பேராசிரியர் ராகுல சங்கிருத்தியாயன் -மணிக்குரல்

 

இந்தியப் பேரிலக்கியத்தின்

மணிமுடியாகத் திகழும் ராகுல்ஜியின்

“வால்காவிலிருந்து கங்கை வரை”

Ragula sanki

பேராசிரியர் ராகுல சங்கிருத்தியாயன் இந்தியா உலகிற்கு வழங்கிய பேரறிஞர்கள் வரிசையில் முன்னணியில் இருப்பவர். சுமார் 36 மொழிகளைத் தெரிந்திருந்த அவர், 150 நூல்கள் வரை படைத்துள்ளார். இந்நூல்களில் அவரது புகழ்பெற்ற படைப்பான ‘வால்காவிலிருந்து கங்கைவரை’ தமிழில் இதுவரை 25க்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டிருக்கிறது. இந்த நூலில் கி.மு.6000த்திலிருந்து 20ம் நூற்றாண்டு வரையிலான மனித சமுதாய வளர்ச்சியை, ஆதாரபூர்வமான தகவல்களுடன் 20 கதைகளாகப் படைத்துள்ளார். இந்த நூல் தமிழர்கள் உட்பட இந்தியாவின் அனைத்து இனங்களையும் சேர்ந்தவர்கள,; தமது முற்போக்கு சிந்தனையை வளர்;த்துக் கொள்வதில் அரிச்சுவடியாகப் பயன்பட்டு வருகிறது. இந்த நூலை முதன்முதலில,; தமிழ்ப் புத்தகாலயத்தின் அதிபரும், சமூக நோக்கு கொண்ட பெரியாருமான கண. முத்தையா அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். கண. முத்தையா அவர்கள் 1949ல் இந்நூலின் முதல் பதிப்பை வெளியிட்ட போது எழுதிய, வாசகர்களுக்கான குறிப்புரையை அதன் முக்கியத்துவம் கருதி கீழே தந்திருக்கின்றோம்.

பேரறிஞர் ராகுல சங்கிருத்தியாயன் இலங்கையில் வித்தியாலங்கார பல்கலைக்கழகத்திலும், சோவியத்யூனியனின் லெனின்கிராட் பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கண.முத்தையா அவர்கள் எழுதிய ‘வாசகர்களுக்கு’ என்ற தலைப்பிலான கருத்துரை வருமாறு:

பேராசிரியர் ராகுல சங்கிருத்தியாயன் தமிழ் உலகத்திற்கு புதியவரல்ல. அவருடைய “பொது உடைமை தான் என்ன?” என்ற நூலைப் படித்தவர்கள் ஒவ்வொருவரும், இந்த அறிவுக் கடலின் சிறு பகுதியையேனும் பார்த்திருப்பார்கள். பிள்ளைப் பருவத்திலேயே அறிவுத் தாகமெடுத்த ராகுல்ஜி அறிவைச் சேகரிப்பதற்காக உலகத்தின் மூலை முடுக்குகளையெல்லாம் சுற்றியிருக்கிறார். ஐக்கிய மாகாணத்தில் ஆஜம்கட் ஜில்லாவைச் சேர்ந்த ஒரு சிறு கிராமத்திலே பிறந்த அவர், காசி நகரிலே தொடங்கிய தமது அறிவு சேகரிக்கும் முயற்சியை லெனின்கிராடு சர்வகலாசாலைப் பேராசிரியர் பதவியைப் பெற்ற பிறகுங்கூடத் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார். ஆயுள் முழுவதும் உழைத்துச் சேகரித்த அறிவுப் பொக்கிசத்தை அவருடைய நூல்களிலே அள்ளித் தந்திருக்கிறார்.

சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் முதலியவைகளைப் பற்றித் தத்துவ ரீதியாக, “மனித சமுதாயம்” என்ற ஒரு பெரிய நூலை எழுதியிருக்கிறார். அவரே கூறியிருப்பதுபோல், அந்த முக்கிய பிரச்சினைகளைச் சாதாரண சனங்களும் புரிந்து கொள்வதற்காக இந்த “வால்காவிலிருந்து கங்கை வரை”யை எழுதியிருக்கிறார். இது அவருடைய சிறந்த சிருஸ்டிகளில் ஒன்று.

இதிலுள்ள 20 கதைகளுள், ஒவ்வொன்றும் மனித சமுதாய வளர்ச்சியின் ஒவ்வொரு படிகள். தனி மனிதனையோ தனிச் சம்பவத்தையோ மையமாகக் கொள்ளாமல் சமுதாயத்தின் முக்கியமான மாற்றம் அல்லது பெரிய வளாச்சிகளையே மையமாகக் கொண்டு, கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. சில கதைகள் அந்த வளர்ச்சி, மாற்றத்தின் போக்கைப் பொறுத்து இரண்டு மூன்று தலைமுகைளைத் தம்முள் அடக்கிக் கொண்டிருக்கின்றன. சில கதைகள் ஒரு தலைமுறையைக் கூடப் பூராவாகத் தம்முள் அடக்கவில்லை. ஒவ்வொரு கதையிலும், அந்தக் காலத்துப் பழக்க வழக்கங்கள், சூழ்நிலைகள் அப்படியே எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

இவைகள் வெறும் கதைகளல்ல. சமுதாய வளர்ச்சியையும், சரித்திரத்தையும், காலங்களையும் நிர்ணயித்துக் கதை உருவத்திலே எழுதப்பட்டிருப்பதால், கதைப் போக்கிற்கு அவசியமில்லாத விசயங்கள் ஒவ்வொரு கதையின் மத்தியிலும் இடம் பெற்றிருப்பதாகத் தோன்றலாம். சில இடங்களைப் படிக்கும் பொழுது, சரித்திர ஏடுகளைப் படிப்பது போன்ற உணர்ச்சி கூட ஏற்படலாம். ஆனால் சரித்திரத்தையும் மனித சமுதாய வளர்ச்சியையும் தெரிந்து கொள்வதற்கு அவைகள் இன்றியமையாதவை. சரித்திரத்தைப் படிப்பதால் ஏற்படும் சலிப்பும், தத்துவத்தைக் கற்பதால் ஏற்படும் சிரமமும் தோன்றாதபடி, கதை உருவிலே இந்த அம்சங்களை அற்புதமாகப் பின்னித் தந்திருக்கிறார் ராகுல்ஜி. இது சர்பத் அல்ல. மருந்துதான். ஆனால் மருந்தின் கசப்போ, கைப்போ தெரியாதபடி சர்பத்தாக ஆக்கப்பட்டிருக்கிறது.

இந்த சிறந்த நூலைத் தமிழிலே செய்ய வேண்டுமென்று நாள் தோறும் வளர்ந்து வந்த ஆசையே, துணிவாக இந்நூலை மொழிபெயர்க்கும் வேலையில் என்னை ஈடுபடும்படி செய்தது.

முடிந்தவரை சாதாரண தமிழ் மக்களும் புரிந்து கொள்ளும்படி எழுத முயற்சி செய்திருக்கிறேன். ஆனால், விசயத்தின் கௌரவமும், ராகுல்ஜியின் அளவற்ற அறிவுச் செல்வத்தை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்குக் கொண்டு வருவதில் உள்ள சிரமமும் சேர்ந்து, நடையை இன்னும் எளிதாக ஆக்க முடியாமற் செய்துவிட்டன.

இந்நூலை மொழி பெயர்த்து எழுதத் தொடங்கியது முதல், ஒப்பு நோக்கிப் பிழை திருத்தி அச்சிட்டுப் புத்தக உருவில் வெளிவரும் வரை, எனது நண்பர் திரு.ராம சண்முகம் அவர்கள் பூரணப் பொறுப்பெடுத்து ஒத்துழைத்தார். அவருக்கு என் உளம் நிறைந்த நன்றி.கண. முத்தையா
சென்னை
1.8.1949


No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்