சமூக விதிகளை வளர்ச்சி போக்கில் புரிந்துக் கொள்வோம்-சிபி.

 உற்பத்தி உறவு பற்றி தெரிந்துக் கொள்வோம் பிறகு விவாதிக்க

மக்கள் உயிர் வாழ உணவு, உடை, வீடு போன்றவை தேவை.உணவு சமைக்க விறகு, கரி, எரிவாயு, மண்ணெண்ணெய், மின்சாரம் போன்றவை இன்றியமையாதவை.மனிதன் ஓரிடத்திலிருந்து வேருேர் இடத்துக்குப் பயணம் செய்ய வண்டிகள், ஊர்த்திகள் வேண்டும்.இவை போன்ற எண்ணற்ற பொருட்களை மக்கள் நாள் தோறும் பயன்படுத்துகின்றனர்.இவற்றைத் தோற்றுவிக்கக் கருவிகள் வேண்டும். இதனை உற்பத்திக் கருவிகள் என்பர்.

உற்பத்திக் கருவிகள்
++++++++++++++++
இக்கருவிகளைக் கையாளுதற்குரிய வேலைத்திறன் அனுபவ அறிவு பெற்ற மக்கள் வேண்டும். உற்பத்திக் கருவிகளையும் இவற்றைக் கையாளும் மக்களையும் உற்பத்தி சக்திகள் என்று குறிப்பிடுவர்.

பொருளுற்பத்திக்காக உழைக்கும் உழைப்பின் சிறப்பே மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டியது. உழைப்பு மனிதனை இரட்டை உறவில் ஈடுபடுத்துகிறது. ஒன்று இவனது இயற்கைச் சூழலுடனுள்ள (மனிதனுக்கும் உற்பத்திக் கருவிகளுக்குமுள்ள) உறவு இஃது உற்பத்தியில் - படைப்பில் - ஒரு பகுதியே. பொருளுற்பத்தியில் ஈடுபடும் பொழுது அதில் ஈடுபடுகின்ற மனிதர்களுக்கிடையே நிலவும் உறவு மற்றொன்று. இவ்வுறவை உற்பத்தி உறவென்பர்.

உற்பத்தி முறை
+++++++++++++
மனிதன் இயற்கையோடு போராடுதல், இயற்கையைப் பயன்படுத்துதல் என்ற இரு நிலையிலுள்ளான். சமுதாய வாழ்வில் தனிமனிதனாக நின்று இயற்கையோடு போராடுதலோ இயற்கையைப் பயன்படுத்துதலோ இயலாத செயல். கூட்டாகச் சேர்ந்துதான் - ஒத்துழைத்துத் தான் - பொருட்களைச் செய்கிறார்கள். குழுக் குழுவாகவும் சமூகம் சமூகமாகவும் இணைந்துதான் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். உற்பத்தியில் ஈடுபடும் மக்களிடையே ஓர் உறவில்லாமல் பொருட்கள் உற்பத்தியாவதில்லை. இவ்வுறவு ஏதாவதொரு முறையிலிருக்கலாம். ஒருவனை ஒருவன் ஆதிக்கம் செலுத்தி, அடக்கி ஆளும் உறவாகவோ, ஒருவனுக்கொருவன் அடிமைப்பட்டிருக்கும் உறவாகவோ அவை அமையலாம். ஒருவன் மற்றவர்களை அடக்கி ஆளவும் மற்றவர்கள் அடங்கிப் போகவும் - அடிமைப்பட்டுக் கிடக்கும் நிலையையும், சமுதாயத்தில் காண்கிறோம். ஏன்? இதனை விதியென்று சொல்லித் தட்டிக்கழிப்பாரும் - திசை திருப்புவோரும் உளர். 'ஒருவனுடைய உடல் வலிமையும் - அவனிடமுள்ள போர்க் கருவியும் மற்றவர்களையும் அடிமைப்படுத்திற்று எனலாமா? அன்று. யார் வேண்டுமானலும் ஒருவனை அடிமைப்படுத்தவோ . அவனைப் பயன்படுத்தவோ - இயலாது. ஓர் அடிமையைப் பயன்படுத்த வேண்டுமானல் ஒருவர் இருவகைப்பட்ட பொருட்களை வைத்திருத்தல் வேண்டும். முதலாவதாக இவரது அடிமையின் உழைப்புக்கான கருவிகளும் பொருட்களும். மற்றொன்று அவனது பிழைப்புக்கான குறைந்த சாதனங்கள். எனவே அடிமைத்தனம் சாத்தியமாவதற்கு முன்னால் உற்பத்தியில் ஒரு குறிப்பிட்ட மட்டத்தை எட்டியிருத்தல் வேண்டும். உற்பத்திப் பொருட்களைப் பங்கீடு செய்தலில் ஒரளவு சமத்துவமின்மை ஏற்கனவே நிலவியிருத்தல் வேண்டும்’ இவையின்றி ஒருவனை அடிமையாக்கி வைத்திருத்தல் இயலாது.' 
எனவே, உற்பத்தி உறவுகளின் தன்மை எப்படியும் இருக்கலாம். உற்பத்தி சக்திகளும் உற்பத்தி உறவுகளும் உறுப்பாய் நின்று சமுதாய அமைப்பை உருவாக்குகின்றன. உற்பத்தி சக்திகளும் உற்பத்தி உறவுகளும் இணைந்து உற்பத்தி முறையாகிறது.
இயக்கவியல்
இவ்வுற்பத்தி முறை என்றும் ஒரே தன்மையாக இருந்ததில்லை என்றும் மாறி மாறி வந்திருக்கிறது. உற்பத்திமுறையில் ஏற்படும் மாறுதல்கள் சமுதாய அமைப்பு முறை, சமுதாயக் கருத்துக்கள், சமுதாய நடைமுறைகள், அரசியல் கருத்துக்கள், அரசியல் அமைப்புக்கள் முழுவதிலும் பற்பல மாற்றங்களை நிகழ்த்துகின்றன. இவற்றைச் சமுதாய வரலாறு நமக்கு அறிவிக்கிறது. இவை தவிர்க்க முடியாதவை; நிகழ்ந்தே தீருபவை. இவற்றை மாற்றியவை - மாற்றத்துக்கு அடிப்படையானவை என்ன? உற்பத்தியுறவில் ஏற்படும் மாற்றமே இவற்றின் மாற்றத்துக்கான காரணமாகவும் மையமாகவும் அமைகின்றன. இஃது உற்பத்தியின் ஒரு பண்பு.

மனிதனின் வாழ்க்கை முறை வாழ்வியல் எப்படியிருக்கிறதோ அதை மையமாக வைத்தே அவன் சிந்தனைமுறையும் அமையும். எப்படி வாழ்கிறனே அப்படியே சிந்திக்கிறான். வாழ்க்கை முறையின் வரலாறும் - சமுதாய வளாச்சியின் வரலாறும் உற்பத்தி எவ்வாறெல்லாம் வளர்ந்தது, உற்பத்தி உறவுகள் எப்படியிருந்தன என்பதைப் பற்றிய வரலாறு தான். உழைப்பாளி மக்கள்தான் உற்பத்தித் துறையில் முதன்மையான ஆற்றலாக உள்ளனர். அவர்கள் தான் சமுதாயம்உயிர்வாழ்வதற்குத் தேவையான பொருட்களை படைக்கின்றனர். சமுதாய வரலாற்றைத் தெரிந்துகொள்ள அச்சமுதாயத்தில் நிலவிய அன்றைய உற்பத்திமுறையை ஆய்தல் வேண்டும். அதாவது சமுதாயத்தின் பொருளாதார வாழ்வை ஆய்வு செய்தல் வேண்டும்.
உற்பத்திக் கருவிகளில் வளர்ச்சியும் மாறுதலும் நிகழ்ந்து கொண்டே யிருக்கின்றன. ஏன்? மக்கட்கு வேண்டிய நுகர் பொருட்களின் தேவை வர வரப் பெருகிக்கொண்டே போகிறது. அவற்றின் தேக்கத்தைச் சமுதாயம் ஏற்றுக்கொள்வதில்லை. உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி - மாறுதல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு மனிதர்களிடையே உற்பத்தி உறவுகள் பொருளாதார உறவுகள் மாறுகின்றன.
உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சிக்கேற்ப உற்பத்தி உறவுகளிலும் மாற்றம் நிகழ்தல் வேண்டும். ஆனால் பல்வேறு சமயங்களில் உற்பத்தி உறவில் ஒத்த மாற்றம் நிகழாமல் தேக்கம் ஏற்படுகிறது. இத் தேக்கம் நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்க முடியாது. இவை உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சிக்கும் மாற்றத்துக்கும் ஏற்ப மாறியே தீர வேண்டும். இது சமுதாய விதி. இன்றேல் உற்பத்தி முறையின் கட்டுக்கோப்புக்குள்ளேயே உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கு மிடையேயுள்ள ஒற்றுமை குலையும். இஃது உற்பத்தியைச் சீர்குலைத்து அதிலொரு நெருக்கடியைத் தோற்றுவிக்கும். புரட்சி
 உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கும் மாற்றத்துக்குமேற்ப உற்பத்தி உறவில் மாற்றம் நிகழ்ந்தே தீரவேண்டும். இன்றேல் ஒரு சமுதாயப் புரட்சி ஏற்பட்டே தீரும். அப்புரட்சி உற்பத்திக் கருவிகளின் மாற்றத்துக்கேற்ற ஒரு புதிய - பொருத்தமான - ஒர் உற்பத்தி உறவைக் கொண்டுவரும்: நிலை நிறுத்தும். முட்டையின் ஒடு பாதுகாப்பாக அமைகிறது. குறிப்பிட்ட காலத்தில் அக்கரு குஞ்சாக மாற்றம் பெறுகிறது. அக்குஞ்சுக்கு முன்பு பாதுகாப்பாக இருந்த ஒடே அதன் வளர்ச்சிக்கு இன்று இடையூருக இருக்கிறது. உள்ளிருக்கும் குஞ்சு ஓட்டை உடைத்துக் கொண்டு வெளியேறுகிறது. குஞ்சு உயிர்வாழ வேண்டுமேல் முட்டை யின் ஒடு உடைபடுவது இன்றியமையாதது. இதுவே இயற்கையா னது - சரியானது - என்போம். இதில் எவருக்கும் கருத்து முரண் பாடிருக்க நியாயமில்லை. முன்னேற்றம் தனி மனிதர்கட்கு மட்டு மின்றி ஒரு சமுதாயத்துக்கே இன்றியமையாதது. தனி மனிதனின் நிலையான முன்னேற்றம் சமுதாய முன்னேற்றத்தில் - மாற்றத்தில்இணைந்திருக்கிறது. சமுதாய அமைப்பிலும் முன்னேற்றமான உற்பத்தி உறவுக்குச் செல்லும் பொழுது பின்தங்கிய - வளர்ச்சிக்கு இடையூறான - உற்பத்தி உறவைத் தூக்கி எறிந்துவிடுதல் என்பது இயல்பானதே. அது போலத்தான் எந்த உற்பத்தி உறவு ஒரு காலத்தில் தனக்குப் பாதுகாப்பாக இருந்ததோ அதே உறவு இப்பொழுது சமுதாய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக அமைகிறது. எனவே பழைய - படுபிற்போக்கான - உற்பத்தி உறவை உடைத்தெறிந்து விட்டுப் புதிய உற்பத்தி உறவை உருவாக்குகின்றனர். இதனைத்தான் புரட்சி என்கிறோம். எனவே, புரட்சி என்பது சமுதாயத் தேவை. நடந்து தீரவேண்டிய ஒரு சமுதாய நிகழ்ச்சி. இப்புரட்சியின் வழியாக பழைய உற்பத்தி உறவுகள் அழிந்து உற்பத்தி சக்திகளின் தன்மைக்குப் பொருத்தமான ஒரு புதிய உற்பத்தி உறவு உருவாக்கப் படும். இதைப் புரட்சியின் வழியாகவே நிறைவேற்ற முடியும். இதை ஏன் சிலர் ஏற்றுக்கொள்வதில்லை? எதிர்க்கின்றனர்? அவர்கள் யார்? என்ற வினாக்கள் நிரல்பட நம் மனக்கண் முன்னிற்கலாம். இருதுறை அறிவியல்
சமுதாயத்தை அறிவியல் நோக்கில் - அணுகுமுறையில் பார்ப்ப
தும் படிப்பதும் சரியான முறையாகும். அறிவியல் இரு வகைப்படும் இயற்கை அறிவியல், சமூக அறிவியல் என்பன அவை,
இயற்கை அறிவியல்:
பெளதிகவியல் (Physics), இரசாயனவியல் (Chemistry) போன் றவை. உற்பத்தி சக்திகளைப் பற்றி விளக்குவன. பண்ட உற்பத்தியைப் பெருக்கவும் பெரும் பொருளிட்டவும் பயன்படும். ஆளும் வர்க்கமும் அரசும் இதில் பெருங் கவனம் செலுத்துதலும் பெரும் பணஞ் செலவிடலும் இயல்பே.
சமூக அறிவியல்
மானிடவியல், தொல்பொருளியல், பொருளாதாரம், வரலாறு, கலை இலக்கியம், நீதி போன்றவை இவற்றுள் அடங்கும். இவை அறிவியல் முறையில் கற்றுத்தரப்படவில்லை. ஏன்? இவை உற்பத்தி உறவுகளைப் பற்றியும் அதைப் பாதுகாத்து நீதிப்படுத்தும் மேல்மட்ட அமைப்புக்களைப் பற்றியும் அல்லவா தெளிவுறுத்துகிறது.
நாம் சமூகத்தை நன்கு தெரிந்துகொள்ள அந்தந்தச் சமூகத்தில் நிலவிய உற்பத்தி முறைகளில் தெளிவு பெறுதல் இன்றியமையாதவை. கவிஞனையோ, எழுத்தாளனையோ சிந்தனையாளனையோ அடையாளங் காண சமுதாயத்தைப் பற்றிய தெளிவு இன்றியமையாதது. சமூதாயம் என்றும் மாறிக் கொண்டிருப்பது. அவற்றில் வளர்ச்சி, மாற்றம் ஆகியவை பற்றிய அறிவு நமக்குத் தேவை. வளர்ச்சிக்கும், மாற்றத்துக்கும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும் மாற்றமும் உந்து சக்தியாய் அமைகின்றன. இவையே உற்பத்தி உறவுகளை வரையறுக்கின்றன.
ஒன்றுக்கு மேற்பட்ட உற்பத்தி முறைகள் சமுதாயத்தில் இருக் கும்பொழுது அதில் ஏதாவது ஓர் உற்பத்தி முறைதான் ஆளுமை செலுத்துவதாயிருக்கும். அதைச் சார்ந்தே அரசும் இருக்கும். ஓர் அரசு எல்லா மக்கட்கும் பொதுவானது என்பது பொய்மைத் தோற்றந்தானே. அவ்வாறாயின் அத்தோற்றத்திற்கு ஓர் அடிப்படை இருக்கு மல்லவா?
உழைப்புச் சக்தியை ஒருவன் மற்றொருவனுக்கு விற்கிருன்.
உற்பத்தியான பொருட்களைச் சந்தையில் - கடையில் - யார் வேண்டுமானலும் வாங்கலாம்?
இவை அனைத்து மக்கட்கும் பொது. இதில் அனைவர்க்கும் சுதந்திரம் உண்டு. அரசு அனைத்து மக்கட்கும் பொதுவானதுபோல் தோன்றுவதும், அரசு அனைத்து மக்களின் சார்பானது என்ற உணர்வும் இதிலிருந்துதான் தோன்றின. உற்பத்தி முறையில் ஆளுமை செலுத் தும் வர்க்கத்திற்கு தொண்டு செய்யும் - பாதுகாப்பளிக்கும் - முறை யில்தான் அரசு அமைப்பே இருக்கும்.
ஐந்து வகை உற்பத்தி உறவுகள்
ஐந்து வகைப்பட்ட உற்பத்தி உறவுகள் இதுவரை சமுதாயத்தில் நிலவின;-
1. தொன்மைப் பொதுவுடமை முறை 2. அடிமைச் சமுதாய முறை 3. பிரபுத்துவ முறை 4. முதலாளிய முறை 5. சோசலிச முறை
தொன்மைப் பொதுவுடைமை முறையில் உற்பத்திக் கருவிகள் சமுதாயத்தில் உடைமையாக இருந்தன. அன்றைய மனிதன் பட்டி னிக்கு இரையாகிச் சாகாமல் இருக்கவும் - கொடிய விலங்குகட்கு இரையாகாது தப்பிக்கவும் - அக்கம்பக்கத்து மக்கள் கூட்டத்தால் அழிக்கப்படாமல் தவிர்க்கவும் அவர்கள் பொதுவாக உழைக்கவும் உற்பத்திப் பொருட்களைப் பொதுவாக நுகரவும் செய்தனர். இங்கு உற்பத்தி மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்தது. சொந்தப் பயன்பாட்டுக்கு மட்டுமே பொருள் உற்பத்தி செய்யப்பட்டது. சமூகம் வெறும் உயிர்ப் பிழைப்புக்கு மட்டுமே போராடிக்கொண்டிருந்தது. அதனை அந் நிலை யில் வைத்துப் பாதுகாக்கவே சமூக முழுமையின் ஒருங்கிணைந்த முயற்சி யோடு கூடிய உழைப்புத் தேவைப்பட்டது. உழைப்புப் பொதுவாயிருந் தது போலவே நுகர்வும் பொதுவாய் இருந்தது. உபரி ஏதுமில்லை. உற்பத்தி தாழ்ந்த நிலையில் இருந்ததால் அச்சமுதாயத்தின் தனிப்பட்ட உறுப்பினர்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து சுதந்திரமாக உயிர் பிழைத்திருக்க முடியாது. இவ் உண்மையின் காரணமாகவே சமூகத் தில் கூட்டமைப்பு நிலவியது. வெளிக் குழுக்களுடன் தொன்மைப் பொதுவுடமைச் சமுதாயத்தில் பண்டமாற்றுச் செய்யும் தேவை காலப்போக்கில் தோன்றியது. இச்சமுதாயத்தில் பிந்திய கட்டத்தில் உற்பத்திப் பொருட்கள் மேலும் மேலும், மிகுதியாக பண்டவடிவத்தை அடைந்தன. அதாவது அவை உற்பத்தி செய்வோரின் சொந்தத்துக்குப் பயன்படும் உற்பத்தி முறை குறைந்தது. பண்ட மாற்று நோக் கத்திற்காக மிகுதியாக உற்பத்தி செய்யப்பட்டன. தொடக்ககால உழைப்புப் பிரிவினை சமுதாயத்துக்குள்ளேயான பண்டமாற்று வழியாக அகற்றித் தள்ளப்பட்டது. அவை எந்த அளவுக்கு மிகுதியாக வளர்ந்தனவோ அந்த அளவுக்கு சமுதாயத்தின் தனிப்பட்ட உறுப்பினர் கட்குச் சொந்தமான உடைமையில் சமத்துவமின்மை ஏற்றத் தாழ்வு வளர்த்தது. நிலமீதான பழைய பொதுவுடைமை மிகுதியாகக் குலைக்கப்பட்டது. 
பண்டமாற்று :
காலப்போக்கில் ஒரு குழு வெளிக் குழுக்களுடன் - ஒருவருக் கொருவர் ஒப்புக்கொள்ளப்பட்ட - பண்ட மாற்றுச் செய்யும் தேவை தோன்றியது. பண்டமாற்றுச் செய்தவை உபரிப் பொருட்களே. இப் பண்ட மாற்றில் ஓர் உண்மை தொக்கி நிற்பதை நாம் நினைவு கூர்தல் வேண்டும். பண்ட மாற்றில் ஈடுபடும் ஒவ்வொருவரும் மற்றவருடைய தனிவுடைமையை ஏற்றுக்கொண்டனர். அவ்வாறு ஏற்றுக் கொண்டதால் தான் பண்ட மாற்று மேலும் மேலும் வளர்ந்தது. உற்பத்தியாளர்கள் பண்டமாற்று நோக்கங்கருதிப் பொருட்களை முறையாக உற்பத்தி செய்யத் தொடங்கினர். அப்பொழுதுதான் பண்டங்கள் புழக்கத்துக்கு வந்தன. நம் தமிழகமும் இம்முறையைக் கடந்து வந் திருப்பதைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக உணரலாம். இடையன் பாலைக் கொடுத்து அதற்கீடாக தானியத்தை மாற்றிக் கொண்டதை யும் (குறுந். 22 1: 3-4), தயிரையும் மோரையும் மாற்றித் தானியத் தைப் பெற்று உணவு சமைத்துண்டதையும் (பெரும்பாண் 155-163), வேடன் தான் வேட்டையாடிக் கொண்டுவந்த மான் இறைச்சியை உழவனிடத்தில் கொடுத்து அதற்கீடாக நெல்லை மாற்றிக் கொண்ட தையும் (புறம் 336; 1-8), பாணர் உள்நாட்டு நீர் நிலைகளில் வலை வீசியும் தூண்டிவிட்டும் பிடித்த மீனைப் பாண் மகளிர் பயற்றுக்கும் தானியத்துக்கும் மாற்றியதையும் (ஐங்குறு. மருதம் புலவிப்பத்து 47) உப்பு வாணிகர் மாட்டு வண்டிகளில் நெல்லைக் கொண்டு வந்து கொடுத்து உப்பை மாற்றிக்கொண்டு போனதையும் (நற்றிணை 183); உமண பெண்கள் உப்பை நெல்லுக்கு மாற்றியதையும் (அகம் 140; 5 - 8; அகம் 390; 8 - 9), சங்க நூல்களில் பரக்கக் காணலாம்.
தொடக்கக் கால உழைப்புப் பிரிவினை சமுதாயத்துக்குள்ளேயே மலர்ந்து பண்டமாற்று வழியாக அகற்றித் தள்ளப்பட்டது. இவை எந்த அளவுக்கு மிகுதியாக வளர்ந்தனவோ அந்த அளவுக்குச் சமுதாயத்தின் தனிப்பட்ட உறுப்பினர்கட்குச் சொந்தமான உடைமையில் ஏற்றத் தாழ்வு மிகுந்தது. நிலமீதான பழைய பொதுவுடமை மிகுதியும் குலைக்கப்பட்டது. பொருள் உற்பத்தி தனிப்பட்ட மனிதர்களின் கைக்குத் தள்ளப்பட்டது அவ்வாறு உற்பத்தியான பொருட்கள் கூட்டுப் பகிர்ந்தளிப்பாக இருந்தது. எனவே இவற்றுக்கிடையே முரண்பாடு தோன்றிற்று. சமுதாயம் ஒரு புதிய உற்பத்தி உறவை நோக்கித் தள்ளப்பட்டது.
அடிமைச் சமுதாய முறை:
அடிமை என்றால் என்ன என்பதைத் தெளிவு படுத்திக்கொள்ளுதல் இன்றியமையாமை.
1. இங்கு உற்பத்தி சக்தியை விற்கும் உரிமை எம் மனிதனுக் கும் இல்லை. 
2. அடிமையின் உழைப்பின் உபரி முழுமையும் அவன் சொந்தக்காரனால் பறிக்கப்பட்டது.
உற்பத்திச் சாதனங்கள் அடிமையின் சொந்தக்காரனுக்குச் சொந்தம். அதுபோலவே உழைப்பாளியாகிய அடிமையும் அவனுக்குத்தான் சொந்தம். விலங்குகளை விற்பது வாங்குவது போலவே அடிமையையும் விற்கவும் வாங்கவும் - அவன் பொருளுற்பத்தி செய்ய வலுவற்ற போது அவனுக்கு உணவும் உடையும் கொடுக்க விரும்பாமல் அவனைக் கொல்லவும் அவன் சொந்தக்காரன் உரிமை பெற்றிருந்தான். அதாவது சமுதாயம் இதனை - நீதி - சரியானது - என்று நம்பிற்று, நம்பவைக்கப்பட்டது. இவைதான் அடிமைச் சமுதாய முறையில் நிலவிய உற்பத்தி உறவுகளுக்கு அடிப்படை. அக்கால உற் பத்தி சக்திகளின் நிலைக்கு அவ்வுற்பத்தி உறவுகள் மொத்தத்தில் பொருத்தமாகவே இருந்தன. கல்லாயுதங்கட்குப் பதிலாக உலோக ஆயுதங்கள் வந்தன. பண்டைக்கால வேடன் மேய்ச்சலையோ உழு தொழிலையே அறியான். அவனிடமும் மிகமிகப் பின்தங்கிய நிலையில் வேளாண்மை இருந்தது அம்மிகப் பின்தங்கிய வடிவிலுள்ள அவ்வேளாண்மைக்குப் பதில் மேய்சலும், உழு தொழிலும், கைத் தொழிலும் தோன்றின. இவ்வுற்பத்தித்துறைகளிடையே வேலைப் பிரிவினை யும் தோன்றியது.
மனிதர்களிடையேயும், சமூகங்களிடையேயும் பண்டங்களின் பண்டமாற்று முறை நிலவும் நிலை தோன்றியது. பண்டத்தின் முதல் உருமாற்றம் இங்குத்தான் தொடங்கிற்று பண்டம் என்ற நிலை கடந்து பணம் என்ற நிலைக்கு மாறுகிறது. பணம் பண்டமாக மாறுதலும் இதனுள் அடங்கியிருக்கிறது. சங்கப் பாடலின் ஒரு பகுதி இதனை நமக்கு வலியுறுத்துகிறது.
இடைச்சியர் நெல்லைப் பண்டமாற்றுச் செய்வதைக் கைவிட்டனர். காசுக்கு விற்று அக்காசுகளைச் சேமித்து வைத்தார்கள். குறிப்பிட்ட தொகையாக காசு சேர்ந்தபோது அக்காசைக் கொடுத்துப் பசுவையும், எருமையையும் விலைக்கு வாங்கினார்கள் என்கிறது பெரும்பாணுற்றுப்படை.
நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள் எருமை நல்லான் கருநாகு பெறுர உம் மடிவாய்க் கோவலர். ( பெரும்பாண் 164 - 166)
பண்டம் பணமாகிப் பின் அதுவே பண்டமாக மாறும் நிலை தோன்றியதால் சமுதாயம் என்றும் கண்டிராத ஒரு புது நிலையைக் கண்டது. ஒரு சிலர் கையில் செல்வம் குவியும் நிலையே அப்புதிய நிலை. ஒரு சிறுபான்மைக் கூட்டத்தின் கையில் உற்பத்திக் கருவிகள்-நடை முறையில் - குவியும் நிலை தோன்றியது. பெரும்பான்மையான மக்களை ஒரு சிறுபான்மைக் கூட்டம் அடக்கும் நிலையும் அப்பெரும்பான் மையான மக்கள் அடிமைகளாக மாற்றப்படுவதற்குரிய நிலையும் தோன்றின. உற்பத்தித்துறையில் சமூக உறுப்பினர்கள் அனைவரும் ஈடுபட்ட ஒரு பொது உழைப்பை - சுயேட்சையான உழைப்பை-அங்கு காணவே முடியாது. அடிமைகளைக் கட்டாயப்படுத்தி வாங்குகிற கட்டாய உழைப்புத்தான் இங்கு நிலவியது. உழைக்காத அடிமையின் சொந்தக்காரன் அடிமைகளின் உழைப்பைச் சுரண்டினர். எனவே இங்கு உற்பத்திக்கருவிகளும் உற்பத்தியின் பயனும் தனிவுடைமையாயிருந்தது. அடிமைக்கு இதனால் உற்பத்தியில் - அதனைப் பெருக்குவதில்-ஆர்வ மில்லை. இப்பெரும் பிற்போக்கான உற்பத்தி முறையிலிருந்து சமுதாயம் அடுத்த உற்பத்தி முறைக்கு அடியெடுத்து வைத்தது.

நவீன காலத்திலே "திறனுய்வு” என்னும் சொல் குறிப்பதையே முற்காலத்திலும் இலக்கண நூல்கள் குறித்தன என்பதற்கில்லை. பண்டைக் காலத்தில்” அணியிலக்கணம் திறனுய்வின் ஒரு பகுதியையே சிறப்பாக ஆராய்ந்தது; உவமை, உருவகம் முதலியன செய்யுளுக்கு அழகு செய்வனவாய் - மெருகூட்டுவனவாய் - அமைவன என்பதே அணியிலக்கணத்தின் அடிப்படைக் கருத்தாகும். ஆனால், இன்று நாம் திறனாய்வு எனக்கருதுவது அணியிலக்கணத்தை மட்டுமன்று. அழகை சுவைப்பதுடன், அதனோடு பிரிக்க இயலாதவாறு பிணைக்கப்பட்டிருக்கும் செய்திகளையும் சிந்தனைகளையும் கருத்துருவங்களையும் கண்டுகொள்வதும் அவற்றை மதிப்பிடுவதும் அவற்றுக்கு விளக்கம் உரைப்பதும் திறனாய்வின் பண்பும் பயனும் ஆகும். - 
தொடரும்....
மூலம் க. கைலாசபதியின் கட்டுரைகளின் தொகுப்பிலிருந்து

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்