சேலம் தீவட்டிபட்டி மாரியம்மன் கோவில் ஆலய நுழைவு மறுப்பும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரங்கள் குறித்து

 உண்மை அறியும் குழுவின் அறிக்கை கீழே:-

மருதுபாண்டியன் இரா.(17/05/2024)

9h  · 

#உண்மை_அறியும்_குழு_அறிக்கை.

சேலம் தீவட்டிபட்டி மாரியம்மன் கோவில் ஆலய நுழைவு மறுப்பும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரங்கள் குறித்து முற்போக்கு, சனநாயக இயக்கங்களின் கள ஆய்வு அறிக்கை.

----------------------------------------------

♦உண்மை அறியும் குழுவில்

பங்கேற்றோர் -

தோழர் கொளத்தூர் மணி

தலைவர்,

திராவிடர் விடுதலைக் கழகம்

தோழர் கண. குறிஞ்சி

ஒருங்கிணைப்பாளர்,

சமூகநீதிக் கூட்டமைப்பு

தோழர் மருதுபாண்டியன்

சோசலிச மையம்

தோழர் தமயந்தி

தமிழ்நாடு முற்போக்குப்

பெண் வழக்கறிஞர்கள் சங்கம்

தோழர் வளர்மதி

SUMS

தோழர் மாரியப்பன்

தமிழ்த்தேச மக்கள் முன்னணி

தோழர் கோ.சீ.மணி

தோழர் மூர்த்தி

தலைவர்,

நல்வழிக்கழகம்

தோழர் அருண்சோரி

க.க. மா-லெ-மா

தோழர் கண்ணன்

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி மே 2 / 2024 அன்று நடந்த சாதிய வன்முறைகளைத் தொடர்ந்து, முற்போக்கு, சனநாயக அமைப்புத் தோழர்கள் மே 11 ஆம் நாளன்று நேரடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று நாச்சினாம்பட்டி ஆதிதிராவிடர் குடியிருப்பு மக்களையும், தீவட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களையும், தீவட்டிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர்

( Investigation Officer - I.O.) திரு.ஞானசேகரன் அவர்களையும் சந்தித்ததன் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை முன் வைக்கப்படுகிறது.

♦தீவட்டிப்பட்டி கிராம அமைப்பு

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டத்தில் தீவட்டிப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த வன்னியர், சோழிய வேளாளர், நாயக்கர், போயர், உடையார் உள்ளிட்ட சுமார் 1000 குடும்பத்தினர் வசிக்கின்றனர். அருந்ததியர் சமூக மக்களும் வன்னியர் பகுதிக்கு அருகிலேயே வாழ்கின்றனர். இவர்கள் சுமார் 15 முதல் 20 குடும்பங்கள் வரை இருக்கின்றனர். இஸ்லாமிய சமூகத்தினரும் வாழ்கின்றனர்.

தீவட்டிபட்டிக் கிராமத்திற்கு மிக அருகில் நாச்சினம்பட்டி என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 200 ஆதி திராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயக் கூலித் தொழிலாளர்களாகவும், நூறு நாள் வேலைத் திட்டத்தில் கூலிகளாகவும் வேலை செய்து வருகின்றனர்.

♦கோயில் திருவிழா

தீவட்டிப்பட்டியில் ஒரு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இந்தக் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு சித்திரைத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இது வரை நடைபெற்ற திருவிழாக்களில் பட்டியலின மக்களும் பங்கேற்று வந்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. திருவிழா ஏழு நாள்கள் நடைபெறும். இவ்வாண்டு அதன்படியே ஏப்ரல் 29ஆம் நாள் தொடங்கி மே 5 ஆம் நாள் நிறைவுறுவதாக இருந்தது. முதல் நாள் திருவிழா கங்கணம் கட்டுவது. அன்று தலித்துகளுக்குத்தான் முதலில் கங்கணம் கட்டுவது வழக்கம். பிறகு கொடிக்கம்பம் ஏற்றுதல், தீர்த்தக்குடம், கூழ் ஊற்றுதல், அலகு குத்துதல், தேர்த்திருவிழா, வாணவேடிக்கை, மஞ்சள் நீராட்டம், பாட்டுக் கச்சேரி என நிகழ்வுகள் நடைபெறும். இறுதி நிகழ்வாகக் கணக்குப் பார்த்தல் மற்றும் ஊர்ப் பெரியவர்களை மேளதாளங்களுடன் வீட்டில் கொண்டு போய்ச் சேர்த்தல், விருந்து வைத்தல் ஆகியவற்றுடன் திருவிழா முடிவடைகிறது. இந்த விழாவிற்கான செலவினங்களுக்குத் தீவட்டிப்பட்டி பிற்படுத்தப்பட்ட சாதி மக்களிடையே மட்டும்தான் வரி வசூலிக்கின்றனர். நாச்சினம்பட்டி தலித் மக்கள் காலங்காலமாகவே வரி கொடுப்பதில்லை. கோவில் நிர்வாகக் குழுவினரும் கேட்பதில்லை. இது நெடுங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை மரபு.

மாரியம்மன் கோவிலில் முக்கியமான சடங்கு சக்தி அழைத்தல். இந்நிகழ்வின் போது பறையர் சமூக மக்கள் குடியிருப்பில் உள்ள கோவிலில் இருந்து பூவை எடுத்துச் சென்று தீவட்டிபட்டி மாரியம்மன் கோவிலில் வைத்துப் பூஜை செய்வது வழக்கமான ஒன்று. இந்த ஆண்டும் அப்படியேதான் விழா தொடங்கியிருக்கிறது.

தலித் மக்களுக்குத்தான் முதலில் கங்கணம் கட்டுவது முறை. ஆனால் இந்த ஆண்டு அவர்களுக்கு அந்த மரியாதையைச் செய்ய மறுத்த பூசாரி, “உங்களுக்கெல்லாம் கங்கணம் கட்ட முடியாது” என்று கூறிக் கங்கணத்தைத் தூக்கி வீசி உள்ளார். இந்நிகழ்ச்சிகளுக்கு முன்பே தலித் மக்களுக்கு இத்திருவிழாவில் பங்கேற்க அனுமதி கிடையாது என்ற ஒரு தகவல் வந்ததாக அய்யம்மாள்,

( வயது 30 ) கூறினார். எனவே இது தற்செயலான நிகழ்வாகத் தோன்றவில்லை, முன்கூட்டியே ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து தலித்துகளைத் திருவிழாவில் பங்கேற்க விடக்கூடாது என முடிவெடுத்துள்ளனர் என்றே தெரிகிறது.

♦கோயில் திருவிழாப் பிரச்சனையின் விவரம்

மே 1, 2024 - அலகு குத்தும் நிகழ்ச்சி : திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலகு குத்துதல். மாலை 5 மணி தொடங்கி 7.30 மணிக்குள் மற்றவர்கள் சடங்கு முடிந்த பிறகு தலித் மக்களுக்கு அலகு குத்துவது நடைமுறையாக உள்ளது. இதன்படி இந்தாண்டு தலித் பெண்கள் ஐந்து பேர் அலகு குத்த ஆறு மணிக்குக் கோவிலுக்குச் சென்றுள்ளனர். இம்முறை திட்டமிட்டபடி இவர்களுக்கு அலகு குத்துவதைத் தாமதப்படுத்தி உள்ளனர். இரவு 10 மணி வரை காக்க வைக்கப்பட்ட பின்பு பெண்கள் முறையிட்டதன் பேரில் வேறு வழி இல்லாமல் அலகு குத்தியுள்ளனர். வழக்கமாக அலகு குத்துபவர் குத்தாமல் வேறு ஒருவர் குத்தியுள்ளார். இது முடிந்த பிறகு தலித் மக்கள் கோவிலைச் சுற்றி வரும்பொழுது, வன்னிய சமுகத்தினர் தங்களின் சாதிப் பாடலை ரேடியோவில் போட்டும், மின் விளக்கை அணைத்தும் உள்ளனர். சுற்று முடிந்து கோவில் வாசலுக்கு வந்த பொழுது பூசாரி வம்படியாகத் திரைச்சீலையை இழுத்துக் கருவறையை மூடி உள்ளார். இதன் தொடர்ச்சியாகச் சேலம் அரசுக் கல்லூரியில் படித்து வரும் சூர்யா என்ற தலித் இளைஞர் அம்மனை

வழிபட ஆலயத்தில் சென்ற பொழுது அவரைக் கோவில் பூசாரி வெளியே தள்ளி விட்டுள்ளார். இச்சம்பவத்தினைக் கண்ட சூர்யாவின் உறவினர் கேள்வி கேட்ட பொழுது, “நீங்கள் கோவிலின் உள்ளே வரக் கூடாது” என்று பூசாரி கூறியுள்ளார். மேலும் அர்ச்சனை செய்வதற்காகக் கோவிலுக்குள் தலித் மக்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில் கோவில் வாசல் கதவை மூடியும், வன்னியர் சாதி உட்பட மற்ற மேல் சாதிப் பெண்கள் சுமார் 40 முதல் 50 பேர் கோவில் வாசலில் உட்கார்ந்தும் வழி மறித்துள்ளனர். அங்கிருந்த மாரியம்மன் கோவில் நிர்வாகிகள், குறிப்பாக பா.ம.க வைச் சேர்ந்த வெங்கடேசன், சின்னாக்கவுண்டர் ஆகியோரும்,

சாதியாதிக்கவாதிகளும் இதைச் செய்துள்ளதாக அனைவரும் குறிப்பிட்டனர். இந்த அநீதிக்கெதிராக பட்டியலின மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு 150க்கும் மேற்பட்ட தலித் மக்களும் 200க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களும் கூடியுள்ளனர். ஆனால் அதற்கு முதல் நாள் பால்குடம் எடுத்து வழிபடும் நிகழ்ச்சியில் தலித் மக்கள் உட்பட அனைவரும் ஆலயத்திற்குள் நுழைந்துதான் வழிபாடு செய்துள்ளனர். அதற்கு மறுநாள் அலகு குத்தி எடுக்கும் நிகழ்ச்சியின் போது மட்டும் கோயிலுக்குள் விடாமல் தகராறு செய்துள்ளனர்.

♦காவல் நிலைய ஆய்வாளர்/ வட்டாட்சியர் குறுக்கீடு.

இரண்டு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுவதை அறிந்த தீவட்டிபட்டிக் காவல்நிலைய ஆய்வாளர் ஞானசேகரன், கடையாம்பட்டி தாசில்தார் ஹசினாபேகம் ஆகியோர் அங்கு வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். கோவில் அனைவருக்கும் பொதுவானது என்று எடுத்துக் கூறியும் ஆதிக்க சாதியினர் அதற்கு உடன்பட மறுத்துவிட்டனர். இதற்குப் பட்டியலின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தலித் சமூகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. கட்சியின் பிரமுகரான விஜயன் என்பவரை அப்பொழுது காவல் ஆய்வாளர் அலைபேசியில் அழைத்து, "உடனடியாகக் கோவிலுக்கு வாருங்கள், உங்கள் இளைஞர்களைச் சமாதானப்படுத்துங்கள்" என்று கூறியிருக்கிறார்.

விஜயனும் அப்பகுதிக்கு வர அங்குள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினரிடத்தில், "இதுவரை நாம் ஒற்றுமையாகத்தானே இருந்தோம். இப்போது மட்டும் ஏன் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுக்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்ப, மறுபடியும் இரண்டு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மறுநாள் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தித் தீர்வு காணலாம் என்று முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது.

♦பேச்சுவார்த்தை

இதனைத் தொடர்ந்து மறுநாள் 02.05.2024 அன்று கடையாம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இரு தரப்பிலும் தலா 10 பேர் சமாதானக் கூட்டத்தில் பங்கு பெற்றுள்ளனர். சமாதானக் கூட்டத்தில் பேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,

பட்டியலின மக்களைக் கோயிலுக்குள் வழிபட அனுமதிப்பது தொடர்பாகத் தங்களுக்கு ஒருநாள் கால அவகாசம் வேண்டும் எனவும், தாங்கள் கிராமத்தில் பேசிச் சொல்வதாகவும் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் இரண்டு தரப்பிலும் மறுநாள் 03.05.2024 அன்று மறுபடியும் பேச்சு வார்த்தைக் கூட்டம் நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது.

♦கல்வீச்சுத் தாக்குதல்

இந்நிலையில் நாச்சினாம்பட்டியைச் சேர்ந்த பெருமாயி என்பவர் தனது மகன் அருண்குமார் (வயது 20 ) என்பவரை உணவு வாங்குவதற்காக 02.05.2024 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் தீவட்டிபட்டிப் பகுதிக்கு அனுப்பி உள்ளார் . அவர் மீது ஆதிக்கசாதியைச் சேர்ந்த இளைஞர்கள் கற்களை வீசியதாகவும், அதனால் அருணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு விட்டது எனவும் செய்தி பரவ ஆரம்பித்தது.

அருணின் தாயாரும் அவரது உறவினர்களும், பட்டியல் இன மக்களும் தங்களுக்கு நீதி வேண்டும் என்று கூறி சேலம் – தர்மபுரி நெடுஞ்சாலையில் சாலையில் அமர்ந்து போராட ஆரம்பித்துள்ளனர்.

இது குறித்து அருணின் தாயார் பெருமாயி அவர்களிடம் பேசிய போது, "பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் தொடர்ந்து ஜல்லி கற்களைக் கொண்டு தலித் மக்கள் மீது வீசிக் கொண்டே இருந்தனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. தலித் தரப்பிலும் கற்களைக் கொண்டு ஆதிக்கசாதி இளைஞர்கள் மீது வீசத் தொடங்கினர்" எனத் தெரிவித்தார். தொடர்ந்து கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.

♦போலீஸ் தடியடி

இந்தப் போராட்டம் நடைபெறும் போது 20க்கும் குறைவான போலீசாரே இருந்துள்ளனர். ஆனால் தீ வைப்பு சம்பவம் நடந்த பிறகு சுமார் 150க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதிகளில் குவிந்துள்ளனர். போராட்டக்காரர்கள் மீது கடுமையான தடியடிப் பிரயோகம் நடத்தியுள்ளனர். போலீசார் தலித் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து லத்திகளைக் கொண்டு தலித் மக்கள் மீது கடுமையான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

பட்டியலின மக்கள் வசிக்கும் நாச்சினம்பட்டி கிராமத்தினுள் நாங்கள் சென்று அங்குள்ள பெண்கள், இளைஞர்களிடம் கலவரம் குறித்து, அன்று என்ன நடந்தது என்று கேட்ட போது,"இத்தனை ஆண்டுகளாகத் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் வந்ததில்லை என்றும் "ஆதிக்க சாதி இளைஞர்கள் தற்போது எங்களை கோவிலுக்குள் வரவிடாமல் தடுத்ததால்தான் பிரச்னை" எழுந்ததாகத் தெரிவித்தார்கள்.

‘‘எனக்கு 63 வயதாகிறது. பல ஆண்டுகளாக நாங்கள் மாரியம்மன் கோவிலுக்கு உள்ளே சென்று வழிபாடு நடத்தி வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூஜை செய்து கோவிலுக்கு அழைத்துச் சென்றுதான் திருவிழா நடத்துவார்கள். அங்குள்ள சாதியினரும் நாங்களும் ஒன்றாகத்தான் இருந்து வந்தோம்.

ஆனால், இந்த ஆண்டு எங்களைக் கோவிலுக்குள் வரக்கூடாது என்று கூறியதோடு மட்டுமல்லாமல் சாதிப் பெயரைச் சொல்லி மிக மோசமாகத் திட்டியதாகவும்" கண்ணீருடன் தழுதழுத்த குரலில் ஒரு மூதாட்டி நம்மிடம் பேசினர். ‘‘பறையர் சாதியில் பிறந்தால் என்ன? நாங்களும் மனிதர்கள்தானே, எங்களுக்கும் கோவிலுக்குள் சென்று வழிபட உரிமை உள்ளது. நாங்கள் எங்கள் உரிமையைத்தானே கேட்கிறோம், எங்களைக் கோவிலுக்குள் வழிபட அனுமதிக்க வேண்டும், மீண்டும் நாங்கள் பிரச்னையின்றி வாழ வேண்டும்,’’ என்றார்.

♦போலீஸ் தொடர் அத்துமீறல்

கலவரம் முடிந்தும் போலீசார் தங்கள் கிராமத்தினுள் நுழைந்து கடுமையாகத் தங்களைத் தாக்கியதாகவும், வீடு புகுந்து பெண்களைத் தாக்கியதாகவும் காலனி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். பத்து, பனிரெண்டு வயது குழந்தைகளைக்கூடப் பிடித்து அவர்கள் கன்னத்தில் கடுமையாக அறைந்து, லத்திக் கம்பால் தாக்கியிருக்கின்றனர். பெண்கள் மீதும் கடுமையான தாக்குதல் நடந்துள்ளது. ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் போலீசார் இழிவாகப் பேசியிருக்கின்றனர். பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தாக்குதலுக்கு உள்ளான பட்டியலின மக்கள் மீதே காவல்துறையினர் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். மாரியம்மன் கோவில் திருவிழா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

♦வழக்குகள் விவரம்

தீவட்டிபட்டிச் சம்பவம் குறித்து மூன்று வழக்குகள் தீவட்டிபட்டி காவல்நிலையத்த்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கிராம நிர்வாக அலுவலர் அம்பேத்கர் மாது என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றஎண்.254/2024 பிரிவுகள் 147, 148, 341, 294(b), 324, 332, 506(2) IPC and TNPPDL Act 4 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகாரில் தலித்துக்கள்தான் சாலை மறியலில் ஈடுபட்டனர் என்றும், அவர்கள்தான் முதலில் சாதி இந்துக்கள் மீது கல்லெறிந்து தாக்கிக் கலவரத்தைத் தொடங்கினர் என்றும் புகார் கொடுத்துள்ளார். முதல் தகவல் அறிக்கையிலும் அவ்வாறே கூறப்பட்டுள்ளது. 29 பேர் மீது இந்தப் புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அடுத்த வழக்கு பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த விஜயா என்பவர் தலித்துகளுக்கு எதிராகக் கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றஎண்.255/2024 பிரிவுகள் 147, 148, 294(b), 436, 506(2) IPC and TNPPDL Act 4 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கலவரம் நடந்தது 02-05-2024. ஆனால் கோவிலுக்குள் அனுமதி மறுப்பு சம்பந்தமான புகார் 06.05.2024 அன்று தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ராதாகிருஷ்ணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றஎண்.258/2024 கீழ் 153B IPC மற்றும் பட்டியல் சாதியினர் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 3(1)(za)(C) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 10 பேர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இவர்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

காவல்துறை ஆய்வாளரிடம் பேசியபோது இரு பக்கமும் தலா பதினைந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், மேலும் சிலரைத் தேடி வருவதாகவும் கூறினார். தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய சாதி இந்துக்களின் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று கேட்ட பொழுது,"யாரும் புகார் அளிக்கவில்லை; பாதிக்கப்பட்டவர்கள் இரு பக்கமும் இருந்து புகார் அளித்தால் அதன் அடிப்படையில் நாங்கள் வழக்கைப் பதிவு செய்து விசாரிக்கத் தயாராக இருக்கிறோம்" என்றார்.

♦களஆய்வில் கண்டறிந்தவை

(1) கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் சாதியைப் பெருமை படுத்தும் பாடலை ஒலிபரப்பி உள்ளனர். அதனைத் தொடர்ந்து பறையர் சமூக மக்கள் விஜயகாந்த் பாடல் ஒன்றினை ஒலிபரப்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். அதற்குச் சில வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், இது எங்க கோவில். பறையர் சொல்வதை எல்லாம் நாங்கள் கேட்க முடியாது என்று கூற, இரண்டு தரப்பிற்கும் இடைய தகராறோடு திருவிழா முடிந்துள்ளது. இந்தத் தகவல் காவல்துறை உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும். எனவே இந்த ஆண்டு தகராறு வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று முன்கூட்டியே கணித்து அதற்கேற்பப் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் காவல்துறை செய்யத் தவறிவிட்டது.

(2) இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட கோவிலில், ஒரு குறிப்பிட்ட பிரிவினர், மற்ற சமூக மக்களை அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய பொழுது, வட்டாட்சியரும் காவல் ஆய்வாளரும் நடந்து கொண்ட முறை வியப்பளிக்கிறது. இது குறித்த சட்டத்தை எடுத்துக் கூறி, சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவர் என்று எச்சரிக்கைக் கொடுத்து, அனைத்து மக்களையும் உள்ளே பாதுகாப்போடு அழைத்துச் சென்றிருக்க வேண்டிய கடமையிலிருந்து தவறி விட்டு, சமாதானப் பேச்சு வார்த்தை என்ற கட்டப்பஞ்சாயத்தைத் தொடங்கியதுதான் பிரச்சனையின் ஆரம்பச் சுழியாக உள்ளது. மாவட்ட வருவாய்த் துறையும் காவல்துறையும் மெத்தனமாக நடந்து கொண்டதனால் தான் இவ்வளவு வன்முறையும் கலவரமும் வெடித்திருக்கிறது.

(3) 01-05-2024 இரவு கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட உடனேயே, பதட்டமான சூழ்நிலையைப் புரிந்து கொண்டு மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் கூடுதலான காவலர்களைப் பணியில் அமர்த்தி முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

(4) சட்டத்திற்குப் புறம்பாகவும் சம்பிரதாயத்துக்குப் புறம்பாகவும் ஆதிக்க சாதியினர் நடந்து கொண்ட போதே, உடனடியாக அவர்களை எச்சரித்துக் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும். காவல்துறையும் மாவட்ட வருவாய்த் துறையும் சட்டப்படி செயல்படாததே இந்தக் கலவரத்திற்கு முக்கியக் காரணம்.

(5) கலவரம் தொடர்பாக நாச்சினம்பட்டி தலித் மக்கள் குடியிருப்பில் மட்டும்தான் நுழைந்து தேடுதல் வேட்டை என்ற பெயரில் அந்த மக்களை அடித்து மிரட்டியுள்ளனர். ஆனால் காவல்துறை வன்னியர் பகுதிக்குள் செல்லவே இல்லை. நீங்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து கொள்ளுங்கள். வெளியே வராதீர்கள் என்று காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளதை அறிய முடிந்தது.

(6) நாச்சினம்பட்டி தலித் காலனி பகுதிக்குள் அந்த மக்களிடம் நடந்த சம்பவங்களை, உண்மை அறியும் குழுவினர் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே பின்னால் இருந்து சீருடை அணியாத காவல்துறையினர் அனைவரையும் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். இதை கண்டறிந்த நமது குழுவினர் உடனடியாக அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். யார் யாரெல்லாம் பேட்டி கொடுக்கிறார்களோ அவர்களை அச்சுறுத்துவதாகவும், அவர்கள் மீது வழக்கு போட்டு விடுவோம் என்று காவல்துறையினர் மிரட்டுவதாகவும் தலித் மக்கள் கூறினர்.

(7) தீவட்டிப்பட்டி கிராமத்தில் உள்ள 70 வயது மதிக்கத்தக்க வன்னியர் சமூகத் தம்பதிகளிடம் உரையாடிய போது, "காலங்காலமாகத் தலித் மக்கள் இந்தக் கோவிலுக்குள் சென்று வணங்குவது உண்மைதான்" என்பதை உறுதிப்படுத்தினர்.

(😎 விடுதலைச் சிறுத்தைகளின் மாவட்டச் செயலாளர் தெய்வானை அவர்கள் தலையிட்ட பின்புதான் தலித் மக்கள் மீதான வன்முறை குறைந்திருப்பதாக நாச்சினம்பட்டி கிராமத் தலித் மக்கள் கூறினர்.

(9) இந்தக் கலவரத்தில் தீ வைப்புச் சம்பவத்தின் போது சில கடைகள் எரிந்து நாசமாகி உள்ளன.

♦Single Boys: முடி திருத்தும் கடை. இதனை நடத்துபவர் தலித் இளைஞர். இவர் பெங்களூருக்குச் சென்று

Fashion Designing படித்துள்ளார். இந்தத் கடையைக் கடந்த ஓராண்டு காலமாக நடத்தி வருகிறார். இது முழுவதுமாக எரிந்து விட்டது.

♦விஜயா என்பவரின் பழக்கடை. இது Single Boys கடைக்குக் கீழே உள்ளது. பழக்கடையின் உரிமையாளர் வன்னியர் சாதியை சேர்ந்தவர். இவரின் அண்ணன்தான் வெங்கடேசன். இவர் பா.ம.க. வில் ஆட்டையாம்பட்டி மேற்கு ஒன்றியச் செயலாளராக இருக்கிறார். இவர்தான் சாதி வன்முறைக்கான முக்கியக் காரணம் என்று தலித் மக்கள் கூறுகின்றனர். சரஸ், ஜோதி, பாலா, நாகமணி ஆகிய பெண்களுடன் சேர்ந்து விஜயா தனது கடைக்குத் தானே தீ வைத்துள்ளார். மேலே உள்ள முடி திருத்தும் கடைக்கும் தீ பரவியுள்ளது. இதில் இரண்டு கடைகளுமே முற்றாக எரிந்து விட்டன.

♦நகைக் கடையின் விளம்பரப் பதாகை மட்டுமே எரிந்துள்ளது.

♦லட்சுமி ஐயங்கார் பேக்கரியில் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

♦காவல்துறையினர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் :

1. இராணி, க/பெ இராஜா மணி

2. அமிர்தவள்ளி, வயது 23, க/பெ செல்வராஜ்

3. முருகன், வயது 12, த/பெ மணி

4. விஜயராகவன், வயது 14, த/பெ இராஜாமணி

5. தவசி, வயது 11, த/பெ இரமேஷ்

6. முனீஷ், வயது 12, த/பெ இரமேஷ்

7. இந்தியன், வயது 15, த/பெ வல்லதுரை

8. தமிழழகன், வயது 11, த/பெ வல்லதுரை

9. கமலேஷ், வயது 16, த/பெ. பொன்னு வேல்

10. வீரம்மாள், வயது 40, க/பெ கிருஷ்ணன்

11. விக்னேஸ்வரன், வயது 23, த/பெ பழனி

12. யுவராஜ், வயது 24, த/பெ. மாரியப்பன்

13. சிவராஜ், வயது 35, த/பெ சின்னராஜ்

14. சந்தோஷ், வயது 23, த/பெ சேகர்

15. இராஜு, வயது 30, த/பெ சேகர்

16. தீபன், வயது 18, த/பெ அம்மாசி

17. பசுபதி, வயது 39, த/பெ ஈஸ்வரன்

♦தீவட்டிப் பட்டி கலவரம் குறித்த

உண்மை அறியும் குழுவின் பரிந்துரைகள்

♦தீவட்டிப்பட்டிக் கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

♦ஆதிதிராவிடர் பகுதியில் தேவையில்லாமல் பலர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவை திரும்பப் பெறப்பட வேண்டும். எடுத்துக் காட்டாகப் பெருமாயி மகன் அருண்குமார் (வயது 23) , குணா ( 21 ) தா/பெ பழநியம்மாள் போன்ற பல அப்பாவி இளைஞர்கள் கலவரத்தில் காயம் அடைந்ததோடு ஆத்தூர் சிறையிலும் அடைக்கப் பட்டுள்ளனர்.

♦காவல் துறை தாக்குதலால் காயம் பட்டு இருப்பவர்களுக்கு உரிய தரமான மருத்துவ சிகிச்சை அரசு பொறுப்பில் வழங்கப்பட வேண்டும்.

♦காவல்துறைக் கண்காணிப்பை அதிகரிப்பதோடு, தொடர்ந்து இரவு நேரத்தில் வந்து இளைஞர்களைக் கைது செய்து கொண்டு செல்லும் நடைமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

♦தீவட்டிப்பட்டியில் அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும். எடுக்கப்பட வேண்டும்.

♦சக்தி மாரியம்மன் கோயில், தமிழ்நாடு அறநிலைத்துறையின் கீழ் இருந்தாலும் வன்னியர்கள் தங்களது ஆதிக்கத்தில் அதைக் கையகப்படுத்திக் கொண்டிருப்பது ஏற்கத் தக்கதல்ல. எனவே அறநிலையத் துறை இதில் தலையிட்டுக் கோயிலைத் தனது பொறுப்பின் கீழ் கொண்டுவர வேண்டும். மேலும் கோயில் நிர்வாகக் குழுவில் ஆதி திராவிட மக்களுக்கு உரிய பிரதிநித்துவம் தரப்பட வேண்டும்.

♦சக்தி மாரியம்மன் கோயில் அறநிலையத் துறையின் கீழ்தான் உள்ளது என்பது பற்றிய அறிவிப்புப் பலகை, கோயிலின் எந்தப் பகுதியிலும் வைக்கப்படவில்லை. அது சரி செய்யப்பட வேண்டும்.

♦சக்தி மாரியம்மன் கோயில் பூசாரி பெரும்பான்மைச் சமூகத்தைச் சார்ந்தவராக இருப்பதை மாற்றிச் சுழற்சி முறையில் அமைக்க வேண்டும்.

♦தீவட்டிப் பட்டி அரசுயர் பள்ளியில் மாணவர்களிடையே கஞ்சா போன்ற போதைப் பொருள் பயன்பாடு அதிக அளவு இருப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதை முற்றிலும் ஒழித்துக்கட்டத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

♦இந்தக் கலவரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த ஆட்டையாம்பட்டி ஒன்றியச்செயலாளர் வெங்கடேசன் என்பவருக்கு மிக முக்கியப் பங்கு இருப்பதாகத் தெரிய வருகிறது. அவர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.

♦ஆதிதிராவிட சமுதாயத்திலுள்ள பெண்கள் பலருக்கு 100 நாள் வேலைதான் வாழ்வாதாரமாக உள்ளது. ஆனால் அவர்கள் வேலைக்குச் செல்வதற்கும் அஞ்சி வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களிடைய நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

♦காவல் துறை பக்கச்சார்பாக நடந்து கொண்டுள்ளது மிகத்தெளிவாகத் தெரிகிறது. பெண்களையும், சிறுவர்களையும் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தி உள்ளனர். குறிப்பாக ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த ராணி (38) க/ பெ ராஜாமணி என்பவரைக் குளியலறையிலிருந்து இழுத்துக் கொண்டுவந்து தாக்கி உள்ளனர். இத்தகைய அராஜகச் செயலில் ஈடுபட்ட காவலரைக் கண்டறிந்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

♦சிசிடிவி காமிரா மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது செல்பேசியில் எடுத்த படங்கள் ஆகியவற்றைப் பரிசீலித்துத் தவறு செய்த குற்றவாளிகள் மீது பக்கச் சார்பின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.சிசிடிவி காமிராவில் ஒருவேளை படங்கள் இல்லாவிட்டால், அதற்குப் பொறுப்பாக உள்ள காவல் துறையினர் மீது நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

♦பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர்களுக்கு இழப்பீடு வழங்குவதோடு, தீக்கிரையாக்கப்பட்ட கடைகளுக்கும்

நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

♦கோயில் விழாவினை எதிர்வரும் காலத்தில் அறநிலையத் துறையின் கண்காணிப்பின் கீழ் நடத்த வேண்டும்.

♦ஆதிதிராவிடர் பகுதியில்இவ்வளவு கடுமையான பாதிப்பு இருந்தும், காவல்துறை அதன் அடிப்படையில் வழக்கு எதுவும் பதிவு செய்யாதது ஏற்கத் தக்கதல்ல. இனியாவது பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து புகார் பெற்று வழக்குத் தாக்கல் செய்ய வேண்டியது காவல்துறையின் கடமையாகும்.

♦கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகக் கோவில்களில் பட்டியலின மக்கள் தங்கள் வழிபாட்டு உரிமையை வலியுறுத்தும் போதெல்லாம், அந்தக் கோயில்கள் பூட்டப்படுவதும், சீல் இடுவதும்தான் நடைமுறையாக இருந்து வருகிறது. ஆதிக்க சாதிகளைச் சார்ந்தவர்களும் தாங்கள் வழிபாடு நடத்துவதற்கு வாய்ப்பில்லை என்றாலும் சரி, பட்டியலின மக்களை அனுமதிக்காமல் இருந்தால் போதும் என்ற அவர்களின் கருத்துக்கு அது ஏற்பளிப்பதாக ஆகிவிடுகிறது. எனவே இனி எந்த ஓர் அறநிலையத் துறை சார்ந்த கோயிலிலும், பொதுக் கோவில்களிலும் இதுபோன்ற பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமை தடுக்கப்படும் போது அரசு வன்கொடுமைத்தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி வழக்குகள் பதிவதோடு, அதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

xxxxxxxxxxx

குறிப்பு -

♦உண்மை அறியும் குழுவினரிடம் உரையாடிய பலரது பெயர்களை

அறிக்கையில் சுட்ட வில்லை. குறிப்பிட்டுச் சுட்டி எழுதினால் அவர்கள் மீதும் காவலர்கள் பாய்வார்கள் என்பதற்காகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

தவிர்க்க இயலாத சூழலில், சிலரது

பெயர்கள் சேர்க்கப் பட்டுள்ளன.

♦தவிரவும், பாதிக்கப் பட்டவர்களின் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளன.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


 



 

 

 

+9


No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்