையிலான வேறுபாடுகளை விளக்கினார்.

இதைப் போன்றே “விவசாயப் பிரச்சினை பற்றிய ஆய்வுகள்”, “தேசிய, காலனிய பிரச்சினை பற்றிய ஆய்வுகள்” ஆகியவற்றையும் படைத்தளித்தார். இதில் முன்னது விவசாயி வர்க்கத்துடனான கூட்டினை விளக்குகிறது.

“கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம்” என்ற உரையில் பிரிட்டிஷ் பிரதிநிதிகளான டானர், மெக் க்லேன் (Tanner, Mc Claine) ஆகியோருக்கு பதிலளிக்கையில் உணர்வுபூர்வமான புரட்சிகரச் சிறுபான்மை மக்களை வழிநடத்தும் வண்ணம் கட்சியைக் கட்ட வேண்டும் என்றார். மேலும் பிரிட்டிஷ் பொதுவுடைமைக் கட்சியை தொழிலாளர் கட்சியுடன் இணைப்பது பற்றிய பிரச்சினையையும் அவர்களுக்கு விளக்கினார்.

இதே சமயத்தில் எழுதிய “சுதந்திரம் பற்றிய போலிப் பேச்சுகள்” என்ற கட்டுரையிலும் சந்தர்ப்பவாதத்தை நிராகரிக்க வேண்டியது பற்றிக் கூறுகிறார். “கம்யூனிஸ்ட் அகிலத்தின் போர்த்தந்திரங்களை ஆதரித்து” என்ற உரையிலும் (1921) கட்சி மக்களின் மனங்களை வெல்ல வேண்டும். அதாவது, பெரும்பான்மை தொழிலாளி வர்க்கத்தை வெல்லவேண்டும். இந்தப் பெரும்பான்மை வெல்லப்படாவிடில் சோசலிசத்தின் வெற்றி சாத்தியமில்லை எனக் குறிப்பிடுகிறார்.

இக்கருத்தையே “ஜெர்மன் கம்யூனிஸ்டுகளுக்கு எழுதிய கடிதத்”திலும் திரும்பக் கூறுகிறார்.

ஆக நமக்கான பணியானது ஆசான்கள் வகுத்துக் கொடுத்துள்ளனர் அதனை புரிந்து நமது நாட்டிற்கேற்ற வகையில் பங்காற்ற வேண்டியவர்கள் பாட்டாளி வர்க்க கட்சியை புரட்சியில் ஈடுபடுத்த உடன்படுபவர்களின் பணியே.- சிபி.

மூலம்:- மார்க்சிய மூலநூல்களுக்கு வாசகர் வழிகாட்டி ஆசிரியர் மாரிஸ் கார்ன் ஃபோர்த் அவர்களுக்கு நன்றி உரித்தாகுக.

மார்க்சிய மூலநூல்களுக்கு வாசகர் வழிகாட்டி எனும் நூல் PDF வடிவில் இந்த இணைப்பை அழுத்தி பெற்றுக் கொள்ளலாம்

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்