கம்யூனிஸ்டுகள் பிளவுபடுவதை தடுக்கவும்ஒன்றுபட்டு கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டுவதற்கான வழி என்ன?
கம்யூனிஸ்ட் குழுகள் பிளவுகள் உடைவுகள் ஏன்?
தோழர்களே.!
1. அப்பு, பாலன் போன்ற தியாகத் தோழர்களின் லட்சியத்தை அடைவதில் நாம் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளோம்? முன்னேறவில்லை, மாறாக பின்னடைந்துள்ளோம்.
2. உழைக்கும் மக்களுக்கு தலைமை தாங்கி அவர்களை வழிநடத்துவதற்கான தகுதியை நாம் எந்தளவுக்கு வளர்த்துள்ளோம்? உண்மையில் அதற்கான தகுதியை நாம் இழந்துள்ளோம்.
3. உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுங்கள் என்ற சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் முழகத்தைப் புரிந்துகொண்டு அதற்கு நாம் எந்தளவு விசுவாசமாக உள்ளோம். ஆனால் இதற்கு மாறாக நமது சொந்த சகோதரர்களாகிய கம்யூனிஸ்டுகளுக்கு இடையே ஒன்றுபடாமல் பல சிறு குழுக்களாகத்தானே பிளவுபட்டுள்ளோம்.
4. மார்க்சிய லெனினிய ஆசான்களான லெனின், ஸ்டாலின், மாவோ போன்றவர்களின் தலைமையில் மக்கள் நடத்திய போராட்டங்களின் வெற்றியடைந்த வரலாறு நமக்குத் தெரியுமா? அதேபோல் எம்.எல். கட்சித் தலைவர்களான தோழர்கள் அப்பு பாலன் போன்றவர்களின் தலைமையில் நடந்த மக்களின் போராட்டங்களில் கிடைத்த வெற்றிகளின் வரலாறு நமக்குத் தெரியுமா? வெற்றி பெற்ற போராட்டங்களின் அனுபவங்களிலிருந்து நாம் ஒன்றுபட்டு எதிரியை எதிர்த்துப் போராடினால் நமக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை நாம் வளர்த்துள்ளோமா? இல்லை நம்பிக்கை இழந்து சோர்வடைந்துள்ளோம்.
5. பிளவுபட்ட நாம் ஒன்றுபட வேண்டியது அவசியமே. அதற்கு மார்க்சிய லெனினியத்தை ஏற்றுக்கொண்டு அதில் உறுதியாக இருக்கும் கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட வேண்டும். இதற்கு மாறாக மார்க்சிய லெனினியத்தை ஏற்காத அடையாள அரசியல்வாதிகள் மற்றும் சீர்திருத்தவாதிகளோடும், மார்க்சிய ஆசான்களான ஸ்டாலின், மாவோ போன்ற கம்யூனிசத் தலைவர்களைப் பற்றி குறைசொல்லிக்கொண்டு ஏகாதிபத்தியங்களுக்கு குற்றேவேல் புரியும் எதிர்ப்புரட்சிகர டிராட்ஸ்கியவாதிகளுடன் கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட வேண்டுமா? கூடாது என்பதுதான் நமக்கு நம்முடைய ஆசான் லெனின் காட்டிய வழியாகும். ஆகவேதான் நாம் லெனினைப் பின்பற்ற வேண்டுமானால் நாம் லெனினை படிக்க வேண்டும் என்கிறோம்.
6. நாம் மார்க்சிய லெனினிய அறிவை வளர்த்துக் கொள்ளவில்லை என்றால் நமது அமைப்பிற்குள் மார்க்சியத்தை மறுக்கும் டிராட்ஸ்கியவாதிகள் ஊடுருவ முடியும், டிராட்ஸ்கியவாதிகள் போன்ற துரோகிகளும், அடையாள அரசியல்வாதிகளும் மக்களின் செல்வாக்கைப் பெற முடியும். இதுதான் சமீப காலங்களில் நமது நாட்டில் நடந்துள்ளது. இதற்கு டிராட்ஸ்கியவாதிகள் போன்றவர்களின் வலிமை காரணம் இல்லை. உண்மையில் அவர்களுக்கு எவ்விதமான வலிமையும் இல்லை. நம்மிடமுள்ள பலவீனத்தைத்தான் அவர்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே நாம் மார்க்சிய லெனினிய தத்துவ அரசியல் அறிவையும், சர்வதேச பொதுவுடமை இயக்க வரலாற்றில் நமது எதிரிகளைவீழ்த்தியதையும் கட்சிக்குள் இருந்த டிராட்ஸ்கி போன்ற துரோகிகளை
அம்பலப்படுத்தி விரட்டியடித்ததையும் நாம் புரிந்துகொண்டால் நம்மால் மக்களைத் திரட்டி எதிரிகளை வீழ்த்தவும் துரோகிகளை விரட்டியடிக்கவும் முடியும்.இவையே நமது தியாகிகளுக்கு நமது அஞ்சலியாகவும் ஒரு புரட்சிக்கான பங்களிப்பில் நமக்கான முன்னெடுப்பாக இருக்குமென்று இலக்கு இணைய இதழ் ஆசிரியர் குழுவின் ஆலோசனையாக முன்வைக்கிறோம்.
ஆகவே நாம் மார்க்சிய லெனினிய மாவோவின் படைப்புகளை படித்து நமது மார்க்சிய லெனினிய சிந்தனைமுறையை வளர்த்துக்கொள்ள வேண்டும். சர்வதேசத்தில் நடந்த புரட்சியிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக ரஷ்யாவிலும் சீனாவிலும் நடந்த புரட்சியிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். உதாரணமாக கட்சிக்குள் ஒரு தோழரை எவ்விதமான ஆதாரமும் இல்லாமல் சுய வெறுப்பின் காரணமாக அவர் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி தண்டிக்கக் கூடாது என்கிறார் சௌ என் லாய். ஆகவே சீனக் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள்ளும் சுய விருப்பு வெறுப்பின் அடிப்படையில் கம்யூனிஸ்டுகள் செயல்பட்டுள்ளார்கள். அது தவறானது என்று சீனக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்கள் உணர்ந்து அந்தத் தவறை சீனக் கம்யூனிஸ்டுகள் செய்யக்கூடாது என்று போதித்து வழிகாட்டியுள்ளார்கள். ஆனாலும் அவர்கள் அன்று செய்த தவறையே நாம் இன்று செய்கிறோம்.என்றால் என்ன பொருள்? மார்க்சிய ஆசான்களது போதனைகளை நாம் கற்கவில்லை, மேலும் அதனை பின்பற்றவில்லை என்பதுதானே அதன் பொருள். ஆகவே நாம் இன்று சந்திக்கும் பல பிரச்சனைகளை மார்க்சிய ஆசான்கள் சந்தித்துள்ளனர். அந்தப் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வுகளை கண்டு தீர்த்துள்ளனர். அந்த அனுபவங்களை நாம் புரிந்துகொண்டால் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை நம்மால் எளிதாக தீர்க்க முடியும்.
அந்த வகையில் நாம் தற்போது சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்சனைகளில் மிகவும் கடுமையானது என்ன? நாம் பிளவுபட்டுக்கொண்டே இருக்கிறோம். இந்தப் பிளவுகளை முறியடிக்க வேண்டும். அடுத்ததாக நாம் ஒன்றுபட வேண்டும். இந்த ஒற்றுமையை நாம் எப்படி சாதிப்பது? இந்த கேள்விகளுக்கு நாம் விடைகாண வேண்டும். இதற்கான விடையை ஒவ்வொருவரும் தன்மனப்போக்கில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவ்வாறு தன்மனப்போக்கில் சிந்தித்து முடிவெடுப்பதால் எவ்விதமான பயனும் இல்லை. மாறாக இதுபோன்ற பிரச்சனைகளை மார்க்சிய ஆசான்கள் எவ்வாறு தீர்த்தார்கள்? என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் நாம் சிந்தித்து விவாதித்து முடிவெடுத்தால் நாம் சந்திக்கும் இந்தப் பிரச்சனையை தீர்க்க முடியும் என்று இலக்கு ஆசிரியர் குழு கருதுகிறது. ஆகவே இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்கு மார்க்சிய ஆசான்கள் காட்டியுள்ள வழிமுறைகளை நாம் தேடி கண்டுபிடித்து அதன் அடிப்படையில் சிந்தித்து விவாதித்து முடிவிற்கு வரவேண்டும். அதுதான் சரியானது என்று நாங்கள் கருதுகிறோம்.
கம்யூனிஸ்டுகள் பிளவுபடுவதற்கு முதன்மையான காரணம் குறுங்குழுவாதம் என்று நாங்கள் கருதுகிறோம்.
குறுங்குழுவாதம் பற்றி சீனக் கம்யூனிஸ்டுத் தலைவர்கள் பலவாறு போதித்துள்ளனர். அந்த போதனைகளை படித்துத்தான் நாங்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளோம்.
கம்யூனிச குழுக்களில் நடந்த பிளவுகளின் வரலாற்றிலிருந்தும் நாங்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளோம். ஆகவேபிளவுக்கான காரணத்தை சான்றுகளிலிருந்தும் மார்க்சிய ஆசான்களது போதனைகளிலிருந்தும் தான் நாம் தேட வேண்டும். நம்மிடத்திலுள்ளகுறைகளும் தவறுகளும்தான் இதற்குக் காரணமாகும். நம்மிடம் எத்தகையகுறைகள் இதற்கு காரணமாக இருக்கிறது என்பதை ஆய்வு செய்து பட்டியலிட வேண்டும். அந்தக் குறைகளை நாம் களைவதன் மூலமே நாம் பிளவுகளை தவிர்க்க முடியும். இவ்வாறு நாம் சொல்லுவதால் நமது குறைகளை எல்லாம் களைந்து முடிந்தவுடன்தான் பிளவுகளை தவிர்க்க முடியும் என்று சொல்வதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. நமது தவறுகளை முதலில் புரிந்துகொள்ள வேண்டும் அதன் பிறகு அதனை களைவதற்கான இயக்கத்தை நடத்திட வேண்டும். தவறுகளை களைய வேண்டுவதற்கான இயக்கம் இல்லாமல் பிளவுகளை தவிர்க்க முடியாது என்பதே இதன் பொருளாகும். கம்யூனிஸ்டுகளை ஒன்றுபடுத்தியவர் லெனின்.
அவரது அனுபவத்தையும், வழிகாட்டுதல்களையும் நாம் எடுத்துக்கொண்டு செயல்படுவதன் மூலமே நாம் ஒன்றுபட முடியும். இதற்கு மாறாக தன்மனப்போக்கில் நாம் ஒன்றுபட நினைத்தால் அந்த ஒற்றுமை நிலைக்காது அல்லது நாம் ஒன்றுபட்டு மார்க்சியத்துக்கு எதிரான மக்களின் எதிரியாகவும் மாறுவதற்கு வாய்ப்புள்ளது. இதற்கு நமக்கு லெனின் வகுத்து கொடுத்த கோட்பாடு நாம் ஒன்றுபடுவதற்கு முன்பு நாம் ஒரு எல்லைக் கோட்டை வகுத்துக்கொள்ள வேண்டும் என்பதாகும். ஆகவே கம்யூனிஸ்டுகள் ஒன்றுபடுவதற்கு முன்பு எல்லைக் கோட்டை வகுத்துக்கொள்ள வேண்டும். அந்த எல்லைக்கோடு என்ன? என்பதை இன்றைய சூழலிருந்து நாம் சிந்தித்து விவாதித்து முடிவு செய்ய வேண்டும் என்று இலக்கு ஆசிரியர் குழு கருதுகிறது.
குறுங்குழுவாதம் எப்படி ஒரு கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துகிறது என்பதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் பார்க்கலாம்.
ஒரு அமைப்பிற்குள் தோழர்கள் ஒற்றுமையாக இருந்து, அமைப்பிற்குள் அரசியல் முரண்பாடுகள் தீவிரமடையாத சூழலிலும், சுயநலவாத குறுங்குழுவாதிகள் (தலைவர்கள்) அவர்களுக்கு தேவையான பதவிக்காகவும் செல்வாக்குக்காகவும், அமைப்பிற்குள் தனக்கானவர் களைக் கொண்ட கோஷ்டியை உருவாக்குவார்கள், அவர்கள் மூலம் அமைப்பை உடைத்து ஒற்றுமையை சீர்குழைப்பார்கள். ஆகவே அமைப்பிற்குள் இருக்கின்ற குறுங்குழுவாத சிந்தனைமுறையை எதிர்த்துப் போராடி முறியடிக்காமல் அமைப்புகள் பிளவுபடுவதை நம்மால் தடுக்க முடியாது, கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைமை என்பது தனிநபரின் தலைமை அல்ல. மாறாக கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களில்பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கைதான் கம்யூனிஸ்டுக் கட்சிக்கு தலைமை. அதாவது தனிநபர் தலைமை அல்ல மாறாக சித்தாந்தத் தலைமைதான் கம்யூனிச அமைப்பின் தலைமையாகும். மாபெரும் சிந்தனையாளரான தோழர் லெனினது கொள்கை கோட்பாட்டைத்தான் கம்யூனிஸ்டுகள் ஏற்றுக்கொண்டு செயல்பட்டார்கள். இதற்கு மாறாக லெனினை புகழ்பாடுவது கம்யூனிஸ்டுகளின் நோக்கம் அல்ல. லெனினும் தனக்கு புகழ் வேண்டும் என்றும் தன்னை பலரும் புகழ வேண்டும் என்று விரும்பியவர் அல்ல. ஆனால் இங்குள்ள குறுங்குழுவாதத் தலைவர்கள் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் புகழ் வேண்டும் என்று விரும்புகிறார்கள். தன்னைப் பற்றி மிகையாக மதிப்பிடுகிறார்கள். அவர்கள் சொல்லும் கருத்தைத்தான் அமைப்பிலுள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களது கருத்திற்கு மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை அமைப்பிற்குள்ளேயே இருந்தாலும் அவர்களை எதிரிகளாகவே கருதுகிறார்கள். அவர்களை தோழர்களாக கருதி அவர்களது கருத்துக்களையும் பரிசீலித்து விவாதிப்பது இல்லை. அதற்கு மாறாக தனக்குப் பிடிக்காதவர்களை எதிர்த்து ஒரு கோஷ்டியை உருவாக்கி தோழர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை வைத்து, கட்சித் தோழர்கள் மத்தியியில் குறிப்பிட்ட தோழரின் மீது வெறுப்பை ஏற்படுத்துகிறார்கள். அதன் மூலம் தனக்கு பிடிக்காதவர்களை கட்சியிலிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் விரட்டியடிக்கிறார்கள். அதன் விளைவாக அமைப்பு பிளவுபடுகிறது. இந்த முறையில்தான் குழுக்கள் பிளவுபட்டது.
கம்யூனிஸ்டுக் கட்சியின் திட்டம் மற்றும் கொள்கைகளை உழைக்கும் மக்களிடம் விவாதிக்க வேண்டும் என்று மார்க்சிய ஆசான்கள் போதித்தார்கள். கட்சியின் கொள்கைகளை செயல்படுத்துபவர்கள் கட்சி உறுப்பினர்களும் மக்களுமே ஆவார்கள். ஆகவே கொள்கையை செயல்படுத்தும் இவர்களுக்கு கொள்கை புரியவில்லை என்றால் இவர்களால் அந்த கொள்கையை எப்படி செயல்படுத்த முடியும்?, மேலும் செயல்படுத்தும்போது ஏற்படும் சிக்கல்களை அவர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்? இதனை நன்கு உணர்ந்த மார்க்சிய ஆசான்கள் கட்சியின் கொள்கையை மக்களிடம் விவாதிக்க வேண்டும் என்றும் மக்கள் கேட்க்கும்கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்றும் சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என்று மார்க்சிய ஆசான்கள் நமக்குப் போதித்துள்ளனர். இந்த போதனையை குறுங்குழுவாதிகள் புரிந்து கொண்டு பின்பற்றவில்லை.
இங்கே குறுங்குழுவாதத் தலைவர்கள் அவர்களுக்குள் ஒரு கோஷ்டியை அமைத்துக்கொண்டு அந்த கோஷ்டிக்குள் விவாதித்து கொள்கை முடிவெடுத்து, அந்தக் கொள்கையை கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு செம்மறி ஆட்டுக் கூட்டம் போல் ஏற்றுக்கொண்டு செயல்பட வைக்கிறார்கள், மேலும் கட்சி உறுப்பினர்கள் தன்னை புகழ்ந்து புகழ்பாட வைக்கிறார்கள். அவ்வாறு கட்சி உறுப்பினர்கள் செம்மறி ஆடாக இருக்க வேண்டுமானால் கட்சி உறுப்பினர்கள் பொதுவான மார்க்சிய லெனினிய அறிவை பெற்றிருக்கக்கூடாது. எனவே கம்யூனிஸ்டு அமைப்பின் உறுப்பினர்களுக்கு பொதுவான மார்க்சிய லெனினிய தத்துவ அரசியல் அறிவை போதிப்பதில்லை. மேலும் அத்தகைய போதனை அவசியம் இல்லை என்கிறார்கள். கட்சி உறுப்பினர்களுக்கு பொதுவான மார்க்சிய லெனினிய அறிவு உள்ளதாக பொய் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். குறுங்குழுவாதிகளை தலைவர்களாகக் கொண்ட கம்யூனிச அமைப்பில், இந்த தலைவர்கள் சொல்வதுதான் வேதவாக்கு. இவர்கள் கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதமான தலைவர்களாக கட்சி உறுப்பினர்கள் கருதுகிறார்கள். இதன் அடிப்படையில்தான் கட்சி உறுப்பினர்கள் வளர்க்கப்படுகிறார்கள். இந்தத் தலைவர்கள் கெட்டது மட்டுமல்லாமல் கட்சி உறுப்பினர்களையும் சுயசிந்தனையற்ற மூடர்களாக மாற்றப்படுகிறார்கள்.
இந்தச் சூழலை பயன்படுத்தித்தான் தனக்குப் பிடிக்காதவர்களையும் தன்னை எதிர்த்து கேள்வி கேட்பவர்களையும் தலைமை வழிபாடுகொண்ட உறுப்பினர்களின் துணையோடு கட்சியை விட்டு வெளியேற்றி கட்சியை பிளவுபடுத்துகிறார்கள். ஆகவே கட்சி உறுப்பினர்கள் மார்க்சிய லெனினிய அறிவை வளர்த்துக்கொள்ளவில்லை என்றால் அவர்கள் எப்போதும் சுயசிந்தனையில்லாத முறையில் தலைவர்களை சார்ந்தே இருக்க நேரிடும். கட்சியானது தலைவரை சார்ந்தே இயங்க வேண்டிய நிலை ஏற்படும். தலைவர் தவறான கொள்கையாளராக இருந்தால் கட்சியும் தவறான வழியிலேயே பயணிக்கும். அதனை எதிர்த்துப் போராடுபவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள். அதன் விளைவாக கட்சியானது பிளவுபடும். இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்கு மார்க்சிய ஆசான்கள் வழிகாட்டியுள்ளார்கள். அதாவது ஒவ்வொரு கம்யூனிஸ்டும் மார்க்சிய லெனினிய சிந்தனைமுறையை வளர்த்துக்கொள்ள வேண்டும். மேலும்
கட்சியின் கொள்கைகளை கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்களிடம் விவாதிக்க வேண்டும்.
குறுங்குழுவாதத் தலைவர்கள் கட்சி உறுப்பினர்களை தலைமை வழிபாட்டாளர்களாகவும், சுயசிந்தனை அற்றவர்களாகவும், கட்சித் தலைமையின் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டவர் களாகவுமே வளர்க்கிறார்கள். அதன் மூலம் மட்டுமே தனது தலைமைப் பதவியை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று கருதுகிறார்கள். இந்த தலைவர்கள் கம்யூனிச அமைப்பின் தலைமையை தனிநபர் தலைமையாகவே கருதுகிறார்கள். ஆனால் இவர்கள் வெளியே பேசும்போது சித்தாந்தத் தலைமை என்று பேசி அணிகளை ஏமாற்றுவார்கள். இவர்களின் தவறுகளை யாராவது சுட்டிக் காட்டிவிட்டால் அவர்களை ஓரம்கட்டி விரட்டியடிப்பார்கள். இவர்களது இந்த செயலை தலையாட்டி பொம்மைகளான கட்சி உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்வார்கள். இதன் விளைவாக கட்சியானது பிளவுபடும். இவ்வாறுதான் கம்யூனிச அமைப்புகள்பிளவுபட்டது. இவ்வாறுதான் இத்தகைய சுயநலவாதத் தலைவர்களால் புரட்சிகரமான கொள்கைகள் கைவிடப்பட்டு முதலாளிகளோடு சமரசம் செய்துகொள்ளும் திருத்தல்வாதக் கொள்கைகளை கம்யூனிச அமைப்புக்குள் கொண்டுவந்து கம்யூனிஸ்டுக் கட்சியானது திருத்தல்வாதக் கட்சியாகமாற்றப்பட்டது.
இன்னும் முழுமையாக நூலில் உள்ளன அதனுல் சென்று வாசிக்க தோழர்களே....
No comments:
Post a Comment