மார்க்சியம் என்றால் என்ன? (கேள்வி – பதில் வடிவில்)-பகுதி -2 தத்துவம்- அ.கா. ஈஸ்வரன்

 


லெனின்:- “தத்துவஞானப் பொருள்முதல்வாதத்தை மார்க்ஸ் ஆழமாக்கி வளர்த்து நிறைவு பெறச் செய்தார். இயற்கை பற்றிய அறிதலை மனித சமூகம் பற்றிய அறிதலாகவும் விரிவாக்கினார். மார்க்சின் வரலாற்றுத் துறைப் பொருள்முதல்வாதம் விஞ்ஞானச் சிந்தனைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது. முன்பெல்லாம் வரலாற்றையும் அரசியலையும் பற்றிய கருத்துக்களில் குழப்பமும் தான்தோன்றித் தனமும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இப்போது அவை போய், வியப்பூட்டும் அளவுக்கு ஒருமித்த முழுமையும் உள்ளிணக்கமும் கொண்ட ஒரு விஞ்ஞானத் தத்துவம் வந்துவிட்டது.”

1) தத்துவம் என்றால் என்ன?

இந்த உலகம் எங்கிருந்து வந்தது? மனித இனம் இவ்வுலகில் எவ்வாறு தோன்றியது? வாழ்க்கையின் சாரம் என்ன? இது போன்ற கேள்விகளைப் பற்றிச் சிந்திக்கும் போது தன்னை அறியாமலேயே தத்துவத்தின் அடிப்படைகளைப் பற்றிச் சிந்திக்கின்றனர். இந்தக் கேள்விகளுக்கு எந்த விடையளித்த போதிலும் அதற்கு ஒரு தத்துவத்தின் உட்பொருள் இருக்கும். இவை அவர் சார்ந்திருக்கும் வர்க்கத்திற்குத் தக்கப்படி அமைந்திருக்கும். இவ்வகையில் தத்துவம் சமூக வாழ்வின் பிரதிபிலிப்பாகவே திகழ்கிறது.

2) தத்துவத்தைச் சுருக்கமாக ஒற்றை வரியில் கூறமுடிமா?

முடியும். இயற்கை, சமூகம், சிந்தனை இவற்றுடைய வளர்ச்சியின் மிகப் பொதுவான விதிகளைத் தத்துவம் ஆராய்கிறது.

3) அப்படி என்றால் தத்துவம் என்பது அவ்வளவு எளிதானதா? இதில் எளிது கடினம் என்பதைவிட நமக்குத் தேவையானதா? தேவையற்றதா? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தேவையானதை எளிதாகவோ கடினமாகவோ கற்றுத்தான் ஆக வேண்டும்.

கற்கும் வழி அறிந்தால் எளிதானது, வழி அறியாதவரை கடினமானது. சுருக்கம் எளிமையாகத்தான் இருக்கும். அதனை விரித்துப் புரிந்து கொள்வதற்கு முயற்சி எடுக்கத்தான் வேண்டும்.

4) இயற்கைப் பற்றியும், சமூகத்தைப் பற்றியும் தத்துவம் என்ன சொல்கிறது?

தொடக்கக் காலத்தில், இயற்கை, சமூகம் என்று தத்துவம் பிரித்து விவரிக்கவில்லை இருந்தாலும் இரண்டையும் விளக்கியிருக்கிறது. இந்த விளக்கம் தத்துவத்தை இரண்டு பிரிவாகப் பிரிக்கிறது

5) இந்த இரண்டு பிரிவு எது?

ஒன்று கருத்துமுதல்வாதம் மற்றொன்று பொருள்முதல்வாதம்

6) இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

தத்துவம் எழுப்புகின்ற கேள்விக்கு அளித்திடும் பதிலைக் கொண்டு ஒன்றை கருத்துமுதல்வாதம் என்றும் மற்றொன்றை பொருள்முதல்வாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

7) அது என்ன கேள்வி-பதில்?

கடவுள் உலகத்தைப் படைத்தாரா அல்லது மனிதன் தோன்றுவதற்கு முன்பே இருந்து வருகிறதா? படைக்கப்பட்டது என்று பதிலளிப்பவர்கள் கருத்துமுதல்வாதத்தின் பல்வேறு பிரிவினைச் சேர்ந்தவர்கள். இவர்களது விளக்கம் உலகம் ஏதோ ஒரு விதத்தில் படைக்கப்பட்டது என்கிற அனுமானத்தில் இருந்து தொடங்குகிறது. இயற்கைதான் முதன்மையானது என்று கருதுபவர்கள் பொருள்முதல்வாதத்தின் பல்வேறு பிரிவினைச் சேர்ந்தவர்கள்.

8) இரு பிரிவுகளிலும் பல உட்பிரிவுகள் இருக்கின்றனவா?

ஆம். கருத்துமுதல்வாதத்திலும் பொருள்முதல்வாதத்திலும் பல உட்பிரிவுகள் இருக்கின்றன.

9) கருத்துமுதல்வாதத்தின் பிரிவுகள் எத்தனை?

ஒன்று அகநிலை கருத்துமுதல்வாதம் மற்றொன்று புறநிலை கருத்துமுதல்வாதம். அனைத்து கருத்துமுதல்வாதங்களும் இவ்விரு பிரிவுக்குள் அடங்கும்.

10) அகநிலை கருத்துமுதல்வாதம் என்றால் என்ன?

உலகில் காணப்படும் அனைத்துப் பொருட்களும் மனித உணர்வின் விளைபொருட்கள் என்று அகநிலைக் கருத்துமுதல்வாதம் கருதுகிறது. காணப்படும் பொருட்கள் அனைத்தும் மனதின் படைப்பே என்கிறது. அதாவது படைக்கப்பட்ட அனைத்தும் அகத்தினால் தோன்றியதாகக் கருதுகிறது. இத்தத்துவத்தில் புகழ் பெற்ற சிந்தனையாளர்கள் இங்கிலாந்தில் பெர்க்லி, ஆஸ்திரியாவில் மாஹி, இந்தியாவில் ஆதிசங்கரர், ரமணர், விவேகானந்தர் போன்றோர். அகநிலைக் கருத்துமுதல்வாதத்தின் நவீன வடிவமாக நேர்காட்சிவாதம், இருத்தலியல், பின்நவீனத்துவம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

11) புறநிலை கருத்துமுதல்வாதம் என்றால் என்ன?

காணப்படும் உலகம், மனித உணர்வு நிலைக்கு அப்பாற்பட்டதும், வெளியில் இருக்கக் கூடியதுமான முழுமுதற் கருத்தின் விளைபொருள் என்றுரைக்கிறது புறநிலைக் கருத்துமுதல்வாதம். பிரபஞ்சம் இவ்வுலகிற்கு அப்பால் உள்ள சக்தியால் தோற்றுவிக்கப்பட்டது. அதாவது படைப்புக்கான சக்தி இவ்வுலகிற்கு அப்பால் காணப்படுகிறது. அதனால் தான் தமிழில் இதற்கு அப்பாலைத் தத்துவம் என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது. புறநிலை கருத்துமுதல்வாதத்தின் புகழ்பெற்ற சிந்தனையாளர்கள், கிரேக்கத்தில் பிளாட்டோ, ஜெர்மனியில் ஹெகல், இந்தியாவில் ராமானுசர், மத்துவர், சைவசித்தாந்தியான மெய்கண்டர் போன்றோர்கள்.

12) இதே போல் பொருள்முதல்வாதத்திலும் பிரிவுகள் இருக்கின்றனவா?

ஆம் இருக்கின்றன. அதில் முதன்மையானது ஒன்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றொன்று இயக்கமறுப்பியல் பொருள்முதல்வாதம்.

13)இயக்கமறுப்பியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?

இயந்திரகதிப் பொருள்முதல்வாதத்தையும், பகுத்தறிவுவாத நாத்திக பொருள்முதல்வாத்தையும் இயக்கமறுப்பியல் பொருள்முதல்வாதம் என்று கூறலாம். மார்க்சுக்கு முன்பான பொருள்முதல்வாதம் இயந்திரகதி தன்மையினைப் பெற்றதாக இருந்தது. இயற்கை, சமூகம் ஆகியவற்றை இயந்திரகதி வழியில் இயங்குவதாக விளக்கியது. இயற்கைப் பற்றிய விளக்கத்தில் இயலுலகிற்கு அப்பால் இருந்து தொடங்காமல், இயற்கையிடம் இருந்தே தொடங்கியது என்ற வகையில் இது முற்போக்கானதே. ஆனால் சமூகமும் இயற்கையும் மாறுதல் அற்றவையாகவும் மாற்ற முடியாதவையாகவும் விளக்கியது. பகுத்தறிவுவாதம் ஆன்மீகத்தை எதிர்க்கும் வகையில் அது பொருள்முதல்வாதமே. ஆனால் இந்த ஆன்மீகத்தின் தோற்றத்தை மனிதனது சிந்தனையில் கண்டது. அதற்கான புறநிலையை அறிந்து அதனடிப்படையில் போராடாமல், வெறும் அறிவுத்துறை போராட்டமாகச் சுருக்கியது. சிந்தனையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பகுத்தறிவில் கண்டது. பகுத்து அறியப்படுபவை எங்கிருந்து வந்தது என்பதைக் கவனத்தில் கொள்ளவில்லை. கடவுளை மறுத்தலே அறிவுக்கு வழியாகக் கண்டது. கருத்தின் சார்புக்கும், அதன் மாற்றத்திற்கும் காரணமான பொருளயாத புறநிலையைக் கணக்கில் கொள்ளவில்லை. சிந்தனையைத் தர்க்க வழிப்பட்டதாகச் சுருக்கி விளக்கியது.

14) மார்க்சியம் எத்தகைய பொருள்முதல்வாதம்?

மார்க்சியம் இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஆகும். இயற்கையையும் சமூகத்தையும் அறிந்திட முடியும், இவை இரண்டும் நமக்குப் புறத்தே நம்மைச் சார்ந்திடாமல் புறநிலையில் இயங்குகின்றன என்கிறது இத் தத்துவம். பொருள்முதல்வாதம் உலகை உள்ளது உள்ளபடியே காணவேண்டும் என்பதையும், உலகின் பொருளாயத ஒற்றுமையின் அடிப்படையைப் பருப்பொருளின் இணைப்பில் காண வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. பொருள்முதல்வாத சிந்தனையில் புகழ்பெற்றவை கிரேக்கத்தில் டெமாக்கிரிட்டஸ், இந்தியாவில் சாங்கியம், ஆதிபுத்தர், உலகாயதர். சார்வாகர், அணுவாதம் பேசும் வைசேஷிகர் போன்றோரின் சிந்தனைகள். இயக்கவியல் பொருள்முதல்வாத சிந்தனையாளர்யாளர்களில் புகழ்பெற்றவர் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஜார்ஜ் தாம்சன், இந்தியாவில் தேவிபிரசாத் சாட்டோபாத்தியாயா, கோசாம்பி, ஆர்.கே.சர்மா, நா.வானமாமலை, கோ.கேசவன், இலங்கையில் கைலாசபதி போன்றோர்கள்.

மரபுவழிப்பட்ட பொருள்முதல்வாதத்தின் தொடர்ச்சியே நவீன மார்க்சிய பொருள்முதல்வாதம். பழைய பொருள்முதல்வாதத்தில் காணப்படும் குறைகளையும் அதன் இயக்கமறுப்பியல் தன்மையையும் நீக்கி முரணற்ற இயக்கவியல் பொருள்முதல்வாதத்தைத் தோற்றுவித்தது.

15) இந்த இரண்டு தத்துவப் போக்கிற்கும், அடுத்தப் போக்கு அல்லது நடுப் போக்கு என்று எதேனும் இருக்கிறதா?

தத்துவத்தில் இரண்டு போக்கிற்கு இடையே நடுப்போக்கு என்றும் மூன்றாம் போக்கு என்றும் ஏதும் கிடையாது. தத்துவம் எழுப்பும் கேள்விக்குப் பதில் அளிப்பதில் இருந்து விலகுவதின் மூலம் இந்த நடு மூன்றாம் போக்கினர் கருத்துமுதல்வாதப் பாதையிலேயே பயணிக்கின்றனர். கதம்பவாதப் போக்கு கருத்துமுதல்வாத முடிவுக்கே இறுதியில் இட்டுச் செல்லும்.

16) கருத்துமுதல்வாதம் சிறந்ததா? பொருள்முதல்வாதம் சிறந்ததா?

இதற்கு நேரடியாக அல்லாமல் வேறுவிதமாகப் பதிலளிக்கலாம். அதாவது கருத்துமுதல்வாதம் தமது வாதத்தை அனுமானத்தின் அடிப்படையில் அமைத்துக் கொள்கிறது. பொருள்முதல்வாதம் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி குறைந்த காலத்தில் கருத்துமுதல்வாதம் சிறப்பைப் பெற்றிருந்தது. ஏன் என்றால் பொருள்முதல்வாதத்திற்குத் தேவைப்படுகிற விஞ்ஞான வளர்ச்சி அப்போது பெறவில்லை.

17) அதனால் தான் அன்று கருத்துமுதல்வாதத்தின் கையோங்கியிருந்ததா?

ஆமாம். இதனை எங்கெல்ஸ் சிறப்பாக விளக்கி இருக்கிறார். சிந்தனைக்கும் பருப்பொருளுக்கும் இடையிலான உறவை தெளிவுபடுத்துவதற்குத் தேவைப்படுகிற விஞ்ஞான வளர்ச்சி ஏற்படாத அந்தக் காலத்திய பொருளமுதல்வாதம், இயற்கைப் பொருள்முதல்வாதமாகவே இருந்தது. இன்றைய விஞ்ஞான வளர்ச்சியை எட்டாத அன்றைய நிலையில், இந்தப் பிரச்சினைக்கு உடலில் இருந்து ஆன்மா பிரிக்கப்படத்தக்கது என்ற போதனைக்கும், பிறகு இந்த ஆன்மாவுக்கு இறவாத் தன்மையைத் துணிந்துரைப்பதற்கும், இறுதியில் ஒரு கடவுள் கோட்பாட்டிற்கும் கருத்துமுதல்வாதம் வந்தடைந்தது. எனவே பழைய பொருள்முதல்வாதம் அன்றைய கருத்துமுதல்வாதத்தால் நிலைமறுக்கப்பட்டது என்கிறார். விஞ்ஞான வளர்ச்சினால் இயக்கவியல் பொருள்முதல்வாதம் இன்றைய நிலையில் கருத்துமுதல்வாதத்தை நிலைமறுக்கிறது.

18) இன்றும் கருத்துமுதல்வாதம் மேலோங்கி தானே இருக்கிறது?

ஆம். உண்மை தான். இன்றைய கருத்துமுதல்வாதத்தின் வேர்கள் சமூகச் சூழநிலையில் அடங்கி இருக்கிறது. மனித அறிதலின் போதாமையை நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் நீக்கிவிட்டது உண்மையே, ஆனால் சமூகத்தின் வழியிலான அழுத்தம் முதலாளித்துவச் சமூகத்தில் கடுமையாகத் தொடர்கிறது. முதலாளித்துவ உற்பத்தியில் காணப்படும் முரண்களுடைய ஏற்ற இறக்கங்கள் ஏற்படுத்தும் அச்ச உணர்வும் பாதுகாப்பின்மையும் இன்றைய கருத்துமுதல்வாதத்தின் வேர்களாகிறது. அச்ச உணர்வே கருத்துமுதல்வாதத்தின் பிறப்பிடம். அதனால் தான் கம்யூனிஸ்டுகளின் நாத்திகப் போராட்டம் சித்தாந்தப் போராட்டமாகச் சுருக்கிவிடாமல், அதன் சமூக வேர்களை அகற்றும் போராட்டத்துடன் இணைத்துக் காணப்படுகிறது.

தொடரும்

9 comments:

  1. சிறப்பாக இருக்கிறது தோழர் அ கா ஈஸ்வரன் அவர்கள்.

    ReplyDelete
  2. நன்றி தோழர் கருத்திற்க்கு

    ReplyDelete
  3. மகிழ்ச்சி தோழர்

    ReplyDelete
  4. மகிழ்ச்சி தோழர்

    ReplyDelete
    Replies
    1. தோழர் பொருள்முதல்வாத சிந்தனையாளர்களில் மாவோ கிடையாதா

      Delete
    2. தோழர் எந்த அடிப்படையில் இந்தக் கேள்வி மாவோ பற்றி? விளக்கமான கேள்வியாக இருந்தால் பதிலளிக்க ஏதுவாக இருக்கும் என்பத்ற்க்கே தோழர்

      Delete
  5. ARUMAI THOZHAR

    ReplyDelete
  6. சிறப்பு 💖

    ReplyDelete
  7. ஸ்டாலின் கூட குறிப்பிடவில்லை தோழர். ஐவரில் மூவரையே சேர்க்கப்பட்டுள்ளது. அனைவரையும் பதிவிடமுடியாது என்பதனால் இந்த சுருக்கம். இதில் குறிப்பிட்டவர்கள் மாதிரிக்கு தான்

    ReplyDelete

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்