சோசலிசப் பொருளாதாரத்திற்கும் முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கும் இடையிலான வேறுபாட்டை மறுக்கும் மார்க்சியலெனினியத்திற்கு எதிரான கருத்திற்கு எதிராகப் போராடுவோம்!.

"இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், சோவியத் யூனியனும் அணுக் குண்டு கண்டு தயாரித்த பின்னர், அன்றைய உலக ஏகாதிபத்தியங்கள் முதல் உள்ளூர் முதலாளிகள், நிலப்பிரபு வர்க்கங்கள், அதிகார வர்க்கங்கள் விரைவாக அழியாமல் இருப்பதை தடுக்க வேண்டுமானால், மார்க்சீய சோசலிச பொருளாதாரத்தை உள்வாங்கி மாறியாக வேண்டிய கட்டாயம் உலகப்பழைய ஏகாதிபத்தியங்களுக்கு ஏற்பட்டது..

அதனால், வேறு வழியின்றி மார்க்சீயப் பொருளாதாரத்தை உள்வாங்கி, முதலாளிகளின் தன்மைக் கேற்பமாற்றியமைத்து, புதிய வகைகலப்பு உற்பத்திமுறைக்கு மாறிவிட்டனர் பழையஏகாதிபத்தியங்கள்.

இவ்வாறு மாறுவதற்கு, அறிவியல் தொழில் நுட்பத்தின் வேகமான வளர்ச்சியும், அதனால் தற்செயலாக ஏற்பட்ட, அதிபயங்கர அணுவாயுத கண்டுபிடிப்பும் பேருதவி செய்தது.

இந்த சோசலிசமும் முதலாளித்துவமும் கலந்த, புதியகலப்பு வகை உற்பத்திமுறை, சோசலிச பொருளாதாரத்தின் போட்டியற்ற, திட்டமிட்ட உற்பத்திமுறையை விட முன்னேறியது".

மேலே காணப்படும் கருத்தை முன்வைத்து அதுதான் இன்றைய மார்க்சியம் என்ற கருத்தை பரப்பி வருகிறார்கள். இந்த கருத்து தவறானது என்ற எமது பதிலை முன்வைத்து விவாதிப்பது எமது கடமை என்று கருதிஇலக்குஇங்கே எமது கருத்தை விவாதத்திற்காக முன்வைக்கிறது.

ஏகாதிபத்தியங்களுக்கு இடையே காலனிகளை கைப்பற்று வதற்காகவும், செல்வாக்கு மண்டலங்களை அடைவதற்காகவும் முதல் உலக யுத்தம் நடத்தப்பட்டது. அந்த யுத்தத்தைப் பயன்படுத்தி ரஷ்யாவில் புரட்சியை நடத்தி பாட்டாளி வர்க்கம் தனது முதல் சோவியத்துபாட்டாளிவர்க்க அரசை உருவாக்கியது.

அதற்குப்பின்பு சோசலிச சோவியத்து அரசை ஒழித்துக்கட்டவும் உலக ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் உலகை மறுபங்கீடு செய்வதற்காகவும் இரண்டாவது உலகயுத்தத்தை ஏகாதிபத்தியவாதிகள் நடத்தினார்கள். அந்த யுத்தத்திற்குப் பிறகு சீனாவிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கம்யூனிஸ்டுகளின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

இவ்வாறு உலகில் மூன்றில் ஒரு பகுதியில் கம்யூனிஸ்டுகளின் ஆட்சி ஏற்படுத்தப் பட்டு அங்கு மக்களின் வாழ்க்கையை மக்களே தீர்மானிக்கும் ஆட்சி முறைகள் ஏற்பட்டு அங்கு தனியுடமை ஒழிக்கப்பட்டு அதாவது பெருமுதலாளிகளின் மூலதன உடமைகள் பறிக்கப்பட்டு அவற்றை உழைக்கும் மக்களின் உடமையாக மாற்றப்பட்டு மேலும் அங்கு முதலாளித்துவ சுரண்டல் ஒழிக்கப்பட்டு அங்கு மக்கள் நலமுடன் வாழ்வதை அறிந்த உலகின் பலபகுதிகளில் வாழும் மக்கள் கம்யூனிஸ்டு கட்சிகளின் பின்னால் அணி திரண்டு கம்யூனிஸ்டுகளின் ஆட்சி ஏற்பட்டு விடுமோ என்று ஏகாதிபத்தியவாதிகள் அஞ்சினார்கள். ஆக வேகம் கம்யூனிஸ்டுகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பிரிட்டீஷ் முதலாளித்துவ பொருளியலாலரான கீன்ஸ் என்பவரால் முன்வைக்கப்பட்ட கீன்சியப் பொருளாதாரக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று ஏகாதிபத்தியவாதிகள் முடிவு செய்து அதனை இரண்டாம் உலகப்போர் நடைபெறுவதற்கு முன்பாகவே அவர்களது நாட்டில் செயல்படுத்தினார்கள். இரண்டாம் உலகப்போருக்குப்பின்பு அதே கீன்சியக் கொள்கையை அவர்களது நாட்டில் மட்டுமல்ல, அவர்களது செல்வாக்கிலுள்ள அவர்களைச் சார்ந்து செயல்படும் புதியகாலனி மற்றும் சார்புநாடுகளிலும் செயல்படுத்தினர். இவ்வாறு ஏகாதிபத்தியவாதிகளால் செயல்படுத்திய கொள்கையையே " மார்க்சீயப் பொருளாதாரத்தை உள்வாங்கி, முதலாளிகளின் தன்மைக் கேற்ப மாற்றியமைத்து, புதியவகை கலப்பு உற்பத்திமுறைக்கு மாறிவிட்டனர் பழைய ஏகாதிபத்தியங்கள்." என்று ஏகாதிபத்தியத்தை இரண்டாம் உலகப்போருக்கு முன்பு பழையஏகாதிபத்தியம் என்றும் போருக்குப்பிறகு இந்த பழைய ஏகாதிபத்தியங்கள் புதிய ஏகாதிபத்தியமாக மாறிவிட்டது என்ற கருத்தைப் பரப்பும் புதிய வகையான மார்க்சியர்கள் முன்வைக்கிறார்கள்.

முதலாளித்துவப் பொருளாதாரம் என்பது சுரண்டலை அடிப்படையாகக் கொண்டது தனியுடமையை பாதுகாப்பது. சோசலிசப் பொருளாதாரம் என்பது சுரண்டலை ஒழித்த தனியுடமையை ஒழித்த பொருளாதாரம் ஆகும்.

சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தில் உழைக்கும் மக்கள் சுரண்டப்படுவார்கள். அதனால் அவர்களுக்கு கூலி குறைவாக கிடைக்கும். அந்த குறைந்த வருமானத்தைக் கொண்டு அவர்களுக்கு தேவையான பொருள்களை அவர்களால் வாங்க முடியாது. அதாவது மக்களின் வாங்கும் சக்தி குறையும். ஆதனால் சந்தையில் பொருள்களை விற்க முடியாமல் பொருள்கள் தேங்கும். முதலாளிகளால் பொருள்களை தொடர்ந்து உற்பத்தி செய்யமுடியாத நிலை ஏற்படும். இந்த நெருக்கடியிலிருந்து மீண்டுவர ஏகாதிபத்தியவாதிகள் சந்தைக்காகவும் செல்வாக்கு மண்டலங்களுக்காகவும் போர் நடத்துகிறார்கள்.

இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக உழைக்கும் மக்கள் நடத்தும் போராட்டங்களை ஒடுக்குவதற்காக ஏகாதிபத்தியவாதிகள் பாசிச ஆட்சி முறையை கொண்டுவருகிறார்கள். இதற்கு மாறாக சோசலிசப் பொருளாதாரமானது சுரண்டலை ஒழித்த பொருளாதாரம்ஆகும். இதனால் உழைக்கும் மக்களுக்கு அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். அந்த வருமானத்தைக் கொண்டு உழைக்கும் மக்கள்அவர்களுக்கு தேவையான பொருள்களை சந்தையில் தாராளமாக வாங்கி பயன்படுத்துவார்கள். சந்தையில் பொருள்கள் தேங்காது. தொடர்ந்து பொருளுற்பத்தி நடைபெறும், அனைத்து மக்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும், அனைத்து மக்களுக்கும் வாங்கும் சக்தி வளர்க்கப்படும். இதனால் மக்கள் அனைவரும் சிறப்பாக வாழ்வார்கள்.

புதிய மார்க்சியர்களாக வலம் வருபவர்கள் சொல்லும் புதிய ஏகாதிபத்தியவாதிகளின் மார்க்சியப் பொருளாதாரம் மற்றும் முதலாளித்துவப் பொருளாதாரத்தை கலந்து உருவாக்கப்பட்ட கலப்புப் பொருளாதாரம் என்பது கீன்சியப்பொருளாதாரம்தான். இந்தப் பொருளாதாரத்தைத்தான் இவர்கள் மெச்சிப் புகழ்கிறார்கள். இந்தப் பொருளாதாரத்தை தொடர்ந்து செயல்படுத்துவதன் மூலம் சமூகம் மாறிவிடும் என்றும் உழைக்கும் மக்களுக்கான புதிய உலகத்தை உருவாக்கிவிட முடியும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இவர்களது கருத்தை ஏற்காதவர்கள் எல்லாம் மனப்பாட மார்க்சியவாதிகள் என்கிறார்கள்.

சோசலிசப் பொருளாதாரம் என்பது மக்களுக்கு உயிரைக்கொடுக்கும் உணவுப் பொருள் போன்றது. முதலாளித்துவப் பொருளாதாரம் என்பது மக்களது உயிரைப் பறிக்கும் விஷம் போன்றதாகும். சோசலிசப் பொருளாதாரத்தையும் முதலாளித்துவப் பொருளாதாரத்தையும் கலப்பது என்பது உணவோடு விஷத்தை கலப்பதாகும். ஒருகுடம்பாலில் ஒருதுளிவிஷத்தைக் கலந்தாலும் அதுபாலாக இருக்காது அதுவிஷமாகமாறிவிடும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். ஆனால் சோசலிசப்பொருளாதாரத்தோடு முதலாளித்துவப் பொருளாதாரத்தைக் கலந்தாலும் சரி, முதலாளித்துவப் பொருளாதாரத்தோடு சோசலிசப்பொருளாதாரத்தைக் கலந்தாலும் சரி இவ்விரண்டும் சாராம்சத்தில் முதலாளித்துவப்பொருளாதாரமாகவே இருக்கும் என்ற உண்மையை பலரும் அறியாத காரணத்தால் இவர்கள் அறியாமையிலுள்ளோரை ஏமாற்றுவதற்காக இந்த கலப்புப்பொருளாதாரத்தைப் பற்றி பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் சோசலிசப் பொருளாதாரமும் முதலாளித்துவப்பொருளாதரமும் எதிர் எதிரானபகைமை கொண்டதுஎன்ற உண்மையை புரிந்துகொண்டால் இவர்களது ஏமாற்று கருத்துக்களை நாம் புரிந்து கொள்ள முடியும். நாம் இவர்களிடம் ஏமாறமாட்டோம்.

தொடரும் ………….தேன் மொழி

 

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்