சமூகத்தில் ஜாதியம் ஓர் தேடல்-சிபி
அறிமுகம்:-சாதியம் என்பது மக்கள் தோன்றிய காலம் தொட்டே இருந்த ஒன்று அல்ல.
இவை தனி உடமை தேவையை ஒட்டி சொத்து சேர்க்கும் ஒரு கூட்டம் தோன்றிய பொழுது அடுதவர்களின் உழைப்பை சுரண்ட தேவையான பல வகை சுரண்டல் முறை உலகெங்கும் காண முடியும். அதில் இந்திய துணை கண்டத்தில் அந்த சுரண்டல் முறையின் ஒரு வடிவம் சாதியாக உருதிரண்டு நிலவுடைமை சமூகத்தில் அவை உருபெற்றது.
அதாவது உலகில் உள்ள மற்றச் சமூகப்பு போலவே இந்தியச் சமுக அமைப்பும் வர்க்க அமைப்பே அதில் சில தனிச் சிறப்புகள் உண்டு (வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில்).இந்தியச் சமூகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதி நிலவி வந்தாலும் அதன் செயல்பாடும் வடிவமும் எல்லா காலங்களிலும், ஒரே மாதிரியாய் இருந்ததில்லை.
நிலபிரப்புத்துவ அமைப்பு முறையில் தொழிற் பிரிவினை அடிப்படையில் சாதியம் உறுதியாக செயல்பட்டது. இன்றோ நடைமுறையில் அவை இருந்தாலும் கோட்பாட்டு அளவில் மறுக்கப் பட்டுள்ளது (சட்ட ரீதியா).
சாதியானது இந்திய சமூக வளச்சிப் போக்கில் இயற்கையாய் கருக்கொண்டு சூழலுக்கேற்ப உருக்கொண்டு, உபரியை உறிஞ்சும் சுரண்டல் வடிவமாக உருபெற்றபோது அதற்கு கோட்பாட்டு நியாயம் வழங்கி சாதியத்தின் இருதலுக்கு பங்காற்றியது (சனத்தன இந்து மத) பிராமணியமே, அதன் கொடிய அம்சம் சுரண்டல் வடிவில் அடங்கி உள்ளது. பிறப்பின் அடிப்படையில் தொழில்களை ஒழுகமைப்பதில் இச்சுரண்டல் அடங்கியுள்ளது.
நிலப்பிரபுத்துவத்திற்கு முந்தைய உற்பத்தி முறையிலேயே சாதி கருக்கொண்டிருந்தாலும் அவை திடமாக நிலபிரபுத்துவத்தில்தான் உருக் கொண்டது.
நிலப்பிரபுத்துவ அமைப்பில் நிலத்தின் மேல் பரம்பரையாக உரிமை கொண்டவர் தம்மை உயர்ந்த ஜாதியாக்கிக் கொண்டனர். நிலவுடமை சமூகத்தில் நிலத்தில் உழைப்பவர்கள் நிலம் சார்ந்த உழைபிற்கான பிற சேவைகளை கவனித்தவர் யாவரும் சேவையின் அத்தியாவசியத்தை ஒட்டி பல்வேறு சமூக அமைப்பினராக பல படிகளில் பிரிக்கப்பட்டனர். நிலமுடையவர்க்கு உயர்ந்த மதிப்பும் உழைக்க வேண்டியதில்லை, உடல் உழைப்பாளர்கள் மதிபற்றவர்களாக கருதுகின்ற இந்த ஜாதி அமைப்பின் அடிப்படை நோக்கம் உழைப்புச் சுரண்டலே. கிராமங்களில் தொழில்பிரிவில் உள்ள எல்லோரும் உற்பத்தி சாதனங்களை கொண்ட நிலப்பிரபுக்களின் தயவில் வாழ நேரிட்டது.
இன்றை சமூகத்தில் நிலப்பிரபுத்துவம் அதிகாரத்தில் இல்லாமல் இருந்தும்; தனியுடமை சமூக அமைப்பு ஜாதிகளை கட்டிக் காத்து அதன் முரண்பாடுகளை மக்கள் மத்தியில் விதைத்து பிரித்தாளும் சூழ்ச்சியால் ஆளும் வர்க்கம் தொடர்ந்து பாதுகாக்கிறது. சாதியின் பெயரால் அடக்கி ஒடுக்கப் படுகின்றனர்.
நான் இந்திய சாதி அமைப்பு முறையை தேடிய பொழுது அதற்கான பிரச்சினை நமது கல்வியிலே உள்ளது என்றறிந்து அதனையும் இதன் ஊடாக அறிந்துக் கொள்ள ஒரு முயற்ச்சியேதான் இந்த கல்வி பற்றி தேடுதலும் அவசியம்தான்(அதனை வேறு பகுதியில் பார்ப்போம்).
தெற்கு ஆசியாவில் ஜாதியம்
தெற்கு ஆசியாவில் பல்வேறு பகுதியில் ஜாதியினுடைய தன்மைகள் விரவிக் கிடப்பதை காணலாம். குறிப்பாக இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கையில் இதன் தன்மைகள் விரவிக் கிடக்கின்றன. பங்களாதேஷ் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் காண்பதை விட இந்தியா நேபாளம் இலங்கை ஆகிய நாடுகளில் ஜாதியத்தின் இறுக்கத்தை காண்கின்றனர் வரலாற்று அறிஞர்கள்.
இந்தியா முழுவதும் ஜாதி பரவி கிடக்கின்றது அது பொது தன்மையோடு இருப்பினும் அதிலும் பல வட்டார அடிப்படையிலான வேறுபாடுகள் உள்ளன.
தென்னிந்திய பகுதிகளில் அமைந்துள்ள ஜாதியானது தமிழ்நாடு மற்றும் ஆந்திர பகுதிகளில் இருப்பதை விட கேரளா பகுதியில் கட்டிறுக்கம் மிகுந்ததாக காணப்படுகிறது. (வீரிவாக வரும் தொடர் பகுதியில் காண்போம்).
இலங்கையில் பௌத்த மத செல்வாக்கின் ஊடேயும் ஜாதி படிநிலை சமூகம் அமைந்துள்ளது. ஜாதி தென்னாசிய சமூகத்தின் கூறாக இருப்பினும் அது இந்தியப் பகுதிகளிலேயே கூடுதல் தெளிவாக துலக்கமாகின்றது. இங்கும் பல வட்டார வேறுபாடுகளுடன் ஜாதி துலக்கமாகின்றது என்ற கருத்தை இதனுடன் சேர்த்து எண்ணலாம். (சாதியம் கோ.கேசவன் நூல் பக்கம் 9).
ஜாதி பற்றிய பல்வேறு கோட்பாடுகள்
சாதியத்தின் தோற்றத்தை விளக்கும் சில கோட்பாடுகள் உள்ளன அவற்றில் குறிக்கதக்கன.
1. மதக் கோட்பாடு (religious theory)
2. தொழிற் கோட்பாடு (occupational theory)
3. இனக் கோட்பாடு (racial theory)
4. அம்பேத்காரின் கூற்று
தொழிற் கோட்பாடு (occupational theory):- சாதி மக்கள் குழுக்கள் செய்யும் தொழில் அடிப்படையில் அமைந்தது என்பதுவே தொழிற் கோட்பாடு. தொழில்களின் தன்மை காரணமாக 'தூய்மை' 'தீட்டு' வரையறை செய்யப்பட்டன.
இனக்கோட்பாடு:-ஆரியர்கள் இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்த போது தொல் திராவிடர்களை அடிமைப்படுத்தி நிறுவிய அமைப்பே சாதி அமைப்பு என்கிறது இனக் கோட்பாடு. "குடியேறிய ஆரியர்கள் இங்கிருந்தவர்களைக் காட்டிலும் உடல் தோற்றத்தில் பொலிவானவர்களாகத் திகழ்ந்ததால் அதனைப் பயன்படுத்தி அவர்கள் வருணப் பாகுபாட்டைக் காட்டத் தொடங்கினர்.
மதக் கோட்பாடு.
ஜாதியின் தோற்ற வளர்ச்சியை சமயத்தோடு இணைத்து காணுகின்றனர் அதுவும் இந்து சமயத்தோடு மட்டுமே. இந்து சமயம் என்பதே ஒரு கலவை ஆகும். இந்திய பகுதிகளில் பல்வேறு காலங்களில் உருவாகி திரட்சி பெற்ற மேலாதிக்க சமய கருத்துகளின் தொகுப்பாகவும் வேதநெறிகளின் மையமாகக் கொண்ட பார்ப்பனர்களின் சமயமாகும் இந்து சமயத்தை காண வேண்டி உள்ளது.
நமது புரிதலுக்கு; ஜாதியின் தோற்றத்தில் எந்த ஒரு சமயத்தின் செயல்பட்டு காண இயலாது என்று கூறினாலும் தர வேறுபாடு கொண்ட பலநிலையினரைக் கொண்ட ஒரு சமுதாயத்தை ஒரே சமூகமாக இணைக்கவும் உறவு படுத்துவான பல அம்சங்களை சமயத்தில் செயல்பாட்டில் காணலாம் (ஆந்திரே பெடேல்). இந்து சமயத்தில் மட்டுமல்லாமல் பௌத்தம் சீக்கிய இஸ்லாமிய சமயம் கூட ஜாதி முறை இருப்பதை காணலாம். இந்து சமயமே ஜாதி வேறுபாடுகளுக்கு இறையியல் நேயத்தை கற்பித்து கொடுக்கிறது. (கெயில் ஓம்வெத்).
முஸ்லிம்கள் சீக்கியர்கள் கிறிஸ்தவ சமயத்தினருக்கு இடையே உள்ள சாதியத்துக்கும் இந்துக்களுக்கு இடையே உள்ள சாதியத்துக்கும் உள்ள வேறுபாடு அடிப்படையில் மாறுபட்டது. மற்ற சமயங்களில் உள்ள பல்வேறு குழுக்களை உணர்வுபூர்வமாக இணைக்கக்கூடிய காரணங்கள் பல உள்ளன. ஜாதி விதிகளை மீறிய காரணத்துக்காக பிற சமயங்களில் ஜாதியில் இருந்து விலகி வைக்க முடியாது. இந்த சமயங்களில் ஜாதியை கடைப்பிடிப்பது புனிதமான சமய கடமையாக இருக்கவில்லை (அம்பேத்கர்).
இவை எல்லாவற்றையும் காணும் பொழுது ஜாதியின் இருத்தலுக்கு உரிய இறையியல் மற்றும் சாத்திர நியாயத்தை இந்து சமயம் வழங்குகிறது என்பதையும் ஜாதியத்தை இந்து சமயமே பேணிப் பாதுகாக்கிறது என்பதை அறிய முடிகின்றது.
ஜாதியை இருத்தலுக்கு இந்து சமயம் நியாயம் கற்பிக்கிறதே ஒழிய ஜாதியின் தோற்றத்தை இந்து சமயத்தோடு இணைத்து ஏற்றுக் கொள்ள இயலாது.
அம்பேத்கரின் கூற்று:-ஒரே சாதிக்குள் நடைபெறும் அகமண முறையே சாதியின் தோற்றத்துக்குக் காரணம் என்று கூறுகிறார்.
‘இந்தியாவில் சாதிகள்' என்ற கட்டுரை, கொலம்பியா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மானுடவியல் கருத்தரங்கில் படிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையாகும். இக்கட்டுரையில் சாதியின் தோற்றம், அதன் தொடக்கப்புள்ளி எது அல்லது யார்? அது எவ்வாறு பரவியது? என்பனவற்றை அவர் தெளிவுபடுத்துகிறார்.
சாதி என்பதன் சாரமாக புறமண முறையின் மீதான தடையும், கறாரான அகமண முறையும் இருக்கின்றன. இந்தியாவை தவிர்த்து பிற நாடுகளில் அகமணக் குழுக்கள் பரவலாக இருந்தாலும், அங்கெல்லாம் சாதிகள் தோன்றவில்லையே என்ற கேள்வி எழலாம். அந்தச் சமூகங்களுக்கும் இந்தியாவிலுள்ள சாதியச் சமூகத்திற்கும் உள்ள வேறுபாடு என்னவெனில், பிற சமூகங்கள் தனித்தனி பண்பாட்டைக் கொண்ட வெவ்வேறு இனக்குழுக்களாக அமைந்தவை. இந்தியாவில் உள்ள நிலை என்னவெனில், ஒரே பண்பாடும், வாழ்முறையும் கொண்ட ஒரே மக்கள் சமூகத்தை அகமண முறையின் மூலம் செயற்கையாகத் தனித்தனி அலகுகளாகத் துண்டாடிய நடைமுறை என அம்பேத்கர் விளக்குகிறார்.
அடிப்படையில் இந்தியச் சமூகம் புராதன காலப் பழக்கங்களைப் பேணுகின்ற ஒரு சமூகமாகும். புறமணமுறை (தனது சாதிக்கு வெளியே மணம் செய்வது) என்பதுதான் புராதன காலச் சமூகப் பழக்கம். இப்போதும் கூட இந்தியாவில் புறமண முறைக்குச் சாதகமான சட்டதிட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ரத்த உறவுடையோர் திருமணம் செய்யக் கூடாது என்பது மட்டுமின்றி, ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்களிடையே திருமணம் செய்வது கூட, தெய்வ நிந்தனைக்குரியது என்பதுதான் இந்து சமூகத்தின் நடைமுறை. எனவே, அகமண முறை என்பது இடையிலே வந்து சேர்ந்த இந்தியாவுக்கு அந்நியமான நடைமுறை என நிறுவுகிறார் அம்பேத்கர்.
புறமண முறைக்குப் பதிலாக அகமண முறையைப் புகுத்தியதன் விளைவாகவே சாதி தோன்றியது. அவ்வாறு அகமண முறைக்கு ஒரு சமூகத்தை மாறச் செய்து, அகமண முறையிலேயே அச்சமூகத்தை நிலைத்திருக்கச் செய்ய வேண்டு மெனில் ஆண், பெண் சம எண்ணிக்கை பேணப்படுவது அவசியமான ஒன்றாக இருக்கிறது. இவ்வாறான சம எண்ணிக்கையைப் பேணும் நோக்கத்திலேயே கணவன் இறந்தவுடன் மனைவியை எரிக்கும் சதிப் பழக்கம் தோன்றியது என்கிறார் அம்பேத்கர். தேவைக்கு அதிகமாக இருக்கும் பெண்களை எரிப்பது போல், வலுவுடையவனாகவும், சட்டத்தை வகுப்பவனாகவும் உள்ள ஆணை எரிக்க முடியாது என்பதால், அவனுக்குத் துணையாகத் திருமண வயதை எட்டாத சிறுமிகளை மணம் முடிக்கும் பழக்கமும் தோன்றியது என்கிறார்.
தந்திரமான புகழுரைகள் மூலம் சாதி இந்து அறிஞர்கள் இவற்றைக் கடைப்பிடிப்பது புனிதமானது, வணக்கத்துக்குரியது என்று கூறினர். இதன் விளைவாக தோற்று விக்கப்பட்ட சாதி அப்படியே நிலை நிறுத்தப்பட்டு விட்டது.சாதியின் தோற்றுவாய் அல்லது தொடக்கப்புள்ளியாகப் பார்ப்பனர்களே விளங்கினர் என்பது, அம்பேத்கர் அடுத்ததாக நிறுவுகிற செய்தி. சாதி என்பது தன்னைச் சுற்றி அரண் அமைத்துக் கொண்ட வர்க்கங்களின் தொகுப்பு. அவ்வாறு தன்னைச் சுற்றி அரணிட்டுக் கொண்ட முதல் வர்க்கமாகப் பார்ப்பனச் சாதி அல்லது பூசாரி வர்க்கமே இருந்தது. அகமண முறையைப் பேணும் மேற்கூறிய பழக்கங்கள் அனைத்தும் வழங்கப் படுகிற ஒரே சாதியாகப் பார்ப்பன சாதி மட்டுமே விளங்குகிறது. பார்ப்பனர் அல்லாத சாதிகளிடம் இப்பழக்கங்கள் காணப்பட்டாலும் அவை வெளியிலிருந்து பெறப்பட்டதாகவும், கறாராகவும் முழுமையாகவும் கடைப்பிடிக்கப்படாத நிலையிலும்தான் இருக்கின்றன. பார்ப்பன சாதியிலிருந்து ஒரு சாதி எவ்வளவு தூரத்துக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறதோ, அதைப் பொருத்த அளவுக்கு இப்பழக்கங்களிலிருந்து விலகி இருக்கின்றன. எனவே, சாதியின் தோற்றுவாய் பார்ப்பனரே என்கிறார்.
இந்து சமூகத்தில் அறிவாளி வர்க்கமாகவும், செல்வாக்கு மிகுந்தவர்களாகவும் இருந்த பார்ப்பனர், தன்னை தனியே மூடுண்டதாக ஆக்கிக் கொண்டு சாதியாக மாறியது. அவர்களைப் போலச் செய்வதின் மூலம் பார்ப்பனர் அல்லாத பிறரிடமும் சாதி பரவியது. அதோடு இவர்களால் சமூக விலக்கம் செய்யப்பட்ட, இவர்களின் கொடுங்கோன்மையோடு ஒத்துப் போகாதவர்களும் – தனி சாதியாக உருவெடுக்க வேண்டிய அவலம் நிகழ்த்தப்பட்டது. அன்றைக்கு தீண்டத்தகாத மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்கு முறைகளையும் வன்முறைகளையும் பட்டியலிட்டு, சான்றுகள் காட்டி, தீண்டத்தகாதாரைப் போன்ற உங்கள் சொந்த நாட்டு மக்கள் பொதுப் பள்ளியில் சேர முடியாமல், பொதுக் கிணறுகளில் நீர் எடுக்க முடியாமல், எல்லா விதக்கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கும் போது, நீங்கள் அரசியல் சீர்திருத்தம் செய்ய தகுதியானவர்களா என அரசியல் சீர்திருத்தம் பேசியவர்களிடம் கேள்வி எழுப்பினார் அம்பேத்கர்.
இந்து சமூகத்தில் அன்றைக்கு இருந்த சமூக சீர்திருத்தவாதிகளை அடுத்ததாகப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறார். அன்றைக்கு இருந்த சமூக சீர்திருத்தவாதிகள், படித்த மேட்டுக்குடி இந்துக்களாக இருந்தனர். அவர்கள் சாதி ஒழிப்பில் அக்கறை காட்டவில்லை. அதற்குப் பதிலாக இந்துக் குடும்பத்தை சீர்திருத்துவதையே சமூக சீர்திருத்தமாக வரித்துக் கொண்டனர். தங்கள் குடும்பங்களில் தாங்கள் உணர்ந்திருந்த குழந்தைத் திருமணம், சாதி, விதவை முறை போன்றவற்றை நீக்கவே உத்வேகம் கெண்டனர். எனவே, அரசியல் சீர்திருத்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மிக எளிதாக இவர்களை வென்று விட்டனர்.
பொருளாதாரச் சீர்திருத்தமே இன்றியமையாதது என்கிற சோஷலிஸ்டுகள், அய்ரோப்பாவிலுள்ள தங்கள் தோழர்களைப் பின்பற்றி வரலாற்றின் பொருளாதார விளக்கங்களை, இந்தியாவிலுள்ள உண்மைகளோடு பொருத்த முனைகிறார்கள் என அம்பேத்கர் விமர்சிக்கிறார். ஒரு தனி மனிதனின் சமூக நிலை அதிகாரத்தின் ஊற்றுக் கண்ணாக இருக்கிறது. கோடீஸ்வரர்கள், பக்கிரிகளுக்கும் சாதுக்களுக்கும் ஏன் கீழ்ப்படிய வேண்டும்? என்று கேள்வி எழுப்பி இதை விளக்குகிறார். இந்தியாவில் நீதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை விட, சாமியாரிடம் அதிக அதிகாரம் இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறார்.
இன்றைய அய்ரோப்பாவில் அதிகாரத்தின் ஊற்றுக்கண்ணாக சொத்து இருப்பதை வைத்து, நேற்றைய அய்ரோப்பாவிலும் இன்றைய இந்தியாவிலும் சொத்துதான் அதிகாரத்தின் ஊற்றுக் கண்ணாக இருக்க முடியும் என நம்புவது சோசலிஸ்டுகளின் தவறு. மதம், சமூக அந்தஸ்து, சொத்து ஆகியவை அதிகாரம் மற்றும் ஆதிக்கத்தின் ஊற்றுக் கண்களாக இருப்பவை. ஒவ்வொரு சமயத்திலும் இவற்றில் ஒவ்வொன்று மேலோங்கி அதிகாரமளிப்பதாக இருக்கும். எனவே, மதச்சீர்திருத்தம் மற்றும் சமூக சீர்திருத்தத்தின் (சாதி ஒழிப்பின்) அவசியத்தை அவர்கள் உணர வேண்டும் என்கிறார்.
மேலும், கீழ்க்கண்ட கேள்விகளை சோசலிஸ்டுகளுக்கு அவர் முன்வைக்கிறார். அவை, இந்தியப் பாட்டாளியும், புரட்சியும் பற்றியவை.
1. இந்தியப் பாட்டாளிகள் ஒன்றுபட்டு புரட்சி செய்வார்களா?
2. அதற்கு அவர்களைத் தூண்டுவதாக எது இருக்கும்?
3. இந்தியப் பாட்டாளியிடம் ஏழை, பணக்காரன் என்பதைத் தவிர சாதி, மதம், அந்தஸ்து, மேல், கீழ் என வேறு வேறுபாடுகள் எதுவும் கிடையாதா?
4.அவ்வாறு வேறுபாடுகள் இருக்கு மெனில், அவர்களை ஒன்றுபடுத்து வதாக எது இருக்கும்?
இதுபோன்ற கேள்விகளை எழுப்பி, சாதியை எதிர்கொள்ளாமல் புரட்சியை நடத்த முடியாது என உறுதியாகக் கூறுகிறார் அம்பேத்கர்.
இன்றைக்கு இருக்கிற நவீன மநுவாதிகள் போல் அன்றைக்கு இருந்த மநுவாதிகள் சாதியை நியாயப்படுத்தினர். சாதி என்பது உழைப்புப் பிரிவினைதான். அதில் தீங்காக எதுவும் இல்லை. இனத் தூய்மையையும் ரத்தத் தூய்மை யையும் காப்பதுதான் சாதியின் நோக்கம் என்றெல்லாம் இவர்கள் பசப்பினர். சாதி என்பது உழைப்புப் பிரிவினையன்று; உழைப்பாளர்களின் பிரிவினை. உழைப்பாளர்களைப் பிரிவினை செய்து அவர்களைப் படிநிலை அமைப்பில் நிரந்தரமாகப் பூட்டிவிடும் ஏற்பாடு. அவ்வாறே, சாதியால் ரத்தத் தூய்மையையும் இனத் தூய்மையையும் காக்க முடியாது. உண்மையில் இனங்களும் ரத்தமும் கலந்த பிறகுதான் சாதி தோன்றியது. அதோடு வளர்ச்சி குன்றிய, உடல் சத்து வேண்டிய குள்ளர்களான மூன்றாம் தர மனிதர்களைத்தான் இந்தியாவிலுள்ள சாதிகள் தந்திருக்கின்றன. பத்துக்கு ஒன்பது பேர்கள் ராணுவத்துக்கு தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்ட நாடு இந்தியா. எனவே, இன மேம்பாட்டியலின் அடிப்படையில்தான் சாதி செயல்படுகிறது என்பது அபத்தம்.
நாலாயிரம் சாதிகளுக்குப் பதிலாக நான்கு வர்ணங்களாக சமூகத்தை மறுகட்டமைப்பு செய்து, சமூக சீர்த்திருத்தம் செய்து விடலாம் என்பது ஆரிய சமாஜிகளின் கருத்து. வர்ணாசிரம தர்மம் பிறப்பின் அடிப்படையில் இருந்ததை எல்லாரும் எதிர்த்ததால், தாங்கள் கட்டியெழுப்பவிருக்கும் நான்கு வர்ண அமைப்பில் வர்ணத்தை குணத்தின் அடிப்படையில் பிரிக்க வேண்டும் என்றனர். நீங்கள் சொல்லும் புதிய நால்வர்ண அமைப்பு பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற பழைய பெயர்களிலேயே ஏன் அமைய வேண்டும்? புதிய நம்பிக்கைகளை வளர்த்தெடுக்க வேண்டுமெனில் புதுப்பெயர்கள் இடப்பட வேண்டாமா? சாதியில் உயர்ந்த நிலையை அனுபவிக்கும் ஒருவன், குணத்தின் அடிப்படையில் அவனுக்கு அளிக்கப்படுகிற கீழ் நிலைக்குப் போக எப்படி ஒப்புக் கொள்ளுவான்? அவனைக் கட்டாயப்படுத்த முடியுமா?
வர்ண முறையை நடைமுறைப்படுத்த வேண்டுமெனில், சாதியை உடைக்க வேண்டும் அல்லவா? நவீன அறிவியல் குணங்களின் அடிப்படையில் சில வகுப்புகளாகப் பிரித்து, தொகுப்புகளாக அவர்களை குவிக்க முடியும் என்பதை ஏற்கவில்லை அல்லவா? சதுர்வர்ணத்தை பரிந்துரைப்பவர்கள் மக்களை வெற்றிகரமாகப் பகுத்து, அவற்றை மீறுவோர் மீது மநுதர்மம் விதிக்கும் தண்டனைகளைச் செயல்படுத்தத் தூண்டுவோம் என உறுதி கூறுவார்களா? சதுர்வர்ண அமைப்பில் பெண்களின் நிலை என்ன? இவை போன்ற கேள்விகளை எழுப்பி, பிறவி முட்டாளைத் தவிர வேறெவனும் நால்வர்ணத்தை வெற்றிகரமாக உயிர்ப்பிக்க முடியும் என நம்ப மாட்டான்.
அதை நடைமுறைப்படுத்த முடியும் என்றே வைத்துக் கொண்டாலும், இந்த ஏற்பாட்டில் சூத்திரன் தனது அடிப்படைத் தேவைகளுக்காக ஏன் பிறரை நம்பியிருக்க விடப்படுகிறான்? அவனுக்கு எதிராக பிற வர்ணத்தார் ஒன்றுபட்டோ, தனித்தனியாகவோ திரண்டாலோ, அவனைக் காக்க வேண்டிய தமது கடமைகளைக் கைவிட்டாலோ என்ன நடக்கும்? அதனால் சதுர்வர்ணம் கொடுமை யானது. புதிதாய் இருந்தாலும் சரி, பழையதாக இருந்தாலும் சரி என ஆரிய சமாஜிகளின் வாதத்தை நிராகரிக்கிறார் அம்பேத்கர்.
சாதிப் பிரச்சனை குறித்து நடுநிலை அணுகுமுறையைக் கைக் கொள்பவர்களில், சாதியில் வினோதமான வெறுக்கத்தக்க எதுவுமில்லை என்பவர்களின் வாதத்தை எடுத்துக் கொள்கிறார் அம்பேத்கர். இவர்கள், இந்து மதத்தில் மட்டுமா சாதி இருக்கிறது; முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறித்துவர்கள் என்பவர்களிடமும் கூடத்தான் சாதி இருக்கிறது என்று சாக்கு சொல்வார்கள். இந்துக்களிடம் இருக்கிற சாதியும், இந்துவல்லாத பிற சமூகங்களில் இருக்கிற சாதியும் அடிப்படை யிலேயே வேறுபட்டிருப்பதைச்சுட்டிக் காட்டுவதோடு, அவ்வேறுபாடுகளையும் பட்டியலிடுகிறார்: 1.இந்துக்களை ஒன்றிணைக்கும் பிணைப்புகள் என்று எதுவும் இல்லை. இந்து அல்லாதோரிடம் அவ்வாறான பிணைப்புகள் நிறைய உள்ளன.
2.இந்துக்களிடம் சாதிக்கு இருக்கும் சமூக முக்கியத்துவம் இந்து அல்லாதவர்களிடம் இல்லை. சாதி விதிகளை மீறியதற்காக ஒரு முஸ்லிமையோ, சீக்கியரையோ சாதியில் இருந்து விலக்கி வைக்க மாட்டார்கள்.
3.பிற மதத்தினரிடையே சாதியைக் கடைப்பிடிப்பது என்பது ஒரு புனிதமான மதக்கடமையாக இல்லை. இந்துக்களிடமோ அது கட்டாயக் கடமை. பிற மதத்தினரிடையே சாதி என்பது வெறுமனே ஒரு பழக்கம். பிற மதத்தவர் சாதியை ஆரம்பித்து வைக்கவில்லை. சாதி அவர்களிடம் மிஞ்சி இருக்கிறது அவ்வளவுதான். எனவே, சாதிப் பிரச்சனையில் நடுநிலைமை வகிப்பது என்பது, உண்மையில் சாதிக்கு ஆதரவான நிலையை எடுப்பதுதான் என அவர் நிறுவுகிறார்.
சாதியை ஒழிக்கும் வழியாக ஜாட்பட் தோடக் மண்டல் அமைப்பினர் தேர்ந்து கொண்ட சாதி மறுப்புத் திருமணத்தை அம்பேத்கர் பாராட்டினாலும், அம்முறையில் பெரிய வெற்றி கிடைத்து விடாது என்கிறார். சாதி மறுப்புத் திருமணங்களும் சமபந்தி விருந்துகளும் ஏன் இந்துக்களிடம் பெரிய அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை என்றால், அவற்றுக்குத் தடையாக இந்து மதத்தின் சாஸ்திரங்கள் இருக்கின்றன. சாஸ்திரங்களுக்கு விரோதமான ஒன்றைச் செய்வது மதவிரோதம். எனவேதான் இந்துக்களிடம் அது வரவேற்பைப் பெறவில்லை. சாதி மறுப்புத் திருமணங்கள் பரவலாகாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடப்பதால் பெரிய பயன் எதுவும் விளையப் போவதில்லை.
எனவே, உண்மையிலேயே சாதி ஒழிக்கப்பட்டு சமூக மாற்றம் வர வேண்டுமானால், சாதிக்கு ஆதாரமாக இருக்கிற சாஸ்திரங்களோடு, இந்து மதத்தையும் ஒழிக்க வேண்டும். இந்து மதம் என வழங்கப்படுவது உண்மையில் ஒரு மதமே அல்ல. கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதிக்கின்ற ஒரு சட்டங்களின் தொகுப்புதான். எனவே அதை ஒழிக்க வேண்டும் என்பதில் மதவிரோதம் என்று எதுவுமில்லை. எனவே, நான் மதம் மாற முடிவு செய்து விட்டேன் என்று தனது உரையை முடிக்கிறார்.
இத்தொகுப்பிலுள்ள முதல் கட்டுரையை அம்பேத்கர் 1916 இல் எழுதியிருக்கிறார்.(இந்தப் பகுதி அம்பேத்கார் சாதியம் என்ற பகுதியிலிருந்து எடுத்தாளாப்பட்டுள்ளது).
சாதி இருபிற்கு பல கேள்விகளுக்கு பதிலாக
இந்து மதம் சாதி மற்றும் தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அது சாதி முறைக்கும், தீண்டாமைக்கும் புனிதத்தன்மையை வழங்குகிறது. எனினும் இந்துமதம் ஒரு மதம் என்ற முறையில் நிலைத்திருப்பதற்கான சமூகவேர்களும், சாதி மற்றும் தீண்டாமை நிலைத்திருப்பதற்கான சமூக வேர்களும் வெவ்வேறானவையாகும். மதம் ஒரு சமூக நிகழ்வு என்ற முறையில் நிலைத்து நிற்பதற்கான சமூக வேர்கள் ஒரு குறிப்பிட்ட வர்க்க சமுதாயத்திற்குள் (ஒரு குறிப்பிட்ட உற்பத்தி முறைக்குள்) மட்டுமே அடங்கியிருக்கவில்லை. நிலப்பிரபுத்துவத்தைப் பாதுகாத்து வரும் ஒரு மதம் நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட்ட பிறகும், முதலாளித்துவ ஒழுங்கு முறைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றியமைத்துக் கொன்டு, புதிய சுரண்டல்காரர்களும் ஒடுக்குமுறையாளர்களான முதலாளிகளுக்குச் சேவை செய்யக் கூடிய ஒரு ஆன்மீக ஒடுக்குமுறை கருவியாக மாறிவிடமுடியும். கத்தோலிக்க மதச் சபையின் வரலாறு இதற்கு ஒரு சான்றாகும். நிலப்பிரபுத்து வத்தைப் பாதுகாக்க வந்த கத்தோலிக்க மதச் சபை, ஒரு நீண்ட நெடிய போரட்டத்துக்குப் பிறகு நிலப்பிரபுத்துவம் தோற்கடிக்கப்பட்டதும், அது முதலாளித்துவ ஒழுங்குமுறைக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொண்டு, மீண்டும் புதிய சுரண்டல்காரர்களும் ஒடுக்குமுறையாளர் களுமான முதலாளிகளுக்குச் சேவை செய்யும் ஒரு ஆன்மீக ஒடுக்குமுறைக் கருவியாக மாறிவிட்டது.
இந்துமதம் இப்போது சாதி மற்றும் தீண்டாமையைத் தனது அடிப்படையாகக் கொண்டிருந்த போதிலும், நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை ஒழிக்கப்பட்ட பிறகும் தன்னை புதிய சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றிய மைத்துக் கொண்டு தொடர்ந்து உயிர்வாழ்வது சாத்தியமானதேயாகும். புதியக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ இந்திய சமுதாயத்தில் ஏற்படும் முதலாளித்துவ வளர்ச்சியின் தன்மைக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொண்டு பெரு முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்துக்கும் சேவை செய்கிறது. இதிலிருந்தே மேற்கூறப்பட்ட சாத்தியப்பாட்டை அறியலாம். ஆனால் சாதிமுறை என்ற சமூக நிகழ்வுப்போக்கு அவ்வாறு தொடர்ந்து நிலைத்திருக்க முடியாது. ஏனெனில் பரம்பரைத் தொழில் பிரிவினை (Social Division of Labour) அடிப்படையில் சாதிமுறை தன் நிலைப்பிற்கு ஆதாரம் கொண்டிருக்கிறது. ஆகையால் சாதி மற்றும் தீண்டாமையின் சமூகவேர்கள் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் அடங்கியிருக்கிறது. சாதியும், தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு உத்தரவாதம் செய்யும் பிற அம்சங்களான அகமண முறை, உயர்வுதாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரை சடங்குகள் ஆகியவற்றிற்கு நிலப்பிரபுத்துவப் பண்பாடே காரணமாகும். ஆகையால் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையும், பண்பாடும் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டால் சாதியும் தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கான சமூக வேர்கள் தகர்ந்துவிடும். அதற்கு அடுத்த சமுதாய வளர்ச்சிக் கட்டத்தில் சாதிமுறை தொடர முடியாது. இவ்வாறு, மதம் ஒரு சமூக நிகழ்வு என்ற முறையில் நிலைத்திருப்பதற்கான வேர்களும், சாதிமுறை ஒரு சமூக நிகழ்வு என்ற முறையில் நிலைத்து நிற்பதற்கான வேர்களும் வெவ்வேறானவை என்பதைக் காணலாம்.
சாதியும் தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு ஆதாரமாகக் கொண்டுள்ள பரம்பதைத் தொழிற் பிரிவினையும், அவை நிலைத்து நிற்பதற்கு சேவை செய்யும் அகமண முறை, உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரைச் சடங்குகள் ஆகிய அம்சங்களும் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைக்கு உரியதும், இந்திய சமுதாயமும் அரசும் ஜனநாயக விரோத எதேச்சதிகாரத் தன்மை கொண்டதாக நீடிக்கச் செய்வதும் ஆகும்.
புதியக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ இந்திய சமுதாயத்தில் சாதியும், தீண்டாமையும் நிலவுவதற்குக் காரணம் நிலப்பிரபுத்துவத்திற்கு முதலாளித்து வத்திற்கு முந்தைய (எல்லா உற்பத்தி உறவுகள் நீடித்திருப்பதற்கு) ஏகாதிபத்தியமும் பெருமுதலாளித்துவமும் ஆதரவு தருவதே ஆகும். புரட்சிகரமான முறையில் பெருமுதலாளிகள் மற்றும் பன்நாட்டு கம்பெனியின் அரசை ஒழித்து ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசு நிறுவுவதன் மூலமே ஏகாதிபத்திய ஆதிக்கத்தை ஒழிக்க முடியும். ஏகாதிபத்தியமும், பெரும் முதலாளித்துவமும், தரும் ஆதரவுக்கு முடிவு கட்ட முடியும். நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை மற்றும் எல்லா முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி முறை மற்றும் எல்லா முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி உறவுகளை ஒழிப்பதால், சாதிமுறைக்கும், தீண்டாமைக்கும் ஆதாரமாக இருக்கும் பரம்பரை தொழில் பிரிவினையை ஒழிக்க முடியும். மக்கள் ஜனநாயகக் குடியரசும் புரட்சிகர மக்களும் தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாக கலச்சாரப் புரட்சிகளை நடத்தி சாதியும், தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு உத்திரவாதம் செய்கின்ற பிற அம்சங்களான அகமணமுறை, பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரைச் சடங்குகள் ஆகியவற்றின் அடித்தளத்தைத் தகர்த்துவிட்டு ஒரு புதிய ஜனநாயகப் பண்பாட்டை உருவாக்க முடியும். இவ்வாறு நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையை முற்றாக ஒழித்து, புதிய ஜனநாயக அரசியல், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டை உருவாக்கி, சோசலிச சமுதாயத்தை நிறுவும் நிகழ்வுப் போக்கில் சாதி மற்றும் தீண்டாமைக்கு முடிவு கட்டுவது சாத்தியமான ஒன்றாகும்.
மக்களுக்கு, ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசு இன்றி, அவர்களால் பரம்பரை வேலைப் பிரிவினையை ஒழித்து ஒரு புதிய வேலைப் பிரிவினையை உருவாக்க முடியாது. சாதிமுறை நிலைத்து நிற்பதற்கு உத்திரவாதம் செய்யும் அகமணமுறை மற்றும் பிற அம்சங்களை ஒழித்து ஒரு புதிய பண்பாட்டையும் உருவாக்க முடியாது. ஆகையால் சாதிமுறைத் துறையில் ஜனநாயகத் தீர்வு ஒரு மக்கள் ஜனநாயகத் குடியரசு என்பதேயாகும்.
உயர்சாதி ஆதிக்கமுறையை எதிர்த்தும், சாதி மற்றும் தீண்டாமையை ஒழிக்கும் பொருட்டு பரம்பரை தொழில் பிரிவினை, அகமணமுறை (சாதிக்கு உள்ளே மட்டுமே திருமண உறவுகள் கொள்ளுதல்), உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரை சடங்குகள், தீண்டாமை ஆகியவற்றிற்கு எதிராகவும், பார்ப்பனிய உயர்சாதி ஆதிக்க முறையை எதிர்த்து ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு ஆதரவாகவும், பாடுபட்டு, உண்மையான முதலாளிய, ஜனநாயக் சீர்திருத்தங்கள் அரசு செய்யக்கோருவது ஒரு முதலாளிய ஜனநாயகக் கோரிக்கை ஆகும்.
பார்ப்பனர் சாதியக்கட்டமைப்பில் உச்சத்தில் உள்ளனர் என்று சொல்வதால் ”வருணமுறை” சாதியம், தீண்டாமை ஆகியவற்றை அவர்களே தோற்று வித்தனர் என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
1]தனிச்சொத்துடைமை தான் வருண முறை தோன்றக்காரணம் என்பதில் மாற்றமில்லை.சத்திரிய அரசர்கள் தன் ஆட்சியை தொடர வருணமுறை பயன்பட்டது.வருணமுறைக்கு தேவையான சட்டத்தை கௌடில்யர் உருவாக்கிய அர்த்தசாஸ்திரம் பயன்பட்டது. அதோடு புராணங்கள், இதிகாசங்கள் மூலமாக வருணமுறை மக்களின் வாழ்க்கை முறையாக மாறிட சத்திரிய அரசர்களுக்கு பிராமணர்கள் ஆதாரமாக விளங்கினர். ஆக, வருணமுறை தோன்ற பார்ப்பனியம், இந்துமதம் காரணமல்ல. உற்பத்தி முறையில் ஏற்பட்ட தனிச்சொத்துடைமை காரணமாகும்.
அதேபோல் 2]சாதியம்,தீண்டாமை தோன்றிட நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை காரணம். அத்துடன் அகமணமுறை, பிறப்பால் உயர்வு தாழ்வு, படிநிலைவேறுபாடு, சடங்குகள் போன்றவை நிலவிட நிலப்பிரபுத்துவ பண்பாடே காரணம். இங்கும், சாதியம்,தீண்டாமை நிலைத்திருப்பதற்கான காரணம், அல்லது சமூகவேர் அல்லது பொருளாதார அடித்தளம் பார்ப்பனியம், இந்துமதம் அல்ல. நிலப்பிர புத்துவ உற்பத்திமுறையே காரணம். அந்த அடித்தளத்தின் மேலே எழுந்த மேற்கட்டுமானம் தான் மதம் மற்றும் சாதியம், தீண்டாமை ஆகும். ஆகவே சாதியம், தீண்டாமை ஒழிந்திட அதற்கான பொருளாதார அடித்தளத்தை வீழ்த்திவிட்டால், அதாவது நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையை தகர்த்து விட்டால் சாதியம், தீண்டாமை ஒழியும் என அம்பேத்கர், பெரியார் கூறியதில்லை. அவர்கள் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை ஆதரித்தனர்.
3]இலங்கையில் பார்ப்பனிய மதம் இல்லை. ஆனால் சைவ வேளாளர் உண்டு. அவர்களே நிலப்பிரபுத்து வர்க்கங்கள். இங்கே புத்தமதம் உண்டு. புத்த சிங்களரிடையே சாதியம் உண்டு. தமிழரிடமும் அங்கு சாதி உள்ளது. ஆக சாதியம், தீண்டாமை நிலவிட பார்ப்பனியம், இந்துமதம் காரணமல்ல. நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை என்பதை மஜஇக-வின் ஆவணங்கள் மட்டுமே கூறுகின்றன.
4]ஆப்பிரிக்காவில்,ஜப்பானில் கூட சாதியம் உள்ளது.ஆனால் அங்கே பார்ப்பனியம்,இந்துமதம் இல்லை.எனவே சாதியம், தீண்டாமை நிலவிட பார்ப்பனியம், இந்துமதம் என்றார்களே பெரியாரும் அம்பேத்கரும் அது சரியா என மஜஇக-வினர் கேட்கின்றனர்.
5]வெளிநாடு ஏன்? இந்தியாவின் அஸ்ஸாம், மிசோரம், மணிப்பூர் போன்ற பகுதிகளில் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை உருவாகவில்லை. ஆகவே அங்கும் சாதியம், தீண்டாமை இல்லை. எதற்காக இதைச் சொல்கிறோம்?
சாதியம், தீண்டாமை நிலைத்திருப்பதற்கான காரணம் நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையே என்பதற்காகத்தான். (நன்றி சமரன், ம.ஜ.இ.க இணையத்திலிருந்து இந்தப் பகுதி எடுத்துக் கையாளப்பட்டுள்ளது. சில சுருக்கம் மற்றும் சில திருத்தங்கள் என்னுடையவை புதியக்காலனியம், தரகு(பெரு)முதலாளி, நிலபிரபுத்துவம் நீக்கம்)
கட்டுரையின் சாரம்:-
சாதியமைப்புபற்றியகருத்தாக்கங்களைஆய்வு விளக்கங்களை கல்வியாளர் மட்டத்தில் பாமரமக்கள் மட்டத்திலும் நிலவுகின்றன இவை பற்றிப் பார்ப்போம்.
முதலாவதானது மிகவும் பரவலாக இருக்கிறது இவை ஆரிய சித்தாந்தமாகும் இக்கருத்தின் படி ஆரிய படையெடுப்பாளர்கள் சுதேசி மக்களை அடிமைப் படுத்திய விதத்தில் மூலமாக சாதிகள் தோன்றின என்பதாகும். இதனை ஒருசில மார்க்சியவாதிகள் ஏற்றுக்கொண்ட போதிலும் இதற்கு அடிப்படை தோற்றுவாய் ஜோதிராவ் புலே பெரியார் ஆகியோருடன் எழுத்துக்களும் பிராமண எதிர்ப்பு இயக்கமும் ஆகும். சாதிகள் கடவுளால் படைக்கப்பட்டது அவற்றை மாற்ற இயலாது என்ற பழமையான மதவாதிகள் கூறும் விளக்கத்தை காட்டிலும் முற்போக்கான கருத்தாக இது உள்ளது. ஜாதிகள் வரலாற்று அடிப்படையில் தோன்றும் என்றும் ஆரியர் வரவுக்கு முன் வாழ்ந்த ஆதிக்குடிகள் அவர்கள் சமத்துவ வாழ்வு வாழ்ந்தனர் என்றும் சாதி ஒடுக்கு முறையை எதிர்த்துப் போராடுவதன் மூலம் அந்த சமத்துவத்தை மீண்டும் வளர செய்ய வேண்டும் என்று கூறுகின்றது எனினும் இச்சித்தாந்தம் இனவாத கருத்தாக்கம் கொண்டுள்ளது.
இந்திய மார்க்சியவாதிகளிடையே சாதியை பற்றிய ஒத்த கருத்து இன்னும் எட்டவில்லை. எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும் வகையில், சாதியைப் பற்றிய மார்க்சியப் பார்வையை இன்னும் அமைத்துக் கொள்ளவில்லை என்பது உண்மை. புதுப்புது கருத்துக்கள் முளைத்துக் கொண்டே இருக்கிறதே தவிர ஒத்த கருத்தை நெருங்கவில்லை. முடிவில், இது சாதியை ஏற்றுக் கொண்டவர்களுக்கு உகந்த நிலைமை ஏற்படுத்தித் தருகிறது, அதாவது சாதி என்பது நிலையான ஒன்று என்ற இவர்களின் கருத்தை நிலைப்படுத்தும் வகையில் நிலைமை இருக்கிறது.
இந்திய சாதி அமைப்பு முறையை ஆராய்ந்த பலரும் பல்வேறு கருத்துகளை முன் வைத்தாலும், மார்க்சிய தத்துவம் மட்டுமே இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் விளக்கி கூறியதாகும். அதாவது உலகில் உள்ள மற்றச் சமூக அமைப்பு போலவே இந்தியச் சமுக அமைப்பும் வர்க்க அமைப்பே அதில் சில தனிச் சிறப்புகள் உண்டு.
இந்தியச் சமூகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதி நிலவி வந்தாலும் அதன் செயல்பாடும் வடிவமும் எல்லா காலங்களிலும் ஒரே மாதிரியாய் இருந்ததில்லை.
நிலபிரப்புத்துவ அமைப்பு முறையில் தொழிற் பிரிவினை அடிப்படையில் சாதியம் உறுதியாக செயல்பட்டது இன்றோ நடைமுறையில் அவை இருந்தாலும் கோட்பாட்டு அளவில் மறுக்கப் பட்டுள்ளது.
சாதியை ஆரியர்கள்தான் (பிராமணர்கள்தான்) உருவாக்கினர் என்பதோ திராவிடர்கள் தமிழர்கள்தான் உருவாக்கினர் என்பதோ அறிவியல் பூர்வமான (இயக்கவியல் பொருள்முதல்வாத) மார்க்சிய விரோதமான ஒன்றே.
சாதியானது இந்திய சமூக வளச்சிப் போக்கில் இயற்கையாய் கருக் கொண்டு சூழலுக்கேற்ப்ப உருக்கொண்டு, உபரியை உறிஞ்சும் சுரண்டல் வடிவமாக உருபெற்ற போது அதற்கு கோட்பாட்டு நியாயம் வழங்கி சாதியத்தின் இருதலுக்கு பங்காற்றியது இந்து மத பிராமணியமே அதன் கொடிய அம்சம் சுரண்டல் வடிவில் அடங்கி உள்ளது. பிறப்பின் அடிப்படையில் தொழில்களை ஒழுங்கமைப்பதில் இச்சுரண்டல் அடங்கியுள்ளது.
நிலப்பிரபுத்துவத்திற்க்கு முந்தைய உற்பத்தி முறையிலேயே சாதி கருக் கொண்டிருந்தாலும் அவை திடமாக நிலபிரபுத்துவத்தில்தான் உருக் கொண்டது.
சாதி மற்றும் தீண்டாமை என்பது இந்துமதம் தனது அடிப்படையாகக் கொண்டுள்ளது. சாதிமுறை என்ற சமூக நிகழ்வுப்போக்கு பரம்பரைத் தொழில் பிரிவினை (Social Division of Labour) அடிப்படையில் தன் நிலைப்பிற்கு ஆதாரம் கொண்டிருக்கிறது. ஆகையால் சாதி மற்றும் தீண்டாமையின் சமூகவேர்கள் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் அடங்கியிருக்கிறது. சாதியும், தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு உத்தரவாதம் செய்யும் பிற அம்சங்களான அகமண முறை, உயர்வுதாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரை சடங்குகள் ஆகியவற்றிற்கு நிலப்பிரபுத்துவப் பண்பாடே காரணமாகும்.
சாதியும் தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு ஆதாரமாகக் கொண்டுள்ள பரம்பதைத் தொழிற் பிரிவினையும், அவை நிலைத்து நிற்பதற்கு சேவை செய்யும் அகமண முறை, உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரைச் சடங்குகள் ஆகிய அம்சங்களும் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைக்கு உரியதும்.
இன்று இந்திய சமுதாயமும் அரசும் ஜனநாயக விரோத எதேச்சதிகாரத் தன்மை கொண்டதாக நீடிக்கச் செய்வதால் பழைமையை தூக்கிபிடித்துக் கொண்டே உலகமயமாக்கல் நலன் பேசும் இவர்கள் சுரண்டல் வடிவமான ஜாதி ஏற்ற தாழ்வை போக்கும் திட்டம் எதுவும் இன்மையால் அந்தமுறையை தொடர செய்கிறது.. தொடரும்…..
No comments:
Post a Comment