மார்க்சியத்தினுடைய வரலாற்றுவளர்ச்சியின் சில இயல்புகள்
இந்தப் பகுதியில் வி. இ. லெனின் மார்க்சியத்தைப் பற்றி எழுதிய பிரபல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இவை கார்ல் மார்க்ஸ் போதனையின் முக்கிய சாரத்தை வெளிப்படுத்தி பல்வேறு வரலாற்றுக் காலகட்டங்களில் இந்தப் போதனையின் விதியைக் காட்டுகின்றன. ‘மார்க்சின் போதனை மெய்யானது, அதனால் தான் அது எல்லாம் வல்ல தன்மை பெற்றிருக்கிறது. அது முழுமையான, உள்ளிணக்கம் கொண்ட போதனை. ஓர் ஒன்றிணைந்த உலகப் பார்வையை அது மக்களுக்கு அளிக்கிறது. எந்த வடிவத்திலுமமைந்த மூடநம்பிக்கைகளோ, பிற்போக்கோ, முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு ஆதரவோ இந்த உலகப் பார்வையுடன் ஒத்துவர முடியாது. ஜெர்மானியத் தத்துவஞானம், ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சு சோசலிசம் என்ற வடிவத்தில் 19-ஆம் நூற்றாண்டில் மனித குலம் உருவாக்கித் தந்த தலைசிறந்த படைப்புகளின் உரிமை பெற்ற வாரிசுதான் மார்க்சியம்.’
மார்க்சியத்தின் வெற்றிகள், இதனுடைய எதிரிகளை மார்க்சியப் போர்வைக்குள் புகுந்து கொள்ளுமாறும் மார்க்சின் போதனையைத் திரித்துக் கொச்சைப்படுத்துமாறும் நிர்ப்பந்திக்கின்றன என்று லெனின் தன் கட்டுரைகளில் காட்டுகின்றார், ஆனல் இவை வீணான முயற்சிகள்; ஒவ்வொரு புதிய வரலாற்றுச் சகாப்தமும், முரண்பாடுகளையும் கேடுகளையும் உடைய முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிச சமுதாயத் திற்கு மாறிச் செல்லும் பாதையை மனித குலத்திற்குக் காட்டும் தத்துவம் என்ற வகையில் மார்க்சியத்திற்கு மேன்மேலும் அதிக வெற்றியைக் கொண்டு வருகிறது.
இத்தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ் ஆகிய கட்டுரைகளில் மார்க்சிய ஆசான்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு இடம் பெற்றுள்ளது.
மார்க்சியத்தினுடைய வரலாற்று
வளர்ச்சியின் சில இயல்புகள்
‘எங்களுடைய போதனை, செயலுக்கு ஒரு வழி காட்டியே தவிர வறட்டுச் சூத்திரம் அல்ல’ என்கிறார் எங்கெல்ஸ். தம்மையும் புகழ் மிக்க தமது நண்பரையும் குறிக்கும் வண்ணம் எங்களுடைய என்கிறார், மார்க்சியத்தில் அடிக்கடி பலரும் மறந்துவிடும் ஓர் அம்சத்தைக் குறிப்பிடத்தகுந்த வலிவுடனும் பொருள் நிறைவுடனும் இந்த ஒப்புயர்வற்ற வாசகம் வலியுறுத்துகிறது. இதை மறந்து விடுவதின் மூலமாக நாம் மார்க்சியத்தை ஒருதலைப்பட்சமான, உருக்குலைக்கப்பட்டதான, உயிரற்ற ஒன்றாய்த் திரித்துவிடுகிறோம்; உயிர்த்தியங்கி வரும் ஆன்மாவை அதிலிருந்து பறித்து விடுகிறோம்; மார்க்சியத்தின் மூலாதாரத் தத்துவ அடித்தளங்களை அதாவது முரண்பாடுகள் நிறைந்தும் சர்வவியாபகமாயுமுள்ள சரித்திர வளர்ச்சியைப் பற்றிய போதனையாகிய இயக்கவியலை – தளர்த்திப் பலவீனப்படுத்துகிறோம்; நமது சகாப்தத்தில் நம் முன்னுள்ள திட்டவட்டமான நடைமுறைக் கடமைகளுடன், வரலாற்றின் ஒவ்வொரு புதிய திருப்பத்தையும் தொடர்ந்து மாறும்படியான இந்தக் கடமைகளுடன் மார்க்சியத்துக்கு இருக்கும் தொடர்பை நாம் அறுத்தெறிகிறோம்.
நமது காலத்தில், ருஷ்யாவில் மார்க்சியத்தின் கதியைப் பற்றி அக்கறை கொண்டிருப்பவர்களின் மத்தியிலே, மார்க்சியத்தின் இந்தக் குறிப்பிட்ட அம்சத்தை மறந்து விடுகிறவர்களை அடிக்கடி கண்டு வருகிறோம். ஆயினும் சமீப காலத்தில் ருஷ்யா திடீர் மாறுதல்களுக்கு உட்பட்டிருப்பது எல்லோருக்கும் தெளிவாய்த் தெரிந்தே இருக்க வேண்டும். செயலின் சூழ்நிலைமைகளையும், அவற்றின் காரணமாகச் செயலின் குறிக்கோள்களையும் மிகவும் நேரடியாகவும் உடனடியாகவும் நிர்ணயிக்கும்படியான சமுதாய-அரசியல் நிலைமையை வழக்கத்திலில்லாத வேகத்துடனும் வலிவுடனும் மாற்றி விடும் அளவுக்கு இந்த மாறுதல்கள் திடுதிப்பென நிகழ்ந்துள்ளன.

பொதுப்படையான, அடிப்படையான குறிக்கோள்களை இங்கே நான் குறிப்பிடவில்லை. வர்க்கங்களிடையே நிலவும் அடிப்படை உறவு மாறாமலிருக்கும் வரையில் சரித்திரத்தின் திருப்பங்களினுள் இந்தக் குறிக்கோள்கள் மாறுவதில்லை . ருஷ்ய சமுதாயத்திலுள்ள பல்வேறு வர்க்கங்களிடையே நிலவி வரும் அடிப்படை உறவு, உதாரணமாய், சென்ற ஆறு ஆண்டுகளாக மாறாமலிருந்து வருவதுபோலவே, ருஷ்யாவில் பொருளாதாரத்தில் (பொருளாதாரத்தில் மட்டுமல்ல) காணப்படுகிற பொதுவான பரிணாம வளர்ச்சிப் போக்கும் மாறாமலே இருந்து வந்திருக்கிறது என்பது தெட்டத் தெளிவு.
ஆனால், இந்தக் காலகட்டத்தில் ஸ்தூலமான சமுதாய அரசியல் நிலைமையும், அதுபோல நேரடியான, உடனடியான செயலின் குறிக்கோள்களும் மிகத் தீவிரமாக மாறி வந்திருக்கின்றன. இதன் விளைவாக, மார்க்சியத்திலும் அதன் பல்வேறு அம்சங்கள் முன்னணிக்கு வந்து தீர வேண்டும். ஏனெனில் மார்க்சியம் உயிர்ப்பண்பு கொண்ட போதனையாகும்.
இந்தக் கருத்தைத் தெளிவாக்கும் பொருட்டு, ஸ்தூலமான சமுதாய அரசியல் நிலைமையில் சென்ற ஆறு ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கிற மாறுதலைக் கொஞ்சம் கவனிப்போம். இந்த ஆறாண்டுக் காலப்பகுதி மூன்று மூன்று ஆண்டுகளைக் கொண்ட இரு காலப்பகுதிகளாகப் பிரிவதை எடுத்த எடுப்பிலேயே காண்கிறோம். ஒரு காலப்பகுதி 1907ஆம் ஆண்டின் கோடையுடன் ஏறத்தாழ முடிவடைகிறது; மற்ற காலப் பகுதி 1910-ஆம் ஆண்டின் கோடையுடன் முடிவடைகிறது. முற்றிலும் தத்துவார்த்தக் கண்ணோட்டத்தில், முதல் மூன்றாண்டுக் காலப்பகுதியானது அப்போது ருஷ்யாவில் அரசு அமைப்பு முறையின் அடிப்படையான குணாதிசயங்களில் வேகமாக ஏற்பட்ட மாறுதல்களால் வேறுபடுத்திக் காட்டப்படுகிறது.
இந்த மாறுதல்களின் போக்கு ஒரே சீராக இல்லாமல் அநேக ஏற்ற இறக்கங்களுடன் கூடியதாயிருந்தது; இரு திசைகளிலும் ஊசலாட்டத்தின் வீச்சும் மிகப் பெரிதாயிருந்தது. “மேல் கட்டுமானத்தில்” ஏற்பட்ட இந்த மாறுதல்களின் சமுதாய – பொருளாதார அடிப்படை என்னவெனில் ருஷ்ய சமுதாயத்தின் எல்லா வர்க்கங்களும் மிகப் பல்வேறுபட்ட துறைகளிலும் எடுத்துக் கொண்ட செயல்களே (டூமா சட்டசபைக்குள்ளேயும் வெளியேயும், பத்திரிகைகள், சங்கங்கள், பொதுக் கூட்டங்கள் முதலானவற்றில் நடைபெற்ற செயற்பாடே) ஆகும். சரித்திரத்தில் அடிக்கடி காணக்கிடைக்காத அளவிலே இந்தச் செயல் அவ்வளவு பகிரங்கமானதாயும், எடுப்பாகவும், வெகுஜன வீச்சுடையதாகவும் இருந்தது.
இதற்கு மாறாக இரண்டாம் மூன்றாண்டுக் காலப்பகுதியின் தனி இயல்பு -இங்கே முற்றிலும் தத்துவார்த்த சமூகவியல்’ கண்ணோட்டத்தில் மட்டுமே விஷயத்தைக் கவனித்து வருகிறோம் என்று மீண்டும் சொல்கிறேன்-என்னவென்றால், அநேகமாகத் தேக்கநிலை என்று மதிக்கக் கூடிய அளவுக்குப் பரிணாம வளர்ச்சி மந்தமாயிருந்ததேயாகும். அரசு அமைப்புமுறையில் ஓரளவுகூட முக்கியமான மாறுதல்கள் எவையும் ஏற்படவில்லை . முந்திய காலப்பகுதியில் எந்த அரங்குகளில் நடவடிக்கைகள் வளர்க்கப்பட்டனவோ அவற்றில் பெரும் பாலானவற்றில் வர்க்கங்களுடைய பகிரங்கமான, பல்வகைப்பட்ட நடவடிக்கைகள் எவையும் அநேகமாக நடைபெறவில்லை.
இந்த இரண்டு காலப்பகுதிகளுக்குமிடையே இருந்த ஒற்றுமையம்சம் என்னவெனில், இரண்டு காலப்பகுதிகளிலும் ருஷ்யாவில் முதலாளித்துவப் பரிணாமம் நடைபெற்று வந்தது. இந்தப் பொருளாதாரப் பரிணாமத்துக்கும் பல பிரபுத்துவ, மத்திய காலத்திய அமைப்புகள் நீடித்து இருந்து வந்ததற்கும் இடையேயிருந்த முரண்பாடு நீக்கப்படாமல் தொடர்ந்து இருந்து வந்தது; சில அமைப்புகள் அரைகுறையான பூர்ஷ்வாத் தன்மை பெற்றதனால் இந்த முரண்பாடு தீவிரமடைந்ததே ஒழிய தணிக்கப்படவில்லை.
இந்த இரண்டு காலப்பகுதிகளுக்கிடையே இருந்த வேற்றுமை என்னவென்றால், மேற்குறிப்பிட்ட சீரில்லாத, ஏற்ற இறக்கமான அதிவேக மாறுதல்கள் எந்த வடிவத்தை ஏற்குமென்பது முதலாவது காலப்பகுதியில் வரலாறு படைக்கும் தலைமையான முதற்பெரும் கேள்வியாய் இருந்தது. ருஷ்யாவின் பரிணாம வளர்ச்சி முதலாளித்துவத் தன்மையதாய் இருந்ததால் இந்த மாறுதல்களின் உள்ளடக்கமும் முதலாளித்துவத் தன்மை கொண்டதாய் இருந்து தீரவேண்டியதாயிற்று. ஆனால் முதலாளித்துவ வர்க்கத்தாரில் வெவ்வேறு வகையினர் இருந்தனர். ஏறத்தாழ நிதான மிதவாதப் போக்கை அனுசரிப்பதாய்க் கூறும் நடுத்தர முதலாளிகளும் பெரு முதலாளிகளும் தங்கள் வர்க்க நிலை காரணமாக உடனடி மாறுதல்களுக்கு அஞ்சி நிலவுடைமை அமைப்பிலும் சரி; அரசியல் “மேல் கட்டுமானத்திலும்” சரி, பழைய ஏற்பாடுகளைப் பெருமளவு மிச்சசொச்சங்களை இருந்தவாறே வைத்திருக்க முயற்சித்தார்கள். கிராமப் புறத்திலுள்ள குட்டி முதலாளித்துவ வர்க்கம் “தங்கள் கையால் உழைத்து” ஜீவிக்கிற விவசாயி மக்களுடன் பின்னிப் பிணைந்திருக்கும் காரணத்தால் வேறு வகைப்பட்ட முதலாளித்துவச் சீர்திருத்தங்களுக்காக, அதாவது மத்திய காலத்திய மிச்சசொச்சங்கள் நீடித்திருக்க மிகக் குறைந்த இடமே அளிக்கக்கூடிய முதலாளித்துவச் சீர்திருத்தங்களுக்காக, முயற்சித்துத் தீர வேண்டியிருந்தது. கூலித் தொழிலாளர்கள் தம்மைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை உணர்வு பூர்வமாக அறிந்து கொண்டிருந்த அளவுக்கு இவ்விரண்டு வேறுபட்ட போக்குகளிடையே நடைபெற்ற போரைப் பற்றித் தமக்கேற்ற கண்ணோட்டத்தை வகுத்துக் கொண்டு தீர வேண்டியிருந்தது. இவ்விரண்டு போக்குகளும் முதலாளித்துவ அமைப்பு முறையின் கட்டுக்கோப்பை விட்டு வெளியே செல்லாமல் அதனுள்ளேயே இருந்து, அவ்வமைப்பின் முற்றிலும் வெவ்வேறான வடிவங்களையும், அதன் வளர்ச்சியில் முற்றிலும் வெவ்வேறான வேகங்களையும், அதன் முற்போக்குச் செல்வாக்கில் வெவ்வேறு தரங்களையும் வற்புறுத்தின.
இவ்விதம் முதலாவது காலப்பகுதி போர்த்தந்திரம் பற்றிய பிரச்சனைகளென்று வழக்கமாகக் குறிக்கப்படுகிறவற்றை மார்க்சியத்தின் முன்வரிசையில் கொண்டு வந்து நிறுத்தியது. இது ஏதோ தற்செயலாக நடக்கவில்லை; தேவையின் கட்டாயத்தால் ஏற்பட்டது. இந்தப் பிரச்சனைகள் குறித்துக் கிளம்பிய சர்ச்சைகளும் கருத்து வேற்றுமைகளும் ‘அறிவுத் துறையினரிடையே’ நடக்கிற சர்ச்சைகள்தான் என்றும், ‘பக்குவமடையாத பாட்டாளி வர்க்கத்தின் மேல் செல்வாக்குப் பெறுவதற்காக நடக்கும் ஒரு போராட்டமே’ என்றும், ‘அறிவுத் துறையினர் தங்களைப் பாட்டாளி வர்க்கத்துக்குத் தகவமைத்துக் கொள்வதைக்’ குறிப்பவையே என்றும் பல்வேறு சாயல்களிலுமான வேஹி ஆதரவாளர்கள் நினைக்கிறார்கள்; இதைவிட தவறான கருத்து வேறென்றுமில்லை. இதற்கு நேர்மாறாக இந்தப் பாட்டாளி வர்க்கம், பக்குவம் பெற்று விட்டதனால் தான், அது ருஷ்யாவின் முதலாளித்துவ வளர்ச்சி பூராவிலும் காணப்படும் இவ்விரண்டு வேறுபட்ட போக்குகளிடையே நடக்கிற போர் குறித்து ஏனோதானே என்றிருக்க முடியவில்லை; ஆகவே இந்த வர்க்கத்தின் தத்துவாசிரியர்கள் வெவ்வேறான இவ்விரு போக்குகளுக்கும் (நேர் முகமாகவோ மறைமுகமாகவோ, நேரான பிரதிபலிப்பாகவோ எதிரான பிரதிபலிப்பாகவோ) ஏற்ற வகையில் தத்துவ ரீதியான வரையறுப்புகளை வகுத்துத் தருவதைத் தவிர்க்க முடியவில்லை .
இரண்டாவது காலப்பகுதியிலே ருஷ்யாவின் முதலாளித்துவ வளர்ச்சியின் வெவ்வேறான போக்குகளிடையிலான போர் நிகழ்ச்சி அரங்கில் காணப்படவில்லை, ஏனெனில் இந்த இரண்டு போக்குகளுமே “பழுத்த பிற்போக்கர்களால்” நசுக்கப்பட்டுவிட்டன, பின்னுக்குத் தள்ளப்பட்டு உள்வாங்கிக் கொள்ளும்படிச் செய்யப்பட்டன, தற்காலிகமாக மூச்சொடுக்கப்பட்டன. மத்திய காலத்தியப் பழுத்த பிற்போக்கர்கள் முன்னணிக்கு வந்து நின்று கொண்டதோடல்லாமல் முதலாளித்துவச் சமுதாயத்தின் மிக விரிந்த ஜனப்பகுதிகளிடையே வேஹியின் உணர்ச்சிகளை, மனச்சோர்வையும், மறுதலித்துக் கைவிடும் மனோநிலையையும் மேலோங்கச் செய்தனர். இப்போது தலை தூக்கியது பழைய அமைப்பு முறையைச் சீர்திருத்த நிற்கும் இரண்டு வழிமுறைகள் இடையிலான போர் அல்ல; எந்த விதமான சீர்திருத்தங்களிலும் நம்பிக்கையின்மை, “அடிபணிந்துவிடும்”, “பாவ மன்னிப்பு நாடும்” மனப்பாங்கு, சமூக விரோதப் போதனைகளின் மீது மோகம், இறை ஞானப் பித்து இத்தியாதியானவையே இப்போது தலை தூக்கின.
ஆச்சரியப்படத்தக்க முறையில் திடுதிப்பென நிகழ்ந்த இந்த மாறுதல் தற்செயலானதல்ல, ‘வெளிப்புற’ நிர்ப்பந்தத்தினால் மட்டும் ஏற்பட்ட விளைவல்ல. இதற்கு முந்திய காலப்பகுதி, தலைமுறை தலைமுறையாய், பல நூற்றாண்டுகளாய், அரசியல் பிரச்சனைகளிலிருந்து ஒதுங்கி நின்று வந்த, அரசியல் பிரச்சனைகளே இன்னதென்று அறியாமலே இருந்து வந்த ஜனப்பகுதிகளை ஆழ்ந்த முறையிலே உலுக்கி உசுப்பி விட்டது. ஆகவே ‘எல்லா மதிப்புகளையும் திரும்ப மதிப்பிடலும்’, அடிப்படைப் பிரச்சனைகளைப் புதிதாய்ப் பயில்வதும், தத்துவத்தில் அடிப்படைக் கூறுகளில் அரசியல் அரிச்சுவடியில் புதிய அக்கறை காட்டுவதும் இயற்கையாகவும் தவிர்க்க முடியாத வகையிலும் மேலோங்கின. நெடுந்தூக்கத்திலிருந்து திடீரென்று எழுப்பிவிடப்பட்டு மிகவும் முக்கியமான பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியதாகிவிட்ட கோடிக்கணக்கான மக்கள் அதிக காலத்துக்கு இம்மட்டத்தில் இருந்து கொண்டிருக்க முடியாது. இடைவேளை ஓய்வு பெறாமலும், ஆரம்ப அடிநிலைப் பிரச்சனைகளுக்குத் திரும்பாமலும், இணையற்ற பொருள் வளம் செறிந்த படிப்பினைகளை “ஜீரணிக்க” உதவுவதும், ஒப்பிட முடியாத அளவு அதிக விரிவான ஜனத்திரள் முன்னிலும் மிகுந்த உறுதியோடும், உணர்வோடும், நிச்சயத்தோடும், விடாமுயற்சியோடும் முன்னேறுவதைச் சாத்தியமாக்குவதுமான புதிய பயிற்சி பெறாமலும் அவர்களால் மேற்செல்ல முடியவில்லை.
நாட்டின் வாழ்க்கையின் சகல துறைகளிலும் உடனடிச் சீர்திருத்தங்கள் செய்து முடிப்பதுதான் முதலாவது காலப் பகுதியின் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருந்தது. பெற்ற அனுபவத்தை விமர்சித்து ஆராய்வது, இன்னும் அதிக விரிவான ஜனப்பகுதிகள் அந்த அனுபவத்தை ஜீரணிப்பது, சொல்லப் போனால் அந்த அனுபவம் அடிமண்ணுக்குள் எனலாம், அதாவது பல்வேறு வர்க்கங்களைச் சேர்ந்த பிற்பட்ட அணிகளுக்குள் ஊடுருவிச் செல்வது-இவைதான் இரண்டாவது காலப்பகுதியின் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருந்தன. காரணம், சரித்திர வளர்ச்சியின் இயக்கவியல் அப்படி அமைந்திருந்தது.
இன்னொரு புறத்தில், வேஹி சஞ்சிகையின் மனப்பான்மை, கொள்கை துறந்து ஒடும் மனப்பான்மை முதலாளித்துவ வர்க்கத்தாரின் விரிவான பகுதிகளை ஆட்கொண்டு விட்டதுடன் நில்லாமல், மார்க்சியத் தத்துவத்தையும் நடைமுறையையும் நிதானமும் ஒழுங்கும் வழி வரம்புகளுக்குள் அடக்கி வைக்க முயற்சிக்கிற போக்குக்குள்ளும் புகுந்துவிட்டது. கடைசியாக மார்க்சியத்தில் மிஞ்சினதெல்லாம் ‘படி வரிசை முறை’ (hierarchy), ‘தலைமைப் பாத்திரம்’ (hegemony) முதலான வற்றைப் பற்றிய, மிதவாதத்தில் முற்றிலும் ஊறிப்போன வாதங்களில் உபயோகிப்பதற்கேற்ற வெறும் சொற்களே.
இந்த எல்லா வாதங்களையும் பற்றிப் பரிசீலிப்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மார்க்சியம் அனுபவித்துவரும் நெருக்கடியின் ஆழத்தைப் பற்றியும், இந்தக் காலப்பகுதியில் நிலவும் ஒட்டுமொத்தமான சமுதாய – பொருளாதார நிலைமைக்கும் அந்த நெருக்கடிக்கும் இடையேயுள்ள சம்பந்தத்தைப் பற்றியும் நாம் மேலே குறிப்பிட்டவற்றைத் தெளிவுப்படுத்த இந்த வாதங்களைக் குறிப்பிட்டாலே போதும். இந்த நெருக்கடி எழுப்பும் பிரச்சனைகளை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. வாய்ச்சவடால் அடித்து அவற்றை அகற்றிவிட நடக்கிற முயற்சிகள் போல் தீங்கிழைக்கும்படியான, கோட்பாடற்ற செய்கை வேறு எதுவும் இருக்க முடியாது. நெருக்கடியின் ஆழத்தையும் அதை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்திருக்கும் எல்லா மார்க்சியவாதிகளையும் மார்க்சியத்தின் தத்துவ அடிப்படைகளையும் ஆதார வரையறுப்புகளையும் பாதுகாப்பதற்காக அணி திரட்டுவதைக் காட்டிலும் முக்கியமானது எதுவும் இருக்க முடியாது; ஏனெனில் மார்க்சியத்தின் பலவகைப்பட்ட “சக பிரயாணி”களிடையே முதலாளித்துவச் செல்வாக்கு பரவியுள்ளதால் எதிரெதிரான திசைகளிலிருந்து இவை திரித்துப் புரட்டப் படுகின்றன.
விரிவான ஜனப்பகுதிகளைச் சமுதாய வாழ்க்கையில் உணர்வு பூர்வமாகப் பங்கெடுத்துக் கொள்ளும்படி முதலாவது மூன்றாண்டுக் காலப்பகுதி விழிப்புறச் செய்தது. அவர்களில் பலர் இப்பொழுதுதான் முதல் தடவையாக உண்மையான முறையிலே மார்க்சியத்தைத் தெரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிருர்கள். இது சம்பந்தமாக முதலாளித்துவப் பத்திரிகைகள் என்றையும் விட அதிகமாகப் பொய்யான கருத்துகளைச் சிருஷ்டித்தும், மிக விரிவாகப் பரப்பியும் வருகின்றன. இந்த நிலைமைகளிலே மார்க்சியவாதிகளின் அணிகளிலே ஏற்படும் சிதைவு மிகவும் ஆபத்தானது. தற்சமயம் இந்தச் சிதைவு தவிர்க்க முடியாதது என்பதற்குரிய காரணங்களைப் புரிந்து கொள்வதும், இந்தச் சிதைவை எதிர்த்து முரணின்றிப் போராடுவதற்காக அணிகளைத் திரட்டி ஒன்று சேர்ப்பதும், மார்க்சியவாதிகளுடைய இந்நாளைய கடமையாகும். இத்தொடரின் மிகவும் நேரடியான, துல்லியமான பொருளில் இந்நாளைய கடமையாகும்.
ஸ்வேஸ்டா, இதழ் 2, நூல் திரட்டு,
1910) டிசம்ப ர் 23 தொகுதி 20,
ஒப்பம் வி. இலியின் பக்கங்கள் 84-89
மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்
மார்க்சின் போதனை, நாகரிக உலகெங்கிலும் (அதிகாரத் தரப்பினதும், மிதவாதிகளதும் ஆகிய இரு வகையான) முதலாளித்துவ விஞ்ஞானம் அனைத்திடமிருந்தும் அளவற்ற பகைமையையும் வெறுப்பையும் கிளப்பிவிடுகிறது. மார்க்சியம் ஒரு வகையான ‘நச்சுத்தன்மை கொண்ட குறுங்குழுவாதம்’ என்று அது கருதுகின்றது. அதனிடமிருந்து வேறு எந்த விதமான போக்கையும் எதிர்பார்க்க முடியாதுதான். ஏனெனில், வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ள ஒரு சமுதாயத்தில் ஒருசார்பற்ற சமுதாய விஞ்ஞானம் எதுவும் இருக்க முடியாது. அதிகாரத் தரப்பைச் சேர்ந்த விஞ்ஞானம் அனைத்தும், மிதவாதிகளது விஞ்ஞானம் அனைத்தும் ஏதாவதொரு விதத்தில் கூலி அடிமை முறை யை ஆதரிக்கிறது. மார்க்சியமோ கூலி அடிமை முறையை ஈவிரக்கமின்றி எதிர்த்துப் போர்ப் பிரகடனம் செய்துள்ளது. மூலதனத்துக்குக் கிடைக்கும் இலாபத்தைக் குறைப்பதன் மூலம் தொழிலாளர்களின் கூலியை உயர்த்தலாமா என்ற பிரச்சினையில் முதலாளிகள் ஒருசார்பற்றவர்களாய் இருப்பார்களென எதிர்பார்ப்பது எப்படி அசட்டுத் தனமாகுமோ, ஏமாளித்தனமாகுமோ, அப்படித்தான் கூலி அடிமைமுறைச் சமுதாயத்தில் விஞ்ஞானம் ஒருசார்பற்றதாய் இருக்குமென எதிர்பார்ப்பதும் அசட்டுத்தனமாகும், ஏமாளித்தனமாகும்.
இது மட்டுமல்ல. தத்துவஞானத்தின் வரலாறும் சரி, சமுதாய விஞ்ஞானத்தின் வரலாறும் சரி, மார்க்சியத்தில் குறுங்குழுவாதம் போன்றதெதுவும் கிடையாது என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன. அதாவது, அது ஓர் இறுகிப்போன வறட்டுப் போதனையல்ல; உலக நாகரிக வளர்ச்சியின் ராஜபாட்டையின் வழியே வராமல் அதனின்று விலகி வேறொரு வழியே முளைத்த போதனை அல்ல. மாறாக, மனித குலத்தின் முன்னணிச் சிந்தனையாளர்கள் ஏற்கெனவே எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மார்க்ஸ் விடைகள் தந்தார் என்பதில் தான் குறிப்பாக அவருடைய மேதாவிலாசம் அடங்கியுள்ளது. தத்துவஞானம், அரசியல் பொருளாதாரம், சோஷலிசம் ஆகியவற்றின் தலைசிறந்த பிரதிநிதிகளுடைய போதனைகளின் நேரடியான, உடனடியான தொடர்ச்சியாகத்தான் மார்க்சின் போதனை எழுந்தது.

மார்க்சின் போதனை மெய்யானது, அதனால் தான் அது எல்லாம் வல்ல தன்மை பெற்றிருக்கிறது. அது முழுமையான, உள்ளிணக்கம் கொண்ட போதனை. ஓர் ஒன்றிணைந்த உலகப் பார்வையை அது மக்களுக்கு அளிக்கிறது. எந்த வடிவத்திலுமமைந்த மூடநம்பிக்கைகளோ, பிற்போக்கோ, முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு ஆதரவோ இந்த உலகப் பார்வையுடன் ஒத்துவர முடியாது. ஜெர்மானியத் தத்துவஞானம், ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சு சோஷலிசம் என்ற வடிவத்தில் 19-ஆம் நூற்றாண்டில் மனித குலம் உருவாக்கித் தந்த தலைசிறந்த படைப்புகளின் உரிமை பெற்ற வாரிசுதான் மார்க்சியம்.
இவை மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களாகும், மூன்று உள்ளடக்கக் கூறுகளாகும். இவற்றைச் சுருக்கமாகக் கவனிப்போம்.
1
பொருள்முதல்வாதம்தான் மார்க்சியத்தின் தத்துவஞானமாகும். பொருள்முதல்வாதம் ஒன்றுதான் முரணற்ற தத்துவஞானமாகும். இயற்கை விஞ்ஞானங்களுடைய எல்லாப் போதனைகளுக்கும் ஏற்புடையதாகும். மூட நம்பிக்கைகளுக்கும் பகட்டுக்கும் பசப்புக்கும் இன்ன பிறவற்றுக்கும் தீராப்பகையாகும் என்பது ஐரோப்பாவின் நவீன கால வரலாறு பூராவிலும், இன்னும் முக்கியமாய் மத்திய காலக் குப்பைக் கூளங்களை எதிர்த்தும், நிறுவனங்களிலும் கருத்துகளிலும் ஆட்சி புரிந்த பிரபுத்துவத்தை எதிர்த்தும் நடைபெற்ற முடிவான கடும் போரின் களமாயிருந்த பிரெஞ்சு நாட்டில் 18ம் நூற்றாண்டின் இறுதியிலும் தெளிவாக மெய்ப்பிக்கப்பட்டது. ஆகவே பொருள்முதல்வாதத்தை மறுப்பதற்கும், பலவீனப்படுத்துவதற்கும், பழிப்பதற்கும், ஜனநாயகத்தின் எதிரிகள் முழுமூச்சுடன் முயன்று பார்த்தார்கள். தத்துவஞானக் கருத்து முதல் வாதத்தின் பல வகை வடிவங்களை இவர்கள் ஆதரித்தனர். இவ்வகைக் கருத்துமுதல்வாதம் ஏதாவது ஒரு வழியில் எப்பொழுதும் மதத்தைப் பாதுகாக்கவோ ஆதரிக்கவோதான் செய்கிறது.
மார்க்சும் எங்கெல்சும் தத்துவஞானப் பொருள்முதல் வாதத்தை மிகுந்த மனத்திண்மையோடு ஆதரித்துப் பாதுகாத்தனர். இந்த அடிப்படையிலிருந்து விலகிச் செல்லும் ஒவ்வொரு திரிபும் மிகவும் தவறாயிருப்பதை அவர்கள் அடிக்கடி விளக்கி வந்தார்கள். எங்கெல்ஸ் எழுதிய லுட்விக் ஃபாயர் பாஹ், டூரிங்குக்கு மறுப்பு என்கிற நூல்களில் அவர்களுடைய கருத்துக்கள் மிகத் தெளிவாகவும் முழுமையாகவும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை என்கிற நூலைப் போலவே இவ்விரண்டு நூல்களும் வர்க்க உணர்வு பெற்ற ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவசியமான கைப்புத்தகங்களாகும்.
18ம் நூற்றாண்டின் பொருள்முதல்வாதத்துடன் மார்க்ஸ் நின்றுவிடவில்லை. அவர் தத்துவஞானத்தை முன்னேறச் செய்தார். மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானம் திரட்டிய செல்வங்களைக் கொண்டு, குறிப்பாக ஹெகலின் தத்துவ முறை – இதிலிருந்தே ஃபாயர்பாஹின் பொருள்முதல்வாதம் தோன்றியது – திரட்டிய செல்வங்களைக் கொண்டு, அவர் பொருள்முதல்வாதத்தை வளப்படுத்தினார். இந்தச் செல்வங்களில் பிரதானமாக விளங்குவது இயக்கவியல் தான். இயக்கவியல் என்பது மிகமிக முழுமையான, ஆழமான, ஒரு தலைப்பட்சமில்லாத வடிவத்தில் வளர்ச்சியைப் பற்றி விளக்கி விவரிக்கும் போதனையாகும், நிரந்தரமாக வளர்ச்சியற்ற வண் ணமுள்ள பருப்பொருளை நமக்குப் பிரதிபலித்துக் காட்டும் மனித அறிவின் சார்புநிலையை வலியுறுத்தும் போதனையாகும். ரேடியம், மின்னணுக்கள், தனிமங்களில் ஒன்று மற்றொன்றாக மாறுவது-இவை போன்ற இயற்கை விஞ்ஞானத்தின் மிக நவீன கண்டுபிடிப்புகளெல்லாம் மார்க்சின் இயக்கவியல் பொருள்முதல்வாதமே சரியானது என்று வியக்கத்தக்க முறையில் உறுதிப்படுத்தியுள்ளன. அழுகிப்போன பழைய கருத்து முதல்வாதத்தைப் பற்றிய ‘புதிய’ மறு வியாக்கியானங்களைக் கொண்டு முதலாளித்துவத் தத்துவஞானிகள் தந்த போதனைகளால் இதைத் தடுக்க முடியவில்லை .
தத்துவஞானப் பொருள்முதல் வாதத்தை மார்க்ஸ் ஆழமாக்கி வளர்த்து நிறைவு பெறச் செய்தார். இயற்கை பற்றிய அறிதலை மனித சமுதாயம் பற்றிய அறிதலாகவும் விரிவாக்கினார். மார்க்சின் வரலாற்றுத் துறைப் பொருள்முதல்வாதம் விஞ்ஞானச் சிந்தனைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது. முன்பெல்லாம் வரலாற்றையும் அரசியலையும் பற்றிய கருத்துகளில் குழப்பமும் தான் தோன்றித் தனமும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இப்போது அவை போய், வியப்பூட்டும் அளவுக்கு ஒருமித்த முழுமையும் உள்ளிணக்கமும் கொண்ட ஒரு விஞ்ஞானத் தத்துவம் வந்துவிட்டது. வரலாற்றுத் துறைப் பொருள்முதல்வாதம் என்ற இந்தத் தத்துவம் காட்டுவதென்ன? உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் விளைவாக ஒரு சமுதாய அமைப்பு முறையிலிருந்து அதைவிட உயர்தரமான இன்னொரு சமுதாய அமைப்புமுறை எப்படி வளர்கிறது என்பதை உதாரணமாக, நிலப்பிரபுத்துவச் சமுதாய அமைப்பு முறையிலிருந்து முதலாளித்துவச் சமுதாய அமைப்புமுறை எப்படி வளர்கிறது என்பதை – அது காட்டுகிறது.
இயற்கை என்பது – அதாவது வளர்ச்சி பெற்றுக் கொண்டேயிருக்கும் பருப்பொருள் என்பது மனிதனுக்கு அப்பால் சுயமாக இருந்து வருகிறது. இந்த இயற்கையை மனித அறிவு பிரதிபலிக்கிறது. அதே போலதான் மனிதனின் சமுதாய அறிவு எனப்படுவதும் (அதாவது தத்துவஞானம், மதம், அரசியல் முதலானவை சம்பந்தமாக மனிதன் கொண்டிருக்கும் பல்வேறு கருத்துக்களும் போதனைகளும்) சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையைப் பிரதிபலிக்கிறது. அரசியல் நிறுவனங்கள் என்பவையெல்லாம் பொருளாதார அடித் தளத்தின் மீது நிறுவப்பட்ட மேல் கட்டுமானமேயாகும். உதாரணமாக, நவீன ஐரோப்பிய அரசுகளின் பல்வேறு அரசியல் வடிவங்கள் எல்லாம் பாட்டாளி வர்க்கத்தின் மேல் முதலாளி வர்க்கம் செலுத்தி வரும் ஆதிக்கத்தைப் பலப் படுத்த எப்படிப் பயன்படுகின்றன என்பதை நாம் பார்க்கிறோம்.
மார்க்சின் தத்துவஞானம் முழுநிறைவு பெற்ற தத்துவ ஞானப் பொருள்முதல்வாதமாகும். இந்தப் பொருள் முதல் வாதம் மனித குலத்திற்கு, குறிப்பாகத் தொழிலாளி வர்க்கத்துக்கு, மகத்தான அறிவுச் சாதனங்களை வழங்கியிருக்கிறது.
பொருளாதார அமைப்பு முறை என்ற அடித்தளத்தின் மீதுதான் அரசியல் மேல் கட்டுமானம் கட்டப்படுகிறது என்று ஏற்றுக் கொண்டவுடன், மார்க்ஸ் தமது பெரும்பாலான கவனத்தை இந்தப் பொருளாதார அமைப்புமுறையின் மீது செலுத்தினார். மார்க்சின் பிரதான நூலாகிய மூலதனம் நவீன காலத்திய-அதாவது, முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையை ஆராயும் நூலாகும்.
மார்க்சுக்கு முற்பட்ட மூலச்சிறப்புள்ள அரசியல் பொருளாதாரம் முதலாளித்துவ நாடுகள் எல்லாவற்றிலும் அதிக வளர்ச்சி பெற்றிருந்த இங்கிலாந்திலே உருவாயிற்று. ஆடம் ஸ்மித்தும் டேவிட் ரிக்கார்டோவும் பொருளாதார அமைப்பு முறையை ஆராய்ந்து மதிப்பு பற்றிய உழைப்புத் தத்துவத்துக்கு அஸ்திவாரமிட்டார்கள். அவர்களுடைய பணியை மார்க்ஸ் தொடர்ந்து நடத்தினார். இந்தத் தத்துவத்தை அவர் திட்டமாக நிரூபித்து முரணற்ற வகையில் விவரித்தார். ஒவ்வொரு பண்டத்தின் மதிப்பும் அதை உற்பத்தி செய்வதில் செலவழிக்கப்பட்ட சமுதாய ரீதியில் அவசியமான உழைப்பு நேரத்தின் அளவைக் கொண்டுதான் நிர்ணயிக்கப்படுகிறது என்று அவர் விளக்கிக் காட்டினார்,
முதலாளித்துவப் பொருளாதாரவாதிகள், பொருட்கள் இடையிலான (ஒரு பண்டம் மற்றென்றுடன் பரிமாற்றம் செய்து கொள்ளப்படும்) உறவு என்பதாக விவரித்ததில் மனிதர்கள் இடையிலான உறவு நிலவுவதை மார்க்ஸ் புலப்படுத்தினார். பண்டப் பரிமாற்றம் தனித்தனியான உற்பத்தியாளர்களிடையே சந்தை மூலமாக ஏற்படும் பிணைப்பைக் காட்டுகிறது. பணம் என்பது இந்தப் பிணைப்பு தனிப்பட்ட உற்பத்தியாளர்களின் பொருளாதார வாழ்க்கை முழுவதையும் பிரிக்க முடியாதபடி முழுமொத்தமாக இணைத்து மேலும் மேலும் நெருக்கமாவதைக் குறிக்கிறது. மூலதனம் என்பது இந்தப் பிணைப்பு மேலும் வளர்ச்சியுறுவதைக் குறிக்கிறது; அதாவது மனிதனின் உழைப்புச் சக்தியே ஒரு பரிமாற்றப் பண்டமாகிவிடுவதைக் குறிக்கிறது. கூலி பெறும் உழைப்பாளி நிலம், ஆலைகள், உழைப்புக் கருவிகள் ஆகியவற்றின் சொந்தக்காரர்களிடம் தனது உழைப்புச் சக்தியை விற்கிறான், தொழிலாளி வேலை நாளின் ஒரு பகுதியைத் தன்னையும் தனது குடும்பத்தையும் பராமரித்துக் கொள்வதற்கு வேண்டிய செலவுக்காக (அதாவது, கூலிக்காக) உழைப்பதில் கழிக்கிறான், மறு பகுதியில் ஊதியமின்றியே உழைத்து முதலாளிக்கு உபரி மதிப்பை உண்டாக்கித் தருகிறன் இந்த உபரி மதிப்புத்தான் இலாபத்துக்குத் தோற்றுவாய், அதுதான் முதலாளி வர்க்கத்தின் செல்வத்துக்குத் தோற்றுவாய்,
உபரி மதிப்பைப் பற்றிய போதனைதான் மார்க்சின் பொருளாதாரத் தத்துவத்துக்கு மூலைக்கல் ஆகும்.தொழிலாளியின் உழைப்பால் உண்டாக்கப்பட்ட மூலதனம் சிறு உற்பத்தியாளர்களை அழித்து வேலையில்லாதோர் பட்டாளத்தைப் படைப்பதின் மூலமாகத் தொழிலாளியை நசுக்குகிறது. தொழில் துறையில், பெருவீத உற்பத்தி பெறுகிற வெற்றி பளிச்சென்று தெரிகிறது. ஆனால், இதே நிகழ்ச்சியை விவசாயத் துறையிலும் நாம் பார்க்க முடியும். பெருவீத முதலாளித்துவ விவசாயத்தின் மேநிலை அதிகமாகிக் கொண்டே போகிறது : விவசாயத்தில் இயந்திரங்களை உபயோகிப்பதும் அதிகரிக்கிறது; பண மூலதனத்தின் சுருக்குக் கயிற்றில் விவசாயப் பொருளாதாரம் சிக்கிக் கொள்கிறது; அது தனது பிற்பட்ட தொழில் நுணுக்கத்தின் சுமையால் அழுத்தப்பட்டு அழிகிறது. விவசாயத் துறையில் சிற்றளவான உற்பத்தியின் சீர்குலைவுக்குரிய வடிவங்கள் வேறாயிருப்பினும், இச்சீர்குலைவு ஏற்படுவது மறுக்கமுடியாத உண்மையாகும்.
மூலதனம் சிற்றளவான உற்பத்தியை ஒழிப்பதன் மூலம், உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதற்கும் பெரிய முதலாளிகளின் கூட்டுகளுக்கு ஏகபோக நிலையைப் படைப்பதற்கும் வகை செய்கிறது. உற்பத்தியே மேலும் மேலும் சமுதாயத் தன்மை பெறுகிறது : ஒரு முறையான பொருளாதார ஒழுங்கமைப்பிலே இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பிணைக்கப்பட்டு விடுகின்றனர். ஆனால் அந்தக் கூட்டு உழைப்பின் உற்பத்திப் பொருளை விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சில முதலாளிகள் உடைமையாக்கிக் கொள்கிறார்கள். உற்பத்தியில் அராஜகம் வளர்கிறது; அதேபோல் நெருக்கடிகளும் வளர்கின்றன; சந்தைகளைப் பிடித்துக்கொள்வதற்கான ஆவேச வேட்டையும் அதிகமாகிறது; திரளான மக்களின் வாழ்க்கைக் காப்புறுதியின்மையும் அதிகரிக்கிறது. தொழிலாளர்கள் மூலதனத்தை அண்டிப் பிழைக்க வேண்டிய நிலையை முதலாளித்துவ முறை தீவிரப்படுத்தும் அதே சமயத்தில் ஒன்றுசேர்ந்த தொழிலாளர் எனும் மாபெரும் பலத்தையும் பிறப்பித்துவிடுகிறது.
பரிமாற்றப் பண்டப் பொருளாதாரத்தின் ஆரம்ப வித்துகளிலிருந்து, சாதாரணப் பரிமாற்றத்திலிருந்து தொடங்கி, மிக உயர்ந்த வடிவங்கள் வரையில், பெருவீத உற்பத்தி வரையில் முதலாளித்துவத்தின் வளர்ச்சியை மார்க்ஸ் ஆராய்ந்து காட்டினார்.
பழையவையும் புதியவையும் அடங்கலான எல்லா முதலாளித்துவ நாடுகளின் அனுபவமும் இந்த மார்க்சியப் போதனை பிழையற்றதாகும் என்பதை ஆண்டு தோறும் மேலும் மேலும் கூடுதலான தொழிலாளர்களுக்குத் தெளிவாக நிரூபித்துக் காட்டி வருகிறது.
உலகெங்கும் முதலாளித்துவம் வெற்றி பெற்றுவிட்டது. ஆனால் இந்த வெற்றி முதலாளித்துவத்தின் மீது தொழிலாளர் காணப் போகும் வெற்றியின் முன்னறிவிப்பே ஆகும்.
நிலப்பிரபுத்துவ அமைப்புமுறை வீழ்த்தப்பட்டு “சுதந்திரமான” முதலாளித்துவச் சமுதாயம் இப்பூவுலகில் தோன்றிய பொழுது இந்தச் சுதந்திரம் உழைப்பாளிகளை ஒடுக்கவும் சுரண்டவும் அமைந்த புதியதோர் அமைப்புமுறையையே குறித்தது என்பது உடனே தெளிவாக விளங்கலாயிற்று. இந்த ஒடுக்குமுறையின் பிரதிபலிப்பாகவும் இதற்கான கண்டனமாகவும் பல்வேறு சோஷலிசப் போதனைகள் உடனே தலை தூக்கத் தொடங்கின. ஆனால் ஆரம்ப காலத்திய சோஷலிசம் கற்பனை சோஷலிசமாகத்தான் இருந்தது. அது முதலாளித்துவச் சமுதாயத்தை விமர்சித்தது. கண்டித்தது, சபித்தது; அந்தச் சமுதாயத்தை ஒழிக்க வேண்டும் என்று கனவு கண்டது; அதை விட மேலான ஓர் அமைப்புமுறையைப் பற்றி ஆகாயக் கோட்டை கட்டி வந்தது; சுரண்டுவது ஒழுக்கக்கேடான செயல் என்று பணக்காரர்களுக்கு உணர்த்த முயற்சித்தது.
ஆனால் கற்பனா சோஷலிசத்தினால் விடுதலைக்கான மெய்யான வழியைக் காட்ட முடியவில்லை. முதலாளித்துவத்தில் நிலவும் கூலி அடிமைமுறையின் சாராம்சத்தை அதனால் விளக்க முடியவில்லை. முதலாளித்துவ முறையின் வளர்ச்சி பற்றிய விதிகளை அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு புதிய சமுதாயத்தின் படைப்பாளியாக அமையவல்ல சமுதாயச் சக்தியை அதனால் சுட்டிக் காட்டவும் முடியவில்லை. இதற்கிடையில், நிலப்பிரபுத்துவத்தின் வீழ்ச்சியையும் பண்ணை அடிமை முறையின் வீழ்ச்சியையும் தொடர்ந்து ஐரோப்பா முழுவதிலும், குறிப்பாக பிரான்சில், ஏற்பட்ட புயல் வேகப் புரட்சிகள், வர்க்கங்களின் போராட்டம்தான் எல்லா வளர்ச்சிக்கும் ஆதாரமாயும் உந்து விசையாகவும் உள்ளது என்பதை மேலும் மேலும் தெளிவாக வெளிப்படுத்தின.
நிலப்பிரபுத்துவ வர்க்கத்துக்கெதிராய் அரசியல் சுதந்திர இலட்சியத்துக்குக் கிடைத்த எந்த ஒரு வெற்றியும் அவ்வர்க்கத்தின் மூர்க்கமான எதிர்ப்பில்லாமல் கிடைத்து விடவில்லை. முதலாளித்துவச் சமுதாயத்தின் பல்வேறு வர்க்கங்களிடையே ஜீவமரணப் போராட்டம் இல்லாமல் எந்த முதலாளித்துவ நாடும் ஓரளவு சுதந்திரமான, ஜனநாயக அடிப்படையில் வளர்ச்சியுற்று விடவில்லை.
வேறு எவருக்கும் முன்பாக மார்க்சுக்குத்தான் உலக வரலாறு போதிக்கும் படிப்பினையை இதிலிருந்து கண்டறியவும், அந்தப் படிப்பினையை முரணின்றிச் செயல்படுத்தவும் முடிந்தது, இதில் தான் அவருடைய மேதாவிலாசம் இருக்கிறது. வர்க்கப் போராட்டத்தைப் பற்றிய போதனைதான் அந்த முடிபாகும். நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவிதச் சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதைக் கண்டு கொள்ள மக்கள் தெரிந்து கொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாள்களாக்கிக்கொண்டேயிருப்பார்கள். இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன? பழைமையைத் துடைத்தெறியவும் புதுமையைப் படைக்கவும் திறன் பெற்றவையும் சமுதாயத்தில் தங்களுக்குள்ள நிலையின் காரணமாக அப்படிப் படைத்துத் தீரவேண்டிய கட்டாயத்திலிருக்கிறவையுமான சக்திகளை நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதாயத்திற்குள்ளேயே நாம் கண்டுபிடித்து, அந்தச் சக்திகளுக்கு அறிவொளியூட்டிப் போராட்டத்திற்கு ஒழுங்கமைத்துத் திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி.
மார்க்சின் தத்துவஞானப் பொருள்முதல்வாதம் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களெல்லாம் அது வரை உழன்று கொண்டிருந்த ஆன்மிக அடிமைத்தனத்திலிருந்து வெளியேறும் வழியைப் பாட்டாளி வர்க்கத்திற்குக் காட்டியிருக்கிறது. மார்க்சின் பொருளாதாரத் தத்துவம் ஒன்றுதான் பொதுவான முதலாளித்துவ அமைப்பு முறையில் பாட்டாளி வர்க்கத்தின் உண்மை நிலையை விளக்கியுள்ளது.
அமெரிக்காவிலிருந்து ஜப்பான் வரை, ஸ்வீடனிலிருந்து தென்னாப்பிரிக்கா வரை, உலகமெங்கும் பாட்டாளி வர்க்கத்தின் சுயேச்சையான நிறுவனங்கள் பெருகிக்கொண்டேயிருக்கின்றன. தனது வர்க்கப் போராட்டத்தை நடத்திச் செல்வதன் வாயிலாகப் பாட்டாளி வர்க்கம் அறிவொளியும் கல்வியும் பெற்று வருகிறது; முதலாளித்துவச் சமுதாயத்திற்குரிய சார்புக் கருத்துக்களினின்று தன்னை விடுவித்துக் கொண்டுவருகிறது; தன் அணிகளை நெருக்கமாகத் திரட்டிச் சேர்த்து வருகிறது; தனது வெற்றிகளின் வீச்சை அளந்தறியக் கற்றுக் கொண்டு வருகிறது; தன் சக்திகளை எஃகு போல் திடப்படுத்தி வருகிறது; தடை செய்ய முடியாதபடி வளர்ந்துவருகிறது.
1913 மார்ச்சில் நூல் திரட்டு ,
புரோஸ்வெஷேனியே, தொகுதி 23,
இதழ் 3-ல் வெளிவந்தது பக்கங்கள் 40-48
No comments:
Post a Comment