தோழர் லெனின் என்ன செய்ய வேண்டும் நூலில் சில முக்கிய பகுதிகளை காண்போம்.. நமது மார்க்சிய பார்வையை விசாலமாக்கி கொள்ள பயன்படும் என்று நினைக்கிறேன்.
மார்க்சிய சித்தாந்தத்தை ரசிய நிலைமைகளுக்கு ஏற்றவாறு பருண்மையாகப் பிரயோகித்து புரட்சியை சாதித்தது மட்டுமல்லாது, ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை இயங்கியல்பூர்வமாக அன்றைய நிலைமைகளையொட்டி வரையறுத்தவர் தோழர் லெனின்.
அவரது காலத்தில் ரசிய சமூக ஜனநாயகக் கட்சிகள் கொண்டிருந்த தொழிலாளி வர்க்கக் கட்சி குறித்தப் பார்வையை விமர்சனப் பூர்வமாக அணுகி புரட்சியை சாதிப்பதற்கு ஏற்ற ஒரு கட்சியையும் அதற்கான கோட்பாடுகளையும் வகுத்தார்.
முதல் அத்தியாயம். 1) வறட்டுச் சூத்திரவாதமும் “விமர்சன சுதந்திரமும்”.
மார்க்சியத்தை, விமர்சன வழியில் அணுக வேண்டும் என்று சொல்கிற இவர்களின் கோரிக்க என்ன வென்றால்? காலம் மாறிப் போச்சு, அதனால், கம்யூனிச கட்சி, புரட்சிரகமானதாக இருப்பதை விடுத்து, சமூகச் சீர்திருத்தங்களுக்கான கட்சியாக மாற வேண்டும். இது தான் இந்தப் புதிய போக்கினரின் அடிப்படை நோக்கம்.
இங்குள்ள போக்கை இதனுடன் புரிந்துக் கொள்ளுங்கள்.
புரட்சிகரமான கம்யூனிசக் கோட்பாடுகளை விடுத்து, முதலாளி வர்க்க சார்பான, சமூகச் சீர்திருத்தவாதத்தைக் கொண்டுவருதல்.
முதலாளித்துவ வர்க்கம் பல காலமாக மார்க்சியத்தின் மீது வைத்த குற்றச்சாட்டுகளை, இந்தப் போக்கினர், கம்யூனிசத்தின் பேரால் “விமர்சன சுதந்திரம்” வேண்டும் என்ற போர்வையில் வைக்கின்றனர். அவ்வளவு தான்.
புரட்சியைக்கைவிட்டு சீர்திருத்தத்துக்கு மாறுகிற,ஜனநாயகக் கட்சியாக மாற்றுவதற்கான சுதந்திரம்,கம்யூனிசத்தில் முதலாளித்துவக் கருத்துக்களையும்,முதலாளி வர்க்கப் போக்குள்ளவர்களையும் புகுத்துவதற்கான சுதந்திரம்.
இந்தப் போக்கை லெனின் புதிய வகைச் சந்தர்ப்பவாதம் என்கிறார்.
இந்தச் சந்தர்ப்பவாதிகளின் இறுதி நோக்கம் என்னவென்றால், கம்யூனிசத்தில் உள்ள புரட்சிகரத் தன்மையை நீக்கி சீர்திருத்த பாதைக்கு அழைத்துச் செல்வதே ஆகும். சீர்திருத்தத்தால் புரட்சிகரச் சமூக மாற்றத்தை சாதிக்க முடியாது. என்பது தான் நிதர்சனமான உண்மை.
புரட்சிகரமான கோட்பாடு இல்லாமல் புரட்சிகரமான இயக்கம் இருக்க முடியாது.
புரட்சிகரமான இயக்கம் இல்லாமல் புரட்சிகரமாக, சமூக மாற்றத்தை சாதிக்க முடியாது. அதனால் சீர்திருத்த போக்கை கடுமையாக விமர்சிக்க வேண்டும்.
கம்யூனிசத்தின் புரட்சிகரத் தன்மையைக் கைவிட்ட இந்தப் பழைய மார்க்சியவாதிகளின், திருத்தல் போக்கை அம்பலப்படுத்த வேண்டும்.
2) “மக்களின் தன்னியல்பும் சமூக-ஜனநாயகவாதிகளின் உணர்வும்.”
“தற்கால இயக்கத்தின் பலம் மக்களின் (முதன்மையாக, தொழில் துறைப் பாட்டாளி வர்க்கத்தின்) விழிப்புணர்வில் அடங்கியிருக்கிறது, அதன் பலவீனம் புரட்சிகரமான தலைவர்களின் உணர்வு இன்மையிலும் முன்முயற்சி இன்மையிலும் அடங்கியுள்ளது, இதை யாரும் இதுவரை சந்தேகித்ததில்லை”
தொழிலாளர்கள்,நேரடியாகப் பிரச்சினைகளைச் சந்திப்பதனால் அவர்கள் அதனை உணர்ந்து, உடனடியாக எதிர்பை தெரிவிக்கின்றனர்.நிச்சயமாக அது தன்னியல்பான போராட்டம் தான் இருக்கும்.தன்னியல்பான போராட்டத்தை வர்க்கப் போராட்டமாக மாற்றுவது கம்யூனிஸ்ட் கட்சியின் பணி.இந்தப் பணி தான் பலவீனமாக இருப்பதாக,லெனின் அன்றைய ருஷ்ய நிலைமையை முன்வைத்துக் கூறியுள்ளார்.
கூலிக்கான போராட்டத்தைக் கூலி உயர்வுக்கானப் போராட்டமாக மாற்ற வேண்டும் என்கிற உணர்வு கண்டிப்பாகத் தன்னியல்பில் கிடையாது.இதற்கு,மார்க்சியப் புரிதல் அவசியமாகிறது.
இந்தத் தன்னியல்பான போராட்டத்தின் எல்லைகளை,தொழிலாளர்களுக்குப் புரியவைத்து,கூலி உயர்வுக்காணப் போராட்டத்தை,கூலி முறை ஒழிப்பதற்கான போராட்டமாக உயர்த்த வேண்டும் என்பதை விளக்க வேண்டும்.
தொழிற்சங்கப் போராட்டமே தன்னியல்பான போராட்டம் தான். இதனைக் கடந்து கம்யூனிச உணர்வுபெற வேண்டும்.இதற்குத் தன்னியல்பை வழிபடுகிற போக்குத் தடையாக இருக்கிறது.
பொருளாதாரப் போராட்டத்துடன் தொழிற்சங்கத்தை முடக்குவது,தன்னியல்பை வழிபடுவதாகும்.
பொருளாதாரப் போராட்டங்கள் தொழிலாளர்களின் முழுமையான விடுதலைக்கு உதவிடாது,அதனால், பொருளாதாரப் போராட்டத்தை, வர்க்கப் போராட்டமாக, முதலாளிதுவத்தைத் தூக்கி எறிவதற்கான போராட்டமாக மாற்ற வேண்டும்.
இன்று நமது நாட்டில்,தொழிலாளர்களிடம் செயற்படுகிற கம்யூனிஸ்டுகள் இந்தத் தொழிற்சங்கப் போராட்டத்தைக் கடந்து வர்க்கப் போராட்டத்திற்கு வழிகாட்டுகிறார்களா? என்பது கேள்வக்குறியாகவே இருக்கிறது .
கம்யூனிஸ்டுகளின் பணி தன்னியல்பை எதிர்த்துப் போராடுவதேயாகும். முதலாளி வர்க்கத்தின் அரவணைப்பின் கீழ் செல்லும் இந்தத் தன்னியல்பான, தொழிற்சங்கவாத முயற்சியில் இருந்து தொழிலாளி வர்க்க இயக்கத்தைத் திசைமாற்றி, புரட்சிகரமான கம்யூனிசத்தின் அரவணைப்பின் கீழ் கொண்டுவருவதேயாகும்.
3.“தொழிற்சங்கவாத அரசியலும் சமூக-ஜனநாயக அரசியலும்.”
பொருளாதாரவாதிகள்,அதாவது பொருளாதாரப் போராட்டத்துடன் தொழிற்சங்கப் போராட்டத்தை நிறுத்திக் கொள்பவர்கள், அரசியலை முழுதாக நிராகரிப்பது இல்லை. அவர்கள் கம்யூனிச அரசியலில் இருந்து தான் விலகுகிறார்கள்.
தொழிற்சங்கப் போராட்டம் ஒரு வகை அரசியல் போராட்டம் தான். ஆனால் அது கம்யூனிஸ்டுகளின் அரசியல் என்று கூறிவிடமுடியாது.
“கம்யூனிஸ்டுகள் பொருளாதாரப் போராட்டத்தை நடத்துவதோடு நின்றுவிடக் கூடாது என்பது மட்டுமல்ல,பொருளாதார அம்பலப்படுத்தல்களை முறையாகத் திரட்டிச் செய்வதை,அவர்களின் நடவடிக்கையின் மிக மேலோங்கிய பகுதியாகிவிட அனுமதிக்கக் கூடாது. நாம் தொழிலாளி வர்க்கத்திற்கு அரசியல் கல்வி அளிப்பதையும், அவ் வர்க்கத்தின் அரசியல் உணர்வை வளர்ப்பதையும் தீவிரமாகச் செய்ய வேண்டும்”
இந்தக் கருத்தைத்தான் லெனின் இந்த நூல் முழுதும் விளக்குகிறார்.
பொருளாதாரப் போராட்டமே போதுமானப் போராட்டம் அல்ல. அது முதலாளித்துவ உற்பத்தி முறையைத் தூக்கி எறிவதற்கான முழுமையான வர்க்கப் போராட்டமாக வளர்க்க வேண்டும், என்பதைத் தான் லெனின் வலியுறுத்துகிறார்.
அரசியல் கிளர்ச்சியைப் பொருளாவாதிகள் மட்டுப்படுத்துகின்றனர். இந்தப் பொருளாதாரப் போராட்டத்தோடு நிற்கிற அரசிலை, கம்யூனிச அரசியலாக வளர்த்து எடுக்க வேண்டும். லெனின் தெளிவாக ஒன்றைக் கூறுகிறார், அதை நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அரசாங்கத்திற்கு எதிரான பொருளாதாரப் போராட்டம் என்பது தொழிற்சங்கவாத அரசியலாகும், இதற்கும் கம்யூனிச அரசியலுக்கும் எவ்வளவோ தூரம் இருக்கிறது.
கம்யூனிச “திறமை” பெறுவதற்கு லெனின் வழிகாட்டுகிறார். அதைப் பார்ப்போம்.
சிறந்த கம்யூனிஸ்ட் ஆவதற்கு, நிலப்பிரபு, புரோகிதன், உயர்நிலை அரசாங்க அதிகாரி, விவசாயி, மாணவன், நாடோடி, ஆகியோர்களின் பொருளாதார இயல்பு பற்றியும், தம் மனத்தில் ஒரு தெளிவான சித்திரத்தை தொழிலாளிகள் பெற வேண்டும்.
இந்த “தெளிவான சித்திரத்தை” எந்தப் புத்தகங்களில் இருந்து பெற முடியாது என்று லெனின் கூறுகிறார். சுற்றி நடைபெறுவதைக் காண வேண்டும், இன்னின்ன நிகழ்ச்சிகள், இன்னின்ன புள்ளி விவரங்கள், இன்னின்ன நீதி மன்ற தீர்ப்புகள் ஆகியவற்றை, நெருங்கி சென்று பார்க்க வேண்டும்.
அப்போது தான், தொழிலாளி, தம்மை ஒடுக்குகின்ற அதே தீய சக்திகள் தாம் மற்றவர்களையும் ஒடுக்குகிறது என்று அறிவார். அப்படி அறியும் போது தான், ஆதிக்க சக்தியை ஒழிப்பதற்குப் போராட வேண்டும் என்கிற, அடக்க முடியாத ஆர்வம் தொழிலாளர்களிடம் ஏற்படும் என்று லெனின் கூறுகிறார்.
கம்யூனிஸ்ட் ஆவது கடினமான பணியே. ஒரு கம்யூனிஸ்ட் பலவற்றை அலசி ஆராய வேண்டி இருக்கிறது. இந்தப் பொருளாதாரவாதிகள், அதாவது தொழிற் சங்கவாதிகள் வெற்றி பெற்றதற்குக் காரணம் என்னவென்று பார்த்தால், அது தொழிலாளர்களின் உணர்களுக்குத் தக்கபடி தங்களைச் சரிசெய்து கொண்டது தான். அதாவது தொழிலாளர்களின் சிந்தனைக்குத் தக்கபடி, தங்களைத் தாழ்த்திக் கொண்டது தான்.
இத்தகைய போக்கு, தொழிலாளியை. ஒரு கம்யூனிச சிந்தனை உள்ளவராக மாற்றுகிற முயற்சியைத் தடுத்துவிடுகிறது. ஆனால், புரட்சிகரக் கம்யூனிஸ்ட், தொட்டறியத் தக்க பலன்களை மட்டும் கோருகிற கோரிக்கைகளை, சீற்றத்துடன் நிராகரிப்பான். பகுதிக்கான பிரச்சினை. முழுமையில் இருந்தே வந்தது என்பதைக் கம்யூனிஸ்ட் அறிந்துளான். அதனால், பகுதிக்கான போராட்டத்தை முழுமைக்கான போராட்டமாக மாற்றுவான்.
இத்தகைய அறிவுபெற்ற கம்யூனிஸ்டுகளையே தொழிலாளர்கள் விரும்புவர்கள். அவ்வாறு விரும்பினால் தான் அவர்களுக்கு முழுமையான விடுதலை கிடைக்கும்.
தங்களது உடனடிப் பிரச்சினைகளுக்குத் தொழிலாளர்கள், வேலை நிறுத்தம் போன்ற போராட்டத்தின் மூலம் தீர்த்துக் கொள்வர். இதனை அவர்களின் அனுபவத்தில் இருந்தே கற்றுள்ளனர். அவர்கள் கற்க வேண்டியது சோஷலிசம் தான். அதனைத் தான் தொழிலாளர்கள் கம்யூனிஸ்டுகளிடம் எதிர் பார்க்கின்றனர்.
பொருளாதாரவாதிகளான கம்யூனிஸ்டுகளைப் பார்த்து, அதாவது தொழிற்சங்கவாதத்தில் அகப்பட்டுள்ள, கம்யூனிஸ்டுகளைப் பார்த்துத் தொழிலாளர்கள் கூறுவதை, லெனின் படிம்பிடித்துக் காட்டியுள்ளார்.
லெனின்:- “தொட்டறியத்தக்க விளைவுகளை அளிக்கக்கூடியதாயுள்ள ஸ்தூலமான கோரிக்கைகளை முன்வைப்பதின் மூலம் தொழிலாளிகளாகிய எங்களிடையே நீங்கள் தூண்டிவிட விரும்பும் “நடவடிக்கையை'' நாங்கள் ஏற்கெனவே செயலில்காட்டி வருகிறோம்; மிக அடிக்கடி அறிவுஜீவிகளின் எந்த உதவியும் இல்லாமலே எங்களுடைய அன்றாட, வரம்புக்குறுக்கமுள்ள தொழிற்சங்க வேலையில் இந்த ஸ்தூலமான கோரிக்கைகளை முன்வைக்கிறோம். ஆனால், இப்படிப்பட்ட நடவடிக்கை எங்களுக்குப் போதாது, ''பொருளாதார வகைப்பட்ட” அரசியல் எனும் நீர்த்துப்போன கஞ்சி மட்டும் ஊட்டப்பெறுவதற்கு நாங்கள் குழந்தைகள் அல்ல; மற்றவர்கள் தெரிந்து கொண்டுள்ள அனைத்தும் நாங்கள் அறிய விரும்புகிறோம்;
அரசியல் வாழ்க்கையின் எல்லா அம்சங்களின் விபரங்களையும் நாங்கள் அறிய விரும்புகிறோம், ஒவ்வொரு அரசியல் நிகழ்ச்சியிலும் தீவிரமாகக் கலந்து கொள்ள விரும்புகிறோம். இதை நாங்கள் செய்வதற்கு, அறிவுஜீவிகள் எங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருப்பதைப் பற்றிப் பேசுவதைக் குறைத்துக்கொண்டு எங்களுக்கு இன்னமும் தெரியாமலே இருக்கும் - எங்கள் தொழிற்சாலை அனுபவத்திலிருந்தோ, ''பொருளாதார வகைப்பட்ட" அனுபவத்திலிருந்தோ நாங்கள் என்றைக்கும் தெரிந்து கொள்ளமுடியாததாக இருக்கும் - விஷயத்தைப்பற்றி, அதாவது அரசியல் அறிவு பற்றி எங்களிடம் அதிகமாகப் பேசவேண்டும்.
அறிவுஜீவிகளாகிய நீங்கள் இவ்வறிவைப் பெறமுடியும்; இதுவரை செய்ததை விட நூறு மடங்காக, ஆயிரம் மடங்காக அவ்வறிவை எங்களிடம் கொணர்வது உங்கள் கடமையாகும்; விவாதங்கள், குறு நூல்கள், கட்டுரைகள் (அவை மிக அடிக்கடி சலிப்பூட்டுவதாயுள்ளன, உடைத்துச் சொன்னதற்கு மன்னித்து விடுங்கள்) வடிவத்தில் அதை எங்களுக்குக் கொணர்வது மட்டுமின்றி நமது அரசாங்கமும் நமது ஆளும் வர்க்கங்களும் இந்த வினாடியில் எல்லா வாழ்க்கைத் துறைகளிலும் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பது பற்றிய எடுப்பான அம்பலப்படுத்தல்கள் வடிவத்திலே தான் கொண்டுவரவேண்டும்.
இக்கடமையைச் செய்வதில் மேலும் ஆர்வம் காட்டுங்கள், “உழைக்கும் மக்களின் நடவடிக்கையைத் தட்டியெழுப்புவது" பற்றிய பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நினைக்கிறதை விட எவ்வளவோ துடிப்புடன் செயலாற்றி வருகிறோம், “தொட்டறியத்தக்க பலன்கள்" எதையும் அளிக்கிறதாயில்லாத கோரிக்கைகளையுங்கூடப் பகிரங்கமான தெருப்போர் மூலமாக நாங்கள் ஆதரிக்க முடியும்!
எங்கள் நடவடிக்கையைத் “தட்டியெழுப்பும்” தகுதி உங்களுக்கு இல்லை. ஏனெனில், நடவடிக்கை எனும் விஷயந்தான் உங்களிடம் பூஜ்ஜியமாயிருக்கிறது.
கனவான்களே, தன்னியல்புக்கு அடி பணிவதைக் குறைத்துக் கொள்ளுங்கள், உங்கள் சொந்த நடவடிக்கையைத் தட்டியெழுப்புவது பற்றி மேலும் சிந்தியுங்கள்!”
தொழிலாளர்களுக் வேண்டியது என்னவென்பதை லெனின் தொகுத்துத் தந்துள்ளார். மேலே லெனின் கூறியதை சுருக்கமாகப் பார்ப்போம்.
தொட்டறியத்தக்க பலன்களை, பெறுவதற்கான கோரிக்கைகளை, முன்வைப்பதற்கு எங்களுக்குத் தெரியும்.
அதை நாங்கள் ஏற்கெனவே செயலில் காட்டி வருகிறோம். இதற்குக் கம்யூனிஸ்ட் என்கிற அறிவாளிகள் தேவைப்படவில்லை.
இப்படிப்பட்ட நடவடிக்கை எங்களுக்குப் போதாது, பொருளாதாரப் போராட்ட அரசியல் என்கிற, நீர்த்துப்போன கஞ்சி மட்டும் ஊட்டம் பெறுவதற்கு நாங்கள் குழந்தைகள் அல்ல,
அறிவாளிகள் தெரிந்து கொண்டுள்ள அனைத்தையும் நாங்கள் அறிய வேண்டும். இதையே நாங்கள் விரும்புகிறோம்.
அதனால் கம்யூனிஸ்ட் என்கிற அறிவாளிகள் ஏற்கெனவே நாங்கள் தெரிந்து வைத்திருப்பதைப் பற்றிப் பேசுவதைக் குறைத்துக் கொண்டு, எங்களுக்கு இன்னமும் தெரியாமல் இருக்கும், எங்கள் தொழிற்சாலை அனுபவத்தில் இருந்தும், பொருளாதாரப் போராட்டத்தில் இருந்தும் என்றைக்கும் கற்றுக் கொள்ள முடியாத, கம்யூனிச அரசியலை அதிகமாகப் பேச வேண்டும்.
கம்யூனிஸ்ட்டான, நீங்கள் இவ்வறிவை பெற முடியும், இதுவரை செய்ததைக் காட்டிலும், நூறு மடங்காக, ஆயிரம் மடங்காகக் கம்யூனிச அறிவை எங்களிடம் கொண்டுவர வேண்டியது உங்களது கடமை.
இக்கடமையைச் செய்வதில் மேலும் ஆர்வம் காட்டுங்கள், உழைக்கும் மக்களின் நடவடிக்கைகளை உயர்த்துவது என்கிற பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நினைக்கிறதைவிட நாங்கள் சிறப்பாக, தொழிற் சங்கத்தில் செயலாற்றி வருகிறோம்.
தொட்டறியத்தக்க பலன்களைக் கடந்து, தொழிலாளர்களது நடவடிக்கையை “உயர்த்தும்” தகுதி உங்களுக்கு இல்லை. ஏன் என்றால் நடவடிக்கை எனும் விஷயந்தான் உங்களிடம் அறவே இல்லை.
லெனின் இங்கே தொழிலாளர் பார்வையில் கூறப்பட்டது மிகவும் கடுமையான கண்ணோட்டத்தில் இருக்கிறது. மிகவும் காட்டமாகத்தான் இருக்கிறது.
இதன் முக்கியத்துவத்தைக் கருதியே கடுமையான வார்த்தைகளை லெனின் பயன்படுத்தி உள்ளார். இதனைப் படித்துக் கம்யூனிஸ்டுகள் தெளிவு பெறவில்லை என்றால், அவர்கள் தொழிலாளர்களுக்கு வழிகாட்டும் நிலையில் இருந்து விலகிவிடுவர். தொழிலாளர்களுக்குப் பயன்பாடாது போய்விடுவர். மொத்தத்தில் அவர்கள், கம்யூனிச அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவர்.
சரியான கம்யூனிச அரசியலுக்கு, இந்தப் பொருளாதாரவாதமும், பயங்கரவாதமும் மாறானது மட்டுமல்ல எதிரானதும் கூட.
தொழிலாளி வர்க்கத்தின் தொழிற்சங்க அரசியல் என்பது முதலாளித்துவப் போக்கான அரசியலே ஆகும்.
அரசியல் போராட்டத்தில்,ஏன் அரசியல் புரட்சியிலுங்கூட,தொழிலாளி வர்க்கம் கலந்து கொள்கிறது என்பதனால் மட்டும், தன்னளவில் அதன் அரசியல், கம்யூனிச அரசியலாக ஆகிவிடாது.
No comments:
Post a Comment