இங்கிலாந்தைச் சேர்ந்த தோழர் மாரிஸ் கார்ன்ஃபோர்த், “மார்க்சிய மூல நூல்களுக்கான வாசகர் வழிகாட்டி” என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்நூலில் மார்க்சிய லெனினியத்தை எப்படிக் கற்பது என்பதையும், அரசியல்- பொருளாதார- சித்தாந்தப் பிரச்சினைகளை மார்க்சிய லெனினியத்தின் அடிப்படையில் சீர்தூக்கிப் பார்ப்பதற்கான வழிமுறையை மார்க்சிய மூல நூல்களில் இருந்து எப்படி கற்றுக்கொள்வது என்பதைப் பற்றியும் விரிவாக விளக்குகிறார்.
இந்த நூலில் “பாட்டாளி வர்க்கக் கட்சி” என்ற தலைப்பில் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை மார்க்சிய ஆசான்களின் நூலில் இருந்து எப்படி கற்றுக் கொள்வது என்பதை விளக்கியிருக்கிறார். ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியின் முக்கியத்துவம் மற்றும் தன்மைகளை மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் உள்ளிட்ட மார்க்சிய ஆசான்களின் நூல்களில் இருந்து எடுத்துக்காட்டி, அந்நூல்கள் குறித்து அறிமுகப்படுத்துகிறார்.
இந்நூலின் ஒரு அத்தியாயமான “பாட்டாளி வர்க்கக் கட்சி” என்ற பகுதியை மட்டும் தொடராக இங்கு வெளியிடுகிறோம். இந்த நூல் கீழைக்காற்று வெளியிட்டகத்தில் கிடைக்கும். வாங்கிப் படித்துப் பயன்பெறவும் !வினவு
ஆக நமது ஆசானின் வழிகாட்டுதலை புரிந்துக் கொள்ள அவரின் நூல்களிலிருந்து தொடங்க ஒரு முயற்சிதான் இவை.
நேற்றைய வகுப்பில் பலர் பேசியிருந்தாலும் அரசும் புரட்சியும் நூலிலிருந்து விரிவான விளக்கத்தை தோழர் ரவீந்திரன் வைத்தார். அடுத்த வாரமும் தொடரும்....
பாட்டாளி வர்க்கக் கட்சி
மார்க்சியம், பாட்டாளி வர்க்கம் தனக்கென்று ஒரு கட்சியின்றி முதலாளித்துவத்தைத் தோற்கடிக்கவோ, அதிகாரத்தை வெல்லவோ, சோசலிசத்தைக் கட்டியமைக்கவோ முடியவே முடியாது என்று கற்பிக்கிறது.
மார்க்சும் எங்கெல்சும் சுதந்திரமான பாட்டாளி வர்க்கக் கட்சியின் தேவையை எல்லாவற்றிற்கும் மேலாக வலியுறுத்தி வந்தனர். முதலாம் அகிலத்தில் அவர்களால் வகுக்கப்பட்ட விதி ஒன்று “தனக்கென்று தனித்தன்மையுடைய ஒரு கட்சியை, உடைமையாளர்களது பழைய கட்சிகளனைத்திற்கும் எதிராக கட்டியமைத்தாலன்றி ஒருபோதும் ஒரு வர்க்கமாகச் செயல்பட முடியாது” என்கிறது.
மார்க்சும், எங்கெல்சும் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தோற்ற காலத்தில் எழுதி வந்தவர்கள். அவர்களது பார்வை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பின்வருமாறு தொகுக்கப்படுகிறது. கம்யூனிஸ்டுகள் பிற பாட்டாளி வர்க்கக் கட்சிகளுக்கெதிராக ஒரு கட்சியைக் கட்டவில்லை. மாறாக, அவர்கள் ஒரு பொது அரசியல் திட்டத்தின் அடிப்படையில் பாட்டாளி வர்க்கத்தை ஒன்று திரட்டி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்திற்காக முனைகிறார்கள்.
மார்க்சும் எங்கெல்சும் கட்சிக்குள் முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவக் கருத்துக்கள், கோட்பாடுகளை கடத்தி வர முனைவதை அதை ஒரு வர்க்க சமரசப் போக்கிற்கு உட்படுத்துவதை விடாப்பிடியாக எதிர்த்தனர். கட்சியைப் புரட்சிகர மார்க்சியக் கோட்பாடுகளின் அடிப்படையில் நிறுவவும், அவற்றிற்கு தொழிலாளி வர்க்கநிறுவனங்களை வென்றெடுக்கவும் முயன்றனர். இதுதான் அவர்களின் அரசியல் செயற்பாடாக இருந்தது. மேலும் அவர்கள் பாட்டாளி வர்க்கம் எவ்வகைப் போக்கை பிற வர்க்கங்களின் மீது கடைப்பிடிக்க வேண்டும் என்பதை குறிப்பாக விவசாயி வர்க்கத்தை, பாட்டாளி வர்க்கத்தின் மிக முக்கியத் துணைவர்களாகக் கருதி வரையறுப்பதில் கவனம் செலுத்தினர்.
லெனின் போல்சுவிக் கட்சியை ஏகாதிபத்திய சகாப்தத் தொடக்கத்தில் கட்டினார். மேற்கத்திய நாடுகளின் சோசலிசக் கட்சிகளின் “அமைதியான” வளர்ச்சி கொண்ட பல பத்தாண்டுகளின் முடிவில் சந்தர்ப்பவாதப் போக்குகள் தலைவிரித்தாடின. அகிலத்தின் ஒட்டு மொத்த செயற்பாட்டையும் பரிசோதித்துச் சரி செய்வதும் சந்தர்ப்பவாதத்தை முற்றாக நிராகரிப்பதும் மிக முக்கியத் தேவையானது. போல்சுவிக் கட்சியை அவர் புதிய வகையானதாக முதலாளித்துவத்தை எதிர்த்த பாட்டாளி வர்க்கத்தை ஒன்றிணைத்துத் தலைமை தாங்குவதாகக் கட்டியமைத்தார். இக்கட்சி ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டை, சுய ஒழுங்கை உள்ளடக்கி, புரட்சிகர மார்க்சிய கோட்பாடுகளின் அடிப்படையிலானதாய் அக்கோட்பாடுகளைப் பயன்படுத்தி, முன்னெடுத்துச் செல்லக்கூடியதாய் இருந்தது.
அப்படிப்பட்ட கட்சி புரட்சிகர தத்துவ அடிப்படையிலமைந்து பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படைப்பிரிவாய் அதிகாரத்தை வெல்ல, சோசலிசத்தைக் கட்டியமைக்க, தொழிலாளி வர்க்க இயக்கங்களை ஈர்த்து, வழி நடத்தி, தலைமை தாங்கிச் செல்வதால், பாட்டாளி வர்க்கத்தின் மிக உயர்ந்த அமைப்பு வடிவமாக இருக்கிறது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கான ஒரு கருவியாக உள்ளது. ஒற்றுமையை, ஒழுங்கைக் காப்பதாக, எந்த குழுப்போக்கும் அதன் ஒற்றுமையைக் சிதைந்துவிடாது இருக்கும்படி காக்கிறது. தானே சந்தர்ப்பவாதிகளை வெளித்தள்ளி தூய்மை அடைகிறது. போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தனது கொள்கையை எந்த எதிரிக்கு மரண அடி கொடுப்பது என்பதை நிர்ணயிப்பதாக தாக்குதல் திசைவழியை அமைத்துக் கொள்கிறது. அனைத்து கூட்டாளி வர்க்கங்களையும் இந்த எதிரிக்கு எதிரான போராட்டத்தில் சாத்தியமான எல்லா நட்பு சக்திகளையும் ஒன்றிணைக்கிறது.
போல்சுவிக் கட்சி பாட்டாளி வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாதத்திற்கெதிரான புரட்சிகர மார்க்சியத்தின் போராட்டத்தில் பிறந்தது. அதன் திட்டங்களும், அமைப்புக் கோட்பாடுகளும், தொழிலாளிகள் பொருளாதாரக் கோரிக்கைகளுக்கு போராட வேண்டும் என்னும் “பொருளாதாரவாதத்”திற்கெதிரானதாக அமைந்தது. அவர்களோடு கட்சியில் வர்க்கக் கூட்டிணைப்புக் கோட்பாடுகளைப் புகுத்தி அமைப்பைப் பலவீனப்படுத்தி ஒற்றுமையைக் குலைக்க முயன்ற மென்ஷ்விக்குகளுக்கு எதிரானதாக, கட்சியை மக்களிடமிருந்தே பிரித்து, நட்புச் சக்திகளை நிராகரித்து, போராட்டத்தின் வளர்ச்சிக்கட்ட அடிப்படையிலான கோட்பாட்டுக்குப் பதிலாக “வெற்றுப் புரட்சிகர” வாய்வீச்சில் இறங்கிய “இடதுசாரி”களுக்கெதிரானதாக இருந்தது.
லெனின் இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதத் தலைவர்களை எதிர்த்து அம்பலப்படுத்தி வந்தார். இத்தலைவர்கள் 1914-18-ல் ஏகாதிபத்தியப் போரில் அகிலத்தையே காட்டிக் கொடுத்தவர்கள். லெனின் நியாயமான, நியாயமற்ற போர்களுக்கிடையிலான வேறுபாட்டை விளக்கி போரைப் பற்றிய பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டை உருவாக்கினார்.
லெனினது போதனைகள், புதிய பாணி கட்சியைக் கட்ட கம்யூனிஸ்டுக் கட்சிகளால் ஏற்கப்பட்டு ஸ்டாலினால் மேலும் வளர்த்தெடுக்கப்பட்டன.
மேலும்
சீர்குலைவுவாதிகளோடு தொடர்புடையவர்களைக் கையாளுவது எப்படி ? || தோழர் ஸ்டாலின் புரட்சிகர கட்சி அரசியலையும் பொருளாதாரத்தையும் பிரிக்க முடியுமா ? சீர்குலைவுவாதிகளையும் அவர்களுடன் தொடர்பு கொண்டவர்களையும் கையாளுவது எப்படி? சரியான பணிக்கு சரியான நபர்களை தெரிவு செய்வது ஆகியவை குறித்து தோழர் ஸ்டாலின் !
விவாதங்களுக்குப் பதில் உரை
பாகம் – 1
5 மார்ச், 1937
தோழர்களே,
எனது அறிக்கையில் நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் பொருளின் முக்கியமான பிரச்சினைகளை நான் பகிர்ந்திருக்கிறேன். இந்த விவாதங்கள் நம்மிடையே இப்போது முழுமையான தெளிவை ஏற்படுத்தியிருப்பதைக் காட்டுகின்றன. அதாவது நம் கடமைகளைப் புரிந்துகொண்டிருக்கிறோம், நமது வேலைகளில் உள்ள குறைபாடுகளை அகற்றத் தயாராக உள்ளோம். ஆனால் இந்த விவாதங்கள், நமது அமைப்பு சார்ந்த மற்றும் அரசியல் நடைமுறைகள் சார்ந்த பல்வேறு உறுதியான பிரச்சினைகள் இங்கே உள்ளன. அவற்றின் மீது இன்னும் முழுமையான மற்றும் தெளிவான புரிதல்கள் இல்லை என்றும் காட்டுகின்றன. அத்தகைய ஏழு பிரச்சினைகளை நான் கணக்கிட்டுள் ளேன்.
இந்தப் பிரச்சினைகள் பற்றி சில வார்த்தைகள் பேச என்னை அனுமதியுங்கள்.
1 பொருளாதார செயல்பாடுகளால் அதிகமாக உள்வாங்கப்பட்டு, பொருளாதார வெற்றிகளால் எடுத்துச் செல்லப்பட நம்மை நாமே அனுமதித்துக் கொள்ளும்போது, கட்சியின் அரசியல் பிரச்சினைகள் குறைத்து மதிப்பிடப்படுவதும், மறக்கப்படுவதும் ஒரு முட்டுச் சந்துக்கு இட்டுச்செல்கின்றன என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டுள்ளார்கள், உணர்கிறார்கள் என்பதை நாம் கட்டாயம் அனுமானித்தாக வேண்டும். இதன் விளைவாக கட்சி ஊழியர்களின் கவனம் கட்சியின் அரசியல் பிரச்சினைகளின் திசையில் கட்டாயம் திரும்ப வேண்டும். அதனால் பொருளாதார வெற்றிகள் கட்சியின் அரசியல் வேலைகளோடு இணைந்து பக்கம் பக்கமாக முன்செல்லும்.
கட்சியின் அரசியல் வேலையை வலுப்படுத்தும் கடமைப் பொறுப்பும், சிறிய பொருளாதாரச் செயல்பாடுகளிலிருந்து கட்சி அமைப்புகளை விடுவிக்கும் கடமைப் பொறுப்பும் நடைமுறையில் எவ்வாறு மேற்கொள்ளப்படும்? விவாதங்களிலிருந்து தெரியவருவது போல் சில தோழர்கள் பொருளாதார வேலைகளை இப்போது முழுவதுமாக கைவிட வேண்டும் என்று தவறான முடிவை வரைவதற்கு கருத்து கொண்டுவிட்டார்கள். எல்லா நிகழ்வுகளிலும் அங்கே குரல்கள் எழுகின்றன. அவை கூறுவது: ‘நல்லது. இப்போது கடவுளுக்கு நன்றி. நாம் பொருளாதார விவகாரங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுவோம், இப்போது நம்மால் நமது கவனத்தை கட்சி வேலைகளுக்கு அர்ப்பணிக்க முடியும்.’ இந்த முடிவு சரியானதுதானா? இல்லை. அது சரியானதல்ல.
நமது தோழர்கள் பொருளாதார வெற்றிகளால் இழுத்துச் செல்லப்பட்டபோது அவர்கள் அரசியலைக் கைவிட்டார்கள். இது இறுதி எல்லைக்குக் கொண்டு சென்றது. அதற்காக நாம் கடுமையான விலை தர வேண்டியதாயிற்று. இப்போது சில தோழர்கள் கட்சியின் அரசியல் வேலைகளை வலுப்படுத்தும் வேலையில் ஈடுபடுத்திக்கொள்ளும் போது பொருளாதார வேலைகளைக் கைவிட நினைப்பது இன்னொரு இறுதி எல்லைக்குச் செல்வதாகும். இதற்காக நாம் குறைவாக அல்ல, கடுமையான விலையைத் தரவேண்டியிருக்கும். அரசியல், பொருளாதாரத்திலிருந்து பிரிக்கப்பட முடியாதது. நம்மால் அரசியலைக் கைவிட முடிந்ததைவிட இனி மேலும் பொருளாதாரத்தைக் கைவிட முடியாது. ஆய்வுகளின் வசதிக்காக மக்கள் வழக்கமாக ஆராய்ச்சிமுறைகளின்படி பொருளாதாரத்தின் பிரச்சினைகளை அரசியல் பிரச்சினைகளிலிருந்து பிரிக்கிறார்கள். ஆனால் இது ஆராய்ச்சி வழிமுறைகளுக்காக மட்டுமே செய்யப்படுகிறது.
உண்மை வாழ்வில் எப்படியிருந்தாலும், நடைமுறையில் அரசியல், பொருளாதாரத்திலிருந்து பிரிக்கப்பட முடியாதது. அவை ஒன்றாகவே நிகழ்கின்றன, ஒன்றாகவே செயல்படுகின்றன. மேலும் நமது நடைமுறை வேலைகளில் யார் ஒருவர் பொருளாதாரத்தை அரசியலிலிருந்து பிரிக்க நினைக்கிறாரோ, அரசியல் வேலையைக் கைவிட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த நினைக்கிறாரோ அல்லது அதற்குமாறாக, பொருளாதார வேலைகளைக் கைவிட்டு அரசியல் வேலையை வலுப்படுத்த நினைக்கிறாரோ, அவர் தவிர்க்க முடியாமல் தன்னை முட்டுச்சந்துக்குள் காண்பார்.
சின்னஞ்சிறு பொருளாதார நடவடிக்கைகளிலிருந்து கட்சியை விடுவிப்பது மற்றும் கட்சியின் அரசியல் வேலையை அதிகரிப்பது என்ற நகல் தீர்மானத்தின் பொருள் நாம் பொருளாதார வேலைகளையும், பொருளாதாரத் தலைமையையும் கைவிட்டுவிட வேண்டும் என்பதல்ல. ஆனால் இனிமேலும் வெறுமனே நமது கட்சி அமைப்புகளை வர்த்தக அமைப்புகளுக்கு மாற்றாக வைக்க அனுமதிக்கக் கூடாது; குறிப்பாக நிலம் சார்ந்த துறைகளில் மற்றும் தனிப்பட்ட பொறுப்புகளை அவர்களிடமிருந்து எடுத்துவிட வேண்டும். அதைத் தொடர்ந்து வர்த்தக அமைப்புகளை வழிநடத்தும் போல்ஷ்விக் வழிமுறைகளை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அவை இந்த அமைப்புகளுக்கு திட்டமிட்டபடி முழு நிறைவாக உதவும், திட்டமிட்டபடி முழு நிறைவாக அவற்றைப் பலப்படுத்தும். இந்த அமைப்புகளின் தலைவர்கள் மூலமாக அல்ல, அவற்றின் செயல்படு முறை மூலமாக இந்த வர்த்தக அமைப்புகளை பொருளாதாரத்துக்கு வழிகாட்ட முறையாக வலப்படுத்தும் முறையாக உதவிடும் போல்சவிக் வழிமுறையை நாம் கற்க வேண்டும்.
ஜோசப் ஸ்டாலின்
நாம் வர்த்தக அமைப்புகளுக்கும், முதன்மையாக நிலம் சார்ந்த அமைப்புகளுக்கும் சிறந்த நபர்களைத் தரவேண்டும். இந்த அமைப்புகளில் உள்ள அலுவலர் பணியிடங்களை சிறந்தவகையான புதிய தொழிலாளர்களைக் கொண்டு நிரப்பவேண்டும். அவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றக் கூடியவர்களாக இருக்க வேண்டும். இதைச் செய்து முடித்த பிறகு மட்டும்தான் நாம் கட்சி அமைப்புகளை சிறிய பொருளாதார விசயங்களிலிருந்து முற்றிலும் விடுவிப்பது பற்றி கணக்கிடலாம். உண்மையில் இது ஒரு கருத்தூன்றிச் செய்யப்படவேண்டிய விசயம். மேலும் அதற்கு ஒரு குறிப்பிட்ட நேரமும் தேவைப்படும். ஆனால் இதைச் செய்து முடிக்கும் வரை கட்சி அமைப்புகள் ஒரு குறுகிய காலத்துக்கு மிக நெருக்கமாக இருந்து உழவு, விதைப்பு, அறுவடை முதலான எல்லாச் செயல்களையும் தொடர வேண்டியிருக்கும்.
2 சீர்குலைவாளர்கள், திசைதிருப்புவோர், உளவாளிகள் முதலானவர்கள் பற்றி இரண்டு வார்த்தைகள் : இன்றைய நாள் சீர்குலைவாளர்கள் மற்றும் திசைதிருப்புவோர், அவர்கள் எத்தனை மாறுவேடமிட்டு வந்தாலும் டிராட்ஸ்கியர்களோ அல்லது புகாரினியர்களோ, தொழிலாளர் இயக்கத்தில் ஓர் அரசியல் போக்காக இருந்ததிலிருந்து மிக முன்பே நீங்கி, அவர்கள் தொழில்முறை சீர்குலைவாளர்களாக, திசைதிருப்புவோராக, உளவாளிகளாக மற்றும் கொலைகாரர்களாக மாறிவிட்டார்கள் என இப்போது ஒவ்வொருவரும் தெளிவாகி விட்டார்கள் என்று நான் கருதுகிறேன். உண்மையில் இந்தக் கனவான்கள் ஈவிரக்கமின்றி அடித்து நொறுக்கப்பட்டு, உழைக்கும் வர்க்கத்தின் எதிரிகள், நமது நாட்டுக்குத் துரோகம் செய்தவர்கள் என்ற முறையில் வேருடன் பிடுங்கி எறியப்பட வேண்டும். இது, தெளிவானதும், எந்தவொரு கூடுதல் விளக்கங்களும் தேவைப்படாததாகும்.
ஆனால், கேள்விகள் எழுகின்றன : ‘ஜப்பானிய – ஜெர்மானிய டிராட்ஸ்கிய கையாட்களை அடித்துத் துவைத்து வேருடன் பிடுங்கி எறியும் கடமையை எவ்வாறு நடைமுறையில் நிறைவேற்றுவது?
உண்மையான டிராட்ஸ்கியர்களை மட்டுமல்ல, ஆனால் யார் சில நேரங்களில் அல்லது மற்ற நேரங்களில் டிராட்ஸ்கியத்தின் திசையில் ஊசலாடி, அதன்பின் நீண்டகாலத்துக்கு முன்பே டிராட்ஸ்கியத்தைக் கைவிட்டார்களோ அவர்களையும், யார் உண்மையில் டிராட்ஸ்கிய சீர்குலைவு கையாட்களோ அவர்களை மட்டுமின்றி, சில நேரங்களில் சில ட்ராட்ஸ்கியர்கள் நடந்து சென்ற வீதிவழியே ஒரேநேரத்தில் நடந்து சென்றவர்களையும் கூட அடித்து நொறுக்கி வேருடன் கலைய வேண்டும் என்று அர்த்தமா? எல்லா நிகழ்வுகளிலும் இந்தக் கூட்டுக் கூட்டத்தில் இத்தகைய குரல்கள் கேட்டன. இந்தத் தீர்மானத்துக்கான இத்தகைய விளக்கம் சரிதானா? இல்லை. அதைச் சரியானதாகக் கருதமுடியாது. மற்ற எல்லாவற்றிலும் போலவே, இந்த விசயத்திலும் ஒரு தனிப்பட்ட வேறுபாடு கண்டறியும் அணுகுமுறை தேவை. உங்களால் ஒவ்வொன்றையும் அதே அளவுகோலால் அளவிட முடியாது. அத்தகைய ஒட்டு மொத்த அணுகுமுறை உண்மையான ட்ராட்ஸ்கிய சீர்குலைவாளர்கள் மற்றும் உளவாளிகளுக்கு எதிரான போராட்டத்துக்கு ஊறு விளைவித்துவிடும்.
நமது பொறுப்புமிக்க தோழர்களிடையே ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முன்னாள் டிராட்ஸ்கியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நீண்டகாலத்துக்கு முன்பே டிராட்ஸ்கியத்தைக் கை விட்டவர்கள். டிராட்ஸ்கியத்தை எதிர்த்து, டிராட்ஸ்கியத்தின்பால் ஒருபோதும் அலைபாயாத மதிப்புக்குரிய நமது தோழர்களைவிட, குறைவாக அல்ல, உண்மையில் மிகக்கடுமையாகப் போராடுகிறார்கள். அத்தகைய தோழர்கள் மீது ஒரு களங்கத்தை இப்போது சுமத்துவது முட்டாள்தனமாகும்.
நமது தோழர்களிடையே சித்தாந்த ரீதியாக டிராட்ஸ்கியத்தை எதிர்ப்போர், டிராட்ஸ்கியர்களிடம் தனிப்பட்ட தொடர்புகளை மேற்கொண்டு வந்தார்கள். அதை அவர்கள் டிராட்ஸ்கியத்தின் நடைமுறை அம்சங்கள் அவர்களுக்குத் தெளிவான உடனேயே அந்தத் தொடர்புகளை விட்டுவிடத் தயங்கவில்லை. உண்மையில் அவர்கள் தனிப்பட்ட டிராட்ஸ்கியர்களுடனான தங்களது தனிப்பட்ட நட்புத் தொடர்புகளை உடனடியாக காலம் தாழ்த்தாமல் முறித்துக் கொண்டிருந்தால் மிகவும் நல்லது. ஆனால், இத்தகைய தோழர்களை டிராட்ஸ்கியர்களோடு சேர்ப்பது முட்டாள்தனமாகும்.
3 சரியான நபர்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் அவர்களை சரியான இடங்களில் வைப்பது என்பதன் பொருள் என்ன?
முதலாவதாக இதன்பொருள், அரசியல் கொள்கைக்கேற்ப ஊழியர்களைத் தேர்வு செய்தல், அதாவது, அவர்கள் அரசியல் நம்பிக்கை வைக்க பொருத்தமானவர்களா? இரண்டாவதாக, வர்த்தகக் கொள்கைக்கேற்ப, அதாவது அவர்கள் அத்தகைய, உறுதியான வேலைகளுக்குப் பொருந்துகிறார்களா? என்று பார்ப்பது.
இதன் பொருள், வர்த்தக அணுகுமுறை ஒரு மிகக்குறுகிய வர்த்தக அணுகுமுறையாக மாற்றப்பட்டு விடக்கூடாது. ஒரு ஊழியரின் வர்த்தகத் தகுதிகளைப் பற்றி தாங்களாகவே சிலர் ஆர்வம் கொள்ளும் போதிலும், அவர்கள் தாங்களாகவே அந்த ஊழியரின் அரசியல் முகத்தோற்றம் பற்றி ஆர்வம் காட்டுவதில்லை.
இதன் பொருள், ஒரு ஊழியரின் அரசியல் முகத்தோற்றத்தில் தாங்களாகவே ஆர்வம் கொள்ளும்போது, அவர்கள் அந்த ஊழியரின் வர்த்தகத் தகுதிகளில் தாங்களாகவே ஆர்வம் கொள்வதில்லை. அதாவது அரசியல் அணுகுமுறை மட்டுமே தனிப்பட்ட ஒற்றை அணுகுமுறையாக மாற்றப்பட்டுவிடக் கூடாது.
நமது தோழர்களால் போல்ஷ்விக் விதிகள் பின்பற்றப்படுகின்றன என்று கூற முடியுமா? கெடுவாய்ப்பாக இவ்வாறு கூற முடியாது. இந்தக் கூட்டுக்கூட்டத்தில் இதற்கான மேற்கோள்கள் காட்டப்பட்டன. ஆனால், இதைப் பற்றிய எல்லா விசயங்களும் கூறப்படவில்லை. இதன் புள்ளி என்னவென்றால், முயற்சிசெய்து பரிசோதிக்கப்பட்ட இந்த விதி அடிக்கடி நமது நடைமுறை வேலைகளில் மிகவும் படுமோசமான முறையில் மீறப்படுகிறது. தொழிலாளர்கள் புறநிலையான காரணங்களுக்காகப் பெரும்பாலாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை, அதற்கு மாறாக முறையற்ற, அகநிலையாக அற்பவாத, குட்டிமுதலாளித்துவக் காரணங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அடிக்கடி அறிமுகமானவர், நண்பர், நகரத்தில் உடன் இருப்பவர், தனிப்பட்ட அர்ப்பணிப்பு உணர்வுள்ள நபர்கள், தங்கள் தலைமையைப் போற்றிப் புகழும் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள்தான் அவர்களுடைய அரசியல் மற்றும் தொழில் வர்த்தகப் பொருத்தம் பாராது நியமிக்கப்படுகிறார்கள்.
இயல்பாகவே, பொறுப்புமிக்க ஊழியர்கள் குழுவின் வழிகாட்டலுக்குப் பதிலாக, நாம் ஒரு சிறு குடும்பத்தின் நெருங்கிய நண்பர்களை ஒரு பரஸ்பர உதவி கட்டமைப்பை பெற்றிருக்கிறோம். அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள் சமாதானமாக வாழ முயற்சிக்கிறார்கள். ஒருவரை ஒருவர் தாக்க முயல்வதில்லை. பொது இடங்களில் தங்கள் குறைகளை பேசத் தயங்குகிறார்கள், ஒருவரையொருவர் புகழ்ந்து கொள்கிறார்கள். நேரத்துக்கு நேரம் வெற்றிகளைப் பற்றிய சலிப்பூட்டுகிற, எரிச்சல்தரும் அறிக்கைகளை மையத்துக்கு அனுப்புகிறார்கள்.
இத்தகைய ஒரு குடும்ப சூழ்நிலையில் வேலையில் உள்ள குறைபாடு பற்றி விமர்சிக்கவோ அல்லது வேலைக்குத் தலைமையேற்பவர்களின் சுயவிமர்சனத்துக்கோ இடமில்லை என்பதைப் புரிந்துகொள்வது சிரமமானதாக இல்லை .
நிச்சயமாக இத்தகைய ஒரு குடும்ப சூழ்நிலை அடிவருடிகளை உருவாக்குவதற்கு ஆதரவான சூழ்நிலை, சுயமரியாதை உணர்வை இழந்த நபர்களை உருவாக்குவதற்குச் சாதகமாக உள்ளது. எனவே இதற்கும் போல்ஷ்வியத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
உதாரணத்துக்கு தோழர்கள் மிர்ஸோயன் மற்றும் வைனோ – வை எடுத்துக் கொள்ளுங்கள். முதலாமவர் கஜகஸ்தான் ஆட்சிப்பகுதி கட்சியின் முதன்மைச் செயலாளர். இரண்டாமவர் யாரோஸ்லாவ்ல் வட்டாரக் கட்சி அமைப்பின் செயலாளர். இந்த நபர்கள் நம்மிடையே மிக மோசமானவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் ஊழியர்களை எவ்வாறு தேர்வு செய்தார்கள்? முதலாமவர் தான் முன்பு வேலை செய்த அஜர்பைஜான் முதல் உரால்ஸ் வரை 30 முதல் 40 வரையான எண்ணிக்கையில் தனது சொந்த ஆட்களைத் தன்னுடன் அஜர்பைஜானுக்குக் கொண்டு சென்றார். அவர்களை கஜகஸ்தானில் பொறுப்புமிக்க பதவிகளில் அமர்த்தினார். இரண்டாமவர் தான் முன்பு வேலை செய்த டோனெட்ஸ்லிருந்து 12-க்கும் மேற்பட்ட தனது சொந்த ‘ ஆட்களை யாரோஸ்லாவ்லுக்குக் கொண்டு சென்றார். பொறுப்புமிக்க பதவிகளில் அமர்த்தினார்.
மேலும் தோழர் மிர்ஸோயன் தனது சொந்த பரஸ்பர உதவி கட்டமைப்பைப் பெற்றுக் கொண்டார். அத்துடன் தோழர் வைனோவும் கூட தனது சொந்த பரஸ்பர உதவிக் குழுவை வைத்துள்ளார். போல்ஷ்விக் வழிமுறைகளில் நபர்களைத் தேர்ந்தெடுக்கவும், பணியில் அமர்த்தவும் வழிகாட்டப்பட்டிருந்தால் அவர்கள் ஊழியர்களை உள்ளூர் மக்களிலிருந்தே தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்களா? நிச்சயமாக அவர்கள் தேர்ந்தெடுத்திருப்பார்கள். அப்படியானால் அவர்கள் இவ்வாறு ஏன் செய்யவில்லை?
ஏனென்றால் ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும் போல்ஷ்விக் வழிமுறை, அற்பவாத குட்டிமுதலாளித்துவ அணுகுமுறையை நடைமுறைக்கு ஒவ்வாததாக்கிவிடுகிறது. தொழிலாளர்களை குடும்ப உறவு மற்றும் சொந்த நிறுவனங்களிலிருந்து தேர்ந்தெடுக்கும் சாத்தியத்தை நடைமுறைக்கு ஒவ்வாததாக்கிவிடுகிறது. மேலும் தனிப்பட்டமுறையில் தங்களுக்கு அர்ப்பணித்துக்கொண்ட ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, இந்தத் தோழர்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு உள்ளூர் மக்களிடம் இருந்து சுதந்திரமாக, கட்சியின் மத்தியக்குழுவிலிருந்து சுதந்திரமாகத் தங்களை ஆக்கிக்கொள்ள வெளிப்படையாகவே விரும்புகிறார்கள். தோழர்கள் மிர்ஸோயனும், வைனோவும் சில சூழ்நிலைகள் காரணமாகவோ அல்லது மற்ற காரணங்களாலோ அவர்கள் இப்போதைய வேலை இடத்திலிருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், அத்தகைய ஒரு நிகழ்வில் தங்கள் ‘சீடர்களை’ என்ன செய்வார்கள்? அவர்கள் வேலைசெய்யச் செல்லும் புதிய இடங்களுக்கே அவர்களை மீண்டும் கொண்டு செல்வார்களா?
இத்தகைய ஒரு நகைப்புக்கிடமான நிலைக்குத்தான் நபர்களை முறையாகத் தேர்ந்தெடுத்துப் பணியில் அமர்த்துவது என்ற போல்ஷ்விக் வழிமுறை மீறப்படுவது கொண்டு செல்கிறது.
(தொடரும்)
நூல் : ஜே.வி.ஸ்டாலின் தொகுப்பு நூல்கள் – தொகுதி -14
நன்றி வினவுதளம்