5. பிரான்சில் உள்நாட்டுப் போர் எனும் மார்க்சின் நூலுக்கு 1891இல் எழுதப்பட்ட முன்னுரை.
“பிரான்சில் உள்நாட்டுப் போர்” என்னும் நூலின் மூன்றாம் பதிப்புக்கு எங்கெல்ஸ் எழுதிய முன்னுரையில் (இந்த முன்னுரை 1891 மார்ச் 18ஆம் தேதியிடப்பட்டது முதலில் Neue Zeit இல் வெளிவந்தது), அரசு குறித்து அனுசரிக்க வேண்டிய போக்கு சம்பந்தமான பிரச்சனைகள் பற்றிச் சில சுவையான கருத்துரைகளை இடைக்குறிப்பாய்த் தருவதோடுகூட, கம்யூனின் படிப்பினைகள் பற்றிய தேர்ந்த தெளிவுடைய சுருக்கவுரையையும் அளிக்கிறார். இம்முன்னுரை எழுதப்பட்டதற்கும் கம்யூனுக்கும் இடைப்பட்ட இருபது ஆண்டுகளின் அனுபவம் அனைத்தாலும் செழுமை செய்யப்பட்ட உரை இது. ஜெர்மனியில் வெகுவாய்ப் பரவியிருந்த “அரசின்பாற்பட்ட மூடநம்பிக்கையை” நேரடியாய் எதிர்த்து இது எழுதப்பட்டதாகும். நாம் பரிசீலிக்கும் இந்தப் பிரச்சனை குறித்து மார்க்சியம் கூறும் இறுதி முடிவு என்பதாய் இந்த சுருக்கவுரையை முழுநியாயத்துடன் அழைக்கலாம்.
பிரான்சில் ஒவ்வொரு புரட்சியிலிருந்தும் தொழிலாளர்கள் ஆயுதபாணிகளாய் வெளிவந்தனர் என்று எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார்.”ஆகவே தொழிலாளர்களை நிராயுதபாணி ஆக்கு என்பதே அரசின் அதிகாரத்தில் அமர்ந்த முதலாளி வர்க்கத்தின் முதலாவது கட்டளையாக இருந்தது. இவ்வாறு, தொழிலாளர்கள் வெற்றிபெற்ற ஒவ்வொரு புரட்சியையும் அடுத்து ஒரு புதிய போராட்டம் தொடங்கி, தொழிலாளர்களுடைய தோல்வியில் முடிவுற்றது”.
முதலாளித்துவப் புரட்சிகளின் அனுபவம் பற்றிய இந்த சுருக்கவுரை இரத்தினச் சுருக்கமாய் இருப்பதோடு பொருள் வளம் மிக்கதாயும் உள்ளது. ஏனையவற்றுடன்கூட அரசு பற்றிய பிரச்சனையிலும் (ஒடுக்கப்பட்ட வர்க்கம் ஆயுதங்கள் பெற்றிருக்கிறதா?) சாரப்பொருள் இங்கு மிகவும் சிறப்பாய்க் கிரகிக்கப்பட்டுவிடுகிறது. இந்த சாரப்பொருளைத்தான் முதலாளித்துவ சித்தாந்தத்தின் செல்வாக்கு உட்பட்ட பேராசிரியர்களும், குட்டிமுதலாளித்துவ ஜனநாயகவாதிகளும் மிகப்பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தட்டிக்கழித்து விடுகிறார்கள். 1917ஆம் ஆண்டில் ரஷ்யப் புரட்சியின்போது, முதலாளித்துவப் புரட்சிகளின் இந்த இரகசியத்தைப் போட்டு உடைத்த சிறப்பு (கவினாக் பாணியிலான சிறப்புத்தான்)” மார்க்சியவாதியாய் வேடம்பூண்ட மென்ஷ்விக்கான” தெஸெரெத்தேலிக்கு உரியதாகிவிட்டது. ஜூன் 11இல் தெஸெரெத்தேலி நிகழ்த்திய “வரலாற்று முக்கியத்துவமுள்ள” சொற்பொழிவில், அவர் பெத்ரொகிராத் தொழிலாளர்களை முதலாளித்துவ வர்க்கத்தினர் நிராயுத பாணிகளாக்க உறுதிபூண்டிருந்தனர் என்ற உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார். இதை அவர் தமது சொந்த முடிவாகவும், பொதுவில் “அரசுக்கு”இன்றியமையாத ஒன்றாகவும் குறிப்பிட்டார். திருவாளர் தெஸெரெத்தேலியின் தலைமையில் சோசியலிஸ்ட் -புரட்சியாளர்களாலும் மென்ஷ்விக்குகளுமான கூட்டு எப்படி துரோகம் புரிந்து புரட்சி புரட்சியாளர் பாட்டாளி வர்க்கத்திற்கு விரோதமாய் முதலாளித்து வர்க்கத்தாரிடம் ஓடி விட்டது என்பதற்கு 1917 ஆம் ஆண்டு புரட்சியின் வரலாற்று ஆய்வாளர் ஒவ்வொருவருக்கும் தெஸெரெத்தேலியின் ஜூன் 11ஆம் தேதிய வரலாற்று முக்கியத்துவம் உள்ள சொற்பொழிவு துல்லியமான எடுத்துக்காட்டாய் அமையும் என்பதில்ஐயமில்லை.
இடைக் குறிப்பாய் எங்கெல்ஸ் அளிக்கும் மற்றொரு கருத்துரை மதத்தைப் பற்றியதாகும். இதுவும் அரசு பற்றிய பிரச்சனை ஒட்டியதுதான், ஜெர்மன் சமூக ஜனநாயக வாதிகள் சீரழிந்து, மேலும் மேலும் சந்தர்ப்பவாதிகள் ஆகிய போது, “மதம் தனிநபரின் விவகாரம் என்று அறிவிக்கப்படுகிறது” என்னும் புகழ்பெற்ற சூத்திரத்துக்கு அற்பத்தனமான முறையில் பொய்யான வியாக்கியானம் தரும் நிலைக்கு மென்மேலும் சரிந்து சென்றது தெரிந்ததே. புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் கட்சிக்கும் கூட மதம் தனிநபரின் விவகாரம் என்பதாய்ப் பொருள்படும்படி இந்த சூத்திரம் திரித்து கூறப்பட்டுவிட்டது!!. பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர வேலைத்திட்டத்திற்கு இழைக்கப்பட்ட இந்த அப்பட்டமான துரோகத்தை எஙகெல்ஸ் வன்மையாய் கண்டித்தார். 1891 அவர் தமது கட்சியில் சந்தர்ப்பவாதத்தின் மிக பலவீனமான துவக்கம் மட்டுமே தலை தூக்க கண்டார். ஆகவே அவர் தமது கருத்தை மிகுந்த எச்சரிக்கையோடு எடுத்துரைத்தார்:”அனேகமாய்த் தொழிலாளர்கள் அல்லது தொழிலாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமே கம்யூனில் இருந்ததால், அது ஏற்றமுடிவுகள் தீர்மானகரமான பாட்டாளி வர்க்கத் தன்மை படைத்திருந்தன. முற்றிலும் கோழைத்தனம் காரணமாய்க் குடியரசுவாக முதலாளித்து வர்க்கம் முன்பு செய்யத் தவறிவிட்ட சீர்திருத்தங்கள், தொழிலாளி வர்க்கத்தின் சுதந்திரமான செயற்பாட்டுக்கு இன்றியமையாத அடித்தளத்தை அமைத்திடும் சீர்திருத்தங்கள் (அரசைப் பொருத்தமட்டில் மதம் முற்றிலும் தனிநபரின் விவகாரம் ஆகும் என்ற கோட்பாடு செயல்படுத்தப்படுவது போன்றவை) செயல் படுத்தப்பட்ட கம்யூனின் தீர்மானங்கள் ஆணையிட்டன. அல்லது தொழிலாளி வர்க்கத்திற்கு நேரடியாக நலம் பயப்பனனவாயும், பழைய சமுதாய அமைப்பை பிளப்பனவாயும் இருந்த அரசணைகளை கம்யூன் பிறப்பித்தது........”வேண்டும் என்றே தான் எங்கெல்ஸ் “அரசை பொருத்தமட்டில்” என்னும்சொற்களுக்கு அழுத்தமிட்டு காட்டினார்: கட்சியைப் பொருத்தமட்டில் மதம் தனி நபரின் விவகாரம் என்பதாய் பிரகடனம் செய்துவிட்டஜெர்மன் சந்தர்ப்பவாத்தை நேரடியாகச் சாடும் பொருட்டு தான், எங்கல்ஸ் இதைச் செய்தார். ஜெர்மன் சந்தர்ப்பவாதம் இவ்வாறு புரட்சிகர பாட்டாளி வர்க்க கட்சியைச் சமயச்சார்பற்ற நிலைக்கு இடமளிக்க தயாராக இருக்கும்,
ஆனால் மக்களை மதி மயங்கச் செய்யும் மதமென்னும் அபினியை எதிர்த்து கட்சி நடத்த வேண்டிய போராட்டத்தை கைவிட்டு விடும் மிகவும் கொச்சையான “கட்டற்ற சிந்தனைக்குரிய” குட்டி முதலாளித்துவ அற்பவாதத்தின் இழி நிலைக்கு-் சீரழியும்படி செய்துவிட்டது.
ஜெர்மன் சமூக ஜனநாயவாதிகளின் வருங்கால வரலாற்று ஆசிரியர், 1914இல் இவர்கள் அவமானகரமானவர்களாய் கையாளாகாதவர்களாய் இழிவுற்றதன் மூலகாரணங் களை ஆராய்கையில், இப்பிரச்சனை குறித்து சுவையான தகவல்கள் நிறைய இருக்க காண்பார். இக்கட்சியின் சித்தாந்த தலைவர் காவுத்ஸ்கி எழுதிய கட்டுரைகளில் சந்தர்ப்பவாதத்துக்கு கதவை விரியத் திறந்து விடும் வகையில் அமைந்த மழுப்பலான உரைகள் முதலாய், 1913இல் (“மதச்சபையை விட்டு விலகு” என முழங்கிய இயக்கம்) (குறிப்பு - முதல் உலகப் போருக்கு முன்பு ஜெர்மனியில் மதச்சபையை விட்டு வெளியேறுதல் அல்லது மதச் சபையில் இருந்து பிரிந்து விடும் இயக்கம் பெரிய அளவுக்கு வளர்ந்து விட்டது.
இந்த பிரச்சனை குறித்து ஜெர்மன் சமூக - ஜனநாயக கட்சியின் போக்கு பற்றிய விவாதங்கள் நடைபெற்றன. மதச் சபையிலிருந்து பிரிந்து விடுவதற்கான இயக்கம் குறித்து கட்சி நடுநிலை வகிக்க வேண்டும் என்றும், தனது உறுப்பினர்கள் மதத்துக்கும் மதச்சபைக்கும் எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்திய யோரையே கண்டிப்பதற்கு ஜெர்மன் சமூக ஜனநாயக பிரபல தலைவர்கள் தவறிவிட்டனர்) குறித்து இக்கட்சி கடைபிடித்த போக்கு வரையிலாய் மிகப்
பலவும் இருக்கக் காண்பார்.
எங்கெல்ஸ் தலைமையான முக்கியத்துவம் அளித்த படிப்பினைகள்வருமாறு:
“.... பழைய மத்தியத்துவ அரசாங்கத்தின் ஒடுக்குமுறை அதிகாரம்தான், சேனை, அரசியல் போலீஸ், அதிகார வர்க்கம் (இது 1798 இல் நெப்போலியனால் தோற்று விக்கப்பட்டு அது முதலாய் ஒவ்வொரு புதிய அரசாங்கத்தாலும் தக்க ஆயுதமாய் மகிழ்ச்சியோடு ஏற்கப்பட்டு தனது எதிராளிகளுக்கு விரோதமாய்ப் பிரயோகிக்கப்பட்டது.) இவற்றின் அதிகாரம் தான் முன்பு பாரிஸில் வீழ்த்தப்பட்டது போலவே எங்கேயுமே வீழ்த்தப்பட வேண்டியது.
“தொடக்கம் முதலாகவே கம்யூனானது, அதிகாரத்துக்கு வந்து விட்ட தொழிலாளி வர்க்கம் பழைய அரசு எந்திரத்தைக் கொண்டே தொடர்ந்து நிர்வகித்து செல்வது சாத்தியமில்லை என்பதையும், தற்போது தான் வென்று கொண்ட மேலாதிக்கத்தை திரும்பவும் இழக்காது இருக்கும் பொருட்டு இந்த தொழிலாளி வர்க்கம் ஒரு புறத்தில் முன்பு தன்னையே எதிர்த்து பிரயோகிக்கப்பட்ட பழைய ஒடுக்குமுறை இயந்திரம் அனைத்தையும் ஒழித்து விட்டு, மறுபுறத்தில் தனது பிரதிநிதிகள் அதிகாரிகள் ஆகியோரிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் பொருட்டு இவர்கள் எல்லோரையும் விதிவிலக்கின்றி எந்நேரத்திலும் திருப்பி அழைக்கப்படக் கூடியவர்களே என்பதாய் பிரகடனம் செய்ய வேண்டும் என்பதையும் அங்கீகரிப்பது இன்றியமைதாக ஆகிவிட்டது.
முடியரசில் மட்டுமின்றி, ஜனநாயக குடியரசிலும் கூட அரசு அரசாகவே இருந்து வருகிறது என்பதை, அதாவது அதிகாரிகளை “சமுதாயத்தின் பணியாட்களை”, அரசின் உறுப்புகளை சமுதாயத்தின் எஜமானர்களாய் மாற்றி விடுவது என்ற அதன் அடிப்படையான தனிப் பண்பினை இழந்து விடவில்லை என்பதை எங்கெல்ஸ் மீண்டும் வலியுறுத்தி கூறுகிறார்.
“......... அரசும் அரசின் உறுப்புக்களும் சமுதாயத்தின் பணியாட்கள் என்கிற நிலையிலிருந்து சமுதாயத்தின் எஜமானர்கள் என்ற நிலைக்கு இவ்விதம் மாற்றப்படுவதற்கு எதிராய் (முந்திய எல்லா அரசுகளிலும் இம்மாற்றம் தவிர்க்க முடியாதது) கம்யூனானது பிசகாத இரு வழிகளைக் கையாண்டது. முதற்கண், அது எல்லா பதவிகளுக்கும்) (நிர்வாகம், நீதித்துறை, கல்வித்துறை ஆகிய எல்லா பதவிகளுக்கும்) அனைத்து மக்கள் வாக்குரிமையின் அடிப்படையிலான தேர்தல் மூலம் ஆட்களைஅமர்த்தியதோடு, அவர்களை அதே வாக்காளர்களால் எந்த நேரத்திலும் திருப்பி அழைக்க கூடியவர்களாக ஆக்கிற்று. இரண்டாவதாக, அது உயர் அதிகாரிகள் ஆயினும் சரி கீழ் அதிகாரிகளாக ஆயினும் சரி எல்லோருக்கும் பிற தொழிலாளர்களுக்கு கிடைக்கும் அதே சம்பளங்கள் தான் கொடுத்தது. யாருக்கும் கம்யூன் அளித்த மிக உயர்ந்த சம்பளம் 6000 பிராங்குகள்தான் (பிரெஞ்சு நாணயம்) பிரதிநிதித்துவ உறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு கம்யூனால் விதிக்கப்பட்ட மீறமுடியாத ஆணைகளை அன்னியில், இவ்வழியில் பதவி வேட்டைக்கும் தன்னல உயர்வு நாட்டத்துக்கும் சரியானபடி தடை எழுப்பப்பட்டது.......… இங்கே எங்கெல்ஸ் முரணற்ற ஜனநாயகம் ஒருபுறம் சோசலிசமாய் மாற்றப்படுவதையும், மறுபுறம் சோசலிசம் அவசியெமெனக் கோருவதையும் குறிக்கும் சுவையான எல்லைக் கோட்டினை நெருங்கி வந்துவிடுகிறார்.
ஏனெனில் அரசை ஒழித்திட அரசு நிர்வாக அலுவல்களை தேச மக்களில் மிகப்பெரும் பகுதியோருடைய (நாளடைவில் ஒவ்வொரு தனியாளுடைய) தகுத்திக்கும் ஆற்றலுக்கும் உட்பட்ட எளிய கண்காணிப்பு, கணக்கீட்டு வேலைகளாய் மாற்றுவது அவசியமாகும். பதவி வேட்டை அடியோடு ஒழிக்கப்பட்டாக வேண்டுமாயின், அரசு நிர்வாக அலுவல் துறையில் லாபம் தருவனவாய் இல்லாவிட்டாலும்“மதிப்பிற்குரியனவாகிய”பதவிகள், மிகமிக சுதந்திரமான முதலாளித்துவ நாடுகளில் எல்லாம் இடையறாது நடைபெற்று வருவது போல, வங்கிகளில் அல்லது கூட்டுப்பங்கு கம்பெனிகளில் கொழுத்த ஆதாயத்துக்குரிய பதவிகள் பெறுவதற்கான உந்து தளங்களாய்ப் பயன்பட முடியாதபடி செய்தாக வேண்டும்.
ஆனால் எங்கெல்ஸ் சில மார்க்சியவாதிகள் செய்யும் பிழையை செய்யவில்லை. அதாவது தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை குறித்து சில மார்க்சியவாதிகள் அது முதலாளித்துவத்தில் சாத்தியமற்றதாயும் சோசலிசத்தில் தேவையற்றதாயும் ஆகிவிடுகிறது என்று வாதிடுகிறார்களே, அதுபோன்ற பிழையை எங்கெல்ஸ் செய்யவில்லை. வெளித்தோற்றத்திற்கு கெட்டிக்காரத்தனமாயினும் உண்மையில் முற்றிலும் தவறான இத்தகைய வாதத்தை அதிகாரிகளுக்கு மிதமான சம்பளம் அளித்து விடுவது அடங்கலாய் எந்த ஜனநாயக ஏற்பாடு குறித்தும் கூறலாம்; ஏனெனில், முரணற்ற முழு நிறை ஜனநாயகம் முதலாளியத்தில் சாத்தியமற்றது, சோசலிசத்தில் எல்லா ஜனநாயகமும் உலர்ந்து உதிர்ந்து விடும்.
மேலும் ஒரு முடி உதிர்வதால் ஒருவன் வழுக்கை ஆகி விடுவானா என்ற நெடுநாளைய கேலியை ஒத்த குதர்க்க வாதமே ஆகும் இது.
ஜனநாயகத்தை கூடுமான உச்ச நிலைக்கு வளர்த்துச் செல்லுதல், இந்த வளர்ச்சிக்கு வேண்டிய வடிவங்களை காணுதல், நடைமுறையின் வாயிலாய் இவற்றை சோதித்துப் பார்த்தல் என்பன போன்ற இவை யாவும் சமூகப் புரட்சிக்குரிய போராட்டத்தில் அடங்கிய பணிகளில் ஒன்று.
தனிப்பட்ட முறையில் எவ்வகையான ஜனநாயகமும் சோசலிசத்தை கொண்டு வந்து விட முடியாது. ஆனால் எதார்த்த வாழ்வில் ஜனநாயகம் ஒரு போதும் “தனிப்பட்ட முறையில்” மேற்கொள்ளப்படுவதில்லை; பிறப்பலவற்றுடன் “சேர்ந்த முறையில் தான்” அது மேற்கொள்ளப்படும். அப்பொழுது அது பொருளாதார வாழ்வின் மீதும் செல்வாக்கு செலுத்தும், அதனுடைய மாற்றத்தை துரிதப்படுத்தும், அதே போல ஜனநாயகத்தின் மீதும் பொருளாதார வளர்ச்சியும் இதை ஒத்த பிறவும் செல்வாக்கு செலுத்தும். இதுதான் உயிருள்ள வரலாற்றின் இயக்கவியல்.
எங்கெல்ஸ் மேலும் கூறுகிறார்.
“...... முந்தைய அரசு அதிகாரம் இவ்வாறு தகர்க்கப்பட்டு அதற்கு பதிலாய் ஒரு புதிய, மெய்யாகவே ஜனநாயகமான அரசு அதிகாரம் நிறுவப்பட்டதை உள்நாட்டுப் போரின் மூன்றாம் பகுதி விளக்கமாய் விவரிக்கிறது. ஆனால் இதன் கூறுகள் சிலவற்றை இங்கே சுருக்கமாய் மீண்டும் குறிப்பிடுதல் வேண்டும். ஏனெனில் குறிப்பாக ஜெர்மனியில் அரசின் பால் உள்ள மூடநம்பிக்கை தத்துவயியலிலிருந்து பொதுவாய் முதலாளித்து வர்க்கத்தாரின் உணர்வுக்கும், பல தொழிலாளர்களின் உணர்வுக்கும் கூடபரவி வந்துவிட்டது. தத்துவவியல் கண்ணோட்டத்தின் படி அரசு என்பது “கருத்தின் மெய்மையாக்கமாய்” அல்லது தத்துவவியல் தொடர்களில் பெயர்க்கப்படுமாயின் “இறையருள் ஆட்சியின் பூலோக உருவாய்” அழியாத உண்மையும் நீதியும் சித்திபெறும் அல்லது சித்தி பெற வேண்டிய அரங்கமாய் கொள்ளப்பட்டது. இயல்பாகவே இதிலிருந்து அரசிடமும் அரசுடன் சம்பந்தப்பட்ட யாவற்றிடமும் மூட பக்தி பிறக்கிறது. சமுதாயம் அனைத்துக்கும் பொதுவான விவகாரங்களும் நலன்களும் கடந்த காலத்தில்கவனத்தில் கொள்ளப்பட்டது போலவே, அதாவது அரசின் மூலமும் வசதியும் வருவாயும் மிக்க நிலையில் உள்ள அதன் அதிகாரிகள் மூலமே அன்றி வேறு எவ்வழியிலும் கவனித்துக் கொள்ளப்பட முடியாது என்பதாய் நினைக்கும் படி மக்கள் தம் பிள்ளைப் பிராயம் முதல் பழக்கப்படுத்தப்பட்டதால், இந்த மூடபக்தி மிகச் சுலபமாய் வேரூன்றி விடுகிறது.
இன் நிலையில், பரம்பரை முடியரசின் மீது உள்ள நம்பிக்கையிலிருந்து விடுபட்டு ஜனநாயக குடியரசு வேண்டுமென முழக்கமிட முற்படுவோர் தாம் அளவிலா துணிச்சலுடன் முன்னேறி வந்து விட்டதாய் கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் அரசானது ஒரு வர்க்கம் பிறிதொன்றை ஒடுக்குவதற்கான இயந்திரமே இன்றி வேறல்ல; முடியரசில் மட்டுமின்றி அதே அளவுக்கு ஜனநாயகக் குடியரசிலும் கூட இதுதான் உண்மை. மிகச் சிறந்த நிலையிலும் அது, வர்க்க மேலாதிக்கத்துக்கான போராட்டத்தில் வெற்றி வாகை சூடிய பாட்டாளி வர்க்கம் மரபு வழியில் பெரும் ஒரு கேடே ஆகும். இந்தக் கேட்டின் படுமோசமான கூறுகளை வெற்றிகரப் பாட்டாளி வர்க்கம் முன்பு கம்யூனானது செய்தது போலவே, எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாய்க் கழித்துக்கட்டிவிட வேண்டியிருக்கும். பிறகு புதிய, சுதந்திர சமூக நிலைமைகளிலே வளர்ந்து ஆளாகும் தலைமுறையினர் இந்த வேண்டாத பிண்டமான அரசமைப்பு அனைத்துமே விட்டொழித்து விடும்படியான நிலையை வந்து அடைவார்கள்.”
- முடியரசை அகற்றி அதற்கு பதிலாய் குடியரசை நிறுவுகையில் பொதுவில் அரசு குறித்த சோஷிலிச கோட்பாடுகளை மறந்து விடக்கூடாது என்று ஜெர்மனியர்களை எங்கெல்ஸ் எச்சரிக்கை செய்தார். இன்று அவருடைய எச்சரிக்கைகள் தெஸெரெத்தேலிகளுக்கும் செர்னேவ்களுக்கும் சாட்டையடி கொடுப்பதாய் விளங்குகின்றன!. இந்தக் கனவான்கள் அரசின் பால் தமுக்கு இருக்கும் மூடநம்பிக்கையும் மூடபக்தியையும் “தமது கூட்டு அரசாங்க” செயல்பாட்டின் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
மேலும் இரு குறிப்புகள்: 1) முடியரசில் மட்டுமின்றி “அதே அளவில்” ஜனநாயக குடியரசிலும் அரசு ”ஒரு வர்க்கம் பிறிதொன்றை ஒடுக்குவதற்கான இயந்திரமாகவே” இருக்கிறது என்று எங்கெல்ஸ் கூறியது, சில அராஜவாதிகள் “;போதனை செய்வது” போல ஒடுக்குமுறையின் வடிவம் எதுவாயினும் பாட்டாளி வர்க்கத்திற்கு ஒன்றே தான் என்பதாய் பொருள்படவில்லை.வர்க்கப் போராட்டம், வர்க்க ஒடுக்கு முறை இவற்றின் வடிவம் அதிக விரிவும் சுதந்திரமும் கொண்டதாகவும் அதிக அளவுக்கு பகிரங்கமானதாகவும், இருப்பது பாட்டாளி வர்க்கத்திற்கு பொதுவில் வர்க்கங்களை ஒழித்திட அது நடத்தும் போராட்டத்தில் பெரிதும் உதவிபுரிகிறது.
2) அரசெனும் வேண்டாத பிண்டம் அனைத்தையும் குப்பை குழியிலே எறியும் நிலையை ஒரு புதிய தலைமுறையால் தான் வந்தடைய முடியும் என்பது ஏன்?. இந்தக் கேள்வி ஜனநாயகத்தை விஞ்சும் பிரச்சனையுடன்பிணைந்ததாகும். இனி இப்பிரச்சனையை பரிசீலிப்போம்.
நாம் தெரிந்துகொள்ள வேண்டியது:-
1. தொழிற்துறையில் வெகுவாய் வளர்ந்திருந்த ஜெர்மனியில், அரசு பற்றிய மூடநம்பிக்கை வெகுவாய்ப் பரவியிருந்தது. அந்த மூடநம்பிக்கையை ஒழித்திட மார்க்சிய ஆசான்கள் தொடர்ந்து பாரீஸ்கம்யூன் போன்ற நடைமுறைகளிலிருந்து அரசு பற்றிய மார்க்சிய கருத்துக்களைப் பிரச்சாரம் செய்தார்கள். அவர்களுடைய தொடர் பிரச்சாரத்தின் அடிப்படைகளை ரஷ்ய போல்ஷ்விக் கம்யூனிஸ்டுகள் உள்வாங்கி செயல்பட்டதன் காரணமாக 1917ஆம் ஆண்டு மாபெரும் புரட்சியை நடத்தி ஜாரின் எதேச்சிகார ஆட்சியையும் அதற்குப் பிறகு வந்த கெரென்ஸ்கியின் முதலாளித்துவ ஆட்சிகளையும் வீழ்த்தி, தொழிலாளி மற்றும் விவசாயிகளின் ஆட்சியை நிறுவினார்கள். இதன் மூலம் மார்க்ஸ் மற்றும் எங்கெல்சின் அரசு பற்றிய போதனைகள் உண்மையானது என்றும் அதுவே விஞ்ஞானப்பூர்வமானது என்றும் நிருபிக்கப்பட்டது. இவ்வாறு அரசு பற்றிய மார்க்சிய போதனைகள் உண்மையானது, சரியானது என்று நிருபிக்கப்பட்ட பின்பும், இந்தியா போன்ற நாடுகளிலுள்ள, தங்களை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக்கொள்பவர்களும், அரசு பற்றிய மார்க்சிய போதனைகளை ஏற்க மறுத்து அன்றைய ஜெர்மனியில் உள்ளவர்களைப் போலவே அரசு பற்றிய மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டவர்களாகவே இருக்கிறார்களே ஏன்? இந்த மூடநம்பிக்கையிலிருந்து இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகள் விடுபட வேண்டுமென்றால் அரசு பற்றிய மார்க்சிய ஆசான்களது போதனைகளை கற்று புரிந்துகொள்ள வேண்டும். அதனை நடைமுறையில் செயல்படுத்தி சோதித்துப் பார்க்க வேண்டும். இதைச் செய்யாமல் அரசு பற்றிய மார்க்சிய ஆசான்களது போதனைகளை மறுத்து அதனை கைவிட்டு விட்டு செயல்படுவதால் எவ்விதமான பயனும் இல்லை. இதன் காரணமாகவே இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகள் மக்களிடம் செல்வாக்கு பெறாமல் தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றனர்.
2. “பிரான்சில் ஒவ்வொரு புரட்சியிலிருந்தும் தொழிலாளர்கள் ஆயுதபாணிகளாய் வெளிவந்தனர்” என்று எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். அங்கு நடந்த மன்னராட்சிக்கு எதிராக நடந்த முதலாளித்துவப் புரட்சியின் போதும் பிறகு நடந்த தொழிலாளர்களின் புரட்சியின் போதும் தொழிலாளர்கள் ஆயுதபாணிகளாகினர். அவ்வாறு தொழிலாளர்கள் ஆயுதபாணிகளாக மாறுவதன் மூலமே தொழிலாளர்கள் தங்களுக்கு எதிரான நிலப்பிரபுகளையும், மன்னர்களையும் பின்பு முதலாளிகளையும் அவர்களது ஆட்சியையும் வீழ்த்த முடிந்தது என்பதை பிரெஞ்சு நாட்டின் முதலாளிகள் புரிந்துகொண்டு தொழிலாளர்களை நிராயுதபாணிகளாக ஆக்குவதே முதலாளிகளின் முதன்மையான லட்சியம் என்று புரிந்துகொண்டு செயல்பட்டார்கள். அதேவேளையில் தொழிலாளர்களை மற்றும் உழைக்கும் மக்களை அடக்குவதற்கு முதலாளிகள் தங்களை ஆயுதபாணிகளாக வளர்த்துக்கொண்டார்கள். இந்த முதலாளிகளின் லட்சியத்தை நிறைவேற்றுவதற்கான நிறுவனங்கள்தான் போலீஸ், இராணுவம் போன்ற ஆயுதம்தாங்கிய படையாகும். இந்த உண்மை நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தொழிலாளர்களின் பிரெஞ்சுப் புரட்சியிலேயே நிருபிக்கப்பட்டுவிட்டது. அதைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் சீனாவிலும் கம்யூனிஸ்டுகள் நடத்திய புரட்சியிலும் நிருபிக்கப்பட்டுவிட்ட உண்மையாகும். நூறு ஆண்டுகளை கடந்த பின்பும் இதுவரை உழைக்கும் மக்களின் அடிப்படையான பிரச்சனையான வறுமை ஒழிக்கப்படாததற்கு, உழைக்கும் மக்கள் போராடுவதற்கான வலிமையை வழங்கும் ஆயுதங்கள் இல்லாமல், மக்கள் நிராயுதபாணிகளாக இருப்பதுதான் காரணம் என்பதை உழைக்கும் மக்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பதற்கு காரணம் என்ன?.
இங்குள்ள கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் இந்த உண்மையை உழைக்கும் மக்களுக்கு உணர்த்தாமல் மூடிமறைப்பதுவே காரணமாகும்.
3. முதலாளிகள் தொழிலாளிகளிடமிருந்து (உழைக்கும் மக்களிடமிருந்து) போர் ஆயுதங்களைப் பறித்து நிராயுதபாணிகளாக்கி கூலி அடிமைகளாக ஒடுக்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் போலி கம்யூனிஸ்டுகள் தொழிலாளர் களிடமிருந்து தத்துவ ஆயுதமான மார்க்சிய லெனினிய ஆயுதத்தைப் பறித்து தத்துவத் துறையில் அறிவற்ற மூடர்களாக மாற்றி நிராயுதபாணிகளாக்கியுள்ளார்கள். இந்த வகையில் முதலாளிகளைக் காட்டிலும் போலி கம்யூனிஸ்டுகள் தொழிலாளர்களுக்கு மிகவும் கொடூரமான துரோகத்தைச் செய்துகொண்டு இருக்கிறார்கள். ஏனெனில் தொழிலாளர்களுக்கு உயிர் போன்ற மார்க்சிய லெனினிய தத்துவ ஆயுதம் தொழிலார்களின் கைகளில் இருக்குமானால் அதைக்கொண்டு ஒவ்வொரு சூழலிலும் என்னவகையான ஆயுதத்தை தொழிலாளர்கள் ஏந்த வேண்டும் என்பதை விஞ்ஞான அடித்தளத்திலிருந்து புரிந்துகொண்டு, தேவையான ஆயுதத்தை ஏந்தி தொழிலாளர்கள் போராடி அவர்களது எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெறுவார்கள். அத்தகைய வெற்றியை தொழிலாளிவர்க்கம் பெறமுடியாமல் தொடர்ந்து தோல்விகளை சந்தித்துக்கொண்டு,கொத்தடிமைகளாகவே வாழ்ந்துகொண்டுஇருப்பதற்கு முதலாளிகளைக் காட்டிலும் இந்தப் போலி கம்யூனிஸ்டுகளே முதன்மையான காரணமாகும்.
இந்த உண்மையை தொழிலாளி வர்க்கம் புரிந்துகொள்ள முடியாததற்கும் தொழிலாளர்களிடம் மார்க்சிய லெனினிய தத்துவ ஆயுதம் இல்லாததே காரணம் ஆகும். ஆகவே தொழிலாளி வர்க்கம் முதலில் ஏந்தவேண்டிய ஆயுதம் மார்க்சிய லெனினிய தத்துவ ஆயுதம் ஆகும் என்பதை புரிந்துகொண்டு, அந்த ஆயுதத்தை ஏந்தினால், அவர்களால் அவர்களின் எதிரிகளை மட்டுமல்லாது அவர்களின் நண்பர்கள் போல் வேடமணிந்து வலம்வரும் போலி கம்யூனிஸ்டுகளின் உண்மையான முகத்தையும் அடையாளம் கண்டு அவர்களையும் எதிர்த்துப் போராடி முறியடித்து வெற்றிபெற முடியும், கூலி அடிமைத்தனத்தை முற்றிலும் ஒழிக்க முடியும்.
4. அரசு பற்றிய பிரச்சனையில் உழைக்கும் மக்களின் கைகளில் போர் ஆயுதங்கள் இருக்கிறதா? அதாவது அவர்களுக்கு ஆயுதம் ஏந்துவதற்கானஉரிமை இருக்கிறதா? என்பதை பார்ப்பதற்கு முதலாளித்துவசிந்தனையாளர்கள் மறுத்துவிடுகிறார்கள் என்றார் லெனின். இந்தமுதலாளித்துவ அரசியல்வாதிகளைப் போலவே கம்யூனிச வேடம் போட்டதிருத்தல்வாத மென்ஷ்விக்குகளும் உழைக்கும் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஆயுதங்கள் அவர்களிடம் உள்ளதா? என்பதை பார்க்க மறுக்கிறார்கள் என்றார் லெனின். அதாவது உழைக்கும் மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வதற்கான ஆயுதங்கள் அவர்களது கைகளில் இருக்க வேண்டியது அவசியம் என்பதை ஒவ்வொரு கம்யூனிஸ்டும் உணர்ந்துகொண்டு, அதனை மக்களிடம் போதித்து உழைக்கும் மக்களை ஆயுதபாணியாக்குவதன் மூலமே உழைக்கும் மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வகை செய்ய முடியும். எந்தெந்த சூழலில் எவ்வகையான ஆயுதத்தை உழைக்கும் மக்கள் ஏந்த வேண்டும் என்று உழைக்கும் மக்களுக்கு வழிகாட்ட வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். இருந்தபோதும் உழைக்கும் மக்கள் மார்க்சிய லெனினியம் என்ற கருத்தியலான ஆயுதத்தை எப்போதும் கைகளில் ஏந்திட வேண்டும் என்பதை ஒருபோதும் நாம் மறந்துவிடக் கூடாது.
5. அரசு பற்றிய பிரச்சனையைப் போன்றே மதம் பற்றிய பிரச்சனையிலும் முதலாளித்துவவாதிகளைப் போலவே சீரழிந்து சந்தர்ப்பவாதிகளாக இழிந்துபோன ஜெர்மன் சமூகஜனநாயகவாதிகள், அரசைப் பொறுத்தளவில் மதம் என்பது தனிநபர் விவகாரம் என்ற கொள்கையை பொதுவுடமை அமைப்பிற்கும் பொருத்தி பாட்டாளி வர்க்க கட்சிக்குள்ளும் மதம் தனிநபர் விவகாரம் என்றனர். இது பாட்டாளிவர்க்க கட்சியின் புரட்சிகரமான வேலைத்திட்டத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்றார் எங்கெல்ஸ், மேலும் அதனை கடுமையாக கண்டித்தார். கட்சியைப் பொருத்தமட்டில் கட்சியானது மக்களை மதிமயக்கும் மதம் என்னும் அபினியை எதிர்த்துப் போராட வேண்டியது அதன் கடமை என்றார் எங்கெல்ஸ். ஒரு தனிநபர் கடவுளை வணங்குவதும், மத நம்பிக்கை கொள்வதும் அவரது தனிப்பட்ட விசமாகும். ஆனால் ஒரு கம்யூனிஸ்டுக்கு அது தனிப்பட்ட விசயமல்ல. மாறாக மதம் மற்றும் மூட நம்பிக்கைகளை எதிர்த்துப் பிரச்சாரமும் போராடவும் வேண்டும் என்பது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். இருப்பினும் தொழிலாளி வர்க்கம் நடத்தும் வர்க்கப் போராட்டத்துக்கு உட்பட்டே கம்யூனிஸ்டுகள் மத எதிர்ப்பு போராட்டத்தை நடத்த வேண்டும்.உதாரணமாக பல்வேறுவிதமான கடவுள் நம்பிக்கைகொண்ட உழைப்பாளர்கள் முதலாளிகளை எதிர்த்து ஒன்றுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சூழலில் மத எதிர்ப்பு போராட்டம் நடத்துவது கடவுள் நம்பிக்கைகொண்ட மக்களிடம் சோர்வை எற்படுத்தி போராட்ட உணர்வை குன்றச் செய்யும். ஆகவேதான் மத எதிர்ப்பு போராட்டத்தை வர்க்கப் போராட்டத்தை முதன்மைபடுத்தி நடத்திட வேண்டும் என்று மார்க்சியஆசான்கள் போதித்துள்ளனர்.
6. “அனேகமாய்த் தொழிலாளர்கள் அல்லது தொழிலாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமே கம்யூனில் இருந்ததால், அந்த கம்யூன் அரசினால் கொண்டுவரப்பட்ட சட்டங்களும் திட்டங்களும் பெரும்பான்மையாக உழைக்கும் மக்களுக்கு நலன் பயப்பனவையாக இருந்தது” என்று எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். அத்தகைய பாரீஸ் கம்யூன் அரசோடு இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கின்ற இந்திய அரசோடும், சிபிஎம் கட்சியின் மாநில ஆட்சியையும் ஒப்பிட்டுப் பாருங்கள். எது உண்மையிலேயே மக்களின் நலன்களை பாதுகாக்கின்ற அரசு? இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் மற்றும் பாஜகவின் அரசுகள் மக்களின் நலன்களுக்காகச் சட்டம் போட்டார்களா? இல்லையே. மக்களுக்கு துண்பம் கொடுக்கும் சட்டங்களைத்தானே போட்டார்கள். அதே போலவே சிபிஎம்-ன் ஆட்சி விவசாயிகளிடமிருந்து நிலங்களை பறிப்பதற்குத்தானே சட்டம் போட்டார்கள். அந்த சட்டம் விவசாயிகளின் நலனுக்கான சட்டமா? விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தைத்தானே சிபிஎம் ஆட்சி போட்டது.
ஆகவே இந்திய பாராளுமன்ற ஆட்சியின் வரலாற்றைப் பரிசீலித்தால், இங்கு எந்த கட்சியின் ஆட்சியும் மக்களின் நலனுக்கான சட்டங்களைப் போடவில்லை. மாறாக சிறு குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல, சில அற்ப சீர்திருத்தங்களுக்கான சட்டத்தை மட்டும் போட்டுவிட்டு மக்களை ஏமாற்றினார்கள். அனைத்து மக்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்குவதற்கான சட்டத்தையோ திட்டத்தையோ இவர்கள் போடவில்லை. ஆனால் மக்களை ஏமாற்றுவதற்காக மக்களில்
மிகமிகச் சிலருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் இடஒதுக்கீட்டுக்கான சட்டத்தை மட்டும் போட்டுவிட்டு அனைத்து மக்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்குவதற்காக திட்டமிடுவதற்கு எவ்விதமான முயற்சியையும் செய்ய மறுக்கிறார்கள். ஆனால் சோவியத்து ரஷ்யாவில்தான் சோவியத்து சோசலிச ஆட்சிதான் அனைத்துமக்களுக்கும் கல்வி வேலைவாய்ப்பை வழங்கியது. அத்தகைய ஆட்சிமுறைதான் கம்யூன் ஆட்சிமுறையாகும். அத்தகைய ஆட்சிமுறையை ஏற்படுத்துவதற்குப் பாடுபடுபவர்தான் உண்மையான மார்க்சிய லெனினியவாதியான கம்யூனிஸ்டாகும்.
7. இராணுவம், போலீஸ், மற்றும் அதிகாரவர்க்கம் ஆகிய மூன்றுவகையான அரசு எந்திரத்தின் மூலமே அதிகாரம் செலுத்தப்பட்டு உழைக்கும் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். இத்தகைய அதிகார அமைப்பைத்தான் பிரான்ஸ் நாட்டில் நெப்போலியன் தோற்றுவித்தான். அதற்குப் பின்பு வந்த ஒவ்வொரு அரசாங்கங்களும் இந்த அரசு எந்திரம் என்ற ஆயுதத்தைதான் விருப்பத்தோடும் மகிழ்ச்சியோடும் ஏற்றுக்கொண்டு, இந்த ஆயுதத்தைக் கொண்டே அவர்களது எதிரிகளுக்கு (உழைக்கும் மக்களுக்கு) எதிராகப் பயன்படுத்தினார்கள் என்றும் இத்தகைய அதிகார ஆயுதத்தைத்தான் பாரீஸ் கம்யூன் தொழிலாளர்கள் வீழ்த்தினார்கள் என்றும், அந்த அனுபவத்திலிருந்து ஒவ்வொரு நாட்டிலுள்ள தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும்
அவர்களது சொந்த நாட்டில் உழைக்கும் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் அதிகார ஆயுதத்தை பாரீஸ் கம்யூன் தொழிலாளர்களின் வழியில் ஒழித்துக்கட்ட வேண்டும் என்றார் எங்கெல்ஸ். எங்கெல்சின் இந்த போதனையை சரியாக உள்வாங்கிய ரஷ்ய போல்ஷ்விக் கட்சியும், சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியும், அவர்களது நாட்டில் உழைக்கும் மக்களை ஒடுக்கிக்கொண்டிருந்த அதிகாரவர்க்க அமைப்பை ஒழித்துக்கட்டி உண்மையில் உழைக்கும் மக்களுக்கு சேவை செய்யும் அரசு அமைப்பை உருவாக்கினார்கள். இந்த எங்கெல்சின் போதனையை பின்பற்றுபவரே உண்மையான கம்யூனிஸ்டு ஆவார். இதனை பின்பற்ற மறுப்பவர், அவர் தன்னை கம்யூனிஸ்டு என்று பெயர் சூட்டிக்கொண்டாலும் அவர் நிச்சயமாக போலி கம்யூனிஸ்டே ஆவார்.
8. பிரான்சில் பாரீஸ் கம்யூன் மூலம் அதிகாரத்துக்கு வந்த தொழிலாளி வர்க்கம் கீழ்கண்ட அனுபவங்களைப் பெற்றது.
1) அதிகாரத்துக்கு வந்த தொழிலாளர்கள் அல்லது கம்யூனிஸ்டுக்கட்சியானது, அதிகாரத்துக்கு வந்துவிட்டாலும், ஏற்கனவே முதலாளிகளை பாதுகாப்பதற்காகவும் அதற்காகவே பழக்கப்படுத்தப்பட்ட இராணுவம், போலீஸ், மற்றும் அதிகாரிகளை உழைக்கும் மக்களின் நலன்களுக்காகப் பயன்படுத்த முடியாது என்ற அனுபவம் அவர்களுக்கு கிடைத்தது.
2) மக்களை இதுவரை ஒடுக்கிவந்த அதிகாரவர்க்க எந்திரத்தை ஒழித்துவிட்டு, தொழிலாளி வர்க்கம், தனது சொந்த பிரதிநிதிகளையும் அதிகாரிகளையும் மக்களே தேர்ந்தெடுத்தாலும், தொழிலாளி வர்க்கம் தன்னையும் உழைக்கும் மக்களையும், கம்யூன் அரசையும் பாதுகாக்கும் பொருட்டு தனது பிரதிநிதிகளும் எந்த நேரத்திலும் திருப்பி அழைக்கப்படக் கூடியவர்களே என்பதை பகிரங்கமாக பிரகடனம் செய்ய வேண்டியது அவசியமாகும் என்ற பாடத்தை கற்றுக்கொண்டது. இதன் மூலம் கம்யூன் அரசை உருவாக்குவது மட்டும் உழைக்கும் மக்களின் கடமை இல்லை, அந்த அரசை தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும். அவ்வாறு மக்கள் கம்யூன் அரசை தொடர்ந்து கண்காணித்து தவறுகள் காணப்படும்போது அவ்வப்போது உடனடியாக மக்கள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கம்யூன் அரசை பாதுகாக்க முடியும் என்ற அனுபத்தை பாரீஸ் கம்யூன் பெற்றது. ரஷ்யாவில் பாரீஸ் கம்யூனது முதல் அனுபவத்தை எடுத்துக்கொண்டு சோவியத்துக்கு முன்பு இருந்த அரசு எந்திரத்தை முற்றிலுமாக ஒழித்துவிட்டு சோவியத்து அரசு உருவாக்கப்பட்டது. ஆனால் பாரீஸ் கம்யூனது இரண்டாவது அனுபவத்திலிருந்து ரஷ்ய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சோவியத்து பிரதிநிதிகளை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கத் தவறியதால் அங்கே சோவியத்து அரசை பாதுகாக்க முடியவில்லை. சோவியத்து அரசை முதலாளிகள் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் ஊடுருவியே கம்யூனிஸ்டுக் கட்சியை திருத்தல்வாத கட்சியாக மாற்றி சோவியத்து அரசையும் வீழ்த்திவிட்டார்கள். வெற்றிபெற்ற சோவியத்து கம்யூனிஸ்டுக் கட்சியையே கைப்பற்றிய முதலாளிகள் இங்குள்ள கம்யூனிஸ்டு அமைப்புக்குள் ஊடுரிவி என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இங்கே பாரீஸ் கம்யூன் அனுபத்திலிருந்து படிப்பினை பெற்று செயல்பட முன்வராதவரை இங்கே கம்யூனிச ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. இங்கே கம்யூனிஸ்டு என்று சொல்லிக்கொள்பவர்கள், எம்எல்ஏ, எம்பி, மந்திரிகளாக ஆகி, இந்த போலீசையும், அதிகாரிகளையும் கொண்டே மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று சொல்லி மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் உண்மையில் கம்யூனிஸ்டுகள் இல்லை. மாறாக சிவப்புச் சட்டை போட்ட முதலாளித்துவ சீமான்களே ஆவார்கள். இந்த கட்சிகளும் கம்யூனிஸ்டுக் கட்சிகள் இல்லை. இவர்கள் சிவப்பு கொடி பிடிக்கும் முதலாளித்துவ கட்சிகளே.
9. முடியரசு அதாவது மன்னராட்சி முறையில் மட்டுமல்லாது குடியரசிலும் அதாவது பாராளுமன்ற ஜனநாயக முறையிலான ஆட்சியிலும், அரசு அதிகாரிகள் மக்களுக்கு பணி செய்யக்கூடிய பணியாட்களாக இல்லாமல் மக்களின் மீது அதிகாரம் செலுத்துபவர்களாகவும் மக்களை அச்சுறுத்தி ஒடுக்குபவர்களாகவுமே உள்ளனர் என்று எங்கெல்ஸ் தெளிவுபடுத்துகிறார்.இந்த எங்கல்சின் கொள்கைக்கு மாறாக இந்த பாராளுமன்ற ஆட்சி புனிதமான ஆட்சி என்றும், இந்தப் பாராளுமன்றமும் அரசியல் சட்டமும் புனிதமானது என்றும்இந்த புனிதமான பாராளுமன்றத்தையும் அரசியல் சட்டத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று சில போலி கம்யூனிஸ்டுகள் பிரச்சாரம் செய்கிறார்களே, இவர்களுக்கு எங்கெல்சின் இந்த போதனை தெரியுமா? தெரிந்தால் பாராளுமன்றத்தின் புனிதத்தை காத்திட வேண்டும் என்று பிரச்சாரம்செய்வார்களா? உழைக்கும் மக்கள் சிந்திக்க வேண்டும். இந்த பாராளுமன்றத்தில் போடப்பட்ட சட்டங்களில் எத்தனை சட்டம் மக்களின் நலனுக்கானது?
எத்தனை சட்டம் மக்களுக்கு எதிரானது என்பதை சிந்தித்துப் பாருங்கள். மிகப் பெருவாரியான சட்டங்களும் அரசியல் சட்டமும் மக்களுக்கு எதிராக இருப்பதையே நாம் காணலாம். இந்த நிலையில் இந்தப் பாராளுமன்றத்தை பாதுகாக்க வேண்டும் என்று சொல்வது மக்களுக்கு செய்யும் துரோகமே ஆகும். இதற்கு மாற்று கம்யூன் அரசுதான் என்பதை பிரச்சாரம் செய்பவரே உண்மையான கம்யூனிஸ்டாவார். அந்தக் கட்சிதான் உண்மையான கம்யூனிஸ்டுக் கட்சியாகும்.
இப்படி நாம் சொல்வதால் நாம் பாராளுமன்றத்தை புறக்கணிக்க வேண்டும் என்று கூறுவதாக யாரும் தவறாக கருத வேண்டாம். இந்த பாராளுமன்ற நடவடிக்கையில் பங்குகொண்டே கம்யூன் அரசமைப்பு பற்றி பிரச்சாரம் செய்யும் மேடையாக பாராளுமன்றத்தை பயன்படுத்த வேண்டும் என்பதே மார்க்சிய லெனினியம் ஆகும்.
10. அரசும், அரசின் நிர்வாக உறுப்புகளும் மக்களுக்கு பணியாற்றும் பணியாட்க்கள் என்ற நிலைக்கு மாறாக மக்களின் மீது அதிகாரம் செலுத்தும் எஜமானர்கள் என்ற நிலையை மாற்றுவதற்காக பாரீஸ் கம்யூன் முன்வைத்த கொள்கைகள் என்ன? நிர்வாகம், நீதித்துறை, கல்வி போன்ற அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் மூலம் மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறையை முன்வைத்தது, மேலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மக்கள் திருப்பி அழைக்கும் முறையையும் முன்வைத்தது. இரண்டாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு பிற தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளமே அதிகாரிகளுக்கும் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் அதிகாரப் போட்டிகள் தவிர்க்கப்பட்டது. அரசு அதிகாரிகளின் செயல்பாட்டை நவீன முறைகளைப் பயன்படுத்தி எளிமையாக்க வேண்டியது அவசியம் என்று உணரப்பட்டது. அதன் மூலம் மட்டுமே தொழிலாளர்களும் அரசு அதிகாரிகளுக்குரிய பணியை செய்ய முடியும் என்று உணரப்பட்டது. அதிகாரிகளுக்கு லாபம் கிடைக்குமாறு இருந்த பணிகளில் இலாபம் கிடைக்க முடியாதபடி செய்வதோடு பதவிகள் மதிப்புக்குரியது என்ற நிலையையும் இல்லாது மாற்ற வேண்டும் என்பது உணரப்பட்டது. இத்தகைய முறையில் உழைக்கும் வர்க்கத்துக்கான அரசுமுறை உடனடியாக அல்லது சிறிது காலத்திற்குள் உருவாகிவிடும் என்று கருத முடியாது. அதற்கு பல காலம் ஆகும். அதே வேளையில் அதனை சாதிக்க முடியாமலும் போய்விடலாம்.
அவ்வாறுதான் ரஷ்யாவில் சோவியத்து ஆட்சியில் சோவியத்து பிரதிநிதிகளும், அதிகாரிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் சுயநலவாதிகளாக மாறி சோவியத்து அரசையே வீழ்த்திவிட்டனர். இந்த காரணத்தைச் சொல்லியே இங்குள்ள முதலாளித்துவவாதிகளும் திருத்தல்வாதிகளும் கம்யூன் ஆட்சிமுறையை மறுக்கிறார்கள். ஆகவே சோவியத்து ஆட்சி வீழ்ச்சிக்கு அங்கிருந்த கம்யூனிஸ்டுகள் மற்றும் மக்களிடம் சித்தாந்த மறுவார்ப்பு இல்லாததே காரணமாகும். ஏனெனில் புதிய சூழலில் சமூகமானது புதிய பிரச்சனைகளை எதிர்கொள்ளும், அந்த புதிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு புதிய வகையான நடைமுறையை மார்க்சிய லெனினிய தத்துவ வெளிச்சத்தில் நாம் கண்டுபிடித்து செயல்பட வேண்டும். அதற்கு நாம் தொடர்ந்து சித்தாந்த மறுவார்ப்பு செய்ய வேண்டும் என்றார் சௌ என் லாய். ஆகவே ரஷ்யாவில் சித்தாந்த மறுவார்ப்பு செய்யவில்லை, அதன் அடிப்படையில் நடைமுறையை வகுத்துக்கொள்ளவில்லை. ஆகவேதான் அங்கு சோவியத்து வீழ்த்தப்பட்டது. அத்தகைய சோவியத்தே வீழ்த்தப்பட்டது என்றால் இங்குள்ள திருத்தல்வாத ஆட்சியின் கதி எப்படி இருக்கும் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து மாறுகின்றசூழலை மார்க்சிய வெளிச்சல் புரிந்துகொள்ள வேண்டும் அதற்கு நமக்கு முதன்மையாக தேவை மார்க்சிய லெனினிய கல்வி இயக்கம். தேன்மொழி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
"புரட்சிகர பாட்டாளி மக்கள் கட்சி மக்களை விழிப்படையச் செய்யும் பொருட்டு முதலாளித்துவ பாராளுமன்றத்தில் பங்கெடுக்க வேண்டும் தேர்தலின் போதும் பாராளுமன்றத்தில் கட்சிகளுக்கு இடையில் நடக்கும் போராட்டங்களின் போதும் அவ்வாறு செய்ய முடியும் ஆனால் வர்க்கப் போராட்டத்தை பாராளுமன்ற போராட்டமாக குறுக்கி விடுவது பாராளுமன்ற போராட்டத்தை உயர்ந்த பட்ச தீர்மானகரமான வடிவமாக்கி அனைத்துப் போராட்ட வடிவங்களையும் இதற்கு உட்பட்டவே ஆக்குவது உண்மையில் பாட்டாளி வர்க்கத்துக்கும் எதிராக முதலாளி தினத்தின் பக்கம் ஓடி விடுவதாகும்" (லெனின் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலும் பாட்டாளி மக்கள் சர்வாதிகாரம் பக்கம் 36 ஆங்கில பதிப்பு மாஸ்கோ).
முதலாளித்துவ பாராளுமன்றதின் பால் கடைபிடிக்க வேண்டிய சரியான அணுகுமுறை குறித்து மார்க்சிய லெனினிய வாதிகளுக்கும் பிற சந்தர்ப்பவாதிகளுக்கும் மற்றும் திருத்தல்வாதிகளுக்கும் இடையே ஒரு அடிப்படை வேறுபாடு எப்போதும் இருந்து வந்திருக்கிறது
முதலாளிகளின் பிற்போக்கு தன்மையை அம்பலப்படுத்தவும் மக்களுக்கு கற்றுக் கொடுக்கவும் புரட்சிகர வலிமை சேகரித்துக் கொள்ளவும் உதவும் குறிப்பான சூழ்நிலைகளில் பாட்டாளி வர்க்கக் கட்சி பாராளுமன்ற போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்றும் பாராளுமன்ற மேடையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மார்க்சிய லெனினியவாதிகள் புரிந்து செயல்பட வேண்டும் தேவைப்படும்போது இந்த சட்டப்பூர்வமான போராட்டத்தை பயன்படுத்திக் கொள்ள மறுப்பது தவறாகும் ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு மாறாக பாராளுமன்ற போராட்டத்தை கருதக்கூடாது அல்லது சோசலிசத்திற்கான மாற்றாக பாராளுமன்ற பாதை மூலம் சாதித்து விடலாம் என்று மாயையில் ஆழ்ந்து விடக்கூடாது அதாவது எல்லா சமயங்களிலும் வெகுஜன போராட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் .
இவை நமக்கான படிப்பினை எனும் பொழுது எங்கே லெனின் வழிகாட்டுதலை நாம் புரிந்துக் கொள்ள மறந்தோம் சிந்தியுங்கள் தோழர்களே!
No comments:
Post a Comment