காந்தியின் அகிம்சை ஏகாதிபத்தியத்தை காக்கவே பயன்பட்டது இன்று ஜனநாயகம் காக்கப் போரிடுவோர் யாரின் ஜநாயகத்தை காக்கப் போகின்றனர்-சிபி

ஜனநாயம் காப்பதின் பெயரில் மார்க்சிய லெனினியத்தை கைவிட்டு ஆளும் வர்க்கத்திடம் சரணடையும் போக்கை விமர்சிக்க இந்த கட்டுரை மூலம் முயற்சித்துள்ளோம்.

இலக்கு 20 இதழ் கடுரையின் வாயிலாக.
=====================================

இன்று ஜனநாயகம் என்று பொத்தாம் பொதுவாக பேசுவோருக்காக அன்றைய காந்தியின் நிலையிலிருந்து பேச முயற்சி.

இன்றைய காந்தியவாதிகளுக்கும் அன்றைய காந்தியின் உண்மையான செயல் என்ன என்பதனை புரிந்துக் கொள்ள.... அரசை பற்றி மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கும் புரட்சி பேசும் ஏமாற்று பேர் வழிகளுக்ககவே. இக்கட்டுரை கொண்டுவரப்படுகிறது.

ஏதோ ஜனநாயகத்தை காப்போம் மீட்டெடுப்போம் என்று கரடியாக கத்தும் இவர்களின் முன்னோடி காந்தியின் நிலையிலிருந்தே முதலில் பேசுவோம்.

தன் சத்தியாகிரக மந்திரத்தை, ஒரு தீவிரமான கிளர்ச்சிச் சூழலுக்கான மூல காரணங்களை அகற்றுவதற்கு அல்ல; மாறாக புரட்சிகரமான, ஏகாதிபத்திய - எதிர்ப்புப் போராட்டங்கள் என்னும் பூதத்தை, அடக்குவதற்குப் பயன்படுத்துவது என்று காந்தி நிலை எடுத்தார்.

1919 ஆம் ஆண்டு சத்தியாகிரகம் தொடர்பான உத்தரவுகள் என்ற பின்வரும் கருத்துகளை வெளியிட்டார் காந்தி.

1).ஊர்வலங்கள் நடத்தக்கூடாது. ஒழுங் கமைத்த ஆர்ப்பாட்டங்களை நடத்தக் கூடாது.

2). குழுவின் முன்கூட்டிய அறிவுறுத்தல் இன்றி எதற்காகவும் கண்டன வேலைநிறுத்தம் செய்யக்கூடாது.

3).போலீஸ் உத்தரவுகள் அனைத்துக்கும் எதிர்ப்பில்லாமல் கீழ்ப்படிய வேண்டும்.

4). வன்முறையில் ஈடுபடக்கூடாது.

5). கல்லெறிதல் கூடாது.

6).டிராம் வண்டிகளையோ போக்குவரத்தை யோ தடுக்கக்கூடாது.

7).எவருக்கு எதிராகவும் நிர்ப்பந்தத்தைக் கையாளக்கூடாது.பொதுக்கூட்டங்களில் கைத் தட்டக்கூடாது.

8).ஏற்பையோ மறுப்பையோ வெளியிடக் கூடாது.

9).வெட்கக்கேடு என்று கத்தக்கூடாது.

10). மகிழ்ச்சி ஆரவாரம் செய்யக்கூடாது.

11). முழுமையான அமைதி வேண்டும்.

12). தொண்டர்களின் அல்லது நிர்வாகத்தின் கட்டளைகளுக்கு அப்படியே கீழ்ப்படிய வேண்டும்.

இந்த உத்தரவுகளை வரைந்ததில் காந்தி எடுத்துக்கொண்ட மிக உன்னிப்பான கவன மும் இவ்வுத்தரவுகளில் பலவும் அவர் கருத்தில் சத்தியாகிரகத்தின் மீற முடியாத கொள்கை கள், மக்களின் முன்முயற்சியைக் கட்டவிழ்த்து விடுவதற்குப் பதில் அதைச் சாகடிக்கவும், தாங்கள் ஒரு மாபெரும் லட்சியத்துக்காகப் போரிட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதையே அவர்கள் மறக்கும் படி செய்யவும், தங்களுக்குஒதுக்கப்பட்ட பணிகளை நிறை வேற்றுவது மட்டுமே தங்கள் வேலை எனக் கொண்ட சிந்தனையற்ற, உணர்ச்சியற்ற யந்திர மனிதர்களாக அவர்களைக் குறுக்கவும் அவர் கையாண்ட சூழ்ச்சித் திறம் காந்தியத்துக்கே உரித்தான தனிக் குணம். இப்படிப்பட்ட உத்தரவுகளைவிட வேறு எதனாலும் மக்களை அவ்வளவு திறமையாகக் காயடித்துவிட முடியாது எனலாம்.

1930 -ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் பெசாவரில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஆயுதம் ஏதுமின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டோரைச் சுடமறுத்தனர் கார்வாலி வீரர்கள்; அதன் விளைவாக இராணுவ நீதிமன்ற விசாரணைக்குள்ளானார்கள். தூக்குத் தண்டனை, ஆயுள்தண்டனை, நிரந்தரமாக நாடுகடத்தப்பட்டது போன்ற தண்டனை களைத் துணிச்சலோடு எதிர்கொண்டார் கள்.அந்த கார்வாலி படைவீரர்களைப் பற்றிய காந்தியின் மனோபாவமும் குறிப்பிடத்தக்கது. தம்நாட்டு மக்களைச் சுட்டுக்கொல்ல அவர்கள் மறுத்தார்கள். பிரிட்டிஷ் அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு அவர்கள் கீழ்ப்படியவில்லை.இராணுவ நீதிமன்றத்தால் விசாரிக்கப் பட்டு மிகக் கொடுமையான தீர்ப்புகளால் தண்டிக்கப் பட்டார்கள்.

1931 -ஆம் ஆண்டு, அக்டோபரில் லண்டனில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மறுமொழியாக காந்தி பின்வருமாறு சொன்னார்: "கார்வாலி கைதிகள்... அவர்களின் பிரிட்டிஷ் அதிகாரிகளின் ஆணைகளுக்கு வேண்டுமென்றே பணியவில்லை. அவர்கள் பங்குக்கு அது ஓர் அகிம்சைச் செயலே என்பதை நான் ஏற்கிறேன். ஆனால் தம் அதிகாரிகளின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதாக உறுதி மொழி எடுத்தவர்கள் அந்தக் கட்டுப்பாட்டை அப்பட்டமாக மீறிவிட்டதாகவும் அது இருந்தது.”மகாத்மாவைப் பொறுத்தவரை தீரமும் மிகுந்த தியாகமுமான கார்வாலி வீரர்களின் தேசபக்தச் செய்கையை விட, நிராயுதபாணிகளாயிருந்த தம் நாட்டவரைக் கொல்லவும் முடமாக்கவும் அந்நிய ஆட்சியாளர்கள் இட்ட ஆணையை நிறைவேற்ற அவர்கள் மறுத்த "குற்றம்" தான் பெரிய விசயமாக இருந்தது. (நூல் ஆதாரம் இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் 1919 - 1947 - சுனிதிகுமார் கோஷ்).

அவர்களின் விடுதலையை வலியுறுத்தி ஃபென்னர் பிராக்வே அனுப்பிவைத்தஅறிக்கையில் கையெழுத்திட மறுத்துவிட்டார் அவர். ஒரு பிரெஞ்சு இதழாளரிடம் பின்வருமாறு சொன்னார் காந்தி: "சுடு என்னும் உத்திரவுக்குக் கீழ்ப்படியாத போர்வீரன் தான் எடுத்திருக்கிற உறுதி மொழியை மீறுகிறான். கீழ்ப்படியாமை எனும் குற்றத்தை இழைத்தவன் ஆகிறான். அதிகாரிகளையும் படைவீரர்களையும் பணிய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ள என்னால் முடியாது. ஏனெனில் நான் அதிகாரத்தில் இருக்கும் போது எப்படியும் இதே அதிகாரிகளையும் படைவீரர் களையுமே நான் பயன்படுத்திக்கொள்ள வேண்டி இருக்கும்.”

ஓர் உறுதிமொழிக்கு உண்மையாகவே இவ்வளவு மதிப்பை மகாத்மா கொடுத்தாரா!

இரண்டாம் உலகப்போர் மூண்டதும் பிரிட்டனின் போர் முயற்சிகளுக்கு காங்கிரஸ் நிபந்தனையற்ற ஒத்துழைப்புத் தரவேண்டு மென்று காந்தி விரும்பினார். முந்தைய மாதங்களிலும் ஆண்டுகளிலும் போர் பற்றி காங்கிரஸ் நிறைவேற்றிய தீர்மானங் களையும் தம் சவடால் பேச்சுகளையும் குப்பைக் கூடைக்குள் வீசி விட்டு நேருவும் பட்டேலும் கூடப் போரைத் தொடுப்பதில் அரசுக்கு உதவ விரும்பினர்.

காந்தியிடம் பக்தி கொண்டிருந்த செயலரான மகாதேவ தேசாய் செப்டம்பர் 18 அன்று பிர்லாவுக்கு இப்படி எழுதினார்: "நடக்க இருப்பது என்னவென்று ஆண்டவனுக்கு மட்டுமே! தெரியும். ஆனால் இந்த இருபது ஆண்டுகளாக எந்தக் கொள்கையின் பேரால் நாம் உறுதி கூறி வந்திருக்கிறோமோ! அந்த அகிம்சை கொள்கை பலத்த இழப்புக்கு உள்ளாகி இருப்பதாகத் தோன்றுகிறது.”

ராஜேந்திரப் பிரசாத் பின்வருமாறு சொன்னார்: "அகிம்சைக்கு வாழ்க்கைப் பட்டிருந்தாலும் பிரிட்டிசாருக்கு உதவ முடியாதென மறுக்கக் காங்கிரசால் முடியாது என்பதும்,சூழ்நிலை கோரும்போது ஆட்களை யும் ஆயுதங்களையும் அவர்களுக்குத் தந்துதவுவதிலிருந்து அது பின்வாங்காது என்பதும் செயற்குழு அமர்வின்போது தெளிவாகியது.”

உண்மையில் அரசின் நலன்களும் உள்நாட்டுச் சுரண்டல் வர்க்கங்களின் நலன்களும் சம்பந்தப்பட்ட நேரம் தவிர எப்போதும் அது இளகியே இருந்தது. பிரிட்டிசாரின் ஒத்துழைப்போடு காந்தி தயாரித்தளிக்கும் நாடகங்கள் கவர்ச்சிகரமான முறையிலே வானொலியிலும், பத்திரிகையிலும் விளம்பரப்படுத்தப்பட்டு மக்களைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டது என்பது உண்மையே."அகிம்சை, காங்கிரசின் கரங்களில் இருக்கும் (ஓர்) அரசியல் ஆயுதம்.அதைச் சிலநேரங்களில் நம்பி ஏந்திக்கொள்ள முடியும், சில நேரங்களில் எறிந்துவிட முடியும்” என்றார். ஆனால் "தான் மட்டும் அகிம்சையைக் கைவிட்டுவிட்டு சுயராஜ்யம் பெற்றுக்கொள்ளமாட்டார். அதுதான் மகாத் மாவின் மார்க்கம்: சில நேரங்களில் அவர் தன் கற்பைக் காத்துக்கொள்ள விரும்புவார்; அதேவேளையில் தம் கற்பைக் கைவிடும்படி மற்றவர்களுக்கு உபதேசிப்பார்.

உண்மையில் அகிம்சையின் பயன்கள் மிகவும் வரம்புக்குட்பட்டதாகவே! இருந்தன. நிலக்கிழார்களுக்கும் குத்தகைதாரர்களுக் கும் இடையிலும், முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையிலுமான மோதல்களில் குத்தகைதாரர்களும் தொழிலாளிகளும் அகிம்சையைக் கண்டிப் பாகக் கடைப்பிடிக்க வேண்டுமென கட்டளை இடப்படும்.

நிலப்பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் அப்படிக் கட்டளை இடப்படமாட்டாது. போராட்டங்கள் கடுமையானதாக மாறியதும் அகிம்சை கைவிடப்பட வேண்டியதாகிவிடும், விவசாயிகளும்,தொழிலாளிகளும் வன்மை யாக ஒடுக்கப்படுவார்கள். காந்தியும் அவரது நெருங்கிய சகாக்களும் நிலப்பிரபுக் களுக்கும் முதலாளிகளுக்கும் எதிரான வர்க்கப் போரை ஏற்க மறுத்தார்களே! ஒழிய, விவசாயிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் எதிராக நிலப்பிரபுக்களும் முதலாளிகளும் எல்லாநேரத்திலும் தொடுத்துக் கொண்டி ருந்த வர்க்கப்போரை எதிர்க்க வில்லை.

உண்மையில் ஒடுக்குமுறையாளர்கள் தாராளமாகப் பயன்படுத்திய ஆயுதத்தை ஒடுக்கப்படுவோருக்கு இல்லாமல் செய்யத் தான் அகிம்சைப் பாதை வடிவமைக் கப்பட்டது. "காந்தியின் அகிம்சையானது பெருமளவான சமுதாய இம்சையை மறைக்கும் ஒரு முக்காடாகவே! உள்ளது" என சவும்யேந்திரநாத் தாகூர், ரோமன் ரோலந்திடம் சொன்னது சரிதான்.

ஏகாதிபத்தியவாதிகளும் நிலக்கிழார்களும் முதலாளிகளும் அகிம்சையை ஆர்வமுடன் வரவேற்றார்கள். தம்மால் முடிந்த அளவு சிறப்பாக அகிம்சை நற்செய்தியைப் போதிக்க காங்கிரஸ் தலைவர்களின் குறிப்பாக காந்தி மற்றும் பட்டேலின் பொறுப்பில் நிரம்ப நிதிகளை ஒப்படைத் தார்கள். நிதியாதிக்கம் உள்ள வர்க்கம் ஒடுக்க எடுத்த ஆயுதம் அகிம்சை.பகத்சிங்கின் தூக்கும் காந்தியின் துரோகமும்

லாகூர் சதிவழக்கு சம்பந்தமான தீர்ப்பில் காந்தி நடந்து கொண்ட விதம், பிரிட்டிஷ் அரசோடு கள்ளக் காதல் கொண்டு உறவாடிய விசயங்கள் ஆகியவை சமீபகாலத்தில் கூட அம்பலமாகியுள்ளது. மத்தியப் பாராளுமன்றத் தில் வெடிகுண்டு வீசியதற்காகவும், லாலா லஜபதிராயை அடித்துக் கொன்ற பிரிட்டிஷ் போலீசு அதிகாரி சாண்டர்சைச் சுட்டுக் கொன்றதற்காகவும் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற தோழர்களுக்கு லாகூர் சிறைச்சாலையிலே தூக்குத் தண்டனை காத்திருந்தது. இதே நேரத்தில் 1931ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் காலனி ஆட்சியின் தலைவனான இர்வின் என்பவனுக்கும் காந்திக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. (காந்தி இர்வின் ஒப்பந்தம்) இவ்வொப்பந்தப்படி “சுயராச்சியம்’ சம்பந்தமான சில சரத்துக்களையும், “இந்தியாவின் நலன்களுக்குப் பாதுகாப்பான ஒதுக்கீடுகள்’ எனச் சில்லறைச் சீர்திருத்த ஒப்பந்தங்களும், காந்தியை பின்பற்றிச் சிறை சென்றவர்களுக்குப் பொது மன்னிப்பும் வழங்கப்பட்டது. ஆனால் புரட்சியாளர்கள் ஒருவர் கூட விடுதலை செய்யப்படவில்லை.

இந்த ஒப்பந்தம் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் மரண தண்டனை பற்றி மௌனம் சாதித்தது. மாறாக, பலாத்காரக் குற்றங்களுக்காகவும், பலாத்காரத்தைத் தூண்டிய குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்ட வர்கள் யாரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என ஒப்பந்தம் திட்டவட்டமாகக் கூறியது. அது மட்டுமின்றி பெசாவரில் மக்களைச் சுட மறுத்ததற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கூர்க்காப் படையினர் எந்த பலாத்காரத்திலும் இறங்க வில்லை. அவர்கள் காந்தி கூறிய அகிம்சைத் தத்துவத்தைத்தான் கடைப்பிடித்தனர். அவர்களுடைய விடுதலைக்கு இந்த ஒப்பந்தத்தில் இடமில்லை. காந்தி இதுபற்றிய கோரிக்கை கூட எழுப்பவில்லை.

பகத்சிங் மற்றும் தோழர்கள் தூக்கிலிடப் படுவதற்குச் சில தினங்களுக்கு முன்பு காந்தி வெளிநாட்டு நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். “பகத்சிங் மீதும் இதரர் மீதும் விதிக்கப் பட்டுள்ள மரணதண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுமா?” என ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு “என்னை இக்கேள்வி கேட்காதிருப்பதே மேல். இதற்குமேல் நான் ஒன்றும் கூறமுடியாது” எனக் கூறிய காந்தி அந்த ஒப்பந்தம் போடப்பட்ட முறையைப் பற்றி ரொம்பவும் சிலாகித்துப் பேசினார்.

“முதலாவதாக, வைசிராயின் விசேசப் பொறுமையும், அளத்தற்கரிய உழைப்பும், சிறந்த குணமும் இன்றி இவ்வொப்பந்தம் முடிந்திருக்க மாட்டாதென நான் கூறவிரும்புகிறேன்… இதுபோன்ற ஒப்பந்தத்தைப் பற்றிய வரையில் வெற்றியடைந்த கட்சி எதுவெனக் கூறவும் முடியாது; கூறுவதும் சிறந்ததன்று. ஏதாவது வெற்றி இருக்குமாயின் அது இருவரையும் சார்ந்ததே. காங்கிரசு ஒருபோதும் வெற்றியை நினைத்ததில்லை.” ஆம்; பிரிட்டிஷ் நலனோடு சாராத வெற்றியை இவர்கள் ஒருபோதும் நினைத்த தில்லைதான்!

காந்தி இர்வின் காகித ஒப்பந்தங்களின் சரத்துக்களைக் கண்ட பஞ்சாப் மக்களும், ஏனைய இந்திய மக்களும் கொதிப்படைந் திருந்தனர். கராச்சியில் காங்கிரசு மாநாடு கூடும் அதேநாளில் பகத்சிங் லாகூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். ஆத்திரமுற்ற மக்கள் திரளிடமிருந்து காந்திக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் கிளர்ந் தெழுந்தன. ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். “பலர் அதன் தவறான அம்சங்களைக் கண்டித்தனர். மேலும் தனிநபர் பயங்கரவாதத்தைக் கொண்டு காந்தியை அச்சுறுத்தினர்” என இர்வினுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் குறிப்பிடுகிறார். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் மரண தண்டனை விசயத்தில் காந்தியாரின் பங்கை மக்கள் நன்றாகவே அறிந்திருந்தனர். “மக்கள் காந்தியை உடனடியாக ஒழித்துக் கட்ட, பலாத்காரமாக நசுக்க ஆயத்தமா யிருந்தனர்” என இர்வின் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுடைய அறியாமையைப் பயன்படுத்தி அதன்மேல் சவாரி செய்து கொண்டிருந்த காந்தியை அதே மக்கள் பலாத்காரமாக நசுக்கி எறியும் அளவுக்குச் சென்றுள்ளார் கள் என்றால் காந்தி எத்தகைய துரோகியாக இருந்திருக்க வேண்டும். 1922 ஒத்துழை யாமை இயக்கம், 1931 காந்தி இர்வின் ஒப்பந்தம் இதன் மூலம் செய்த துரோகத் தைக் காட்டிலும், பின் நாட்களில் காந்தி செய்த துரோகம் என்றென்றும் ஏகாதிபத் திய அடிமை நாடாய் இந்தியா இருப்பதற்குப் பலமான கால்கோளாய் அமைந்து விட்டன.

ஜனநாயகத்தை காக்க காந்தியின் போலிதனம்; புரட்சி பேசும் மா-லெ வாதிகள் அரசை புரிந்துக் கொள்ளாமல் யாருக்கான ஜனநாயகத்தை காக்க உள்ளீர்-சிபி.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்