தோழர்களே,
நேற்றைய கிளப் அவுஸ் விவாதம்.
ஒலி வடிவில் கேட்க்க இந்த லிங்கை அழுத்தி கேட்கவும் தோழர்களே
தினம் முகநூல் விவாதங்களை பார்க்கும் பொழுது பல அப்பாவிதனமான அவர்களின் பேச்சை கேட்கும் பொழுது உண்மையில் வருத்தமாக உள்ளது அவர்கள் பேசும் மார்க்சியம் என்னவென்று அவர்களுக்கும் புரிவதில்லை வெறும் உணர்ச்சி பூர்வமாக உள்ளனர் அவர்களின் சில நிலைப்பாட்டை விமர்சிப்பதோடு உண்மையில் நமது மார்க்சிய ஆசான்கள் சொன்னவற்றை இவர்கள் கிரகிக்கவே இல்லை.
அதனையும் பேசுவோம்.இங்குள்ள சிலரின் கோட்பாடு மார்க்சியம் ஒவ்வொருவரின் தேவையைக் கொண்டு தனித்தனியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர்.அதாவது மார்க்சியத்தில் ரஷ்யா மார்க்சியம் சீனா மார்க்சியம் தமிழக மார்க்சியம் என்று நிறுவ நினைக்கின்றனர்.
மார்க்சியம் குறிப்பான சூழ்நிலைகளுக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டுமேயன்றி அதாவது சூழ்நிலை ஏற்ப ஒவ்வொரு நாட்டின் விடுதலைக்கான பாதைகள் மாறுமே தவிர, ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியா மார்க்சியம் என்பதில்லை. ரஷ்யாவின் குறிப்பான சூழலுக்கு ஏற்ப அங்கு ஆயுத ரீதியிலான குறுகிய கால பாதை மேற்கொள்ளப்பட்டது குடியேற்ற அரை குடியேற்ற நிலவுடமை தன்மை கொண்ட சீனாவில் நீண்ட மக்கள் பாதை மேற்கொள்ளப்பட்டது.
மார்க்சியம் வரலாற்று வழியில் முதலாளியத்துக்குச் சவக்குழி தோண்டி, வர்க்கங்களும் மனிதனை மனிதன் சுரண்டும் நிலையும் இல்லாத கம்யூனிச சமுதாயத்தைக் கட்டுவது தான் சர்வதேசத் தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையென வரையறுத்துக் கூறிய மார்க்சும்,ஏங்கெல்சும் பாட்டாளி வர்க்கம் தன்னை விடுதலை செய்வதற்குகந்த மிகச் சிறந்த வழியையும் சுட்டிக் காட்டினர். அதாவது, தொழிலாளி வர்க்கம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை ஏற்று, விவசாய வர்க்கத்துடன் நெருக்கமான கூட்டேற்படுத்திக் கொண்டு, முதலாளி வர்க்கத்தின் அரசியந்திரத்தை உடைத்து நொறுக்கப் புரட்சிகர வன்முறையைப் பயன்படுத்த வேண்டும்; பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை நிறுவ வேண்டும்; பாட்டாளிய ஆட்சியைப் பாதுகாக்கவும் கம்யூனிச நெறிகளின் அடிப்படையில் சமுதாயத்தை மாற்றியமைக்கவும் இவ்வரசை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும்.பாட்டாளி வர்க்கத்தின் இராணுவ அமைப்பானது, முக்கியமாக, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டத் தின் இந்த மாபெரும் இலட்சியத்திற்காகத் தான் உருவாக் கப்படுகிறது.அடிைமைத்தளைகளை உடைத்தெறியவும் பழைய உலகைத் தூக்கியெறியவும் கிளர்ந்தெழுகின்ற பாட்டாளி வர்க்கமும், புரட்சிகர மக்களும், புரட்சி இயக்கத்தினூடே,தமது சொந்த இராணுவ அமைப்பைக் கட் டாயம் கட்டியாக வேண்டும். ஏனெனில் ஒரு பெளதீகச் சக்தியை மற்றொரு. பெளதீகச் சக்தியினால்தான் வெல்ல முடியும்;முதலாளிகளின் ஆட்சியைத் தூக்கியெறிந்து பாட்டாளி வர்க்க ஆட்சியை நிறுவுதல் என்ற வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற முடியும். ஆளும் வர்க்கமும் வரலாற்று அரங்கத்திலிருந்து தானாக வெளியேறச் சம்மதிக்காது. நிலைமை இப்படி இருக்க இந்த அமைப்பு முறையை கேள்வி கேட்காது இதற்குள்ளே சிக்குண்டு கிடக்க சொல்லும் இவர்கள் மார்க்சியவாதிகளா என்பதே என் கேள்வி.....
இன்னும் நான் பேசிய பின்னர் தோழர் ரவீந்திரன் பேசினார். அடுத்தவாரமும் அரசு பற்றி விரிவாக விவாதிப்போம் வாருங்கள் தோழர்களே.
அதற்கு முன் நான் இதன் சுருக்கத்தை பேசினேன்..
'அரசு’என்பது எவ்வாறு தோற்றம்பெற்று வளர்ச்சியடைந்தது என்பதற்கு வெவ்வேறு கோட்பாடுகளின் மூலமாக பல்வேறு விளக்கங்கள் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. வரலாற்று வளர்ச்சியின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசு பற்றிய கோட்பாடு ஆளும் வர்க்கங்களுக்குச் சார்பானதாகவும் அத்தகைய வர்க்கங்களின் ஆட்சி உரிமையை நியாயப்படுத்துவதாகவும் இருந்து வந்துள்ளதைக் காணமுடிகிறது.
அரசு தனித்தன்மை வாய்ந்த ஒன்று என்றும் அது தெய்வீகத்துடன் தொடர்புடையது என்றும் மக்கள் அனைவரும் அதற்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்றும் பயபக்தியுடன் பரப்புரை செய்யப்பட்டு வந்துள்ளதையும் நாம் கண்டிருக்கின்றோம்.
அரசு அனைத்து மக்களினதும் தேவைக்கும் நன்மைக்கும் உரிய நடுநிலையானதும் நீதியை பாதுகாக்கும் தூய்மையான நிறுவன வடிவமென்றும் கருத்துருவக்கட்டமைப்பு தொடர்ந்து பேணப்பட்டுக்கொண்டே வருகிறது.
மனித குலத்தின் வரலாற்று வளர்ச்சியில் தனிச்சொத்துடமையின் தோற்றம் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வினையும் வர்க்கங்களையும் உருவாக்கியது. இத்தகைய வர்க்கங்களிடையிலான முரண்பாடுகளும் போராட்டங்களும் பொதுவாகி போனது. மனித குலத்தின் வரலாறு வர்க்க போராட்டங்களின் வரலாறாகிக் கொண்டது.
இந்த வர்க்க முரண்பாட்டுச் சூழலில் (ஒருவர்க்கம் மற்றைய வர்க்கத்தை அடக்கியாள வேண்டிய தேவை ஏற்பட்டது).அத்தேவையை நிறைவு செய்வதற்கு ஒரு 'கருவி அவசியமாகியது. அதுவே அரசு எனும் வடிவில் உருவாக்கப்பட்டது-
என்றுமகத்தான மேதைகளான கார்ல் மார்க்சும் பிரடெரிக் ஏங்கெல்சுமே விஞ்ஞான அடிப்படையிலான வரலாற்றுப் பொருள் முதல்வாத ஆய்வின் மூலமாக அரசு பற்றிய தெளிவான கோட்பாட்டை முன்வைத்தனர்.
சமுதாயத்தின் ஆரம்பத்தில் அரசாங்கம் இருக்கவில்லையென்பது மிக முக்கியமானது. சமுதாயத்தின் வளர்ச்சிப்போக்கில் ஒரு குறிப்பிட்ட கட்டத்திலேயே அரசாங்கம் வளர்ந்தது.
இன்றைய அரசாங்கத்தின் இரண்டு முக்கியஅங்கங்களாக விளங்குவது நிலையான இராணுவமும் பொலீசுமாகும்.இந்த அமைப்புக்கள் எப்போது தோன்றியதென்பதை பார்ப்போம்.உலகில் முதலாளித்துவத்திற்கு மாறிய முதலாவது நாடாகிய இங்கிலாந்திலேயே இரண்டும் முதலிற் தோன்றின.
இங்கிலாந்தில் 3வது வில்லியம் ஆட்சியில் நிலையான இராணுவம் தோற்றிவைக்கப்பட்டது. அதற்கு முன் உலகில் எந்தப் பகுதியிலாவது நிலையான இராணுவம் இருக்கவில்லை.
அரசர்களும்,தளபதிகளும் யுத்தத்திற்குச் சென்றபோதெல்லாம் கூலிப் படையினரைத் திரட்டினர். யுத்தத்தின் முடிவில் படைவீரர்கள் தமது முன்னைய தொழிலுக்குத் திரும்பினர். இவ்வாறே இங்கிலாந்திற்கும் பிரான்சுக்கும் இடையேயான நூற்றாண்டு யுத்தம் அல்லது புனித யுத்தம் நடத்தப்பட்டது.படைக்கு ஆள் திரட்டும் அதிகாரி முரசுடன் சந்தைகளில் போர் வீரர்களைத் திரட்டும் காட்சிகளை திரைப்படம் பார்ப்பவர்கள் கண்டிருப்பார்கள்.மூன்றாவது வில்லியத்திற்கு முந்திய காலத்தில் நிரந்தர இராணுவம் இல்லையென்பதை இது திட்டவட்டமாக நிரூபிக்கின்றது.இன்று நிலையான இராணுவம் இல்லாத நாடே கிடையாது.
அவ்வாறே பொலீஸ் படை இல்லாத நாடே இல்லை.அப்படியானால் எப்பொழுது இது முதன் முதலில் தோன்றியது18ஆம் நூற்றாண்டில் முன் அரைப் பகுதியில் பிற்காலத்தில் இங்கிலாந்தில்,சர் ரோபேர்ட் பீல் உள்நாட்டு மந்திரியாக இருந்தபோது தோன்றியது.ஒரு பொலீஸ் படையை தோற்றிவைப்பதற்கான மசோதாவைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது அவரேயாகும்.
முன்னர் உலகில் பொலீஸ் படை இருக்கவில்லை என்றும் மூன்றாவது வில்லியத்திற்கு முன்னர் உலகில் நிலையான இராணுவம் இருக்கவில்லை எனவும் தெளிவாகக் காண்கின்றோம்.
நாம் இன்று காணும் அரசானது நினைவிற்கு எட்டாத காலத்திற்கு முன்னர் இருக்கவில்லை என்பதை இது தெளிவாக நிரூபிக்கின்றது.
இதைத் தெரிந்துகொண்ட பின்னர் சமுதாய ஆரம்பத்தின் முன் நாட்களை அல்லது குறைந்தது ஆரம்பகால மனித நாகரீகத்தை பின்னேக்கிப் பார்ப்போம்.
இன்றுவரை உலகம் புராதனப் பொது உடமை, அடிமை, நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ, சோசலிஸ் சமுதாயங்கள் ஆகிய ஐந்து வகைச் சமுதாயங்களைக் கண்டிருக்கிறதென இயக்கவியல் வரலற்று பொருள்முதல்வாதம் நமக்குப் போதிக்கின்றது. நாகரிகத்தின் மிக ஆரம்பக் காலத்தில் புராதனப் பொது உடமைச் சமுதாயம் இருந்தது. உற்பத்திச் சாதனங்கள் சீராக வளர்ச்சி அடையாதிருந்த காலத்தில் இந்த அமைப்பு இருந்தது.வளர்ச்சியின் அந்தக்கட்டத்தில் மக்கள் பெரும்பாலும் காட்டு மிருகங்களை வேட்டையாடுதல்,மீன் பிடித்தல் ஆகியவற்றிலேயே வாழ்ந்துவந்தனர்.இதற்காக அவர்கள் உபயோகித்த உபகரணங்கள் அம்பு,வில்லு போன்ற புராதனமானவை.இவை யாவும் பொதுவில் உடமை கொண்டிருக்கப்பட்டது.இவை யாவும் எவராலும் செய்து கொள்ளக் கூடியவையாக இருந்ததால் உற்பத்திச் சாதனங்களைத் தனி நபர் உடமை கொள்ளும் நிலை ஏற்படவில்லை.
அதே நேரத்தில் சிறு உணவைப் பெற்றுக் கொள்வதற்குச் சகலரும் கூட்டாக உழைக்கவேண்டி இருந்தது.அப்படிச் செய்யாவிடில் காட்டு மிருகங்கள் மனிதரை வேட்டையாடிவிடுமாதலினால் இது அத்தியாவசியமாயிற்று.இப்படி இருந்தும் இந்த வேட்டையாடுவோரின் கூட்டு உழைப்பு அந்த பூர்வீகக்குடியினர் சகலரும் உண்பதற்கு மட்டுமட்டான உணவையே கொடுத்தது.இது பெரும்பாலும்போதாதிருந்தது.இந்தச் சூழ்நிலைகளில் உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சி மிக அடித்தளத்தில் இருந்தபோது மக்களை எதிர் எதிர்வர்க்கங்களாகப் பிரிக்கும் அடிப்படை ஏற்படவில்லை.தான் உண்பதற்கு வேண்டிய உணவை மட்டுமே உற்பத்தி செய்யத் கூடிய நிலையில் உள்ள ஒருவன் வேறு ஒரு சக மனிதனை அடிமைப்படுத்துவதில் எதுவித அர்த்தமுமில்லை.அன்று நிலவிய வர்க்கங்களற்ற சமுதாயத்திற்கு இதுதான் அடிப்படையாகும்.
சில குறிப்பிட்ட ஆறுகளில் மீன் பிடிக்கும் உரிமைக்காகவும், சில குறிப்பிட்ட காடுகளில் வேட்டையாடுவதற்கான உரிமைக்காகவும் வெவ்வேறு பூர்வீகக்குடிகளுக்கிடையே யுத்தங்கள் இடம்பெற்றன.அவ்வாறான யுத்தங்களில் தோல்வியுற்ற பூர்விகக் குடிமக்கள் சிறைப்பிடிக்கப்படவில்லை.அவர்கள் சிரச்சேதம் செய்யப்பட்டனர்.இது காட்டுமிராணிடித்தனமானதாக நமக்குப் படக்கூடும்.தலையை வெட்டிவிடுவது அதற்குச் சாப்பாடு போடும் தேவையை இல்லாமல் செய்துவிடுகிறதென்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு பிந்திய காலகட்டத்தில் உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சியால் ஒரு மனிதன் தனக்குப் போதிய உணவை உற்பத்தி செய்யக் கூடிய நிலை ஏற்பட்டதோடு அல்லாமல் மற்றையோருக்கும் உற்பத்தி செய்யக்கூடிய நிலை ஏற்பட்டதுமே வர்க்கங்களாக சமுதாயத்தைப் பிரிப்பதற்கான அடிப்படை தோன்றும் கட்டத்தை அடைகின்றோம்.
இப்பொழுது தோற்கடிக்கப்பட்ட பூர்விகக் குடியினர் வாளுக்கிரையாக்கப்படுவதில்லை. செல்வத்தை உற்பத்தி செய்வதற்காக அவர்கள் அடிமைகளாக்கப்பட்டனர். அடிமையை வைத்திருப்போன் அடிமை என்ற பிரபுத்துவத்திற்கு முந்திய அடிமைச் சமுதாயத்தின் மூலம் வர்க்கச் சமுதாயம் முதன் முதலாகத் தோன்றுகிறது.
உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சிதான் புராதன பொதுஉடமைச் சமுதாயத்திலிருந்து அடிமைச் சமுதாயமாக மாறுவதற்கு ஏதுவாக இருந்தது என்பதை நாம் குறித்துக்கொள்வோம். ஒரு அடிமை தனக்கும் தனது எசமானுக்கும் வேண்டியதை உற்பத்தி செய்யக்கூடிய நிலைக்கு உற்பத்திச்சாதனங்கள் வளர்ச்சியடையும் வரை அடிமைத்தனத்திற்கான அடிப்படை தோன்றியிருக்கமுடியாது. ஒரு வர்க்க சமுதாயத்தின் வருகையோடு ஒரு வர்க்கம் மற்ற வர்க்கத்தை அடக்குவதற்கு ஒரு சாதனம் தேவைப்பட்டது.இதுதான் பிற்காலத்தில் அரசாங்கமாக வளர்ச்சியடைய இருந்தது.
வர்க்கங்களற்ற புராதன பொதுவுடைமைச் சமுதாயத்தில் அரசாங்க இயந்திரம் இருக்கவில்லை.அப்பொழுது வர்க்கங்களற்ற சமுதாயம் இருந்தமையால் ஒரு வர்க்கத்தை வேறோரு வர்க்கம் அடக்கி வைத்திருப்பதற்குத் தேவையான காரணம் ஏற்படாததேயாகும்.
அவ்வாறானால் ஒழுங்கு எவ்வாறு நிலை நாட்டப்பட்டது? ஒவ்வொரு பூர்வீகக்குடியும் தம்முள் ஒருவரைத் தலைவராக அல்லது முக்கியஸ்தராகத் தெரிவுசெய்தனர். பொதுவாக அவன் வேட்டையாடுவதற்கும், யுத்தத்திற்கும், அவர்களைத் தலைமைதாங்கும் உடல் வலிமை பெற்றவனாயிருந்தான். ஆனால், அவன் தனது அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு அவனிடம் அரசாங்க இயந்திரமான ஓர் இராணுவத்தையோ அல்லது பொலீஸ் படையையோ கொண்டிருக்கவில்லை. சுயமாகவே மக்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தனர். ஒவ்வொருவரும் அவனது சொல்லை ஏற்றுக் கொண்டனர். ஒரு பூர்வீகக்குடியில் தலைவனுக்குக் கிடைத்த மனப்பூர்வமான மரியாதையும் கீழ்ப்படிவம்,முதலாளித்துவ சமுதாயத்தில் எந்தவொரு சக்திவாய்ந்த தலைவனுக்கும் கிடைத்ததில்லை.புராதான பொதுவுடைமைச் சமுதாயத்தின் கால கட்டத்தில் அரசாங்க இயந்திரத்தைச் சிறிதளவாவது ஒத்ததாக ஏதும் இருக்கவில்லையென்பது மிகவும் தெளிவாகின்றது.
எதிர் எதிர் வர்க்கங்கள் ஒரு வர்க்கத்தை ஒரு வர்க்கம் தனக்குக் கீழ்க் கொண்டுவரும் நிலைக்கு வளர்ச்சியடையும்போதே ஓர் அடக்குமுறை அரசு இயந்திரத்தின் தேவை ஏற்படுகின்றது. அவ்வாறான முதற் சமுதாயம் அடிமைச் சமுதாயமாகும். அதன் சிறந்த உதாரணங்களை கிரேக்கத்திலும் உரோம சாம்ராஜ்யத்தின் காலப்பகுதியிலும் காணலாம். இந்த சமுதாயம் அடிமையை வைத்திருப்போன் - அடிமை என்ற எதிர் எதிர்வர்க்கங்களாகப் பிளவுபட்டிருந்தது. வல்லமைமிக்க உரோம சாம்ராஜ்யத்திற்கு எதிராக ஸ்பார்ட்டகஸ் தலைமை தாங்கிய மிகப்பிரபல்யம் வாய்ந்த கிளர்ச்சிகள்உட்பட பல அடிமைக் கிளர்ச்சிகளை இந்தச் சமுதாயம் கண்டது.
இக்கட்டத்தில் அடக்குமுறை இயந்திரம் பெரிய அளவில் வளர்ச்சியடையவில்லை. அடிமைகள் மிகக் கடுமையான கசையடி மூலமும்,பிரமாண்டமான சுதந்திர மனிதர்களின் படையுடனும் கோரமாக அடக்கியாளப்பட்டனர். ஆனால், வர்க்க முரண்பாடுகள் கூர்மையடைந்து சமுதாயம் அடுத்த கட்டமான பிரபுத்துவத்திற்கு வளர்ச்சியடைந்ததும் மேலும் மோசமான அடக்குமுறை அரசு இயந்திரத்தின் தேவை உணரப்பட்டது. நிலையான இராணுவம் ஸ்தாபிக்கப்பட்டது. ஒரு நீதித் துறையும் சிறைச்சாலைகளும் தோன்றின.சிறிது சிறிதாக அரசு இயந்திரம் வளர்ந்து வர்க்க முரண்பாடு மிக உச்சக் கட்டத்தில் கூர்மையடைந்துள்ள முதலாளித்துவ சமுதாயத்தில் உயர் இராணுவ மயமாக்கப்பட்ட இன்றைய அரசாங்கம் தோன்றியது.
இதிலிருந்து வர்க்க முரண்பாடுகளின் வளர்ச்சிப் போக்கின் விளைவுகளால் அரசாங்கம் தோன்றியது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.
மார்க்ஸ் விளக்கியது போன்று அரசாங்கமென்றால் ஒருவர்க்கும் வேறு ஒரு வர்க்கத்தை அடக்குவதற்கான ஒரு சாதனமாகும். அது வர்க்கங்களுக்கு மேலே, சமுதாயத்திற்கு மேலே உள்ள ஒரு நடுநிலை அமைப்பல்ல. சுரண்டும் வர்க்கங்கள், சுரண்டப்படும் வர்க்கங்களை அடிமைத்தனமாக வைத்திருப்பதற்கான ஓர் அடக்குமுறைச் சாதனமே அரசாங்கமாகும். சுரண்டும் வர்க்கங்கள், சுரண்டப்படும் வர்க்கங்களை கீழே வைத்திருப்பதற்காகப் படிப்படியாகக் கட்டப்பட்ட சாதனமே அது.வர்க்க சமுதாயத்தில் ஆட்சி செலுத்துவது உண்மையில் அதுவே. கட்சிகள் வரலாம் போகலாம்.ஆனால் சுரண்டும் அமைப்புமுறை இருக்கும்வரை அரசு இயந்திரம் அவ்வாறே இருக்கும்.
இந்திய அதிகார வர்க்கத்தின் சில உதாரணங்களுடன் விளக்கலாம்.ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் இராணுவ அதிகாரியான சிலர் பின்னர் இராணுவ ஜெனரல் களாகவும், முன்னர் ICS லும் பின்னர் IAS ம் பதவி வைத்தவர்கள் நிரந்தரமாக எப்படி தொடர்கின்றனர். அதாவதுநமதுநாட்டில்ஐந்து வருட பிரதம மந்திரிப் பதவிக் காலத்தில் செயலாளராக இருந்தவர் முன்னைய ஆட்சிக் காலத்திலும் ஏன் பின்னர் ஆட்சி காலத்திலும் நிரந்தர செயலாளராக எப்படி தொடர முடிகிறது?
ஆங்கில ஏகாதிபத்தியத்தால் பயிற்றுவிக்கப்பட்ட இராணுவ,பொலீஸ் அதிகாரிகளும் அடிப்படையில் அவ்வாறே இருக்கின்றனர். அவர்கள் அதே எஜமானர்களுக்கு, அதே நலன்களுக்குச் சேவை செய்கின்றனர்.அந்த மனிதர்கள் தான் உண்மையில் ஆட்சி செய்கிறார்கள்.
இவ்வாறான ஓர் ஒடுக்குமுறை முதலாளித்துவ அரசாங்க இயந்திரம் இல்லாமல் சுரண்டல்ஒரு நிமிடத்திற்குமேல் நிலைக்காதென்பது நிச்சயமாகத் தெளிவாகின்றது. ஆயுதப் படையினரதும்,பொலீஸ் படையினரதும் கரங்களில் துப்பாக்கியில்லாவிட்டால் சுரண்டும் வர்க்கங்கள் சுரண்டப்படுவோரைக் கீழே போட்டு மிதிக்க முடியாது.
அவர்கள் முதலாளியின் உயிரையும், உடமையையும் பாதுகாக்க வந்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் ஆயுதந்தாங்கியவர்களாக வந்திருக்கின்றார்கள்.அவர்களின் கரங்களில் உள்ள துப்பாக்கிகளே முதலாளியையும்,அவனது வர்க்கத்தையும் பாதுகாக்கின்றது.அந்தத் துப்பாக்கிகள் இல்லாவிட்டால் தொழிலாளர்கள் சுரண்டலுக்கு ஒரு நாள்கூட இடங்கொடுக்கமாட்டார்கள்.எவ்வாறாயினும்,பெரும்பாலான தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு நூறுக்கு ஒன்று என்ற விகிதாசாரத்தில் இருக்கிறார்கள்.இந்த நிலைமைகளில் எவ்வாறு அவர்களால் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் உள்ளவர்களைப் பலவந்தப்படுத்திச் சுரண்ட முடிகின்றது.அவர்களின் காவல் நாய்களான இராணுவம்,பொலீஸின் கரங்களில் உள்ள துப்பாக்கிகளின் சக்தியே அது.அதனாலேயே தோழர் மாசேதுங்,அரசியல் அதிகாரம் துப்பாக்கிக் குழலிலிருந்து பிறக்கின்றது என்பதை ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் உணர்ந்துகொள்ள வேண்டும் என நமக்குக் கற்றுத்தந்தது நூறுவீதம் சரியாகின்றது.
அரசாங்கத்தைப் பற்றிய மார்க்சியக் கோட்பாட்டை இது இரத்தினச் சுருக்கமாகத் தருகின்றது. மார்க்சிச - லெனினியத்தின் சாரம் அதுவே.
இந்தக் துப்பாக்கிகள் கைமாறும் போதே,சுரண்டப்பட்ட வர்க்கங்கள் புரட்சிகரப் பலாத்காரத்தினால் இந்தக் துப்பாக்கிகளைப் பறித்துத் தொழிலாளர்களினதும் அவர்களினது நேச அணிகளினதும் கைகளில் அவற்றை ஒப்படைக்கும்போதே அவர்கள் தம்மை விடுதலை செய்து கொள்வார்கள். வேறு எந்த மார்க்கமும் இல்லை.மற்றவை யாவும் தொழிலாள வர்க்கத்தை ஏமாற்றும் ஒரு திட்டமிட்ட முயற்சி அல்லது போலியாகும்.
இந்த உண்மையை மறைப்பதற்கும்,மக்களைக் குழம்பச் செய்து அவர்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவுமே முதலாளிகளும் மற்றைய பிற்போக்குச்சக்திகளும் பாராளுமன்றம் என்ற ஏமாற்று வித்தையைக் கண்டுபிடித்தனர். பாராளுமன்றம் வெறுமனே ஏமாற்றும் இடம்தானே அன்றி ஒடுக்கப் பட்ட மக்களின் விடுதலைக்கான இடமன்று.
பாராளுமன்றம்மூலதனத்தின் வெளிப்படையான சர்வதிகாரத்தை மறைப்பதற்கான ஒரு திரை, ஒரு அணிகலனுமாகும். அது மக்களை மடையர்களாக்குவதற்கும், பிளவு படுத்துவதற்கும்,பாராளுமன்றம் மூலம் சோஷலிசத்தை அடையலாம் என்ற மாயையைப் பரப்புவதன் மூலம் அவர்களின் வர்க்க உணர்வுகளை மழுங்கடிப்பதற்கும், ஆயுதப் படையிற்தான் உண்மையான அதிகாரம் இருக்கிறதென்பதை மக்களிடமிருந்து திசைதிருப்புவதற்கும் முயற்சிக்கின்றது.ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்குப் பதில் வெறும் சொற்களால் போராட்டம் நடத்தும் மாற்று யோசனையை கூற முயற்சிக்கின்றது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நம்மீது கொண்டிருந்த பெரும் அன்பினால் வாக்குரிமை வழங்கப்பட்டதாஇல்லை.தாம் என்ன செய்கின்றனர் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தனர்.பொதுவாக்குரிமையைக் கொடுப்பதன் மூலம் வளர்ந்து வரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கியத்தை இன ரீதியிலும்,சாதி ரீதியிலும்,வேறு வழிகளிலும் பிளவுபடுத்த அவர்கள் எண்ணினர். அவர்களின் எண்ணங்கள் பொய்ப்பிக்கப்படவில்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் அவர்களது அடிவருடிகளும் சகல மக்களையும் ஆட்சி செய்து வருகையில் அவர்களோ சாதி, மத இன ரீதிகளில்பிளவுபட்டிருந்தனர்.
நமது நாட்டு மக்கள் இதுவரை எத்தனை தடவைகள் வாக்களித்தனர். இந்த பாராளுமன்றம் சட்டமன்றம் மூலம் சட்டமியற்றும் மெத்த படித்த ஏன் ஆக்ஸ்போர்ட் கேம்பிரிட்ஜ் கற்ற திறமைமிக்கோரைப் பாராளுமன்றம் அனுப்பினர். இந்த மனிதர்களும் பாராளுமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் திறமையாக சொற்பொழிவுகளை நிகழ்த்தினர்.
ஆனால், இறுதி முடிவுதான் என்ன? அன்றிலிருந்து இன்று வரை பாராளுமன்றத்திற்கு வெளியே நிலவிய உழைக்கும் மக்களைச் சுரண்டும் முறையானது எந்த அளவிலாவது குறைக்கப்பட்டுள்ளதாதிட்டவட்டமான பதில் இல்லை என்பதேயாகும்.ஏனெனில் சுரண்டலைப் பாராளுமன்றம் பாதுகாக்கவில்லை.
பாராளுமன்றத்திற்கு வெளியே சுயேச்சையாக இயங்கும் முதலாளித்துவ அரசாங்க இயந்திரமே சுரண்டலைப் பாதுகாக்கின்றது. பாராளுமன்றத்தில் நடைபெறும் நாடகமாவது Musical chair விளையாட்டை ஒத்திருக்கின்றது. கட்சி மாறுகிறது ஆம் ஆட்சி மாறுகிறது ஆனால் ஏழைகள் மேலும் ஏழைகள்ஆகின்றனர், சுரண்டலின் தரத்திலென்றாலும் ஏதாவது மாற்றம் ஏற்பட்டதா? இல்லை. அதே சுரண்டல் தொடர்கின்றது. செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்ற ஏனெனில், முதலாளித்துவப் பராரளுமன்ற ஜனநாயகத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட அரசாங்க மாற்றங்கள் பொருளாதாரக் கட்டுக்கோப்பில் அல்லது அதைப் பாதுகாக்கின்ற முதலாளித்துவ அரசாங்க இயந்திரத்திலோ எந்தவித அடிப்படைமாற்றமெதுவையும் கொண்டுவரவில்லை.
அதனால்தான் ஒவ்வொரு புரட்சியாளனும் இப்போதுள்ள ஏகாதிபத்திய பெரும் முதலாளித்துவ பொருளாதாரக் கட்டுக்கோப்பை நொருக்காமலும், அத்துடன் அதன் காவல்நாயாக விளங்கும் ஒடுக்குமுறை அரசாங்க இயந்திரத்தைப் பலாத்காரத்தினால் உடைக்காமலும்,முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயக நாடகத்தின் மூலம் பதவிக்கு வரும் எந்த அரசாங்கமும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கமாட்டாது என்ற உண்மையை கவனத்தில் கொள்ளவேண்டும்.
தொழிலாளி வர்க்கமும் அதன் நேச அணிகளும் தற்போதுள்ள முதலாளித்துவ அரசாங்க இயந்திரத்தை உள்ளவாறே எடுத்துத் தமது நலன்களுக்காக உபயோகிப்பதும் சாத்தியமில்லை. அரச இயந்திரம் முதலாளித்துத்தின் நலன்களைப் பாதுகாக்கக் கட்டப்பட்டது. அதைத் தொழிலாள வர்க்க நலன்களைப் பாதுகாக்கப் பயன்படுத்த இயலாது. அதனால் தான் மார்க்ஸ், லெனின், மாசேதுங் ஆகியோர் முதலாளித்துவ அரசாங்க இயந்திரம் நிச்சயமாத நொருக்கப்படல் வேண்டும் என வலியுறுத்திக் கூறினர். அதனைச் சீர்திருத்தம் செய்யவோ அல்லது அதன் வரையறைக்குள் அமைப்பில் சீர்திருத்தம் செய்யவோ முடியாது.முதலாளித்துவ அரசு இயந்திரம் இருக்கவேண்டும் அல்லது பாட்டாளிவர்க்க அரசு இயந்திரம் இருக்க வேண்டும். இவற்றிற்கு இடைப்பட்டதாக ஒன்றும் இருக்க முடியாது.அதனால்தான் முதலாளித்துவ அரசு இயந்திரத்தை பலாத்காரத்தினால் நொருக்கி அதனிடத்தில் பாட்டாளிகளின் அரசு இயந்திரத்தை தொழிலாளிவர்க்கமும் அதன் நேச அணிகளும் ஏற்படுத்தவேண்டியது பொறுப்பென மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை போதிக்கின்றது.பாட்டாளிகளின் அரசாங்க இயந்திரத்தை மார்க்ஸ் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என விபரித்தார்.
இந்தக் கடமையைச் சரிவரச் செய்த புரட்சிகள் வெற்றி பெற்றன. அக்டோபர் புரட்சியும் சீனப் புரட்சியும் இதற்கு உதாரணங்களாகும். இந்த இரண்டிலும் பழைய அரசியல் அதிகாரத்தின் அழிவில் புதியது பெறப்பட்டது. பழைய அரசு இயந்திரத்தை அல்லது அதன் ஒரு பகுதியையாவது உபயோகிக்கும் முயற்சிநடைபெறவில்லை.
இன்னும் பின்னர்....
No comments:
Post a Comment