பண்ணை அடிமை முறை சமுதாயம், அடிமை முறை சமுதாயத்தை காட்டிலும் சிக்கலான சமுதாயம் என்றார் லெனின். பண்ணை அடிமை சமுதாயத்தில் வாணிபமும் தொழில் ஆகியவை பெருமளவுக்கு வளர்ச்சி அடைந்தன. அது அந்த நாளிலேயே முதலாளித்துவத்திற்கு இட்டுச் செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது. மத்திய காலத்தில் பண்ணை அடிமைச் சமுதாயம் தான் உலகில் எங்கும் முதன்மையான சமுதாயமாக இருந்தது. அந்த சமுதாயத்திலும் முடியரசு மற்றும் குடியரசு என்ற இரண்டு வகையான ஆட்சிமுறை இருந்தது என்றார் லெனின். பண்ணை அடிமைச் சமுதாயத்திலும் பண்ணையார்கள் அல்லது நிலப்பிரப்புகள்தான் ஆள்பவர்களாக இருந்தார்கள். பண்ணை அடிமைகள் அதாவது குடியானவர்கள் பண்ணையார்களோடு ஒப்பிடும்போது எவ்வித உரிமையும் இல்லாதவர்களாக இருந்தனர். ஆகவே சமுதாயம் அடிமைச் சமுதாயத்தில் இருந்து நிலவுடமை சமுதாயமாக மாறிய போதும் அதன் அடிப்படை ஆளும் வர்க்கம் என்றும் ஆளப்படும் வர்க்கம் என்றும் இரண்டு வகையான வர்க்கங்களை கொண்டதாகவே வளர்ந்தது. மேலும் முந்தைய சமுதாய அமைப்பை காட்டிலும் புதிதாக உருவாகிய சமுதாய அமைப்பு மிகவும் சிக்கல் வாய்ந்த அமைப்பாக மாறியது. அதன் பொருள், புதிதாக வளர்ச்சி அடைந்த சமுதாயம் அதை நாம் புரிந்து கொள்வதில் சிரமங்கள் இருக்கிறது என்பதாகும். எனினும் அதன் அடிப்படை இன்னும் சுரண்டல் தொடர்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே ஒவ்வொரு சமுதாயத்திலும் சுரண்டல் எப்படி நடக்கிறது, இந்த சுரண்டலினால் பலன் அடைபவர்கள் யார்? அதனால் பாதிக்கப்படுபவர்கள் யார் என்பதை நாம் அடிப்படையாக கணக்கில் எடுத்து சிக்கலை தீர்க்க வேண்டும்.
அடிமை முறை பண்ணை அடிமை முறை ஆகிய இரு அமைப்பிலும் மக்களில் மிகச்சிறுபான்மையினர் மிகப் பெரும்பான்மையான மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அதற்கு அவர்கள் வன்முறையே பின்பற்றுகிறார்கள். தற்போதைய முதலாளித்துவ சமுதாயத்திலும் இதே நிலைதான் நீடிக்கிறதை நாம் பார்க்கலாம். ஆகவே சமுதாயத்தில் வன்முறை நிலவுவதற்கு அடிப்படை சுரண்டலே. இந்த சுரண்டல் வர்க்கங்கள் சமுதாயத்தின் அனைத்து மக்களையும் தங்களது கொள்கை கோட்பாடுகள் கண்ணோட்டங்கள் பழக்கவழக்கங்கள் அவற்றைப் பின்பற்றுமாறு மக்களை தொடர்ந்து பயிற்றுவிக்கும் திறன் படைத்தவர்களாக இருக்கிறார்கள். ஆகவே எந்த சமுதாயத்திலும் ஆளும் வர்க்கங்களின் கண்ணோட்டமே பெருவாரியான மக்களின் கண்ணோட்டமாக இருப்பதைக் காணலாம். உழைக்கும் மக்களில் மிகச்சிறுபான்மையினர் மட்டுமே விழிப்புணர்வு அடைந்து ஆளும் வர்க்கங்களின் கருத்துக்களுக்கும் கண்ணோட்டத்துக்கும் எதிராக கருத்துக்களை மக்களிடம் பரப்பி போராடுவதில் முன்னணியாக இருப்பார்கள். வரலாறை நாம் பார்க்கும் பொழுது ஆளும் வர்க்கங்களின் ஒடுக்குமுறையையும் அவர்களுடைய பிற்போக்கு கருத்துக்களையும் எதிர்த்து பல்வேறு விதமான போராட்டங்கள் நடந்ததை நாம் பார்க்கலாம். அடிமை முறை சமுதாயத்தை தகர்த்தெறிவதற்காக ஸ்பாட்டக்கர்ஸ் என்ற ஒரு தலைவரின் தலைமையில் ஆயுதம் தாங்கி அடிமைகள் போராடினார்கள். அவர்கள் அதில் தோல்வி அடைந்தாலும், ஆளும் வர்க்கங்கள் அவர்களுடைய சுரண்டல் முறையை அதே வடிவத்தில் தொடர முடியாமல், புதிய வகையான சுரண்டல் முறைக்கு மாற வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்பதை வரலாற்றிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே வர்க்கச் சமுதாயம் நீடிக்கும் வரை சமுதாயத்தில் ஆளும் வர்க்கங்களை எதிர்த்து அதாவது ஆளும் சுரண்டும் வர்க்கங்களை எதிர்த்து சுரண்டப்படும் அடிமை வர்க்கங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கும். இந்தப் போராட்டத்தை யாரும் ஒழித்துவிட முடியாது. சுரண்டும் வர்க்கத்தின் ஆதிக்கம் ஒழியும் வரை சுரண்டப்படும் வர்க்கத்தின் போராட்டம் தொடரவே செய்யும். சமூகத்தில் சுரண்டல் ஒழியும்வரை வர்க்கப் போராட்டம் தொடரும்.
எவ்வகையான குடியரசுகளாகவோ ஜனநாயக அரசுகளாகவோ இருந்தாலும் இங்கு இரண்டு எதிர் எதிரான வர்க்கங்கள் இருக்கும் வரை ஆளும் வர்க்கங்களுக்கு அதாவது சுரண்டும் வர்க்கங்களுக்கு மட்டுமே உரிமையும் அதிகாரமும் இருக்கிறது. அவர்களைச் சார்ந்து அவர்களுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து வரும் உழைக்கும் மக்களுக்கு எவ்விதமான உரிமையும் அதிகாரமும் கிடையாது. அதாவது இங்குள்ள உழைக்கும் மக்களுக்கு ஓட்டு போடும் உரிமை மட்டும்தான் உண்டு,. ஆனால் சட்டங்கள் தீட்டுவதற்கோ திட்டங்கள் தீட்டுவதற்கோ அதனை நடைமுறைப்படுத்துவதற்கோ உழைக்கும் மக்களுக்கு எவ்விதமான உரிமையும் அதிகாரமும் இல்லை. ஆகவே அரசு வடிவங்கள் எவ்வளவுதான் மாறுபட்டு இருந்தாலும் ஆளும் வர்க்கங்களாக சுரண்டும் வர்க்கங்கள் இருக்கும் வரை, ஆளப்படும் வர்க்கங்களான உழைக்கும் வர்க்கத்திற்கு எந்த விதமான உரிமையும் இல்லை. ஆரம்ப காலங்களில் இந்தியாவை பிரிட்டிஷார் ஆட்சி செய்யும் பொழுது தேர்தல்களில் சுரண்டும் வர்க்கப் பிரிவினர்கள் மட்டுமே ஓட்டு போடும் உரிமை பெற்றிருந்தனர், மற்ற வகையான உழைக்கும் மக்களுக்கு ஓட்டு போடும் உரிமை இருந்ததில்லை. இதிலிருந்து நாம் இந்த அரசின் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும் பிரிட்டீஷை எதிர்த்தப் போராட்டம் வலுவடைந்து பிரிட்டிஷார் இந்த நாட்டை விட்டு வெளியேறிய பின்பு வயது வந்த அனைவருக்கும் ஓட்டுரிமை என்ற முறை இங்கு கையாளப்பட்டாலும், மக்களுக்கு ஓட்டு போடும் உரிமை மட்டுமே இருக்கிறது. அவர்களால் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்கு எதிராக சட்டம் போடுவது திட்டங்கள் போடுவதையோ அதை நடைமுறைப்படுத்துவதையோ எதிர்த்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்ற உரிமையோ அதிகாரமோ மக்களுக்கு இல்லை. இந்த வகையில் உண்மையில் இந்த அரசு முறையில் பணம் படைத்த, செல்வாக்குப் படைத்த பிரிவினருக்கு மட்டுமே உரிமையும் அதிகாரமும் இருப்பதை நாம் காண்கிறோம். இதுதான் சுரண்டும் வர்க்கத்தின் அரசின் பண்பாகும் என்பதை உழைக்கும் மக்கள் உணர வேண்டும். இந்த உண்மையை உழைக்கும் மக்கள் எப்போதும் மறந்து விடக் கூடாது. ஆனால் இந்த உண்மையை மக்களிடம் மூடி மறைக்கவே தேர்தல் நாடகம் நடத்துகிறார்கள். இந்தத் தேர்தலானது உழைக்கும் மக்களுக்கான உண்மையான பிரதிநிதிகளை உருவாக்க பயன்படாது என்பதை நாம் உணர வேண்டும் என்றார் லெனின்.
அரசு என்பது ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தால் ஒடுக்கப்படுவதற்கான ஓர் இயந்திரமே என்ற அடிப்படையான உண்மையை மார்சியம் நமக்கு எடுத்துச் சொல்கிறது. உழைக்கும் வர்க்கத்தை சுரண்டும் வர்க்கத்திற்கு கீழ் அடிமைப்படுத்துவதற்கான ஒரு இயந்திரம்தான் இந்த அரசு ஆகும். அதாவது முதலாளித்துவ வர்க்க அரசாங்கம், அதாவது இந்த அரசானது பல்வேறு விதமான வடிவங்களைக் கொண்டிருந்தாலும் அதாவது முடியரசாக இருந்தாலும் சரி, உயர்குடி மக்களின் குடியரசாக இருந்தாலும் சரி, ஜனநாயக குடியரசாக இருந்தாலும் சரி இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை ஒன்றுதான், அதாவது ஆளும் வர்க்கங்களான சுரண்டும் வர்க்கங்களுக்குத்தான் எல்லா விதமான உரிமையும் அதிகாரமும் உண்டு, உழைக்கும் மக்கள் அடிமைகளாகவே எவ்விதமான உரிமையும் அதிகாரமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படையாகும்; அவர்கள் எப்போதும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களாகவே எவ்விதமான உரிமையும் இல்லாமல் இருக்கிறார்கள். ஆகவே அரசினுடைய வடிவம் எதுவாக இருந்தாலும் ஆளும் வர்க்கமானது சுரண்டும் வர்க்கமாக இருக்கும் பொழுது அது உழைக்கும் மக்களை ஒடுக்குகின்ற அரசாகவே இருக்கும். இதற்கு மாறாக உழைக்கும் வர்க்கம் ஆளும் வர்க்கமாக இருந்தால், அந்த ஆட்சியானது முதலாளிகளை ஒடுக்கும் ஆட்சியாகவே இருக்கும். ஆகவே அரசு என்பது ஒரு வர்க்கம் பிற வர்க்கங்களை அடக்கி ஒடுக்குவதற்கான பலாத்காரக் கருவியாகவே எப்போதும் இருக்கின்றது. பாட்டாளி வர்க்கத்துக்கும் விதிவிலக்கு இன்றி பாட்டாளி வர்க்க அரசாங்கமானது தொழிலாளர்களுக்கு ஜனநாயகத்தையும், முதலாளிகள் மீது சர்வாதிகாரத்தையும் தொடுக்கும் அரசாகவே இருக்கும். இதற்கு மாறாக அரசு என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவானது என்பது முழுக்க முழுக்கப் பொய்யாகும். இந்த உண்மையை மார்க்சிய ஆசான்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்கள். இதனை மூடி மறைப்பதுதான் குட்டி முதலாளித்தவாதிகளும், கம்யூனிச அமைப்புகளில் உள்ள திருத்தல்வாதிகளும் தொடர்ந்து முயற்சி செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.
சீர்திருத்தவாதம் பற்றி லெனின் என்ன சொன்னார் என்பதை நாம் அடிப்படையாக புரிந்துகொண்டு இந்தியாவில் ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்ட சீர்திருத்த கொள்கைகளின் விளைவுகளின் வரலாற்றையும் நாம் பார்க்கும் போது சீர்திருத்தவாதம் பற்றி லெனின் சொன்னது எவ்வளதூரம் உண்மையாக இருக்கிறது என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது.
‘’சீர்திருத்தங்கள் என்றால் ஆளும் வர்க்கத்தின்
ஆட்சியதிகாரத்தை அழிக்காமலேயே உழைக்கும் மக்களின் நிலைமைகளில் மேம்பாட்டையச்
செய்வதாகும். அதாவது மூலதனத்தின் ஆதிக்கம் இருக்கும்வரை, தனிப்பட்ட
மேம்பாடுகள் ஏற்பட்டாலும், எப்போதும் கூலி அடிமைகளாகவே
இருந்து வருவோரான தொழிலாளர்களை முதலாளித்துவ வழியில் ஏமாற்றுவதுதான்
சீர்திருத்தவாதம் ஆகும்’’ என்றார் லெனின்.
லெனின் கூறியதுபோலவே இந்தியாவில் கடைபிடிக்கப்பட்ட கீன்சிய கலப்புப்
பொருளாதாரக் கொள்கை என்ற சீர்திருத்தக் கொள்கையானது மக்களை அடிமைப்படுத்தி ஆளும்
ஆட்சி அதிகாரத்தை முடிவிற்கு கொண்டுவரவில்லை, மேலும் உழைக்கும்
மக்களை கூலி அடிமைகளாகவே இருக்க வைத்து ஏமாற்றிய மோசடிக் கொள்கைதான் என்று இந்திய வரலாறு நிருபித்துள்ளது.
‘’மிதவாத முதலாளித்துவ வர்க்கத்தார் ஒரு கையால்
சீர்திருத்தங்களை வழங்கிவிட்டு மறுகையால் எப்போதும் அவற்றை திருப்பி
எடுத்துக்கொண்டு விடுகிறார்கள்’’ என்றார் லெனின்.
லெனின் சொன்னது போலவே இந்தியாவில் கீன்சிய சீர்திருத்தக் கொள்களை 1950 ஆண்டில் அமல் படுத்தினார்கள். அரசே மக்களுக்கு கல்வி வழங்குவது, மருத்துவ வசதி செய்துகொடுப்பது, வேலைவாய்ப்புகளை
ஏற்படுத்த அரசு பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்குவது என்ற சீர்திருத்தக் கொள்கைகளை
தற்போது கைவிட்டு விட்டதையும் தொழிலாளர்களுக்கு இதுவரை வழங்கிவந்த சலுகைகளை
பறித்துக்கொண்டு இருப்பதையும் நாம் காணலாம். இதிலிருந்து அன்று லெனின் சொன்னது
போலவே முதலாளிகளின் அரசு வழங்கிய சலுகைகளை பறித்துக்கொள்வார்கள் என்பது இன்றும் உண்மையாக இருப்பதை நாம் காணலாம்.
‘’தொழிலாளர்களை அடிமைப்படுத்தவும், தனித்தனி கோஷ்டிகளாகப் பிளவுபடுத்தவும் கூலி அடிமை முறையை நிரந்தரமாய்
நீடிக்கச் செய்யவும் இந்த சீர்திருத்த முறையை முதலாளிகள் பயன்படுத்துகிறார்கள்.
ஆகவே இந்த சீர்திருத்தமானது தொழிலாளர்களை சீர்கெடுப்பதற்கும், பலவீனப்படுத்துவதற்கும் முதலாளிகளால் பயன்படுத்தப்படும் ஆயுதமாக
மாறிவிடுகிறது என்றும் சீர்திருத்தவாதிகளை நம்பும் தொழிலாளர்கள் எப்போதும்
ஏய்க்கப்படுகிறார்கள் என்பதை அனைத்து நாடுகளின் அனுபவம் தெளிவாக்க் காட்டுகிறது’’
என்றார் லெனின்.
லெனின் கூறியபடியே இந்தியாவில் பிரிட்டீஷ் காலனி ஆட்சியாளர்களாலும்
அவர்களுக்குப் பின்பு வந்த புதியகாலனி ஆட்சியாளர்களாலும் கொண்டுவந்து
செயல்படுத்தப்பட்ட சீர்திருத்த கொள்கைகள் அனைத்தும் உழைக்கும் மக்களை
ஏமாற்றுவதற்கே பயன்பட்டது. வேலையில்லாத பட்டாளம் எவ்வளவுக்கு பெருகுகிறதோ
அவ்வளவுக்கு அவ்வளவு முதலாளிகள் உழைக்கும் மக்களுக்கு குறைந்த கூலி கொடுத்து
சுரண்டி அவர்களின் மூலதனத்தை குவித்துக் கொள்வார்கள். ஆகவே முதலாளிகளும் அவர்களது
அரசும் எப்போதும் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க விரும்ப மாட்டார்கள். ஆனாலும்
வேலையில்லாத் திண்டாம் அதிகரித்தால் உழைக்கும் மக்கள் அரசை எதிர்த்துப்
போராடுவார்கள் என்பதை உணர்ந்து ஆட்சியாளர் மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்
கொடுக்க ஆர்வம் உள்ளவர்கள் போல் காட்டிக்கொள்வதற்காக வேலை வாய்ப்பில் எளிய
மக்களுக்கு (பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு) முன்னுரிமை
கொடுக்கிறோம் என்று சொல்லி இடஒதுக்கீட்டுக் கொள்கை என்ற சீர்திருத்தக் கொள்கையை
கொண்டுவந்து இந்தியாவில் செயல்படுத்தினார்கள். இதன் மூலம் இவர்களால் அனைத்து
உழைக்கும் மக்களுக்கும் வேலைவாய்ப்பை இவர்களால் கொடுக்க முடியாது அதற்கு இவர்கள்
முயற்சி செய்ய மாட்டார்கள் என்ற உண்மையை உழைக்கும் மக்களிடம் மூடிமறைத்து
ஏமாற்றினார்கள். அனைத்து மக்களுக்கும் இவர்கள் வேலை வாய்ப்பை ஏற்படுத்தவே இல்லை.
மேலும் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு செய்வதன் மூலம் உழைக்கும் மக்களை
சாதிரீதியாக நிரந்தரமாக பிரிக்கும் மோசடியை செய்தார்கள். ஒவ்வொரு சாதியைச் சேர்ந்த
உழைக்கும் மக்களும் ஒற்றுமையாக இருக்கவிடாமல் சாதி அடிப்படையில் சில சாதியைச்
சேர்ந்தவர்களுக்கு வேலை கிடைப்பதைப் பார்த்து பிற சாதியினர் போட்டி பொறாமை கொள்ளச்
செய்து சாதி அடிப்படையில் வேற்றுமையையும் வெறுப்பையும் பகையையும் வளர்த்தார்கள்.
லெனின் கூறியதுபோல உழைக்கும் மக்களை கோஷ்டிகளாக சாதி அடிப்படையில்
பிளவுபடுத்தினார்கள். கூலி அடிமைத்தனத்திலிருந்து உழைக்கும் மக்கள் விடுதலை பெற
வேண்டும் என்ற உணர்வை உழைக்கும் மக்களிடம் மழுங்கடித்தார்கள். ஆட்சியாளர்களும்,
முதலாளிகளும் கொடுக்கும் சலுகைகளே போதுமானது என்ற சுயதிருப்தி
மனப்பான்மையை மக்களிடம் ஏற்படுத்தினார்கள். இந்தகைய மன நிலையிலேயே வாழ்ந்து
பழக்கப்பட்டுவிட்ட மக்கள் இப்போது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகளை
ஆட்சியாளர்கள் பறிக்கும் போது உழைக்கும் மக்கள் கையறு நிலையிலேயே நிற்கிறார்கள்.
இந்த அநீதிகளை எதிர்த்துப் போராடுவதற்கான நிறுவனங்கள் அதாவது கட்சிகள் இன்றி
மக்கள் தனிமைப்பட்டுள்ளார்கள். ஆகவே இந்திய வரலாற்றில் உழைக்கும் மக்கள் இந்த
சீர்திருத்தவாதிகளை நம்பி அவர்கள் பின்னால் சென்றதன் விளைவாக உழைக்கும் மக்கள்
ஏமாற்றப்பட்டுள்ளார்கள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளார்கள், உழைக்கும்
மக்கள் சீரழிந்துள்ளார்கள் என்ற நடைமுறை உண்மையை அன்றே லெனின் பல நாடுகளின்
அனுபவங்களிலிருந்து வழிகாட்டியதை நாம் பின்பற்றத் தவறியதன் பலனை இப்போது நாம்
அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம்.
‘’அற்ப சலுகைகளின் மூலம் சீர்திருத்தவாதிகள்
தொழிலாளர்களை பிளவுபடுத்தவும் ஏமாற்றவும் முயல்கிறார்கள். அவர்களை வர்க்கப்
போராட்டத்திலிருந்து திசைதிருப்பிவிட முயலுகிறார்கள்’’ என்றார்
லெனின்.
இங்கு சாதி அடிப்படையிலான அற்ப சலுகைகளுக்கான போராட்டங்களை
சீர்திருத்தவாதிகள் முன்னெடுக்கிறார்கள். இத்தகைய சீர்திருத்தங்கள் மூலம்
ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த வெகுசிலருக்கு சலுகை கிடைத்தாலும் மிகப்பெருவாரியான
ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு இந்த சலுகைகள் கிடைப்பதில்லை. எனினும் இந்த
சீர்திருத்தைக் காட்டி ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெருவாரியான உழைக்கும்
மக்களை ஏமாற்றுவதோடு பிற சாதி உழைக்கும் மக்களிடம் பொறாமை உணர்வை தூண்டி உழைக்கும்
(ஒவ்வொரு சாதியைச் சேர்ந்த மக்களை இந்த சாதியவாதிகள் திரட்டி தங்களது சாதிக்கு உள்
ஒதுக்கீடு வேண்டும் என்றும் தங்களது குறிப்பிட்ட சாதிக்கு இட ஒதுக்கீடு வேண்டும்
என்று போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு சாதி மக்களிடம் பகையை தூண்டுவது) மக்களிடம்
பிளவை ஏற்படுத்துவதை நாம் காணலாம். மேலும் கூலி அடிமை முறையை ஒழிப்பதற்கான
வர்க்கப் போராட்டம் தேவையில்லை சலுகைகளுக்காக மட்டும் போராடினால் போதும் என்ற
மனோநிலையை உழைக்கும் மக்களிடம் ஏற்படுத்தப்பட்டது. ஆகவே லெனின் கூறியது போல இந்த
சீர்திருத்தவாத கண்ணோட்டம் கொண்டவர்கள் இன்றும் மக்களை பிளவுபடுத்துவதையும்
ஏமாற்றுவதையும் வர்க்கப் போராட்டத்தை திசைதிருப்புவதையும் அவர்களின் வர்க்கப்
போராட்ட உணர்வுகளை மழுங்கடிப்பதையும் நாம் காணலாம்.
‘’தொழிலாளர்களிடையே சீர்திருத்தவாதிகளின் செல்வாக்கு
எவ்வளவுக்கு எவ்வளவு பலமாய் இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு
தொழிலாளர்கள் பலமிழந்தவர்களாகிவிடுகிறார்கள் முதலாளித்துவ வர்க்கத்தை அண்டி வாழ
வேண்டிய அவர்களது சார்பு நிலை அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாகிவிடுகிறது.
முதலாளித்துவ வர்க்கம் பல்வேறு தக்கடி வித்தைகளைக் கையாண்டுச் சீர்திருத்தங்களை
தள்ளுபடி(பறித்துக்கொள்வது) செய்வது அவ்வளவுக்கு அவ்வளவு எளிதாகிவிடுகிறது’’
என்றார் லெனின்.
இங்கே உழைக்கும் மக்களிடையே சோசலிசக் கொள்கையில் உறுதியாக உள்ள
மார்க்சிய லெனினியவாதிகளின் செல்வாக்கு உழைப்பாளர்களிடம் இல்லை. உழைப்பாளர்கள்
சீர்திருத்தவாதத்தை அடிப்படையில் ஏற்றுக்கொண்ட திருத்தல்வாதிகள் மற்றும்
சீர்திருத்தவாதிகளின் செல்வாக்கில்தான் உள்ளனர். இவர்களின் செல்வாக்கின் கீழ்
உழைப்பாளர்கள் இருப்பதால்தான் இந்த உழைப்பாளர்கள் பலமிழந்தவர்களாகவும் முதலாளித்து
வர்க்கத்தாரை அண்டி வாழ்பவர்களாகவும் தொடர்ந்து பழக்கப்பட்டுவிட்ட காரணத்தால்
இதுவரை உழைப்பாளர்கள் அனுபவித்து வந்த சலுகைகளை இன்றைய ஆட்சியாளர்கள் எளிதாக பறித்துக்கொண்டு
இருக்கிறார்கள். லெனின் அப்போது சொன்னது இப்போதும் இங்கே எதார்த்த உண்மையாக
இருக்கிறது.
‘’எல்லா நாடுகளிலும் சீர்திருத்தவாதிகள்
இருக்கிறார்கள். ஏனெனில் எங்கும் முதலாளித்துவ வர்க்கத்தினர் ஏதேனும் ஒரு வழியில்
தொழிலாளர்களை சீரழிக்க முனைகின்றனர், கூலி அடிமை முறையை
ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தையே உழைப்பாளர்கள் கைவிட்டு விட்டு மனநிறைவு கொண்ட
அடிமைகளாக உழைப்பாளர்களை மாற்ற முயலுகின்றனர்’’. என்றார்
லெனின்.
லெனின் சொன்னது போலவே இங்கே சீர்திருத்தவாதிகள் உழைக்கும் மக்களை
சீரழித்து கூலி அடிமை முறையிலேயே சுகம் காண்பவர்களாக மாற்றிவிட்டதையும் கூலி
அடிமைத்தனத்தை முடிவிற்கு கொண்டுவர முன்வராததையும் நாம் பார்க்கலாம். என்று மடியும் இந்த அடிமையின் மோகம் என்று பாரதி
பாடினாரே அந்த நிலையில்தான் இங்கு தொழிலாளி வர்க்கம் இருக்கிறது இதற்கு காரணமாக
தொழிலாளி வர்க்கத்தை குறை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த நிலைக்கு
தொழிலாளி வர்க்கத்திற்கு தலைமை ஏற்று வழிகாட்டிய இந்த சீர்திருத்தவாதிகளே, திருத்தல்வாதிகளே காரணம் என்ற உண்மையை
நாம் புரிந்துகொள்வோம்.
‘’சீர்திருத்தவாதம் உண்மையில் மார்க்சியத்தை கைவிட்டு
அதற்குப் பதிலாக முதலாளித்துவ சமூக கொள்கையை பின்பற்றுவதைக் குறிக்கிறது என்றும்
மார்க்சிய நிறுவனம் அதாவது கம்யூனிஸ்டு கட்சி அழிக்கப்படுவதையும் தொழிலாளி
வர்க்கத்தின் ஜனநாயகக் கடமைகளை மறுத்துவிட்டு அவற்றுக்குப் பதிலாக மிதவாத
தொழிலாளர் கொள்கை பின்பற்றுவதை குறிக்கிறது’’ என்றார்
லெனின்.
லெனின் கூறியது போலவே இந்தியாவில் சீர்திருத்த கொள்கைகளை
ஆட்சியாளர்கள் செயல்படுத்திக்கொண்டிருந்த காலங்களில் தொழிலாளி வர்க்க இயக்கமானது
மார்க்சியத்தை கைவிட்டு விட்டு சீர்திருத்தவாத கொள்கையைப் பின்பற்றும்
திருத்தல்வாதமாக மாறியது. பொதுவுடமை கட்சியானது திருத்தல்வாத கட்சியாக மாறியது
வரலாறு. இதற்கு காரணம் பல, அவற்றில் ஒன்றுதான் கீன்சிய சீர்திருத்தவாத
கொள்கையாகும். இவ்வாறு பொதுவுடமை கொள்கையையே கைவிட்டு விட்டு திருத்தல்வாத கொள்கை
உருவானதற்கு காரணமான கீன்சிய சீர்திருத்த கொள்கையை இப்போது கொண்டுவந்து பின்பற்ற
வேண்டும் என்று புதிதாக முளைத்த திருத்தல்வாதிகள் சொல்கிறார்களே அவர்களை நாம் இனம்
கண்டுகொள்ள வேண்டும்.
எனினும் சீர்திருத்தங்களுக்கு கம்யூனிஸ்டுகள் எதிரானவர்களா? என்ற கேள்வியை எழுப்பி இல்லை என்றும் சீர்திருத்தங்களை மார்க்சியவாதிகள்
எப்படி பார்க்கிறார்கள் அதனை எப்படி அனுக வேண்டும் அதனை கடைபிடிக்க நாம் என்ன
வகையான அனுகுமுறையை கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு லெனின் கீழ் கண்டவாறு
வழிகாட்டுகிறார்.
‘’மார்க்சிய தத்துவத்தை கிரகித்துக் கொள்ளும்
தொழிலாளர்கள், அதாவது மூலதனத்தின் ஆதிக்கம் நீடிக்கும் வரை
கூலி அடிமை முறை தவிர்க்க முடியாமல் நீடிக்கும் என்பதை உணர்ந்துகொள்ளும்
தொழிலாளர்கள், முதலாளித்துவ சீர்திருத்தம் எதனாலும்
ஏய்க்கப்பட்டுவிட மாட்டார்கள். எங்கே முதலாளித்துவம் தொடர்ந்து நீடிக்கிறதோ அங்கே
சீர்திருத்தங்கள் நீடித்து நிலைக்கவோ அதிக பயனளிப்பனவாகவோ இருக்க முடியாதென்பதை
உணர்ந்துகொள்ளும் இத்தொழிலாளர்கள், மேம்பாடான நிலைமைக்காகப்
போராடி, கூலி அடிமை முறைக்கு எதிரான போராட்டத்தை
மும்முரமாக்குவதற்காக இம்மேம்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.’’ என்றார் லெனின்.
இந்தியாவில் தொழிலாளி வர்க்கங்களுக்கு தலைமை தாங்கியவர்கள் இந்த
சீர்திருத்தங்கள் நீடித்து நிலைக்காது என்றும் அதிக பயன் கொடுப்பதாகவும் இருக்காது
என்ற உண்மையை சொல்லி தொழிலாளர்களுக்கு மார்க்சிய லெனினியத்தை போதித்து அதனை
தொழிலாளர்கள் கிரகித்துக்கொள்ளும்படி செய்திருந்தால் தொழிலாளர்களை ஆட்சியாளர்களும்
சீர்திருத்தவாதிகளும் ஏமாற்றியிருக்க முடியாது. இந்த மூலதனத்தின் ஆதிக்கம்
நீடிக்கும் வரை கூலி அடிமை முறை நீடிக்கும் என்பதை தொழிலாளர்களுக்கு எடுத்துச்
சொல்லி கூலி அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதுதான் தொழிலாளர்களின் லட்சியம்
என்பதை தொழிலாளர்களுக்கு உணர்த்தி அதற்கான போராட்டத்தில் இந்த முதலாளிகளையும் அதன்
ஆட்சியாளர்களையும் எதிர்த்த வர்க்க அரசியல் போராட்டத்தில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபடுபடுவதற்காக இந்த சீர்திருத்த
சலுகைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறி தொழிலாளர்கள் வளர்க்கப்பட்டு
இருக்க வேண்டும். இந்த வகையில்தான் சீர்திருத்தத்தை மார்க்சியவாதிகள் இந்தியாவில்
அனுகியிருக்க வேண்டும். அப்படி லெனினிய முறையில் இங்கு தொழிலாளி வர்க்க இயக்கம்
அனுகவில்லை அதன் விளைவுதான் இன்றைய இழிநிலையாகும்.
‘’தொழிலாளி வர்க்க இயக்கம் எவ்வளவுக்கு எவ்வளவு
சுயேச்சையாக இருக்கிறதோ, அதன் குறிக்கோள்கள் எவ்வளவுக்கு
ஆழமாகவும் விரிவாகவும் உள்ளதோ, சீர்திருத்த குறுகிய
நோக்கிலிருந்து அது எவ்வளவுக்கு எவ்வளவு விடுபட்டு இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு தொழிலாளர்கள் மேம்பாடுகளை (சலுகைகளை) விடாது
இருத்திக் கொள்வதும் (அதாவது முதலாளிகளால் பறித்துக்கொள்ள முடியாதபடி தடுப்பது)
அதனை பயன்படுத்திக் கொள்வதும் எளிதாகிவிடுகிறது.’’ என்கிறார்
லெனின்.
இதன் மூலம் லெனின் வலியுறுத்துவது என்ன? தொழிலாளி வர்க்க இயக்கம் மற்றும் அதன் கட்சியானது சுதந்திரமான கட்சியாக
இருக்க வேண்டும், அது தனது கொள்கைகளை சுதந்திரமாக உழைக்கும்
மக்களின் நலனிலிருந்து எடுக்க வேண்டும். முதலாளித்துவ ஆட்சியாளர்களால் எடுத்து
கொண்டுவரப்படும் சீர்திருத்த கொள்கைகளை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது அந்த
கொள்கைகளை உழைக்கும் மக்களின் நலனிலிருந்து பரிசீலித்து சுதந்திரமாக முடிவெடுக்க
வேண்டும். உதாரணமாக சாதி அடிப்படையில் வேலை வாய்ப்பிற்கு சலுகை வழங்கும் கொள்கை
உழைப்பாளர்களின் நலனுக்கான சீர்திருத்த கொள்கை இல்லை, மாறாக
உழைப்பாளர்களை ஏமாற்றுவதற்கும் சாதி அடிப்படையில் பிளவுபடுத்துவதற்கான கொள்கை
என்று அதனை நிராகரித்து அனைத்து மக்களுக்கும் வேலை கொடு, வேலை
கொடுக்க முடியாதவர்களுக்கு நிவாரணம் கொடு என்ற சீர்திருத்த கொள்கையை முன்வைத்து
தொழிலாளர்களின் போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். சீர்திருத்த கொள்கை என்பது
குறுகிய நோக்கம் கொண்டது என்பதை தொழிலாளர்களுக்கு உணர்த்தி அதற்கு தொழிலாளர்கள்
பலியாகிவிடக்கூடாது என்று தொழிலாளர்களை எச்சரித்து இருக்க வேண்டும். அப்படி
எச்சரித்து தொழிலாளர்கள் வளர்க்கப்பட்டிருந்தால் இப்போது இன்றைய ஆட்சியாளர்களால்
தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் மற்றும் சலுகைகளை இவ்வளவு எளிதாக
பறித்திருக்க முடியாது. தொழிலாளி வர்க்க இயக்கம் சீர்திருத்த குறுகிய
நோக்கத்திலிருந்து விடுபடாமல் அந்த சீர்திருத்தத்திற்குள்ளேயே வீழ்ந்துவிட்டதாலேயே
இன்றைய உழைக்கும் மக்களின் இழிநிலை ஆகும்.
‘’சீர்திருத்தங்களைப் பெறுவதற்கும் பயன்படுத்திக்
கொள்வதற்குமான சாத்தியப்பாடு ஒன்றையேனும் தவறவிடாமல் மார்க்சியவாதிகள் அயராது வேலை
செய்கின்றனர். அதே வேளையில் சீர்திருத்துவாத்த்துக்கு அப்பாற்பட்ட
போராட்டங்களிலும் (அரசியல் போராட்டங்கள், கூலி அடிமை முறையை
ஒழிப்பதற்கான போராட்டங்களிலும்) மார்க்சியவாதிகள் ஈடுபடுகிறார்கள். ஆனால்
சீர்திருத்தவாதிகளும் திருத்தல்வாதிகளும் சீர்திருத்தங்களுக்காகப் போராடுவதோடு
தங்களது போராட்டங்களை நிறுத்திக்கொள்கிறார்கள். அதற்கு மேல் போராட்டங்களில்
தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள் என்றால் அதனை எதிர்த்து பெருங் கூச்சல் போடுகிறார்கள்’’
என்றார் லெனின்.
இதன் மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன? சீர்திருத்தங்களுக்காக குறிப்பாக உழைக்கும் மக்களை ஏமாற்றுவதற்கும்,
அவர்களை பிளவுபடுத்துவதற்கும், அவர்களது
போர்குணத்தை மழுங்கடிப்பதற்கும் பயன்படும் சீர்திருத்தத்திற்கு எதிரான உழைக்கும்
மக்களின் வாழ்வை மேம்பாடுத்தும், அவர்களிடையே ஒற்றுமையை
பலப்படுத்தும் மேலும் உழைக்கும் மக்களின் வர்க்க உணர்வை வளர்ப்பதற்கு பொறுத்தமான
சீர்திருத்தங்களை உழைக்கும் மக்களின் தலைவர்கள் சுதந்திரமாக சிந்தித்து உருவாக்கி
அத்தகைய சீர்திருத்தங்களுக்காக உழைக்கும் மக்களை போராட வைத்திருக்க வேண்டும். அதோடு நிறுத்திக் கொள்ளாமல் கூலி அடிமைத்தனத்திற்கு முடிவு
கட்டுவதற்கான அரசியல் போராட்டங்களிலும் ஈடுபட வேண்டும். இந்த முறையில்தான்
சீர்திருத்தத்திற்கான போராட்டங்களை நடத்திட வேண்டும் என்று லெனின் பிராவ்தா துருதா,
இதழ் 2, ல் 1913 ஆண்டு
லெனின் எழுதி உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு வழிகாட்டினார்.
ஆனால் இந்தியாவில் தொழிலாளி வர்க்க இயக்கம் தோன்றியது முதல் இன்றுவரை
சீர்திருத்தவாதம் பற்றிய இந்த லெனினிய வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ளவும் இல்லை,
அதனை பின்பற்றவும் இல்லை. இதன் விளைவுதான் இப்போது உழைக்கும்
மக்களிடையே பிளவு, அவர்களிடத்திலுள்ள போர்க்குண இழப்பு,
அடிமை வாழ்விலான மோகம் போன்ற இழிநிலைகள். இப்போதாவது
விழித்துக்கொண்டு தொழிலாளி வர்க்கம் சீர்திருத்தவாத்த்தை எதிர்த்துப் போராட முன்வர
வேண்டும் என்று தொழிலாளி வர்க்கத்திற்கு இலக்கு கோரிக்கை வைக்கிறது.
சீர்திருத்தம் என்பது தொழிலாளர்கள் 8 மணி நேர
வேலைக்கான போராட்டம், குறைவான பேருந்து கட்டணம் போன்ற
சலுகைகளை குறிக்கிறது. சீர்திருத்தவாதம் என்பது கீன்சியம் போன்ற
ஏகாதிபத்தியவாதிகளின் பொருளாதாரக் கொள்கைகளை குறிக்கிறது. மார்க்சியவாதிகள்
உழைக்கும் மக்களின் மேம்பட்ட வாழ்க்கைகாக சீர்திருத்தங்களுக்கான போராட்டங்களில்
ஈடுபடுகிறார்கள். அதே வேளையில் முதலாளிகளின் (ஏகாதிபத்தியவாதிகளின்)
சீர்திருத்தவாதக் கொள்கைகளை எதிர்த்தும் சீர்திருத்தவாதிகளை எதிர்த்தும்
போராடுகிறார்கள். மார்க்சியத்தை பேசிக்கொண்டே ஏகாதிபத்திய முதலாளிகளின் நலன்
காக்கும் சீர்திருத்தவாதக் கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்குவது சித்தாந்தத் துறையில் கலைப்புவாதமே
ஆகும். மேலும் அரசியலில் நிதிமூலதனக் கூட்டத்திற்கு அடிபணியும் சமரவாதமே ஆகும்.
இதுதான் இந்திய ஏகாதிபத்திய சார்பு சீர்திருத்தவாதிகளின் வரலாறாகும். இதனை
விளக்கமாக புரிந்துகொள்ள வேண்டியது மார்க்சியவாதிகளின் கடமையாகும்.
குறிப்பு:- திருத்தல்வாதம் எதிர்ப்போம், மார்க்சியம் காப்போம் என்ற லெனினது நூலில் பக்கம் 119ல் மார்க்சியமும் சீர்திருத்தவாதமும் என்ற லெனினது கட்டுரையின்
அடிப்படையிலேயே இந்த கட்டுரை எழுதப்பட்டது.
இலக்கு இணைய இதழ்கட்டுரையே