இன்றைய சமூகத்தில் பெண்
இன்று உலகமயமாதல் என்பதன் ஊடாக ஏகாதிபத்தியம் மூன்றாம் உலக நாடுகளை மேன்மேலும் சுரண்டிக் கொள்ளையிட்டு வருகின்றது.இதில் பெண்கள் பன்முகப்பட்ட வழிகளில் ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.பொருளாதார அரசியல் சமூக பண்பாட்டுத் தளங்கள் அனைத்திலும் பெண் ஒடுக்குமுறைகளை அடையாளம் காணமுடிகிறது.ஆனால் அவற்றுக்கு எதிரான அமைப்பு ரீதியாகப் பெண்களை அணி திரட்டுவது கடினமான ஒரு பணியாகவே இருந்து வருகின்றது.பழமைவாதக்கருத்தியல் அமுக்கத்தி லிருந்து பெண்களை விடுவிப்பது மிகப் பிரதானமான கடமையாகின்றது.அடுத்து இன்றுள்ள சமூகச் சூழலின் பன்முகத் தாக்கங்களிலிருந்தும் பெண்கள் அறிவு ரீதியாகவும் நடைமுறை வாயிலாகவும் விடுபட வேண்டிய தேவையும் அவசியமும் காணப்படுகின்றது.
இதனை விரிவாக பார்ப்போம் தோழர்களே.
குடும்ப அமைப்பில் வேலை பிரிவினையுடன் பெண் அடிமைப் படுத்தப்பட்டால். உலகில் தோன்றிய வர்க்க சமுதாயத்தில் பெண்ணே முதல்முதலில் அடிமையாக்கப்பட்டால் என ஏங்கெல்ஸ் கூறியுள்ளார்.தனி சொத்துடமை தொடர்ந்து கொண்டு செல்வதற்காக மனைவியையும் தனிச் சொத்தாக்கி அவளுக்கு பிறக்கும் குழந்தைக்கே தன் சொத்துரிமை என குடும்பத் தலைவன் வகுத்தான்.பெண்ணுக்கு மட்டுமே கற்பொழுக்கம் திணிக்கப்பட்டது.அரசும் குடும்ப தலைவனுக்கே சட்டஉரிமை வழங்குகிறது.
தனி சொத்துரிமை உடன் ஏற்பட்ட குடும்ப அமைப்பால் தன்குடும்ப பாதுகாப்பு குடும்பநலன் மேலும் சொத்து, பணம்சேர்த்தல் ஆகிய சுயநலன்கள் குடும்பங்களை ஆக்கிரமித்துக் கொண்டன. இவை சமூக நீதியாகவும் ஏற்றுக் கொள்ளப் படுகின்றன.
குடும்ப அமைப்பு ஏற்படுவதற்கு முன் பிரதான கணக் குழு வாழ்வில் இருந்த பொதுநலன் நோக்கும்பார்வை குடும்பம் தோன்றிய பின்னர் குறுக நேர்ந்தது.குடும்ப நலனுக்காகவே உழைப்பு வாழ்வு என்பது நீதியானது உற்பத்தி உறவை ஒட்டியே குடும்ப அமைப்பும் ஏற்படுகிறது.ஒரு காலகட்டத்தில் கூட்டுக் குடும்ப அமைப்பு உற்பத்தியை உயர்த்த பல வகையில் பயன்பட்டதாக கொள்ளப் பட்டது.கூட்டுஉழைப்பு; கூட்டு நுகர்வு; கூட்டாக ஒரே சமையல்; துவையல்; வீட்டை பராமறித்தல் உறவினர் விருந்தினர் கவனித்தல்;இவ்வாறுஅன்றைய குடும்பத்தில் சிக்கனமும் வேலைபளுகுறைந்தும் எல்லோரும்ஒன்றுகூடியும் இருக்க முடிந்தது. குழந்தை வளர்த்தல்; நோயாளர்களை கவனித்தல்; முதியோரைப் பேணுதல் கூட்டு குடும்பத்தில் அனைவரும் உதவுவர்.
ஆயினும் முதலாளித்து உற்பத்தி முறை தோன்றியதும் கிராமங்களில் இருந்து நகரத்தை நோக்கிய பயணம்: அவர்களுடைய வேலைவாய்ப்பு, கல்விகற்க - கூட்டுக் குடும்பத்தை விட்டு வெளியேற நேரிடுகிறது. இதுவும் தவிர்க்க முடியாத சமூக வளர்ச்சி போக்காகும்.
குடும்ப அமைப்பு முறை பற்றி புரிந்து கொள்வோம்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது மட்டுமின்றி தந்தையின் காலில் விழுந்து வணங்குவது ஆசிர்வாதம் பெறுவது குடும்பத் தலைவன் இறந்த போதும் ஆண்டுக்கு ஒருமுறை உருவப்படத்தை வழிபடுவது குடும்ப அமைப்பின் புனித தலைமையை காப்பதாகும்.
மார்க்சின் ஆய்வு முறையானது சமூக அமைப்பை இறுதியாக தீர்மானிப்பது அதன்அடித்தளமாகியபொருளாதாரம்; அதாவது சமுதாயத்தின் உற்பத்தி சக்திகளும் உற்பத்தி உறவுகளுமே ஆகும். இவையையே சமுதாயத்தின் அடித்தளம் என்போம்.
இந்த அடித்தளம் மேல் கட்டுமானமான அரசியல், சட்டம், கலை இலக்கிய, மதம் ஆகியவை ஒன்றின் மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மதம் என்ற கருத்தியல் குடும்பத்தோடு ஒட்டி தொடர்கிறது. குடும்பத் தலைவன் மதமே குழந்தைகளின் மதமாகிறது.சிறுவயதில் இருந்தே மத கருத்துகள்கட்டுப்பாட்டுடன் திணிக்கப் படுகிறது மதக் கல்வியும் போதிக்கப் படுகிறது.
தனிசொத்து உடனே உற்பத்தியுடனே குடும்பங்கள் அமைய தொடங்கின. தனிசொத்துடமை பாதுகாத்து குடும்பத்துக்குள்ளே கொண்டு செல்லல் அதற்கேற்றபடி திருமண மற்றும் சமூக பழக்க வழக்கங்கள் அமைகின்றன.
அரசு என்பது ஒரு வன்முறை வடிவமாக அமையும் பொழுது அதன் அலகு அல்லது கூறான குடும்பமும் அதேபோன்று அமைவது இயல்பே.குடும்பத் தலைவனுக்கு கீழ்பட்டு மனைவி பிள்ளைகள்அடங்கி நடப்பர்.அங்கு ஜனநாயகஉரிமை கிடையாது.குடும்பத்தலைவன் அங்குள்ள அனைவரையும் தண்டிக்கும் உரிமை பெற்றவனே இவையே சமூக நீதியாக உள்ளது.
குடும்பத்தில் நடப்பதை மூடி மறைக்கப்படுகின்றன. குடும்பம் ஒரு பரிசுத்தமான அமைப்பாக மதத்தாலும் சமூகத்தாலும் கொள்ளப்படுகின்றன.
இன்று வன்முறை வடிவமான குடும்ப அமைப்பில் மிகவும் பாதிக்கப்படுபவர் பெண்ணே. ஜனநாயக உரிமையோ மனித உரிமை அற்றவளாக குடும்ப சிறையில் அவள் அடைக்கப்படுகிறாள்.
குடும்பம் என்பது புனிதமான அமைப்பு என்ற பொய்மையில் பெண்கள் குடும்பம்பத்துள் அடைக்கப்படுவதை தடுத்துவிட முடியவில்லை.
சமூக வளர்ச்சியில் பெண்கள் கல்வி கற்று ஆங்காங்கே கூலிக்காக உழைக்கச் செல்லும் வாய்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது,இத்தகைய மாற்றங்கள் பெண்களை கிராம சிறையில் இருந்து ஓரளவு இடமாறு செய்து நகரங்கள் தொழிற்சாலைகள் மற்றும் பணிகளை ஒட்டி வாழ செய்ததேயன்றி விடுதலையை தேடி தரவில்லை.
இங்கு மட்டுமல்ல முன்னேறிய நாடுகளான ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் இதே நிலைதான். பெண்கள் மீதான வீட்டுசுமையும் அதேபோல் தான் பணிபுரியும் இடத்திலான பணி சுமையும் இருக்கவே செய்கிறது.
ஒரு பெண் தானாக முன்வந்து ஏன் இச்சிறையை ஏற்றுக் கொள்கிறாள்; குடும்பம் என்பது பரிசுத்தம் நிறுவனமாக இன்றைய சமூகம் ஏற்றுக் கொள்கிறது, அங்கு பெண், மனைவி என்ற சமூக அந்தஸ்து பெற முனைகிறாள். தனித்து வாழ முடியாத நிலையில் அதன் மூலம் பாதுகாப்புத் தேட எண்ணுகிறாள். மூன்றாவதாக எதிர்பாலாரின் பாலுறவு இன்பம் பெற திருமண மூலமே சமூக அனுமதி பெறுகிறாள்.பிள்ளையைப் பெற்று சமூக அந்தஸ்தை உயர்த்திப் பிள்ளைகள் மூலம் பாதுகாப்புத் தேட முயல்கிறாள்.
இன்று ஏற்பட்டுள்ள பல்வேறு விதமான நிலையில் பெண்ணிய வாதம் குறித்து அச்சத்தில் உள்ள ஆணாதிக்க சமூகம் பெண்கள் ஆணாதிக்கத்திற்கு எதிர் எதிராக நின்று விடுமோ குடும்ப அமைப்பை உடைத்து விடுமோ என்று பயந்து கொண்டு குடும்ப,மத, சமூக சமத்துவத்தை பேசி பெண்ணை இந்த அமைப்பு முறைக்கு எதிராக கலகம் செய்யாமல் இருக்க சில பிற்போக்கான கருத்துகளில் மூழ்கடிக்க நினைப்பதே இங்கு நாம் அவசியம் புரிந்துக் கொள்ள வேண்டிய இடமாகும். அவர்கள் இந்த அமைப்பு முறையின் அடித்தளத்தை புரிந்து கொள்ளாமலே உள்ளார்கள் என்பது தான் அவர்களின் சிந்தனை முறையாக உள்ளது.
முன்னேறிய முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகளில் பல்வேறு விதமான வெளிப்படையான பெண்ணியம் சார்ந்த இயக்கங்கள் செயல்பட்டு பல்வேறு விதமான சீர்திருத்தக் கோரிக்கைகளை நிறைவேற்றியது இருந்தும் விஞ்ஞான பூர்வமாக சமூக மாற்றங்களை ஆராயும்பொழுது இவை விடுதலைக்கு பதில் குடும்ப சிறையிலேயே சில சீர்திருத்தங்களை கொண்டு வந்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.
புராதான இனக்குழு சமுதாய அமைப்பை தொடர்ந்து ஆரம்பகால அடிமை சமூகத்தில் தனி குடும்ப அமைப்பு நிலவவில்லை தனி சொத்துடமையின் உற்பத்தி முறைக்கு ஏற்ப குடும்ப அமைப்பு ஏற்பட்டது.
குடும்பம் என்பது இரத்த உறவு முறையாக ஒரே கூரையின் கீழ் வாழ்பவரை நாம் குறிக்கிறோம். இங்கு கணவன் மனைவி குழந்தைகள் முதன்மையாவர்.பெண்ணுக்கு பாலுறவு அனுமதியும் பாதுகாக்கும் கல்யாணத்துடன் கிட்டுவதாக கொள்ளப்படும்.இங்கே பெண்கள் சமத்துவமற்று; சுதந்திரமற்று; மனித உரிமைகள் அற்றவர்களாக வாழ்வதை நாம் எல்லோரும் அறிவோம்.
ஆக குடும்பம் ஒரு விஞ்ஞான பூர்வமான அமைப்பல்ல. ஆணுக்குப் பெண் என்ற சமத்துவம் அங்கு இல்லை.இருவருக்கிடையிலே வேலை பிரிவினையும் வெவ்வேறாக உள்ளது.இந்த குடும்ப அமைப்பில் அடிமைப்பட்டு இருக்கும் பெண்களுக்கு இந்த சமூக அமைப்பில் சம உரிமை மனித உரிமை சமத்துவம் கிடைப்பது அரிதாக உள்ளது ஆக அதற்கான சரியான அமைப்பு முறைக்காக போராடுவது அவசியமானதாகும்.
சோவியத்திலும் செஞ்சீனத்திலும் பெண்களுக்கான சமத்துவம் குடும்ப வீட்டு பணிகளை சமூக மயமாக்கி பெண்களை மதிப்பான உற்பத்தியில் ஈடுபடுத்த வேண்டும் என லெனின் கூறினார். பாட்டாளி வர்க்க குடும்ப அமைப்பு முறையானது எதார்த்த முறையில் கூலி அடிமைகளாக சுரண்டப்படுவதில் இருந்து விடுபட்டு சமத்துவ முறையில் வாழ்வதற்கான ஒரு வாழ்க்கை நெறியை கொணர்ந்தது. உற்பத்திஉறவின் மாற்றங்களே சமூகஉறவிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதே மார்க்சிய கோட்பாடாகும்
"மார்க்சியம்தான் பெண் ஒடுக்கு முறையின் சமூக அடித்தளத்தைத் தெளிவாக அடையாளப்படுத்திய உலகப் பார்வையை வழங்கியது.வெறுமனே சுட்டிக்காட்டியது மட்டுமன்றி நடைமுறைப் போராட்டங்கள் புரட்சிகள் வாயிலாக பெண் ஒடுக்கு முறைகளை உடைத்தெறிந்துஆண்பெண் சமத்துவத் தை நாட்டிலும்வீட்டிலும் நடைமுறைப் படுத்த வழிகாட்டியது.சோஷலிசத்தின் கீழ்தான் முன்பு எப்பொழுதும் அனுபவித்திராத சுதந்திரத்தைப் பெண்கள் அனுபவிக்க ஆரம்பித்தனர்.அதில் முழுமையோ திருப்தியோ அல்லது முடிவான அம்சங்கள் யாவும் நிறைவுடையனவாக இருந்தன என்று கூறிவிட முடியாது. ஆனால் மனிதகுல வரலாற்றில் வர்க்கங்கள் தோற்றம் பெற்ற பின்னான சமூக அமைப்புகளில் சோஷலிச சமூக அமைப்பில் மட்டுமே பெண்கள் தமக்குரிய சமூக சமத்துவத்தை நிலைநாட்டக் கூடியதாக இருந்ததை மறுத்துவிட முடியாது".-லெனின் கிளாரா ஜெட்கினிடம், என் நினைவுகளில் (லெனின் நூலிலிருந்து.)............................................
சமூகத்தில் சரிபாதியாக உள்ள பெண் இன்றும் சமூகத்தில் தனக்கு வேண்டிய இடமின்றி ஒரு ஒதுக்கப்பட்டவளாக வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளால்.
பெண்ணின் இந்த நிலையானது மொத்த சமூக வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதை தெரிந்தும் தெரியாமல் ஒதுங்கி செல்லும் இந்த அவசர உலகம் தன் மிக உன்னத சக்தியைப் பாழ்படுத்திக் கொண்டிருப்பதை அறிவதில்லை.
பெண்ணே இந்த சமூகத்தின் எதிர்காலமான குழந்தைகளை வளர்தெடுக்கும் நிலையில் உள்ளவள், அவளே குழந்தைகளின் உளவியல் நிலைக்கு அடிப்படையாக திகழ்கிறாள்.
சமூகத்தில் பெண்ணை அவளின் சுய விருப்பத்தில் அவளின் கண்ணோட்டத்தில் செயல்பட விடுவதில்லை.அவளின் சுதந்திர போக்கு தடை படுத்தப் பட்டுள்ளது.அவை சமூகத்தின் வளர்ச்சிக்கு அதாவது பெண்ணின் அறிவுத் திறனையும் திறமைகளையும் பயன்படுத்தி கொள்ளாமல் வீண்ணடிக்கப்படுகிறது.
ஒரு சமூகம் சிறக்க சமூகத்தின் சரிபாதியான பெண்கள் சுதந்திர மானவர்களாக, நல்ல கல்வி கற்றவர்களாக,சமூக அறிவு படைத்தவர்களாக மற்றும் சுதந்திரமான ஆளுமை கொண்ட தாயால் மட்டுமே ஒரு குழந்தையை சமூகத்தின் சரியான பங்களிக்கும் திறன் கொண்ட வளமான எதிர்கால சந்ததியை வளர்தெடுக்க முடியும்.
சோவியத் ஆட்சியில் பெண்களுக்கான விடுதலை
மார்க்சியம்தான் பெண்ஒடுக்குமுறையின் சமூக அடித்தளத்தைத் தெளிவாக அடையாளப்படுத்திய உலகப் பார்வையை வழங்கியது.வெறுமனே சுட்டிக் காட்டியது மட்டுமன்றி நடைமுறைப் போராட்டங்கள் புரட்சிகள் வாயிலாக பெண் ஒடுக்கு முறைகளை உடைத்தெறிந்து ஆண்பெண் சமத்துவத்தை நாட்டிலும் வீட்டிலும் நடைமுறைப்படுத்த வழிகாட்டியது.
சோஷலிசத்தின் கீழ்தான் முன்பு எப்பொழுதும் அனுபவித்திராத சுதந்திரத்தைப் பெண்கள் அனுபவிக்க ஆரம்பித்தனர்.
அதில் முழுமையோ திருப்தியோ அல்லது முடிவான அம்சங்கள் யாவும் நிறைவுடையனவாக இருந்தன என்று கூறிவிட முடியாது. ஆனால் மனிதகுல வரலாற்றில் வர்க்கங்கள் தோற்றம் பெற்ற பின்னான சமூக அமைப்புகளில் சோஷலிச சமூக அமைப்பில் மட்டுமே பெண்கள் தமக்குரிய சமூக சமத்துவத்தை நிலைநாட்டக் கூடியதாக இருந்ததை மறுத்துவிட முடியாது.
கடந்த நூற்றாண்டு தொடங்குவதற்கு முன்பிருந்தே பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்த குரல்கள் மார்க்சியர்களின் வழிகாட்டலிகளில் வெளிவரத் தொடங்கிவிட்டன. கடந்த நூற்றாண்டின் முற்கூறிலே மேற்கு நாடுகளில் சோஷலிசப் பெண்கள் இயக்கம் தோன்றிவிட்டது. அவர்களது பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்களும் கோரிக்கைகளும் பெண் விடுதலையைச் சுட்டிநின்ற அதேவேளை காலனிய முதலாளித்துவ ஏகாதிபத்திய ஒடுக்கு முறைகளுக்கு எதிரான குரல்களோடும் போராட்டங்களோடும் பின்னிப்பிணைந்து நின்றன.இதன் வழியில் தான் சோஷலிசத்திற்கான போராட்டங்களில் பெண்கள் தலைமைப் பாத்திரங்களிலும் இருந்தனர். சோவியத் ஆட்சி உழைக்கும் மக்களின் ஆட்சி.அது ஏற்பட்ட முதல் மாதங்களிலேயே பெண்களைப் பற்றிய சட்டங்களில் மிகவும் திட்டவட்டமான புரட்சியை ஏற்படுத்தியது.பெண்களைக் கீழான நிலையில் வைத்த பழைய சட்டங்களில் எதுவும் அன்றைய சோவியத் குடியரசில் கிடையாது.பெண்களின் பலவீனமான நிலைமையைப் பயன் படுத்திக் கொண்டு அவர்களைச் சமத்துவம் இல்லாத நிலைமையில் - பெரும்பாலும் அவமானகரமான நிலைமையில் கூட -வைத்த சட்டங்களைப் பற்றி,அதாவது விவாகரத்துச் சட்டங்களையும் திருமணமாகாமல் பெற்ற குழந்தைகளைப் பற்றிய சட்டங்களையும் குழந்தையை வளர்ப்பதற்குத் தகப்பனார் பணம் கொடுக்க வேண்டும் என்று கோருவதற்குப் பெண்ணின் உரிமை சம்பந்தமான சட்டங்களையுமே நான்(லெனின்) இங்கே பிரத்யேகமாகக் குறிப்பிடுகிறேன்.முதலாளித்துவச் சட்டங்கள்,குறிப்பாக இந்தத் துறையில் தான் பெண்களின் பலவீனமான நிலையைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை அவமானப்படுத்தி அவர்களுக்குக் கீழான நிலையைக் கொடுத்தன;மிக அதிகமாக வளர்ச்சி யடைந்த நாடுகளில் கூட இது தான் நிலை என்பதை நாம் இங்கே கூற வேண்டும்.
சோவியத் ஆட்சி,குறிப்பாக இந்தத் துறையில்தான்,உழைக்கும் மக்கள் தாங்கிக் கொள்ள முடியாதிருந்த பழைய,அநீதியான சட்டங்களில் எதுவும் இல்லாதபடித் துடைத்துவிட்டது.பெண்கள் முழு சமத்துவத்தை அனுபவிக்கும் நாடு,குறிப்பாக அன்றாடக் குடும்ப வாழ்க்கையில் ஏற்படக் கூடிய அவமானகரமான நிலைமையில் பெண்களை வைக்காத நாடு உலகத்தில் சோவியத் ருஷ்யாவைத் தவிர வேறு எந்த நாடும் இல்லை என்பதை இன்றும் எத்தகைய மிகைப்படுத்தலும் இன்றி நாம் பெருமையோடு கூற முடியும்.
லெனின்எழுதியநூலிலிருந்தே“போல்ஷிவிக்குகளுக்கு விரோதமான கட்சிகளோடு தொடர்பு கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் உங்களுக்கு ஏற்பட்டால்,கல்ச்சாக் அல்லது தெனீக்கின்*ஆக்கிரமித்துள்ள பிரதேசங்களில் ருஷ்ய மொழியில் வெளியிடப்படுகிற தின சரிப் பத்திரிக்கைகள் உங்களுக்குக் கிடைத்தால் அல்லது இந்தப் பத்திரிக்கைகளில் எழுதப்படுகின்ற கருத்துக்களை ஏற்றுக் கொள்பவர்களோடு நீங்கள் பேசுமாறு நேர்ந்தால் சோவியத் ஆட்சி ஜன நாயகத்தை அழித்துவிட்டது என்ற குற்றச்சாட்டை அவர்கள் அடிக்கடி சொல்வதை நீங்கள் கேட்கலாம்.சோவியத் ஆட்சியின்,போல்ஷிவிக்குகள்,கம்யூனிஸ்டுகள் மற்றும் சோவியத் ஆட்சியின் ஆதரவாளர்களின் பிரதி நிதிகளாகிய நாங்கள் ஜனநாயகத்தை அழித்துவிட்டோம் என்று அடிக்கடி குற்றம் சாட்டுகிறார்கள்;சோவியத் ஆட்சி அரசியல் நிர்ணய சபையைக் கலைத்து விட்டதை அதற்கு ஆதாரமாகவும் காட்டுகிறார்கள்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு நாம் வழக்கமாகத் தருகின்ற பதில் இதுதான் :நம்முடைய நாட்டில் இன்னும் தனி உடைமை இருந்த பொழுது,மக்களுக்கிடையே சமத்துவம் இல்லாதிருந்த பொழுது,சொந்த மூலதனத்தை வைத்திருந்தவர் எஜமானராகவும் மற்றவர்கள் அவரிடம் வேலை செய்கின்ற கூலி அடிமைகளாகவும் இருந்த பொழுது ஏற்பட்ட ஜனநாயகமும் அரசியல் நிர்ணய சபையும் அந்த ஜனநாயகத்துக்கு நாம் எந்த மதிப்பும் கொடுக்கவில்லை.அத்தகைய ஜனநாயகம் மிகவும் அதிகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட அடிமைத்தனத்தை மறைவாக வைத்துக் கொண்டிருந்தது.ஜனநாயகம் உழைக்கின்ற,ஒடுக்கப்படும் மக்களின் நிலைமையில் அபிவிருத்தியை ஏற்படுத்துமானால் அந்த அளவுக்கு மட்டுமே சோஷலிஸ்டுகளாகிய நாம் அதை ஆதரிக்கின்றோம்.மனிதனை மனிதன் சுரண்டுவதைஅதன் ஒவ்வொரு வடிவத்தையும் எதிர்த்துப் போராடுவதை சோஷலிசம் உலக முழுவதிலும் தன்னுடையகடமையாகக் கொண்டிருக் கிறது.சுரண்டப்படுபவர்களுக்கு,உரிமைகள் மறுக்கப்பட்டவர்களுக்கு உதவுகின்ற ஜனநாயகத்துக்கே நாம் உண்மையான மதிப்பைத்தருகிறோம்.
உழைக்காமல் இருப்பவர்களுக்கு வாக்குரிமை ரத்துச் செய்யப்பட்டால் அது மக்களுக்கிடையே உண்மையான சமத்துவமாகும்.யார் உழைக்கவில்லையோ அவர்களுக்கு உணவு கிடையாது. இந்தக் குற்றச் சாட்டுகளுக்கு பதில் சொல்லும் பொழுது பிரச்சினையை இப்படிப் பாருங்கள் என்று நாம் சொல்கிறோம்: எல்லா நாடுகளிலும் ஜனநாயகம் எப்படி அமுல் நடத்தப் படுகிறது? எல்லா ஜனநாயகக் குடியரசுகளிலும் சமத்துவம் பிரகடனம் செய்யப்படுகிறது என்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் சிவில் சட்டங்களிலும் பெண்களின் உரிமைகளைப் பற்றிய சட்டங்களிலும் - குடும்பம், விவாகரத்து ஆகியவை பற்றிய சட்டங்களில் - ஒவ்வொரு கட்டத்திலும் பெண்கள் சமத்துவம் இல்லாமல் அவமதிக்கப்படுவதைப் பார்க்கிறோம். இது, குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்களைப் பொறுத்தவரை, ஜனநாயகத்தை மீறுவது என்று நாம் சொல்கிறோம். சோவியத் ஆட்சி வேறு எந்த ஆட்சியைக் காட்டிலும்,மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளைக் காட்டிலும் மிகவும் அதிகமான அளவுக்கு ஜனநாயகத்தை அமுல்படுத்தியிருக்கிறது; ஏனென்றால் பெண்களுக்குக் கீழ் நிலையைக் கொடுக்கும் சுவடுகள் கூட அதன் சட்டங்களில் விட்டுவைக்கப்பட வில்லை.சோவியத் அரசு ஏற்பட்ட முதல் மாதங்களில் பெண்களுக்காகச் செய்திருப்பதில் பாதியளவு கூட வேறு எந்த அரசும் வேறு எந்தச் சட்டமும் எந்தக் காலத்திலும் செய்ய வில்லை என்று நான் மறுபடியும்சொல்கிறேன்.சட்டங்கள் மட்டும் போதுமானவை அல்ல என்பது உண்மையே; வெறும் உத்தரவுகளைப் போடுவதோடு நாங்கள் ஒரு போதும் திருப்தியடைவதில்லை. எனினும் சட்டத் துறையைப் பொறுத்தவரையிலும்,பெண்களுக்கு சமத்துவ உரிமைகளைக் கொடுப்பதற்கு நாங்கள் செய்ய வேண்டிய ஒவ்வொன்றையும் செய்துவிட்டோம்.இதைப் பற்றிப் பெருமைப்படுவதற்கு நமக்கு எல்லா உரிமையுமுண்டு.மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளோடு ஒப்பிடுகின்ற பொழுது இன்று சோவியத் ருஷ்யாவில் பெண்களின் நிலை இலட்சிய வடிவத்தை அடைந்து விட்டது.எனினும் இது ஒரு ஆரம்பம் மட்டுமே என்று நாம் சொல்கிறோம்.வீட்டில் செய்கின்ற வேலையின் காரணமாகப் பெண்கள் இன்னும் கடினமான நிலையில்தான் இருக்கிறார்கள்.பெண்களுக்கு முழு விடுதலை கொடுத்து ஆண்களுக்குச் சமமாக அவர்களை ஆக்க வேண்டுமென்றால் தேசியப் பொருளாதாரம் சமூக மயமாக்கப்படுவதும் பொதுவான பயனுள்ள உழைப்பில் பெண்கள் ஈடுபடுவதும் அவசியம்.அப்பொழுதுதான் பெண்கள் ஆண்களுக்குச் சமமான நிலையைப் பெறுவார்கள். இப்படிச் சொல்லும் பொழுது உழைப்பின் உற்பத்தித் திறன்,உழைப்பின் அளவும்,நாளொன்றுக்கு வேலை செய்யும் நேரம்,உழைப்பு நிலைமைகள் இன்னும் இதரவற்றிலும் பெண்களை ஆண்களுக்குச் சமமான நிலையில் வைக்கப் போவதாக நாம் சொல்லவில்லை.குடும்பத்தில் பெண்களுக்கு இருக்கின்ற நிலைமை காரணமாக (இந்த நிலை ஆண்களுக்கு இல்லை),அவள் ஒடுக்கப்படக் கூடாது என்பதையே நாம் குறிப்பிடுகிறோம்.பெண்கள் முழுஉரிமைகளைக் கொண்டிருக்கும் பொழுது கூட அவர்கள் உண்மையில் இன்னும் அடக்கி வைக்கப்பட்டவர்களாகத் தான் இருக்கிறார்கள்.
ஏனென்றால் எல்லா வீட்டு சரிசெய்யும் வேலை அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.வீட்டுவேலை என்பது பெரும்பாலுமே மிகஅதிகமான அள வுக்குப் பயனற்றதாக,காட்டுத்தனமான தாக இருக்கிறது;ஒரு பெண் செய்யக் கூடிய வேலைகளிலேயே மிகவும் கடின மானதாக,மிக அதிகமான அளவுக்குச் சிறு தரமானதாக இருக்கிறது;ஒரு பெண்ணின் வளர்ச்சியை எவ்விதத்திலாவது ஊக்குவிக்கக்கூடிய ஒரு அம்சம் கூட அதில்இல்லை.
சோஷலிஸ்ட் இலட்சியத்தைப் பின்பற்றி சோஷலிசத் தைப் பரிபூரணமாக அமுலாக்குவதற்கு நாம் போராட விரும்புகிறோம்.இங்கே பெண்கள் உழைப்பதற்குரிய விரிவான துறை ஏற்படுகிறது.சோஷலிசத்தை நிர்மாணிப்பதற்காக தளத்தை சுத்தப்படுத்துகின்ற தீவிரமான தயாரிப்பு களில் இப்பொழுது நாம் ஈடுபட்டிருக் கின்றோம்,ஆனால் பெண்களுக்கு முழுமையான சமத்துவத்தைக் கொடுத்து சிறு தரமான,வீணான,பயனற்ற உழைப்பிலிருந்து விடுதலையடைந்த பெண்களோடு சேர்ந்து நாம் இந்தப் புதிய வேலையை எடுத்துக் கொண்டால் தான் சோஷலிச நிர்மாணம் ஆரம்பமாகும்.இந்த வேலையை முடிக்க நமக்குப் பலப் பல வருடங்கள் தேவைப்படும்.இந்த வேலையில் அதிவேகமான விளைவு களைப் பார்க்க முடியாது;பிரமிக்கத்தக்க விளைவும் ஏற்படாது.பெண்களைக் குடும்ப வேலைகளிலிருந்து விடுவிக்கக் கூடிய குழந்தை வளர்ப்பு நிலையங்கள்,உணவுச் சாலைகள்,முன் மாதிரியான அமைப்புகள் ஆகியவற்றை நாம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.இந்த ஸ்தாபனங்களை அமைக்கின்ற வேலையும் பிரதானமாக பெண்களுக்கே கொடுக்கப்படும்.
குடும்ப அடிமைத்தனம் என்ற நிலையிலிருந்து பெண்களை விடுவிக்கக் கூடிய ஸ்தாபனங்கள் இன்றைய ருஷ்யாவில் மிகச் சிலவே இருக்கின்றன என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். நீண்ட விவாதம்தான் தொடரும் …… சிபி.
+++++++++++++++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment