யோக சூத்திரம் நூலின் இரண்டாவது அத்தியாயம் சாதானை பாதம், இதில் தியானப் பயிற்சிகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
மூன்றாம் அத்தியாயம் விபூதி பாதம், இதில் யோக சித்திகள் அதாவது யோகப் பலன் பற்றி கூறப்பட்டுள்ளது. யோகத்தின் எட்டு உறுப்புகளில் சில இரண்டாவது அத்தியாயத்திலும் மீதமுள்ளவை மூன்றாம் அத்தியாயத்திலும் தொடர்கிறது. அதனால் இரண்டாம் மூன்றாம் அத்தியாயங்களை இணைத்தே பார்க்கலாம்.
லகத்தின் நிகழ்வுகள் உண்மையானதாக கருதுவதற்கு அவித்தையே காரணமாகும். அவித்தை என்றால் அறியாமை.
“அநித்தியத்தை நித்தியமெனவும், தூய்மையற்றதை தூய்மையெனவும், துக்கமானவற்றை சுகமெனவும், அநாத்ம விஷயங்களை ஆத்மாவாகவும் கருதுதல் அவித்யை.” (2:5)
நித்தியமானது எது? அநித்தியமானது எது?, ஆத்மா எது? அனாத்மா எது? என்று வேறுபாடு அறியாத நிலையே அறியாமை (அவித்தை) ஆகும்.
வேறுபாடுகள் அடைவது அநித்தியமானது, வேறுபாடுகள் அற்றது நித்தியமாது என்று வைதீகம் கருதுகிறது. உலகில் உள்ள அனைத்துப் பொருட்களும் வேறுபாடு அடைகிறது. வேறுபாடுகளை அடைவதினால் இந்த உலகம் அனாத்மா. அதாவது உண்மையானது அல்ல. ஆத்மா அல்ல என்கிறது.
அறியாமையில் இருந்து நீங்கப்பெற்ற அறிவே, துன்பமயமான சம்சாரத்தில் இருந்து விடுபட தூண்டுகிறது. சம்சாரம் என்றால் இல்வாழ்க்கை. சம்சாரத்தில் அனைத்தும் துக்கமயமானது என்கிறது யோக சூத்திரம். (2:15)
இவ்வுலக வாழ்க்கை அறியாமையின் விளைவு, ஆன்மீக வாழ்க்கையே அறிவு மயமானது. ஆன்மீக வாழ்க்கை என்றால் ஆத்மாவோடு ஒன்றிய வாழ்க்கை. இதுவே அறியாமையற்ற விவேகம் (அறிவு) ஆகும். இந்த விவேகத்தைப் பெற வேண்டுமானால் அறியாமையை ஒழிக்க வேண்டும் (2:26).
“அறியாமை இல்லாததால், விலக்க வேண்டிய சேர்க்கை நீக்கப்பட்டுள்ளது. அதுவே காண்பவனுடைய கைவல்யம் ஆகும்.” (2:25)
கேவல நிலையை அடைவதே கைவல்யம். தமிழில் கேவலம் என்பதை வேறு பொருளில் கொள்வோம். வடமொழியில் கேவலம் என்றால் தனியானது, ஒன்றேயானது என்று பொருளாகும். அனைத்துக் கலப்புகளையும் நீங்கியதும், தன்நிலையில் ஒன்றித்து இருக்கும் ஆத்மாவையே கைவல்யம் என்று கூறப்படுகிறது.
பிரகிருதியோடு புருடன் என்கிற ஆத்மா சேர்வதே அறியாமையாகும். உலகப் பொருளோடு புருடன் இணைவது அறியாமை என்கிறது யோக சூத்திரம்.
சடங்குகள், சாஸ்திரங்கள், கோவில்கள் போன்றவை இரண்டாம் நிலையானவை, ஆத்ம நிலையில் ஒன்றிப்பே முதன்மையானது இறுதியானது.
25ஆம் சூத்திரத்துக்கான விவேகானந்தரின் விளக்கம்.
“யோகத் தத்துவப்படி அறியாமையின் காரணமாகவே பிரகிருதியுடன் ஆத்மா இணைந்தது. இயற்கை நம் மீது அதிக்கம் செலுத்துவதை அகற்றுவதே நோக்கம். எல்லா மதங்களின் நோக்கமும் இதுவே. ஒவ்வோர் ஆத்மாவும் உள்ளடங்கிய தெய்வீகம் நிறைந்தது. புற மற்றும் அக இயற்கையை அடக்குவதன் மூலம் இந்த அக தெய்வீகக்கை வெளிப்படுத்துவதே நோக்கம். செயல் அல்லது வழிபாடு அல்லது பிராணனைக் கட்டுப்படுத்தல் அல்லது அராய்ச்சி-இவற்றுள் ஒன்றாலோ பலவற்றாலோ எல்லாவற்றாலுமோ இதனைச் செய்து சுதந்திரனாக இரு! இதுவே மதத்தின் முழு உண்மை. கொள்கைகளும் கோட்பாடுகளும், சடங்குகளும் சாஸ்திரங்களும், கோயில்களும் உருவங்களும் இரண்டாம் நிலையிலுள்ள விளக்கங்களே. பிராணனை வசப்படுத்தும் பயிற்சியின் மூலம் யோகி இந்த இலக்கை அடைய முயல்கிறான்.
இயற்கையிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளாதவரை, நாம் அடிமைகள். அதன்கட்டளைப்படியே நாம் நடக்க முடியும். மனத்தை வசப்படுத்துபவன் ஜடப்பொருளையும் வசப்படுத்தலாம் என்கிறான் யோகி. அக இயற்கை, புற இயற்கையை விட மிகவும் உயர்ந்தது. அதனுடன் போராடுவது கடினமானது, வசப்படுத்துவதோ அதைவிடக் கடினம். அதை அடக்குபவன் பிரபஞ்சத்தையும் அடக்கியாள்வான், அது அவனுக்கு அடிமையாகிறது. இயற்கையை வெல்வதற்கான முறைகளை ராஜ யோகம் காட்டுகிறது.” (ஞான தீபம் -2)யோக சூத்திரம், இந்த உலகை விடுத்து ஆன்மீக உலகுக்கே வழிகாட்டுகிறது. அதற்கான தயாரிப்பே யோகம் பயிலுதல்.
எட்டு உறுப்புகளாக யோகம் விளக்கப்படுகிறது.
“யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பன யோகத்தின் எட்டு உறுப்புகள்.” (2:29)
யோக முறையினர் இந்த ஏழு உறுப்புகளை எவ்வாறு விளக்குகின்றனர் என்பதைப் பார்ப்போம்.
1)யமம் என்றால் செய்யக் கூடாததில் இருந்து விலகுதல். முதலில் அகிம்சை. அகிம்சை என்றால் பிற உயிர்களை துன்புறுத்துதலில் இருந்து விலகுதல், பொய் பேசுவதில் இருந்து விலகுதல், திருடுவதில் இருந்து விலகுதல், காம இச்சைகளில் இருந்து விலகுதல், தானமாக ஏற்பதில் இருந்து விலகுதல்.
அதாவது, கொல்லாமை, உண்மை பேசுதல், களவு செய்யாமை, பிரம்மச்சரியம், தானம் ஏற்காமை ஆகியவையே யமம் எனப்படுகிறது. செய்யக் கூடாததில் இருந்து விலகுதலே யமம் என்று பார்த்தோம். இந்த பயிற்சி மனதை உலகப் பொருட்களின் மீது செல்லாமல் தடுக்கிறது.
2)நியமம் என்றால் கடைபிடித்தல். அக-புறத் தூய்மை, ஆன்மதிருப்தி, தவம், சுயக்கல்வி, இறைவனை வழிபடல் ஆகியவைகளை கடைபிடித்தல் என்பது நியமம். இந்தக் கடைபிடித்தல்களே மனதை அலைபாயாமல் கட்டுப்படுத்துகிறது.
3)ஆசனம் என்றால் யோக நிலைக்கு உரிய வகையில் அமர்தல். யோகம் செய்வதற்கு வசதியாக அமர்வதே ஆசனம்.
4)பிராணாயாமம் என்றால் மூச்சுப் பயிற்சி. மூச்சுக் காற்றை உள் இழுத்தல் வெளிவிடுதல் இதுவே மூச்சுப் பயிறிசி. முதலில் மூக்கின் இடது துவாரம் வழியாக காற்றை உள்ளே இழுத்து, வலது துவாரம் வழியாக வெளியில் விட வேண்டும். அடுத்து வலது துவாரம் வழியாக காற்றை இழுத்து இடது துவாரம் வழியாக விட வேண்டும். இதே முறையில் மாறிமாறி செய்ய வேண்டும்.
5)பிரத்தியாகாரம் என்றால் புலன்களால் அறியப்படும் பொருட்களில் இருந்து மனதைத் திருப்புதல். அதாவது புலன்களால் அறியப்படுகின்றவற்றில் இருந்து மனதை திருப்புதல்.
6)தாரணை என்பது புலன்களையும் மனதையும் உலக வெளிப் பொருள்களை நாடிச் செல்லாமல் கட்டுப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்தல்.
7)தியானம் ஒருமுகப்பட்ட நிலையில் தொடர்ந்து இருத்தல்.உடலின் மூலம் மனதை அடையும் பயிற்சியே தியானம். தியானத்தின் மூலமே ஆத்மாவானது, புற உலகையும் உடலையும் மறந்து அக நுழைவாக, தன்னியல்பில் ஒடுங்குகிறது.
8)சமாதி என்றால் தியானிக்கப்படும் பொருளின் வடிவத்தை படிப்படியாக விடுத்து அகத்தில் முழுமையாக ஒடுங்குவது. உண்மைக்கு மாறான இந்த உலகில் இருந்து விடுபடுவதற்கு எதையேனும் ஒரு தூலப் பொருளை முதலில் தியானிக்க வேண்டும், அடுத்து நுண்பொருளை தியானிக்க வேண்டும், இறுதியாக எந்த பொருளையும் துணைக்கு அழைக்காமல் தியானிக்க வேண்டும் அப்போது ஆத்மா ஒரே உண்மையான அகத்தில் ஒடுங்கும்.
கடந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் ஏற்படுகின்ற மாறுதல்களால் பாதிக்கப்படுவதே குணங்களுக்கு காரணாகும். இந்த குணங்களின் வேறுபாடுகள் பிறப்புக்கும் சம்சாரத்துக்கும் காரணமாகிறது. குணங்களை பெறால் இருக்க வேண்டுமானால், அநித்தியமான இந்த புறப்பொருளில் இருந்து மனதை விடுத்து, ஒரே உண்மைப் பொருளான ஆத்மாவில் நிலைபெறுவதே கைவல்யம்.
நான்காவது அத்தியாயம் கைவல்ய பாதம். கைவல்யம் என்றால் பிறப்பைத் தடுத்தல் அதாவது முக்தி அடைதல்.
நற்செயலால் நன்மையும் தீயச்செயலால் தீமையும் விளையும் என்று கர்மக் கோட்பாடு கூறுகிறது. கர்மக் கோட்பாட்டினால் ஆத்மாவுக்கு எந்தப் பயனும் இல்லை என்று யோக சூத்திரம் கருதுகிறது. உலகம் மாறுபாடுகளுடன் கூடிய அநித்தியமானது, ஆத்மா மாறுபாடற்ற நித்தியமானது.
அநித்தியமான உலகை மனது நாடுவதற்கு மனதில் பதிந்துள்ள நிகழ்வுகளே காரணமாகும். மனப் பதிவுகளே சமஸ்காரம். நித்திய ஆத்மாவை அடைவதற்கு தடையாக இருப்பது மனதின் விருப்பங்களே.
“அதற்குத் தடையாக எழும் எண்ணங்கள் சமஸ்காரங்களில் இருந்து வருபவை”
(4:26)
நான்காம் அத்தியாயத்திற்கு விவேகானந்தர் எழுதிய விளக்கங்கள் மேலே தொகுத்தவற்றைத் தெளிவுபடுத்துகிறது. நான்காவது யோக சூத்திரத்துக்கு (4:4) விளக்கமாக விவேகானந்தர் கூறியதை பார்ப்போம்.
“நாம் செய்த நல்ல அல்லது தீய செயல்களாலேயே நாம் துன்புறுகிறோம் என்பது கர்மக் கோட்பாடு. மனிதன் தனது மகிமையை மீண்டும் பெறச் செய்வதே எல்லா தத்துவ சாஸ்திரங்களின் நோக்கம். அனைத்து சாஸ்திரங்களும் மனிதனுடைய ஆத்மாவின் பெருமையையே பாடுகின்றன; அதே மூச்சில் கர்மத்தைப்பற்றியும் போதிக்கின்றன. நற்செயலால் இது விளையும், தீய செயலால் அது விளையுமென்று கூறுகின்றன. ஆனால் இந்த நல்ல மற்றும் தீய செயல்களால் ஆத்மா பாதிக்கப்படும் என்றால் அது ஒன்றுமே இல்லை. தீய செயல்களே புருஷனின் இயல்பை தடுக்கின்றன. நற்செயல்கள் அந்தத் தடைகளை நீக்குகின்றன, புருஷனின் பெருமை வெளிப்படுகிறது. புருஷன் ஒருபோதும் மாறுபடுவதில்லை. நீங்கள் எது செய்தாலும் சரி, அது உங்கள் மகிமையை, உங்கள் சொந்த இயல்பை அழிப்பதில்லை.
ஏனெனில் எதனாலும் ஆத்மா பாதிக்காது. ஒரு திரை மட்டுமே அதன் முன்னால் தொங்குகிறது, அது அதன் நிறைநிலையை மூட மட்டுமே செய்துள்ளது, அவ்வளவுதான்.”
மேலும் 4:25 சூத்திரத்துக்கு விவேகானந்தர் கூறிய விளக்கத்தையும் சேர்த்துப் பார்ப்போம்.
“…யோகப் பயிற்சி நமக்கு விவேகத்தை அளிக்கிறது. அதனால் நமது காட்சி தெளிவாகிறது. கண்ணின் முன் உள்ள திரை நீங்கப்பெற்று, பொருட்களை நாம் உள்ளது உள்ளபடி காண்கிறோம். இயற்கை ஒரு சேர்க்கைப் பொருள், அது சாட்சியான புருஷனுக்காகவே தனது அழகிய காட்சிகளை விரிக்கிறது என்றும், இயற்கை தலைவன் அல்ல, அகத்திலே அரசனாக அமர்ந்துள்ள புருஷனுக்காகவே தனது சேர்க்கைகளையும் அற்புதங்களையும் காட்டுகிறதென்றும் அறிகிறோம். நீண்ட காலப் பயிற்சியால் விவேகம் வரும்போது, அச்சம் அகல்கிறது; சித்தம் கைவல்யம் பெறுகிறது.”
மூல சாங்கியத்தில் புருடன் என்பது பொருள் தன்மை உடையது. யோக சூத்திரத்தில் புருடனை ஆத்மாவாக விளக்கப்படுத்தி வெறும் சாட்சியாகப்பட்டுள்ளது. அவ்வாறு சாட்சியாக்கினால் புருடன் என்கிற ஆத்மா, முக்தியை நோக்கி தான் செல்ல வேண்டிவருகிறது.
அநித்திய பொருளான உலகத்தின் மாயைத் தன்மையை உணர்ந்த புருடன் என்கிற ஆத்மா, நித்தியமான ஆத்மாவே நிலையாது என்று அறிந்து, தியானித்து இறுதியில் ஆத்மாவில் ஒடுங்குகிறது. ஆத்மா தன் சொந்த இயல்பை அடைவதே கைவல்யம்.
“எந்த நோக்கமும் இன்றி, புருடனுக்காக வேலை செய்ய வேண்டும் என்ற சிந்தனையும் நீங்கப்பெற்று குணங்கள் படிப்படியாக மேலே போய் ஒடுங்கிவிடுவது கைவல்யம்.” (4:33)
உலகம் அநித்தியம் என்பதை அறிந்து, அறிந்ததின் மூலம் அதனை வெறுத்து, நித்தியமான ஆத்மாவில் ஒன்றுபடுவதே புருடனின் இறுதி நோக்கம் என்கிறது யோக.சூத்திரம். அந்நிலையில் ஆத்மாவுக்காக வேலை செய்ய வேண்டும் என்கிற சிந்தனையையும் இழந்து ஆத்மாவில் ஒடுங்குவதே கைவல்யம் என்கிறது.
பொருட்களின் வேறுபாடுகள், சாதிய வேறுபாடுகள், வர்க்க வேறுபாடுகள் போன்றவற்றுக்கு விளக்கமோ, தீர்வோ கொடுக்காமல் யோகத் தத்துவம் இந்த சமூகத்தை அப்படியே ஏற்க வைத்துவிட்டு, மக்களை ஆத்மாவோடு ஒன்றிட போதிக்கிறது. இந்தத் தத்துவம் ஆளும் சக்திகளுக்கு ஆதரவாக இருக்கிறது.
யோக தத்தவத்தை விளக்குகிறேன் என்று கூறிவிட்டு வர்க்க வேறுபாடு, ஆளும் சக்தி என்று அரசியல் பேசுவது சரியா என்று சிலருக்குத் தோன்றும்.
யோகத் தத்துவம் உண்மையில் இதனைவே விளக்குகிறது. இங்கு கூறியவை சரி என்பதை விவேகானந்தரின் வரிகளில் இருந்து தெளிவடையலாம்.
"ஒவ்வோர் இன்பத்திற்குப் பின்னரும் துன்பம் வருகிறது. அது விரைந்தும் வரலாம், காலம் தாழ்ந்தும் வரலாம். ஆத்மா பக்குவமடையுந்தோறும் ஒன்று மற்றொன்றைத் தொடர்கின்ற வேகமும் அதிகரிக்கிறது. நமக்கு வேண்டுவது இன்பமும் அல்ல, துன்பமும் அல்ல. இரண்டும் நமது உண்மை இயல்பை மறக்கச் செய்கின்றன; இரண்டும் சங்கிலிகளே-ஒன்று இரும்புச் சங்கிலி, மற்றொன்று பொன் சங்கிலி. இரண்டின் பின்னணியிலும் இருப்பது ஆத்மா. அது இன்பம், துன்பம் இரண்டையும் அறியாதது. இவை இரண்டும் குறிப்பிட்ட நிலைகளே இவை; நிலைகள் எப்போதும் மாறியே ஆகவேண்டும். ஆனால் ஆத்மாவின் இயல்பு மாற்றமில்லாத ஆனந்தம், மாற்றமில்லாத அமைதி. நாம் அதை அடைய வேண்டுவதில்லை. அது நம்மிடமே உள்ளது. மாசுகளைக் கழுவுங்கள், அது தெரியும்.
… … …
துன்பம் இல்லாத இன்பமோ, தீமை இல்லாத நன்மையோ ஒருபோதும் இருக்க முடியாது. வாழ்வு என்பது சமச்சீர் நிலையை இழந்த ஒரு நிலை.
நாம் விரும்புவது முக்தியே தவிர வாழ்வு அல்ல, இன்பம் அல்ல, நன்மையும் அல்ல.
… … …
எதையும் தேடிச் செல்லாதே, விலக்கவும் செய்யாதே. வருவதை அப்படியே ஏற்றுக்கொள். எதனாலும் பாதிக்கப்படாமல் இருப்பதே சுதந்திரம். பொறுத்துக் கொள்வது மட்டும் போதாது, பற்று அற்று இருப்பது அவசியம்."
(ஞானதீபம், சுடர் (அருளுரையில்1895) 2, பக்-375, 377, 378-379)
விவேகானந்தர் கூறுகிற, பற்று அற்று இருப்பது, வருவதை அப்படியே ஏற்றுக்கொள்வது, விரும்புவது முக்தியே தவிர, வாழ்வு அல்ல, என்கிற இவைகள் அனைத்தும் அரசியல் கலந்த தத்துவமே.
இருக்கும் வாழ்வை அப்படியே ஏற்றுக் கொள்ள வைத்து, முக்தி தான் உண்மையான விடுதலை என்று கூறுவது, உழைப்பாளர்களுக்கு பாதகமாகவும் உழைப்பைப் பெறுபவர்களுக்கு சாதகமாகவும் இருக்கிறது. வர்க்க சார்பற்ற தத்துவம் என்று எதுவும் கிடையாது. பொருள்முதல்வாதமாக இருந்தாலும்சரி, கருத்துமுதல்வாதமாக இருந்தாலும்சரி அனைத்துத் தத்தவங்களும் வர்க்க சார்புடையவையே ஆகும். ஒருவன் எந்த வர்க்கத்தை சார்ந்திருக்கிறானோ, அந்த வர்க்க நலன்களைக் கொண்ட தத்துவத்தையே தெரிவு செய்கிறான்.
கருத்துமுதல்வாதம் உழைப்பை வாங்குபவர்களுக்கு சாதகமாகவும் பொருள்முதல்வாதம் உழைப்பை செலுத்துபவர்களுக்கு சாதகமாகவும் இருக்கிறது. கருத்துமுதல்வாதம் உழைப்பாளர்களுக்கு பாதகமாக இருப்பது போலவே பொருள்முதல்வாதம் ஆதிக்க வர்க்கத்துக்கு பாதகமாக இருக்கிறது. வர்க்க வேறுபாடுகளே தத்துவத்தை தோற்றுவிக்கிறது. பொருள்முதல்வாதத்தின் மீது கருத்து முதல்வாதம் தொடர்ந்து தாக்குதல்களை செலுத்துவது வெறும் தத்துவத்துக்கானது மட்டுமல்ல அந்த தத்துவத்தில் உள்ள வர்க்க சார்புக்காகவே ஆகும்
தத்துவத்தின் அடிப்படை வர்க்க சார்பானதே ஆகும்.