இந்திய பாசிசம் ஒரு மார்க்சிய ஆய்வு - பிரேமசந்திரன்

 

சென்ற இதழின் தொடர்ச்சி......பிரிட்டீஷாரின் காலனியத்தை கட்டிகாப்பாற்றுவதற்கான காலனிய இனவியல் கோட்பாடு.......

பிரிட்டீஷ் இந்த நாட்டில் காலனிய ஆட்சியை மேற்கொண்டபோது இங்கு நூற்றுக்கணக்கான மொழிகள் பேசக்கூடிய மக்களினங்களும், ஆயிரக்கணக்கான சாதிய பிரிவுகளும், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், புத்தமதத்தை சார்ந்தவர்கள், சைவர்கள், வைணவர்கள், சமணர்கள், ஆயிரக்கணக்கான குலதெய்வ மற்றும் சிறுதெய்வ, பெருதெய்வ வழிபாட்டு பிரிவினர்கள் போன்ற பல்வேறுபட்ட இறைவழிபாட்டு பிரிவினரே இங்கு இருந்தனர் பழக்க வழக்கங்களிலும் பண்பாட்டிலும் ஒருவரொக்கொருவர் முற்றிலும் மாறுபட்டவர்களாக வேறுபட்டவர்களாக இருந்தனர். இந்து என்ற சொல்லோ இந்து மதமோ இங்கு இருக்கவில்லை. வேதங்களிலோ மற்றும் இந்துமத சாஸ்திர நூல்கள் என்று கூறப்படும் பழைய நூல்களிலும் கூட இந்து என்ற சொல் கிடையாது. இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், புத்தமதத்தை போன்று திட்டவட்டமான ஒரு பொது இறைவழிபாட்டு முறை என்பது இந்துக்கள் அல்லது இந்து மதத்திற்கென்று இன்றுவரை கிடையாது. ''இந்து'' என்ற சொல்லுக்கு விளக்கமானது ''யார் கிறிஸ்தவர், சீக்கியர், பார்சி, புத்தமத பிரிவினர் மற்றும் இஸ்லாமியர் பிரிவுகளை சார்ந்தவராக இல்லையோ அவரே ''இந்து'' என்று பிரிட்டீஷார் வகைப்படுத்தினர்.

இதற்கு ஒப்புதல் சாட்சியாக காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியாரின் கூற்றொன்றை இங்கு கூறுவது சரியாக இருக்கும். அவர் கூறுவதாவது: "நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாக சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு இந்துக்கள் என்று பொதுப்பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக்காப்பாற்றியது. அவன் மட்டும் இந்து என்று பெயர் வைத்திருக்காவிட்டால் ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருகபக்தர், பிள்ளையார் உபாசகர், ஐப்பன் பக்தர், எல்லையம்மனை கும்பிடுகிறவர் என்று நம்மை பிரித்துக்கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக்கொண்டிருப்போம். இப்போது “இந்து சமூகம்'' என்று பொதுப்பெயரில் சொல்லப்படும் சமுதாயத்தை இப்படி ஏழு, எட்டாக தனித்தனி மதம் என்று பிரித்துவிட்டால் அதற்கப்புறம் ஒவ்வொரு ஊரிலும் முஸ்லீம், கிறிஸ்தவர்கள் போன்ற மதத்தவர்கள்தான் அதிக தொகையாக இருப்பார்கள்.அதாவது இப்போது தேசத்தின் இரண்டு பக்கங்களில் மட்டும் பாக்கிஸ்தான் முளைத்திருப்பது போல் இல்லாமல் நம் தேசம் முழுவதுமே பாக்கிஸ்தானாகி இருக்கும். எத்தனையோ கிருத்திருமங்கள் செய்து பாக்கிஸ்தானைப் பிரித்த அதே வெள்ளைக்காரன்தான் எத்தனையோ யுக்திகள் செய்து நம்மை ஆரியர் திராவிடர் என்றெல்லாம் பேதப்படுத்திய அதே வெள்ளைக்காரன்தான் தன்னையும் அறியாமல் நமக்கு இந்து என்று பொதுப்பெயரைத் தந்து இன்று இந்திய தேசம் என்று ஒன்று இருக்கும்படியான மகாபெரிய நன்மையை செய்திருக்கான்" சந்திரசேகரேந்திரசரஸ்வதி (காஞ்சி பரமாச்சாரியார்) தெய்வத்தின் குரல், பாகம் ஒன்று, ஏழாம் பதிப்பு, 1988, வானதி பதிப்பகம், சென்னை, பக்கம் 305 – 306.

ஆக நாம் பிரிட்டீஷாரை புரிந்துகொள்வது என்றால் அவர்களின் காலனி ஆதிக்கத்தின் வரலாறை புரிந்துகொள்வதுதான். முதலில் உலகம் முழுக்க ஐரோப்பியர்களுக்கு காலனிகள் இருந்தன. ஐரோப்பியகாலனி ஆதிக்கவாதிகளான பிரிட்டன், ஹாலந்து, போர்த்துகீஸ், பிரான்ஸ், இத்தாலி, மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் தாங்கள் காலனி ஆதிக்கம் செலுத்துவதற்கான தகுதியான இனம் என்று தங்களது நாட்டிலும் தாங்கள் ஆளுகின்ற காலனிய நாட்டிலும் நியாயப்படுத்தவும் காலனிய நாடுகளில் இனபாகுபாடுகள் மதபாகுபாடுகள் மற்றும் சாதியபாகுபாடுகள் (இந்தியாவில்) இவைகளை இட்டுகட்டி கட்டியமைத்து காலனிய மக்கள் தங்களை எதிர்த்து போராடாதவாறும் அவர்கள் மத்தியிலேயே பகை முரண்பாட்டை உருவாக்கி மோதவைக்கவும், தொடர்ந்து காலனியாதிக்கம் செலுத்தவும் காலனிய இனவியல் கொள்கையை 18 ஆம் நூற்றாண்டு இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டு முற்பாதியிலும் உருவாக்கினர். இவற்றில் தீவிர ஆர்வமும் அக்கறையும் எடுத்துக்கொண்டது பிரிட்டீஷ்தான். காரணம் உலகத்தில் பிரிட்டனுக்குத்தான் மிகப்பரந்து விரிந்து பரந்த செல்வ வளமிக்க இந்தியா உட்பட காலனிகள் அதிகம். அவர்களுக்கு அத்தகைய இனபேத ஆய்வு தேவைப்பட்டது. அந்த ஆய்வுகளில் முதன்மையாக பங்கெடுத்தவர்கள் வில்லியம் ஜோன்ஸ், ஜேம்ஸ் முல்லர் மற்றும் ஹெர்பர்ட்ரிஸ்லே இன்னும் பலர் ஆவர்.

அந்த ஆய்வின் மூலமாக ஆதியில் மத்திய ஆசியாவில் பேசப்பட்ட ஒரு தெய்வீக மூலமொழியிலிருந்து சமஸ்கிருதம், பார்சி, லத்தீன், கிரேக்கம், கோதிக் மற்றும் கெல்டிக் மொழிகள் தோன்றின. அதிலிருந்து அதன் கிளை மொழிகள் தோன்றின. இதன்மூலம் ஆரிய மேலான்மை கோட்பாடும் ஐரோப்பிய வெள்ளைத்தோல் மேலான்மை கோட்பாடும் நிறுவப்பட்டது. மஞ்சல் நிறம், பழுப்பு நிறமு மற்றும் கருப்பு நிறம் தாழ்ந்த இனமாக காட்டப்பட்டது. மேலே குறிப்பிட்ட மொழிகளிலிருந்து தோன்றிய மொழிகளான ஈரானிய மொழிகள், பிரெஞ்சு, ஸ்பானிஸ், இத்தாலி, கிரேக்கம் மற்றும் ஹெலனிய மொழிகள் ஆங்கிலம், டச்சு மற்றும் ஜெர்மானிய மொழிகள், ஐரிஸ் மற்றும் வேல்ஸ் மொழிகள் இவைகளை தவிர ஏனைய மொழிகள் அனைத்தும் தாழ்ந்த மொழிகளாக காட்டப்பட்டது. இறுதியிலே இங்குள்ள பிராமணர்களும் ஐரோப்பிய ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து படையெடுத்துவந்து இங்கிருந்த தாழ்ந்த குலங்களை வென்று அடிமைப்படுத்தி ஆரிய நாகரீகத்தை உருவாக்கினார்கள். ஐரோப்பிய ஆரியர்களாலும் இந்திய ஆரியர்களாலும் பொதுவாகப் பேசப்பட்ட மொழி சமஸ்கிருதமாகும் இந்தியாவிலுள்ள ஏனைய அனைத்து மொழிகளும் சமஸ்கிருதத்திலிருந்து உருவானவையாகும். இந்த ஆய்வுகள் எல்லாம் விவிலியத்தை ஆய்விற்கு எடுத்துக்கொண்டு செய்யப்பட்ட முடிவுகளாகும். இவைகள் வரலாற்றையும் விஞ்ஞானத்தையும் அடிப்படையாகக் கொண்டு புறவயநிலைமைகளை ஆய்வு செய்து வந்தடைந்த முடிவுகள் அல்ல. அவைகள் கற்பனையான உண்மைக்கு புறம்பான கருத்துமுதல்வாத முடிவுகளே.

மனுதர்ம அடிப்படையில் சாதிய பாகுபாடுகளை உருவாக்கி திடப்படுத்திய பிரிட்டீசாரின் பிராமணிய சட்டத்தொகுதி

மேலும் 18 ஆம் நூற்றாண்டு இறுதியில் இந்திய மக்கள் மத்தியில் தோன்றும் சர்ச்சைகளுக்கு தீர்வுகாணும் வகையில் சட்ட விதிகளின் தொகுதி ஒன்றை உருவாக்க அன்றைய கவர்னர் ஜெனரல் வாரன்ஹேஸ்டிங்ஸ் ஜென்டூ சட்டத்தொகுதி அல்லது பண்டிதர்களின் புனித ஆணைகள் என அழைக்கப்பட்ட விதிமுறைகளை உருவாக்க - 11 சமஸ்கிருத பண்டிதர்களை நியமித்தார். இங்குள்ள சமஸ்கிருத ஏடுகளை பிரிட்டீஷாரால் படிக்கவும் புரிந்துகொள்ளவும் முடியவில்லை எனவே அவர்கள் இந்தியாவின் மதநூல்கள் மற்றும் சமூக பழக்கவழக்கங்களில் பண்டிதர்களுக்கு இருந்த புரிதல் ஆகியவற்றின் அடிப்படையில் சட்டத் தொகுப்பு ஒன்றை உருவாக்கும்படி அவர்களை கேட்டுக்கொண்டனர். அதன் விளைவாக ஆங்கிலோ-பிராமணிய சட்ட நூல் ஒன்று உருவானது. அது வர்ணாஸ்ரம தர்மத்தை (மனுஸ்மிருதி) அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டது. அது முற்றிலுமாக வார்த்தை அளவிலும், உணர்வுகள் அளவிலும் உண்மையான நடைமுறைகளை மீறியதாக இருந்தது. ஏனென்றால் வார்த்தைகளைப் பொறுத்தவரை மூலங்களுடன் ஒப்பிடுகையில் அது துல்லியமற்று இருந்தது. உணர்வுகளைப் பொறுத்தவரை தங்களுக்கு அளிக்கப்பட்ட பணியை தங்கள் சாதிக்கு ஏற்றவாறு திரிக்கும் உரிமைகளாக எடுத்துக்கொண்டிருந்தனர். உண்மையில் அதற்கு எவ்வித இலக்கிய ஆதாரங்களும் இல்லாமல் இருந்தது. நாட்டில் சாதிய வேறுபாட்டு பிரச்சனைகளை ஏற்றத்தாழ்வு, அல்லது உயர்வு தாழ்வு பிரச்சனைகளாக இன்னும் பெரிதாக்கவே அது உதவியது.

காலனிய ஆதிக்கத்திற்கு முன்பிருந்த இந்திய மக்கள் சமூகத்தில் எழுந்த சர்ச்சைகள் அனைத்தும் ''சாதி'' அல்லது ''பிராதரி'' ''ஊர்'' கூட்டம் அல்லது ''பஞ்சாயத்து'' என்ற சமுதாய முறைகளில் தீர்வு காணப்பட்டதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். அதாவது மற்ற உயர் சாதியினரின் அங்கீகாரத்திற்கான அவசியம் எதுவும் இன்றி உள்ளூர் மரபுகள் மற்றும் பாரம்பரியங்களின் அடிப்படையில் ஒரு மனிதனுக்கு ஏற்படும் பிரச்சனையானது ஒரு சாதி அல்லது குலத்திற்குள் அவனது சக குடிமக்களாலேயே முடிவு செய்யப்பட்டது. மாறாக இந்த பிராமண பண்டிதர்கள் பரவலான யதார்த்த சமூக நடைமுறைகளை பிரதிபலிப்பதற்கு பதிலாக தங்களை ஒற்றை அதிகார மையம் என்ற அந்தஸ்தை நிறுவ நீண்டகாலமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கொள்கை அளவிலான நியாயங்களை அதாவது அவர்களால் எழுதப்பட்ட மனுஸ்மிருதியை சுட்டிக்காட்டினர். பெரும்பாலான பிரிட்டீஷார் அவர்கள் கூறியதே உண்மை என நம்பினர் எனினும் சிலருக்கு சந்தேகம் இருந்தது.

இந்திய சமூகத்தை மேலோட்டமாக பார்க்கும்போது உண்மையான சமூக நடைமுறைகளானது அன்று நிச்சயமாக அதிகாரப்பூர்வ அல்லது ''சாஸ்திரீய'' சட்டத்தைப் பின்பற்றவில்லை என்பது தெளிவு. ஆனால் இப்போது பழைய புனித நூல்கள் எல்லாம் மேற்கோள் காட்டப்படுகின்றன. அத்துடன் சமுதாயத்தின் தன்னாட்சி அதிகாரத்தை தடுக்கவும், மத மேன்மையின் பெயரால் மேலும் அதைக் கட்டுப்படுத்தவும் ஏதுவாக அந்தப் பழங்கால நெறிமுறைகளில் உண்மையில் முன்பு இல்லாத கடுமை புகுத்தப்பட்டது. இது பிரிட்டீஷாரின் நோக்கங்களை நன்றாக நிறைவேற்றியது.நிர்வாகக் காரணங்களுக்காக அவர்களுடைய காலனி மக்களையும், வளங்களையும் அதை கணக் கெடுக்கவும், வகைப்படுத்தவும், மதிப்பீடு செய்யவும் வெளிப்படையாக விரும்பியது.

இந்திய மக்கள் மீது பிரிட்டீஷாரின் கட்டுப்பாட்டைத் திணிக்கவும், நிலை நாட்டவும் இனம், சமுதாயம், சாதி மற்றும் நிறம் சார்ந்த பாகுபாடுகள் எல்லாம் பிரிட்டீஷ் அரசு திட்டத்தின் ஓர் அங்கமாகவே சக்திவாய்ந்த முறையில் கடை பிடிக்கப்பட்டன. அந்த நடை முறையில், வேதங்கள் பற்றிய ஞானத்துடன் கூடிய பிராமணர்கள் இந்தியாவில் தங்களுடைய ஆட்சிக்கு மிகத் தகுதியான, பொருத்தமான இடைத் தரகர்களாக இருப்பார்கள் என்ற அவர்களின் ஆரம்ப நம்பிக்கை மீண்டும் உறுதி செய்யப்பட்டது. மற்ற குழுக்களுடன் ஒப்பிடும்போது பிராமணர்கள் பிரிட்டீஷாரின் நல்லாதரவை நன்கு அனுபவித்தனர். அத்துடன், பிராமண பண்டிதர்களின் எண்ணங்களால் உந்தப்பட்டு, தாழ்ந்த சாதி என எண்ணிய மற்ற இனங்களை விட தாங்கள் மேலானவர்கள் என்றும் பிராமணர்கள் நினைக்கத் தொடங்கினர்.

அதன் விளைவாக, பிரிட்டீஷ் அரசாங்கத்தின் மிக முக்கிய பதவிகளில் எல்லாம் பிராமணர்கள் செல்வாக்கு செலுத்தத் தொடங்கினர். இத்தனைக்கும் மொத்த மக்கள் தொகையில் அவர்களுடைய எண்ணிக்கை 10 சதவீதம் மட்டுமே. ஆனால் அன்றைய இந்திய அரசுப் பணிகளில் அவர்கள் 90 சதவீத இடங்களைஆக்கிரமித்துக்கொண்டிருந்தனர். இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர். அதே வேளையில் மிகக் கீழ்நிலை பணிகளில் மட்டும் அவர்கள் இல்லை. இந்தியர்களுக்கு வாய்ப்பு இருந்த உயர் தொழில்களில், குறிப்பாக சட்டம், மருத்துவம் மற்றும் நிர்வாகத் துறைகளில் அவர்கள்தான் ஆதிக்கம் செலுத்தினர். பின்னர் அவர்கள் பத்திரிக்கை மற்றும் கல்வித்துறைகளில் நுழைந்தனர். எனவே, அதிலும் அவர்களின் குரல்தான் ஓங்கி ஒலித்தது. அதுவே இந்திய வெகுஜன கருத்தாகவும் மாறியது. பிராமணர்களுக்கு இத்தகைய ஆதிக்க அந்தஸ்த்தை வழங்கிய பிரிட்டீஷாரின் வருகைக்கு முன்னர் இந்தியா தகுதி மற்றும் திறமை அடிப்படையிலான மேலான சமுதாயமாகத்தான் இருந்தது.

மேலே கூறப்பட்ட இத்தகைய சமூகச் சூழல் நிலவுகையில்தான், 19 ஆம் நூற்றாண்டின் இனம் சார்ந்த கருத்துக்களும் (ஆரிய, திராவிட, மங்கோலிய, நீக்ரோ துராணியர், செமைட்டியர்.....இன்னும் இதுபோன்ற)வந்து சேர்ந்து கொண்டன. அமெரிக்க அறிஞர் தாமஸ் மெட்காஃப் இந்த சகாப்தத்தில் கடைபிடிக்கப்பட்ட வெள்ளைத்தோல் பெருமித இன உணர்வு எவ்வாறு ஐரோப்பிய நாகரீகத்தை உச்சத்தை எட்ட வைத்தது, அதே நேரத்தில், கறுப்பு நிற மக்களைக் கற்கால மனிதர்களாகவும், பலவீனமானவர்களாகவும், முன்னேற்றம் அடைவதற்கு ஐரோப்பிய அரவணைப்பை வேண்டி நிற்பவர்களாகவும் சித்தரித்தது என்பதை எடுத்துக் காட்டினார். வெள்ளைய,இன் இரண்டு நூற்றாண்டுகால ஆதிக்கத்தில் இருக்க நேர்ந்த இங்கு சொந்த நாட்டில் வாழ்ந்த மக்களும் இத்தகைய கருத்துக்கள் பலவற்றை தமதாக்கும் நிலைக்கு தவிர்க் இயலாமல் உள்ளாகி பிரிட்டீஷாரின் ஆதிக்கத்தின் கீழ் வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டனர்.

தொடரும்,,,,,,

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்