சர்வதேசகீதம்
===========
பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதருகின்ற மனிதர்காள்
பாரினிற் கடையரே எழுங்கள் வீறுகொண்டு தோழர்காள்
கொட்டுமுரசு கண்ட நம் முழக்கமெங்கும் குமுறிட
கொதித்தெழு புது உலக வாழ்வதில் திளைத்திட
பண்டையப் பழக்கமென்னும் சங்கிலி அறுந்தது
பாடுவீர் சுயேட்சை கீதம்
விடுதலை பிறந்தது
இன்று புதிய முறையிலே இப்புவனமும் அமைந்திடும்
இன்மை சிறுமைதீர நல் இளஞர் உலகமாகிடும்
தொன்றுதொட்டுழைத்த தொழிலாளி,விவசாயிகள் நாம்
தோழராகினோம் உழைப்போர் யாவரேனும் ஓர்குலம்
உண்டு நம் உழைப்பிலே உயர்ந்தவர்க்குச் சொல்லுவோம்
உழைப்பவர் யாவருக்கும் சொந்தமிந்த நிலமெல்லாம்
பார் அதோ மமதையின் சிகரத்திருமாந்துமே
பார்க்குறான் சுரங்க,மில்,நிலத்தின் முதலாளியே
கூறிடில் அன்னார் சரித்திரத்தில் ஒன்று கண்டதே
கொடுமை செய்து உழைப்பின் பலனைக் கொள்ளைகொண்டு நின்றதே
மக்களின் உழைப்பெலாம் மறைத்துவைத்து ஒருசிலர்
பொக்கிஷங்களில் கிடந்து புரளுகின்ற தறிகுவீர்
இக்கணமும் அதைத்திரும்பக் கேட்பதென்ன குற்றமோ?
இல்லை நாம் நமக்குரிய பங்கைக் காட்டிக் கேட்கின்றோம்
வேலை செய்யக் கூலியுண்டு வீணர்கட்கிங்கிடமில்லை
வேதம் ஓதி உடல் வளர்க்கும் காதகர்க்கும் இங்கிடமில்லை
நாளை எண்ணி வட்டிசேர்க்கும் ஞமலிகட்கும் இடமில்லை
நாமுணர்த்தும் நீதியை மறுப்பவர்க்கிங்கிடமில்லை
பாடுபட்டு ழைப்பவர் நிணத்தைத் தின்ற கழுகுகள்
பறந்தொழிந்து போதல் திண்ணம் பாரும் சில நாளதில்
காடுவெட்டி மலையுடைத்துக் கட்டிடங்கள் எழுப்புவோம்
கவலையற்ற போகவாழ்வை சகலருக்குண்டாக்குவோம்-
( பட்டினிக்)
(1871 மார்ச்26 ல் ஏற்பட்ட பாரிஸ் கம்யூன் புரட்சியின் போது பிரெஞ்சுத் தொழிலாளிக் கவிஞனால் பாடப்பட்டது.
பின்பு தென்னக ரயில்வேப் போராட்டத்தின்போது பழிவாங்கப்பட்ட ரயில்வே தொழிலாளியான தோழர் கவிஞர் நாகை சாமிநாதனால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது.)
No comments:
Post a Comment