இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்-சமூக வளர்ச்சியை பற்றி மார்க்சியம்- சிபி

 இயக்கவியல்:- இயற்கை இடையறாது இயங்கி புதுப்பித்துக் கொண்டிருக்கிறது என்கிறது இயக்கவியல். பொருளின் ஒரு வடிவம் சார்ந்த ஒரு நிகழ்வையும் அதன் வளர்ச்சிக்கான காரணத்தையும் விளங்கிக் கொள்ள அதை உள்ளார்ந்த முறையிலும் பொருளின் பிற வடிவுகளுக்குச் சார்பாகவும் அதை ஆராய வேண்டும் என்று இயங்கியல் பொருள் முதல்வாதப் பார்வை கருதுகிறது. வேறு விதமாகக் கூறுவதாயின், பொருளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அகக் காரணங்களும் புறக் காரணங்களும் உள்ளன. ஆயினும் அகக் காரணங்களே அடிப்படையானவை. புறக் காரணங்கள் மாற்றத்திற்கான நிலைமைகளான போதிலும் அவை அகக்காரணங்களு டாகவே செயற்படுகின்றன.

இயங்கியலின் அடிப்படையான அம்சம் மாற்றம் ஆகும். இம்மாற்றமானது, பொருளின் சகல வடிவங்களினுள்ளும் பொதிந்துள்ளவையான முரண்பாடுகளின் அடிப்படையில் நடைபெறுகிறது. வளர்ச்சி அல்லது அசைவு என்பது ஒரு முரண்பாட்டினுள் எதிர்மறைகளது மோதுதலின் விளைவானதாகும்.

“எங்கெல்ஸ் கூறுகிறார்:- “சிறிய நுட்பமான பொருள் முதலாக மிகப் பெரிய பொருள் ஈறாக, சிறு மணல் துகள் முதலாக சூரியன் ஈறாக, உயிரணு முதல் மனிதன் ஈறாக இயற்கையில் உள்ள எல்லாப் பொருள்களும் இடையறாது தோன்றி, வளர்ந்து, மறைந்து கொண்டேயிருக்கிறது எந்நேரத்திலும் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. இடையறாது இயங்கி வரும் நிலையிலும் மாறிக் கொண்டே இருக்கும் நிலையிலும் உள்ளது." (இயற்கையின் இயக்கவியல்)

ஆகவே, 'பொருள்களையும் அவற்றின் பிரதிபலிப்பான சிந்தனைகளையும் ஆராய வேண்டுமானால், அவற்றின் பரஸ்பரத் தொடர்புகளிலும், அவற்றின் இயக்க போக்கிலும், அவை தோன்றி வளர்ந்து மறையும் நிலைமையிலும் நின்று ஆராய வேண்டும்'' என்கிறார் ஏங்கெல்ஸ் (டூரிங்குக்கு மறுப்பு)”

பொருள்முதல்வாதம்

மார்க்சின் மெய்யியல், இயங்கியல்-பொருள் முதல்வாதம் எனப்படும். பொருள்முதல்வாதமோ இயங்கியல் என்ற கருத்தாக்கமோ மார்க்ஸ் கண்டறிந்தவையல்ல. அவை புராதன கிரேக்க மெய்யியலாளர்கட்கும் இந்தியாவின் மெய்யியலாளர்கட்கும் தெரிந்திருந்தவையே.

எனினும் மார்க்ஸின் தனித்துவமான பங்களிப்பு ஏதெனின் பொருள்முதல் வாதத்தை மாறாநிலையிலினின்றும் இயங்கியலைக் கருத்து முதல்வாதத் தினின்றும் மீட்டதோடு அவற்றை ஒருங்கிணைத்து முற்றிலும் புதிய மெய்யியலான இயங்கியல் பொருள் முதல்வாதத்தை உருவாக்கியமையாகும். “ஏங்கெல்ஸ் கூறியுள்ளதாவது, “சகலமெய்யியல்களதும், குறிப்பாக அண்மைய மெய்யியலினது மாபெரும் அடிப்படை வினா சிந்தனைக்கும் இருப்புக்கும் இடையிலான உறவு பற்றியது., மனத்திற்கும் இயற்கைக்கு மிடையிலான உறவு பற்றியது. மனமா இயற்கையா அடிப்படையானது என்பது பற்றியது. மெய்யியலாளர்கள் இப்பிரச் சினை தொடர்பாக அதற்குத் தத்தமது விடைகட்கு அமைய இரண்டு முகாம்களாகப் பிளவுபட்டு இருந்தனர். இயற்கைக்கு மேலாக மனதின் முதன்மையை வலியுறுத்தி, அதனால் இறுதி ஆய்வில் உலகம் ஏதோ வகையில் சிருஷ்டிக்கப்பட்டது என்று ஊகித்தோர் கருத்து முதல வாத முகாமிற்கு உரியோரானார்கள். இயற்கையே அடிப்படையானது எனக் கருதிய மார்க்ஸ் கருத்துமுதல்வாதத்தை முற்றாக நிராகரித்த பொருள் முதலவாதியாவார். மார்க்ஸிய பொருள்முதல்வாதத்தின் நிலைப்பாடுகள்

(அ) பொருள் அடிப்படையானது. மனம் அல்லது கருத்து இரண்டாம்பட்சமானது.

(ஆ) நமது உணர்வுநிலை, அதாவது சிந்தனை, உட்பட அனைத்தின் தோற்றுவாய்கள் வாழ்வின் பொருள் சார்ந்த விடயங்களிற் காணப்படக் கூடியனவும் நம்மைச் சூழவுள்ள பொருட்களைப் பிரதிபலிப்பனவுமாகும்.

(இ) இப்போது பொருள் அதன்அதியுயர்ந்த வடிவாக வளர்ச்சி

பெற்றுள்ளது. அதை நாம் மனமென்கிறோம். பொருள்சார்ந்த எச்சூழலிலிருந்து மனம் தோன்றியதோ அதை மாற்றும் வலிமையிலான பொருள் எனவும் ஒன்றுமே இல்லை. இதுவரை அறியப்படாதனவே உள்ளன. மனிதனது ஆற்றலைக் கடந்தது எனவோ இயற்கையை மீறியது எனவோ எதுவுமே இருக்க இயலாது.

வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்துருவம்

வரலாற்றுப் பொருள் முதல்வாதம் அல்லது வரலாறு பற்றிய பொருள் முதல்வாதக் கருத்துருவம் என்பது வரலாற்றை ஆய்வதற்கு இயங்கியற் பொருள் முதல்வாத மெய்யியலைப் பிரயோகிப்பதைக் குறிக்கும். மார்க்சுக்கும் ஏங்கெல்சுக்கும் முன்னர், அரசர்களதும் அரசியர்களதும் தளபதி களதும் பொதுமக்களுக்கு ஒரு பங்குமே இல்லாத அவர்களது ஆசாபாசங்களதும் கதைகளாகவே முதலாளிய வரலாற்றா சிரியர்கள் வரலாற்றை வழங்கி வந்தனர். அவர்களுடைய கரங்களில் வரலாறென்பது உப்புச்சப்பற்ற முறையில் மாண்டொழிந்த தேதிதிகளை ஒப்பிப்பதாகியது.

நடைமுறையிலிருந்த சுரண்டல் முறையைக் காப்பதற்கு, சமுதாயம் என்றுமே மாறாது என்றும் வர்க்கங்கள் எப்போதுமே இருந்து வந்தன என்று அவர்கள் காட்டவிரும்பினர். பைபிளில் வரும் “செல்வந்தன் தனது கோட்டையிலும் ஏழை வாசலிலும்” எனும் வாக்கியம் இந்தப் பார்வைக்கோணத்தைப் பொழிப்பாக எடுத்துக் கூறுகிறது.

எனினும் வரலாற்றுப்பொருள்முதல் வாதம் இந்தப் பழைய கருத்துருவத்தை மறுத்து அதனிடத்தில் சமூக வளர்ச்சியின் விதிகளை வெளிக்கொண்டுவந்து அதன் மூலம் வரலாற்றின் முன்னோக்கிய நடைக்கு துணை செய்யக்கூடிய ஒரு வலிய ஆயுதத்தைப் புரட்சிவாதிகளிடம் கையளித்துள்ளது.

எனினும், சமூகத்தின், புறவாழ்வின் பல்வேறு சிக்கலான நிலைமைகளிடையே, சமுதாயத்தின் உற்பத்தி முறை சமூக அமைப்பின் பண்பையும் ஒரு அமைப் பினின்று இன்னொன்றிற்குச் சமூகத்தின் வளர்ச்சியை தீர்மானிக்கும் சக்தி எது என்றால்? உற்பத்தி சக்திகள்தான் எனலாம்.

மனித இருப்பிற்கு அவசியமானவையான பிழைப்புக்கான வழிவகைகளைப் பெறும் முறையும் சமூகத்தின் வாழ்வுக்கும்இருப்புக்கும் அத்தியாவசியமான உணவு, உடை, வீடுகள், உற்பத்திச் சாதனங்கள் ஆதியனவற்றின் உற்பத்தி முறையுமே இச்சக்தி என்று வரலாற்றுப் பொருள் முதல்வாதம் கூறுகிறது.

பொருள் சார்ந்த மதிப்பை உருவாக்க மனிதர்கட்கு உதவும் கருவிகளும் செய்முறைத் திறமைகளிற் பயிற்றப்பட்டதன் விளைவாக உற்பத்திக் கருவிகளை இயக்கிப் பொருள்சார்ந்த மதிப்பின் உற்பத்தியிற் தொடரும் மக்களும், கூட்டாகச் சமூகத்தின் உற்பத்திச் சக்திகளாகின்றன. அதேவேளை, மனிதர் தனித்து உற்பத்தியில் ஈடுபடுவதில்லை. அவர்கள் சமூகங்களில் குழுக்களாகப்பொதுவான முறையில் அதைச் செய்கின்றனர். எனவே, எல்லாக் காலத்தும் எல்லா நிலைமைகளின் கீழும் உற்பத்தி என்பது சமூக உற்பத்தியேயாகும்.

(விரிவாக வேறோரு இடத்தில் பார்ப்போம் தோழர்களே).

உற்பத்தி உபகரணங்களின் வளர்ச்சியும் அதன் விளைவாக மனிதரது உற்பத்தி உறவுகளில் ஏற்படும் மாற்றமும் பழைய சமுதாயத்தினுள்ளே நிகழ்வது மட்டுமன்றி மனிதனது விருப்பு வெறுப்புக்கட்கு அப்பாற்பட்டே நிகழ்கின்றன.

மனித வரலாற்றில் முதலாவது முன் தேவை எப்படியும் மனிதர்கள் வாழ வேண்டும். அதன் பொருள் அவர்கள் உண்ண வேண்டும், உடை அணிய வேண்டும் குடிஇருக்க வேண்டும். அவர்களது முதலாவது வரலாற்று செயல் இந்த வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய சாதனங்களை உற்பத்தி செய்வதாக இருந்தது.

மனித செயல்பாட்டிற்கு இரண்டு அம்சங்கள் இருக்கின்றன : உற்பத்தி மற்றும் சமூக கூட்டுறவு.

பொருளாயத உற்பத்தி மனிதனுடைய சமுதாய வரலாற்றில் தொடக்கத்தை குறிக்கிறது. இதுதான் மனிதனை மிருகத்திலிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. இதை மார்க்ஸ் " மனிதர் களை மிருகங்களிலிருந்து உணர் நிலை யில் மூலம் மதத்தின் மூலம் இன்னும் நீங்கள் விரும்பிய எல்லா விஷயத்தின் மூலமும் வேறுபடுத்தி காட்ட முடியும்.அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான சாதனைகள் உற்பத்தி செய்வதற்கு தொடங்கிய உடனேயே அவர்கள் தாங்களாகவே மிருகத்திடமிருந்து வேறு பட்டு காணத் தொடங்கி விட்டார்கள் ". ( மார்க்ஸ் ஏங்கெல்ஸ் தேர்வு நூல் பாகம் 1 பக்கம் 20 ).

சமுதாய உறவுகளின் மாதிரி வகை பரஸ்பர இணைவான உறவுகளின் வடிவம் உற்பத்தி சக்திகளால் நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த உற்பத்தி சக்திகள் அவைகளின் வளர்ச்சியில் குறிப்பிட்ட கட்டத்தில் நிலைக்கொண்டிருக்கும் சமுதாய உறவுகளின் வடிவத்துடன் முரண்பட்டு மோதுகின்றன. அந்த முரண்பாடு ஒரு சமுதாய புரட்சி மூலம் தீர்க்கப்படுகிறது. சமுதாய உறவின் பழைய வடிவம் ஒரு தடையாக ஆகிவிட்டால் அது நீக்கப்பட்டு ஒரு புதிய வடிவிலான உறவுகளுக்கு இடம் கொடுக்கிறது. அந்த உறவு வடிவம் மேலும் அதிகமான வளர்ச்சி அடைந்த புதிய உற்பத்தி சக்திகளுக்கு இசைவாக இணையாக அமைகின்றது.

இந்த சமுதாய உறவுகளின் புதிய வடிவம் அதன் பங்காக சில காலத்திற்குப் பின்னர் வளர்ந்து கொண்டிருக்கும் உற்பத்தி சக்திகளுக்கு இசைவாக இணையாக இல்லாமல் போய்விடுகிறது. அவைகளின் மீது தடையாக ஆகிவிடுகின்றன. அப்போது அவைகள் அடுத்து வரக்கூடிய இன்னும் அதிக முற்போக்கான சமூக உறவுகளின் வடிவத்தால் புரட்சி மூலம் தூக்கி எறியப்படுகின்றன. இந்த வழியில் ஒன்றன்பின் ஒன்றாக வரும் எல்லா கட்டங்களுக்கிடையிலும் தொடர்ச்சியான இணைப்பு ஏற்பட்டு அது வரலாற்றின்பால் ஸ்தாபிக்கப்படுகின்றன.

"இவ்வாறாக வரலாற்றில் எல்லா மோதல்களும் அவைகளின் மூலாதாரம் நம்முடைய கருத்தோட்டத்தின் படி உற்பத்தி சக்திகள் மற்றும் சமுதாயத்தின் இணைப்பான உறவுகளின் வடிவம் ஆகியவற்றுக்குஇடையிலான முரண்பாட்டில் கொண்டிருக்கின்றன"( மார்க்ஸ் ஏங்கெல்ஸ் தேர்வு நூல்கள் பாகம் 1 பக்கம் 62 ).

“சமூக உறவுகளில் ஏற்படும் இம்மாற்றங்கள் பொருள் சார்ந்த மதிப்புக்களின் உற்பத்தி முறையில் ஏற்படும் மாற்றங்களாலேயே, அதினும் முதலாகவும் முக்கியமாகவும் உற்பத்தி உபகரணங்களில் ஏற்பட்ட மாற்றங்களாலும் வளர்ச்சிகளாலுமேநிகழுகின்றன என வரலாற்றுப் பொருள் முதல்வாதம் நமக்குக் கற்பிக்கிறது. பொருளியல் அஸ்திவாரம் மாறியதும், இம்மாற்றங்களைப் பொறுத்தும் அவற்றுக்கு அமையவும், அரசியல், சமூக, சட்ட, சமய, அழகியல், மெய்யியல், வடிவங்களை, வேறு வகையிற் கூறின் கோட்பாட்டு வடிவங்களைக் கொண்ட பிரமாண்டமான மேற்கட்டுமானம் துரிதமாக மாற்றமடைகிறது என வரலாற்றுப் பொருள் முதல்வாதம் மேலும் கற்பிக்கின்றது.

இச்சமூக மாற்றங்கள் சமுதாயத்தின் உள்இயல்பான முரண்பாடுகளின் அடிப்படையிலேயே நிகழ்கின்றன எனவும் வரலாற்றுப் பொருள் முதல்வாதம் கற்பிக்கிறது.

நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் அழிவிலிருந்து முளைத்தெழுந்துள்ள நவீன முதலாளித்துவ சமுதாயம் வர்க்கப் பகைமைகளை ஒழித்துவிடவில்லை. ஆனால், பழையவற்றுக்குப் பதிலாகப் புதிய வர்க்கங்களையும், புதிய ஒடுக்குமுறை நிலைமைகளையும், புதிய போராட்ட வடிவங்களையும் உருவாக்கி வைத்துள்ளது.

எனினும், நமது சகாப்தமான (ஏகாதியபத்திய) முதலாளித்துவ வர்க்கச் சகாப்தம் ஒரு தனித்த பண்பியல்பைக் கொண்டுள்ளது: வர்க்கப் பகைமைகளை அது எளிமைப்படுத்தியுள்ளது. ஒட்டு மொத்த சமுதாயமும், இருபெரும் பகை முகாம்களாக, ஒன்றையொன்று நேருக்கு நேர் எதிர்த்து நிற்கும் - முதலாளித்துவ வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்னும் - இருபெரும் வர்க்கங்களாக, மேலும் மேலும் பிளவுபட்டு வருகிறது.

ஆதி நகரங்களின் சுதந்திரமான நகரத்தார், மத்திய காலத்துப் பண்ணையடிமைகளிலிருந்து உதித் தெழுந்தார்கள். இந்த நகரத்தாரிலிருந்தே முதலாளித்துவ வர்க்கத்தின் தொடக்கக் கூறுகள் வளர்ந்தன.

கடல்வழி அறியப்பட்டதும், வளர்ந்து வந்த முதலாளித்துவ வர்க்கத்துக்குப் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டன. கிழக்கிந்திய, சீனச் சந்தைகள்,அமெரிக்கக்காலனியாக்கம், காலனிகளு டனான வியாபாரம், பரிவர்த்தனைச் சாதனங்களிலும் பொதுவாக விற்பனைப் பண்டங்களிலும் ஏற்பட்ட பெருக்கம் - ஆகிய இவையெல்லாம், வணிகத்துக்கும் கப்பல் போக்குவரத்துக்கும் தொழில்துறைக்கும் இதற்குமுன் என்றும் கண்டிராத அளவுக்கு உத்வேகம் ஊட்டின. தள்ளாடிக் கொண்டிருந்த நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் புரட்சிகரக் கூறின் அதிவிரைவான வளர்ச்சிக்கும் அதன்மூலம் தூண்டுதல் அளித்தன.

நிலப்பிரபுத்துவம் சார்ந்த தொழில்துறை அமைப்புமுறையின்கீழ், தொழில்துறை உற்பத்தியானது, குறிப்பிட்டவர் மட்டுமே அங்கம் வகிக்கும் கைவினைக் குழுமங்களின் ஏகபோகமாக இருந்தது. இத்தகைய தொழில்துறை அமைப்பு முறையால், தற்போதைய சூழலில், புதிய சந்தைகளின் வளர்ந்துவரும் தேவைகளை இனிமேலும் நிறைவு செய்ய இயலவில்லை.

அதன் இடத்தில் பட்டறைத் தொழில் அமைப்புமுறை வந்தது. பட்டறைத் தொழில் சார்ந்த நடுத்தர வர்க்கம் கைவினைக் குழும எஜமானர்களைப் புறந்தள்ளியது. தொழில்முறையில் இணைந்து செயல்பட்ட வெவ்வேறு கைவினைக் குழுமங்களுக்கு இடையே நிலவிய உழைப்புப் பிரிவினை, ஒவ்வொரு தனித்த பட்டறையிலும் ஏற்பட்ட உழைப்புப் பிரிவினைக்கு முன்னே மறைந்தொழிந்தது.

இதற்கிடையே, சந்தைகள் மேலும் மேலும் விரிவடைந்து கொண்டே இருந்தன. தேவையோ மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. பட்டறைத் தொழில்முறையுங்கூட இப்போது ஈடுகட்ட இயலாமல் போனது.

இந்த சூழ்நிலையில்தான் நீராவியும் எந்திரங்களும் தொழில்துறை உற்பத்தியைப் புரட்சிகரமானதாக ஆக்கின.

பட்டறைத் தொழில்முறையின் இடத்தைப் பிரம்மாண்ட நவீனத் தொழில்துறை பிடித்துக் கொண்டது. பட்டறைத் தொழில் சார்ந்த நடுத்தர வர்க்கத்தாரின் இடத்தில் கோடீஸ்வரத் தொழிலதிபர்கள், ஒட்டுமொத்தத் தொழில்துறைப் படையணி களின் தலைவர்கள், அதாவது நவீன முதலாளித்துவ வர்க்கத்தினர் உருவாயினர்.

நவீனத் தொழில்துறை உலகச் சந்தையை நிறுவியுள்ளது. உலகச் சந்தையானது, வர்த்தகத்துக்கும், கப்பல்போக்கு வரத்துக்கும்,தரைவழித் தகவல்தொடர்புக்கும் அளப்பரிய வளர்ச்சியைத் அளித்தது. இந்த வளர்ச்சி தன் பங்குக்குத் தொழில்துறையின் விரிவாக்கத்துக்கு வித்திட்டது. தொழில்துறை, வர்த்தகம், கப்பல் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகியவை எந்த அளவுக்கு விரிவடைந்தனவோ அதே அளவுக்கு முதலாளித்துவ வர்க்கமும் வளர்ச்சி யடைந்தது. அது தனது மூலதனத்தைப் பெருக்கியது. மத்திய காலம் விட்டுச் சென்றிருந்த ஒவ்வொரு வர்க்கத்தையும் பின்னிலைக்குத் தள்ளியது.

இவ்வாறு, நவீன முதலாளித்துவ வர்க்கம் என்பதே, நீண்டதொரு வளர்ச்சிப் போக்கின் உடன்விளைவு - உற்பத்தி முறைகளிலும் பரிவர்த்தனை முறைகளி லும் தொடர்ச்சியாக நிகழ்ந்த புரட்சிகளின் உடன்விளைவு – என்பதை நாம் காண்கிறோம்.

எனவே மனித இனம் தன்னாற் செய்யக் கூடிய பணிகளையே தனக்கு விதிக் கிறது. ஏனெனில், இவ்விடயத்தைக் கூர்ந்து நோக்குவோமாயின், எப்போதும் ஒரு பணியை நிறைவேற்றுதற்கு அவசியமான நிலைமைகள் ஏற்கெனவே உள்ளபோது அல்லது உருவாகி வருகின்றபோதே அப்பணியும் தோற்றம் பெறுகிறது என நாம் காணலாம்.

எனவே வரலாற்றுப் பொருள் முதல்வாதம் நமக்குக் கற்பிப்பது ஏதெனின், பிற நிகழ்வுகளோ நிறுவனங்களோ பொருளின் பிற வடிவங்களோ போன்று, சமுதாயமும் என்றுமே நிலையாய் நிற்பதில்லை. பிற அனைத்தும் போன்று அதுவும் மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உட்படுகிறது. எனவே சுரண்டலையும் செல்வர்களும் ஏழைகளும் இருப்பதையும் கொண்ட சமுதாயங்கள் நிலைபேறுடை யனவோ, என்றும் நிலைப்பனவோ மாறாதனவோ அல்ல. அவை எல்லாக் காலத்திலும் இருந்தனவுமல்ல.

“சமூக உறவுகளில் ஏற்படும் இம்மாற்றங்கள் பொருள் சார்ந்த மதிப்புக்களின் உற்பத்தி முறையில் ஏற்படும் மாற்றங்களாலேயே, அதினும் முதலாகவும் முக்கியமாகவும் உற்பத்தி உபகரணங்களில் ஏற்பட்ட மாற்றங் களாலும் வளர்ச்சிகளாலுமே நிகழுகின் றன என வரலாற்றுப் பொருள்முதல்வாதம் நமக்குக் கற்பிக்கிறது. பொருளியல் அஸ்திவாரம் மாறியதும், இம்மாற்றங்களைப் பொறுத்தும் அவற்றுக்கு அமையவும், அரசியல், சமூக, சட்ட, சமய, அழகியல், மெய்யியல், வடிவங்களை, வேறு வகையிற் கூறின் கோட்பாட்டு வடிவங்களைக் கொண்ட பிரமாண்டமான மேற்கட்டுமானம் துரிதமாக மாற்றமடை கிறது என வரலாற்றுப் பொருள் முதல்வாதம் மேலும் கற்பிக்கின்றது.

இச்சமூக மாற்றங்கள் சமுதாயத்தின் உள்இயல்பான முரண்பாடுகளின் அடிப்படை யிலேயே நிகழ்கின்றன எனவும் வரலாற்றுப் பொருள் முதல்வாதம் கற்பிக்கிறது. தமது புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையின் தொடக்கக் கூற்றில் மார்க்ஸ"ம் ஏங்கல்ஸ"ம் இதை அற்புதமான முறையில் உரைத்துள்ளனர்: “இற்றைவரை வரலாற்றில் இருந்து வந்த சமுதாயம் அனைத்தினதும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே. சுதந்திர மனிதன் - அடிமை, உயர்குடியினன் - சாதாரண மனிதன், பிரபு - பண்ணையாள், தொழில் எசமான் - கூலியாள் ஒரே வார்த்தையில் ஒடுக்குவோன் - ஒடுக்கப்படுவோன், ஒருவருக்கு மாறாக மற்றவர் எப்போதுமே நின்று, சில சமயம் மறைவாக, சில சமயம் வெளிப்படையான சண்டையாக, ஒவ்வொரு முறையும் முழுச் சமுதாயத்தினதும் புரட்சிகர புனர்நிர்மாணத்துக்கோ மோதும் வர்க்கங்களின் பொதுவான சிதைவுக்கோ இட்டுச்சென்ற ஒரு சண்டையை நடத்தி வந்துள்ளனர்.”

எனவே, சமுதாயத்தின் வளர்ச்சியின் வரலாற்றின் தோற்றுவாய்கள் பொருள் சார்ந்த மதிப்புக்களின் உற்பத்தியாளர்களது வரலாற்றில், உற்பத்திச் செயல்முறையின் பிரதான சக்திகளான உழைக்கும் வெகுசனங்களின் வரலாற்றிலேயே காணப்படவேண்டும்.

மேலும் பின்....

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்