புரட்சியும் எதிர் புரட்சியும் புரிந்துக் கொள்ள

 முதலாளித்துவ வர்க்கத்தாரும், அமைதிவாதிகளும், ஜெனரல்களும், குட்டி முதலாளித்துவ பகுதியோரும், முதலாளிகளும், அற்பவாத சிறு மதியினரும், பக்தி ஆர்வம் கொண்ட கிறிஸ்தவர்களும், இரண்டாவது, இரண்டரையாவது அகிலங்களின் சூரர்களும் இந்தப் புரட்சியின் மீது தமது ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்துக் கொள்ளட்டும். அடிமையுடமையாளர்களுக்கு இடையிலான யுத்தத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலுமான ஆண்டுகளில் முதன் முதலாய் அடிமைகள், "அடிமையுடையாளர்கள் தமது கொள்ளையைப் பாகப்பிரிவினை செய்துகொள்வதற்காக நடத்தும் இந்த யுத்தத்தை எல்லா தேசங்களையும் சேர்ந்த அடிமையுடமையாளர்களை எதிர்த்து எல்லா தேசங்களையும் சேர்ந்த அடிமைகளும் நடத்தும் யுத்தமாய் மாற்றுக" என்னும் கோஷத்தைப் பகிரங்கமாகவே பறைசாற்றிப் பதிலளித்தனர் என்ற உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உண்மையை எவ்வளவுதான் வசையையும் அவதூறுகளையும் பொய்களையும் பொழிந்த போதிலும் அவர்களால் மறைத்துவிட முடியாது.

நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலுமான ஆண்டுகளில் முதன்முதலாய் இந்த கோஷம் தெளிவின்றி, செயலற்றுக் காத்திருக்கும் நிலையிலிருந்து தெளிவான, திட்டவட்டமான வேலைத்திட்டமாய், கோடான கோடியான ஒடுக்கப்பட்ட மக்கள் பாட்டாளி வர்க்கத் தலைமையில் நடத்திய பயனுள்ள போராட்டமாய் வளர்ந்துள்ளது; பாட்டாளி வர்க்கத்தின் முதலாவது வெற்றியாய் வளர்ந்துள்ளது; யுத்தத்தை ஒழித்திடுவதற்கும், வெவ்வேறு தேசங்களில் ஒன்றுபட்ட முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக, மூலதனத்தின் அடிமைகளாகிய கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள், உழைப்பாளி மக்களுக்குப் பிரதிகூலமாக சமாதானத்துக்கும் யுத்தத்துக்கும் ஏற்பாடு செய்யும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராக எல்லா தேசங்களில் தொழிலாளர்களையும் ஒன்றுபடச் செய்வதற்குமான போராட்டத்தில் கிடைத்த முதலாவது வெற்றியாய் வளர்ந்துள்ளது.
இது முதலாவது வெற்றியே ஆகும். இன்னமும் இறுதி வெற்றி ஆகிவிடவில்லை. நம்புதற்கரிய துன்பங்களுக்கும் இன்னல்களுக்கும் உள்ளானோம். முன்பின் கண்டிராத துயரத்துக்கு ஆளானோம். வரிசையாகப் பல கடும் தவறுகளும் பின்னடைவுகளும் ஏற்பட்டன. இப்படி எல்லாம் விலை கொடுத்துத்தான் நமது அக்டோபர் புரட்சி இந்த வெற்றியைச் சாதித்தது. பின்தங்கிய ஒரு நாட்டின் மக்கள் பின்னடைவுகள் இன்றி, தவறுகள் புரியாமல், உலகின் மிகுந்த சக்தி வாய்ந்த, மிகவும் முன்னேறிய நாடுகளது ஏகாதிபத்திய யுத்தங்களை முறியடிப்பது சாத்தியமல்லவே!. நமது தவறுகளை ஒத்துக்கொள்ள நாம் அஞ்சவில்லை. இவற்றைச் சரிசெய்யக் கற்றுக் கொள்ளும் பொருட்டு, இவற்றை நாம் விருப்பு வெறுப்பு இன்றி பரிசீலனை செய்வோம். ஆனால் அடிமையுடையாளர்களுக்கு இடையிலான யுத்தத்துக்கு, எல்லா அடிமையுடமையாளர்களையும் எதிர்த்து அடிமைகள் நடத்தும் புரட்சியைக் கொண்டு "பதிலளிக்கப்படும்" என்ற வாக்குறுதி நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலுமான ஆண்டுகளில் முதன்முதலாய் முழு நிறைவாய் நிறைவேற்றப்பட்டுள்ளது - எல்லா இன்னல்களையும் மீறி நிறைவேற்றப்பட்டு வருகிறது - மறுக்க முடியாத உண்மையாகும். (லெனினது தேர்வு நூல், தொகுதி 12, பக்கம் -50, 51)
விளக்கம்:- ரஷ்யாவில் லெனின் தலைமையில் போல்ஷ்விக் கட்சியின் முன்முயற்சியால் ரஷ்ய உழைக்கும் மக்கள் நடத்திய நவம்பர் புரட்சியைப் பற்றி பிற்போக்களார்களாகிய முதலாளித்துவ வர்க்கத்தாரும், அமைதிவாதிகளும், ஜெனரல்களும், குட்டி முதலாளித்துவ பகுதியோரும், முதலாளிகளும், அற்பவாத சிறு மதியினரும், பக்தி ஆர்வம் கொண்ட கிறிஸ்தவர்களும், இரண்டாவது, இரண்டரையாவது அகிலங்களின் சூரர்களும் இந்தப் புரட்சியின் மீது தமது ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தார்கள் என்றார் லெனின். இந்தப் பிற்போக்குப் பேர்வழிகள் இப்போதும்கூட இந்த புரட்சியை கொச்சைப்படுத்திக்கொண்டிருப்பதை பார்க்கிறோம். வர்க்க சமுதாயம் தோன்றியதிலிருந்து அடிமைகளுக்கும் அடிமையுடமையாளர்களுக்கும் (சுரண்டலாளர்களுக்கும்) இடையில் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் முதலாளித்துவவாதிகள் நடத்திய முதல் உலகயுத்தமானது உலகை அவர்களுக்கிடையில் பங்குபோட்டுக்கொள்வதற்காக நடத்தப்பட்ட யுத்தத்தை முடிவுக்குகொண்டுவருவதற்கு உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்கள் அவர்களது நாட்டு ஆட்சியாளர்களுக்கு எதிரான யுத்தமாக இந்த யுத்தத்தை மாற்றவேண்டும் என்று சர்வதே கம்யூனிஸ்டுகள் முழக்கத்தை வெளிப்படையாக முன்வைத்து உலக முதலாளிகளுக்கு சவுக்கடி கொடுத்தார்கள். அதன் பயனாக ரஷ்ய மக்கள் விடுதலை அடைந்து ரஷ்யாவில் பாட்டாளிவர்க்க அரசை முதன்முதலாக உருவாக்கினார்கள். ஏகாதிபத்தியவாதிகளுக்கு பணபலம், அரசியல்பலம், ஆயுதபலம் போன்ற பல பலங்கள் இருந்தாலும் மக்கள் கிளர்ந்தெழுந்தால் மக்கள் சக்திக்குமுன் முதலாளிகள் மண்டியிட்டே தீரவேண்டும் என்ற உண்மையை உலகில் நிருபித்து உலக மக்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திய கட்சிதான் லெனின் தலைமையிலுள்ள போல்ஷ்விக் கட்சியாகும். தற்போதும் உலகில் பல நாடுகளில் உழைக்கும் மக்கள் அவர்களது நாட்டைச் சேர்ந்த முதலாளித்துவ ஆட்சியாளர்களை எதிர்த்து தன்னியல்பாகவும் தொண்டுநிறுவனங்களின் தலைமையின் கீழும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அந்தப் போராட்டங்கள் அனைத்தும் ரஷ்யாவில் நடந்தது போன்ற வெற்றிகாண முடியவில்லை. அதற்கு காரணம் இந்தப் போராட்டங்களுக்கு தலைமைதாங்குபவர்கள் எவரும் ரஷ்ய போல்ஷ்விக் போன்ற தலைமை இல்லாததே காரணமாகும். தற்போது உலகில் பல பகுதிகளில் உற்பத்தி சக்தி வளர்ந்துள்ளது, அதாவது பின்தங்கிய ரஷ்யாவைக் காட்டிலும் அதிகமாகவே வளர்ந்துள்ளது, ஆனாலும் ரஷ்யாவில் நடந்தது போன்ற புரட்சி எங்கும் நடைபெறாததற்கு காரணம் என்ன? , ரஷ்யாவில் இருந்தது போன்ற கம்யூனிஸ்டுக் கட்சி உலகில் எங்கும் இல்லை என்பதே ஆகும். ஆகவே ரஷ்யாவில் உருவானது போன்ற கம்யூனிஸ்டுக் கட்சி உருவாகி அந்தக் கட்சியை முன்னுதாரணமாகக் கொண்டு செயல்பட்டால் உலகில் எந்தவோரு பகுதியிலும் புரட்சி நடக்கும். ரஷ்யாவில் நடந்த புரட்சியை உலகம் முழுவதிலுமுள்ள முதலாளித்துவவாதிகளும், கம்யூனிச வேடம்போடும் திருத்தல்வாதிகளும் மூடிமறைத்து உழைக்கும் மக்களை திசைதிருப்பிக்கொண்டு இருக்கிறார்கள். மேலும் உழைக்கும் மக்களின் போர்க்குணத்தை மழுங்கடித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்தக் கயவர்களின் துரோகத்தை அம்பலப்படுத்தி ரஷ்ய கம்யூனிஸ்டுகளின் தியாக வரலாற்றை மக்களிடம் கொண்டுசென்று அவர்களுக்கு உணர்வூட்டி விழிப்படையச் செய்வது ஒவ்வொரு கம்யூனிஸ்டின் கடமையாகும். அதன் அடிப்படையில் போல்ஷ்விக் பாணியிலான புரட்சிகரமான கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டியெழுப்பிட நாம் பாடுபட வேண்டும்.

முதலாவது உலக யுத்தம் நடந்தபோது அகிலமானது உலக யுத்தத்துக்கு எதிராகப் போராடவேண்டும் என்று சர்வதேச உழைக்கும் மக்களை அறைகூவி அழைத்தது. உலக யுத்தத்தை முதலாளிகள் துவங்கிவிட்டால் ஒவ்வொரு நாட்டிலுள்ள உழைக்கும் மக்கள் உலக யுத்தத்தில் ஈடுபடும் சொந்த நாட்டு முதலாளிவர்க்கத்தின் அரசை எதிர்த்த யுத்தமாக அதனை மாற்றி சொந்த நாட்டு முதலாளிவர்க்க அரசை வீழ்த்தவேண்டும் என்று சர்வதேச கம்யூனிஸ்டுகள் முழங்கினார்கள். வரலாற்றில் இதற்கு முன்பு சமூகத்தில் அடிமைகளாக இருந்தவர்களின் தெளிவில்லாத நிலை மாற்றப்பட்டு, ஒரு தெளிவான வேலைத்திட்டத்தை சர்வதேச கம்யூனிஸ்டுகள் வகுத்துக்கொடுத்தார்கள். அதன் பயனாக ரஷ்யாவில் போல்ஷ்விக் தலைமையில் புரட்சி நடத்தி வெற்றி கண்டார்கள். இந்த சரியான கொள்கையின் அடிப்படையிலேயே சர்வதேச அளவில் உழைக்கும் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதில் கம்யூனிஸ்டுகள் வெற்றி கண்டார்கள். தற்போது காஸாவில் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும், அதன் அடியாளான இஸ்ரேலும் கொடூரமான போர் நடத்தி மக்களை படுகொலை செய்துகொண்டு இருக்கிறார்கள். இந்த கொடுமையை எதிர்த்து பல்வேறு நாடுகளிலுள்ள உழைக்கும் மக்களும், ஜனநாயகவாதிகளும் தன்னியல்பாகப் போராட்டங்களை நடத்துகின்றனர். ஆனால் முதல் உலக யுத்த காலத்தில் சர்வதேச கம்யூனிஸ்டுகள் நடத்தியது போல் சொந்த நாடு அதாவது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாட்டின் அரசை எதிர்த்தப் போராட்டங்களையும் இந்த கொடுமைகளை ஆதரிக்கும் நாடுகளின் அரசை எதிர்த்த போராட்டங்களை எந்த நாட்டு கம்யூனிஸ்டுகளும் நடத்தவில்லையே ஏன்? இவர்கள் எல்லாம் அன்றைய காவுத்ஸ்கிவாதிகளைப் போலவே செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆகவே உலகில் எங்கெல்லாம் லெனினை பின்பற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் உருவாகி மக்கள் திரட்டப்படுகிறார்களோ அங்கெல்லாம் சர்வதே சுரண்டலாளர்களான ஏகாதிபத்திய முதலாளிகளையும் அவர்களுக்கு துணைபோகும் ஏகாதிபத்திய தாசர்களையும் எதிர்த்த போராட்டங்கள் போர்க்குணத்தோடு நடைபெறும். ஆகவே நமக்குத்தேவை லெனினைப் பின்பற்றும் புரட்சிகரமான கம்யூனிஸ்டுக் கட்சியாகும். லெனினை மறுக்கும் அல்லது எதிர்க்கும் காவுத்ஸ்கி போன்ற துரோகிகளைப் பின்பற்றும் திருத்தல்வாதிகள் நமக்குத் தேவையில்லை.

முதல் உலக யுத்த காலத்தில் சர்வதேச உழைக்கும் மக்களுக்கு குறிப்பாக ரஷ்ய பாட்டாளி வர்க்கத்துக்கும், ரஷ்ய கம்யூனிஸ்டுகளுக்கும் கிடைத்த வெற்றியை முதலாவது வெற்றி என்று லெனின் குறிப்பிட்டார். இறுதி வெற்றியடைய மேலும் நாம் அதிகமாகப் பாடுபடவேண்டும் என்றார் லெனின். இந்த முதலாவது வெற்றியை அடைவதற்கு உழைக்கும் மக்கள் பல இன்னல்களின் ஊடே பல துண்பங்களை எதிர்கொண்டே இந்த வெற்றியை சாதித்தார்கள் என்று போராடிய மக்களை லெனின் போற்றிப் புகழ்ந்தார். ஆனால் இங்குள்ள தலைவர்கள் ஒரு சாதாண வெற்றிக்கும் இந்த தலைவர்கள்தான் காரணம் என்று சொல்லி தற்புகழ்ச்சியில் ஈடுபட்டு தன்னை பிரபலப்படுத்திக்கொள்வவதைப் பார்க்கிறோம். லெனின் காலத்தில் பல வெற்றிகள் கிடைத்தாலும் லெனினும் அவரது கட்சியும் பல தவறுகள் செய்ததாக லெனின் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்தார். ஒரு பின்தங்கி நாட்டில் இத்தகைய தவறுகளும் பின்னடைவுகளும் ஏற்படுவது இயல்பானதே என்றார் லெனின். லெனின் செய்த தவறுகளை ஒப்புக்கொள்வதற்கு அஞ்ஞவில்லை என்றார் லெனின். அதாவது கம்யூனிஸ்டுகள் செய்யும் தவறுகளை மக்களிடம் வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவேண்டும் என்றார் லெனின். ஆனால் இங்கேயுள்ள தலைவர்கள் அதிகமாக தவறுகள்தான் செய்துகொண்டு இருக்கிறார்கள். இவர்கள் செய்யும் தவறுகளை ஒத்துக்கொள்வதே இல்லை, மாறாக தொடர்ந்து மூடிமறைக்கிறார்கள் மேலும் தனது தவறை மறைக்க பிறர்மீது குற்றம் சாட்டுகிறார்கள். இவர்கள் போராடுவதற்கு தயாரில்லாத உண்மையை மறைத்துவிட்டு மக்கள் போராடத்தயாரில்லை என்று மக்களின் மீதே குற்றம் சாட்டுகிறார்கள். அன்றைய லெனினிஸ்டுகள் தங்களது குற்றங்களை ஒத்துக்கொண்டதோடு அவர்களது குறைகளை சரிசெய்வதற்கு விருப்பு வெறுப்பின்றி பரிசீலனை செய்து குறைகளை களைந்தார்கள். அதன் பயனாகவே அவர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற்று மக்களைத் திரட்டி வெற்றிகொள்ள முடிந்தது. ஆனால் இங்குள்ள கம்யூனிஸ்டுகள் செய்யும் தவறுகளை புரிந்துகொள்வதும் இல்லை, பிறர் குறைகளை சுட்டிக்காட்டினாலும் அதனை பரிசீலிப்பதில்லை மாறாக குறைகளை சுட்டிக் காட்டுபவர்கள் மீது அவதூறு செய்வது, குறைகளை களைவதற்கு எவ்விதமான முயற்சியும் எடுக்காமல் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆகவே லெனினை பின்பற்றி ஒரு புரட்சிகரமான கட்சியை கட்டுவதற்கு தடையாக உள்ள நமது குறைகளை வெளிப்படையாக மக்கள் முன்வைத்து சுயவிமர்சனம் செய்துகொண்டு நமது குறைகளை களைந்திடுவோம். எப்போதும் நாம் தவறு செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை நாம் முக்கியமாக உணர்ந்துகொண்டு நாம் தவறு செய்தால் அதனை வெளிப்படையாக ஒத்துக்கொண்டு தவறுகளை களைய வேண்டும் எனற உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்