ஜாதி பற்றி புரிதலற்றே சிலர் ஜாதிக்கு ஆதியும் அந்தமும் இல்லை என்று பிதற்றிக் கொண்டும் ஜாதியை ஒழிக்கவே முடியாது என்றும் கூறிக் கொண்டு திரிகின்றனர். அவர்களுக்காக இந்த பகுதியில் சில சொல்ல நினைக்கிறேன் தோழர்களே.
சாதியமைப்பு பற்றிய கருத்தாக்கங்கள் நான்கு விதமான ஆய்வு விளக்கங்களைகல்வியாளர் மட்டத்தில் பாமரமக்கள் மட்டத்திலும் நிலவுகின்றன இவை பற்றிப் பார்ப்போம்.
முதலாவதானது மிகவும் பரவலாக இருப்பவை ஆரிய சித்தாந்தமாகும் இக்கருத்தின் படி ஆரிய படையெடுப்பாளர்கள் சுதேசி மக்களை அடிமைப் படுத்திய விதத்தில் மூலமாக சாதிகள் தோன்றின என்பதாகும். இதனை ஒருசில மார்க்சியவாதிகள் ஏற்றுக்கொண்ட போதிலும்இதற்கு அடிப்படை தோற்றுவாய் ஜோதிராவ் புலே பெரியார் ஆகியோருடைய எழுத்துக்களும் பிராமண எதிர்ப்பு இயக்கமும் ஆகும். சாதிகள் கடவுளால் படைக்கப்பட்டது அவற்றை மாற்ற இயலாது என்ற பழமையான மதவாதிகள் கூறும் விளக்கத்தை காட்டிலும் முற்போக்கான கருத்தாக இது உள்ளது.
இனக்கோட்பாடு:ஆரியர்கள் இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்த போது தொல்திராவிடர்களை அடிமைப்படுத்தி நிறுவிய அமைப்பே சாதி அமைப்பு என்கிறதுஇனக்கோட்பாடு."குடியேறிய ஆரியர்கள் இங்கிருந்தவர்களைக் காட்டிலும் உடல் தோற்றத்தில் பொலிவானவர்களாகத் திகழ்ந்ததால் அதனைப் பயன்படுத்தி அவர்கள் வருணப் பாகுபாட்டைக் காட்டத் தொடங்கினர்.
அம்பேத்கரின் கூற்று:ஒரே சாதிக்குள்நடைபெறும் அகமணமுறையே சாதியின் தோற்றத்துக்குக் காரணம் என்று கூறுகிறார்.
இந்திய சமூக அமைப்பை வர்க்கங்களாக ஒன்றிணைக்க முடியாது என்று அம்பேத்கார் முதல் பலரும் வற்புறுத்தி வந்தனர். இன்னொரு பக்கத்தில் ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்பில் தொடங்கி பல்வேறு விதமான போராட்டங்களில் மக்கள் ஜாதிகளை கடந்து தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி உள்ளனர் என்பதை கண்கூடாக காணலாம். இவை ஜாதிகள் இங்கே தடையாக இல்லை என்பது மக்கள் போராட்டங்களை கட்டமைத்த போது கண்கூடான உண்மை அல்லவா?
சரி, ஜாதி என்பது பிறப்பை அடிப்படையாகக் கொண்டது, அகமணமுறை ஏற்றுக்கொண்டதுஇந்திய சாதி அமைப்பு முறையை ஆராய்ந்த பலரும் பல்வேறு கருத்துகளை முன்வைத்தாலும், மார்க்சியதத்துவம்மட்டுமே இயக்கவியல் பொருள் முதல்வாத அடிப்படையில் விளக்கி கூறியதாகும்.
அதாவது உலகில் உள்ள மற்றச் சமூக அமைப்பு போலவே இந்தியச் சமுக அமைப்பும் வர்க்க அமைப்பே அதில் சில தனிச் சிறப்புகள் உண்டு.
இந்தியச் சமூகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதி நிலவி வந்தாலும் அதன் செயல்பாடும் வடிவமும் எல்லா காலங்களிலும் ஒரே மாதிரியாய் இருந்ததில்லை.
ஜாதி ஒழிப்பு பற்றி பெரியாரின் கருத்துகள்
l ஜாதி குறித்த பெரியாரின் கருத்தானது இந்து சமய ஆரிய இனவாதமாக மட்டுமே உள்ளதாக காண்கிறார்.ஜாதிக்கு அடிப்படை இந்து மதம் என்றும் ஜாதி முறையில் உருவாக்கத்தை வேதம் இதிகாசம் சாஸ்திரம் புராணம் முதலிய கட்டு கதைகளில் காண முடியும் என்று பெரியார் கருதினார் (விடுதலை 10.01. 1947 ).
l ஜாதி ஒழிப்பு பற்றி பெரியாரின் இரண்டு போக்குகள் ஒன்று ஜாதிகளுக்கு இடையில் சமத்துவம் என்னவென்று ஜாதி ஒழிப்பு.ஜாதிகளுக்கு இடையில் உயர்வு தாழ்வு காணாமல் இருந்தால் சரிநிகர் சமமாகிவிடும்.ஆக ஜாதி இல்லாமல் போகிவிடும் இதுவே சாதி ஒழிப்பாகும்.
மேலும் பெரியார் மதம் ஜாதிக்கு காரணமாக இருப்பது என்பதால் மதத்தை ஒழிக்க வேண்டும் இல்லையேல் மதத்தை விட்டு விலக வேண்டும் என்று கூறினார் (குடியரசு 28/7/1935). கலப்பு மணம் செய்தல் ஜாதிக்குறிகளை நீக்குதல் ஜாதி பட்டங்களை கைவிடல் ஆகியவற்றால்ஜாதிஅடியோடுஒழியும்(விடுதலை10/01/1947). இருப்பினும் கலப்பு மணத்தால் மட்டுமே ஜாதிஒழிந்துவிடாது(விடுதலை22/02/1952).கீழ் ஜாதி தன்மை விடுபட வேண்டும் என்றால் இந்து சமயப் பார்ப்பன சடங்குகளிலிருந்து விடுபட வேண்டும் (விடுதலை 16/02 /1959 ).தமிழ்நாட்டுக்கு சுதந்திரம் வந்தால் ஜாதி உடனே ஒழிந்து விடும் (விடுதலை 16 12 1959 ).
சாதி ஒழிப்புக்கு சட்டம் இயற்ற முடியும் என்றும் அரசியல் சட்ட திருத்தம் கொண்டுவர முடியும் என்று பெரியார் கருதினார்.வெள்ளைக்கார ஆட்சி இருக்கும்போது ஜாதி வேறுபாடுகள்எல்லாம் ஒழிக்கும்படியான ஏற்பாடுகளை செய்து கொள்வது அறிவுள்ள வேலை என குறிப்பிட்டு(குடியரசு30/11/1930)ஜாதி ஒழிப்பிற்கான சட்ட வரைமுறைகளை பெரியார் ஏற்றுக் கொண்டார்.
l பெரியாரின் பல்வேறு கட்ட போராட்டங்கள் மதிக்கத்தக்கவையாக இருந்தாலும் அவை ஜாதி ஒழிப்பிற்கு பயன்படவில்லை என்றே கூறுவேன் ஏனெனில் அவர் ஜாதியை வெறும் கருத்தியல் அம்சமாக மட்டுமே கண்டார் அதாவது வெளிப்புற அம்சங்களாக உள்ளதை மட்டும் புறக்கணிக்க முற்பட்டார்.
இதைத்தான் முனைவர் கோ.கேசவன் தனது நூலில் குறிப்பிட்டு இது போல,"இங்கிலாந்து தொடக்க கால தொழில் புரட்சி கட்டத்தில் தோன்றிய சார்ட்டியத் தொழிலாளர் இயக்கம் முதலாளியத்தின் மூலதன சுரண்டல் பற்றிய சாராம்ச மற்றும் விஞ்ஞான பூர்வ அறிவின்றிமுதலாளியத்தின் கொடுமையை எதிர்த்த பொழுது இயந்திரங்கள் தம்மை சுரண்டுகின்றன என்று கருதி முதலாளிய சுரண்டலின் வெளிப்பாட்டு அம்சங்களான இயந்திரங்களை நொறுக்கியதைப் போன்றதாகும்".(கோ.கேசவன் நூல் தொகுப்பு இரண்டு தலித்தியம் பக்கம் 656).
பெரியாரின் இந்த பயணமானது படிப்பறிவு குறைந்த சமய உணர்வு மேலாதிக்கும் கொண்டஜாதி முறையில் இறுக்கத்தால் கட்டுண்ட ஒரு சமூக சூழலில் கலாச்சார மற்றும் அரசியல்தலங்களில் ஜாதிய எதிர்கொண்ட பெரியாரின் கிளர்ச்சி போராட்டம் முதன்மையாக கருத்தக்கது. "புனிதங்களாக கருதப்பட்டவனவற்றை தூக்கி போட்டுடைத்து அவற்றின் மீதான பிரம்மையை நொறுக்குகிற இந்தப் போராட்ட வடிவங்கள் மக்களை திரட்டுவதில் சாதகமான பங்களிப்பு ஆற்றவே செய்தது.ஆனால் இந்த சமூக அமைப்பையும் அதை கட்டிக் காக்கும் அரசு அதிகாரத்தையும் தகர்பதன் மூலமே சாதியமுறைக்காண அடித்தளத்தை தகர்க்க முடியும். அதற்குப் பின்னரும் ஜாதியத்தின் கருத்துகள் அம்சங்களோடு நாம் போராடி தான் ஆக வேண்டும் இத்தகைய கலாச்சார புரட்சியை புரட்சிக்கு பின்னர் நிகழ்த்த வேண்டி உள்ளது".
அம்பேத்கர் என்ன சொல்கிறார் பார்ப்போம் !
சாதிமுறையானது இந்தியாவின் நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளிலிருந்து எழவில்லை; மாறாக இந்துமதமே சாதியத்தை தோற்றுவித்தது என்று சாதியத்தின் தோற்றம் பற்றிக் கருதினார். இதன் காரணமாக, உற்பத்தி உறவுகளை மாற்றுவதற்கான புரட்சி மூலம் அல்லாமல், இந்துமதத்தைச் சீர்திருத்தம் செய்வதன் மூலமாகவே சாதியை ஒழிப்பது சாத்தியம் எனக் கருதினார். இதனால், இந்துமதச் சீர்திருத்தத்திற்கான திட்டம் என்ற முறையில், வேதங்களை ஒழிப்பது; ஒரு பொதுவான அதிகாரபூர்வமான இந்துமதத் திருமறைகளை உருவாக்குவது; அரசாங்கமே புரோகிதர்களை நியமிப்பது - புரோகிதர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுகளை நடத்துவது; அந்தத் தேர்வுகளில் எல்லாச் சாதியினரும் பங்குகொள்வது; அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை நியமனம் செய்வது என்பனவற்றை முன்மொழிந்தார். இவை போன்றவற்றை சட்டபூர்வமாக்க வேண்டும் என்றும் கூறினார். இத்தகைய கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்திலிருந்து, பிரிட்டிஷ் நிர்வாகம் அவர்கள் கிறிஸ்த்துவர்கள் என்ற காரணத்தால், சாதியத்தை ஒழிப்பதற்கு பங்காற்றுவார்கள் என்று நம்பிக்கை கொண்டிருந்தார். பிரிட்டிஷ் ஆட்சி ஒரு ஏகாதிபத்திய ஆட்சி; அது தன் காலனி ஆதிக்கத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு நிலப்பிரபுத்துவத்துடன் (முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்திமுறையைச் சேர்ந்த ஆளும் வர்க்கங்களுடன்) கூட்டணி கொண்டிருப்பதைப் பார்க்க மறுத்தார். இதன் விளைவாக, ஒரு மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மூலம்தான் சாதி ஒழிப்பு சாத்தியம் என்பதை அவர் ஏற்கவில்லை. அதாவது, விவசாய புரட்சியும், தேசியப் புரட்சியும் இணையும் போதுதான் அது சாத்தியம் ஆகும் என்பதை அவர் ஏற்கவில்லை. இதன்காரணமாக, நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த விவசாயப் புரட்சி, ஏகாதிபத்தியத்தை எதிர்த்த தேசியப் புரட்சி ஆகிய இரண்டையும் புறக்கணித்தார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், இந்திய நிலப்பிரபுத்துவமும் இந்திய மக்களைப் பிடித்திருக்கும் இரண்டு பகைகள் என்று அம்பேத்கர் பலமுறை பேசியிருந்த போதிலும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் சொந்தநாட்டில், தீண்டத்தகாதவர்களை வைத்துக் கொண்டு, தீண்டாமை ஒழிப்புக்காகப் போராடதவரை, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது அர்த்தம் உள்ளது ஆகாது என்றும் அவர் கூறினார். மேலும், இந்த நாட்டில் இருக்கும் ஏகாதிபத்திய நண்பர்களான ஆலை அதிபர்கள், லேவாதேவிக்காரர்கள் ஆகியோருக்கு எதிராகப் போராடமல், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான, வலுவான போராட்டம் நடத்துவது சாத்தியம் இல்லை என்றும் கூறினார். இவ்வாறு அவர் சரியாகக் கூறினாலும், தேசிய விடுதலை மற்றும் சாதி ஒழிப்புக்கு ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும்; அவர்களின் அடிவருடிகளான தரகுமுதலாளித்துவம் மற்றும் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுப்பதற்கு மாறாக, சாதிய ஒழிப்புக்கு சமூகப் புரட்சியை முன்னிபந்தனை ஆக்கினார். அதாவது, ஏகாதிபத்தியத்தையும், நிலப்பிரபுத்துவத்தையும் எதிர்த்த மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு முன்னரே சமூகப்புரட்சி நிகழவேண்டும் என்ற நிலைப்பாட்டை முன்வைத்தார். மேலும் பிரிட்டிஷ் காலனியாட்சி, சாதிய ஒழிப்புக்கு பங்காற்றும் எனக் கருதி அதன்மீது நம்பிக்கை கொண்டு அதனுடன் சமரசம் செய்து கொள்ளும் போக்கை மேற்கொண்டார். இதன்விளைவாக, காலனி அரசுடன் சமநிலை பராமரிப்பது என்பது அம்பேத்கரின் அணுகுமுறையாக இருந்தது. மேலும், அம்பேத்கரின் தரகுமுதலாளிய தாராளவாதச் சிந்தனைப்போக்கு, அரசின் வர்க்கத்தன்மையைக் காணமறுப்பதற்கு இட்டுச் சென்றது. அரசு நடுநிலையானது என்கிற கற்பனாவாதக் கண்ணோட்டத்திலிருந்து, சட்டங்கள் மற்றும் அரசியல் சட்டம் ஆகியவற்றில் மாற்றங்கள் கொண்டு வருவதன் மூலம், அரசின் தன்மையையே மாற்றிவிட முடியும் என்ற மிகப்பிற்போக்கான கருத்தை மக்களிடத்திலே, அதுவும் மிகவும் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களிடத்திலே, பரப்பவும் செய்தார். 1928ம் ஆண்டு சைமன் கமிஷன்; 1930 - 31 ஆண்டு வட்டமேஜை மாநாடுகள் ஆகியவற்றில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் பிரதிநிதியாக அம்பேத்கர் பங்கு கொண்டார். பிரிட்டிஷ் ஆட்சியின் நடவடிக்கைகள் எல்லாம், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திலிருந்து, சட்டத்திருத்தங்கள் மூலம் மக்களை திசை திருப்பும் காலனி ஆட்சி சதிகள்தான். இவற்றில் பங்கேற்றதன் மூலம், தாழ்த்தப்பட்ட மக்களிடையே அரசியல் சட்டத்தின் மீதும், மாயைகளை ஏற்படுத்தினார். இரண்டாம் உலகப் போர் காலத்தில் - 1941 பிப்ரவரியில் - வைஸ்ராயைச் சந்தித்து, பிரிட்டிஷ் இராணுவத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் சேரவேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். 1942 ஜூனில் தொழிலாளர் நல அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதிலிருந்து காலனியாட்சியின் உறுப்பாக மாறினார். இந்தக்கட்டத்தில்தான் தொழிலாளர் நலச்சட்டம் கொண்டுவரப்பட்டது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இரண்டாம் உலகயுத்தத்தின் சுமையையும், முதலாளித்துவ நெருக்கடியால் ஏற்பட்ட சுமையையும், தொழிலாளர் தோள்மீது ஏற்றிவிடும் மிகக்கொடிய காலனியாதிக்கச் சுரண்டல் கொள்கைகளை வகுத்துச் செயல்படுத்தியது. தொழிலாளர் நல அமைச்சர் என்ற முறையிலே, அந்தக்கொள்கைகளை அம்பேத்கர் செம்மையாகச் செயல்படுத்தினார். ஏகாதிபத்தியத்தின் நண்பர்களான பண்ணையார்கள், ஆலை அதிபர்கள், லேவாதேவிக்காரர்கள் ஆகியோரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காங்கிரஸ் கட்சியையும் எதிர்த்துப்போராடமல், (ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிப் பயன் இல்லை என்று சொல்லிக்கொண்டு ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டத்தில் காங்கிரசுடன் சேர மறுத்து எதிர்த்துக் கொண்டிருந்த அம்பேத்கர், காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மை ஆதரவுடன் இருந்த அரசியல் சட்ட நகல் தயாரிப்புக் குழுவின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.) பிரிட்டிஷ் காலனிய இந்தியா ஒரு அரைக்காலனியாக மாற்றப்படுவதற்கு ஆதரவு தந்தார்.
நேரு பிரதமராக இருந்தபொழுது மத்திய அமைச்சரவையில் சேர்ந்துக்கொண்டார். இதனால் தாழ்த்தப்பட்ட மக்களிடம் நாடாளுமன்ற முறை மட்டுமே, அதிகாரப்பகிர்வு மற்றும் சாதி ஒழிப்புக்கான ஒரே வழி என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. அதிகாரத்தை அடைவதற்கு அவர்கள் தேர்தல் நடைமுறையை நம்பவேண்டிய நிலை ஏற்பட்டது. அரசியலில் நீடிப்பதற்காக, அம்பேத்கர் வழிவந்தவர்கள், ஏதாவது ஒரு அரசியல் கட்சியோடு கூட்டுச் சேர்வது நிரந்தரமாகிவிட்டது. முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் நடைமுறை இங்கேயும் நிலைகொண்டது. இவ்வாறு தலித் இயக்கம் ஆளும் வர்க்கத்தின் நிரந்தரத் தொங்குசதையாக மாறியது.
சாதியத்திற்கு, நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளே அடித்தளமாக விளங்குகிறது. அடித்தளத்தை அசைக்காமலே, அதன் மேற்கட்டுமானத்தை - சாதி முறையை ஒழிக்கமுடியும் என்பது அம்பேத்கரின் நிலைபாடாக இருந்தது. சாதிய ஒழிப்புக்கு இந்துமதச் சீர்திருத்தமே வழி என்று கருதினார். இந்த நிலைபாட்டில் இருந்து 1920 ஆண்டில் பிற்பகுதியில், தாழ்த்தப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமை மற்றும் மதச்சமத்துவத்திற்காகத் தொடர்ச்சியான போராட்டங்களைத் தொடங்கினார். அவற்றில் முக்கியமானவை:
1927ல் மஹாத் சத்தியாகிரகம் - கொங்கன் பகுதியில் உள்ள பொதுக்குளத்தை எல்லாச் சாதியினரும் பயன்படுத்த உரிமை கோரி நடைபெற்ற போராட்டம்.
1928ல் மனுஸ்மிருதியை எரித்தது.
1930ல் அமராவதி மற்றும் பிற பகுதியில் நடைபெற்ற கோயில் நுழைவுப் போராட்டங்கள். இப்போராட்டங்கள் ஐந்து ஆண்டுகள் நடந்தன.
மேற்கூறப்பட்ட போராட்டங்கள், காந்தியார் வழிகாட்டுதலில் பெரியார் தலைமையில் கேரளாவில், 13.4.1924ல் வைக்கத்தில் நடைபெற்ற போராட்டத்திற்குப் பின்னர் நடைபெற்றவை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேசி, வர்ணாஸ்ரம தர்மத்தை ஆதரித்த காந்தியாரும்; வர்ணாஸ்ரம தர்மத்தை எதிர்த்தும், சாதி ஒழிப்புக்கு, மதம் கடவுள், பார்ப்பனன் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என்று சொன்ன பெரியாரும்; வர்ணாஸ்ரம தர்மத்தை எதிர்த்து, சாதி ஒழிப்புக்கு இந்துமதச் சீர்திருத்தமே வழி என்று கருதிய அம்பேத்காரும், ஆக இம்மூவரும் வெவ்வேறு நிலைபாடுகளைக் கொண்டவர்களாக இருந்தாலும், சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில், சாதியத்திற்கு அடித்தளமான நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த போராட்டத்தை நடத்தாமலே மேற்கட்டுமானத்திற்கு எதிரான போராட்டம் நடத்தியதில் ஒரே கருத்தைக் கொண்டிருந்தனர்.
ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக அம்பேத்கர் உரிமைக் கொண்டாடினாலும் அவர், தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், மற்றும் தொழிலாளி வர்க்கம் ஆகியோர் மீதான சுரண்டலுக்கு அடிப்படையாக இருந்த காரணிகளுக்குத் தீர்வு காண்பதை நோக்கிய இயக்கத்தை வழி நடத்தவில்லை. தாழ்த்தப்பட்டோரில் 90 சதவீதத்திற்கும் அதிகமாகவுள்ள விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளின் அடிப்படைக் கோரிக்கையான "உழுபவருக்கு நிலம் சொந்தம்" என்கிற கோரிக்கையை எழுப்பவில்லை. தாழ்த்தப்பட்டோரில் புதிதாகத் தோன்றி உருவாகி கொண்டிருந்த குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களைப் பிரதிபலிக்க கூடிய, தனித்தொகுதி ஒதுக்கீடு, அரசாங்க வேலைகளில் ஒதுக்கீடு, உதவித் தொகை கோருதல் போன்ற கோரிக்கைகள் (இக்கோரிக்கைகள் ஒட்டுமொத்தமான தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பயன்படும் என்று சொன்னாலும் கூட) மட்டுமே எழுப்பப்பட்டன. அவை தாழ்த்தப்பட்ட சாதியிலுள்ள நடுத்தர வர்க்கத்தின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைகளை திடப்படுத்தக் கூடியவைதான். அம்பேத்கரின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் நடைமுறையை வைத்துப்பார்க்கும்பொது, அவர் தாழ்த்தப்பட்ட சாதியில் உருவாகிவந்த நடுத்தர வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதியாகத்தான் இருந்தார் என்பது தெளிவாகிறது.
அம்பேத்கரின் வழிவந்தவர்களில் முக்கியமானவரான கெய்க்வாட், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, நிலப்பகிர்வுக் கோரிக்கையே முக்கியமானது என்று எடுத்துக்கொண்டு போராடினார். பெருந்திரளான தாழ்த்தப்பட்ட மக்களை இந்தப் போராட்டம் கவ்விப்பிடித்துக் கவர்ந்தாலும், மற்ற 'தலித்' தலைவர்களின் பார்வை வேறுவிதமாக இருந்தது. இந்தப் போராட்டம் கம்யூனிஸ்ட் வழிப்பட்டது என்று கூறி, கெய்க்வாட்டின் போராட்டத்தினை ஏற்கவில்லை. அம்பேத்கரின் செயல்திட்டத்தில் இத்தகைய போராட்டங்களுக்கு இடமில்லை என்றும், அறிவித்தார்கள். அரசியல் சட்டப்படியான ஆட்சியில், பொதுமக்களின் போராட்டம் என்பது அராஜகவழி. எனவே நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இதற்கு இடமளிக்க கூடாது என்ற அம்பேத்கரின் கருத்தை அவர்கள் உயர்த்திப்பிடித்தார்கள். நிலப்பிரச்சனை முக்கியமானது என்றால், சட்டபூர்வமாக உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். என்று அவர்கள் வாதிட்டனர். இவ்வாறு, அம்பேத்கர், வழிவந்தவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிலப்பகிர்வுக்கான போராட்டங்களை ஏற்க மறுத்துவிட்டார்கள். தலித் இயக்கத்தினர் தற்போது நிலவும் பாராளுமன்ற முறையின் மூலம், முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசதிகார அமைப்புகளில் இடம் பிடிக்கும் நோக்கத்துடன், ஏதாவது ஒரு ஆளும் வர்க்க அரசியல் கட்சிக் கூட்டணியில் சேர்வது நடைமுறைப் போக்காக ஆகிவிட்டது. இத்தகைய நிலைமைகளில் தலித் அமைப்புகள் - சாதிச் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, சாதி ஒழிப்பு என்பனவற்றை முன்னணிப்படுத்தாமல், இடஒதுக்கீடு, அதிகாரப்பகிர்வு, சலுகைகள் பெறுவது ஆகியவற்றைக் கோருவது என்பதை முழுமுதல் நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன.....
வரலாற்றின் தொடக்ககாலச் சகாப்தங்களில், அனேகமாக எங்கும், பல்வேறு அடுக்குகள் கொண்ட, சிக்கலான ஒரு சமுதாய ஏற்பாட்டைக் காண்கிறோம். சமூக அந்தஸ்தில் பல்வேறு படிநிலை அமைப்புகள் இருக்கக் காண்கிறோம். பண்டைய ரோமாபுரியில் உயர்குலச் சீமான்கள், வீர மறவர்கள், பாமரக் குடிமக்கள், அடிமைகள் எனவும், மத்திய காலத்தில் நிலப்பிரபுக்கள், மானியக்காரர்கள் (vassals), கைவினைக் குழும எஜமானர்கள், கைவினைப் பணியாளர்கள், பயிற்சிப் பணியாளர்கள், பண்மையடிமைகள் எனவும் பல்வேறு வர்க்கப் பிரிவினர் இருக்கக் காண்கிறோம். மேலும், அனேகமாக இந்த வர்க்கங்கள் அனைத்திலும் ஒன்றன்கீழ் ஒன்றான உட்பிரிவுகள் இருந்ததையும் காண முடிகிறது.
நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் அழிவிலிருந்து முளைத்தெழுந்துள்ள நவீன முதலாளித்துவ சமுதாயம் வர்க்கப் பகைமைகளை ஒழித்துவிடவில்லை. ஆனால், பழையவற்றுக்குப் பதிலாகப் புதிய வர்க்கங்களையும், புதிய ஒடுக்குமுறை நிலைமைகளையும், புதிய போராட்ட வடிவங்களையும் உருவாக்கி வைத்துள்ளது.
எனினும், நமது சகாப்தமான முதலாளித்துவ வர்க்கச் சகாப்தம் ஒரு தனித்த பண்பியல்பைக் கொண்டுள்ளது: வர்க்கப் பகைமைகளை அது எளிமைப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த சமுதாயமும், இருபெரும் பகை முகாம்களாக, ஒன்றையொன்று நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் - முதலாளித்துவ வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்னும் - இருபெரும் வர்க்கங்களாக, மேலும் மேலும் பிளவுபட்டு வருகிறது.(கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்து).ஆக மார்க்சியம் வரலாற்று பொருள்முதல்வாத அடிப்படையில் சமூகத்தை ஆய்வு செய்ய சொல்கிறது. அன்று நிலவிய உற்பத்தி முறை என்னவோ அதன் அடிப்படையில் அம்மக்களின் வளர்ச்சியை புரிந்துக் கொள்ள முடியும் என்கிறது. இன்று நம் மத்தியில் உள்ளபோக்கானது, ஜாதியும் தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு ஆதாரமாகக் கொண்டுள்ள பரம்பதைத் தொழிற்பிரிவினையும், அவை நிலைத்து நிற்பதற்கு சேவை செய்யும் அகமண முறை, உயர்வுதாழ்வுகற்பித்தல்,படிநிலைமுறை,பரம்பரைச் சடங்குகள் ஆகிய அம்சங்களும் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைக்கு உரியதும்.
இன்று இந்திய சமுதாயமும் அரசும் ஜனநாயக விரோத எதேச்சதிகாரத் தன்மை கொண்டதாக நீடிக்கச் செய்வதால் பழைமையை தூக்கிபிடித்துக் கொண்டே உலகமயமாக்கல் நலன் பேசும் இவர்கள் சுரண்டல் வடிவமான ஜாதி ஏற்றதாழ்வைபோக்கும் திட்டம் எதுவும் இன்மையால் அந்தமுறையை தொடர செய்கிறது. நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையை முற்றாக ஒழித்து, புதிய ஜனநாயக அரசியல், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டை உருவாக்கி, சோசலிச சமுதாயத்தை நிறுவும் நிகழ்வுப் போக்கில் சாதி மற்றும் தீண்டாமைக்கு முடிவு கட்டுவது சாத்தியமான ஒன்றாகும்.
மக்களுக்கு, ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசு இன்றி, அவர்களால் பரம்பரை வேலைப் பிரிவினையை ஒழித்து ஒரு புதிய வேலைப் பிரிவினையை உருவாக்க முடியாது. சாதிமுறை நிலைத்து நிற்பதற்கு உத்திரவாதம் செய்யும் அகமணமுறை மற்றும் பிற அம்சங்களை ஒழித்து ஒரு புதிய பண்பாட்டையும் உருவாக்க முடியாது. ஆகையால் சாதிமுறைத் துறையில் ஜனநாயகத் தீர்வு ஒரு மக்கள் ஜனநாயகத் குடியரசு என்பதேயாகும்.அதற்கான பணியை புரிந்துக் கொள்ள மார்க்சியத்தை பயிலுவோம்.....
தொடரும்....